பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, January 5, 2012

கவி காளமேகம்

காளமேகம் கவிஞனாக ஆன கதையை முன்பு பார்த்தோம். இனி அவன் படைப்புகளில் இப்போது இரு பாடல்களைப் பார்ப்போம்.

1. முதல் பாட்டு:

காளமேகம் காஞ்சிபுரம் போனான். அப்போது வரதராஜ பெருமாள் கோவிலில் கருடோத்சவம் நடந்து கொண்டிருந்தது. பெருமாள் வீதி புறப்பாடு நடந்து கொண்டிருந்தது. வரதராஜப் பெருமாளை கருட வாகனத்தில் ஏளப் பண்ணி (இது வைணவ பரிபாஷை: பொருள் எழுந்தருளப் பண்ணி) வீதி வலம் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது இவனுக்கு பெருமாளைப் பாடவேண்டுமென்றும் ஆசை, ஆனால் அவன் தான் சைவத்துக்கு மாறிவிட்டானே, இப்போது பெருமாளைப் பாடுவதைக் கண்டு யாராவது குறை சொன்னால் என்ன செய்வது. சரி! இதற்கு ஒரு வழி செய்யலாம் என்று பெருமாள் மீது நிந்தாஸ்துதி (இகழ்வது போல புகழ்வது) பாடிவிடலாம் என்று பாடினான்.

"பெருமாளும் நல்ல பெருமாள் அவர் தம்
திருநாளும் நல்ல திருநாள் - பெருமாள்
இருந்திடத்திற் சும்மா இராமையினால் ஐயோ
பருந்து எடுத்துப் போகின்றதே பார்!"

"பெருமாள் நல்ல பெருமாள் தான். அவருக்குக் கொண்டாடும் இந்தத் திருநாளும் நல்ல திருநாள்தான். ஆனாலும் என்ன செய்வது. இந்த பெருமாள் சும்மா கோயிலுக்குள் உட்கார்ந்திருக்காமல் இப்படி வீதியில் சுற்றத் தொடங்கியதால், பருந்து வந்து அவரைத் தூக்கிக் கொண்டு போகிறதே" என்று பாடினான். 

2. இரண்டாம் பாட்டு.

காளமேகம் காஞ்சிபுரம் போன அதே நேரத்தில் அங்கிருந்த விநாயகப் பெருமானுக்கும் திருவிழா நடந்து கொண்டிருந்தது. கணபதியை மூஞ்சூறு வாகனத்தில் வைத்து ஊர்வலம் கொண்டு போகிறார்கள். காளமேகத்துக்கு உடன் பிறந்த கிண்டல் இங்கும் வேலை செய்கிறது. இவன் அலறுகிறான். ஐயையோ! இது என்ன அக்கிரமம்! சிவனுடைய பிள்ளையை இப்படி ஒரு எலி இழுத்துக் கொண்டு போகிறதே. இதனைக் கேட்பார் இல்லையா? சிவபெருமானுடைய மழு எங்கே போயிற்று. அதனால் தாக்க வேண்டாமா? திருமாலிடம் சக்கரம் இருக்குமே. அது என்னவாயிற்று. அதனால் எலியை அறுத்துவிடலாமே. பிரம்மன் கையில் உள்ள தண்டம் எங்கே? அதால் அடிக்கக்கூடாதா? அவைகளெல்லாம் பறிபோய்விட்டனவா?" யானையை ஒரு எலி இழுத்துக் கொண்டு போகிறதே! என்று புலம்புகிறான்.

"மூப்பான் மழுவும், முராரி திருச் சக்கரமும்
பாப்பான் கதையும் பறிபோச்சோ - மாப்பார்
வலமிகுந்த மும்மதத்து வாரணத்தை ஐயோ
எலி இழுத்துப் போகின்ற தென்?"

மூப்பான் என்பது சிவன், அவன் கையில் உள்ளது மழு என்னும் ஆயுதம். (சிறிய கோடரி போன்ற ஆயுதம்). முராரி என்பது பெருமாள், அவர் கையில் உள்ளது சுதர்சன சக்கரம். பாப்பான் என்பது பிரம்மனைக் குறிக்கும், அவன் கையிலுள்ளது தண்டம் என்கிற கதை. 

இந்தக் கிண்டல்தான் காளமேகத்தின் முத்திரை.

1 comment:

Unknown said...

காளமேகத்தின் கவிதையை ரசித்தேன்...
மடப் பள்ளியில் சுண்டல் கிண்டிய
புலவருக்கு கிண்டலும் அனாவிசியமாக
வந்து இருக்கிறது...

பகிர்விற்கு நன்றிகள் ஐயா!