பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, May 6, 2020

குயில் பாட்டு


                                                                        
            பாரதியாரின் குயில் பாட்டு முப்பெரும் பாடல்கள் எனப்படும் பாரதியார் பாடல்களில் ஒன்று. இது ஓர் அற்புதமான கற்பனை. இதன் இறுதியில் பாரதியாரே சொல்வது போல் இந்தக் குயில் பாட்டை “வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க” முடியும் என்கிறார் அவர். அந்த வேதாந்தக் கருத்து என்பது எது? இதில் நாம் அதைத்தான் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும்.

            இவ்வுலகம் பல யுகங்களைக் காண்கிறது. ஒவ்வொரு யுகமும் ஒரு பிரளயம் ஏற்பட்டு அழியவும் அடுத்த யுகம் தொடங்கவுமாக இத்தொழில் தொடர்ந்து நடைபெறுவதாகப் பெரியோர்கள் சொல்கிறார்கள். மகாபாரத யுத்தம் முடிந்த பிறகு துவாபர யுகம் முடிந்து கலியுகம் தோன்றியதாக கருத்து இருக்கிறது. யுகங்கள் நான்கு அவை கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்பதாகும்.

            கிருத யுகத்தில் மனிதன் ஒரு லட்சம் ஆண்டுகள் வாழ்வானாம். திரேதா யுகத்தில் மனிதன் பத்தாயிரம் ஆண்டுகள் வாழமுடியும். துவாபர யுகத்தில் ஆயிரம் ஆண்டுகளாம். கலியுகத்தில் நூறு ஆண்டுகள் என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

            இதில் இன்னொரு வேடிக்கையான செய்தியும் உண்டு, கிருத யுகத்தில் மனிதனின் உயிர் அவன் எலும்பில் இருந்ததாகவும், திரேதா யுகத்தில் உயிர் நரம்பில் இருந்ததாகவும், துவாபர யுகத்தில் உயிர் ரத்தத்தில் இருந்ததாகவும், கலியுகத்தில் உயிர் மூச்சுக்காற்றில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

            கிருத யுகத்தில் முக்திக்கு வழி ஞானம் பெறுதல்; திரேதா யுகத்தில் யாகம் செய்தல்; துவாபர யுகத்தில் தான தருமங்கள் செய்தால் முக்தி; கலியுகத்தில் பக்தி செய்தால் மட்டுமே முக்தி என்பர்.

            சாதாரணமாக நமது புராணிகர்கள் மகாபாரத யுத்தம் முடிந்ததோடு துவாபர யுகம் முடிந்து கலியுகம் தொடங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். இந்த புராணக் கருத்துக்களை யெல்லாம் மனதில் இறுத்திக் கொண்டு புதுச்சேரியை அடுத்த சுப்ரமணியம் செட்டியார் என்கிற வெல்லச்சுச் செட்டியாருக்கு உரிமையுள்ள ஒரு மாந்தோப்பிற்குச் செல்வோம். அங்குதான் பாரதி புதுவையில் இருந்த போது பொழுதைக் கழிப்பார். அங்கே அமைதி நிலவும் சூழ்நிலை. பறவைகளின் கூட்டம், அவைகள் எழுப்பும் ஒலி, இவற்றில் மனம் செலுத்திக் கொண்டிருப்பார். அப்படி இவர் ஒருநாள் தன் வீட்டில் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்த போது உறக்கம் வந்து அவரைப் பீடித்துக் கொள்ள, அவர் இருந்த அறையில் அமர்ந்திருந்த பழம் பாய், எழுதும் பலகை, எழுதுகோல், இங்க் பாட்டில் எழுதிய காகிதங்கள் என்று சிந்தனையும் எழுத்துமாய் இருந்த போது சற்று கண்ணயர்ந்து விட்டார்.

            அந்த பகல்நேர உறக்கத்தில் அவருக்கு ஒரு கனவும் வந்து சேர்ந்தது. அப்படி அவர் கண்ட கனவு சற்று விசித்திரமானது. அது என்ன கனவு. அவரே ஒரு கவிதையில் சொன்னது போல “உலகெலாம் ஒரு பெருங்கனவு, அஃதுளே உண்டு, உறங்கி இடர் செய்து செத்திடும் கலக மானுடப் பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவிலும் கனவாகும்” என்பது போல் அவர் உறக்கத்தில் அவர் கண்ட கனவு நிஜத்திலும் மேலான உணர்வுகளைத் தூண்டி எழுப்பும் அற்புதக் கனவு.

            அவர் வழக்கமாகச் செல்லும் மாந்தோப்புக்குச் செல்கிறார். அது புதுவை நகரில் அலை மோதும் கடறகரைக்கு மேற்கில் அமைந்த தோப்பு. அங்கு பறவைகள் கூட்டம், அவற்றின் ஓசைகள், அதில் ஒரு நீலக் குயில் ஒன்று. தன் இனிய குரலெடுத்துப் பாடிக் கொண்டிருக்கிறது. குயில் கூவத்தானே செய்யும், பாடுகிறதா? ஆம் அது கூவும் குரல் இவருக்கு பாடலாகக் கேட்கிறது. குயில் தன் இனிய குரலில் மனிதனுக்குப் புரியக்கூடிய மொழியில் பாடுகிறது. கவனித்துக் கேட்கிறார், அந்தப் பாடல்.  “காதல் காதல் காதல்” என்று தொடங்குகிறது.  
   
வைகறை வேளை. உலகைப் போர்த்திய இருள் மெல்ல மெல்ல கிழிகின்ற காலம். கதிரவன் தன்னுடைய ஆயிரம் செங்கதிர்க் கரங்களை அகல விரித்து இப்பாரின் மீது ஆடுகின்ற நேரம், அவனுடைய கோலக்கூத்திலே மெய்மறந்த மாக்கடல், தன் நீண்ட அலைக் கரங்களைக் கொட்டி ஆர்த்துப் பெரு முழக்கம் செய்கின்ற சிறுகாலைப் பொழுது. அவ்விளங்காலை போதிலே, புதுவை நகர் மெருகூட்டிய பொன்போல எழில் பூத்து விளங்குகிறது. அப்பட்டினத்தின் மேற்கே நிழல் விரிக்கும் நீண்டு உயர்ந்த பசுமரங்கள் அடர்ந்த இடம் அந்த எழிலாரும் மாஞ்சோலை.

அவ்விளமரக் காவிலே நம் புலவன் அகம் மகிழ்ந்து சுற்றி வருகின்றான். மாமரத்தின் ஒரு கிளையிலே இசைக்குயில் அமர்ந்து கல்லும் கரையும் வண்ணம், மிக இனிமையான காதற்பாட்டு ஒன்றைப் பாடிக் கொண்டிருக்கிறது. அப்பாட்டின் நெருப்புச் சுவையிலே விண்ணும் மண்ணும் மயங்குகின்றனவாம். சுவையில் நெருப்புச் சுவை கேள்விப் பட்டதுண்டா? ஆம் பாரதிக்கு அந்த க் குயிலின் குரல் நெருப்புச் சுவையாக இருந்திருக்கிறது. சுளீரென்று உறைக்கும் தீயின் ஸ்பரிசம் போல அதன் பாடல் மனதை ஊடுறுவுகிறது. குயிலின் கருத்தைக் கவரும் பாட்டிலே கவிஞன் மயங்கி, முடிவில் தன்னையும் மறக்கிறான். அந்தக் குயிலைக் காதலித்து அதனுடனே கூடிவாழ வகை கிடைக்காதா என்று ஏங்குகிறான். இல்லையெனில் அதனுடைய "நாதக் கனலிலே நம் உயிரைப் போக்க மாட்டோமா?" என்றும் பொருமுகின்றான்.

இவ்வாறு அவன் உள்ளம் கனலாய்க் காய்ந்து, புனலாய் ஓடும் வண்ணம் அக்குயில்: "காதல், காதல், காதல் காதல் போயிற் காதல் போயிற் சாதல் சாதல் சாதல்" என்று பாடி முடிக்கிறது.

புலவன் அக்காதற் குயிலை நோக்கி "உலகை மயக்கும் இசைச் செல்வத்தையுடைய குயிலே! உன் பாடலில் சோகத்தின் சுவை அதிகமாக இருக்கிறதே! இவ்வுலகில் உனக்கு எய்திய துன்பம்தான் யாது?" என்று வினவுகிறான்.

மாயக் குயிலும் மானுடர் பேசும் மொழியில் பேசுகிறது.   தான் "காதலை வேண்டி கரைகின்றேன், இல்லையெனில் சாதலை வேண்டித் தவிக்கின்றேன்" என்று மறுமொழி தந்தது அந்தப் பேதைக் குயில்.

சிந்தை நோய் கூறும் குயிலின் வெந்துயர் மாற்றத்தைக் கேட்டுக் காதலால் மயங்கும் கவிஞன் உள்ளம் விம்மிதம் அடைகிறது. அவன் நெஞ்சம் துன்பப்படுகிறது.

"காதலை வேண்டி நீ பாடுவானேன். உனக்குக் காதலன் யாரையும் நீ பெறாத காரணந்தான் யாதோ?" என்று கவிஞன் அந்தக் குயிலை வினவ, அதற்கு அது தனது நெஞ்சத்தைக் குடைகின்ற உள்ள நோயினை விளக்கிக் கூறுகிறது. பிறப்பிலே குயிலாகக் காட்சி அளித்தாலும் அதற்கு எவ்வாறோ மாந்தர் பேசுகின்ற பேச்சும் நன்கு தெரிகின்றது. மானிடர் மொழி மட்டுமல்ல! மற்ற எல்லோர் மொழிகளையும் உணரும் சக்தியும் வாய்ந்ததாயுள்ளது.

எனினும் அதனுடைய சிந்தை, மானிடப் பெண்கள் காதலினால் ஊன் உருகப்பாடும் பாட்டிலும், உழவனுடைய ஏற்றப் பாட்டினிலும், நெல்லை உரலில் இட்டு இடிக்கும் போது பெண்கள் பாடும் “உக்கூம்” என்று ஒலி எழுப்பிப் பாடும்  பாட்டினிலும், அவர்களின் கொஞ்சும் தேன்மொழியினிலும், இன்னும் மாந்தர்கள் பயில்கின்ற குழல், யாழ் முதலிய இசைக் கருவிகளின் தேனிசையிலும் தன்னுடைய நெஞ்சை முற்றிலும் பறிகொடுத்துள்ளது. ஆகையால் அதனுடைய காதலும் மானிடர் மீதே பற்றிப் படர்கின்றது. அதனுடைய உள்ளப்பாங்கைக் கவிஞனுக்கு வகையாய், வீணையின் ஏழிசைக் குரலையும் ஒரு குரலிலே அடக்கி, இயம்புகின்றது.

அது சொல்கிறது "காதலை வேண்டிக் கரைகின்றேன், இல்லையெனில் சாதலை வேண்டித் தவிக்கின்றேன்" என்று புலம்பும் தன் நெஞ்சின் துயரைக் கூறுகின்றது.
  
மகுடியின் இசையிலே மயங்கும் நாகம் போன்று மாங்குயிலின் பேச்சிலே கவிஞன் கட்டுப்படுகிறான். அவனுடைய உள்ளத்தில் குயிலின் காதற்பாட்டைத் தவிர வேறோர் இசை இல்லை. எங்கிருந்தோ இந்நேரத்தில் அந்தத் தோப்பில் வசிக்கும் பறவைகள் இரை தேடி முடித்து பறந்து வந்து அம்மாஞ்சோலையினுள்ளே புகலடைகின்றன.

அந்தக் காட்டுப் பறவைகள் தங்கள் காதல் உரையாடலுக்குத் தடை வந்ததைக் கண்டு, அந்த நீலக்குயில் நீண்ட பெருமூச்சு விடுகிறது. "ஐயனே! காதல் வழி என்பது மிகவும் கரடுமுரடானது என்பார்கள்" அது நம் வாழ்வில் முழுவதும் உண்மையாக இருக்கிறது.  அன்பர், உங்களோடு பேசி அளவளாவுகின்ற இன்பத்திற்கும் இப்போது இடையூறு ஏற்பட்டுவிட்டது.

உங்களுடன் எனக்குப் பேச நிறைய செய்திகள் உண்டு. அதற்கு உரிய நேரம் இப்போது இல்லை. ஆகையால் தாங்கள் அடுத்த  நான்காம் நாள் இங்கு வந்தருளல் வேண்டும். மறக்காதீர்! இப்போது நீங்கள் என்னுடைய சிந்தையைப் பறித்துக்கொண்டு செல்கின்றீர்; குறித்த நாளில் வராவிடிலோ இக்குறுவடிவக் குயிலியான நான்  ஆவி தரியேன் அறிந்திடுவீர்! நான்காம் நாள் என்பதனை மறந்து விடாதீர். இந்நாட்கள் நான்கையும் பத்து யுகம்போல நான் கழிப்பேன். சென்று வருவீர்! என் சிந்தையை எடுத்துக்கொண்டு செல்கின்றீர் என்பதை மீண்டும் மீண்டும் விண்டு உரைக்கின்றேன். மறவாதீர், சென்று வாருங்கள்" என்று தேற்ற முடியாத பெருந்துயரத்தோடு அவனை வழி அனுப்பி வைக்கிறது அந்த மாயக் குயில்.

குயில் பறந்து மறைந்து போகிறது. காதல் வயப்பட்ட கவிஞர் களிவெறி கொண்டவன் போல் தன் வீடு நோக்கித் திரும்புகிறார். வருகின்ற வழியெல்லாம் வஞ்சனைக் குயிலின் உருவமே எங்கும் நிறைந்து, எல்லாமாய் நிற்பதனைக் காண்கின்றான். நாள் ஒன்று போவதற்கு அவன் பட்ட பாட்டைத் தாளமும் படாது, தறியும் படாது.

இந்நிலையில் எவ்வாறோ நாள் ஒன்று கழிகின்றது. மறுநாள் அதே வைகறை வேளை. புத்தி, மனம், சித்தம், புலன் ஒன்றும் அறியாமல் காதல்வயப்பட்ட மனத்தினனாய், கயிற்றினால் ஆட்டுவிக்கப்படும் பாவைபோல கவிஞன் அந்த மாஞ்சோலையை நோக்கி விரைந்து செல்கின்றான். வழியில் இருந்த எந்தப் பொருளும் அவன் கண்களுக்குத் தெரியவில்லை. அந்த காலை வேளையில் செஞ்ஞாயிற்றின் செழுங்கதிர் ஒளியினால் பச்சை மரங்களெல்லாம் பளபளத்து மின்னுகின்றன. காதல் குயிலோடு தனித்து உரையாடிக் களித்து இன்புற வேண்டுமென்ற அவன் இச்சையை உணர்ந்தனபோல, சோலைப் பறவையெல்லாம் எங்கோ போய்விட்டன. சிறுகுயிலைக் காணக் கரையடங்கா வேட்கையோடு, ஒவ்வொரு மரமாகப் பார்த்துக் கொண்டே வருகிறான்.

முன்னை நாள் கண்ட மரக்கிளையில் குயிலைக் காணாது அவனுடைய மனம் துடிக்கிறது. முடிவில் வஞ்சனை விளைந்ததுபோல் காணக் கசக்கும் ஒரு காட்சியை அவன் கண்கள் காண்கின்றன. அன்று தன்னிடம் காதல் மொழி பேசிய அந்த நீலிக் குயில் இன்று ஒரு குரங்கினிடம் அவ்வாறே -- அதே காதல் மொழி பேசிக்கொண்டிருக்கிறது.

இன்று அது குரங்கினிடம் குரங்கு மொழியில் பேசிக்கொண்டிருக்கிறது. ஆனால், பொருளோ நேற்றுப்பாடிய அதே காதற் பாட்டின் பொருள்தான்.  "வானரரே! ஈடறியா மேன்மையழ கெய்ந்தவரே! பெண்மைதான் எப்பிறப்பு கொண்டாலும், ஏந்தலே! நின்னழகைத் தப்புமோ? மையல் தடுக்குந் தரமாமோ?" என்று சொல்லி மானுடர்கள் சில வகையில் மேன்மையுற்றிருந்தாலும், உன்போற் மேனி அழகினிலும், விண்டுரைக்கும் வார்த்தையிலும், கூனியிருக்கும் உன் கொலு நேர்த்தி தன்னிலும் வானரர்க்கு மானுடர் நிகர் ஆவாரோ? பட்டுமயிர் மூடப்படாத தமது உடலை, பட்டு உடைகளால் அலங்கரித்துக் கொண்டாலும், மீசையும் தாடியும் வைத்துக்கொண்டு உமது ஆசை முகத்தினைப் போல் ஆக்க முயன்றாலும், நீங்கள் தாவிக் குதிப்பதைப்போல் அவர்களும் கூடிக் குடித்துவிட்டு ஆடினாலும், கோபுரத்தில் ஏறுகின்ற உங்கள் நேர்த்திக்கு எதிராக இவர்கள் ஏணி வைத்து ஏறமுயன்றாலும், வேறு எதனைச் செய்தாலும், தாவிப் பாய்வதிலே வானரர்க்கு மானுடர் நிகர் ஆவாரோ?

அதெல்லாம் போகட்டும், வாலுக்கு எங்கே போவார்கள்? தலையில் கட்டும் தலைப்பாகையில் கச்சை வைத்துக் கட்டிக் கொண்டாலும், உங்கள் வாலுக்கு நிகர் ஆகிவிடுமோ? அடடா! உங்கள் சைவ சுத்த போஜனமும், சாதுரியப் பார்வைகளும் உங்களைப்போல் வேறொரு சாதி மண்மீது இருக்கிறதோ?" இப்படிப் பேசுகிறது குயில்.

குயிலின் பைங்குரல் இசையில் அந்தக் குரங்கு தன் நெஞ்சைப் பறிகொடுக்கிறது. அதன் இயல்புக்கேற்ப காதல் வெறிகொண்டு தாவிக் குதிக்கிறது; தாளங்கள் போடுகிறது; கண்ணைச் சிமிட்டுகிறது; காலாலும் கையாலும் மண்ணைப் பிறாண்டி எங்கும் வாரியிறைக்கிறது. 

"உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்                                                                                        கள்ளுக்கில் காமத்திற் குண்டு"

 இது திருக்குறள். காமத்திற்கு உரிய சிறப்பினை இதனைக்காட்டிலும் படம்பிடித்துக் காட்டமுடியுமா? "காதல் வழிதான் கரடு முரடாம் என்பர்" என்று கூறும் கவிஞர், மகாகவி ஷேக்ஸ்பியரின் "The course of love never did run smooth" எனும் வரிகளை நமக்கு நினைவு படுத்துகிறார்.

குரங்கு சொல்லுகிறது: "ஆசைக் குயிலே! அரும் பொருளே! தெய்வதமே! பேசமுடியாப் பெருங்காதல் கொண்டுவிட்டேன் காதலில்லை யானாற் கணத்திலே சாதலென்றாய்; காதலினால் சாகுங் கதியினிலே என்னை வைத்தாய், எப்பொழுதும் நின்னை இனிப் பிரிவ தாற்றுகிலேன்". என்று பாடிக்கொண்டு அந்தக் குரங்கு கூத்தாடுகிறது.

அதனுடைய காமக் களியாட்டத்தைக் கண்டு கவிஞனின் உள்ளம் அலை மோதுகிறது. குரங்கைக் கொல்ல எண்ணிக் கைவாளை வீசுகின்றான். ஆனால், 'கனவோ? நனவோ? அன்றித் தெய்வ வலியோ?' என்று உள்ளம் திகைக்கும்படி அவனுடைய சிறுவாளுக்கு அக்குரங்கு தப்பிச் சென்றுவிடுகிறது. அதே நேரத்தில் சொல்லி வைத்தாற்போல், சோலைப் பறவைகள் எல்லாம் தொகை தொகையாய்த் திரும்பி வருகின்றன.

செய்வதறியாது அவர் அக்காதல் குயிலைத் தேடுகின்றார். ஆனால் அது மறைந்து போய்விடுகிறது. அவர் உள்ளம் பதைபதைக்கின்றது. உடல் சோர்கின்றது. விழி மயங்குகின்றது. நாணமும் துயரமும் அவரை நலிவுறுத்துகின்றன. மீண்டும் இல்லம் நோக்கித் திரும்புகிறார்.

 தன்னுடைய உணர்வை இழந்து விழுந்து விடுகின்றார். மாலை நேரத்து மயக்கம். அவருடைய நண்பர்கள் அவரைச் சூழ்ந்துகொள்கிறார்கள். அவர் மயக்கமும் மெல்ல மெல்லத் தெளிகிறது. அவர் நண்பர்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் அவரால் விடையிறுக்க இயலவில்லை.

 "நண்பர்களே! நாளை வாருங்கள், நடந்தவற்றை நான் முழுவதுமாய் சொல்கின்றேன். இன்று என்னைத் தனியே இருக்க விடுங்கள்' என்கிறார். தோழர்கள் சென்றுவிட்டாலும், அவர்டைய நிலை கண்டு அவர் தாயார் நைந்து போய்விட்டார். தளர்ந்த தன் தனயனின் மயக்கம் தீரத் தன் தளிர்க் கரத்தால் தீம்பால் கொணர்ந்து, அன்பால் அவரைத் தேற்றி, அப்பால் அருந்தச் செய்கின்றார். பாலருந்தியபின் பெருந்துயில் கொள்கின்றார் அவர்.

மூன்றாம் நாள், முந்தைய நாட்களில் நடந்தவற்றை மறப்பதற்காக இயற்கையைச் சரணடைகிறார். அவருடைய கால்கள் முன்போலவே அவரை அந்த இளமரக்காவிற்கு இழுத்துச் செல்கின்றன. சொந்த நினைவு இழந்து அவரும் சோலையிலே வந்து நிற்கின்றார். மோசக்குயிலை சுற்றுமுற்றும் தேடுகின்றார். கோலப்பறவைகள் கூட்டத்தையும் காணவில்லை.

பின்னர் ஆங்கோர் மாமரத்தின் உயர்ந்த கிளையினிலே அந்த நீசக்குயில் நீண்ட கதை ஒன்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறது. கீழே ஒரு கிழட்டுக் காளையொன்று அந்தக் குயில் சொல்லும் காதல் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. அதைக் கண்டு கவிஞர் உள்ளம் புண்ணாகி, சினமென்னும் செந்தீயை, பொறாமைக் காற்று வீசி மேலும் கொழுந்து விட்டெரியச் செய்கிறது. கொன்று விடலாமா என்று எண்ணுகிறார். ஆனால், உள்ளம் மீண்டும் தயங்குகின்றது. பொய்க்குயில் பேசும் மாயக் காதலை முற்றிலும் கேட்டுவிட்டுப் பின்னர் கொல்லுவதே  நல்லது  என்று எண்ணுகிறார். மறைந்து நின்று அந்த உரையாடலைக் கேட்கிறார். அந்தக் குயிலும் தன் பொன்போன்ற குரலிலே மின்னல் போன்ற சொல்லெடுத்துத் தன் கரையடங்காக் காதலை அந்தக் கிழக்காளையிடம் சொல்லுகிறது.

"காளை எருதரே! காட்டிலுயர் வீரரே! தாளைச் சரணடைந்தேன், தையலெனைக் காத்தருள்வீர்! காதலுற்று வாடுகின்றேன், காதலுற்ற செய்தியினை மாதர் உரைத்தல் வழக்கமில்லை என்றறிவேன் ஆனாலும் என்போல் அபூர்வமாய் காதல் கொண்டால் தானாக உரைத்தலன்றிச் வேறு  வழியுளதோ?" என்று கூறி, பண்டுபோல் தனது பாழடைந்த பொய்ப்பாட்டை எண்டிசையும் இன்பக் களியேறப் பாடியது.

குயில் அந்தக் கிழக்காளையைப் பார்த்து சொல்லுகிறது: "நந்தியே! பெண்டிர் மனத்தைப் பிடித்திழுக்கும் காந்தமே! காமனே! மாடாகக் காட்சிதரும் மூர்த்தியே! பூமியிலே மாடுபோல் பொற்புடைய சாதி பிரிதும் உண்டோ? மானுடர்களுக்குள்ளே வலிமையுள்ள ஆண்மகனை என்ன சொல்லி அழைக்கிறார்கள். "காளை" என்றுதானே சொல்லுகிறார்கள்.

அடடா! உனது நீண்ட முகமும், நிமிர்ந்திருக்கும் கொம்புகளும், பஞ்சுப்பொதி போன்ற உடலும், வீரத்திருவாலும், வானத்தில் இடி இடிப்பது போல "மா" என்று நீ உறுமுவதும், உன் முதுகில் ஈனப் பறவைகள் ஏதேனும் அமர்ந்து விட்டால் அதனை உன் வாலால் லாவகமாக வீசி அடிக்கும் நேர்த்தியும் கண்டு நான் உம் மீது  மோகம் கொண்டு விட்டேன்".

இவ்வளவையும் சொல்லி முடித்துவிட்டு குயில் மேலும் தொடர்கிறது "காளையரே! உம் மேல் காதலுற்று வாடுகின்றேன், காதலுற்ற செய்தியினை மாதர் உரைத்தல் வழக்கமில்லை என்பதை அறிவேன். எனினும் என் செய்வேன். என்போல் அபூர்வமாய் காதல் கொண்டால் தானாய் உரைத்தலின்றி வேறு வழியுளதோ?. இப்படி அந்த நீசக் குயில் அந்தக் கிழக் காளையிடம் பாடி முடிக்கும் வரை கவிஞருக்கு இவ்வுலக நினைவே இல்லை.

"பாட்டு முடியும்வரை பாரறியேன், விண்ணறியேன், கோட்டுப் பெருமரங்கள் கூடிநின்ற காவறியேன், தன்னை யறியேன், தனைப்போல் எருதறியேன், பொன்னை நிகர்த்தகுரல் பொங்கிவரும் இன்பமொன்றே கண்டேன்" என்று சினத்தீ மூண்டு தவிக்கும் கவிஞரே அப்பாட்டை வியந்து பாராட்டினார் என்றால், அதன் இன்பச்சுவை எவ்வாறு அவனி முழுவதையும் மயக்கி ஆட்கொண்டிருக்கும் என்பதை நன்கு அறியலாம்.

கரைபுரண்ட ஆற்று வெள்ளம் வற்றியவுடனே தலைசாய்ந்த நாணற்புற்கள் மீண்டும் நிமிர்வதைப் போன்று பாட்டு முடிந்தவுடன் கவிஞரின் சினமும் நிமிர்ந்து நிற்கிறது. கைவாளை எடுத்துக் காளையின் மேலே வீசுகின்றார். ஆனால் காளையோ? விரைந்து ஓடிவிடுகிறது. கார்வண்ணக் குயிலும் கடிதில் மறைந்து விடுகிறது. சோலைப் புள்ளின் கூட்டமெல்லாம் மீண்டும் ஒலிசெய்த வண்ணமே விந்தைக் கனி கொடுக்கும் தண்ணார் பொழிலை வந்தடைகின்றன. நாணமில்லா காதல் கொண்ட கவிஞர் வீணிலே அந்தக் குயிலை எங்கெல்லாமோ தேடி அலைகின்றார். உற்ற பயன் ஏதும் இல்லை. வறிதே வீடு வந்து சேருகின்றார்.

ஆனால், உள்ளமோ ஓராயிரம் எண்ணங்களை எண்ணுகின்றது. "கண்ணிலே நீர் வடிய, கானக் குயில் முதலில் ஏன் என்னிடம் காதலைப் பேசியது? அந்தப் பாட்டிலே நான் ஏன் நெஞ்சம் கரைந்தேன்?  பேச முடியாப் பெருங்காதல் ஏன் கொண்டேன்?  இன்ப உரையாடல் நிகழும் வேளையிலே புன்பறவைக் கூட்டம் எங்கிருந்து வந்தது? தண்டலையை ஏன் அடைந்தது? என்னைப் பேதையாக்க இவ்வளவும் போதாமல், மேலும் என் சித்தம் திகைப்புறும் வண்ணம் எனக்கு எதிரியாக எங்கிருந்தோ சொத்தைக் குரங்கு ஒன்று வந்ததே? அப்பால் தொழுமாடும் எவ்வாறு போட்டியாகத் தோன்றியது? இவ்விரண்டும் என் காதலுக்கு முற்றிலும் வைரிகளாக மூண்ட கொடுமையை என்னவென்பேன்? உலகமே விந்தை நிறைந்த ஒரு விலங்கினக் காட்சிசாலை போன்றல்லவா தோற்றமளிக்கிறது.                                                          
 வண்ணக்குயில் கவிஞரைச் சோலைக்கு வரச்சொன்ன நான்காம் நாள், உள்ளம் சோர்ந்து, அறிவிழந்து, சித்தம் திகைப்புற்று, செய்கையறியாமல் தன் வீட்டின் மாடத்திலே ஏக்கமே உருவமாய் இருக்கின்ற இளங்காலை வேளையில் அவரையறியாமலே அவருடைய நாட்டம் மாஞ்சோலை திசையில் செல்லுகின்றது.

என்ன வியப்பு? வானத்தே ஒரு கரும் பறவை வருவதனை அவர் கண்கள் நோக்குகின்றன. "இது நமது பொய்க்குயிலோ?" என்று உள்ளம் திகைக்கின்றார். நீண்ட தொலைவிலே அது நின்ற காரணத்தால் அதன் வடிவம் நன்கு துலங்கவில்லை. ஆனால், மனமோ அதனை விட்டுப் பிரிய முடியாது பேதலிக்கின்றது. உயர்மாடத்தினின்றும் இறங்கி வீதியிலே வந்து நிற்கின்றார். ஒளிக்கடலில் தோன்றும் ஒரு புள்ளியைப் போல் அக்கருங்குயிலும் வானத்தே தோன்றுகிறது.

 "நம்முடைய நாணமிலாப் பெண் குயில்தானோ  இது?" என்று அறிவோம் என்று எண்ணி அவர் விரைந்து அதன் பின்னே செல்லுகின்றார். வானத்தில் வட்டமிட்டு நின்றே வழிகாட்டி அக்கானப் பறவையும் செல்லுகின்றது. அவர் நின்றால் அது நிற்கும்; அவர் சென்றால் அதுவும் செல்லும். இறுதியில் அந்தக் குயில் மாஞ்சோலையைச் சென்றடைகின்றது. ஆங்கோர் கொம்பின் மீது அமர்கிறது. பழைய காதற்பாட்டை இப்போதும் பாடிக்கொண்டிருக்கிறது.  கவிஞர் உள்ளம் குமைந்து அதன் எதிரில் போய் நிற்கிறார். “காதல் காதல் காதல், காதல் போயின் சாதல் சாதல் சாதல்” அதே குரல் அதே பாடல்.

சினம் பொங்க குயிலிடம் வினவுகின்றார்.

"நீசக் குயிலே, நிலையறியாப் பொய்மையே, ஆசைக் குரங்கினையும் அன்பார் எருதினையும் எண்ணிநீ பாடும் இழிந்த புலைப்பாட்டை நண்ணியிங்கு கேட்க நடத்திவந்தாய் போலும் என்னை" என்று நெருப்பெனக் கேட்டு அதனை நெரிக்கிறார். அதனைக் கொல்லவும் நினைக்கிறார், எனினும் பின்னே மனம் இளகிவிடுகிறது. குயிலின் கண்களிலே நீர் ஆறாய்ப் பெருக்கெடுக்கிறது.

வேதனையோடு குயில் கூறுகிறது, "ஐயனே, என்னை இவ்வுலகத்தில் வாழவைக்கத் திருவுளமோ? அன்றிக் கொன்றுவிட எண்ணமோ? தன் துணை பிரிந்தால் அன்றிற்பறவை உயிர் வாழாது. ஞாயிற்றின் வெம்மையில் மலருக்கு வாழ்வு ஏது? தாயே உயிரை எடுப்பதென்றால் குழந்தைக்குச் சரண் ஏது? தேவர்கள் சினந்துவிட்டால் சிற்றுயிர்கள் என்னவாகும்? நீங்கள் என்னைச் சினந்தால் நான் உயிர் துறப்பேன். நான் குற்றம் புரிந்ததாகச் சொன்னீர்கள். ஆனால் நான் குற்றம் புரிந்தவள் அல்ல. புன்மைக் குரங்கையும், பொது மாட்டையும் நான் கண்டு மெய்மைக் காதல் விளையாடினேன் என்று சொல்லுகின்றீர். ஐயகோ! என் செய்வேன்? நான் எங்ஙனம் உய்வேன்? உங்கள் சொல்லை மறுக்கவும் வழியில்லை. என்மேல் பிழையும் இல்லை. வல்விதியே! என்னை நீ என்னுடைய வேந்தனோடு சேர்த்தாலும், அல்லது என்னை நம்பாமல் அவர் என்னை புறக்கணித்துச் செல்ல, அதனால் நான் வெந்தழலில் வீழ்ந்து அழிய நேரிட்டாலும், நான் எக்கதிக்கு ஆளாவேன்?" என்று பல பேசி குயில் புலம்புகிறது.   
                                                   
 குயில் மீண்டும் கவிஞரை நோக்கிக் கூறுகிறது,

"என் உயிரே, என்னை விட்டுப் போவதன் முன்னால் நான் சொல்லுவதனை அருள்கூர்ந்து கேட்க வேண்டும். ஒரு நாள் பொதியமலையின் அருகேயுள்ள ஒரு சோலையில் ஆழ்ந்த சிந்தனையோடு நான் அமர்ந்திருந்தேன். அவ்வேளையில் அங்கு ஓர் முனிவர் வந்தார். இவர் யாரோ பெரியவர் என்றெண்ணி அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கினேன். அவர் என்னை வாழ்த்தி ஆசி கூறினார். அதன்பின் என் உள்ளத்திலே விடைகிடைக்காமல் இருந்த ஒரு வினாவுக்கு அவரிடம் விடை தேடினேன்.  

"வேதமுனிவரே! மேதினியில் நான் கீழ்ப்பறவை சாதியிலே பிறந்தேன். ஆனால், மற்ற குயில்களைப் போலன்றி என் மனம் மானுடரைப் போல் எண்ணுகிறது, அவர்கள் பேசும் மொழி எனக்குப் புரிகிறது. இதன் காரணம் என்ன? இதன் உண்மையை எனக்கு விளக்கியருள வேண்டும்" என்று வணங்கிக் கேட்டேன்.

 அப் பெருமுனிவர் பேசினார். "குயிலே! கேள்! சேரவள நாட்டின் தென்புறத்தே ஒரு மலை உள்ளது. அம்மலையில் வாழும் வேடர்களுக்கு வீரமுருகன் என்பவன் முன்பு தலைவனாக இருந்தான். முற்பிறப்பில் அந்த வீரமுருகனின் மகளாக நீ பிறந்திருந்தாய். அப்போது உன்னைச் "சின்னக்குயிலி" என்ற பெயரால் அழைப்பர். உன்னுடைய அழகு, ஒளிவீசும் முகம் இவற்றுக்கு இணையாக தமிழ்நாட்டில் எவருமே இல்லை. அப்போது, உன்னுடைய மாமன் மகன் மாடன் என்பவன் இருந்தான். நினது பேரழகைக் கண்டு அவன் உன்னை மணக்க விரும்பி உன் நினைவாகவே சித்தம் வருந்தி நின்றான்.

தேன்மொழியே! அவனுடைய பெருந்துன்பத்தைக் காணச் சகிக்காமல் அவனை மாலையிட நீ வாக்களித்தாய். இந்நிலையில் உன்னுடைய பேரழகின் பெரும் கீர்த்தி தேசமெல்லாம் பரவியது. தென்மலையின் வேடர் தலைவன் மொட்டைப்புலியனின் மகனான நெட்டைக்குரங்கனுக்கு, உன்னை மணமுடிக்க நிச்சயித்தான் அந்த மொட்டைப்புலியன். அவன் உன் அப்பனை அணுகி "உன் தையலை என் தனயனுக்குக் கண்ணாலஞ் செய்யும் கருத்துடையேன்" என்றான்.

முருகனும் அதற்கு உடன்பட்டான். பனிரெண்டு நாட்களிலே பாவை உன்னை மணம்புரிய அவர்கள் உறுதி பண்ணிவிட்டார்கள். செய்தி கேட்டு மாடன் மனம் பதைத்தான். அவன் உன்னிடம் வந்து தன்னை மணந்துகொள்ளும்படி வற்புறுத்தினான். அவன்பால் கருணை உள்ளம் கொண்டு நீ அவனிடம் சொன்னாய், "மாடா! உன்னுடைய சினத்தை நீ தவிர்ப்பாயாக. நெட்டைக் குரங்கனுக்கு நான் பெண்டாட்டியாக நேர்ந்தாலும் மூன்று மாதங்களுக்குள் ஏதாவது மர்மம் செய்து வேற்றுமையை விளைவித்து, இங்கே நான் வந்தடைவேன். தாலியை மீண்டும் அவர்களிடமே கொடுத்து விடுவேன். நான்கு மாதத்தில் நாயகனாக உன்னை நான் மணம் புரிவேன். என் பேச்சு தவறமாட்டேன். மாடா! என்னை நம்பு" என்று இரக்கத்தினால் உரைத்தாய்.  

நாட்கள் சென்றன. ஒரு நாள் மாலை, மின்னற்கொடிகள் ஒன்றோடொன்று ஓடி ஒளிந்து விளையாடுவதைப் போன்று நீயும் உன் தோழியரும் காட்டிலே விளையாடிக் கொண்டிருந்தீர்கள். அப்போது சேரமன்னனின் மகன் வேட்டையாட காட்டிற்கு வந்தவன், நீங்கள் இருக்குமிடம் வந்தான். உன்னைக் கண்ட அந்த அரசகுமாரன் உன் மீது மாளாக் காதல் கொண்டான். நீயும் அவனைக் கண்டாய், அவன்மீது ஆறாக் காதல் கொண்டாய், இருவரும் ஆவி ஒன்றென தழுவி நின்றீர்.

அவ்வேளையில் ஊரிலிருந்து நெட்டைக் குரங்கன் வந்து சேர்ந்தான். தனக்கு உறுதி செய்த வேடர் குலப் பெண், காட்டிற்கு விளையாடச் சென்றிருப்பதறிந்து நின்னைக் காண ஆத்திரத்தோடு ஓடிவந்தான். அங்கு சேர இளவரசனும் நீயும் நெருக்கமாக இருப்பதைக் கண்டான். அவன் உள்ளம் கோபத்தால் தீப்பற்றி எரிந்தது.

நெட்டைக்குரங்கன் வந்த செய்தியை யாரோ அதற்குள் மாடனுக்குத் தெரிவித்தார்கள். அவனும் சின்னக் குயிலியைத் தேடிக்கொண்டு காட்டிற்கு ஓடிவந்தான். கண்களில் கனல் தெறிக்க ஐம்புலன்களும் கலங்க மாடன், குயிலி அயலான் ஒருவனுடன் இருப்பதைக் காண்கிறான். அவளுடன் இருப்பது சேர இளவரசன் என்பது அவன் கண்களுக்குத் தெரியவில்லை. தனக்குப் பின்னே வந்து நின்று தணலாய்க் கொதிக்கும் மாடனை அங்கு வந்த நெட்டைக்குரங்கனும் காணவில்லை. குயிலியோடு நிற்பவன் நெட்டைக்குரங்கன் என்று மாடன் நினைத்தான். குரங்கனோ இவள் காட்டில் எவனிடமோ காதல் அமுதம் அருந்துகிறாள் என்று நினைத்தான். இருவரும் தத்தம் உடைவாளை உருவிக்கொண்டு முன்னே பாய்ந்தனர்.

குயிலியுடன் நெருக்கமாக இருந்த இளவரசன் மீது அவ்விருவரும் வீசிய வாட்கள் பாய்ந்தன. சடாரென திரும்பினான் இளவரசன்.  தன் உடைவாளை எடுத்து ஒரே வீச்சில் மாடனையும் குரங்கனையும் மண்ணிலே சாய்த்தான்.  தானும் தாக்கப்பட்டதால், அடுத்த கணமே அவனும் அடியற்ற மரம்போல் சாய்ந்தான். குருதி கொப்புளிக்க விழுந்து கிடந்த இளவரசன் உடலைத் தன் மடிமீது வைத்து சின்னக்குயிலி கதறி கண்ணீர் வடித்தாள்.

இளவரசன் "வஞ்சியே, நீ அஞ்சாதே. பிறப்பும் இறப்பும் இவ்வையகத்தில் புதுமையன்று. சாவிலே துன்பம் ஒன்றும் இல்லை. நாம் இருவரும் மீண்டும் இம்மண்ணில் பிறப்போம். அப்போது உன்னை மீண்டும் கண்டு நான் அன்பு கொள்வேன். அதன் பின் உடலும் உயிரும் ஒன்றென நாம் இல்லறம் காண்போம்" என்று புன்னகை பூக்கச் சொல்லித் தன் ஆவி நீங்கினான்.

“இப்பிறப்பில் நீ குயிலாய் காட்சி கொடுக்கின்றாய்" என்று அந்த முனிவர் எனது வரலாற்றைக் கூறி முடித்தார். முனிவர் சொன்ன செய்தி கேட்டு என் உள்ளம் நடுங்கியது. மேலும் நடக்கவிருப்பதை அறிய, நான் ஆவல் கொண்டேன். அந்த முனிவர் மேலும் பேசினார். "உன்னுடைய மன்னவன் இப்பிறப்பில் தொண்டை வளநாட்டில் கடற்கரைப் பட்டினம் ஒன்றில் பிறந்து வளர்கிறான். உன்னை ஒருநாள் சோலையினிடத்தே காண்பான். உள்ளம் உருக நீ பாடும் காதல் பாட்டினைக் கேட்பான். ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் காரணத்தால் அவன் உன்மேல் மீண்டும் காதல் கொள்வான்" என்றார்.

அது கேட்டு நான் வியப்படைந்தேன். "ஐயனே! இப்பிறப்பில் நானோ குயில் உருவம் கொண்டுள்ளேன். என் கோமானோ பெறுதற்கரிய மானுடப் பிறவியைப் பெற்றுள்ளார். எங்கள் இருவருக்கும் நெஞ்சம் ஊடுருவிக் காதல் மலர்ந்தாலும், எங்ஙனம் எங்கள் திருமணம் நடக்கும்?" என்றேன்.

"பேதாய்! இப்பிறவியிலும் நீ விந்தியமலைச் சாரலில் உள்ள ஒரு வேடனுக்குக் கன்னியாகப் பிறந்தாய். தீவினைப் பயனாய் மாடன், குரங்கன் இருவருமே இந்தக் காட்டில்  கொடும்பேய்களாக அலைகின்றனர். அவ்வாறு அவர்கள் காடு, மலை, மேடு, பள்ளமெல்லாம் சுற்றி அலைந்து திரிந்துவரும் வேளையிலே, உன்னைக் கண்டு விட்டனர். இப்பிறப்பிலும் நீ மன்னனையே மணப்பாய் என்றெண்ணி உன்னைச் சின்னக் குயிலாக்கி, நீ செல்லும் திசையெல்லாம் நின்னுடனே சுற்றி, சூழ்ச்சி பல செய்து வருகின்றனர். நீ இதனை அறிகிலையோ?" என்றார் முனிவர்.

 "ஐயோ! பேய்கள் என்னைப் பேதப்படுத்தி, பிறப்பையும் மறக்கச் செய்து வாதைப்படுத்தி வருமாகில், யான் மீண்டும் என் மன்னவனைக் கண்டால் என் செய்வேன்? இப்பேய்கள் அவருக்குத் தீங்கிழைத்தால் நான் எங்ஙனம் தடுப்பேன்? தேவரே! இதற்கு ஓர் மாற்று இல்லையா?" என்று மனம் மறுகி நான் கேட்டேன்.

மாமுனிவரும், "பெண்ணே! வேந்தன் மகன் உன்னைக் கண்டு நேசம் காட்டி நிற்கையில், இப்பேய் இரண்டும் மாயம் பல செய்யும். அவனும் அதன் பயனாய் உன்பால் ஐயம் கொள்வான். சினம் கொண்டு, கன்னி உன்னை விட்டுவிட உறுதி கொள்வான். இதற்கப்பால் நேருவதை யெல்லாம் நீயே அறிந்துகொள்வாய், எனக்கு சந்தியாவந்தனம் செய்கின்ற நேரம் வந்துவிட்டது" என்று சொல்லி அவரும் சடுதியில் மறைந்து போனார்.

இதுவே என்னுடைய பழம்பிறப்பின் கதை. இப்பிறப்பின் பின்னைப் பகுதியிலே நடந்தவற்றைப் பார்த்திபனே, நீர் முற்றிலும் அறிவீர்! " ............... ஆரியரே! காத லருள்புரிவீர் காதலில்லை என்றிடிலோ சாத லருளித் தமது கையால் கொன்றிடுவீர்!" என்று அருவிபோல்  கண்ணீர் சிந்தி பூங்குயில் உண்மையை ஒளிக்காமல் சொல்லியது. கொலைகாரனின் நெஞ்சையும் தன்னோடு அள்ளிச் செல்லும் அன்பிற் பெரிய அச்சிறு கருங்குயில் தன் துன்பக் கதையை முடித்தது.

 பாவலனின் உள்ளம் அது கேட்டுப் பாகாய் - அனலில் இட்ட அரக்காய் உருகியது. அவ்வேளையிலே வியன் உலகும் விரி நீலவானும், உயிர்க்குலம் அனைத்தின் கண்ணும் மனமும் களிகூரத் தன் காவலனின் செந்தாமரைக் கரங்களிலே பைங்குயில் பாய்ந்து விழுந்தது. இன்பவெறி கொண்டு தன் இணைக்கரத்தால் அதனை அவர் ஏந்தி, இருவிழியால் நோக்கினார். ஆராத அன்போடு அதனை முத்தமிட்டார்.

என்ன விந்தை! அடுத்த கணம் இன்பக் குயிலைக் காணவில்லை, அற்புதக் காட்சிபோல் அங்கு - அவ்விடத்தில் கோலமெல்லாம் குன்றெனத் திரண்ட பெண் ஒருத்தி நின்றாள். அவள் அழகு பேசும் திறமன்று என்று சொல்லி அந்தக் கன்னியை முத்தமிட்டார். அந்த மோனப் பெரு மயக்கத்தில் சித்தம் மயங்கினார். தன்னையும் மறந்து கிடந்தார். 

பின்னர் சட்டென கண்விழித்துப் பார்த்தார். அப்படிப் பார்க்கையிலே, அவரைச் சுற்றிச்  சிதறிக் கிடக்கும் பண்டைய ஓலைச் சுவடி, எழுதுகோல் பத்திரிகைக் கூட்டம், பழம்பாய் - வரிசையெல்லாம் அப்படியப்படியே இருக்க, நாம் வீட்டில் உள்ளோம் என உணர்ந்தார்.

இதுவே வண்ணக் குயிலின் காதல் கதை. இதனை வெறும் கதையாக எடுத்துக் கொள்ளாதீர்கள். மகாகவி இந்தக் 'குயில்பாட்டின்' மூலம் அரிய வேதாந்தக் கருத்துக்களை சொல்ல விரும்புகிறார். அது என்ன? என்பதை அனுபவத்தால், அறிவின் தேடலால் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டும்.

கவிஞர் நமக்கு விடுக்கும் அறைகூவல் இதோ:  "ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே யானாலும் வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறிரோ?"  கவிஞர்  பாடிய பாடல்களுள் உணர்ச்சிச் செல்வமும் கற்பனை மெருகும் இழைந்து விளங்கும் சிறு காவியம் 'குயில்பாட்டு'. அதைப் பாடி முடிந்தபின் அதனுள் ஆழ்ந்த பொருள் வேறு இருப்பதாக அவரே உணர்ந்தார். 

அவர் என்ன வேதாந்தக் கருத்தை இக்கதை மூலம் அறிந்தார் என்பதை, இக்கதையைக் கேட்கும் ஒவ்வொருவரும் கற்பனை செய்து பாருங்கள். விடை கிடைத்தால் சொல்லுங்கள். கவிஞர் புரிந்து கொண்ட கருத்தும் அதுதானா என்பதை ஒப்பிட்டுப் பார்த்து விடலாம். நன்றி.



No comments: