பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, May 19, 2013

வடக்கு எல்லை போராட்டம் (பகுதி 5)

வடக்கு எல்லை போராட்டம் (பகுதி 5)
Tiruthani Murugan temple


திருத்தணியில் நடத்தப்பட்ட வன்முறை காரணமாக முதல்வர் ராஜாஜி மன வருத்தமடைந்தார். ம.பொ.சி. தனது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த முயற்சி செய்வதும், தடை விதித்தால் அதனை மீறி கைதாகவும் ம.பொ.சி. முடிவு செய்தது கண்டு ராஜாஜி அவருக்கு ஒரு தந்தி அனுப்பினார். அதில்

"தாங்கள் தடையை மீறிச் சிறை புகுவதற்கு முடிவு செய்து விட்டதாக அறிகிறேன். அது தேவையற்ற முயற்சி. அத முயற்சியைக் கைவிட்டு, உடனே சென்னைக்கு வந்து என்னைப் பார்க்கக் கோருகிறேன்."
சி. இராஜகோபாலாச்சாரி.

இந்த தந்தியைக் கண்டு ம.பொ.சி. தன் முடிவை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. மாறாக பதில் கடிதம் ஒன்றை ராஜாஜிக்கு அனுப்பினார். அதில் தான் சித்தூர் மாவட்ட கலெக்டர் பிறப்பித்த தடை உத்தரவை மீறி சிறை புகுவதென முடிவு செய்திருந்ததையும், ராஜாஜியின் தந்தியைப் பார்த்ததும் அவருடைய வேண்டுகோளையும் இப்போது மீறவேண்டியிருப்பதற்கு வருத்தம் தெரிவித்தும் கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதத்தில் ம.பொ.சி. ராஜாஜியிடம் இப்போதுகூட ஒன்றும் மோசம் போய்விடவில்லை. தாங்கள் பிரதமர் நேருவிடம் பேசி சித்தூர் மாவட்டம் தகறாறுக்குரிய மாவட்டம் என்பதால் அதனை முழுவதுமாக ஆந்திரத்தில் சேர்ப்பதை கைவிட்டு ஒரு கமிஷன் நியமித்து நிலைமையை நேரில் அறிந்து அதன் முடிவுப்படி நடந்து கொள்ளலாம் என்று பிரதமர் அறிவித்தால் போராட்டத்தைக் கைவிடலாம் என்று அறிவித்தார்.

1953 ஜூலை 3ஆம் தேதி ம.பொ.சி.யும் திருத்தணி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வெங்கடேசன் என்பாரும் அவ்வூர் காந்தி சிலை முன்பு ஒரு மேஜை மீதேறி நின்றுகொண்டு மக்களுக்கு வடக்கெல்லை மீட்பு போராட்டத்தில் பங்கு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார். உடனே காவல்துறை பாய்ந்து சென்று அவர்களைக் கைது செய்து சப் ஜெயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மற்ற சத்தியாக்கிரகிளை போலீசார் புளியம் மிளாறினால் அடித்து ரண காயப்படுத்தினர். இந்த புளியம் மிளாறு அடி 1930இல் வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தின் போது கண்டுபிடிக்கப்பட்ட உத்தி. தொண்டர்களை அங்கு அடித்த போலீஸ் சிறைப்பட்ட ம.பொ.சியிடம் மிக்க மரியாதை காட்டினர். மாவட்ட எஸ்.பி. வந்து தலைவரைப் பார்த்து பேசினார். அவரை அன்று மாலையே ஒரு மாஜிஸ்டிரேட்டிடம் கொண்டு சென்று விசாரித்து அவரை இரவு 7 மணிக்கு ஆறு வாரம் சிறை தண்டனை அளித்து சிறைக்குக் கொண்டு சென்றனர்.

அன்று இரவு என்ன நடந்ததோ, மறுநாள் காலையில் பிரதமர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவர் சித்தூர் மாவட்டம் பிரச்சினைக்குரிய மாவட்டம் என அறிவித்து, அதனை தீர விசாரித்தறிய ஒரு எல்லைக் கமிஷன் அமைக்கப்படும் என்றும் நேரு அறிவித்த செய்தி காலை செய்தித் தாள்களில் வந்தது. அதைத்தானே தலைவரும் எதிர்பார்த்தார். தன் போராட்டம் வெற்றி அடைந்து மத்திய அரசை தங்கள் கோரிக்கையைப் புரிய வைத்தமை கண்டு தலைவர் மகிழ்ச்சி யடந்தார்.

பிரதமர் நேருவின் அறிவிப்பின்படி கர்நூலைத் தற்காலிக தலைநகராகக் கொண்டு ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர், நெல்லூர், கர்நூல், அனந்தப்பூர் ஆகிய மாவட்டங்களோடு சித்தூரின் தெலுங்கு பேசும் பகுதிகளையும் சேர்த்து ஆந்திர மாநிலம் பிரிக்கப்படும் என்பது தெளிவாகியது.

சென்னை திரும்பிய ம.பொ.சி. ராஜாஜியைப் போய் சந்தித்தார். அவருடைய தந்தியைப் பார்த்து போராட்டத்தை வாபஸ் வாங்காததற்காக வருத்தம் இல்லையே என்று ராஜாஜியிடம் கேட்டார். அவர் சொன்ன பதில்:

"நீங்கள் தமிழ் நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்தீர்கள். நான் அரசுக்கு செய்ய வேண்டிய கடமையைச் செய்தேன். இதில் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது" என்றார் ராஜாஜி. அதுதான் பெரியவர்களுடைய மனநிலை.

நாட்டில் பல திசைகளிலிருந்தும் ம.பொ.சிக்கு பாராட்டு குவிந்தன. பத்திரிகைகள் புகழ்னதன. இப்படி நாடே அவருடைய முயற்சியைப் பாராட்டிய நிலையில் காங்கிரஸ் கட்சி அவருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியது. அதில்

"காங்கிரஸ்காரராகிய தாங்கள் காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட 144 தடை உத்தரவை மீறியது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயல். ஆதலால், தங்களைச் சட்ட மன்ற காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏன் விலக்கக் கூடாது என்பதற்கு 15 நாட்களுக்குள் தாங்கள் காரணங்காட்ட வேண்டும்" என்று அதில் இருந்தது.

ம.பொ.சி. அதற்கும் பதில் அனுப்பினார். அவருடைய பதில் மறுப்பு சொல்லவோ, அவரைக் கட்சியிலிருந்து நீக்கவோ முடியாமல் போயிற்று. பின்னர் ஆந்திர பிரிவினை குறித்து சட்ட மன்றத்தில் விவாதம் வந்தது. ஆந்திரம் பிரிவது உறுதியானது. விளைவு ஆந்திரகேசரி டி.பிரகாசம் "புதிய ஆந்திரத்தின் தந்தை" என்று போற்றிப் புகழப்பட்டார். புதிய ஆந்திராவின் முதன் மந்திரியாகவும் அவர் பதவி ஏற்றார்.

தமிழகத்தில், தலை நகரைக் காக்கவும், வடக்கெல்லை பகுதிகளை மீட்கவும் தன்னந்தனி ஆளாக நின்று போராடிய ம.பொ.சி.க்கு மக்களின் பாராட்டும், பத்திரிகைகளின் பாராட்டும் கிடத்ததேயன்றி அரசியல் கட்சிகளோ, தலைவர்களோ அவருக்கு உரிய மரியாதையைத் தந்தார்களா? வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள் தெரியும். பின்னாளில் அனைத்துத் தலைவர்களும் எல்லா கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ம.பொ.சி.யின் சேவையை மனதார பாராட்டினார்களே தவிர, அவர் சிறை சென்று போராடி அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சியில் அவரை பாராட்டவில்லை. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில் அவருக்கு உரிய மரியாதையை அவர் தந்தார். தியாகபூமியிலிருந்து மண் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி சுதந்திர பொன்விழா நேரத்தில் நடந்தபோது 1930 உப்பு சத்தியாக்கிரகம் நடந்த வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியம்பள்ளியில் புனித மண் எடுத்துக் கொண்டு டில்லியில் காந்தி சமாதி இருக்கும் ராஜ்காட் வரை கொண்டு செல்லும் பெருமையை ம.பொ.சிக்குக் கொடுத்தார். தமிழ், தமிழன், தமிழ்நாடு என்று வாழ்நாளெல்லாம் உழைத்த ஒரு தமிழ்ப்பெருமகனாருக்கு நாம் செய்த மரியாதை என்ன என்பதைச் சற்று சிந்தித்துப் பார்ப்போம். அவருடைய பேரப் பிள்ளைகள் திருஞானம், ஞானசிவம், தி.பரமேஸ்வரி ஆகியோர் இருக்கிறார்கள். அவர்கள் மனம் மகிழும்படியாவது மக்கள் அந்த பெருமகனாருக்கு ஏதாவது செய்ய முயற்சி செய்யலாமே. முயன்றால் முடியாமலா போகும்?

(இத்துடன் எல்லைப் போராட்ட வரலாறு நிறைவு பெறுகிறது)



                                        அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு ஒருங்கிணைந்த சென்னை மாகாணம் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்படவிருந்த நேரத்தில் சென்னை நகருக்கு உரிமை கொண்டாடிய ஆந்திரர், சித்தூரின் தமிழ்ப் பகுதிகளை ஆந்திரத்திலிருந்து மீட்டெடுக்க நடந்த போராட்டம், அப்போது ஆந்திரர்கள் மத்தியில் நிலவிய ஒற்றுமை, தமிழர்கள் மத்தியில் கருத்து ஊசலாட்டம் இவை பற்றியெல்லாம் கடந்த ஐந்து கட்டுரைகளில் படித்த அன்பு நெஞ்சம் கொண்ட அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்த விவரங்கள் எல்லாம் உங்களுக்கு முன்பே தெரிந்திருக்கலாம். தெரியாமலும் போயிருக்கலாம். இப்போது படித்த பின்பு உங்கள் கருத்துக்களை, எண்ணங்களை வெளிப்படுத்துங்கள். உங்கள் பின்னூட்டங்களை இந்தக் கட்டுரையின் இறுதியிலோ அல்லது எனது மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்புங்கள்.  My e.mail id: privarsh@gmail.com நன்றி. Thanjai V.Gopalan, Bharathi Ilakkiya Payilagam, Thanjavur 7

5 comments:

துரை செல்வராஜூ said...

திரு.ம.பொ.சிவஞானம் அவர்கள் தன்னந்தனியராக போராடி தமிழ்நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமையை சூல்கொண்ட மேகத்தினைப்போல பயன் கருதாது தன் கடமையைச் செய்தார். தமிழ், தமிழன், தமிழ்நாடு என்று வாழ்நாள் முழுதும் அயராது உழைத்த ஒரு தமிழ்ப் பெருமகனைச் சிறப்பிக்க பொன்மனச் செம்மல் தான் முன் நின்றார் என்றால் - தமிழ் நாட்டு நண்டு காலைப் பிடித்து இழுத்த கதை உண்மை தான் என்று நம்ப வேண்டியதாக இருக்கின்றது. நீங்கள் வினவுவதைப் போல திரு. ம.பொ.சி.அவர்களுக்கு நாம் செய்த மரியாதை என்ன?...ஊர் கூடித் தேர் இழுக்கலாம்!.. அப்பெருமகனார்க்கு உரிய மரியாதையினை, காலம் கடந்தாவது - நாம் செலுத்தியே தீர வேண்டும்!.. இல்லையேல் நன்றி கொன்றவர்களாவோம்!..

thanusu said...

தொடர்ந்து தந்த எல்லைப்போராட்டம் கட்டுரைக்கு நன்றிகள் ஐயா. நம் கதை நமக்கே தெரியாமல் இருந்தது. சென்னையும் ஆந்திராவும் என்ற அவுட் லைன் மட்டுமே தெரிந்திருந்த எனக்கு முழு விவரங்களும் அறியதந்தமைக்கு மிக்க நன்றிகள்.

மா.பொ. சி. அவ்ர்களுக்கும் ராஜாஜி அவர்களுக்கும் நடந்த உரையாடல் ///"நீங்கள் தமிழ் நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்தீர்கள். நான் அரசுக்கு செய்ய வேண்டிய கடமையைச் செய்தேன். இதில் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது" என்றார் ராஜாஜி. அதுதான் பெரியவர்களுடைய மனநிலை///

இன்று இந்த மாதிரி மனநிலை கொண்ட ஒரு அரசியல்வதியையும் பார்க்கமுடியாது.

kmr.krishnan said...

தமிழகத்தின் வடக்கெல்லைப் போராட்டத்தை ஆவணப்படுத்திய தங்கள் சேவை பாராட்டுக்குரியது.

காங்கிரஸ் கட்சி புறக்கணித்தாலும், அன்றைய தமிழக மக்கள் மனதில் தலைவர் ம பொ சிக்கும் அவருடைய செங்கோலுக்கும் ஒரு நிலையான இடம் உண்டு.

தீரர் சத்தியமூர்த்திக்குக் காமராஜர் என்றால் ராஜாஜிக்கு ம பொ சி என்பது அன்றைய காங்கிரஸ் அரசியல். ராஜாஜியும், ம பொ சியும் ஓரங் கட்டப்படார்கள்.

kmr.krishnan said...

தமிழகத்தின் வடக்கெல்லைப் போராட்டத்தை ஆவணப்படுத்திய தங்கள் சேவை பாராட்டுக்குரியது.

காங்கிரஸ் கட்சி புறக்கணித்தாலும், அன்றைய தமிழக மக்கள் மனதில் தலைவர் ம பொ சிக்கும் அவருடைய செங்கோலுக்கும் ஒரு நிலையான இடம் உண்டு.

தீரர் சத்தியமூர்த்திக்குக் காமராஜர் என்றால் ராஜாஜிக்கு ம பொ சி என்பது அன்றைய காங்கிரஸ் அரசியல். ராஜாஜியும், ம பொ சியும் ஓரங் கட்டப்படார்கள்.

Unknown said...

can you please share book name or author details i m looking for this book since 2017 kindly share the details please