பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, October 4, 2012

சியாங்கே ஷேக்

சியாங்கே ஷேக்
(1887-1975)

சீனாவின் ஒப்பற்ற தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் சியாங்கே ஷேக் (Chiang Kaishek). சீன அரசியலில் பல வெற்றிகளைப் பெற்றதைப் போலவே அவற்றை இழக்கவும் செய்த தலைவர். சீனா இப்போது பொதுவுடமைக் கட்சி ஆளும் நாடாக இருக்கிறது அல்லவா? சியாங் காலத்தில் அவர் கம்யூனிச எதிரியாக இருந்தவர். இவர் தேசிய சீனக் கட்சியான கோமிண்டாங் எனும் கட்சி ஆட்சியை நடத்தியவர். கம்யூனிஸ்டுகள் மாசே துங் தலைமையில் சீனாவை ஆளத்தொடங்குமுன் இவரது புகழ் சீன தேசத்தில் எங்கும் பரவிக் கிடந்தது. அவர் காலத்தில் சீனாவை மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக முன்னேற்றமடையச் செய்யவேண்டுமென்று அயராது பாடுபட்டவர் சியாங். சீன மக்கள் இவரை மிகவும் அன்போடு நேசித்தனர்.

சீனாவில் ஜீஷியாங் மாகாணத்தில் ஒரு செல்வக் குடும்பத்தில் பிறந்தவர் சியாங் கேஷேக். இவரது இளம் வயதிலேயே முதலில் இவரது பாட்டனாரையும், அதற்கு அடுத்த ஆண்டில் இவரது தந்தையையும் இழந்தார். பின்னர் தாய் இவரது கல்வியிலும் முன்னேற்றத்திலும் அதிக காட்டினார். அப்போதெல்லாம் தந்தை இழந்த குழந்தைகள் அதிகம் சிரமப்பட வேண்டியிருந்தது. நம் நாட்டில்கூட "தாயோடு அறுசுவை உண்டிபோம், தந்தையோடு கல்வி போம்" என்ற பாடலும் உண்டு அல்லவா? இளமையில் இவர் பல சீன மொழி இலக்கியங்களைப் படித்துத் தேர்ந்தார். கல்வியில் ஆர்வம் கொண்டு இவர் நன்றாகப் படித்து உலக நடப்புகளை அறிந்து கொண்டதோடு மேற்கத்திய சட்டக் கல்வியையும் படித்து முடித்தார். சீனாவின் ஒப்புயற்வற்ற தலைவராக இருந்த சன் யாட் சேன் (Sun Yat Sen) அவர்களுடைய இயக்கத்தில் அதிக ஆர்வமும் கவனமும் எடுத்துக் கொண்டு ஈடுபாடு கொண்டார்.

ஜப்பானியர்களிடம் இவர் ராணுவக் கல்வியைப் பயின்றார். 1911இல் ஜப்பானிலிருந்து சீனா திரும்பிய பிறகு சீனாவில் நடந்த புரட்சியில் கலந்து கொண்டார். 1913 தொடங்கி சுமார் மூன்று ஆண்டுகள் சீனாவை ஆண்ட குவிங் ஆட்சியைத் தூக்கி எறிய பாடுபட்டார். 1917இல் இவர் சன் யாட் சென்னுடைய ராணுவ ஆலோசகராக விளங்கினார். 1923இல் இவர் சன் யாட் சென்னுடன் சோவியத் ரஷ்யாவுக்குச் சென்று ராணுவ பயிற்சிகளைப் பார்வையிட்டார். நாடு திரும்பிய சியாங்குக்கு ராணுவ பயிற்சி தளத்தின் தலைவர் பதவியை சர் யாட் சென் வழங்கினார்.

1925இல் சன் யாட் சென் காலமானார். அதன் பிறகு சீனாவின் கோமிண்டாங் என வழங்கப்பட்ட சன் யாட் சென் அரசாங்கத்தின் ராணுவத்தில் இவருக்கு நல்ல செல்வாக்கு ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இவர் சீனாவின் வடக்குப் பகுதியில் தனது தேசிய (கோமிண்டாங்) ராணுவத்தை அணிவகுத்து நடத்திச் சென்றார். ஷாங்காய் எனும் சீன வர்த்தகத் தலைமை கொண்ட நகரத்தையும் நான் ஜிக் நகரத்தையும் இவர்களது படை சென்றடைந்தது. சன் யாட் சென் கம்யூனிஸ்டுகளுடன் ஒத்துழைத்து சோவியத் ரஷ்யாவின் உறவையும் வலுப்படுத்தி வைத்திருந்தார். அதே கொள்கையை சியாங்கும் கடைப்பிடித்தார். சோவியத் நாடு சியாங்கே ஷேக்கின் சீனாவுக்கு அதிக அளவுக்கு உதவிகளைச் செய்தது.

இந்த நிலைமை 1927க்குப் பிறகு மாறியது. கம்யூனிஸ்டுகளுடனான ஒத்துழைப்பை இவர் விலக்கிக் கொண்டார். உடனே கம்யூனிஸ்டுகளுக்கும் சியாங்கின் தேசியப் படைகளுக்குமான உள் நாட்டுப் போர் தொடங்கி விட்டது. 1936இல் சீன தேசியப் படையினரின் ஒரு பகுதியினர் இவரைப் பிடித்து வைத்துக் கொண்டு கம்யூனிஸ்டுகளுடனான உள் நாட்டுப் போரை உடனடியாக கைவிடும்படி கட்டாயப் படுத்தினர். அப்போது ஜப்பான் சீனாவின் மீது படையெடுத்தபடியால் அதற்கு எதிராக சீனா ஒன்றுசேர்ந்து ஜப்பானை எதிர்க்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாட்டைச் செய்தனர். வேறு வழியின்றி, ஜப்பானை எதிர்த்துப் போரிடுவதற்காக தேசிய சீன அரசாங்கம் சியாங் தலைமையில் ஒற்றுமைக்கு சம்மதம் தெரிவித்தது.

இதையடுத்து சீனாவில் தேசிய கோமிண்டாங்குக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் ஒற்றுமை ஏற்பட்டது. ஆனால் இந்த ஒற்றுமை 1940 வரைதான் நீடித்தது. உலகப் போர் தொடங்கி ஐரோப்பாவில் வெகு வேகமாகப் பரவிக் கொண்டிருந்த காலகட்டத்தில் சீனாவில் மறுபடியும் தேசிய கோமிண்டாங்குகளுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் வடமேற்கு மாகாணத்தில் மோதல்கள் ஏற்பட்டுவிட்டன. ஜப்பானிய படைகள் சீனாவின் நான் ஜிங் நகரைக் கைப்பற்றி விட்டமையால் சியாங் தனது தலை நகரையும் சாங்கிங் எனுமிடத்துக்கு மாற்றிக் கொண்டார்.

ஜப்பான் அமெரிக்காவின் பெர்ல் ஹார்பரில் குண்டு வீசித் தாக்கியதன் விளைவாக ஜப்பான் இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டுவிட்டது. இப்போது ஜப்பானின் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த சீனா அகில உலக அரசியலில் அச்சு நாடுகளுக்கு எதிரான குழுவில் இடம் பெற்றது. 1943இல் எகிப்தின் கெய்ரோ நகரத்தில் நடந்த சர்வ தேச மகா நாட்டுக்கு சியாங் கேஷேக் சென்றார். அங்கு அவர் அமெர்க்க ஜனாதிபதி ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட், பிரிட்டனின் பிரதமர் சர் வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோருடன் பேசினார். பின்னர் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சியாங்கின் உள்நாட்டுக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.


ஜப்பான் மீது அணுகுண்டு வீசிய பிறகு, ஹிட்லரின் நாஜிப் படைகளின் அழிவுக்குப் பிறக், உலகப் போர் முடிவடைந்தது. சீனாவில் உள்நாட்டுப் பிரச்சினை மட்டும் முடிவடையாமலே இருந்தது. சியாங் கம்யூனிஸ்டுகளோடு எந்த உடன்பாடும் காணமுடியாமல் இருந்தார். உள்நாட்டுப் போர் அங்கு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. உள்நாட்டுப் போரின் தொடக்கத்தில் சீன தேசிய கோமிண்டாங் படைகளுக்கு வெற்றி முகம் காணப்பட்டாலும், பிறகு சீன விவசாய மக்களின் ஒட்டுமொத்த ஆதரவின் காரணமாக கம்யூனிஸ்ட் படைகளுக்கு வெற்றிகள் கிடைக்கத் தொடங்கிவிட்டன. மாசேதுங் தலைமையில் வடக்கிலிருந்து கம்யூனிஸ்டுகளின் படைகள் வேகமாக முன்னேறி எல்லா பிரதேசங்களையும் தன்வசமாக்கிக் கொண்டன. அந்த கம்யூனிஸ்ட் படையெடுப்பு மாவோவின் கிரேட் மார்ச் என்று கூறப்பட்டது. தைவான் நாட்டில் கோமிண்டாங் நன்கு வலுப்பெற்று விளங்கியது. சியாங்கின் சர்வாதிகார ஆட்சி அங்கு வல்லமை பெற்று இருந்தது. தைவானில் இருந்து கொண்டு சியாங் கேஷேக் சீன நாட்டை மீண்டும் கைப்பற்றிவிட முடியும் என்று நம்பிக் கொண்டிருந்தார். அந்த நம்பிக்கையில் அவர் சீன நாட்டின் மீது அவ்வப்போது சிறு சிறு தாக்குதல்களையும் நடத்தி வந்தார். ஐக்கிய நாடுகள் சபையில் சீனா எனும் நாட்டுக்கு சியாங்கின் தேசிய கோமிண்டாங் அரசுதான் அங்கம் வகித்து வந்தது. அதுவும் கைநழுவிப் போய் கம்யூனிஸ்ட் சீனாவுக்கு அங்கு இடம் கிடைத்துவிட்டது. இவற்றால் எல்லாம் மனம் உடைந்த சியாங் கேஷேக் 1975 ஏப்ரில் 5இல் தைவான் நாட்டில் மருத்துவ மனையில் இறந்து போனார்.

1 comment:

Unknown said...

சியாங்கே ஷேக் பற்றிய பதிவு சீனாவின் இன்றைய கம்யூனிசத்திற்கு முந்திய நிலையைப் பற்றி அறிய முடிந்தது. காலாவதியாகிப் போன நடைமுறை கம்யூனிச சித்தாந்தம். ஏகோபத்திய தலைவன் எத்தனை நேர்த்தியானவன் என்றாலும் அரசியலில் இருக்கும் அதிகாரமும், மக்களை அடக்கி (அது நல்லதுக்கே என்று இருந்தாலும் கூட) ஆளும் நிலையும் அவர்களை வேறொரு திசைக்கே இழுத்துச் சென்றுள்ளது.

ஐரோப்பாவில், மணிமுடி தரித்த மன்னர்கள் மத குருக்களின் கைகளுக்குள் அவர்களின் கைப்பாவையாக இருந்துக் கொண்டும், கீழான உழைக்கும் வர்க்கத்தை அதே நிலையில் வைத்திருந்தும் தாங்கள் மட்டும் சுக போகங்களை அனுபவித்துக் கொண்டிருந்த அந்த கால அரசியலை விஸ்வரூபம் எடுத்து அதை உடனே மாற்ற வேண்டிய ஒரு சக்தியாகவும்... முரட்டுத் தனமாக முட்டி மோதி அவர்களிடம் இருந்த ஆட்சி அதிகாரங்களை எடுத்து மக்களுக்காக என்றுத் தொடங்கி...., நல்லதை எண்ணித் தொடர்ந்தவைகளும் நாளடைவில் சர்வாதிகார போக்கில் சென்று மீண்டும் பழைய நிலையிலே இருப்பது போன்ற ஒரு திறந்த சுதந்திர அமைப்பாக இல்லாமலே போயிற்று. அன்றைய சூழலில் ஒரு அவசர கால நடவடிக்கையாக, அதுவும் ஐரோப்பாவிற்கும் அதன் கலாச்சாரத்திற்கும் தகுந்த ஒரு சித்தாந்தமாக இருந்து இருக்கிறது. அது அன்றைய கால கட்டாயமாக இருந்திருக்கலாம்.

இன்றைய சூழலில் அது ஒரு காலாவதியான கதைக்குதவாத சித்தாந்தமாகியும் விட்டது.

தமிழ் மூதாட்டி ஒளவையாரின் காலமும், மகாகவி காலமும் எப்படி மாறி அவர்களின் சிலக் கருத்துக்களும் மாறி இருந்ததோ அப்படியொரு நிலையே. ஒளவையை போற்றும் பாரதி.. புதிய ஆத்திச் சூடியிலே அவரின் கருத்திற்கு மாற்றான கருத்துக்களை முன் வைக்கிறார். அது பாரதியின் காலத்து சூழலால் விளைந்தக் கருத்து. இன்று விஞ்ஞானம் வளர்ந்தக் காலத்தில் மகாகவி இருப்பானாயின் அவனும் சிலவற்றை மறு பரிசீலனை செய்து இருப்பான்.

இன்றும் சீனாவில் பெருஞ்சுவர்களுக்கும் மஞ்சலாற்றுக்கும் இடையிலே தான் ஜனநாயக வேஷம் போட்டு மேடைகளில் கூத்தாடும் கம்யூனிஷ்டுகளாக இருக்கிறார்கள் ஆட்சியாளர்கள் அல்லது மெதுவாக தங்களை மாற்றிக் கொள்ள நினைக்கிறார்கள்??!! இப்போது இருக்கும் ஆட்சியாளர்கள் கல்வியும், ஆங்கில அறிவும், உலகப் பார்வையும், அவர்களின் சித்தாந்தத்தை திருத்தி அல்லது மாற்றி வேறாகாச் செய்ய ஆயிரம் காரணம் இருக்கிறது.

எதுவாயினும், மக்கள் கல்வியோடு செல்வமும், உலக அறிவும், அனைத்து உலகத் தொடர்பும் கொள்ளும் அளவிற்கு வளர்ந்த பின்பு இந்த அமைப்பு எப்போது வேண்டுமானாலும் திறந்த வெளிப் பூங்காவிற்கு கதவுகளைத் திறந்து விடலாம் என்று நம்புவோம். ஜனநாயாகும் வளரும் விஞ்ஞானத்திற்கு தகுந்தாற் போல் தன்னில் மாற்றம் கொள்ள வேண்டும். அப்படி இலாது போனதால் தான் இந்தியா இன்று லஞ்ச லாவன்ய பிடியிலும், சமூக நீதியை சரிவர செய்ய முடியாமலும் ஊழல் பெருத்த அரசுகளால் முக்கித் தினறுகிறதும் கூட.

பதிவு பகிர்விற்கு நன்றிகள் ஐயா!