பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, January 19, 2012

ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆராதனை

சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு சங்கீத ஆராதனை

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த மகான்கள் ஏராளம். அப்படிப்பட்ட மகான்களில் இசையாலும், பக்தியாலும் சதாசர்வ காலமும் இராமனை வழிபட்டு முக்தியடைந்த ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 165ஆவது ஆராதனை விழா திருவையாற்றில் ஜனவரி 13ஆம் தேதி நடைபெற்றது. 

சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை என்பது ஓர் புனிதமான விழா. பக்தியோடும், சிரத்தையோடும் செய்யப்பட வேண்டிய இசை ஆராதனை. காரணம் அவர் இசையை மட்டும் முன்னிலைப் படுத்திய இசை வல்லுனராக மட்டும் இல்லாமல் அவர் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழும் பக்தியை முன்னிலைப் படுத்தி, அந்த பக்தி பரவசத்தைத் தன் சங்கீத ஞானத்தால் அற்புதமான கீர்த்தனைகளைப் பாடி தன் இஷ்ட தெய்வமான ஸ்ரீ இராமபிரானை வழிபட்ட மகான். இவருக்கு அவர் வாழ்ந்த திருவையாற்றின் பனி பொழிந்து குளிர்ந்திருக்கும் காவிரிக் கரையில் அவர் பூதவுடல் சமாதியடைந்த அதே இடத்தில், அவர் இசைத்த அற்புதமான இனிய பாடல்களைப் பாடி ஆராதனை செய்வதென்பது இசை வல்லுனர்கள் செய்யும் ஸ்ரத்தாஞ்சலியாகக் கருதப்படுகிறது.

திருவையாறு என்றதும் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளும் அவரது இசையும் நினைவு வரும். இந்த திருவையாறு எனும் பெயரால் எங்கு எப்போது இசை விழாக்களோ அல்லது ஆராதனைகளோ நடந்தாலும்கூட அசல் திருவையாற்றில் நடைபெறும் இந்த தெய்வீக சூழ்நிலைக்கு நிகராக ஆகமுடியாது. ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு முன்பும் சரி, பின்னரும் சரி ஏராளமான வாக்யேயக்காரர்கள், இசை வல்லுனர்கள், மேதைகள் இருந்திருக்கிறார்கள்; வரலாறு படைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். பக்தியிலோ, சங்கீத ஞானத்திலோ, அற்புதமான குரல் வளத்தால் மக்களை இசையில் ஆழ்த்துவதிலோ எந்த குறையுமில்லாத அந்தப் பலரில் ஸ்ரீ தியாகராஜர் மட்டும் மிக உயர்ந்து காணப்படுவதோடு, அவர் நினைவு தினத்தில் ஆராதனை செய்து வழிபடுமளவுக்கு உயர்ந்திருப்பது ஏன் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளல் வேண்டும். 

திருவையாற்று ஆராதனையில் மேலோங்கியிருப்பது பக்தி. ஸ்ரீ தியாகராஜரின் பக்தி உணர்வினாலும், அவர் பல மேதைகளின் அனுக்கிரகத்தோடு கற்றுக்கொண்ட இசை நுட்பங்களினாலும் ராமனை தனது பக்திரசம் சொட்டும் இசையினால் அபிஷேகம் செய்தார். இனிய இசையெனும் தேனாபிஷேகம். அதனை ஸ்ரீ ராமபிரான் ஏற்றுக் கொண்டதால்தான் இன்று அவருக்கு மட்டும் இத்தனை பெரிய விழாவும், ஆராதனையும் நடைபெற்று வருகிறது. எப்போதோ, நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் இதுபோன்ற மகான்களின் பெருமையைப் போற்றி வழிபடாவிட்டால் இறைவன் வேறொரு மகானை நமக்கு அளிப்பது என்பது துர்லபம்.

அவருடைய ஆராதனை விழாவில் கலந்து கொள்ளும் இசை விற்பன்னர்களும், மேதைகளும் இந்த புண்ணிய பூமியில் கால் வைத்து நடக்கும் ஒவ்வொரு கணமும், இந்த பூமியில் தான் அந்த மகான் நடந்திருக்கிறார் , இங்குதான் காற்றில் அவரது கானம் கலந்திருந்தது என்ற உணர்வில் இருத்தல் வேண்டும். அவர் பக்தியை, இசையைப் போற்றி ஸ்ரீ ராமபிரான் காட்சியளித்ததும் இங்குள்ள அவரது இல்லத்தில்தான் என்பதை அதே பக்தி உணர்வோடு வணங்கி அந்தப் புனிதரின் கால்கள் நடந்த மண்ணில் அவரைப் போலவே உஞ்சிவிருத்தி செய்து ஆராதனை செய்து வழிபட வேண்டும். அவர் நினைவு மனங்களில் கோலோச்சும் நேரத்தில் தத்தமது வித்வத், மேதைமை, ஆற்றல் இவைகளை அந்த மகானுக்கு என்று அர்ப்பணிக்கும் உணர்வைக் கொண்டிருக்க வேண்டும்.

எத்தனையோ மன்னர்களின் சபைகளில் அந்தக் காலத்தில் இசைக் கச்சேரிகள் நடந்திருக்கும். அங்கெல்லாம் மன்னரின் பெருமையும், இசைக் கலைஞரின் ஆற்றலும்தான் வெளிப்பட்டிருக்கும். ஆனால் திருவையாற்று ஆராதனையில் ஸ்ரீ தியாகராஜரின் அர்ப்பணிப்பும், பக்தியும், அவரது இசையும்தான் எங்கும் பரவியிருக்கும். அவரது கீர்த்தனைகளின் சிறப்பு அவர் எந்தெந்த உணர்வில் அந்தக் கீர்த்தனைகளைப் பாடினாரோ, அந்த ரஸம், நவரஸங்களில் அமைந்த அந்தச் சூழ்நிலை மட்டுமே வெளிப்படும். அவர் வாழ்ந்த மானசீகமான வாழ்க்கை நம்மைப் போன்றவர்கள் வாழும் புற வாழ்க்கையைப் போன்றதல்ல. அங்கு அவருடைய ராமன், சீதை, அனுமன் ஆகியோரும், அவர்கள் கருணைக்காக ஏங்கி, மனம் உருகிப் பாடும் இவரது இசை மட்டும்தான் இருக்கும். அப்படிப்பட்ட மகான் வாழ்ந்த இடத்தில் அவருக்கு அஞ்சலி, ஆராதனை என்பது நாட்டில் பல பகுதிகளிலும் வாழ்பவர்களுக்கு ஓர் புனிதப் பயணமாக இருக்க வேண்டும். அவருடைய புனித இசை வாழ்க்கைக்கு நாம் செய்யும் அஞ்சலி மட்டுமே நோக்கமாக இருக்க வேண்டும்.

கர்நாடக சங்கீதத்துக்கு மும்மூர்த்திகள் என்று ஸ்ரீ தியாகராஜர், முத்துசாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோரைச் சொல்லுகிறோம். இவர்கள் மூவரின் சங்கீதத்திற்கு பக்தி மட்டுமே மூலதனமாக இருந்திருக்கிறது. ஸ்ரீ தியாகராஜர் தவிர மற்ற இருவருக்கும் தமிழ்தான் தாய்மொழியாக இருந்திருக்கிறது. அவர்கள் இருமொழிப் புலமை பெற்றவர்கள். தாய்மொழியாம் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் புலமை அடைவது என்பது அவர்கள் காலத்தில் பெரும்பாலும் இருந்து வந்த நிலைமை. ஆகவே தமிழைப் போலவே சம்ஸ்கிருத மொழியிலும் வல்லமை படைத்திருந்ததால் அவ்விருவரும் பெரும்பாலும் அந்த மொழியிலேயே பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் தாய்மொழி தெலுங்கு. அவருக்கு தமிழ் தெரியும். சம்ஸ்கிருதமும் நன்கு பழக்கமிருக்கலாம். எனினும் அவர் உள்ளத்தில் அரும்பி, போதாகி, மலர்ந்து மனத்தை உருக்கிய பக்தி எனும் உணர்வு இசையாக வெளிப்பட்ட பொது அது அவரது தாய்மொழியில் இயல்பாக வந்திருக்கிறது. பொதிகை மலையில் உருவாகும் தென்றல் காற்று, நீர்நிலைகளையும் மலர்வனங்களையும் வருடிக்கொண்டு வந்து நம் மீது படும்போது அந்தக் குளிர்ச்சியும், மலர்களின் மணமும் வீசுவது போல், ஸ்ரீ தியாகராஜரின் பக்தியில் உருவாகி அவர் தாய்மொழியில் வெளிவந்த அவருடைய சங்கீதத்தின் உயர்வு, பெருமை அளவிடர்கரியதாக விளங்குகிறது.

மகாகவி பாரதியார் குயில் பாட்டில் கூறுவது போல், காட்டிலுள்ள விலங்குகளும், பாம்புகளும்கூட இசையை ரசிக்குமாம். அப்படியிருக்கும் போது ஆறறிவு படைத்த மனிதர்கள் இசையை ரசிப்பதில் வியப்பு என்ன இருக்கிறது. உலகத்தில் சங்கீதத்தை ரசிக்காத மனமும் உண்டா என்ன? ஆனால் அவர்களின் ரசிப்புத் தன்மை நாம் கொடுக்கும் இசைக்கேற்ப அமைகிறது. நல்ல பண்பட்ட மனங்களை உருவாக்க வேண்டுமானால் நல்ல பக்தி ரஸம் ததும்பும் சாஸ்திரியமான இசையை அவர்களுக்கு இளமையிலேயே புகட்ட வேண்டும். மனங்களைப் பக்குவப் படுத்தும் பண்பு அந்த இசைக்கு உண்டு.

ஸ்ரீ தியாகராஜரைப் போலவே பக்தி எனும் உணர்வைப் பிழிந்தெடுத்து சங்கீத ஞானத்தால் பல கீர்த்தனங்களைப் பாடியவர்கள் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் தியாகராஜருக்கு முன்பும், பின்பும் இருந்திருக்கிறார்கள். ஆனால் உலகம் முழுவதும் இசைக்கு மூலமாக, குருநாதராக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பவர் ஸ்ரீ தியாகராஜர் மட்டுமே. இவர் கிருஹஸ்தராக இருந்தவர்தான். திருமணமாகி குழந்தை பெற்று வளர்த்துத் திருமணம் செய்து கொடுத்தவர்தான். ஆயினும் அவருடைய வாழ்க்கை முழுவதும் 'விட்டு விடுதலையாகி நின்று' இவ்வுலகின் பந்த பாசங்கள், ஆசைகள் இவற்றை அகற்றி ஒரு சந்நியாசியாகவே வாழ்ந்து இறுதியில் ஆபத் சந்நியாசம் வாங்கிக் கொண்டவர். சாதாரண மனிதர்களைப் போல தேவைகளை உண்டாக்கிக் கொண்டு, அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகத் தன்னிடம் நிரம்பி வழியும் இந்த சங்கீத ஞானத்தை விலை பேசாதவர். வலிய வந்த செல்வத்தையும், இவைகளெல்லாம் சால சுகமா, இராமா நின் சந்நிதி சேவை சுகமா என்று கேட்டு செல்வங்களை நிராகரித்தவர். இவரும் மற்றவர்களைப் போல நிதியே சாலச் சிறந்தது என்று இருந்திருந்தால், இன்றைய பெருமைகள் அவருக்கு வந்து சேர்ந்திருக்குமா?

இவருடைய கீர்த்தனைகள் அவ்வப்போது அவர் இருந்த மனநிலைமையை யொட்டி, அந்தந்த உணர்வுகளைப் பிரதிபலிக்கக்கூடிய ராகத்தில் அமைந்திருக்கின்றன. அவருடைய பாடலின் சொற்கள் அவருடைய உள்ளத்தின் ஆழத்தில் பொங்கியெழுந்த உணர்ச்சிப் பிரவாகத்தின் வெளிப்பாடாகவே இருந்திருக்கிறது. இதில் பண்டிதர்கள் இலக்கணைத்தையோ, மொழியின் தனித் தன்மைகளையோ எதிர்பார்க்கத் தேவையில்லை.

அவர் வாழ்ந்த காலத்தில் அவருக்கு நடந்த சில நிகழ்வுகள் அவரை மிகவும் பாதித்திருக்கின்றன என்பது அவருடைய சில பாடல்களிலிருந்து தெரிய வருகிறது. அதே நேரத்தில் அவர் உருவகமாகச் சொல்லிப் பாடிய சில கருத்துக்களை அவரது வாழ்க்கையின் பாதிப்பு என்று எண்ணி அவரது சரித்திரத்தில் அவற்றைப் புகுத்தத் தொடங்கிவிட்டார்கள். எது எப்படியாயினும் அவரது பாடல்களின் மூலம் வெளிப்படுவது துன்பமோ, துயரமோ, ஏமாற்றமோ இல்லை. அங்கு வியாபித்திருப்பது பக்தி ரஸம் மட்டுமே.

"எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!" என்று வாழ்க்கையில் சந்தித்த அனேக துன்பங்களுக்கிடையில் பாரதி இன்பங்களை மட்டுமே பார்த்து வியந்து பாடினான். ஸ்ரீ தியாகராஜரும் தனது சொந்த வாழ்வின் ஏற்ற இறக்கங்கள், பாதிப்புகள் இவற்றையெல்லாம் மறந்துவிட்டு தன்னுடைய ராமன் மட்டுமே தனக்கு எல்லாம் என்று ராமபக்தி சாம்ராஜ்யத்துள் மூழ்கிக் கிடந்தார். எல்லோரும் வாழும் இந்த புவி வாழ்வின் தளத்துக்கு மேலே ஏதோவொரு கற்பனை ராஜ்யத்தை உருவாக்கி அதில் ராம லக்ஷமண சிதா, அனுமன் இவர்களைப் பிரதிஷ்டை செய்து அவர்களை நோக்கிப் பாடிக் கொண்டிருந்திருக்கிறார். எத்தனை வேண்டுகோள். எத்தனை கழிவிரக்கம். அத்தனையையும் ராமன் கவனிக்காமலா இருந்திருக்க முடியும். ஆனால் இவர் மீண்டும் மீண்டும் அவனிடம் வைக்கும் வேண்டுகோளை நிறுத்தவேயில்லை.

ஐயாற்று ஆராதனைக்கு வரும் பக்தர்கள், இசைக் கலைஞர்கள் ஒரு புனிதமான ஆலயத்திற்குள் பக்தன் வருவதுபோல, தான் தனது என்கிற சொந்த பந்த நினைவுகளை பலிபீடத்தில் இட்டுவிட்டு, பக்திப் பரவசத்தோடு, இங்கு என் நாதனின் கொடிபறக்கும் பிரதேசம் என்ற உணர்வுடன் ஸ்ரீ தியாகராஜரின் இசைக்கடலில் சங்கமிக்க வேண்டும். அதுதான் சரியான உணர்வாக இருக்கும். இங்கு, தான் என்கிற உணர்வுக்கோ, தனது வித்வத்தின் மீதுள்ள பெருமைக்கோ இடமில்லை. அவை அத்தனையும் அந்த குருநாதரின் தாமரைப் பாதங்களுக்கு என்று அர்ப்பணித்திடல் வேண்டும்.

அவர் சந்நிதியில் அவருடைய கீர்த்தனைகளை, பஞ்சரத்னக் கீர்த்தனைகள் உட்பட அனைத்தையும் பாடும்போது இறைவனுக்கு அளித்திடும் நிவேதனமாக எண்ணிடல் வேண்டும். அந்த மகானுபாவருடைய சந்நிதியில் பெரியவர் சிறியவர் பேதங்கள் கிடையாது. இசையின் புனிதமும், இனிமையுமே அந்த குருநாதருக்கு நாம் தரும் புனித நெய்வேத்தியம். இதில் பிசிறுதட்டுதல் கூடாது.

அவருடைய சாஹித்தியங்களைப் பாடும்போது மொழிச் சிதைவு கூடாது. பாடும் ராகத்தின் பாவம் என்ன என்பதை உணர்ந்து அதற்கேற்ற மன நிலையோடு பாடுதல் அவசியம். பாரதி சங்கீத விஷயம் எனும் கட்டுரையில் கூறுவது போல 'ராஜபாட்டை இருக்கும்போது என்னை ஏன் சந்திலும் பொந்திலும் வரச்செய்கிறாய்?' எனப் பொருள் படும் பாட்டை (சக்கனி ராஜ மார்க்கமு) அந்த ராகத்திலேயே அதன் ரஸம் வெளிப்பட வேண்டுமென்று எழுதியிருப்பதைப் போல, அத்தனை ராகங்களிலும் அதனதன் ரஸம் வெளிப்படப் பாடவேண்டும்.

இது ஒரு புனித யாத்திரை ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை யாத்திரையைப் போல இசைக் கலைஞர்களுக்கும், இசை விரும்பிகளுக்கும், இது ஒரு புனித யாத்திரை. இந்த யாத்திரை அந்த மஹானின் பெருமைக்கு ஏற்ப சிறப்பாக விளங்கிட வேண்டும்.

இவருடைய பாடல்கள் பெரும்பாலும் ஸ்ரீ ராமபிரான் மீது இருந்தாலும் அவ்வப்போது பிற மூர்த்தங்களையும் பாடியிருக்கிறார். அவர் வாழ்ந்த திருவையாறு ஈசராம் பஞ்சநதீஸ்வரர் எனப்படும் ப்ரணதார்த்திஹரன் மீதும், அங்கு கோயில் கொண்டருளும் தர்மஸம்வர்த்தினி அம்மை மீதும் சில கிருதிகளைப் பாடி வைத்திருக்கிறார். ஸ்வாமி ப்ரணதார்த்திஹரன் மீது நான்கு பாடல்கள், அம்மை மீது எட்டு பாடல்கள் என்று இவருடைய திருவையாற்று கீர்த்தனங்கள் புகழ் பெற்றவை. தர்மஸம்வர்த்தினி என்றும் அறம்வளர்த்த நாயகி என்றும் வணங்கப்படும் திருவையாற்று அம்பிகை மீதான இவருடைய பாடல்களில் "அம்மையை தரிசிக்கும் காட்சி தேவர்களுக்கும் கிடைக்கக்கூடியதா?" என்கிறார் இவர்.

இவர் தந்தையின் நண்பரான உபநிஷத் பிரம்மம் எனும் பெரியோரின் அழைப்பை ஏற்று காஞ்சிபுரம் செல்கிறார். அங்கு கோயில் கொண்டருளும் வரதராஜப் பெருமாளையும், காமாக்ஷி அம்மனையும் தரிசித்து அங்கும் மூன்று கீர்த்தனைகளை இயற்றியருளியிருக்கிறார்.

ஸ்ரீ தியாகராஜருடைய சீடர்களில் ஒருவரான வீணை குப்பையர் என்பவர் அழைப்பின் பேரில் ஆதிபுரம் என வழங்கப்பெறும் திருவொற்றியூருக்குச் செல்கிறார். அங்கு அருள்பாலிக்கும் திரிபுரசுந்தரி அம்பாளைத் துதித்து ஐந்து கீர்த்தனைகளை இயற்றியிருக்கிறார். அவை ஒரு பஞ்சரத்தினமாக ஸாவேரி, ஆரபி, பேகட, கல்யாணி, சுத்தசாவேரி ஆகிய ராகங்களில் அமைந்திருக்கின்றன.

கோவூர் எனும் ஊரில் வாழ்ந்த பெருநிலக்கிழாரான கோவூர் சுந்தர முதலியார் அழைப்பின் பேரில் இவர் அங்கு செல்கிறார். அங்கு கோயில்கொண்டருளும் சுந்தரேஸ்வரரை இவர் ஐந்து கிருதிகளால் போற்றிப் பாடுகிறார். அவைகளும் கோவூர் பஞ்சரத்தினம் என வழங்கப்படுகின்றன. இவை சஹானா, கரஹரப்பிரியா, பந்துவராளி, கல்யாணி, சங்கராபரணம் ஆகிய இராகங்களில் அமைந்தவை.

இவருடைய திருமலை திருப்பதி விஜயம் புகழ்பெற்றது. அங்குதான் பெருமாளுக்கு முன்பிருந்த திரை விலகுமாறு பாடியதாகக் கூறப்படுகிறது. "தெரதீயகராதா" எனும் கெளளிபந்து ராகக் கீர்த்தனை மனிதனின் மனதில் விரிந்திருக்கும் அஞ்ஞானமெனும் திரை விலகி இறையருள் தரிசனம் கிடைக்காதா எனும் உணர்வில் பாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை சந்நிதியிலிருந்த திரை அறுந்து விழப் பாடியதாகச் சிலர் தவறாகப் பொருள் கொண்டு சொல்லி வருகின்றனர்.

திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர் பொன்னி, திரைக்கையால் அடிவருட பள்ளி கொண்ட அரங்கத்துப் பெருமானையும் இவர் சென்று தரிசித்து வந்திருக்கிறார். அந்தத் தலம் பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுகிறது. காரணம் வைணவ திவ்ய தேசங்களில் 106 மட்டுமே இந்த பூமியில் உள்ளது. வைகுண்டம் எனும் 108ஆம் திவ்ய தேசம் அமைந்திருப்பது பெருமாளின் வைகுண்டத்தில். திருப்பாவை பாடிய ஆண்டாள் நாச்சியாரை அந்த 108ஆவது திவ்ய தேசத்துக்கு ஸ்ரீ அரங்கப்பெருமான் ஆட்கொண்டு அழைத்துச் சென்றவிடம் அது என்பதால் இவ்வூர் அந்தப் பெயரைப் பெற்றது. இவ்வூரிலும் ஸ்ரீ தியாகராஜர் ஐந்து அற்புதமான கீர்த்தனைகளால் பெருமானை வணங்கியிருக்கிறார். அவை ஆரபி, காம்போஜி, ஸாரங்கா, தோடி, தேவகாந்தாரி ஆகிய இராகங்களில் அமைந்தவை.

திருத்தவத்துறை எனும் க்ஷேத்திரம். அதற்கு இப்போது லால்குடி என்று பெயர். தியாகராஜருடைய சீடர்களின் அழைப்பை ஏற்று அவர் இந்த ஊருக்கு விஜயம் செய்து அங்கு எழுந்தருளியுள்ள ஸப்தரிஷீஸ்வர ஸ்வாமியைக் குறித்தும் பிரவிருத்தஸ்ரீமதி அம்மனைக் குறித்தும் பாடியிருக்கிறார். அந்த ஐந்து கீர்த்தனங்களும் தோடி, பைரவி, மத்யமாவதி, காம்போஜி, கல்யாணி ஆகிய ராகங்களில் அமைந்தவை.

இவர் நாகப்பட்டணம் சென்று அங்கு தோடி, ஸாவேரி ராகங்களில் இரு கிருதிகளைச் செய்திருக்கிறார். இவை தவிர இவர் வேறு சில ஊர்களுக்கும் சென்று ஆங்காங்கு எழுந்தருளியிருக்கும் சுவாமி பெயரால் பாடல்களைப் பாடியிருக்கிறார். 

இராம பக்தியில் திளைத்த பக்த ராமதாஸ், துளசிதாசர் ஆகிய பெரியோர்களின் வழியில் வந்த மற்றொரு ராக பக்தர்தான் ஸ்ரீ தியாகராஜர். நமது பாரம்பரிய பக்தி வழிபாட்டில் ஒன்பது முறைகளைப் பெரியோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அவை ஸ்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாதஸேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், ஸக்யம், ஆத்ம நிவேதனம் என்பவை. அவரவர்க்குரிய இஷ்ட தேவதைகளை மேற்கண்ட வழிமுறைகளில் வழிபடுவது என்பது பாரம்பரிய வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. இதில் நமது தியாகராஜ ஸ்வாமிகள் வழிபடும் தெய்வமான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியை பல நிலைகளில் வைத்துப் பாடி புகழ்ச்சி செய்திருக்கிறார். 

அத்தகைய பெரும்புகழ் வாய்ந்த ஒரு மஹானின் ஸ்ரத்தைக்குரிய இந்த இசைவிழா இனிது நடைபெற ஸ்ரீ தியாகராஜரின் கருணையும், அவர் வழிபட்ட ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியும் அருள்பாலிக்க வேண்டுமாய் பணிந்து வேண்டுகிறோம்.




திருவையாறு தியாகபிரம்ம ஆராதனை விழா
கடந்த காலத்தில் நடந்த சில நிகழ்ச்சித் துளிகள்

1. தியாகபிரம்ம ஆராதனைக் கமிட்டிக்குப் பெரும்பாலும் கபிஸ்தலம் மூப்பனார் குடும்பத்தினர்தான் தலைமையேற்று நடத்தி வந்திருக்கிறார்கள். காலம் சென்ற ஜி.கே.மூப்பனார் 36 ஆண்டுகள் தலைவராக இருந்திருக்கிறார். விழாக் காலங்களில் அவர் இங்கே வந்து எல்லா நாட்களிலும் முன்னால் இருந்து கவனித்துக் கொள்வது அவர் காலத்திலிருந்து நடைபெற்று வருகிறது. அவருடைய முன்னோர்களும் பல இசைக் கலைஞர்களுக்கும், வடநாட்டிலிருந்து ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்குச் செல்லும் யாத்திரிகர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் தங்குவதற்கும், உணவுக்கும் ஏற்பாடு செய்திருப்பது தமிழ்த்தாத்தா தனது சுயசரிதையில் சொல்லும் விவரங்களிலிருந்து தெரிய வருகிறது.

2. தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னரொருவர் காசிக்குத் தன் பரிவாரங்களுடன் சென்றிருந்தாராம். இவர்களுடைய பரிவாரங்களைப் பார்த்த காசிவாசிகள் அந்த மன்னரிடம் தாங்கள் எந்த ராஜ்யத்தின் ராஜா என்று கேட்டார். அதற்கு அவர்கள் தஞ்சாவூர் ராஜ்யம் என்று பதில் சொல்லியிருக்கிறார்கள். அது எங்கே இருக்கிறது என்ற அவர்கள் கேள்விக்கு தஞ்சாவூர் ராஜ்யம் தெற்கே காவிரிக் கரையில் அமைந்திருக்கிறது, வட இந்திய மக்கள் ராமேஸ்வரம் செல்வதற்கு அந்த ராஜ்யத்தின் வழியாகத்தான் போகவேண்டும் என்று பதில் சொன்னார்கள். அப்போது அந்த காசிவாசிகள் சொன்ன பதில், "ஒகோ! நீங்கள் மூப்பனார் தேசத்து ராஜாவா?" என்றார்களாம். தஞ்சை மன்னருக்குத் தூக்கிவாரிப் போட்டது. அது என்ன மூப்பனார் தேசத்து ராஜா என்றார். நாங்கள் காசியிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் யாத்ரீகர்களுக்கு தங்க இடமும் உணவும் கொடுத்து உபசரிப்பது கபிஸ்தலம் மூப்பனார் குடும்பத்தினரின் வழக்கம். ஆகையால் நாங்கள் அவர் பிரதேசத்தை மூப்பனார் தேசம் என்றால்தான் அறிவோம் என்றார்களாம். அந்த அளவுக்குப் பிரபலமாக விளங்கியவர்கள் அவர்கள்.

3. எப்போதுமே தியாகராஜர் ஆராதனை இசை விழா நடக்கும் காலத்தில் பனிதான் பொழிந்து கொண்டிருகும். வெளியூர்களிலிருந்து குறிப்பாக ஆந்திர தேசத்திலிருந்து மிக அதிக அளவில் மக்கள் வந்து கலந்து கொள்வார்கள். அதிலும் பாலமுரளிகிருஷ்ணா செயலாளராக இருந்த காலத்தில் ஆந்திர இசை ரசிகர்களும், தியாகராஜர் பக்தர்களும் பெருமளவில் வந்து சேருவார்கள். அத்தனை பேரும் வசதியாகத் தங்குவதற்கு இந்த சிறு ஊரில் இடமில்லாமையால், அவர்கள் அத்தனை பேரும் விழா பந்தலிலேயே மூட்டை முடிச்சுக்களை வைத்துக் கொண்டு காவிரியில் நீராடி, துணிகளை உணர்த்தி, விழா தொடங்கியதும் அங்கேயே உட்கார்ந்து கச்சேரிகளை ரசிப்பார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் விழா கூடத்தில் உணவும் அளிக்கப்பட்டு விடும். ஆகையால் ரசிகப் பெருமக்களுக்கு எந்த தொல்லையும் இருக்காது.

ஒரு முறை விழா நேரத்தில் மிகக் கடுமையாக மழை பொழியத் தொடங்கிவிட்டது. புஷ்ய பகுள பஞ்சமியன்று ஆராதனையும், பஞ்ச ரத்தினக் கீர்த்தனைகள் பாடி வழிபட வேண்டும். காலையில் தொடங்கிய மழை விடாமல் பெய்தது. அப்போது விழா நடக்கும் இடம் தென்னங் கீற்று மட்டையால் வேயப்பட்டிருக்கும். மழை நீர் கொட்டகையில் எங்கும் கொட்டிக் கொண்டிருக்க தரையெல்லாம் மழை நீர். வந்திருந்த அனைவரும் மழையில் நனைந்து குளிரில் நடுங்கினர். அந்த கொட்டும் மழையிலும் உஞ்சிவிருத்தி நடந்து, பஞ்ச ரத்தினக் கீர்த்தனைகளை கொட்டும் மழையில் பாடி ஆராதனையை முடித்தனர். வந்திருந்த ஆந்திர தேசத்து இசை ரசிகர்கள் பாவம், உடனடியாக ஊர் திரும்ப நேர்ந்து விட்டது.

4. திருவையாற்று ஆராதனை விழா சற்குரு ஸ்ரீ தியாகராஜருக்கு அஞ்சலி செய்யும் முகத்தான் நடத்தப் படுகிறது. ஸ்ரீ தியாகராஜர் திருவாரூரில் பிறந்து திருவையாற்றில் வசித்து வந்தவர். தன்னுடைய ஆயிரக்கணக்கான பாடல்களால் ஸ்ரீ ராமபிரானை வணங்கி வந்தவர். அவருடைய தாய் மொழி தெலுங்கு. அவருடைய முன்னோர்கள் ஆந்திர தேசத்திலிருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள். ஆகையால் அவருக்குத் தெலுங்கும், வடமொழியும் நன்கு தெரியும். அவர் பாடல்கள் அனைத்துமே அவர் தாய் மொழியான தெலுங்கில் அமைந்தவை. அவருக்கு அஞ்சலி செய்யும் விழாவில் அவருடைய அந்த தெலுங்கு கீர்த்தனைகளைப் பாடித்தான் அஞ்சலி செலுத்த முடியும். ஆனால் விவரம் புரியாமல் சில தனித் தமிழ் இயக்கத்தார் ஒரு வருடம் விழா நடக்குமிடத்துக்கு வந்து இங்கு பாடுபவர்களைப் பார்த்து தமிழில் பாடு என்று கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தியாகராஜர் பாடிய தெலுங்கில் பாடாமல் அவர் பாடல்களை எப்படித் தமிழில் பாட முடியும் என்று நிர்வாகிகள் சொன்னதை அவர்கள் ஏற்கவில்லை. ஆர்ப்பாட்டம் அமைதியான அந்த சூழலைன் புனிதத் தன்மைக்கு இடையூறாக மாறிக் கொண்டிருந்த நிலையில் அப்போது தலைவராக இருந்த ஜி.கே.மூப்பனார் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டக் காரர்களிடம் சென்றார். இப்போது நீங்களாகக் கலைந்து செல்லவில்லையானால், நானும் களத்தில் இறங்க வேண்டியிருக்கும் என்றார். அவர் அப்படிக் கோபப்பட்டு எவருமே பார்த்ததில்லையாதலால் அவருடைய உரத்த குரலைக் கேட்டதும் கூட்டம் அடங்கியது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். விழாவும் தொடர்ந்து அமைதியாக நடைபெற்றது. அமைதியின் உருவமான மூப்பனாரா இப்படி? என்று அனைவரையும் வியப்படைய வைத்த நிகழ்ச்சி இது.

5. பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் பாடி ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு ஆராதனை செய்ய வித்வான்கள் இரு வரிசையில் சந்நிதிக்கு எதிரில் அமர்ந்து பாடுவார்கள். அவர்களைச் சுற்றிலும் பல ஊர்களிலுமிருந்து வந்த வித்வான்கள் அமர்ந்து பாடுவார்கள். பல வாத்தியக்காரர்களும் சேர்ந்து கோரசாக வாசிப்பார்கள். மிருதங்கம், வயலின், புல்லாங்குழைல் ஆகிய வாத்தியங்கள் வாசிக்கப்படும். ஒரு முறை பித்துக்குளி முருகதாஸ் வந்திருந்தார். அவருடன் பிறந்தது போலவே அவர் கையில் ஒரு ஆர்மோனிய வாத்தியம் வைத்திருந்தார். அப்போது பாலமுரளிகிருஷ்ணா செயலாளர். பித்துக்குளி முருகதாசிடம் ஆராதனையில் ஆர்மோனியம் வாசிக்கக்கூடாது என்று சொல்லப்பட்டது. அவரும் சரியென்று அந்த வாத்தியத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வெளியேறிவிட்டார். இந்த வாத்தியத்துக்கு கமகங்கள் வாசிக்க இயலாது என்பதால் டாக்டர் கே.எம்.முன்ஷி நேரு அமைச்சரவையில் செய்தி ஒலிபரப்பு அமைச்சராக இருந்த காலத்தில் ஆர்மோனியம் வானொலியில் பயன்படுத்தக்கூடாது என்று தடைவிதித்திருந்தார் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய செய்தியாகும்.

6. முன்பெல்லாம் பழம்பெரும் வித்வான்களான அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், ஆலத்தூர் சீனிவாசய்யர், ஜி.என்.பாலசுப்பிரமனியம் போன்ற பிரபல வித்வான்கள் எல்லாம் ஆராதனையன்று காலையில் ஸ்ரீ தியாகராஜர் வசித்த இல்லத்திலிருந்து உஞ்சவிருத்தி எடுத்துக்கொண்டு தெருவில் பாடிக்கொண்டு விழா பந்தலுக்கு வருவார்கள். இப்போதெல்லாம் உள்ளூர் பாகவதர்களிடம் இந்தப் பணியைக் கொடுத்து விடுகிறார்கள். பெரிய அளவில் வித்வான்கள் இதில் கலந்து கொள்வதில்லை என்பது மக்கள் மத்தில் நிலவுகின்ற அதிருப்தியாக இருக்கிறது. எத்தனை பெரிய வித்வானாக இருந்தாலும் உஞ்சவிருத்தியில் கல்ந்து கொள்வதுதான் ஸ்ரீ தியாகராஜருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

7. ஆராதனை நாட்களில் ஊரின் சில இடங்களில் வெளியூர் இசை ரசிகர்களுக்கென்று சில கல்யாண மண்டபங்களிலும், ஸ்ரீ தியாகராஜர் வாழ்ந்த இல்லத்திலும் உணவளிப்பது என்பது நடைபெற்று வருகிறது. இதற்காக சில டிரஸ்ட்டுகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது செல்லம் ஐயர் எனும் ஸ்ரீநிவாசராவ் பள்ளியில் ஆசிரியராக இருந்த செல்லம் ஐயர் என்பவரின் பணி மகத்தானது. மிகவும் வயது முதிர்ந்த செல்லம் ஐயர் இப்போதும் சென்னையிலிருந்து திருவையாற்றில் வந்து தங்கிக் கொண்டு இந்த உணவளிக்கும் தர்ம காரியத்தை நடத்திக் கொண்டு வருகிறார். 


தஞ்சை வெ.கோபாலன்,
இயக்குனர் பாரதி இலக்கியப் பயிலகம்,
தஞ்சாவூர் 



நன்றி: "தினமணி" ஸ்ரீ தியாகராஜ ஆராதனை சிறப்பிதழ் 13-1-2012







2 comments:

Unknown said...

இசையின் வடிவினன் இறைவன் என்பர்...
ஸ்ரீ தியாகராஜா சுவாமிகளும் அப்படியே கண்டுள்ளார்கள் என்பதும் காலத்தையும் கடந்து நிற்கும் அவரின் பக்தியும் அதனால் அவர் பெற்ற ஞானமும் என்பது திண்ணம்... பக்தர்களின் வகைகளாக பரமாத்மா கீதையிலே கூறியிருப்பதி நான் இரு தினங்களுக்கு முன்பு தான் படித்தேன் அதைக் கொண்டு ஒருக் கட்டுரையும் எழுதி இருக்கிறேன்... அதிலே கூறப்படும் நாகாவது வகையினரான ஞானி இந்த சுவாமிகள்... அதனாலே பரந்தாமனின் கூற்றுப் படியே அவரும் இறையோடு ஒன்றி இறைவனாகவே போற்றப் படுகிறார்.... மகான்கள், ஞானிகள் நூற்றாண்டுக்கு ஒருவராக உதிப்பதே அரிது (கீதையும் ஞானிகள் பிறப்பது அரிது என்று... அப்படியே கூறுகிறது) அந்த வகையிலே ஸ்ரீ தியாகராஜா சுவாமிகள் இசைக்கு அவதார புருஷராக மண்ணில் உதித்து இருக்கிறார்.... அற்புதமான பதிவு அழகான விளக்கம்... அவனின் அருளால் நானும் வாசிக்கும் வாய்ப்பைப் பெற்றேன் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்...

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்கள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படுவர்"
என்ற ஐயனின் வாக்கிற்கிணங்க ஸ்ரீ ராமனோடு ஐக்கியமான சுவாமிகளும் திருவையாறு வருவது
உறுதி... இவர்தாம் இசைஞானி... இறைவனை இசை வடிவினிலே கண்ட பெரும் ஞானி!

ஜி.கே.மூப்பனார் அவர்களின் குடும்பத்தின் சிறப்பையும் ஆரியப் பெற்றேன்!...
பதிவிற்கும் பகிர்வுக்கும் நன்றிகள் ஐயா!

Unknown said...

நான் மேலே கூறிய கீதையின் வசனம் Geetha 7:16.
நன்றிகள் ஐயா!