பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, August 5, 2011

வணங்குவோம்!


Swathanthra Jothi

சுதந்திரத் திருநாளில் தேசத் தலைவர்களை வணங்குவோம்!

Nehru taking Oath of Office as Prime Minister

Lala Lajpat Rai


Shaheed Bhagat Singh

நாட்டிற்குழைத்த நல்லவர்கள், தேசத் தலைவர்கள், நாம் இன்று அனுபவிக்கும் சுதந்திரத்தைத் தங்கள் செந்நீர் சிந்தி வாங்கித் தந்தவர்கள், பாரத தேசத்தின் தவப் புதல்வர்கள், அவர்களுக்குத் தலை வணங்குவோம்!

The pictures below are: 1. Mahatma Gandhi
                                     2. Jawaharlal Nehru
                                    3. Bal Ganghadhar Tilak
                                    4. Dr.S.Radhakrishnan
                                     5.Dr. Rajendra Prasad
                                    6. Moulana Abulkalam Azad
                                    7. Gopalakrishna Gokhale
                                    8. Lal Bahadur Sastri
                                    9. Pattabi Seetharamiah
                                  10. K.Kamaraj
                                   11. L.K.Advani
                                    12. A.Bharathan
                                   13. Sardar Vallabai Patel
                                   14. J.B.Kripalani
                                    15. A.B.Vajpai
                                    16. Mahatma Gandhi
                                    17. Nethaji Subash Chandra Bose


                                                                                                                                       Mahatma Gandhi
Jawaharlal Nehru






நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்


சுதந்திர வேங்கை

(இந்திய சுதந்திரத்தின் 64ஆம் ஆண்டு விழாவில் ஏனையோர் மறந்தாலும் நாம் மறக்காமல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை நினைவு கூர்வோம். காந்தி வழியல்லாது மாற்று வழியில், வீரம் செறிந்த வழியில் பாடுபட்ட அந்த மாவீரனுக்கு சுதந்திரத் திருநாளில் நம் நன்றியறிதலை உரித்தாக்குவோம். கவிஞர் திருச்சி தியாகராஜன் இயற்றி "வெளிச்சம்" எனும் நூலில் வெளியான அவரது பாடலில் இருந்து சில பகுதிகள் இங்கே ....) நன்றி: திருச்சி தியாகராஜன்.)

அடிமைக் குகையில் சிறைப்படுத்தி
ஆடிக் களித்த அந்நியரின்
கொடிய கரங்கள் முறிந்து விழக்
கொதித்த தேசப் பாசறையில்
சுடராய் எழுந்த சுபாஷ் போஸ்
தொடுத்த வார்த்தைப் பொறிகளினால்
அடக்கியாண்ட நெஞ்சமெல்லாம்
அதிர்ச்சி நோயால் கலங்கினவாம்.

வங்க மண்ணில் பிறந்தவரே
வாழ்வில் ஆன்ம நேயத்தைத்
தங்க வைத்தே மனமுருகத்
தாய்நாட்டிற்கே விடுதலையால்
பொங்கி வந்த உணர்ச்சியினால்
புதிய திருப்பம் தேர்ந்தெடுத்துச்
சிங்கக் குரலில் முழங்கி வந்தே
தேசப் பற்றில் ஈடுபட்டார்.

அகிம்சைப் போரால் விடுதலையை
அடைவ தென்றால் முடிந்திடுமா?
"பகைவன் நம்மை எளிதாகப்
பணிய வைப்பான், அதனாலே
தகுந்த வழியைத் தேர்ந்தெடுத்தேன்
தங்கள் வழிக்கு வாரு"மென்றே
அகத்தில் உறுதி கொண்டதனால்
அண்ணல் காந்தி வேறுபட்டார்.

இந்தி யர்கள் கோழையென
இட்லர் மொழிந்த இழிசொல்லின்
சிந்தை திருந்த வைத்ததுடன்
சீராய்த் தேச உடையணிந்தே
அன்று படத்தைப் பிடிக்கவைத்தே
ஆழ்ந்த நாட்டுப் பற்றுரைத்தார்
குன்று மலையாய்க் கோலமிடும்
கொள்கை கொண்டே பழகிவந்தார்.


சிங்கப் பூரை ஜப்பானும்
சேர்த்துக் கொண்ட நேரத்தில்
வங்க வேங்கை நேதாஜி
வந்தார் வீர உணர்வோடே
அங்கே வாழ்ந்த இந்தியரின்
அடிமைத் தளையை விடுவித்துச்
சிங்கக் குரலால் தாய்நாட்டுச்
சேவைக் காக அழைத்திட்டார்.

"இந்தி யாவில் சுதந்திரமாய்
இயங்கும் டில்லிக் கோட்டையிலே
சந்திக் கின்றேன்" எனக்கூறித்
தானாய் மறைந்த நேதாஜி
எந்த நிலையோ யாரறிவார்
எதையோ பலரும் பேசுகிறார்
விந்தை புரிந்த வரிவேங்கை
வேட்கை தீர்ந்தும் வரக்காணோம்.

சிவந்த அந்தத் திருமேனி
செம்மை வளர்த்த பெருநெஞ்சம்
கவரும் காந்தப் பேச்சாளர்
கள்ள மில்லாப் பண்பாளன்
எவரும் விரும்பும் பெருந்தலைவன்
எழுத்தில் இசையில் சீராளன்
கவிதைச் சோலைப் பூவண்டு
கண்ட கனவே பொய்யல்ல!

வாழிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெருமை.

Thursday, August 4, 2011

கவி கா.மு.ஷெரீப்


"தமிழ் முழக்கம்" கவி கா.மு.ஷெரீப்

(கலைமாமணி விக்கிரமன் அவர்கள் எழுதி "தினமணி" தமிழ்மணியில் வெளியான கட்டுரையிலிருந்து நன்றியுடன் வெளியிடப் படுகிறது)

கவி கா.மு.ஷெரீப், கு.சா.கிருஷ்ணமூர்த்தி, சங்கரதாஸ் சுவாமிகள் ஆகியோர் இன்று மறக்கமுடியாத கவிஞர்கள். லட்சத்துக்காக எழுதாமல் லட்சியத்துக்காகக் கவிதைகள் எழுதியவர்கள். திரைப்படங்களில் பிரபலமாகமலேயே இன்றும் அந்தக் கவிதைகளை முணுமுணுக்கும் தமிழ் மக்கள் இருக்கிறார்கள்.

கவி. கா.மு.ஷெரீப்பைத் தமிழ்நாடு முற்றிலும் உணரவில்லை என்பதைத் தெரிவிக்கவே அவருடன் பழகிய, அவர் காலத்தே வாழ்ந்த நான் அவரைப் பற்றி மறக்க முடியாத சிலவற்றைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

'பணம் பந்தியிலே குணம் குப்பையிலே', இதை எழுதியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம். 'சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?' - இந்த வரிகளைக் கேட்கும்போது மெய் மறக்கிறோம். இயற்றியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம். 'ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா?', 'ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே' ஆகிய பாடல்கள் எந்தத் திரைப்படத்தி, யார் எழுதியது என்று 'குவிஸ்' நடத்தாமல் ரசிக்கிறோம். இதுபோன்ற திரைப்படப் பாடல் வரிகளை எழுதியவர் கவி.கா.மு.ஷெரீப் என்று அறியும்போது, அவரை நாம் மறந்து விட்டோமே என்ற வேதனையும் எழுகிறது.

கவி கா.மு.ஷெரீப் தஞ்சை மாவட்டத்தில் அபிவிருத்தீஸ்வரம் என்னும் ஊரில் 1914ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி பிறந்தார். தந்தை பெயர் காதர்ஷா ராவுத்தர். தாய் முகம்மது இப்ராகிம் பாபாத்தம்மாள்.

தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தாய் தந்தையர் போதிக்க, ஒழுக்கக் கல்வியைத் தவிர பள்ளிப் படிப்பில்லை. பட்டறிவும் இறைவன் கொடுத்த அறிவும் அவரைப் பல்துறை வித்தகர் ஆக்கின.

15ஆம் அகவையிலேயே அரசியலில் நுழைந்தார். பெரியாரின் சுயமரியாதை இயக்கம், தொடக்க காலத்தில் அவர் மனதைக் கவர்ந்தாலும் பிறகு தேசிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார்.

'தமிழரசுக் கழகத்துடன்' இணைந்து களம் அமைத்துத் தமிழ் முழக்கம் செய்த கவி கா.மு.ஷெரீப், தமிழரசு இயக்கக் கவிஞர்களாகத் திகழ்ந்த கு.சா.கி., கு.மா.பா.வுக்கு முன் தோன்றியவர்.

"தமிழ் முழக்கம்", "சாட்டை" போன்ற பரபரப்பான திங்கள், திங்கள் இருமுறை, கிழமை ஏடுகள் நடத்திக் கைப்பொருள் இழந்தார். சிறுகதை நூல்கள் 3, நவீனம் 1, நாடக நூல்கள் 4, பயண நூல் 1, குறுங்காஇயம் 1, அறிவுரைக் கடித நூல் 1, இலக்கியக் கட்டுரை நூல் 1 எனப் பலவற்றை எழுதிக் குவித்தார். கவி கா.மு.ஷெரீப் கவிதைகள் மட்டும் எழுதவில்லை. இலக்கியத்தில் பல துறைகளிலும் நூல்கள் எழுதியுள்ளார்.

முஸ்லிம் சமுதாயத்தினர் தமிழ் வளர்ச்சிக்குச் செய்திருக்கும் தோந்தைப் பற்றிப் பெரிய நூலே எழுதலாம். உமறுப்புலவர், கா.பா.செய்குத் தம்பிப் பாவலர், திருவையாறு கா.அப்துல் காதர் போன்றோருக்குக்குப் பிறகு கவி கா.மு.ஷெரீப்பை நாம் கட்டாயம் பதிவு செய்தல் வேண்டும்.

கவியரசு கண்ணதாசன் வாழ்ந்த காலத்திலேயே பிரபலமானவர் கவி. கா.மு.ஷெரீப். "அவர் அடக்கத்தின் உறைவிடம். இன்று கவிதை எழுதும் அனைவருக்கும் மூத்தவர் ஷெரீப். நான் எழுதத் தொடங்கிய காலத்திலேயே அவருடைய கவிதைத் தொகுதி வந்துவிட்டது. "ஒளி" என்னும் தலைப்புடைய அந்தத் தொகுதியை நான் சுவைத்திருக்கிறேன்" என்று கண்ணதாசன் பாராட்டியுள்ளார்.

"கவிஞன் என்பவன் ஒரு தாய் மாதிரி. பத்தியம் இருக்கணும். ரசிகனை அவன் பிள்ளை மாதிரி நேசிக்க வேண்டும். எதைக் கொடுக்கக் கூடாது, எதைக் கொடுக்க வேண்டும் என்னும் பொறுப்புடனும் எழுத வேண்டும்" என்று சொன்னவர் கவி கா.மு.ஷெரீப். அதுபோலவே எழுதியும் வாழ்ந்தும் காட்டியவர்.

கவிதைப் பயிர் வளர்க்கும் பாட்டாளியாகத் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டவர். "எனக்கென எஞ்சி நின்றவை -- புதிய தமிழக அமைப்பின் போர்க்களப் பாடல்கள். ஆம், என்னளவிற்குப் புதிய தமிழக அமைப்பின் களப்பாடல்களை வேறு யாரும் பாடியிருக்கவில்லை என்று என்னைப் பற்றி கணித்துக் கொள்வது மிகையன்று" என்றும், "புதிய தமிழகம் தோன்ற உழைத்தவர்களில் நானும் ஒருவன் என்பதை வரலாறு எழுதுவோர் மறந்துவிட முடியாது" என்றும் உறுதியுடன் தன் விளக்கம் கூறியுள்ளார் கவி.கா.மு.ஷெரீப்.

தன் பதினெட்டாம் வயதிலிருந்து கவிதை புனைதவர். அவரின் முதல் கவிதை "குடியரசு" ஏட்டில் 1934ஆம் ஆண்டு வெளிவந்தது.

கலைமாமணி விருது பெற்ற கவிஞர் அருந்தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள் அனைத்தையும் பாங்குறக் கற்றுத் தெளிந்தவர்கள் என்று சிலம்பொலி செல்லப்பன் குறிப்பிடுகிறார்.

"சீறாப்புராணம்" சொற்பொழிவைக் கேட்ட பிறகு அவரை ஒரு சொற்பொழிவாளராக அறிந்து மகிழ்ந்தேன்" என்று கி.ஆ.பெ.புகழ்ந்துள்ளார்.

"தம்பி ஷெரீப் கவிஞன் என்று கண்டுகொண்டேன். அவருடைய பாக்களைப் படித்து அதனின்றும் இன்பத்தைக் கங்கு கரையின்றி அனுபவிப்பீர்களாக" என்று 1946ஆம் ஆண்டிலேயே அறிஞர் வ.ரா. பாராட்டியிருக்கிறார்.

1939ஆம் ஆண்டில் "சந்திரோதயம்" என்னும் ஏட்டில் தம் இருபத்தைந்தாவது அகவையிலே தமிழின் தொன்மையைப் பாடியவர். 'அன்னையா? கன்னியா?' என்ற கவிதையில் புதிய கருத்து ஒன்றைத் துணிவுடன் 1956இல் 'சாட்டை' இதழில் எழுதினார். தமிழில் பிறமொழிச் சொற்கள் என்ற அருமையான கட்டுரையை தாய்நாடு பத்திரிகையில் எழுதினார்.

சிவாஜி, பாரததேவி, தினமணி கதிர், ஹிந்துஸ்தான், ம.பொ.சி.யின் 'தமிழ் முரசு' என அவர் எழுதாத இலக்கிய ஏடுகள் இல்லை. ஆனால் ம.பொ.சி.யின் தமிழ் அரசு இயக்கக் கவிஞராகத் திகழ்ந்த பெருமையைத் "தமிழகக் களக்கவினர்" என்று தன்னை அழைத்துக் கொள்ளும் துணிவை அளித்தது.

தமிழ்நாடு மலர திருத்தணியை சென்னையை மீட்ட ம.பொ.சியின் இயக்கத்தில் இணைந்தவர் ஷெரீப். சீறாப்புராணத்தின் எட்டு பாகங்களுக்கும் உரை எழுதி அறிஞர்களால் புகழப் பெற்றார். திரு வி.க. விருது பெற்றார். சொன்னபடி செய்தார், செய்வது போல் வாழ்ந்தார். மகாத்மா காந்தி, நேருவிடம் மிக்க மரியாதை கொண்டிருந்தார்.

1948இல் அறிஞர் அண்ணாவின் 'சந்திரமோகன்' நாடகத்தில் 'திருநாடே' என்று அவர் எழுதிய பாடலை அன்று முணுமுணுக்காதவர்களே கிடையாது. முதலில் நாடகங்களுக்குப் பாடல் எழுதி அதன் பின்னர் கொலம்பியா கம்பெனி ரிக்கார்டுகளுக்காக வசனமும் பாடலும் எழுதி திரை உலகுக்கு மெல்ல எட்டிப் பார்த்தவர். ஆனால் அதையே முழுமையாக நம்பவில்லை.

"மாயாவதி" என்ற படத்துக்குப் பாடல் எழுதி திரையுலகில் நுழைய முற்பட்டார். 'பெண் தெய்வம்', 'புது யுகம்' ஆகிய படங்கலுக்கு வசனமும் எழுதியுள்ளார்.

கவிதையில் கொடி நாட்டியது போல் உரைநடையிலும் தன் திறமையை ஆழப் பதித்தவர். பிறப்பால் முஸ்லிம் ஆயினும் இந்து சமய இதிகாசங்களில் மிக்க நாட்டம் கொண்டவர். இதை 'மச்சகந்தி' என்னும் நூலின் வாயிலாக அறியலாம்.

திரைப்படத் துறையில் ஈடுபட்டாலும் ஒழுக்கம் குன்றாக் கவிஞர் கா.மு.ஷெரீப். 'சிவ லீலா' என்னும் திரைப்படத்துக்கு எழுதிய பாடல்களைத்தான் திருவிளையாடல், திருவருட்செல்வர் ஆகிய படங்களுக்குப் பயன்படுத்தினார்கள் என்றும், 'பாட்டும் நானே பாவமும் நானே' என்ற பாடல் இவருடைய பாடல் என்பது திரை உலகில் அன்றே பரபரப்பாகப் பேசப்பட்டது.

தன் சொந்த முயற்சியால் தமிழ் கற்றுச் சுயம்புக் கவிஞரான 'காதர்ஷா முகம்மது ஷெரீப்' என்ற பெயரை கா.மு.ஷெரீப் என்று சுருக்கிக் கொண்டார். இவரைப் பற்றி இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இடமும் நேரமும் போதாது.

இளங்கவிஞர்களை ஊக்குவித்த பெருமையை உடைய கவிஞரின் கவிதைப் பயணம் 1993ஆம் ஆண்டோடு நிறைவுற்றது. தமிழ் முழக்கமும் ஓய்ந்தது.

இவர் எழுதிய இறைவனுக்காக வாழ்வது எப்படி? இஸ்லாம் இந்து மதத்துக்கு விரோதமானதா? நல்ல மனைவி, தஞ்சை இளவரசி, வள்ளல் சீதக்காதி, விதியை வெல்வோம் ஆகிய நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன.

தமிழ்மொழி உள்ளவரை கா.மு.ஷெரீப்பின் பெயர் நின்று ஒலிக்கும்.
****


Thursday, July 28, 2011

தஞ்சை ராமையாதாஸ்

இவருடைய வரலாற்றைப் பார்க்குமுன்பாக, இவர் திரைப்படங்களுக்காக எழுதிய பாடல்களை முதலில் பார்ப்போம். இந்தப் பாடல்களின் முதலடியைக் கேட்டவுடன், அடடா! இதை எழுதியது அவரா? என்று ஆச்சரியப்படுவீர்கள். காரணம் பொதுவாக இவர் எழுதிய பாடல் என்றால், "ஜாலிலோ ஜிம்கானா" என்றெல்லாம் இருக்கும் என்கிற எண்ணம்தான். நாடகங்களுக்கு ஆசிரியராக இருந்த இவர் பின்னாளில் திரைப்படப் பாடல்களை எழுதி வந்தார். இவர் வரலாறு முழுமையாகக் கிடைக்கவில்லை, கிடைத்ததும் வெளியிடுகிறோம். இப்போதைக்கு அவர் எழுதிய சில பாடல்களை மட்டும் பார்க்கலாம்.

அமுதவல்லி
"ஆடைகட்டி வந்த நிலவோ" -- இது அமுதவல்லி என்ற படத்திற்காக எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் டி.ஆர்.மகாலிங்கம், பி.சுசீலா பாடியிருக்கிறார்கள்.
மாயா பஜார்
"ஆகா, இன்ப நிலாவினிலே"-- மாயா பஜார் என்பது படம். பாடியது கண்டசாலா.
"கல்யாண சமையல் சாதம்” -- மாயா பஜார் பாடியவர்கள் திருச்சி லோகநாதன், இசை: கண்டசாலா
"கண்ணுடன் கலந்திடும் சுபதினமே" -- மாயா பஜார், பாடியவர் பி.லீலா
"நீதானா என்னை அழைத்தது" -- மாயா பஜார், பாடியோர் கண்டசாலா, பி.சுசீலா

குலேபகாவலி
"ஆசையும் என் நேசமும்" -- இசை எம்.எஸ்.வி., ராமமூர்த்தி (விக்கலுடன் பாடும் பாட்டு)
"அச்சு நிமிர்ந்த வண்டி, ஆளை குடை சாய்க்கும் வண்டி" -- சந்திரபாபு
"அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்" -- டி.எம்.செளந்தரராஜன்
"கையைத் தொட்டதும் மெய்யைச் சிலிர்க்குதே" -- டி.எம்.செளந்தரராஜன், பி.சுசீலா
"மாய வலையில் வீழ்ந்து மதியை இழந்து" -- டி.எம்.செளந்தரராஜன்
"மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ" -- ஏ.எம்.ராஜா, ஜிக்கி
"நான் சொக்கா போட்ட நவாபு" -- ஜிக்கி
"நாயகமே, நபி நாயகமே, நலமே அருள் நாயகமே" -- எஸ்.சி.கிருஷ்ணன்
"வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே" -- திருச்சி லோகநாதன், பி.லீலா
"வித்தார கள்ளியெல்லாம் விறகு வெட்டப் போகையிலே" -- டி.எம்.செளந்தரராஜன்.

பாதாள பைரவி
"அமைதி இல்லாதென் மனமே" -- கண்டசாலா, பி.லீலா
"என்னதான் உன் பிரேமையோ" -- கண்டசாலா

அனார்கலி
"ஆனந்தமே, என்னாளும் காணாத ஆனந்தமே"--இசை: ஆதிநாராயண ராவ், பாடியவர்: ஜிக்கி
"ஜீவிதமே சபலமோ" - பாடியவர் ஜீக்கி
"கனிந்த" -- கண்டசாலா, ஜிக்கி
"ஓ அனார்கலி, அகில ஜோதியாய் பிறந்தாய்" -- கண்டசாலா
"பார்தனிலே முடிவு கண்டேன்" -- ஜிக்கி
"ராஜசேகரா என் மேல் மோடி செய்யலாகுமோ" -- கண்டசாலா, பி.சுசீலா
"சிப்பாயீ.... அன்பே நீ வாராயோ" -- ஜிக்கி

மணாளனே மங்கையின் பாக்கியம்
"அழைக்காதே ... நினைக்காதே ... அவைதனிலே" -- பி.சுசீலா
"தேசுலாவுதே தேன்மலர் மேலே" -- கண்டசாலா, பி.சுசீலா

சம்பூர்ண ராமாயணம்
"இன்று போய் நாளை வாராய்" -- இசை: கே.வி.மகாதேவன். பாடியவர் சிதம்பரம் ஜெயராமன்

அடுத்த வீட்டுப் பெண்
"கண்களும் கவி பாடுதே" -- இசை:ஆதிநாராயணராவ், சீர்காழி & பி.பி.ஸ்ரீநிவாஸ்
"கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே" -- பி.பி.ஸ்ரீநிவாஸ்
"கன்னித் தமிழ் மணம் வீசுதே" -- பி.சுசீலா
"மலர்க்கொடி நானே மலர்ந்திடுவேனே" -- பி.சுசீலா
"மன்னவா, வா, வா, மனமகிழ வா" -- பி.சுசீலா
"பிரேமையின் ஜோதியினால், பேரின்பம் எங்கும் பொங்கும்" -- பி.சுசீலா

அம்பிகாபதி
"கண்ணே உன்னால்" - இசை ஜி.ராமநாதன். பாடியவர் என்.எஸ்.கிருஷ்ணன்

தஞ்சை ராமையா தாஸ் அவர்களுடைய வரலாறு அறிந்தவர்கள் அதனைத் தெரிவிக்குமாறு அன்போடு வேண்டுகிறேன். இந்த வலைப்பூவில் அதை வெளியிட விழைகிறேன். நன்றி.









Tuesday, July 26, 2011

திருமதி நாகரத்தினம்மாள்.


திருமதி நாகரத்தினம்மாள்.

சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா திருவையாற்றில் காவிரிக் கரையில் அமைந்துள்ள அவரது சமாதிக்கு அருகில் நடைபெறுகிறது. இன்று உலகம் முழுவதும் சங்கீத உலகில் ஸ்ரீ தியாகராஜரின் புகழ் பரவிக் கிடக்கிறது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஸ்ரீ தியாகராஜரின் சமாதி இருக்குமிடம் தெரியாமல் புதர் மண்டிக் கிடந்தது. அவரது கீர்த்தனைகள் அவருடைய சிஷ்ய பரம்பரையினரின் வாயிலாக பரவலாகப் பாடப்பட்டாலும், அவரது சமாதியில் குருபூஜை ஆராதனைகள் நடைபெறுவது 1905க்குப் பிறகுதான் தொடங்கியது. 1925இல் ஸ்ரீ தியாகராஜரின் சமாதி இருக்குமிடத்தை மிகவும் சிரமப்பட்டுக் கண்டுபிடித்து அதனை சீர் செய்து, மண்டபங்கள் எழுப்பி குடமுழுக்கு செய்து இன்று நாம் காணுகின்ற அளவுக்குத் தன் சொந்த பணத்தைச் செலவழித்து பாடுபட்டவர் நாகரத்தினம்மாள். அதன் பிறகு அவர் திருவையாற்ற்றிலேயே தங்கியிருந்து தன் கடைசி காலத்தை அங்கேயே கழித்தபின், தான் இறந்த பின் ஸ்ரீ தியாகராஜர் சமாதிக்கு எதிரேயே சமாதியடைந்தவர் திருமதி நாகரத்தினம்மாள். யார் இந்த நாகரத்தினம்மாள்? ஸ்ரீ தியாகராஜரின் பெருமையையும், அவருக்கு நடக்கும் ஆராதனை பற்றியும் அறிந்து கொண்ட அளவுக்கு தியாகராஜ பணியில் ஈடுபட்டுத் தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தியாகம் செய்த இந்த மாதரசி பற்றியும் சிறிது தெரிந்து கொள்ளலாமே!
                                                     Saint Thyagaraja's idol
1878 நவம்பர் 3ஆம் தேதி மைசூர் அரண்மனையைச் சேர்ந்த தேவதாசி குடும்பத்தைச் சேர்ந்த திருமதி புட்டலட்சுமி என்பவருக்கு மகளாகப் பிறந்தவர் நாகரத்தினம். தந்தையார் பெயர் சுப்பா ராவ், இவர் ஒரு வழக்கறிஞர். குழந்தை நாகரத்தினம் பிறந்த பிறகு சுப்பா ராவ் தன் மனைவி புட்டம்மாளைப் பிரிந்து சென்று விட்டார். ஆதரவில்லாமல் தன் ஒன்றரை வயது கைக்குழந்தையுடன் இருந்த புட்டலட்சுமி மைசூர் சமஸ்தானத்தில் பாடகியாக இருந்து வந்தார்.

மகள் நாகரத்தினத்துக்கு ஐந்து வயது ஆனபோது அவரை பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார் தாயார். பள்ளிப் படிப்போடு இசையையும் சம்ஸ்கிருதத்தையும் தம்மையா சாஸ்திரியார் என்பவரிடம் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். வயது ஆக ஆக நாகரத்தினத்தின் இசை ஞானமும், பரத நாட்டியத்தில் திறமையும் பளிச்சிடத் தொடங்கின. ஒன்பதாவது வயதில் இவரது பாட்டையும், நடனத்தையும் கண்டு பிறர் பொறாமை கொள்ளுமளவுக்கு இவரது திறமை மெருகேறிக் கொண்டு வந்தது. பொறாமைக் காரர்கள் சிலர் நாகரத்தினம் பற்றிய பொய்யான செய்திகளைச் சொல்லி இவருக்குச் சொல்லித் தந்த ஆசிரியரை தடுத்து நிறுத்தினார்கள். புட்டலட்சுமி மனம் கலங்கினார். ஆசிரியர் சொல்லித்தராவிட்டால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் அச்சுறுத்தினார். எதுவும் பயனளிக்காத நிலையில் புட்டம்மாள் மைசூரை விட்டு வெளியேறினார். தன் மகளை இசையிலும், நாட்டியத்திலும் சிறந்த கலைஞராக ஆக்கும் வரை மைசூருக்குத் திரும்புவதில்லை என்று சபதம் மேற்கொண்டார்.
                                                         Satguru Sri Thyagarajaswami
தன் மகளுக்குத் தகுந்த இசை ஆசிரியரைத் தேடி இவர் சென்னைக்கு வந்தார். அங்கிருந்து காஞ்சிபுரம் பிறகு ஸ்ரீரங்கம் என்று பல ஊர்களுக்கும் சென்றார். எனினும் அவருக்குச் சரியான ஆசிரியர் அமையவில்லை. பிறகு மீண்டும் இவர் பெங்களூர் சென்று அங்கு ஒரு தகுந்த ஆசிரியரைக் கண்டுபிடித்தார். அவர்தான் வயலின் வித்வான் முனுசாமியப்பா என்பவர். ஸ்ரீ தியாகராஜரின் சிஷ்ய பரம்பரையில் வந்த ஒருவரிடம் இசை பயின்றவர் இந்த முனுசாமியப்பா. சிறுமி நாகரத்தினத்துக்கு இசை சொல்லிக் கொடுக்க முனுசாமியப்பா ஒப்புக் கொண்டார்.

நாகரத்தினத்துக்கு பதிமூன்று வயதான போது இசை, நாட்டியம் இரண்டிலும் நல்ல தேர்ச்சி பெற்று விளங்கினார். தாய்க்குத் தன் சபதம் நிறைவேறியதற்கும், தன் மகள் தலைசிறந்த இசை, நாட்டியக் கலைஞராக முழுமையடைந்ததற்கும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். தன் மகள் கலைகளில் சிறந்து விளங்க வேண்டும், மற்ற பெண்களைப் போல் கலைகள் தவிர வேறு எதிலும் கவனம் செல்லக்கூடாது என்பதற்காக கடுமையாகக்கூடத் தன் மகளிடம் நடந்து கொண்டார். இசை, நடனம் தவிர சம்ஸ்கிருதம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இவர் நல்ல தேர்ச்சி பெற்றார். தன் மகளை முழுமையான கலைஞராக ஆக்க தாய் புட்டம்மாள் தவித்த தவிப்பும், அவர் தன் சபதம் நிறைவேறிய பின் மைசூருக்குச் செல்ல வேண்டுமென்கிற ஆர்வமும் அவரை இரவு பகலாக பாடுபட வைத்தது. ஆனால் நாகரத்தினத்துக்கு பதினான்கு வயது ஆனபோது தாயார் புட்டலட்சுமி காலமானார். தன் மகள் தான் விரும்பிய படி இசையிலும் நாட்டியத்திலும் தலைசிறந்து விளங்குவார் என்று மனத் திருப்தியோடு அவர் கண்களை மூடினார்.
                                                     Saint Thyagaraja's Samadhi
தாயார் மறைவுக்குப் பின் நாகரத்தினம் இசைக் கச்சேரிகளைச் செய்யத் தொடங்கினார். மைசூர் அரண்மனையில் அவரது புகழ் பரவத் தொடங்கியது. அப்போது மைசூர் ராஜகுமாரி ஒருவர் பூப்படைந்த நிகழ்ச்சியில் நாகரத்தினத்தின் நாட்டியக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். மைசூர் அரசவையில் நாகரத்தினம் மிகச் சிறப்பாக நடனமாடினார். அவர் தந்தையாரும் தன் மகளின் நாட்டியத்தைக் கண்டு களிக்க நேர்ந்தது. இவரது திறமையைக் கண்டு மைசூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான நர்த்தகியாக இவர் நியமிக்கப்பட்டார். நடனத்துக்கு மட்டுமல்ல இசைத் துறைக்கும் இவர் மைசூர் ஆஸ்தான வித்வானாக ஆனார்.

நாகரத்தினத்துக்கு இருபத்தைந்து வயது ஆனபோது அவரது குரு முனுசாமியப்பா காலமானார். அவர் மறைவுக்குப் பின் குருபக்தி காரணமாக நாகரத்தினம் ஒவ்வோராண்டும் அவரது நினைவு தினத்தில் அன்னதானம் செய்து குருபூஜை செய்து வந்தார். நாகரத்தினத்தின் சம்ஸ்கிருத ஞானத்தையும், அவர் சம்ஸ்கிருத ஸ்லோகங்களை இசையில் வழங்கி வரும் அழகைக் கண்டு அவருக்குப் பல பரிசுகளை வழங்கி கெளரவித்தனர். இவர் இசை நிகழ்ச்சிகள் நடக்குமிடங்களிலெல்லாம் இவருக்கு தங்கப் பதக்கங்களும், தங்க அணிகலன்களும், பொன்னாடைகளும் வழங்கிக் கெளரவித்தனர். மக்கள் மத்தியில் இவர் பெரும் புகழ் பெற்றார். மைக் வசதிகள் இல்லாத அந்த காலத்தில் இவரது கணீரென்ற குரல் இவர் இசை நிகழ்ச்சி நடைபெறும் அரங்குகளில் கூடியிருக்கிற அனைவரும் கேட்கும்படியாக அமைந்திருந்தது.

மைசூரில் தொடங்கிய இவரது புகழ் அங்கிருந்து சென்னை வரை வந்தடைந்தது. சென்னையில் ராஜரத்ன முதலியார் என்பவர் இவரை ஆதரித்து வரத் தொடங்கினார். சென்னையில் இவரது இசையின் பெருமை பரவத் தொடங்கியது. சென்னையில் வீணை தனம்மாள் வீட்டின் அருகில் தனக்கென்று சொந்தமாக ஒரு வீட்டையும் வாங்கினார் நாகரத்தினம். இவர் தன்னுடைய கச்சேரிகள் குறித்தும், தனது வருமானம், செலவு ஆகியவற்றுக்குத் துல்லியமாக கணக்கு வைத்துக் கொண்டிருந்தார், வரிகளை ஒழுங்காகச் செலுத்துவதற்காக. இவர் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல கச்சேரிகளைச் செய்து வந்தார். இவருக்கு பக்க வாத்தியமாக சிவசுப்பிரமணிய ஐயர் என்பவர் வயலின் வாசித்து வந்தார். இவரது இசையில் மயங்கி பொப்பிலி ராணி இவருக்கு "வித்யாசுந்தரி" என்ற விருதை வழங்கி கெளரவித்தார். பெண்களை, பெண் வித்வான்களை மதித்து இப்படிப்பட்ட விருதுகளை வழங்கும் பழக்கம் அந்த நாளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாகரத்தினம்மாள் ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வந்தார். அந்த தத்துக் குழந்தையின் உண்மையான பெற்றோர்கள் நாகரத்தினம்மாளின் செல்வத்தின் மீது கண் வைத்து அவற்றை அபகரிக்கும் எண்ணத்துடன் அவரை விஷம் வைத்துக் கொல்லச் சதி செய்தனர். அந்த சிறு பெண்ணிடம் விஷம் கலந்த பாலைக் கொடுத்து நாகரத்தினம்மாளுக்குக் கொடுக்க வைத்தனர். ஆனால் அவர் மனதில் ஏதோ சந்தேகம் உதித்து அந்தப் பாலை அருந்த மருத்துவிட்டார். அந்த பால் பச்சை நிறமாக மாறியிருந்தது. அந்தச் சிறுபெண் பாலைக் கொடுக்கும் போதே உடல் நடுங்க அச்சத்துடன் கொடுத்ததும் நாகரத்தினத்துக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த நேரத்தில்தான் தன்னிடம் உள்ள பணம், நகைகள்தானே இவர்களை இப்படிச் செய்யத் தூண்டியது என்ற எண்ணம் அவருக்கு உதித்தது. அந்த சிறுமியையும் மன்னித்து அனுப்பிவிட்டார். தான் இந்த செல்வங்களை உடனடியாக நீக்கிவிட வேண்டுமென்று உணர்ந்தார்.
                                            Musicians singing Pancharathna Krithis on Aradhana Day
இப்படிப்பட்ட நேரத்தில் உறக்கத்தில் நாகரத்தினம்மாளுக்கு ஒரு உள்ளுணர்வு ஏற்பட்டு ஸ்ரீ தியாகராஜரின் காட்சி தென்பட்டது. 1921ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஸ்ரீ தியாகராஜரின் திவ்ய தரிசனம் தனக்குக் கிடைத்ததாகவும், அதுமுதல் அவரது சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்த எண்ணம் கொண்டதாகவும் அவர் கூறினார். ஸ்ரீ தியாகராஜர் குறித்தோ அல்லது திருவையாறு பற்றியோ நாகரத்தினம்மாளுக்கு அதற்கு முன்பு எதுவும் தெரிந்திருக்கவில்லை. இந்த தியாகராஜ தரிசனத்துக்குப் பிறகு அவர் பல சங்கீதத் துறை சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து திருவையாற்றுக்கு வந்து ஸ்ரீ தியாகராஜருடைய சமாதி இருக்குமிடத்தைத் தேடினார். ஆனால் அங்கு அவர் கண்ட காட்சி அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருந்தது. அந்த சமாதியைச் சுற்றி ஒரே புதர் மண்டிக் கிடந்தது. அந்த இடம் அசுத்தமாக இருந்தது.

அது குறித்து அவரே சொல்கிறார். "மகான் ஸ்ரீ தியாகராஜருடைய சமாதி கேட்பாரற்று புதர் மண்டிக் கிடந்தது. அந்த இடம் பல் வகையாலும் அசுத்தப்பட்டுக் கிடந்தது. அந்த இடத்தைப் பார்த்து மனம் வருந்தி, இதனைச் சீர்செய்வதை என் வாழ்க்கையின் குறிக்கோளாக மேற்கொண்டேன். சுற்றிலும் பல சமாதிகளுக்கிடையே ஸ்ரீ தியாகராஜருடைய புகழ்வாய்ந்த ஆன்மா புதைபட்டுக் கிடக்கும் இடம் இதுதான் என்பதற்கு அடையாளமாக ஒரு கல்வெட்டுப் பதிக்கப்பட்டு அவ்விடம் பரிதாபமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது."

1921ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி சமாதியைச் சீரமைக்கும் பணிகளுக்கு அஸ்திவாரமிடப்பட்டது. அந்த இடத்தில் எத்தனை ஆழம் தோண்டலாம் என்பதில் வேலைசெய்தவர்களுக்குக் குழப்பம் இருந்தது. பலரும் பல தகவல்களைச் சொல்லிக் குழப்பினார்கள். பள்ளம் தோண்டும்போது சாம்பிராணி வாசனை வந்தால் நிறுத்திவிடுங்கள் என்றனர் சிலர். இல்லை இல்லை ஸ்ரீ ராம நாமா மெல்லிய குரலில் எழும், அப்போது நிறுத்தி விடுங்கள் என்றனர் வேறு சிலர். இப்படி எத்தனையோ குளறுபடிகள்.

அங்கிருந்த வாழைத்தோட்டத்தை நாகரத்தினம்மாள் ஒரு மராத்திய வம்சத்து ராணியிடம் வாங்கினார். அதற்கான சட்டபூர்வமான வேலைகளை திருவையாற்றில் இருந்த ஸ்ரீ ராஜகோபாலாச்சாரி எனும் வழக்கறிஞர் செய்து கொடுத்தார். இப்படிப் பணிகள் தொடங்கி நடந்து முடிந்து 1925 ஜனவரி 7ஆம் தேதி பூர்த்தியாகியது.

"குருநாதர் சற்குரு ஸ்ரீ தியாகராஜருடைய அனுக்கிரகத்தோடும், இசை விற்பன்னர்கள் பலருடைய ஆதரவோடும், குருநாதரின் பளிங்குச் சிலையொன்றைச் செய்து அங்கு பிரதிஷ்டை செய்தேன்" என்கிறார் நாகரத்தினம்மாள். மிக அதிகமான பொருட் செலவோடு ஸ்ரீ தியாகராஜரின் சமாதி ஆலயம் கும்பாபிஷேகம் 1925இல் செய்விக்கப்பட்டது.

ஆண்டுதோறும் குருநாதருக்கு ஆராதனைகளைச் செய்விப்பதற்கு போதிய இடம் அங்கு இல்லாமல் இருந்ததால், நாகரத்தினம்மாள் தன்னிடமிருந்த நகைகள் மற்றும் சொத்துக்களையெல்லாம் விற்று அருகில் இடத்தை விலைக்கு வாங்கி 1938இல் ஒரு மண்டபத்தையும், சமையலறையையும் கட்டி முடித்தார். அது வரை வெவ்வேறு இடங்களில் ஸ்ரீ தியாகராஜருக்கு ஆராதனைகள் நடைபெற்று வந்தன. சின்ன கட்சி என்று பெயர் பெற்ற சிலர் புஷ்ய மண்டபத் துறையிலும், பெரிய கோஷ்டி என்பவர்கள் சம்ஸ்கிருத கல்லூரி வளாகத்திலும் தனித்தனியாக ஆராதனைகளை நடத்தினார். பெங்களூர் நாகரத்தினம்மாள் வந்த பிற்பாடு அவர்கள் தலைமையில் பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் விதமாக சமாதிக்கருகில் பந்தல் போட்டு அதில் அவர் நடத்தினார். முதல் இரண்டில் வாய்ப்புக் கிடைக்காத ஆண் பாடகர்களும் நாகரத்தினம்மாள் நடத்திய ஆராதனையில் கலந்துகொண்டு பாடினார்கள்.

இப்படி இவர்கள் குழுக்களாகப் பிரிந்து நடத்திய காலத்தில் 1940இல் சில பெரியவர்கள் சேர்ந்து இவர்களை ஒன்றுசேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அதன் பயனாகப் பிரிந்திருந்த கோஷ்டிகள் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக ஆராதனையை நடத்தத் தொடங்கினார்கள். 1940இல்தான் ஸ்ரீ தியாகராஜரின் பஞ்ச ரத்தினக் கீர்த்தனைகளைப் பாடி ஆராதனை நடத்துவது என்பது நடைமுறைக்கு வந்தது. நாகரத்தினம்மாள் சம்ஸ்கிருத மொழியிலும் நல்ல புலமை பெற்றிருந்ததன் காரணமாக அவர் ஸ்ரீ தியாகராஜா அஷ்டோத்திர சத நாமாவளி எனும் தோத்திரத்தை உருவாக்கினார்.

1951இல் 'தி இந்து' பத்திரிகையில் ஒரு செய்தி வெளியானது. திருவையாற்றில் நடக்கும் ஸ்ரீ தியாகராஜ ஆராதனை விழாவில் இசை நிகழ்ச்சிகள் ஆடம்பரமாக நடைபெறுகிறதே தவிர பக்தி என்பது வெளிப்படவில்லை என்பது போல எழுதியிருந்தார்கள். அது முதல் ஆராதனை முறையாக பக்தி சிரத்தையோடு நடக்கத் தொடங்கியது. முன்பெல்லாம் பெண்கள் சமாதியில் பாடுகின்ற வழக்கம் இருக்கவில்லை. நாகரத்தினம்மாள்தான் பெண்களுக்கு அந்த உரிமையை வாங்கிக் கொடுத்த சமூகப் புரட்சியாளர்.

1952இல் நாகரத்தினம்மாளின் உடல்நிலை மோசமானது. அவரது உடலை சோதித்த டாக்டர் அவருக்கு ஒரு இஞ்செக்ஷன் கொடுக்க முயன்றார். அதனைத் தடுத்துவிட்ட நாகரத்தினம்மாள் சொன்னாராம், " என் உடல் முழுவதும் ஸ்ரீ ராம மந்திரம் பரவிக்கிடக்கிறது. அந்த உடலை ஊசியால் குத்த நான் விரும்பவில்லை" என்றாராம். 1952 மே மாதம் 19ஆம் தேதி காலை 10-30 மணிக்கு ஸ்ரீ ராம, சீதா, ஆஞ்சநேய மந்திரங்களை உச்சரித்தபடி உயிர் நீத்து ராமபக்த சாம்ராஜ்யத்தை அடைந்தார்.

அவருடைய விருப்பப்படி அவரது உடல் ஸ்ரீ தியாகராஜர் சமாதிக்கு எதிர்ப்புறம் சில மீட்டர் தூரத்தில் சமாதி வைக்கப்பட்டது. அன்றைய தினம் திருவையாறு நகரம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு, அந்த புனித பெண்மணிக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அவர் உடல் சமாதிக்குள் இறக்கப்பட்ட போது மேலே பறந்து வந்து சுற்றிய கருடனைப் பார்த்தும், அப்போது பெய்த சில மழைத்துளிகளைக் கண்டும் மக்கள் அந்தப் புனிதரின் நினைவைப் போற்றி மகிழ்ந்தனராம். அவர் விரும்பியபடியே நாகரத்தினம்மாள் எனப்படும் போற்றுதலுக்குரிய அந்தப் புனிதமான பெண்மணி தன் குருநாதரின் திருவடிகளைச் சென்றடைந்தார். வாழ்க நாகரத்தினம்மாள் புகழ்!

Sunday, July 3, 2011

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி குறித்து தமிழ் கூடல் எனும் வலைத்தளத்தில் 2007ஆம் ஆண்டில் வெளியான கட்டுரை இது. தமிழ் கூடலுக்கு நன்றி தெரிவித்து அதனை மறுவெளியீடு செய்திருக்கிறேன். மக்கள் இந்த அம்மையாரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்பதே நமது அவா! மீண்டும் நன்றி "தமிழ் கூடல்".

சாதனைப் பெண்கள்:முதல் இந்தியப் பெண்டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

கூடல்.காம் - Thursday, August 02, 2007
Dr. Muthulakshmi Reddy -the first Indian woman doctor - Women Secrets of Success
பெண்கள் அடிமைகளாக, புழு-பூச்சிகளாகக் கருதப்பட்ட காலத்தில், பெண்களின் செயல்களுக்கு அதிகம் முக்கியத்துவம் இல்லாத காலத்தில் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக புரட்சிப் பெண்ணாகத் தோன்றியவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (Dr. Muthulakshmi Reddy).
அனாதைக் குழந்தைகளை எடுத்து வளர்த்து, அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைக்கும் அவ்வை இல்லம், புற்று நோய்க்கு உயர்தர சிசிக்சைகள் அளிக்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை போன்றவற்றை அமைத்தவர்.
அது மட்டுமல்ல, இந்தியாவிலேயே டாக்டருக்குப் படித்துப் பட்டம் பெற்ற முதல் பெண்மணி. அரசின் உதவித்தொகையால் வெளிநாடு சென்று உயர் கல்வி பெற்ற முதல் பெண். சட்டசபையில் அங்கம்வகித்த முதல் பெண். இப்படிப் பல நிகழ்வுகளில் முதல்பெண் மணியாகத் திகழ்ந்தவர் முத்துலட்சுமி ரெட்டி-மேலும், சமூக சிர்திருத்தவாதியாகவும், அஞ்சா நெஞ்சம் கொண்டவராகவும் வாழ்ந்தவர் இவர்.
புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் கவுரவமான ஒரு குடும்பத்தில் 1886-ஆம் ஆண்டு பிறந்தார் முத்துலட்சுமி. நாராயண சாமி, சந்திரம்மாள் தம்பதியருக்குப் பிறந்த இவருக்கு சுந்தரம்மாள், நல்லமுத்து என்று இரண்டு தங்கைகள், இராமையா என்று ஒரு தம்பி.
முத்துலட்சுமியின் தந்தை நாராயணசாமி, புதுக்கோட்டையில் மகாராஜா கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றி வந்தார். முத்துலட்சுமிக்கு நான்கு வயதானபோது, திண்ணைப் பள்ளிக்கூடத்தில் þச்ர்க்கப்பட்டார். முத்துலட்சுமிக்கு வயதானபோது, படிப்பை நிறுத்த நினைத்தனர். ஆனால் முத்துலட்சுமி நன்றாகப் படித்ததால், தொடர்ந்து படிக்க வையுங்கள் என ஆசிரியர்கள் சிபாரிசு செய்யவே, உயர் நிலைப்பள்ளி படிப்பைத்தொடர வாய்ப்பு பெற்றார்.
மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதிய 100 பேரில், பத்துபேர் மட்டுமே வெற்றி பெற்றனர். அவர்களில் ஒரே மாணவி, அதிலும் முதல் மாணவி என்ற பெருமை பெற்றவர் முத்துலட்சுமி. அதனால் தொடர்ந்து அவர் கல்லூரியில் சேர்ந்து படிக்கத்தடை ஏதும் இல்லாமல் போனது.
சிறுவயதில் இருந்தே முத்துலட்சுமிக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. எனினும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் படிப்பில் கவனமாக இருந்தார். கல்லூரியில் படிக்கும்போது கண்பார்வை சற்று மங்கியது. அதற்குக் கண்ணாடி கூட போட்டுக் கொள்ளாமல் கல்லூரிப்பாடங்களுடன் ஷேக்ஸ்பியர் (Shakespeare), டென்னிசன் (Tennyson), மில்டன் (Milton), ஷெல்லி (Shelly) போன்ற மேல்நாட்டு இலக்கிய நூல்களையும் படித்தார். தனது 20 ஆவது வயதில் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவப் படிப்பைப் பயின்றார்.
மருத்துவக் கல்லூரியில் சேரும்போது, புதிதான அந்தச் சூழ்நிலையால் பயந்திருந்த முத்துலட்சுமி வெகுவிரைவில் பயத்திலிருந்து மீண்டு, படிப்பில் முன்னேறுவதில் கவனம் செலுத்தினார். அறுவை சிகிச்சை தேர்வில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுத் தேறினார். இதனால் மருத்துவம் படித்துப் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமை பெற்றார்.
திருமண வயதை அடைந்த முத்துலட்சுமிக்குத் திருமணம் செய்து வைக்க பெற்றோர் விரும்பினாலும், அவருக்கோ திருமணத்தில் ஆர்வம் இல்லை. அவருடைய விருப்பமெல்லாம் படிப்பிலும், சமூகப் பணியிலுமே இருந்தது. இருப்பினும் சகோதர, சகோதரிகளின் வாழ்க்கையை மனதில் கொண்டு திருமணத்திற்கு சம்மதித்தார். அவருடைய எண்ணங்களுக்கேற்ற கணவனாக டி.சுந்தரரெட்டி அமைந்தார்.
அக்காலத்தில் அடையாறில் அன்னிபெசன்ட் (Anni Besant) அம்மையாரால் நிறுவப்பட்ட பிரம்மஞான சபையில், மூட நம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகள் ஆகியவற்றைத் தவிர்த்து திருமணங்களை நடத்தி வந்தனர். அங்கேதான் முத்துலடசுமி-சுந்தரரெட்டி திருமணம் 1914-ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் நடந்தது.
கணவன்-மனைவி இருவரும் மருத்துவப் பணியில் ஈடுபட்டனர். இந்த மனமொத்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் இராம்மோகன் திட்டக்குழுவின் இயக்குநராகப் பணியாற்றினார். இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி தாய்-தந்தையைப் போல மருத்துவரானார். பிற்காலத்தில் புற்றுநோய் சிகிச்சை நிபுணராகி அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை நிர்வகிக்கிறார்.
சரித்திரம் படைத்த பெண்மணிகள் வரிசையில் முத்துலட்சுமி ரெட்டி இடம் பிடித்தார். அந்தப் பெருமையை அவர் பெறக் காரணமானவற்றைத் தெரிந்து கொள்ளலாமே.
முத்துலட்சுமி ரெட்டியின் ஆற்றலை அறிந்த அரசாங்கம் பெண்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான விசேஷ பயிற்சி பெற, உபகாரச் சம்பளம் கொடுத்து அவரை இங்கிலாந்துக்கு அனுப்பியது. அங்கு 11 மாதம் தங்கி உயர் பயிற்சி பெற்றார்.
1926-ஆம் ஆண்டு 43 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அகில உலகப் பெண்கள் மாநாடு, பிரான்சு நாட்டுத் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. அதில் இந்தியாவின் சார்பில் முத்துலட்சுமி ரெட்டி கலந்து கொண்டார். அப்போது அவர் நிகழ்த்திய செற்பொழிவில், ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் முன்னேற வேண்டும். பெண்களை அடிமைகளாக நடத்தும் வழக்கம் ஒழிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்கு முத்துலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் மூலம் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றார்.
1925-ஆம் ஆண்டு சட்டசபைத் துணைத்தலைவராகத் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவியில் இருந்த ஐந்தாண்டுளில் சில புரட்சி சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். அவற்றில், தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாகங்களை தடை செய்யும் சட்டம் போன்ற சில குறிப்பிடத்தக்கவை.
அக்காலத்தில் வறுமையில் வாடிய பெண்களும் நடத்தையில் தவறிய பெண்களும் தங்களுக்குப் பிறந்த குழந்தைகளை குப்பைத் தொட்டியில் வீசிவிடுவது வழக்கம். அந்த மாதிரியான அனாதையாக்கப்பட்ட குழந்தைகளை வளர்த்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க உருவானதே அவ்வை இல்லம் அடையாறில் அமைந்துள்ள இதனை அமைத்தவர் முத்துலட்சுமி.
இதில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்குத் தாயாக இருந்த, அவர்களைப் படிக்க வைத்து, உரிய காலத்தில் தக்க மணமகளைப் பார்த்துத் திருமணம் செய்து வைப்பார்.
முத்துலட்சுமி, தனது கணவரின் மறைவிற்குப் பிறகு, கலக்கம் கொண்டாலும், விரைவில் மனதை திடப்படுத்திக் கொண்டார். மக்கள் சேவைக்கே தன் முழுநேரத்தையும் செலவிட ஆரம்பித்தார்.
முத்துலட்சுமி ரெட்டியின் தங்கை சுந்தரம்மாள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, தகுந்த சிகிச்சை இல்லாத காரணத்தினால் இளம் வயதிலேயே இறந்து போனார். காரணம் இக்கொடிய நோய்க்கு நல்ல மருத்துவ மனைகளே இல்லாமல் இருந்தது. தன் தங்கைக்கு நேர்ந்த கதி மற்றவர்களுக்கு ஏற்படக்கூடாது என்று, சென்னையில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க உறுதி எடுத்தார். பலவிதங்களிலும் நிதி திரட்டினார். இன்று புற்று நோயாளிகளுக்குப் புகலிடமாக விளங்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குப் பிரதமர் நேரு 1952-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அடிக்கல் நாட்டினார்.
முத்துலட்சுமியின் சேவைகளுக்காக மத்திய அரசு பத்ம பூஷண் விருது கொடுத்து கௌரவித்தது. பல சாதனைகள் புரிந்து, சரித்திரம் படைத்து, புகழ் பெற்ற முத்துலட்சுமி (Dr Muthulakshmi Reddy) 1968-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் தேதி மறைந்தார்.
அவர் மறைந்து விட்டாலும் அவருடைய சேவைகளை நினைவூட்டும் நினைவுச் சின்னங்களாக அன்வை இல்லமும், புற்றுநோய் ஆராய்ச்சி நிலையமும் விளங்கி வருகின்றன.

ஆர். வெங்கட்ராமன்

ஆர். வெங்கட்ராமன்

இந்தியாவின் ஜனாதிபதி பதவி வகித்தவருள் இரண்டாவது தமிழர் ஆர்.வெங்கட்ராமன் அவர்கள். முதலாமவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன். ஜனாதிபதி பதவிக்கு உரிய கெளரவத்தை, அறிவாற்றலை, திறமையை வெளிப்படுத்தியவர்களில் ஆர்.வி. அவர்களும் ஒருவர்.

அவர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் என்பது இந்த மாவட்டக் காரர்களுக்கு பெருமை. இளம் வயது முதல் நாட்டுப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு முழுமையான வாழ்வு வாழ்ந்தவர் ஆர்.வி. தமிழகத்தில் அமைச்சராக இருந்த காலம் இம்மாநிலத்தின் பொற்காலம் எனலாம். அவர் காலத்தில்தான் அரசு போக்குவரத்துக் கழகம் உருவானது. அவர் காலத்தில்தான் தமிழகத்தின் பல இடங்களில் தொழிற்பேட்டைகள் தோன்றின. அவர் காலத்தில்தான் திருவெறும்பூரில் 'பெல்' தொழிற்சாலை, நெய்வேலி லிக்னைட் தொழிற்சாலை போன்ற பல தொழில்கள் தோன்றின. எளிமையும், நேர்மையும் அவருடைய கொள்கை. தலைவர் காமராஜ் அவர்களின் வலது கரம் போல இருந்து பணியாற்றி தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தவர் ஆர்.வி.

அவர் வரலாறு தமிழக அரசியல் காரணமாகவோ, அலட்சியம் காரணமாகவோ அல்லது என்ன காரணத்தினாலோ அவ்வளவாக பிரபலமாகாமலே இருந்து வருகிறது. தேவையற்ற
வர்களைப் பற்றி ஓகோ என்று எழுதிவரும் ஊடகங்களும் இவரைப் போன்ற ஒரு ஆக்க பூர்வமான தலைவரை திரைபோட்டு மூடப்பார்க்கிறது என்பது வருத்தத்துக்குரியது.

ஆர்.வி.அவர்கள் ஓர் உண்மையான தேசபக்தர். நாட்டின் முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை கொண்டவர். அவர் வாழ்நாளில் அவர் வகித்த எந்த பதவியானாலும் அந்தப் பதவிக்கு கெளரவமும், அந்தப் பதவியினால் நாட்டுக்கும் மக்களுக்கும் அளவற்ற சேவையைச் செய்தவர் என்கிற புகழுக்கு உரியவர். அவரை ஒரு சாதாரண அரசியல் வாதி என்பதைக் காட்டிலும் நாட்டு முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட ஒரு தீர்க்கதரிசி எனலாம். அவர் ஜனாதிபதியாக இருந்த காலம் அமைதியான அரசியல் இருந்த காலம் அல்ல. அவர் பதவிக் காலத்துக்குள் இரண்டு ஆண்டுகளுக்குள் மூன்று பிரதம மந்திரிகள் பதவி ஏற்றுக் கொள்ளும் நிலைமை எல்லாம் உருவானது.

அப்போது நடந்த அரசியல் சதுரங்கத்தில் நேர்மை தவறாமல், மனச்சாட்சிக்கும், அரசியல் சாசனத்துக்கும் உண்மையாக நடந்து கொண்டு தம்முடைய கெளரவத்தை உயர்த்தியவர் ஆர்.வி. இன்னும் சொல்லப் போனால் பொதுவாழ்வில் அவரைப் போல நேர்மையும், நாணயமும், சத்தியத்தின்பால் நாட்டமும் கொண்ட வேறொருவரை இன்று பார்ப்பது அரிது. வாசாலகமாகப் பேசவும், தன்னைத் தன் அளவுக்கு மீறி புகழ்ந்துகொள்வதும், இல்லாததை இருப்பதுபோல் காட்டிக் கொள்ளுவதும் போன்ற காரியங்கள் எதையும் அவரிடம் பார்க்கமுடியாது. அதுபோலவே காரியங்களைச் சாதித்துக் கொள்வதற்காகவும், சுயநலத்திற்காகவும் யாரிடமும், எந்தக் காரணம் கொண்டும் அவர் துதிபாடி காரியங்களைச் சாதித்துக் கொண்டது கிடையாது.

சுதந்திரப் போர் காலத்தில் மகாத்மா காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல் போன்றவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடந்த அதே நேர்மை சுதந்திர இந்தியாவிலும் அவர்களது கொள்கைகளைக் கடைப்பிடிப்பதில் காட்டியவர் ஆர்.வி. காந்தி, நேரு காட்டிய பாதையிலிருந்து சற்றும் வழுவாமல் கடைசிவரை ஒரு குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் இருந்தவர் ஆர்.வி. இனி கர்ம வீரர் காமராஜரின் வலது கரமான ஆர்.வி பற்றிய சுயவிவரங்களைப் பார்க்கலாம்.

இவர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த ராஜாமடம் எனும் கிராமத்தில் 1910 டிசம்பர் 4இல் பிறந்தார். திருச்சி தேசியக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். சென்னை லயோலா கல்லூரியில் பொருளாதார முதுகலை பட்டம் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து படித்து 1935இல் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டார். வக்கீலாக பணியாற்றிக் கொண்டே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டார். 1938இல் இவர் ஜானகி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தேசபக்தி காரணமாக காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றினார்.

1942இல் பம்பாய் காங்கிரஸ் 'வெள்ளையனே வெளியேறு' தீர்மானத்தை நிறைவேற்றியது. நாட்டின் தலைவர்கள் அனைவரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இளம் வக்கீலான ஆர்.வி. அப்போது அந்தப் போராட்டத்தில் தீவிரமாகக் கலந்து கொண்டு இரண்டு ஆண்டுகள் சிறை சென்றார். தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்ட ஆர்.வி. தொழிலாளர் நலச் சட்டத்திலும் ஆழ்ந்த அறிவு பெற்றிருந்தார், அதன் மூலம் தொழிலாளர்கள் போராட்டங்களுக்கு ஆதரவும், அவர்களுக்கு ஆதரவாக பல வழக்குகளில் வெற்றியும் பெற்றுத் தந்திருக்கிறார்.

ஆகஸ்ட் புரட்சியின்போது சிறை சென்று திரும்பியபின் ஆர்.வி. காங்கிரஸ் இயக்கத்தின் தொழிலாளர் பிரிவில் தீவிர பங்காற்றத் தொடங்கினார். 1949இல் இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் Labour Law Journal எனும் இதழைத் தொடங்கி நடத்தினார். சென்னையில் பல தொழிற்சங்கங்களில் இவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொழிலாளர் நலனுக்காக இவர் அல்லும் பகலும் பாடுபட்டு, அவர்களின் அன்புக்கும், நன்றிக்கும் பாத்திரமானார். இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் இவர் காலத்தில் தமிழகத்தின் பல தொழில்களிலும் வளர்ந்து தொழிலாளர்களின் வாழ்வை நிச்சயிக்கும் முக்கியப் பணியில் ஈடுபட்டிருந்தது. ஐ.என்.டி.யு.சி. எனும் இந்தத் தொழிற்சங்கம் தொழிலாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியமைக்கு ஆர்.வி. ஒரு முக்கிய காரணம்.

சட்ட ஞானமும், தொழிலாளர் சட்டங்களில் உள்ள ஆற்றலும் இவரை அரசியலுக்கு இழுத்துச் சென்றது. அரசியல் நிர்ணய சபையில் இவரும் ஒரு உறுப்பினர் ஆனார். இந்த சபைதான் ஒரு உப கமிட்டியை நியமித்து இந்திய அரசியல் சட்ட வரைவை உருவாக்க ஏற்பாடு செய்தது. அதில் ஆர்.வி. முக்கிய பங்கு வகித்தார். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த 1950 முதல் சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் நடந்த 1952 வரையில் இவர் பாராளுமன்றத்தின் உறுப்பினராக இருந்து பாடுபட்டார். இவரது அயராது உழைப்பைப் பார்த்த தலைவர் காமராஜ் இவரை 1952இல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் நிறுத்தி வெற்றிபெறச் செய்தார். 1957 வரை இவர் அந்தப் பதவியில் இருந்தார். 1957இல் நடந்த தேர்தலிலும் இவர் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றார். ஆனால் அங்கு அவர் நீண்ட காலம் பணியாற்றவில்லை. காரணம் அவரது சேவை தமிழகத்துக்குத் தேவைப்பட்டது. பெருந்தலைவர் முதல்வராகப் பதவி வகித்த போது இவர் சென்னைக்கு அழைக்கப்பட்டு, தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டார். தொழிலாளர் நலம் தவிர, தொழில்கள், மின்சாரத் துறை, போக்குவரத்துத் துறை, வணிகவரித்துறை என்று பல துறைகளை இவர் கவனித்து வந்தார்.

பல வெளிநாடுகளுக்கு இவர் தொழிலாளர் நலம் குறித்த கூட்டங்களுக்கு அனுப்பப் பட்டார். நியுசிலாந்து நாட்டில் நடந்த காமன்வெல்த் நாடுகளின் பாராளுமன்ற கூட்டத்துக்கு இவர் பிரதிநிதியாகச் சென்றார். 1967இல் இவர் மத்திய மந்திரிசபையில் ஒரு அமைச்சரானார். அங்கு இவர் தொழில்கள், தொழ்லாளர் நலன், மின்சாரத்துறை, போக்குவரத்துத் துறை, ரயில்வே ஆகிய துறைக்குப் பொறுப்பு வகித்தார். யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் உறுப்பினராகவும் இருந்தார்.

1975 முதல் 1977 வரையிலான காலகட்டத்தில் இவர் "சுயராஜ்யா" பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். மத்திய அரசாங்கத்தில் அரசியல் விவகாரக் குழுவிலும், பொருளாதார விவகாரங்களுக்கான குழுவிலும் இவர் அங்கம் வகித்திருக்கிறார். 1977இல் தென்சென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று டெல்லி சென்றார். ஆனால் அந்த ஆண்டில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து ஜனதா அரசு பதவி ஏற்றது. அப்போது ஆர்.வி. ஒரு எதிர்கட்சி எம்.பி.யாகவும் பணியாற்றியிருக்கிறார். பாராளுமன்ற வழக்கப்படி பொதுக்கணக்குக் குழுவுக்கு எதிர்கட்சி உறுப்பினர்தான் தலைவராக ஆவார்கள். அதுபோல அந்த ஆண்டு பொதுக்கணக்குக் குழுவுக்கு ஆர்.வி.தான் தலைவர்.

ஜனதா அரசு கவிழ்ந்து மறுதேர்தல் 1980இல் நடைபெற்ற போது இந்திரா காந்தி தலைமையில் காங்கிரஸ் அரசு மீண்டும் பதவிக்கு வந்தது. அப்போதும் ஆர்.வி. தேர்தலில் வெற்றி பெற்று இந்திய அரசின் நிதி அமைச்சராக பதவி ஏற்றார். 1983இல் அமைச்சரவை மாற்றம் நடந்தது. ஆர்.வி. பாதுகாப்பு அமைச்சராக ஆனார். இவருடைய காலத்தில் நமது ராணுவம் நவீனமயம் ஆவதற்கு உண்டான அனைத்துப் பணிகளையும் இவர் செய்தார். ஏவுகணைகள் இந்திய ராணுவத்தில் சேர்ப்பதற்கு இவர் ஆற்றிய பணி முக்கியமானது. அப்போது வான்வெளி ஆராய்ச்சித் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களை ஏவுகணை உற்பத்தித் துறைக்கு மாற்றியதும் ஆர்.வி.தான். அவர் காலத்தில் அந்தத் துறை அடைந்த வளர்ச்சி பற்றி சொல்லித் தெரியவேண்டும் என்பது இல்லை, அல்லவா?

1984இல் இந்திய துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 1987இல் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1992 வரையில் அந்தப் பதவிக்குக் கெளரவம் சேர்த்தார். இவர் காலத்தில்தான் மூன்றுக்கும் மேற்பட்ட பிரதமர்கள் குறுகிய காலத்தில் பதவிக்கு வரும் நிலைமையும், நாட்டில் கூட்டணி அமைத்து அரசு அமைக்கும் நிலைமையும் ஏற்பட்டது. அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இவர் நேர்மையாகவும், சற்றும் பாரபட்சமின்றியும் நடந்துகொண்டது வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட நிகழ்ச்சி. ஆனாலும் நம் நாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் எத்தனை நல்லவரானாலும் அவருக்கும் ஒரு களங்கம் கற்பிக்கும் வழக்கம் உண்டு அல்லவா, அப்படி ஒரு சில கால நேரங்களில் அவரும் குறைகூறப்பட்டார்.
1950 முதல் 1960வரையிலான காலகட்டத்தில் ஆர்.வி. பல சர்வதேச அமைப்புகளில் அங்கம் வகித்துப் பணியாற்றியிருக்கிறார். சர்வதேச நிதித் துறையில் I.M.F. எனப்படும் International Monetary Fundலும், International Bank for Reconstruction and Development, Asian Development Bank ஆகியவற்றில் பதவி வகித்திருக்கிறார். ஐக்கிய நாடுகளின் சபையில் இந்தியாவின் பிரதிநிதியாகவும் இவர் இருந்திருக்கிறார். 1958இல் ஜெனீவா நகரில் நடந்த சர்வதேச தொழிலாளர் நல மாநாட்டில் இந்தியக் குழுவிந்த் தலைவராகச் சென்று கலந்து கொண்டிருக்கிறார். 1978இல் வியன்னா நகரில் நடந்த மகாநாட்டிலும் இவர் பங்கு பெற்றிருக்கிறார். ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் உள்ள United Nations Administrative Tribunal எனும் அமைப்பில் இவர் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். 1968இல் இவர் அதன் தலைவராகவும் இருந்திருக்கிறார். 1979 வரை அவர் இந்தப் பதவியில் இருந்தார்.
இவருக்குப் பல விருதுகள் கிடைத்தன. ஆனால் இவர் பெயருக்கு முன்பு அவற்றைப் போட்டுக்கொண்டு பெருமைப் பட்டுக் கொள்ளவில்லை. சென்னை பல்கலைக் கழகம், பர்துவான் பல்கலைக்கழகம், நாகார்ஜுனா பல்கலைக் கழகம், பிலிப்பைன்ஸ் பல்கலைக் கழகம் ஆகியவை இவருக்கு கெளரவ Doctor of Law எனும் பட்டத்தைக் கொடுத்து கெளரவித்திருக்கிறது. ரூர்க்கி பல்கலைக் கழகம் இவருக்கு Doctor of Social Sciences எனும் பட்டத்தைக் கொடுத்தது. சென்னை மருத்துவக் கல்லூரியில் இவர் Honorary Fellowஆக இருந்தார். இந்திய சுதந்திரப் போரில் பங்குகொண்டு சிறை சென்றமைக்காக இவருக்குத் தாமரப் பட்டயம் கொடுத்து கெளரவிக்கப்பட்டது.

சோவியத் யூனியனுக்கு பெருந்தலைவர் காமராஜ் சென்றபோது இவரும் உடன் சென்றார். அப்போது இவருடைய அனுபவங்களையும் பெருந்தலைவரின் சுற்றுப்பயணம் குறித்தும் "Kamaraj's Journey to Soviet Countries" எனும் தலைப்பில் எழுதிய நூலுக்கு ரஷ்யாவிலிருந்து வெளிவந்த "Soviet Land" விருது 1967இல் கிடைத்தது. ஐக்கிய நாடுகள் சபையில் இவர் ஆற்றிய பணிகளுக்காகவும் இவர் கெளரவிக்கப்பட்டார்.

நிறைவாக இவரைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், இவர் காஞ்சி காமகோடி மடத்தின் 68ஆவது பீடாதிபதியாக விளங்கிய மகாசுவாமிகள் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பக்தர். காஞ்சி மடத்தின் கெளரவ ஆலோசகர் இவர். அந்த மகா சுவாமிகள் இவருக்கு "சத் சேவா ரத்னா" எனும் விருதை வழங்கி ஆசீர்வதித்தார். இவர் தனது 98ஆம் வயதில் சிறிதுகாலம் உடல் நலக் குறைவால் டெல்லி மருத்துவ மனையில் 27-1-2009 அன்று காலமானார். இவருக்கு மனைவி ஜானகி வெங்கட்ராமன் மற்றும் மூன்று பெண்கள் உள்ளனர்.