பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, September 23, 2014

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 2.

                 தஞ்சை நாயக்க மன்னர்கள்  பகுதி 2.

வரலாறு:

விஜயநகர சாம்ராஜ்யம் தோற்றுவிக்கப்பட்டது குறித்து மாறுபட்ட விவரங்கள் சொல்லப் படுகின்றன. கன்னட தேசத்து வரலாற்று அறிஞர்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த ஹரிஹரர் புக்கர் சகோதரர்கள் ஹொய்சாள தேசத்துப் படையில் தளபதியாக இருந்தவர்கள் என்றும் துங்கபத்ரா நதிக்கரையில் வட இந்தியாவிலிருந்து வந்த இஸ்லாமிய படையெடுப்பு களைத் தடுத்து நிறுத்த நியமிக்கப்பட்டவர்கள் என்றும் கூறுகிறார்கள். இவர்கள் கன்னட மொழி பேசுபவர்கள் என்பது இவர்களின் கருத்து. ஆனால் வேறு சில வரலாற்றாசிரியர்கள் இவர்களைத் தெலுங்கு மொழி பேசுவோர் என்றும் காகாத்திய வம்சத்தைச் சேர்ந்த இவர்கள் ஹொய்சாளர் களின் வடக்குப் பிரதேசங்களைப் போரிட்டு வென்று ஆக்கிரமித்துக் கொண்டவர்கள் என்றும் சொல்கிறார்கள். இவ்விரு பிரிவினரின் கருத்து எத்தகையதாக இருப்பினும் ஒரு விஷயத்தில் இவ்விரு தரப்பாரும் ஒப்புக்கொள்ளும் செய்தி இவர்களை ஊக்குவித்து ஆதரவு கொடுத்தவர் சிருங்கேரி ஆச்சார்ய பீடத்தில் குருவாக இருந்த வித்யாரண்யர் என்பார் என்பதுதான். சிருங்கேரி ஆச்சார்யார் வடதேசத்து அந்நிய படையெடுப்பை தடுத்து நிறுத்த இவ்விரு வீரர்களையும் பயன்படுத்தியதாக இவர்கள் நம்புகிறார்கள். தற்காலத்தில் அகழாராச்சித் துறையினர் இந்தப் பகுதிகளில் கண்டுபிடித்திருக்கும் சான்றுகளிலிருந்து பல அரிய செய்திகள் இந்த ஹரிஹர புக்கர் ஸ்தாபித்த புதிய சாம்ராஜ்யம் பற்றி நமக்குத் தெரியக் கிடைக்கின்றன.

விஜயநகர சாம்ராஜ்யத்திலிருந்து தமிழகமெங்கும் தங்கள் ஆட்சியை விரிவுபடுத்திய நாயக்க மன்னர்கள் பற்றி பார்ப்பதற்கு முன்னதாக இப்போதைய ஆந்திரப் பகுதியில் 14ஆம் நூற்றாண்டு முதல் 16ஆம் நூற்றாண்டு வரை வியாபித்திருந்த பல அரச வம்சங்களைப் பற்றிய மேலோட்ட மான செய்திகளை அறிந்து கொள்வது அவசியமாகிறது. கி.பி. 14ஆம் நூற்றாண்டில் 1336ஆம் ஆண்டு தொடங்கி 1485 வரையில் சங்கம வம்சம் ஆட்சி புரிந்து வந்தது. அவர்கள் ஆட்சி விவரங்களைப் பார்க்கலாம்.

சங்கம வம்சம்
முதலாம் ஹரிஹர ராயர்                  1336 முதல் 1356 வரை
புக்க ராயர்                                         1356 முதல் 1377 வரை
2ஆம் ஹரிஹர ராயர்                       1377 முதல் 1404 வரை
விரூபாக்ஷ ராயர்                              1404 முதல் 1405 வரை
2ஆம் புக்க ராயர்                              1405 முதல் 1406 வரை
தேவ ராயர்                                        1406 முதல் 1422 வரை 
ராமச்சந்திர ராயர்                             1422 மட்டும்
வீரவிஜயபுக்க ராயர்                        1422 முதல் 1424 வரை
2ஆம் தேவராயர்                              1424 முதல் 1446 வரை
மல்லிகார்ஜுன ராயர்                      1446 முதல் 1465 வரை
2ஆம் விரூபாக்ஷ ராயர்                   1465 முதல் 1485 வரை
பிரவுத்த ராயர்                                  1485

சாளுவ வம்சம்
சாளுவ நரசிம்ம தேவ ராயர்            1485 முதல் 1491 வரை
திம்ம பூபாலர்                                    1491
2ஆம் நரசிம்ம ராயர்                         1491 முதல் 1505 வரை

துளுவ வம்சம்
துளுவ நரச நாயக்கர்                        1491 முதல் 1503 வரை
வீர நரசிம்ம ராயர்                            1503 முதல் 1509 வரை
கிருஷ்ணதேவ ராயர்                        1509 முதல் 1529 வரை
அச்சுதேவ ராயர்                               1529 முதல் 1542 வரை
முதலாம் வெங்கட ராயர்                 1542
சதாசிவ ராயர்                                   1542 முதல் 1569 வரை

அரவீடு வம்சம்
அலிவ ராம ராயர்                             1542 முதல் 1565 வரை
திருமலை தேவ ராயர்                      1565 முதல் 1572 வரை
முதலாம் ஸ்ரீரங்கா                            1572 முதல் 1586 வரை
2ஆம் வெங்கடா                               1586 முதல் 1614 வரை
2ஆம் ஸ்ரீரங்கா                                 1614
ராமதேவ ராயர்                                 1617 முதல் 1532 வரை
3ஆம் வெங்கடா                               1632 முதல் 1642 வரை
3ஆம் ஸ்ரீரங்கா                                 1642 முதல் 1646 வரை

14ஆம் நூற்றாண்டின் இந்திய வரலாற்றிலிருந்து கிடைக்கும் பல செய்திகளின்படி தக்ஷிணப் பிரதேசத்து சாம்ராஜ்யங்களான தேவகிரியில் இருந்த யாதவர் சாம்ராஜ்யம், வாரங்கலில் இருந்து ஆட்சிபுரிந்த காகாத்திய ராஜ்யம், மதுரை பாண்டிய சாம்ராஜ்யம், இவை தவிர காம்பிலி பிரதேசங்கள் இவைகளின் மீது வட நாட்டிலிருந்து படையெடுத்து வந்த இஸ்லாமியப் படையினர் போரிட்டு நாடுகளை அபகரித்துக் கொண்டனர். டில்லியில் அரசோச்சிய அலாவுதீன் கில்ஜி, முகமது பின் துக்ளக் ஆகியோர் இத்தகைய படையெடுப்புகளை நடத்தி தெற்கே தங்கள் ஆதிக்கத்தை விஸ்தரித்துக் கொண்டனர். பொதுவாக வடக்கிலிருந்து படையெடுத்து வரும் இவர்களைப் போன்றவர்கள் பிடித்த நாட்டை வைத்து அரசாளும் நோக்கத்தில் வருவதில்லை. இங்குள்ள அளவற்ற செல்வங்களைக் கொள்ளை கொண்டு போவதுதான் அவர்களின் நோக்கம். ஆனால் முகமது பின் துக்ளக் மட்டும் தனது தலைநகரையே டில்லியிலிருந்து மாற்றி தெற்கே கொண்டு வந்து, பின்னர் மறுபடியும் வடக்கே சென்ற வரலாறு இருக்கிறது.

இப்படி தென்னாடு முழுவதும் டில்லி சுல்தான்கள் வசம் போய்க்கொண்டிருந்த நேரத்தில் இந்த புயலிலும் தப்பிப் பிழைத்துத் தலை நிமிர்ந்து நின்று கொண்டிருந்தது கன்னட பிரதேசத்து ஹொய்சாள சாம்ராஜ்யம். ஹொய்சாளர்களின் ஆட்சி, ஆலயங்கள், வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்கள் இவைகள் இன்றும் இந்த ஹொய்சாள மன்னர்களின் பெருமைகளைப் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. இவர்களில், 3ஆம் வீர வல்லாள தேவன் காலத்தில் அப்போது மதுரையை ஆண்டுகொண்டிருந்த சுல்தானுடன் போரிட்டுத் தோற்று, போர்க்களத்தில் உயிரையும் விட்டபின் ஹொய்சாள ராஜ்யம் விஜயநகர பேரரசுடன் இணைக்கப்பட்டது.

விஜயநகர சாம்ராஜ்யம் தொடங்கப்பட்டு இருபது வருஷ காலத்திற்குள் முதலாம் ஹரிஹரர் தென்னகத்தில் துங்கபத்திரை நதிக்குத் தென்புறமுள்ள அனைத்துப் பிரதேசங்களையும் வென்று தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் காரணமாக "பூர்வபஸ்சிம சமுத்ரதிஷாவர" அதாவது மேலை மற்றும் கிழக்குக் கடல்களின் நாயகன் எனும் விருதினைப் பெற்றார். அதாவது தென் இந்தியாவின் கிழக்குப் பகுதி கடலுக்கும், மேற்குப் பகுதிக் கடலுக்கும் இடைப்பட்ட எல்லா பகுதிகளுக்கும் தலைவன் என்று புகழப்பட்டார்.

கி.பி.1374இல் ஹரிஹர ராயரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த முதலாம் புக்கராயர் ஆற்காட்டு மன்னரையும், கொண்டவீடு ரெட்டிகளையும், மதுரை சுல்தானையும் போரிட்டு வென்றதோடு மேற்கே கோவாவையும், வடக்கே துங்கபத்ரா கிருஷ்ணா நதிகளுக்கிடைப்பட்ட பகுதிகளையும் கைப்பற்றிக் கொண்டு வெற்றிக்கொடி நாட்டினார். இவருடைய முதலாவது தலைநகராக விளங்கிய நகரம் அனகொண்டி என்பது. இது இப்போதைய கர்நாடக மாநிலத்தில் துங்கபத்ரா நதியின் வடகரையில் அமைந்த நகரம். அங்கிருந்து பிறகு அருகிலிருந்த விஜயநகரத்துக்கு மாற்றப்பட்டது. இந்த இடம் துங்கபத்திரையின் தென் கரையில் அமைந்துள்ளது. எந்தவொரு சாம்ராஜ்யமும் ஒரு மாபெரும் நதிக்கரையில் அமைந்திருக்கும், அதைப்போல இந்த விஜயநகர சாம்ராஜ்யத்துக்குப் பெருமை சேர்த்தது துங்கபத்ரா நதி.

முதலாம் புக்கராயரின் மகன் இரண்டாம் ஹரிஹர ராயர் காலத்தில் விஜயநகர சாம்ராஜ்யம் கிருஷ்ணா நதியையும் தாண்டி தென்னகத்தின் அனைத்துப் பகுதிகளையும் தனது சாம்ராஜ் யத்தில் இணைத்துக் கொண்டார். இவருக்குப் பின் பதவிக்கு வந்த முதலாம் தேவராயர் ஒடிஷா பிரதேசத்து கஜபதிகளை வென்று தாங்கள் வென்ற பகுதிகளில் எல்லாம் கோட்டை கொத்தளங் களைக் கட்டியும், விவசாயத்துக்கான நீர்ப்பாசன வசதிகளை விரிவு படுத்தியும் பல பணிகளை செய்து வைத்தார்.

இந்த முதலாம் தேவராயரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த 2ஆம் தேவராயர் 1434இல் பதவி ஏற்றார். இவரைச் சங்கம வம்சத்து அரசர்களில் மிகச் சிறந்தவராகக் கருதலாம். இவருடைய காலத்தில் ஆட்சிக்கும் அரசருக்கும் எதிராக நிலப்பிரபுக்கள் உருவாக்கிய புரட்சியையும், கள்ளிக்கோட்டை கொல்லம் ஆகிய பகுதிகளுக்கு வந்து குடியேறியிருந்த ஸமோரியர்களையும் அடக்கித் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இவர் இலங்கை மீதும், பர்மாவில் ஆட்சி புரிந்து வந்த மன்னர்களையும் படையெடுத்து வென்று தன் ஆளுமையை விரிவுபடுத்தினார். அதன் பிறகு 15ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யம் மெள்ள பலமிழக்கத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து விஜயநகர சேனைத் தலவராக இருந்த சாளுவ நரசிம்ம தேவராயர் காலத்திலும், துளுவ நரச நாயக்கர் காலத்திலும் மீண்டும் விஜயநகரம் தலைநிமிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

தொடர்ந்து இருபது ஆண்டுகள் வரை போராடி விஜயநகரப் படைகள் தங்களுக்கு எதிரான புரட்சிகளைச் சமாளித்து கலகக்காரர்களை அடக்கி வெற்றி கண்டது. முடிவில் துளுவ நரச நாயக்கர் என்பவருடைய மகன் கிருஷ்ணதேவராயர் என்பவர் தலைமையில் விஜயநகர சாம்ராஜ்யம் தென்னாடு முழுவதற்கும் ஏக சக்ராதிபதியாக விளங்கியது. இந்த நிலை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு நீடித்தது. இந்த காலகட்டத்தில் இவர்கள் தக்ஷிண சுல்தான்களுடன் அவர்களுடைய படையெடுப்புகளை எதிர்த்துப் பலமுறை போரிடும்படி நேர்ந்தது. கிருஷ்ண தேவராயரின் காலத்தில் விஜயநகர சாம்ராஜ்யம் உன்னத நிலையை எட்டியது. இவர் போரிட்ட அனைத்துப் போர்களிலும் வெற்றி தேவதை இவரையே முத்தமிட்டாள். இவர் தக்ஷிணப் பிரதேசத்தின் வடக்குப் பகுதிகளையும், தெற்குப் பகுதிகளையும் ஆண்ட சுல்தான்களைப் போரில் தோற்கடித்து அதோடு கலிங்கத்தையும் வென்று அதனால் கிடைத்த பரந்த விரிந்த சாம்ராஜ்யத்தை சிறப்பாக ஆண்டுவந்தார். இவர் காலத்தில் பல அரிய நினைவுச் சின்னங்கள் உருவாக்கப்பட்டன.


No comments: