பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, May 9, 2020

கண்ணன் பாட்டு - பகுதி 3


                                              (கண்ணன் பாட்டு - பகுதி 3)
6. கண்ணன் - என் சீடன்.

             யார் இந்த மாயக் கண்ணன்? நானாகவும், என்னுள்ளேயும் இருக்கிறான், என்னிலிருந்து மாறாய் பிறனாகவும் இருக்கிறான், நானும் பிற பொருளுமாய் இரண்டரக் கலந்துமிருக்கிறான், இவ்விரண்டிலும் வேறு வேறாயும் இருக்கிறான், இவன் என்ன மாயம் செய்கிறான்?

 "ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க" என்று மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் கூறியபடி இவன் மூல வஸ்துவாயிருக்கிற பொழுது ஒன்றாகவும், அதிலிருந்து அந்நியப்பட்டு நிற்கும் இரண்டாவது வஸ்து எதுவுமில்லை எனவும், ஆனால் இந்தப் பிரபஞ்சமாக அவன் நீக்கமற நிறைந்திருக்கும் போது எண்ணற்ற பலகோடி பொருள்களாகவும், உயிர்களாகவும் காட்சியளிக்கிறான்.

தங்கக் கட்டி ஒன்றுதான் எனினும், அதிலிருந்து செய்யப்பட்ட ஆபரணங்கள் பல ரூபங்களாகும். இப்படிக் காட்சியளிக்கும் கண்ணன் சில நேரங்களில் என்னைக் காட்டிலும் அறிவிற் குறைந்தவன் போலவும், என்னோடு சேர்ந்து பழகி, நான் கூறும் அறிவுரைகளைக் கேட்டு அவன் மேம்பாடு எய்துவான் போலவும், நான் பாடுகின்ற கவிதைகளும், அறிவும் பெருமை பெற்றது போலவும், இந்தக் கள்வன் கண்ணன் என்னிடம் சீடனாக வந்து சேர்ந்தான். அட தெய்வமே! அவன் அப்படிச் செய்த சூழ்ச்சி வலையில் நான் விழுந்து அதனால் பட்ட தொல்லைகள் அது ஒரு பெரிய பாரதக் கதை.

நானே என் மனத்தினை வெல்லமுடியவில்லை; நான் இந்த உலகத்தினை மாற்றிவிட முடியும், உலகத்தாரை இன்பத்தில் இருக்கச் செய்ய முடியும் என்று ஆணவம் கொண்டதற்காகத் தண்டிக்கக் கருதியோ என்னவோ இந்த மாயக் கண்ணன் வலிய வந்து என்னிடம் சீடனாகச் சேர்ந்து கொண்டான். என்னை ஒரேயடியாகப் புகழ்ந்து தள்ளியும், என்னுடைய புலமையை வியந்து பாராட்டியும் பல வழிகளில் அவன் மீது அன்பு கொள்ளச் செய்தான். வெறும் வாயை மெல்லும் கிழவிக்கு ஒரு பிடி அவல் கிடைத்தாற்போல்தான். நானும் அவன் முகஸ்துதிக்குக் கட்டுண்டு இவனை எப்படியும் நல்ல பண்புகள் உள்ளவனாக உயர்த்திவிடுவது என்ற ஊக்கத்தோடு அவனுக்குப் பல உபதேசங்கள் செய்யத் தொடங்கினேன்.

"இதோ பாரடா கண்ணா! நீ இதை இதையெல்லாம் செய்யக்கூடாது, இன்னாரோடெல்லாம் பழகக்கூடாது, இப்படியிப்படி யெல்லாம் பேசக்கூடாது, இவற்றையெல்லாம் விரும்பக்கூடாது, இவற்றையெல்லாம் படிக்கக்கூடாது, இன்ன நூல்களைத்தான் நீ கற்க வேண்டும், இன்னாரோடு மட்டும் நட்பு கொள்ள வேண்டும், நான் சொல்லுவனவற்றை மட்டும் விரும்ப வேண்டும்" என்று பல தருமங்களைச் சொல்லிச் சொல்லி அவனோடு உயிரை விடலானேன்.

நாம் கதைகளில் படிக்கிறோமல்லவா? கணவன் எதையெல்லாம் சொல்லுகிறானோ அதற்கு நேர் மாறாகச் செயல்புரியும் மனைவி பற்றி, அதனைப் போல் இவனும் நான் சொல்லுவதற் கெல்லாம் நேர் எதிராகவே எல்லாவற்றையும் செய்யலானான். ஊரிலுள்ள மற்றவர்கள் என்னைப் பாராட்ட வேண்டும், புகழ வேண்டும் என்பதற்காக வாழ்ந்த எனக்கு, நான் சொன்னதற்கு மாறாக அவன் நடக்கும் விநோதத்தையும், ஊரார் வெறுக்கும் அத்தனை ஒழுக்கக்கேட்டையும் தலைமேல் ஏற்றுக்கொண்டு பழிச்சொல்லுக்கு ஆளாகி, எல்லோரும் இகழும்படியாக என் மனம் வருந்தும்படி நடந்துகொள்வதையும் கண்டேன்.

கண்ணனோ நாளாக நாளாக தனது கெட்ட நடத்தையால் எல்லை மீறிப்போய், வீதியில் பெரியோர்களும், மூத்தோர்களும் இவனைக் கண்டு கிறுக்கன் என்று இகழ்ந்து பேசும் நிலைக்கு வந்து விட்டான். எனக்கு ஏற்பட்ட வருத்தத்துக்கு அளவே கிடையாது. முத்தான இளைஞனாக உருவாக்க நினைத்த எனக்கு இவன் இப்படிப் பித்தன் என ஊராரிடம் பெயர் வாங்கிக்கொண்டு அவர்கள் பேசிய பேச்சுக்களையெல்லாம் கேட்டுக்கொள்வது என் நெஞ்சை அறுத்தது.

அவனைக் கூப்பிட்டு சாத்திரங்களை போதித்து அவனை எப்படியும் மாற்றிவிடுவது என்று அவனைத் துளைத்தெடுத்தேன். அவன் தேவனாக ஆகாவிட்டாலும், மானுட நிலைக்காவது அவனைத் தேற்றிட வேண்டுமென்று நினைத்து, கோபம் கொண்டு கொதித்துப் போய் திட்டியும், சில நேரம் சிரித்துக்கொண்டு நயமாகச் சொல்லியும், சள்ளென்று சில நேரம் எரிந்து விழுந்தும், கேலிகள் பேசி மாற்ற முயன்றும், இன்னும் எத்தனையோ வழிகளில் அவனை என் வழிக்குக் கொண்டு வர முயன்றேன்.

அவனா கேட்கிறவன்? பித்தனாக ஆகி, காட்டானாக மாறி, எந்த வேலையிலும் கவனமில்லாதவனாகி, எந்த பயனிலும் கருத்தில்லாதவனாகி, குரங்கு போல, கரடியைப் போல, கொம்புகள் உடைய பிசாசு போல, ஏதோவொரு பொருளாக எப்படியோ நின்றான் அவன். அதனால், அகந்தையும், மமதையும் ஆயிரம் புண்ணாகி கடுமையான கோபத்துக்கு நான் ஆளாகி எப்படியாவது இந்த கண்ணனை நேராக ஆக்கிக் காட்டுவது என்று என் மனதிற்குள் தாபம் கொண்டு, இவனை எப்படியாவது ஒரு தொழிலில் ஓரிடத்தில் தக்கச் செய்வதென்று எண்ணி, அதற்குச் சமயம் பார்த்துக் காத்திருந்தேன்.

ஒருநாள் கண்ணன் தனியாக என் வீட்டில் இருந்த சமயம் அவனை அழைத்து, "மகனே! என்மீது அளவற்ற பாசமும் நேசமும் நீ வைத்திருப்பது உண்மை என்று நான் நம்பி உன்னிடம் ஒன்று கேட்பேன், நீ அதனை செய்திடல் வேண்டும். நாம் யாரிடம் சேர்கிறோமோ அவர்களைப் போலவே நாமும் ஆகிவிடுகிறோம் அல்லவா? சாத்திரங்கள்பால் நாட்டமும், தர்க்க சாத்திர ஞானமும், கவிதைகளில் உண்மைப் பொருளை ஆய்வு செய்வதில் ஆர்வமும் கொண்டோர் மத்தியில், பொருள் சம்பாதிக்க அலையும் நேரம் போக, மற்ற நேரங்களில் இருக்க முடியுமானால் நன்மை விளைந்திடும்.

பொழுதெல்லாம் என்னோடு இருக்க விரும்பும் அறிவுடைய மகன் உன்னைத்தவிர வேறு யார் இருக்கிறார்கள்? ஆகையால், எனது உதவிக்காக எனக்குத் துணையாக நீ என்னுடன் சில நாட்கள் இரு. முடியாது என்று சொல்லி என் மனம் துயரமடையச் செய்யாமல், நான் சொல்லுவதற்கு சம்மதிக்க வேண்டும்" என்று சொன்னேன். அதற்குக் கண்ணனும் "ஆகா! அப்படியே செய்கிறேன், ஆனால் உங்களோடு வேலை எதுவும் செய்யாமல் சோம்பேறியாக எப்படி இருப்பது? ஏதாவது வேலை கொடுங்கள் செய்துகொண்டு உங்களுடன் இருக்கிறேன்" என்றான்.

இவனுடைய இயல்பையும், சாமர்த்தியத்தையும் கருதி, "சரி! நான் எழுதுகின்ற கவிதைகளையெல்லாம் நல்ல காகிதத்தில் பிரதி எடுத்துக் கொடுக்கும் வேலையைச் செய்!" என்றேன். "நல்லது அப்படியே செய்கிறேன்" என்று சொல்லிவிட்டு ஒரு நாழிகைப் போது அங்கிருந்தான். "சரி, நான் போகிறேன்" என்று சொல்லிவிட்டுக் கிளம்ப நினைத்தான். எனக்கு கோபம் வந்தது, நான் எழுதிய பழங்கதை யொன்றை அவன் கையில் கொடுத்து, "இதை நன்கு பிரதி எடுத்துக் கொடு" என்றேன். அந்த வேலையைச் செய்பவன் போல கையில் வாங்கிக் கொண்டு கணப்பொழுது அங்கு இருந்தான். பின்னர் "நான் போகிறேன்" என்று எழுந்தான். எனக்கு கோபமான கோபம் வந்தது. "என்னடா சொன்னதற்கு மாறாக இப்போது போகிறேன் என்கிறாய்? உன்னைப் பித்தன் என்று ஊரார் சொல்லுவது பிழையில்லை போலிருக்கிறது" என்றேன். அதற்கு "இந்த வேலையை நாளை வந்து செய்கிறேன்" என்றான். "இந்த வேலையை இங்கே இப்பொழுதே எடுத்துச் செய்கிறாயா, இல்லையா? பதில் சொல்" என்று உறுமினேன். கண்ணிமைக்கும் நேரத்தில் "முடியாது" என்று சொல்லவும், சினத்தீ என் உள்ளத்தில் வெள்ளமாய்ப் பாய, கண்கள் சிவக்க, இதழ்கள் துடிக்க கோபத்தோடு நான் "சீச்சீ...பேயே, கொஞ்ச நேரம் கூட என் முகத்திற்கு எதிரே நிற்காதே! இனி எந்தக் காலத்திலும் நீ என்னிடத்தில் வர வேண்டாம். போ, போ, போ" என்று இடிபோல முழங்கிச் சொன்னேன்.

கண்ணனும் எழுந்து போகத் தொடங்கினான். என் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வர, "மகனே, போய்வா! நீ வாழ்க! உன்னைத் தேவர்கள் காக்கட்டும். உன்னை நல்லவனாக ஆக்க நினைத்து என்னென்னவோ செய்தேன். தோற்றுப்போய் விட்டேனடா, தோற்றுப்போய் விட்டேன். என் திட்டங்களெல்லாம் அழிந்தன. மறுபடியும் இங்கு வராதே! போய் வா, நீ வாழ்க!" என்று வருத்தம் நீங்கி அமைதியாகச் சொன்னேன். கண்ணன் போய்விட்டான்.

திரும்பவும் ஓர் கணத்தில் எங்கிருந்தோ ஒரு நல்ல எழுதுகோல் கொண்டுவந்தான், நான் கொடுத்த பகுதியை மிக அழகாகப் பிரதியெடுத்தான். "ஐயனே! நீ காட்டிய வழிகள் அனைத்தையும் ஏற்று நடப்பேன். சொல்லும் அனைத்துக் காரியங்களையும் ஒழுங்காகச் செய்வேன். தங்களுக்கு இனி என்னால் எந்தத் துன்பமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வேன்" என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு ஓடி மறைந்தான்.

கண்களிலிருந்து மறைந்த கண்ணன் மீண்டும் என் நெஞ்சத்தில் தோன்றி பேசத் தொடங்கினான். "மகனே! ஒன்றை உருவாக்குதல், மாற்றுதல், அழித்திடுதல் இவையெல்லாம் உன்னுடைய செயல் இல்லை. இதனைத் தெரிந்துகொள். தோற்றுவிட்டேன் என்று நீ சொன்ன அந்தக் கணத்திலேயே நீ வென்றுவிட்டாய். உலகத்தில் எந்தத் தொழிலைச் செய்கிறாயோ அதில் பற்றோ, பாசமோ வைக்காமல் நிஷ்காம்யமாகச் செயல்புரிந்து நீ வாழ்க! என்றான். வாழ்க கண்ணன்!

                                 (கண்ணன் பாட்டு தொடரும்)

No comments: