பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, May 17, 2013

சென்னை நகரம் யாருக்குச் சொந்தம்?

              சென்னை நகரம் யாருக்குச் சொந்தம்?
                                                    சென்னை நகரம் ஒரு தோற்றம்

"கல்கி" பத்திரிகை ஆசிரியர் திரு ரா.கிருஷ்ணமூர்த்தி (கல்கி) அவர்கள் தன்னுடைய பத்திரிகையில் வாரந்தோறும் தலையங்கங்களை எழுதி வந்தார். அவ்வப்போது நிகழ்ந்த அல்லது முக்கியமான தலைப்புகளில் அந்த தலையங்கம் அமையும். இந்திய சுதந்திரத்துக்குப் பின்பு சென்னை மாகாணம் என்பது தமிழகம், ஆந்திரத்தின் பல பகுதிகள், கர்நாடகத்தில் பல இடங்கள், கேரளத்தின் வடபகுதி இவைகளை உள்ளடக்கியதாக இருந்தது. மொழிவாரி மாகாணம் பிரிக்க வேண்டும் எனும் கோரிக்கை எழுந்தபோது தனி ஆந்திரம், மைசூரை உள்ளடக்கிய கர்நாடகம், ஐக்கிய கேரளம் இவை உருவான நேரம் அது. சென்னை நகரம் இந்த மாகாணத்தின் தலைநகரமாக விளங்கியது. மொழிவழி மாநிலம் அமையும்போது சென்னை ஆந்திரத்துக்கு வேண்டும் எனும் கோஷம் எழுந்தது. அது முடியாவிடில் சென்னை இரு மாநிலத்துக்கும் பொதுவான தலைநகராக இருக்க வேண்டுமென்ற கருத்தும் எழுந்தது. அப்போது ராஜாஜியின் மனச்சாட்சியாக இருந்து வந்த கல்கி சென்னை நகரம் தமிழகத்தின் தலைநகரம்தான். ஆந்திரர்கள் எழுப்பும் பலத்த கூச்சலுக்கு சவாலாக தமிழகத்தில் ஒரு சேனை தேவை என்று தலையங்கம் எழுதினார். பின்னர் "தலை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" எனும் கோஷத்துடன் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. களத்தில் இறங்கினார். சென்னை நகரம் ஆந்திர கேசரி டி.பிரகாசம்காரு போன்றவர்கள் முயன்றும் தமிழகத்தின் தலைநகராக விளங்க ராஜாஜியின் தூண்டுதலும், தமிழ்ப் படைக்குத் தலைமை தாங்கிய சிலம்புச் செல்வரும், அப்போதைய சென்னை மாநகர மேயராக இருந்த டி.செங்கல்வராயனின் ஆதரவும் காரணமாக இருந்தன. ராஜாஜி நேரடியாக களத்தில் இறங்கவில்லையே தவிர அவரது குரலை ஒலித்தவர் சிலம்புச் செல்வர். இன்று அந்த பெருமக்களை மனதார போற்றி வாழ்த்தி வணங்குவோம். இதோ "கல்கி" 25-9-1949இல் எழுதிய தலையங்கம்.
"கல்கி" பத்திரிகை ஆசிரியர் திரு ரா.கிருஷ்ணமூர்த்தி

                                              சென்னைக்கு ஒரு சேனை!

"சேனை ஒன்று இப்போது தேவையாயிருக்கிறது. சென்னை நகரைப் பாதுகாப்பதற்காக அச்சேனை தேவை. சொல்லுவதற்கே கூச்சமாயிருக்கிறது. நமது சொந்தச் சகோதரர்களான ஆந்திர தேசபக்த வீரர்களின் அநியாயக் கோரிக்கையிலிருந்து சென்னை நகரைக் காப்பாற்றுவதற்கு அத்தகைய பாதுகாப்புச் சேனை ஒன்று தேவையாயிருக்கிறது. தமிழ் நாடெங்குமிருந்து அச்சேனை திரண்டு வரத் தயாராயிருக்க வேண்டும். கத்தி, துப்பாக்கி எடுத்துப் போராடுவதற்காக அல்ல; தமிழ் மக்களின் எகோபித்த அபிப்பிராயத்தையும் திட சங்கல்பத்தையும் தெரியப் படுத்திச் சாதிவீக முறையிலே போராடுவதற்காகத்தான்.

நமது ஆந்திர சகோதரர்கள், பாவம், சில விஷயங்களில் குறைப்படுவதற்கு இடம் இருக்கிறது. புராதன இலக்கியமோ, நவீன இலக்கியமோ அவ்வளவாக ஆந்திர பாஷையில் கிடையாது. தமிழர்களுடன் ஒப்பிடும்போது படிக்கும் ஆசையும் அவ்வளவாகக் கிடையாது. பழைய காலத்துச் சிற்பங்கள் கொஞ்சம் உண்டு; ஆனால் அவற்றைப் பேணிப் பாராட்டுவோர் இல்லை. விஜயநகர சாம்ராஜ்யம் ஒரு சமயத்தில் மகோந்நதம் அடைந்திருந்தது. அதன் சின்னங்களாகச் சில சிதிலமடைந்த கோட்டைகளும் கட்டிடங்கலும்தான் இன்று இருக்கின்றன. அந்த விஜயநகர சாம்ராஜ்யம் நடந்த காலத்தில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் முதலிய க்ஷேத்திரங்களில் ஒப்பற்ற பெருமை வாய்ந்த கோயில்களும், கோபுரங்களும் கட்டப்பட்டன. ஆனால் ஆந்திர நாட்டில் அத்தகைய ஆலயங்கள் நிர்மானிக்கப் படவில்லை. ஸ்ரீ தியாகராஜரின் கீர்த்தனங்கள் தெலுங்கு பாஷையில் உள்ள சிறந்த கலைச் செல்வம். ஆனால் அவற்றை அனுபவிக்கும் ஆற்றலும் பாக்கியமும் ஆந்திர மகாஜனங்களில் மிகப் பெரும்பாலோர் இன்னும் பெறவில்லை. மட்டமான ஹிந்துஸ்தானி டாக்கி மெட்டுகளுடன் திருப்தியடைகிறார்கள்.
1950ஆம் வருஷத்து கல்கி பத்திரிகை

இப்படியெல்லாம் சில துறைகளில் அபாக்கியசாலிகளாயிருந்த போதிலும் 1921ஆம் ஆண்டிலிருந்து ஆந்திரர்கள் ஒரு முக்கியமான துறையில் பெயரும் புகழும் பெற்றனர். காந்தி மகாத்மா ஆரம்பித்த ஒத்துழையாமை இயக்கத்தில் ஆந்திரர்கள் முன்னணியில் நின்றார்கள். ஒப்பற்ற தியாகங்கள் பல செய்தார்கள். 1930இல் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரக இயக்கத்திலும் ஆந்திரர்கள் தீரப் போர் புரிந்து நல்ல பெயர் வாங்கினார்கள்.

இப்படியெல்லாம் தேசபக்தியுடன் தியாகம் செய்ததற்காக வெட்கப்பட்டு அதற்குப் பரிகாரம் தேடுகிறவர்களைப் போல் சிலகாலமாக அந்நாட்டுத் தலைவர்கள் பேசி வருகிறார்கள்; காரியமும் செய்து வருகிறார்கள்.

1937-38இல் ராஜாஜி சென்னை மாகாணத்தின் பிரதம மந்திரியாயிருந்த போது ஆந்திர மாகாணக் கிளர்ச்சி வலுப் பெற்றது. ராஜாஜிதான் ஆந்திர மாகாணத்தைத் தனியாகப் பிரிப்பதற்குக் குறுக்கே நிற்கிறார் என்ற பொய் அவதூறைப் பரப்பிப் பிரச்சாரம் செய்தார்கள். அது பொய் என்று வெட்ட வெளிச்சமாக நிரூபிக்கப்பட்ட பிறகும் சில தலைவர்கள் அதைத் திருப்பித் திருப்பிச் சொல்லத் தயங்கவில்லை.

பிறகு அட்வைஸர்களின் ஆட்சி நடந்தபோது ஆந்திர மாகாணக் கிளர்ச்சி இருந்த இடம் தெரியவில்லை. இப்போது ஆந்திர மாகாணப் பிரிவினைத் தலைவர்களில் ஒருவராயிருக்கும் ஸர் எஸ்.வி.ராமமூர்த்தி அச்சமயம் சென்னை சர்க்காரின் பிரதம காரியதரிசியாக இருந்தார். சர்க்காரிடம் மிகுந்த செல்வாக்கு உள்ளவராயிருந்தார். அந்த நாலு வருஷத்தில் ஆந்திர மாகாணத்தைப் பிரித்திருக்கலாம் அல்லவா? யார் வேண்டாம் என்றார்கள்? அப்போது ஸர் எஸ்.வி.ராமமூர்த்தி தம்முடைய உத்தியோகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆந்திரகேசரி டி.பிரகாசம்

அது மாதிரியே ஸ்ரீ டி.பிரகாசம் பந்துலுகாரு சென்னை மாகாணப் பிரதமராயிருந்த நாட்களிலும் 'ஆந்திர மாகாணப் பிரிவினை'யைப் பற்றிப் பேச்சே இல்லாமலிருந்தது. ஸ்ரீ பிரகாசம் பிரதமர் பதவியிலிருந்து விலகிய பிறகு 'ஆந்திர மாகாணத்தைப் பிரிக்க வேண்டும்' என்ற கூச்சல் ஒரே பிரளயமாக எழுந்தது.

ஆந்திர மாகாணப் பிரிவினைக்குத் தமிழர்கள் எப்போதும் குறுக்கே நின்றதில்லை. "தாராளமாய்ப் பிரித்துக் கொண்டு போங்கள்! எவ்வளவு சீக்கிரம் பிரிந்து போகிறீர்களோ அவ்வளவுக்கு நல்லது!" என்றுதான் தமிழர்கள் சொல்லி வந்தார்கள். ஆனால் மேலேயுள்ள நமது மாபெரும் தலைவர்கள் மாகாணப் பிரிவினை முதலிய சில்லறை விஷயங்களில் கவனம் செலுத்த இது சரியான சமயம் இல்லை என்று கருதினார்கள். இதை நல்லபடியாகச் சொல்லிப் பார்த்தும் ஆந்திரத் தலைவர்கள் கேட்கவில்லை. நீதிபது தார் என்பவரைத் தலைவராகக் கொண்ட மாகாணப் பிரிவினைக் கமிஷன் ஒன்று தேசமெங்கும் சுற்றிச் சாங்கோ பாங்கமாக விசாரணை நடத்தியது. நடத்திவிட்டு அந்தக் கமிஷனும் "ஆந்திர மாகாணப் பிரிவினைக்கு இப்போது ஒன்றும் அவசரமில்லை. அதை இப்போது எடுத்துக் கொண்டால் இன்னும் பல கிளைப் பிரச்னைகள் எழுந்து தொல்லை கொடுக்கும்" என்று அபிப்பிராயம் தெரிவித்தது.

இதனாலும் பயன் விளையவில்லை. ஆந்திரத் தலைவர்கள் கொதிக்கிற எண்ணையில் போட்ட அப்பத்தைப் போலக் குதித்தார்கள். "ஆந்திர மாகாணம் இப்போதே வேண்டும்; இந்த நிமிஷமே வேண்டும்!" என்று காது செவிடுபடும்படி கோஷித்தார்கள்.

பார்த்தார்கள் நம் தலைவர்கள், "சரி, மாகாணத்தைப் பிரித்து விடுகிறோம்; ஆனால் அதற்குத் தடையாயிருப்பது உங்களுடைய அநியாயக் கோரிக்கைதான். அதாவது சென்னை நகரம் வேண்டும் என்று கேட்கிறீர்களே, அந்த அநியாயக் கோரிக்கையை விட்டுவிடுங்கள்; மாகாணம் உடனே பிரிக்கப்படும்!" என்று சொன்னார்கள்.

இப்படிச் சொன்னவர்கள் பண்டித ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், டாக்டர் பட்டாபி சீத்தாராமையா ஆகிய மூவர். ஆம், டாக்டர் பட்டாபியும் கூடத்தான்! ஆந்திர மாகாணக் கிளர்ச்சியை நடத்தியவர்களில் டாக்டர் பட்டாபியை மிஞ்சக் கூடியவர் வேறு யாரும் இல்லை. அவரே மற்ற இருவருடன் "சென்னைக் கோரிக்கையை ஆந்திரர்கள் கைவிட்டால்தான் உடனே ஆந்திர மாகாணம் ஏற்படுத்துவது சாத்தியம்!" என்று ஒப்புக் கொண்டு ஒப்பமும் வைத்திருக்கிறார்.

ஆனால் டாக்டர் பட்டாபிக்கு எதிர் கோஷ்டியார், அதாவது ஸ்ரீ டி.பிரகாசம் கோஷ்டியார் பார்த்தார்கள். டாக்டர் பட்டாபியை மட்டம் தட்ட இதுதான் சமயம் என்று தீர்மானித்தார்கள். அவலை நினைத்து உரலை இடிப்பது போல், டாக்டர் பட்டாபியின் மீதுள்ள கோபத்தைச் சென்னை நகரின் மீது பேரபிமானமாக மாற்றிக் கொண்டு புறப்பட்டார்கள்.
ராஜாஜி

"சென்னை நகரத்தை ஆந்திர மாகாணத்தில் சேர்க்க வேண்டும். அது முடியாவிட்டால் சென்னையில் பாதியாவது ஆந்திர மாகாணத்துடன் சேர வேண்டும். அதுவும் முடியாவிட்டால் சென்னை நகரம் தமிழ் நாட்டிலும் சேராமல் ஆந்திர நாட்டிலும் சேராமல் தனி மாகாணமாகி இந்திய சர்க்காரின் நேரான நிர்வாகத்தில் இருக்க வேண்டும்" என்றார்கள்.

எப்படி இருக்கிறது கோரிக்கை? காத்தவராயன் என்ற பழைய திருடனை, திருவானைக்காவல் ஆலயத்தில் புகுந்து அம்மனுடைய தங்க ஆபரணங்களைத் திருடிவிட்டதாகக் கைது செய்தார்கள். திருடன் கட்சி பேசுவதற்குப் பாரிஸ்டர் பரிபூரணராயர் முன்வந்தார். அவர் வாதிட்டார்:-

"குறிப்பிட்ட தினத்தில் என்னுடைய கட்சிக்காரன் திருவானைக்காவலில் இல்லை. அப்படி இருந்திருந்தாலும் ஆலயத்துக்குப் போகவில்லை. ஆலயத்துக்குப் போயிருந்தாலும் அம்மன் கோயில் ஆபரணத்தைத் திருடவில்லை. அப்படித் திருடியிருந்தாலும் அவை தங்க ஆபரணங்கள் அல்ல; பித்தளை ஆபரணங்கள்தான்!"

திருடனை விடுதலை செய்ய மேற்படி வக்கீலின் வாதம் எவ்வளவு உதவியாயிருக்குமோ அவ்வளவுதான் ஆந்திரர்களின் வாதமானது சென்னை நகரின் மீது அவர்களுடைய உரிமையை ஸ்தாபிக்க உதவக்கூடும்.

ஆனபோதிலும் ஒரு விஷயத்தை நாம் மறந்துவிடக் கூடாது. இது ஜனநாயக யுகம். பெரும்பான்மை வோட்டுகளினாலும் அதிகமான கூச்சலினாலும் பொய்யும் உண்மையாகிவிடும்.
சிலம்புச் செல்வர் ம.பொ.சி.

புது தில்லியிலுள்ள நமது தலைவர்கள்தான் என்ன செய்வார்கள்? அவர்களுக்கு எத்தனையோ வேலை! அத்தனையோ கவலை! இந்த ஆந்திர மாகாணத் தொல்லையை எப்படியாவது தீர்த்துத் தொலைத்தால் போதும் என்று அவர்களுக்குத் தோன்றி விடலாம் அல்லவா? ஆந்திர சகோதரர்களின் கூச்சல் மாத்திரம் அவர்கள் காதில் விழுந்து தமிழ் நாட்டிலிருந்து சத்தமே கிளம்பாவிட்டால், "ஓஹோ! ஆந்திரர்களின் கோரிக்கை நியாயமானதுதான் போலும்!" என்று அவர்கள் எண்ணிவிடக்கூடும் அல்லவா?

அந்த மாதிரி எண்ணத்தை நம் தலைவர்கள் மனதில் உண்டு பண்ணத்தான் ஆந்திரத் தலைவர்கள் முயற்சி செய்து வருகிறார்கல். கூட்டம் கூட்டமாகவும் கோஷ்டி கோஷ்டியாகவும் புதுதில்லிக்குப் படையெடுத்துப் போகிறார்கள். பண்டித ஜவஹர்லால் முதலிய தலைவர்களைப் பேட்டி காண்கிறார்கல். ஜனநாயக யுகத்தில் 'பேட்டி கொடுக்க மாட்டோம்' என்று தலைவர்கள் எப்படிச் சொல்ல முடியும்? வந்தவர்களுக்குப் பேட்டி கொடுத்துத் தலைவர்கள் அவர்கள் சொல்லுவதையும் காது கொடுத்துக் கேட்கிறார்கள். தில்லிக்குப் போனவர்கள் திரும்பி வந்து "தலைவர்களிடம் சொல்லி விட்டோம், அநேகமாக நம் பக்கம் தீர்ப்பு ஆகும்!" என்ற வதந்தியைப் பரப்புகிறார்கள்.

தமிழர்கள் வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்தால் ஆந்திர சகோதரர்களின் எண்ணம் நிறைவேறினாலும் நிறைவேறி விடலாம் அல்லவா? பிடிவாதக் காரர்களை எப்படியாவது சமாதானப் படுத்த வேண்டும் என்று அகில இந்தியத் தலைவர்களுக்குத் தோன்றினாலும் தோன்றிவிடலாம் அல்லவா?"

ஆந்திரர்கள் சென்னை நகருக்கு உரிமை கொண்டாடுவதைப் போன்ற அநியாயமான கோரிக்கை அரசியல் உலகில் நாம் கேள்விப் பட்டதில்லை. சென்னை நகரில் பெரும்பான்மையோர் தமிழர்கள், ஏறக்குறைய 100க்கு 80 பேர் தமிழர்கள். இதை யாரும் ஆட்சேபிக்கவில்லை.

சென்னையில் நெடுங்காலமாக வசித்து வருவோர் தெலுங்கர்களா? தமிழர்களா? இதைக் கண்டுபிடிக்க ஒரு திட்டமான வழி இருக்கிறது.

ஒரு பாஷைக்காரர்கள் வியாபாரம் அல்லது தொழிலுக்காக வேறு மாகாணத்துக்குப் போனால் அவர்கள் தாங்கள் குடிபுகுந்த மாகாண பாஷையைக் கற்றுக் கொள்வது இயல்பு.

காசிக்குப் போய்க் குடியேறும் தமிழர்கள் அங்கு வழங்கும் ஹிந்தி பாஷையைக் கற்றுக் கொள்வார்கள். ஆனால் காசி வாசிகள் தமிழைக் கற்றுக்கொண்டுவிட மாட்டார்கள்.

இப்போது பாருங்கள், சென்னை நகரில் குடியேறி வர்த்தகம் செய்யும் கோமுட்டி செட்டியார்கள், நாயுடுமார்கள் முதலியோர் நன்றாகத் தமிழ் பேசுகிறார்கல். ஆனால் சென்னையிலுள்ள தமிழர்கள் எத்தனை பேருக்குத் தெலுங்கு பாஷை பேசத் தெரியும்?

சென்னை நகரம் தமிழர்களுடையதுதான் என்பதைப் பற்றி யாதொரு சந்தேகமும் இல்லை. ஆந்திரர்கள் சென்னை நகரை முழுதும் கேட்பதோ, பாதி வேண்டும் என்று கேட்பதோ மிக்க அநியாயம். ஆந்திராவிலும் தமிழ் நாட்டிலும் சேராமல் சென்னையைத் தனி மாகாணமாக்க வேண்டும் என்று கேட்பது "எனக்கு இரண்டு கண்கள் போனாலும் அடுத்த வீட்டுக்காரனுக்கு ஒரு கண் போனால் சரி" என்ற மோசமான மனோ நிலையைக் காட்டுகிறது.

தமிழர்களுடைய கட்சியிலேயே முழு நியாயம் இருந்த போதிலும் அதை எடுத்துச் சொல்வது அவசியம். ஏற்கனவே சென்னை விஷயத்தில் தமிழ் நாட்டுத் தலைவர்கள் அவ்வளவு ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வில்லை. "பட்டணம் பறிபோகிறது" என்ற எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் வடசென்னைக்கு ஆந்திரப் பிரதிநிதியைச் சட்டசபைக்கு நிறுத்த ஒப்புக் கொண்டார்கள்.

இப்போதாவது தமிழ் நாட்டுத் தலைவர்கள் விழித்தெழ வேண்டும். முன் ஜாக்கிரதையுடன் காரியம் செய்ய வேண்டும். தலைவர்கள் விழித்தெழுந்து தக்க சமயத்தில் தக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்ப் பொது மக்கள் தூண்ட வேண்டும். தலைவர்கள் தூங்கினாலும் மக்கள் போடும் கூச்சலில் அவர்கள் எழுந்துவிட வேண்டும்.

சென்னையில் ஸ்ரீ பி.எம்.ஆதிகேசவலு நாயக்கர் அவர்கள் சென்ற வாரத்தில் இது சம்பந்தமாக ஒரு கூட்டம் கூட்டி வைத்தார்; பலரும் பேசினார்கள். தீர்மானமும் நிறைவேற்றினார்கள்.

தமிழ்நாட்டில் இன்னும் சில இடங்களிலும் "சென்னை நகரம் தமிழர்களுடையதே" என்ற சிறு குரல்கள் எழுந்திருக்கின்றன. இதெல்லாம் போதாது. இந்த மாதிரி சிறு குரல்களும் பெருங்குரல்களும் கோஷங்களும் கூச்சல்களும் தமிழ்நாடு முழுதும் கிளம்ப வேண்டும். எல்லாம் சேர்ந்து ஒரு பெரிய மகா சமுத்திரத்தின் பேரிரைச்சல் போல் முழங்கிப் புது டில்லியில் உள்ள நம் மாபெரும் தலைவர்கள் காதிலும் போட் எட்ட வேண்டும்.

சென்னை நகரைத் தமிழ்நாட்டுக்குக் காப்பாற்றிக் கொடுக்க ஒரு பெரும் சேனை தயாராக வேண்டும். கூச்சலும் கோஷமும் போட்டுப் பார்த்த பிறகு அவசியமானால், காந்தி மகாத்மா காட்டியுள்ள சாத்வீக முறையில் நடவடிக்கை எடுத்துத் தமிழர் உரிமையை நிலைநாட்டவும் அந்த சேனை ஆயத்தமாயிருக்க வேண்டும்."

நன்றி: "கல்கி" 25-9-1949.

அன்பிற்கினிய பாரதிபயிலக வலைப்பூவைப் படிக்கும் அன்பர்களே! கல்கியின் இந்தக் குரல் யாரிடமிருந்து அவருக்கு வந்தது என்பதை யூகித்து உணர்வது ஒன்றும் சிரமமில்லை. அப்படி தமிழர்கள் சென்னை நகரைக் காக்க வேண்டும் என்று இத்தனை அழுத்தமாகக் கல்கி குரல் கொடுத்த பின்பு என்ன நடந்தது? அப்படிப்பட்ட ஒரு சேனை தமிழகத்தில் உருவானதா? அறவழிப் போராட்டம் நடைபெற்றதா? யார் தலைமையேற்று அந்தப் போராட்டத்தை நடத்தியது? அதில் வெற்றி பெற்றாரா? இவற்றையெல்லாம் அடுத்து வரும் கட்டுரையில் பார்க்கலாம்.

1 comment:

துரை செல்வராஜூ said...

தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டிய உன்னதமான செய்தி .. இன்று முன்வைக்கப்பட்டுள்ளது..இங்கே குடியேறி வர்த்தகம் செய்யும் பிற மொழிக்காரர்கள் நன்றாகத் தமிழ் பேசுகிறார்கள். ஆனால் தமிழர்களில் எத்தனை பேருக்கு பிற மொழிகள் பேசத் தெரியும்? - சிந்தனைக்குரியது.