பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, October 15, 2019

சத்ரபதி சிவாஜி


                                                    சத்ரபதி சிவாஜி 

                பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னிந்திய வரலாற்றில், டெல்லி முகலாய மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பல சிற்றரசர்கள் நாடெங்கும் பரவியிருந்தனர். டெல்லி சுல்தான்களுக்குக் கட்டுப் பட்டு தெற்கே நிஜாமும், வேறு பல தட்சிண சுல்தான்களும் ஆட்சி புரிந்து வந்தனர். மராத்திய வம்சத்தின் வீர பரம்பரையில் வந்த பல மாவீரர்களும் இவர்களில் எவராவது ஒருவரிடம் தளபதிகளாக, போர்ப்படையில் முக்கிய பதவிகள் வகித்துக் கொண்டு வாழ்ந்தார்கள். இவர்கள் நிலையாக ஓரிடத்தில் ஒருவரிடம் பணிபுரியாமல் அவ்வப்போது மாறுகின்ற சூழ்நிலைகளுக்கேற்ப தலைமையை மாற்றிக் கொண்டும், இன்றைய அரசன் நாளைய விரோதியாகப் போரிடுவது போன்ற பல நிகழ்ச்சிகள் தட்சிண சுல்தான்களிடையே நடைபெற்றுக் கொண்டிருந்தன.

                நாம் எடுத்துக் கொண்டிருக்கும் இந்த வரலாற்றுப் பதிவுகள் நடந்த காலத்தில் தேவகிரி எனுமிடத்தில் நிஜாம் பாதுஷாவும், விஜயதுர்க்கம் எனுமிடத்தில் இப்ராஹிம் பாதுஷாவின் புதல்வன் அலியடில்ஷா என்பாரும் ஆட்சி புரிந்து கொண்டிருந்தார்கள். இவ்விரு சுல்தான்களுக்கிடையே போர் மூண்டது. அந்தப் போரில் நிஜாமின் பக்கம் மாலோஜி, விட்டோஜி எனும் இரண்டு மராத்திய வீரர்கள் நிஜாமுக்கு வெற்றிகளைத் தேடித் தந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய சேவையைப் பாராட்டி நிஜாம் தான் வென்ற பகுதிகளில் நாலில் ஒரு பாகத்தை இவர்களுக்கென்று பகிர்ந்தளித்தார்.

                இவ்விருவரில் மாலோஜி என்பவருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். முதல்வர் ஷாஜி, அடுத்தவர் சரபோஜி என்றும் பெயரிடப்பட்டனர். ஷாஜிக்கு ஐந்து வயதாக இருக்கும்போது அவர் தந்தை மாலோஜி ஒரு போரில் இறந்து போனார். குழந்தைகள் சிறுவர்களாக இருந்ததால் அவ்விருவரையும் விட்டோஜியின் பாதுகாப்பில் வளர்ந்தனர்.

                ஷாஜி இளைஞனாக வளர்ந்த போது துக்காவுபாயி எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர் 1620இல் சதாராவின் மன்னராக ஆனார். அவர் சதாராவின் மன்னராக இருந்த போது இரண்டாவது மனைவியாக ஜீஜாபாயி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

                தேவகிரியின் பாதுஷா நிஜாம் விஜயதுர்கம் பாதுஷா அலியடில்ஷாவை மதிக்கவில்லை. காரணம் தன்னுடைய படையில் மாபெரும் மராத்திய வீரர்கள் ஷாஜி முதலானோர் இருக்கும் தைரியம் அவருக்கு. இந்த சூழலில் விஜயதுர்க்கம் பாதுஷா அலியடில்ஷா தேவகிரி பாதுஷா நிஜாமுடன் டெல்லி சுல்தான் ஜஹாங்கீரின் உதவியுடன் போருக்குப் புறப்பட்டார். இந்தப் போரில் நிஜாமின் படைத் தளபதி ஷாஜியிடம் டெல்லி சுல்தான் படைகள் தோற்றுப் போயின. அதே போரில் ஷாஜியின் தம்பி சரபோஜி அலியடில்ஷாவின் படைத் தளபதியான ஜோகர்கான் என்பவரால் கொல்லப்பட்டார். அந்தப் போரில் வெற்றி ஈட்டித் தந்த ஷாஜியை நிஜாம் கெளரவித்துப் பாராட்டினார். பிறகு ஷாஜி சதாராவுக்குத் திரும்பிவிட்டார்.

                இந்த சூழ்நிலையில் நிஜாம் படைக்கு வெற்றி ஈட்டித் தந்த ஷாஜி தன் பக்கம் இழுக்க வேண்டுமென்று விஜயதுர்க்கம் பாதுஷா அலியடில்ஷா விரும்பினார். எதிரியின் படைத் தளபதி தன் பக்கம் வருவாரா என்றும் சந்தேகித்தார். ஆனால் நிஜாமுக்கும் ஷாஜிக்கும் இடையே ஏதோ மனவருத்தம் இருந்த காரணத்தால் அவர் தயக்கமின்றி எதிரியாக இருந்த அலியடில்ஷா பக்கம் சேர்ந்து விட்டார். ஷாஜி தன் பக்கம் வந்துவிட்ட தைரியத்தில் அலியடில்ஷா மீண்டும் நிஜாம் மீது போரிட ஷாஜி தலைமையில் பெரும் படையை அனுப்பினார். அப்போது நடந்த போரில் அலியடில்ஷாவின் படை ஷாஜி தலைமையில் பெரும் வெற்றியைப் பெற்றது. நிஜாம் தோற்றுப் போனார். இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக அலியடில்ஷா தன்னுடைய ஆட்சியின் கீழிருந்த பகுதிகளில் பாதியை ஷாஜிக்கு பகிர்ந்து அளித்து அவரை கெளரவப்படுத்தினார். தொடர்ந்து அலியடில்ஷா வின் தளபதியாக ஷஜி தென்னிந்தியாவின் பல பகுதிகள் மீது போர் தொடுத்து இப்போதைய கேரளப் பகுதிகளையும் வென்று பெரும் புகழ் பெற்றார். அவர் வென்றெடுத்த பகுதிகளிலுள்ள சிற்றரசர்கள் எல்லாம் அலியடில்ஷாவுக்குக் கப்பம் கட்டவும் ஏற்பாடு செய்து விட்டார்.

                வெற்றி வீரராக ஷாஜி விளங்கி வருகையில் 1627 பிப்ரவரி 19இல் மனைவி ஜீஜாபாயிக்கு முதல் மகன் பிறந்தான், அந்த மகன் பெயர் சாம்பாஜி. இந்த சாம்பாஜி வளர்ந்து பெரியவனாக ஆன போது  சிவனேரி கோட்டையின் தலைவர் விசுவாசராவ் என்பவரின் பெண்ணான ஜெயந்திபாயி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். பிறகு 1629இல் ஜீஜாபாயிக்கு இரண்டாவது மகன் பிறந்தார். அந்தக் குழந்தை பிறந்த ஊரான சிவனேரியின் நினைவாக அந்த மகனுக்கு “சிவாஜி” என்று பெயரிட்டனர். ஷாஜி பிறந்த குழந்தையுடன் சதாராவுக்குச் சென்றுவிட்டார். அங்கு 1630இல் ஷாஜியின் முதல் மனைவியான துக்காபாய் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

                ஷாஜி தேவகிரி பகுதியைச் சேர்ந்த எண்பது கோட்டைகளைத் தனதாக்கிக் கொண்டார். அப்போதிருந்த பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மராத்தியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சூரிய வம்சம் என்றும் சந்திர வம்சம் என்று பிரித்து வாழ்ந்தனர். ஷாஜியின் வளர்ச்சியைக் கண்ட டெல்லி பாதுஷா அலியடில்ஷாவுடன் இணைந்து ஷாஜிக்கு எதிராக பீமா நதிக் கரையில் மூன்றாண்டு காலம் போரில் ஈடுபட்டார். ஷாஜி ஒரு சமாதான உடன்படிக்கையின்படி தான் வென்ற நிலப் பகுதிகளை டெல்லி பாதுஷாவுக்கும் அலியடில்ஷாவுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டுத் தான் சதாராவுக்குச் சென்று விட்டார்.

                அலியடில்ஷாவுக்கும் ஷாஜிக்கும் சமாதானம் ஏற்பட்டு விட்ட பிறகு அலியடில்ஷா அவரைத் தென் புறத்திலுள்ள பிரதேசங்களில் உள்ள சிற்றரசர்களிடம் சென்று கப்பம் தொகை பெற்று வரப் பணித்தார்.  அவரும் அவருடன் ரணதுல்லாகான் என்பவரும் இக்கேரி ராஜா வீரபத்ரர், கொங்க நாயக்கர், காவேரிப்பட்டணத்து ஜெகதேவர், ஸ்ரீரங்கப்பட்டனம் கண்டீரவர், தஞ்சாவூர் விஜயராகவ நாயக்கர், செஞ்சி வெங்கட்ட நாயக்கர், மதுரை திருமலை நாயக்கர் முதலான அரசர்களையெல்லாம் வென்று அந்த நாடுகளை கப்பம் கட்டச் செய்தார். இதனால் மகிழ்ந்த அலியடில்ஷா ஷாஜிக்கு பெங்களூர் ஜாகீரைக் கொடுத்து அனுப்பினார்.

                பெங்களூரு ஷாஜிக்குப் பிடித்தமான இடமாக இருந்தமயால் ஷாஜி தன் மனைவியர்களுடன் சதாராவிலிருந்து கிளம்பி பெங்களூருக்குச் சென்று தங்கினார். மகன்கள் சிவாஜிக்கும் ஏகோஜிக்கும் கல்வி அங்குதான் கற்பிக்கப்பட்டது. மகன் சிவாஜிக்கு வயது பன்னிரெண்டாயிற்று. ஷாஜியின் முதல் மனைவியின் மகன் ஏகோஜிக்கு 1640இல் இவர் வயதில் சிறியவர் என்ற போதிலும் அவருக்கு இளவரசுப் பட்டம் சூட்டினார். பெங்களூருக்கும் அவரையே அதிபதியாக்கினார். மூத்த மகன் சிவாஜிக்கு சதாரா, புனே பகுதிகளுக்கு இளவரசுப் பட்டம் சூட்டி அங்கு அனுப்பி வைத்தார். சதாராவுக்குச் சென்ற சிவாஜி வீரத்தினால் பல சிறு சிறு கோட்டைகளையெல்லாம் பிடித்துத் தனதாக்கிக் கொண்டார்.

                இவ்வளவும் ஆன பிறகு அலியடில்ஷா பெங்களுரில் இருந்த ஷாஜியை தன்னிடம் அழைத்துவருமாறு தூது அனுப்பியும் ஷாஜி போகவில்லை. அதனால் ஆத்திரமடைந்த அலியடில்ஷா முஸ்தபாகான் என்பவரின் தலைமையில் பல தளபதிகளையும் சேர்த்து ஒரு படையுடன் அனுப்பி ஷாஜியைக் கட்டாயமாகப் பிடித்து வரும்படி அனுப்பினார். ஆனால் அலியடில்ஷாவின் வஞ்சனை எண்னத்தை அறிந்த ஷாஜி தன் மூத்த மகன் சாம்பாஜியைப் பெங்களூரில் ஏகோஜிக்குத் துணையாக இருக்கும்படி சொல்லிவிட்டு தான் தன்னுடைய படைத் தலைவர்களுடன் முஸ்தபாகானைப் பார்க்கப் போனார். தன்னைத் தேடி வந்த ஷாஜியை முஸ்தபாகான் அருகில் ஒரு கூடாரத்தில் தங்க வைத்து, ஒருநாள் இரவு தன் படைவீரர்களைக் கொண்டு அந்த கூடாரத்தைச் சூழ்ந்து கொண்டான். அப்போது நடந்த போரில் ஷாஜி காயம் பட்டுக் கீழே மூர்ச்சையாகி விழுந்தார். மூர்ச்சைத் தெளிந்த ஷாஜியை முஸ்தாபாகான் அவரை அலியடில்ஷாவைக் காண விஜயபுரத்துக்குச் செல்லுமாறு பணித்தான்.

                இதனைக் கேள்விப்பட்ட சாம்பாஜி ஒரு பெரு படையுடன் புறப்பட்டு வந்து முஸ்தாபாகானுடன் போரிட்டார். நடந்த விஷயங்களையெல்லாம் கேள்விப்பட்ட சிவாஜி அலியடில்ஷாவோடு போருக்குத் தயாரானார். இவற்றையெல்லாம் அறிந்து அலியடில்ஷா மூன்று தளபதிகளின் தலைமையில் படைகளை அனுப்பி புரந்தர் கோட்டையில் இருக்கும் சிவாஜியைச் சிறைப்பிடித்து வருமாறு அனுப்பி வைத்தார். அந்த மூன்று தளபதிகளின் தலைமையில் சென்ற படை முதலில் சிரோபலம் எனும் கோட்டையைப் பிடித்து அங்கு தங்களில் ஒருவனான பல்லாளன் என்பவனை இருக்கச் சொல்லிவிட்டு, மற்ற இருவரான பத்தேகான், முசேகான் ஆகியோர் சிவாஜி இருந்த புரந்தர் கோட்டையை முற்றுகை யிட்டார்கள். சிரோபலக் கோட்டையை எதிரிகளிடமிருந்து மீட்க சிவாஜி பீமன் என்பவரின் தலைமையில் ஒரு படையை அங்கு அனுப்பினார். பீமன் அங்கு சென்று அங்கு முகாமிட்டிருந்த பல்லாளனைக் கொன்று, அந்தக் கோட்டையை மீட்டுக் கொண்டு சிவாஜியிடம் திரும்பினார். புரந்தர் கோட்டையை முற்றுகையிட்ட படைகளுடன் சிவாஜி தீரத்துடன் போரிட்டார். கொட்டையின் மீதேறி உள்ளே நுழைய முயன்ற வீரர்களைத் துரத்தினார். ஓடிய அவர்கள் மீண்டும் கோட்டையை நோக்கி வந்த போது சிவாஜி அந்த படைத்தலைவர்களில் ஒருவனான முசே கானைக் கொன்றார்.

                மராத்திய மாநிலத்தில் சித்திரக்கல் என்றொரு கோட்டை இருந்தது. அங்கு இருந்தவர்  மாபெரும் குதிரைப் படைகளுடன் வந்து பீஜப்பூர் கோட்டைக்குள் சென்று கொள்ளையடித்துக் கொண்டு போனார். இப்படி தனக்கு எதிராக எல்லாம் நடப்பதை அறிந்த அலியடில்ஷா தான் தணிந்து போக நிச்சயித்து தன்னிடம் வந்திருக்கும் ஷாஜிக்கு எந்தத் தீங்கும் இழைக்காமல் அவரை திரும்ப அனுப்புவதே சிறந்தது என்றெண்ணி அவரை விடுவித்தார். அப்படி அவரை அனுப்பும் போது அலியடில்ஷா ஷாஜியிடம் பெங்களுரில் இருந்து சாம்பாஜியையும், ஷாஜி குடும்பத்தார் அனைவரையும் சதாராவுக்குத் திஎரும்பிவிட வேண்டுமென்றும், சிவாஜி  சிம்ஹகட் கோட்டையை விட்டுவிட வேண்டுமென்றும் அறிவுறுத்தினார். சித்திரக்கல் கொட்டையில் இருப்பவர் பீஜப்பூர் கோட்டையை கொள்ளை யடித்துச் சென்றதால் அங்கு ஷாஜி படையுடன் சென்று அவனைக் கொன்றுவிட்டு வருமாறு பணித்தார். ஷாஜியும் அவ்வண்ணமே சித்திரக்கல் சென்று போரிட்டு கொள்ளையடித்த பரமா என்பவனைக் கொன்று அவன் சேர்த்து வைத்திருந்த செல்வங்களையெல்லாம் கொண்டு வந்து அலியடில்ஷாவிடம் கொடுத்துவிட்டு, தான் சதாராவுக்குத் திரும்பினார்.

                சிவாஜி புரந்தர் கோட்டைக்குச் சென்றிருந்தார். அங்கு தன் அமைச்சரான சுவர்ணர் என்கிற சோஜாஜி பண்டிதரை அழைத்து அதுவரை நடந்தவற்றையெல்லம் சொல்லி, டெல்லி பாதுஷா ஒளரங்கசீபையும், அலியடில்ஷாவையும் அடக்க வேண்டுமென்று ஆலோசனை கேட்டார். அவரும் அப்படிச் செய்வது சரியே என்று ஆலோசனை சொன்னார். டெல்லி பாதுஷாவோடும், அலியடில்ஷாவோடும் போரிடுவதற்கு சரியான இடம் எது என்பதை அமைச்சருடன் சிவாஜி ஆலோசனை செய்தார். மேலைக் கடற்கரைப் பக்கம் பிரதாபகெடி எனுமிடத்துக்கு அருகிலுள்ள ஜாவளி எனும் நகரத்தை முதலில் நம்மதாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்றும், அங்கு செல்லுகின்ற வழியில் இருக்கும் சிற்றரசர்களெல்லாம் அலியடில்ஷாவுக்குக் கப்பம் கட்டுபவர்கள் என்பதால் முதலில் அவர்களை வென்று வழி ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்று முடிவு செய்தார். அதற்கு முதலில் சிம்மகெடி எனும் கோட்டையைக் கைப்பற்ற வேண்டும் என்று பெரும் படையைத் தயார் செய்தார். விஜயதசமி நாளில் படைகளுடன் சிவாஜி புறப்பட்டார். வழியில் எதிர்த்து வந்த அனைவரையும் வென்றார். பாசிராஜா, கிருஷ்ண ராஜா, ஜனகராஜா, சந்திரராஜா ஆகியோரின் கோட்டைகளைப் பிடித்து அவற்றுக்கு ராய்கட் என்று பெயர் சூட்டிவிட்டு ஜெயவலி நகரத்துக்கு வந்தார். அங்கு இருந்த சந்திரராஜாவை விரட்டிவிட்டு அங்கும் தங்கள் தளபதிகளை நிறுத்தினார். தொடர்ந்து சென்று மேலைக் கடற்கரையை அடைந்து அங்கே கடலையொட்டி ஒரு கோட்டையை எழுப்பி அதற்கு சிவலங்கை என்று பெயர் சூட்டினார்.  அந்தக் கோட்டையில் அரியணையேறிய சிவாஜி முதலாவதாக தன் பெயரில் ஒரு சகாப்தம் தொடங்க எண்ணி அதற்கு சிவசகம் என்று புதிய ஆண்டு வரிசை முறையை உருவாக்கினார். இந்த தகவல்களையெல்லாம் துரத்தியடிக்கப்பட்ட சந்திரராஜா அலியடில்ஷாவிடம் சொன்னார்.

                சிவாஜியை ஒழித்தால் தான் தனக்கு நிம்மதி என்று கருதி அலியடில்ஷா தன்னிடமிருந்த பல தளபதிகளில் அப்சல்கான் என்கிற அப்துல்லாகானை அழைத்து, சிவாஜி தனக்கு எதிராக செய்துவரும் செயல்களையெல்லாம் சொல்லி, உடனே அவருடன் பன்னிரெண்டு தளபதிகளையும் படைகளுடன் அழைத்துச் சென்று, சிவாஜியைச் சிறைப்படுத்தி கொன்டுவருமாறு ஆணையிட்டார். அந்த நேரத்தில் சிவாஜி புனே நகருக்கு வந்திருந்தார். அவர் புனேவில் இருக்கும் நேரத்தில் சந்திரராஜா படையுடன் சென்று ஜாவளிக்குச் சென்று  அதையும் பிரதாபகெடியையும் பிடித்துக் கொள்ள அனுப்பி வைத்தார். அப்சல்கானும் தனக்களிக்கப்பட்ட பணியை, சிவாஜியைப் பிடித்துக் கொண்டு வருவதற்காகப் படையுடன் புறப்பட்டான். பல சந்தர்ப்பங்கள் அப்சல்கானுக்கு எதிராக அமைந்திருந்த போதிலும் அவன் சிவாஜியைப் பிடிப்பதே நோக்கம் என்று புறப்பட்டான்.

                சிவாஜி பவானி தேவி. குலதெய்வமான ஜெகதாம்பா துளஜா பவானியை மனத்தால் துதித்துக் கொண்டு எந்த காரியத்திலும் ஈடுபடுவார். அப்படி அவர் வழிபடும் அந்த பவானி சில நேரங்களில் அவர் மனதில் சொல்வதை அவர் உடனடியாகச் செய்து முடிப்பது வழக்கம். அது போல அப்போது பவானி அம்மன் சிவாஜியை உடனடியாக ஜாவளிக்குத் திரும்பச் சொல்வது போல உணர்ந்து, புனே உட்பட பல கொட்டைகளை வலுப்படுத்தி வைக்க ஆணையிட்டுவிட்டு, அந்த வழியாக அப்சல்கான் வரும்போது அவனைத் தடுக்காமல் மேலே போக அனுமதித்து விடுமாறும் பணித்தார். வழியில் அவரவர் படைகளை அப்சல்கான் கண்களில் படாமல் ஒளித்து மறைந்திருக்கச் செய்யுமாறும் கேட்டுக் கொண்டார். அப்சல்கானை தன்னுடைய இருப்பிடம் வரை வரவிட்டுவிட்டு அவனை அழித்தவுடன் நகரா அடித்து செய்தி பரப்பப்படும், அது ஒவ்வொரு கோட்டையாக பரவிவிடும். அப்போது அவரவர் படைகளை வெளிக் கொணர்ந்து அப்சல்கானுடன் வருகின்ற படையை அழிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுச் சென்றார்.

                அப்சல்கான் வழியில் உள்ள பிரபலமான ஆலயங்களைக் குறிப்பாக பண்டரிபுரத்துக்குச் சென்று விட்டோபா மூர்த்திக்கு ஊறு செய்துவிட்டுச் செல்ல விரும்பினார். ஆனால் அங்கு ஆலயத்தில் இருந்த விட்டோபா மூர்த்தியின் விக்ரகம் அங்கு இல்லாமல் போய் விட்டது. ஏமாற்றமடைந்த அப்சல்கான் துளஜாபுரம் சென்று அங்கு கோயில் கொண்டிருந்த துளஜா பவானி விக்ரகத்துக்கு கேடு விளைவிக்க எண்ணி அங்கு போனால், அங்கும் துளஜா பவானி விக்ரகம் காணாமல் போயிருந்தது. தொடர்ந்து விடாமல் அவன் செம்பு மகாதேவரின் ஆலயத்தை உடைக்க விரும்பி அங்கே சென்று தன் அழிவு வேலையைக் காட்டினான். அவன் படையில் இருந்த இதர மராத்திய சர்தார்கள் அப்சல்கானின் இந்த அடாத செயலைத் தடுத்தார்கள். பின்னர் அங்கிருந்து பல்லிவனம் எனும் இடத்துக்குச் செல்ல, அங்கு கோயில் கொண்டிருந்த விக்ரகமும் மறைந்து போய்விட்டது.

                தான் நினைத்தபடி சிவாஜி ராஜாவுக்கு தீங்கு விளைக்க எண்ணி அழிவு வேலைகளை நிறைவேற்ற முயன்றாலும் அவனுக்கு ஏமாற்றம் மட்டுமே விஞ்சியது. அப்சல்கான் தன் பக்கமிருந்த கிருஷ்ணாஜி பண்டிதரை அழைத்து சிவாஜியிடம் தூது அனுப்பினான். அவர் போய் சிவாஜியைச் சந்தித்து, அவர் தன் வசமுள்ள சிமாகெடி, பீமநதி, புரந்தரகெடி ஆகியவற்றை அப்சல்கான் வசம் ஒப்படைத்துவிட வேண்டுமென்றும், அவர் சிவாஜியை நேரில் சந்தித்துப் பேசும் போது வேறு எவைகளைச் செய்ய வேண்டுமென்று சொல்வார் என்று சொன்னார். சிவாஜி ராஜா இவர்களுடைய சதிகளை நன்கு உணர்ந்தவர் என்பதாலும் அப்சல்கான் என்ன எண்ணத்துடன் தன்னை நாடி வருகிறான் என்பதை உணர்ந்திருந்தாலும், அந்த அப்சல்கானைத் தான் ஜாவளியில் சந்திப்பதாக கிருஷ்ணாஜி பண்டிதரிடம் சொல்லி அனுப்பினார்.

                இதற்கிடையே அப்சல்கான் தன் பெரும் படையோடு வழிநெடுக எந்தவித எதிர்ப்புமின்றி படையை வழிநடத்திக் கொண்டு வந்து கொண்டிருந்தான். சிவாஜி ஒன்று நினைத்திருக்க அதற்கான திட்டங்களும் தயாராக இருக்க, இந்த விவரங்களையோ அல்லது அப்சல்கான் ஏதேனும் விளைவித்து விடுவானோ என்று சம்பாஜி ஒரு படையோடு வந்து அப்சல்கானை எதிர்த்தார். ஆனால் கொடு வெறி பிடித்த அப்சல்கான் அந்தப் போரில் சம்பாஜியை வீழ்த்தி அவரைக் கொன்று விட்டான். இந்த செய்தியைக் கேட்ட தந்தை ஷாஜி மனம் உடைந்து படுத்த படுக்கையானார். இரண்டு மாதங்கள் படுத்திருந்த அவர் மகன் இறந்த சோகத்தால் பீடிக்கப்பட்டு இறந்தார். அது கி.பி.1658ஆம் ஆண்டு. ஷாஜியின் இறுதிச் சடங்குகளை ஏகோஜி நடத்தினார். ஜீஜாபாய் தன் மகனான சிவாஜியைக் காண வந்திருந்தார். அவரைப் பிரதாபகெடியில் தங்க வைத்துவிட்டு சிவாஜி தன் அண்ணன் வீழ்த்தப்பட்ட ஆத்திரத்தில் அப்சல்கான் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

                ஜாவளிக்கு வந்த அப்சல்கானை ஊருக்கு வெளியில் ஒரு கூடாரம் அமைத்து அங்கே வந்து தங்கியிருந்து தன்னை அங்கேயே சந்தித்துப் பேசலாம் என்று சிவாஜி ராஜா சொல்லியனுப்பி யிருந்தார். அதன்படி அப்சல்கான் ஊருக்கு வெளியில் இருந்த அந்த முகாமில் தங்கினான். அவனை வரவேற்க பெருமளவில் ஏற்பாடுகளைச் செய்து அங்கே விருந்துக்கும், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்தி, அப்சல்கானுக்கு  பானங்களையும் கொடுத்து சிவாஜி சரியான நேரத்துக்குக் காத்திருந்தார்.

                வரவேற்புகள் எல்லாம் முடிந்த பின்னர் சிவாஜி அப்சல்கானை வரவேற்றார். சிவாஜியின் அழைப்பை ஏற்று அவரை அப்படியே தழுவிக் கொள்வது போல கரங்களை அகல விரித்து அவரைக் கட்டிப் பிடித்தான், உடனே மடியில் இருந்த கட்டாரியை எடுத்து சிவாஜி ராஜாவின் வயிற்றில் குத்தினான். இதுபோல வெல்லாம் நடக்குமென்று தெரிந்து வைத்திருந்த சிவாஜி ராஜா தான் புறப்படு போதே தன் உடையின் உட்பகுதியில் மெல்லிய இரும்பினால் ஆன கவச ஆடையை அணிந்திருந்தார். அதில் கத்தி இறங்காததால் அப்சல்கானின் கத்திக் குத்து சிவாஜி ராஜாவின் வயிற்றில் இறங்கவில்லை. எதற்கும் தயாராக இருந்த சிவாஜி ராஜா உடனே தன் பிச்சுவா கத்தியால் அப்சல்கானை அடித்து இடது கையில் அணிந்திருந்த புலி நகத்தால் அவன் வயிற்றைக் குத்தி இழுத்த வேகத்தில் அவன் வயிறு கிழிந்து உள்ளிருந்து குடல் வெளியே விழுந்தது. காட்டெருமை போல இருந்த அப்சல்கான் அதைப் பொருட்படுத்தாமல் வெளிவந்த தன் குடலை மேலே அணிந்திருந்த போர்வையால் மீண்டும் வயிற்றுக்குள் தள்ளி அது வெளிவரா வண்ணம் இறுகக் கட்டிக் கொண்டு தன் பட்டா கத்தியைக் கொண்டு சிவாஜியைத் தாக்க எத்தனித்தார். போரில் புலியான சிவாஜி அவனைத் தன் பட்டாக் கத்தியால் அடித்துத் தாக்கி வீழ்த்தினார். 1659இல் சிவாஜியின் வாளுக்கு இரையானான் அப்சல்கான்.

                இதெல்லாம் க்ஷத்திரியர்களுக்கிடையே யான விவகாரம் என்று அமைச்சர் கிருஷ்ணாஜி பண்டிதர் வேடிக்கைப் பார்க்க பார்ப்பதை விட்டு இவர் ஒரு கத்தியை எடுத்துக் கொண்டு சிவாஜி யோடு போரிட வந்தார். அவரை ஒரு பொருட்டாகவே கருதாத சிவாஜி, அந்தணர்களுக்குத் தீங்கு விளைப்பதை விரும்பாத அந்த மாபெரும் வீரன் , அவரை விலக்கிவிட்டு அலட்சியப்படுத்தி விட்டு  போய்க் கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சிவாஜி ராஜாவின் மெய்க்காவலன் ஒருவன் அந்த கிருஷ்ணாஜி பண்டிதரைத் தன் வாளால் ஒரே வெட்டில் வெட்டி சாய்த்து விட்டான். தர்மத்தை இழந்த அந்த பண்டிதன் பிணமாகி விழுந்தான்.

                முன்பே சிவாஜி தன்னுடைய தளபதிகளுக்கு அறிவுறுத்தியிருந்தபடிக்கு அவர்கள் அனைவரும் வரும் வழி நெடுக அப்சல்கான் படையை போகவிட்டு விட்டு மறைந்து கொண்டிருந்தார்கள். சிவாஜி அப்சல்கானைப் பழி தீர்த்தவுடன் நாகரா மூலம் தகவல் அனுப்பப்படும் என்று சொல்லியிருந்தபடி நாகரா ஒலிக்கப்பட்டது. ஓசை கேட்கும் தூரத்தில் இருந்த இன்னொரு இடத்தில் இந்த சத்தத்தைக் கேட்டு அங்கிருந்த நாகரா ஒலிக்கப்பட்டு, இப்படியே வழி நெடுக இருந்த கோட்டைகளுக்கெல்லாம் தகவல் அறிவிக்கப்பட்டு விட்டது. அப்சல்கான் விழுந்த உடனே அவனுடைய படைகளை சிவாஜியின் படை சூழ்ந்து கொண்டு அதை சின்னாபின்னப் படுத்திவிட்டது. சிறை பிடிக்கப்பட்ட அப்சல்கானின் சர்தார்களை சிவாஜி ராஜா மரியாதைகளோடு திரும்பச் செல்ல அனுமதித்தார். இந்த செய்திகள் எல்லாம் பிஜப்பூர் சுல்தான் அலியடில்ஷாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. தன்னுடைய சூழ்ச்சி பலிக்காததோடு தான் பெரிதும் நம்பியிருந்த அப்சல்கான் கொலையுண்டது அவருக்கு பெரும் வருத்தத்தை அளித்தது. அவன் ஒன்றைப் புரிந்து கொள்ளவில்லை. சிவாஜி ராஜாவின் அண்ணன் சம்பாஜியைப் போரில் கொன்ற போது சிவாஜி ராஜாவும் அப்படித்தானே வருந்தியிருப்பார்கள். இதை உணராதவராக அலியடில்ஷா இப்போது தன் நம்பிக்கைக்குரிய தளபதி இறந்ததற்காக வருத்தப்படுவது எப்படி சரியாகும்.

                சிவாஜி புனேயில் இருக்கும் போதே அலியடில்ஷா தன்னை அழிக்க அப்சல்கானை அனுப்புகிறார் என்கிற செய்தியைக் கேள்விப்பட்டு தன் உடனடியாக புறப்பட்டு வழிநெடுக தக்க ஏற்பாடுகளைச் செய்து விட்டு அப்சல்கானைத் தன்னுடைய இடத்தில் வைத்து ஒழித்து விட திட்டமிட்டார். அதன்படி எல்லாம் முடிந்தது. அவர் புனேயை விட்டு புறப்படும் முன்பாக அங்கு நேதாஜி என்பவரை அங்கு பார்த்துக் கொள்ளும்படி ஏற்பாடு செய்துவிட்டு வந்திருந்தார்.  அலியடில்ஷா தன் தளபதி அப்சல்கான் இறந்த கோபத்தில் பெரும் படையொன்றைத் திரட்டி வருகிறான் என்கிற செய்தி நேதாஜிக்குக் கிடைத்தது. உடனே அந்தத் தகவனை சிவாஜி ராஜாவுக்கு தெரியப்படித்தினார்.

                இவற்றையெல்லாம் எதிர்பார்த்திருந்த சிவாஜி தன்னுடைய பெரும் படையுடன் புறப்பட்டு வழியில் அலியடில்ஷாவுக்குச் சொந்தமான பல கோட்டைகளைப் பிடித்துக் கொண்டார். அவர்களில் ஒருவனான ஹிலால்கான் என்பவன் சிவாஜியிடம் சரணடைந்து அவர் பக்கம் போய்விட்டான். கட்சித் தாவல் அப்போதே இருந்திருக்கிறது. சிவாஜி ராஜா தான் வென்ற இடங்களில் எல்லாம் கோட்டைகளைத் தன் தளபதிகள் வசம் பாதுகாப்பாக இருக்க வைத்துவிட்டு பனால்கட் எனுமிடத்தில் இருந்த கோட்டையைக் கைப்பற்றி அங்கே தங்கினார். சிவாஜி இந்தக் கோட்டையைத் தாக்கக் கூடும் என்பதை அறிந்திருந்த அலியடில்ஷா ருஸ்தும்கான் என்பவரை அனுப்பி விவரம் தெரிந்து வர அனுப்பினார். அவர் சென்று சிவாஜி பனால்கட்கெடியைப் பிடித்துக் கொண்டு அங்கே தங்கியிருக்கும் விவரத்தை அலியடில்ஷாவுக்குத் தெரியப்படுத்தினார்.

                தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாத அலியடில்ஷா இந்த விவரங்களையெல்லாம் டெல்லி பாதுஷா ஒளரங்கசீபுக்குச் சொல்லி அனுப்பினார். இதனைக் கேட்ட ஒளரங்கசீப் கோபமடைந்து ஜுல்ப்கர் கான் என்பவரின் தலைமையில் ஒரு பெரும் படையை அனுப்பினார். இந்த டெல்லி படையுடன் ருஸ்தும்கான் படையும் சேர்ந்து கொண்டு சிவாஜி இருக்கும் பனால்கட் கோட்டையை நோக்கி வந்தன.  இப்படி டெல்லி பாதுஷா படையும், ருஸ்தும்கான் படையும் தன்னைத் தாக்க வரும் செய்தியறிந்து சிவாஜி தன் கோட்டையை விட்டு புறப்பட்டு எதிரியின் படைகள் வரும் வழியில் குறுக்கிட்டு அவர்கள் எதிர்பாராத படிதாக்கி அவர்களைத் தோற்கடித்து விரட்டியடித்தார். ஓடியவர்கள் திரும்பத் திரும்ப வந்து சிவாஜியைத் தாக்க முயன்றும் ஒன்றும் செய்யமுடியாமல் தோற்றுப் போயினர்.

                தன் படை, அலியடில்ஷாவின் சுல்ப்கர்கான் படையும் சிவாஜியிடம் தோற்ற செய்தியைக் கேட்டு ஒளரங்கசீப் கோபமடைந்து சிவாஜி இருக்குமிடத்தை விசாரித்தார். சிவாஜி எதிரிகளின் கோட்டைகளையெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வென்று விட்டதையும், சிவாஜியின் படை நேதாஜி தலைமையில் மேலும் பல கோட்டைகளை வென்றெடுக்க முயல்வதையும் கேள்விப் பட்டார். உடனே ஒளரங்கசீப் தன் மாமனாரான சயிஷ்டாகான் என்பவரை அழைத்து பல தளபதிகளின் தலைமையில் பெரும்படையொன்றை அனுப்பி எப்படியாவது சிவாஜியைப் பிடித்து வருமாறு பணித்தார். அதன்படி சயிஷ்டாகான் பெரும் படையோடு சிவாஜி இருக்குமிடம் நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். இதற்கிடையே அலியடில்ஷா சிவாஜியின் திறமைகள் சூழ்ச்சிகள் அனைத்தும் அறிந்தவனாக இருந்தமையால், சயிஷ்டாகான் வருவதை அறிந்தால் சிவாஜி அவரை வழிமறிக்க வாய்ப்பிருப்பதால், அவரை பனால்கட் கோட்டையிலிருந்து வெளிவராத படி கொட்டையை முற்றுகை யிடுமாறு ஜோகர்கான் என்பவர் தலைமையில் ஒரு படையை அனுப்பி வைத்தார். அதன்படியே ஜோகர்கான் தன் படையுடன் சென்று பனால்கட் கோட்டையை கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் முற்றுகையிட்டார்.

                ஒளரங்கசீபின் மாமனாரான சயிஷ்டாகான் சக்ராபதி கோட்டையை முற்றுகை யிட்டார். இப்படி தான் இருக்கும் கோட்டையையும், சக்ராபதி கோட்டையும் எதிரியின் படைகள் முற்றுகை இட்டிருப்பதைப் பற்றி சிவாஜி பொருட்படுத்தவில்லை. ஜீஜாபாய் தன் மகன் சிவாஜி பனாலகெடி கோட்டையில் மாட்டிக் கொண்டிருக்கிறார் என்கிற செய்தியைக் கேள்விப் பட்டார். சயிஷ்டாகான் சக்ராபதி கோட்டையை முற்றுகையிட்டிருக்கும் செய்தியையும் கேள்விப் பட்டார். தன் மகனை எப்படியும் இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் காப்பாற்றி வெளிக்கொணர வேண்டுமென்று ஜீஜாபாய் திட்டமிட்டார். சிவாஜியின் புனா தளபது நேதாஜியும் இன்னொரு தளபதியான ஷிலால் கான் என்பவரும் அப்போது ஜீஜாபாயைச் சந்திக்க வந்திருந்தனர்.  அவர் கேட்டுக் கொண்டபடி சிவாஜியை மீட்பதற்காக அவ்விருவரும் பனால்கெடி கோட்டைக்குப் படையுடன் புறப்பட்டார்கள். அவர்களை சயிஷ்டாகான் வழிமறித்தான். அப்போது நடந்த போரில் சிவாஜிக்கு ஆதரவாகச் சென்ற தளபதி ஷிலால்கானின் மகன் இறந்து போனான். இதையெல்லாம் சிவாஜி ராஜா கேள்விப்பட்டு வருத்தமடைந்தார். துளசி பவானி அம்மனை வேண்டிக் கொண்டு படுத்தார். நள்ளிரவில் எழுந்து பனாலாகெடிக்கு திரயம்பக பாஸ்கர் என்பவரைக் காவலுக்கு வைத்துவிட்டு ஒருவரும் அறியா வண்ணம் இவர் கோட்டையை விட்டு வெளிப்போந்து ஐந்து காத தூரத்தில் இருந்த விசால்கட் கோட்டையைச் சென்றடைந்தார். இதை அறிந்த டெல்லி படைத் தளபதி சிவாஜியைப் பிடித்து வர படையை அனுப்பினான். இதற்கிடையே பல்லிவனத்தரசர் எசவந்த ராஜாவும், ஸ்ரீஉங்கார்பூர் சூரியராஜாவும் விசால்கட் கோட்டையைப் பிடித்துக் கொள்ள முற்றுகை யிட்டனர். சிவாஜி அங்கிருந்தும் புறப்பட்டு ராஜகெடிக்குச் சென்று அங்கே இருந்த தாய் ஜீஜாபாயைச் சந்தித்து வணங்கினார். சிவாஜியைப் பிடிப்பதற்காக அனுப்பப்பட்ட டெல்லி தளபதி தன் இயலாமை குறித்து அவமானப் பட்டுத் திரும்பிப் போய்விட்டார்.

                சிவாஜியின் ஆணைப்படி திரயபக பாஸ்கர் பனாலகெடி கோட்டையை ஜோகர்கானிடம் ஒப்படைத்துவிட்டு சிவாஜியிடம் திரும்பி வந்தார். அலியடில்ஷாவுக்கு ஜோகர்கான் மீது சந்தேகம். இவன் சிவாஜிக்கு உடந்தையாக இருந்துய் அவரை விட்டுவிட்டான் என்று கருதினார். அதனால் அவனை அழைத்து சிவாஜியை விடுவித்ததற்காக உனக்கு என்ன கிடைத்ததோ அதை என்னிடம் கொடுத்திவிடு என்றார். தன் மீது சந்தேகம் கொண்டு இப்படிக் கேட்கிறார் அலியடில்ஷா என்பதறிந்து ஜோகர்கான் அங்கிருந்து புறப்பட்டு கர்னூலுக்குப் போய்விட்டான். இவன் இப்படித் தப்பிப் போய்விட்டான் என்று கருதிய அலியடில்ஷா ஒரு படையை அனுப்பி ஜோகர்கானுக்குத் தக்க பாடம் புகட்டும்படி சொல்லி அனுப்பினார். அவர்கள் சென்று ஜோகர்கானுக்கு விஷம் கொடுத்துக் கொன்று விட்டனர்.

                சிவாஜிக்கு ஒரு ரகசிய செய்தி வந்தது. சயிஷ்டாகான், கரதலப் கான் என்பவனுடன் ஒரு படையை அழைத்துக் கொண்டு ராஜகெடி கோட்டைக்கு வந்திருப்பதாக சிவாஜிக்குத் தகவல் கிடைத்தது. அவர் ரகசியமாக ஒரு சிறிய படையை ஜெயவலி எனும் பகுதியில் காட்டில் மறைவாகப் பதுங்கியிருக்குமாறு அனுப்பி வைத்தார். இந்த கரதலப் கான் வழிநெடுக பல கோட்டைகளைப் பிடித்துக் கொண்டு சிவாஜியின் படை மறைந்திருக்கும் காட்டுப் பகுதிக்குள் நுழைந்தான். அப்போத் கரதலப் கான் படைக்கும், சிவாஜி படைக்கும் கடும் போர் நிகழ்ந்தது. போரின் முடிவு தனக்கு சாதகமாக இருக்காது, தான் இறப்பதும் நிச்சயம் என்று தெரிந்த வுடன் அந்த கரதலப் கான் தான் கொள்ளையடித்த பொருட்கள் அனைத்தையும் சிவாஜி படையிடம் ஒப்படைத்துவிட்டுத் தன்னைத் தூண்டி அனுப்பி வைத்த சயிஷ்டாகானிடம் போய்ச் சேர்ந்தான்.

                சிவாஜி தன்னுடைய நண்பன் நேதாஜியுடன் படைகளுடன் புறப்பட்டு வல்லிவனத்துக்குச் சென்றார். அங்கு ஜெயவந்தி ராஜா என்பவர் அரசாண்டு கொண்டிருந்தார். இவர்கள் வல்லிவனத்துக்குப் போயிருந்த சமயம் அதன் அரசர் சிருங்கார்ப்பூர் எனும் பிரதேசத்தின் அரசரான சூர்யராஜா என்பவரிடம் போயிருந்தார். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சிவாஜி ராஜா சித்ரபுளினம் எனுமிடத்துக்குச் சென்றார். அங்கிருந்து மேலைக் கடற்கரைப் பகுதிகளுக்கெல்லாம் சென்று அங்கிருந்த சிற்றரசர்களை யெல்லாம் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து அங்கு வாணிபம் செய்ய வந்து இறங்கியிருந்த ஐரோப்பிய வெள்ளையின மக்களையும் தனக்குக் கப்பம் செலுத்தும்படி செய்துவிட்டு ஊர் திரும்பினார்.

                பிறகு சிவாஜி சித்ரதுர்க்கம் கோட்டையைப் பிடித்துக் கொண்டு அதற்கு மண்டன கட் என்று பெயர் சூட்டினார். பெங்களூர், செஞ்சி ஆகிய பகுதிகளையும் கைப்பறிக் கொண்டு அப்போது வியாபாரம் செய்ய வந்திறங்கியிருந்த பிரெஞ்சுக் காரர்களை 1680இல் சந்தித்து அவர்களுடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டு புனேவுக்குத் திரும்பினார்.

                இப்படி சிவாஜி ராஜா எவருக்கும் அடிபணியாத, எந்தப் போரிலும் வெற்றி பெற்று, தேவையான இடங்களில் சூழ்ச்சி செய்து யாரிடமும் தோல்வியடையாமல் தொடர்ந்து தன் வீரப்பயணத்தைச் செய்வது கண்டு அலியடில்ஷாவும், ஒளரங்கசீபும் சிவாஜியின் போர்த்திறமை குறித்து வியந்து போனார்கள். திரும்பத் திரும்ப சிவாஜியோடு மோதி சண்டையிட்டு தோல்வியடைவதினும் சும்மா இருப்பதே சுகம் என்று தீர்மானித்தனர். இருந்தாலும் ஒளரங்கசீபுக்கு இந்த சிவாஜியை உயிரோடு பிடித்துக் கொண்டு வந்து நேரில் பார்க்க வேண்டுமென்கிற ஆசை ஏற்பட்டது. அந்த ஆசை இதுவரை நிறைவேறவில்லை. சிவாஜியின் ஒரு உருவப் படத்தையாவது பார்க்கவேண்டுமென்று ஒளரங்கசீப் சொல்ல, ஒரு சித்திரம் வரைவோன் போய் சிவாஜியைப் பல இடங்களிலும் தேடியும் அவர் இருக்குமிடம் மட்டும் தெரியவே இல்லை. அப்படி அந்தச் சித்திரக்காரன் அவர் படத்தை வரைய திண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு நாள் சிவாஜி ஒரு குதிரையின் மீதேறி படு வேகமாக ஓட்டிச் சென்று கொண்டே அருகில் விளைந்திருந்த சோளக் கதிர்களைப் பறித்துத் தின்றுவிட்டு அதன் சக்கையை குதிரைக்கு ஊட்டிவிட்டதை அவன் பார்த்தான். உடனே அதை மனதில் வாங்கிக் கொண்டு அவன் சிவாஜியை ஒரு படம் வரைந்து ஒளரங்கசீபுக்கு அனுப்பி வைத்தான். அந்தப் படத்தில் சிவாஜி பயணித்த வேகம், அவர் சோளக் கதிரை பறித்த லாவகம், அதைத் தின்றுவிட்டு சக்கையை குதிரைக்குக் கொடுத்தது கண்டு ஒளரங்கசீப் வியந்து போய், இந்த மாவீரனை வெல்வது என்பது இயலாது என்ற முடிவுக்கு வந்தார்.  

                இதன் பிறகு சிவாஜி தன் அண்ணன் சம்பாஜியின் மனைவி மக்களையெல்லாம் கூட்டிக் கொண்டு ராஜாபுரத்தில் கொண்டு போய்த் தங்க வைத்தார். சம்பாஜியின் மகன் உமாஜி, அவர் மனைவி சக்குபாயி, அவர்களுக்கு ஒரு மகன் ஆகியோர் இருந்தனர். அந்த குழந்தைக்கு பரசோஜி என்று பெயர்.

                ஷாஜியின் முதல் மனைவியின் மகன் ஏகோஜி என்பதால் ஷாஜியின் விருதுகள் அனைத்தும் அவருக்குக் கிடைத்தன. ஏகோஜி தன் மனைவியரான தீபா பாயி, சயி பாயி ஆகியோருடன் தன் படையுடன் பெங்களூருக்குப் புறப்பட்டுச் சென்றார். இந்த சமயத்தில் அலியடில்ஷா ஏகோஜியுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்பி அவருடன் பேசி அவரைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டதோடு அவரை பெங்களூரில் இருக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.

                இந்த காலகட்டத்தில் தஞ்சையை ஆண்டு கொண்டிருந்த விஜயராகவ நாயக்கருக்கும், மதுரை சொக்கநாத நாயக்கர் அவர் தம்பி அழகிரி நாயக்கர் ஆகியோருடன் பெண் கொடுத்தல் விஷயமாக விரோதம் உன்டாகி மதுரைக் காரர்கள் தஞ்சாவூர் மீது படையெடுத்து வந்து விஜயராகவ நாயக்கரையும் அவர் மகனையும் போரில் கொன்று விட்டனர். விஜயராகவ நாயக்கர் தான் போருக்குப் போகும் முன்பாக தன் நம்பிக்கைக்கு உரிய ஆள் ஒருவரிடம் சொல்லி தான் போரில் மாண்டு போனால் தன் அந்தப்புரப் பெண்கள் யாரும் மதுரை நாயக்கர் வசம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்றும் அப்படி நேருமானால் அரண்மனையின் அந்தப் புரத்தை வெடிவைத்துத் தகர்த்துவிட வேண்டுமென்று சொல்லிவிட்டுப் போனார். அதன்படி அவர் மாண்ட பின் அரண்மனை அந்தப்புரம் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டது. எல்லா பெண்களும் உயிரிழந்தனர். அதில் விஜயராகவ நாயக்கரின் பேரக் குழந்தை ஒன்று மட்டும் தப்பிப் பிழைத்தது. அந்த செங்கமலதாஸ் எனும் குழந்தையை ஒரு ஆயா நாகைப்பட்டணம் கொண்டு போய் வளர்த்தாள். இந்த செய்தி அறிந்த ராயசம் வெங்கண்ணா எனும் அமைச்சர் அந்தப் பையனை வளர்ந்து இளைஞனாக இருந்த நேரத்தில் பல வீரர்களுடன் சென்று அலியடில்ஷாவிடம் முறையிட்டு இந்தச் சிறுவன் தான் தஞ்சைக்கு வாரிசு என்றும், மதுரை நாயக்கர்கள் தஞ்சையை ஆக்கிரமித்துக் கொன்டிருக்கிறார்கள் என்பதைச் சொல்லி இந்த பையன் செங்கமலதாசுக்கு ஆட்சியை மீட்டுத் தரும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி அலியடில்ஷா பெங்களுரில் இருந்த ஏகோஜியை அழைத்து தன் தளபதிகள் ஏதில்ஷா, காதர் கலாஸ்கான் எனும் இருவரையும் அனுப்பி தஞ்சையை மீட்டுக் கொடுக்கச் சொன்னார். அவர்கள் ஏகோஜி தலைமையில் வந்து தஞ்சையை மீட்டு செங்கமலதாசுக்குக் கொடுத்தனர். வரும் வழியில் அவர்கள் ஆரணியை வென்று அங்கு வேதாஜி பாஸ்கர் என்பவர் வசம் கொடுத்துவிட்டு தஞ்சையை மீட்டுக் கொடுத்தனர். அப்படிச் செய்துவிட்டு ஏகோஜி ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தபோது திருமழபாடி எனும் இடத்தில்  1596இல் அவருடைய மனைவி தீபாபாயிக்கு ஒரு மகன் பிறந்தான். அவருக்கு சரபோஜி என்று பெயரிட்டார். மீட்டுக் கொடுத்த தஞ்சாவூரில் மீன்டும் தகராறு ஏற்பட்டு ஏகோஜியிடம் பஞ்சாயத்துக்குப் போன பொது அவரையே தஞ்சையை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டதால், அவர் அலியடில்ஷாவுக்குச் சொல்லி அவர் அனுமதியுடன் தஞ்சைக்குத் திரும்பி அரசராக ஆனார். அலியடில்ஷா அனுப்பி வைத்த சர்தார்களான இருவரையும் நிறைய பரிசுப் பொருட்களுடன் திரும்ப அனுப்பி வைத்தார்.

                சிவாஜிக்கு எட்டு மனைவியர், அவர்கள் சயிபாயி, காசிபாயி, சக்வராபாயி, புதுனாபாயி, சகுணாபாயி, சோயரிபாயி, மாளவோ, விசாரே குலத்திலிருந்து இரு பெண்கல் ஆகியோர் ஆக எண்மர். இதில் மூத்த மனைவி சயிபாயிக்கு மூன்று பெண் குழந்தைகள். 1596இல் ஆண் குழந்தை சம்பாஜி பிறந்தார். சிவாஜியின் மூத்த பெண் சக்குவார்பாயியை நிம்பல்கர் குடும்பத்திலும், இரண்டாவது பெண் ராணு பாயியை ஜாதவ் குடும்பத்திலும், மூன்றாவது பெண் அம்பிகா பாயியை மாடிக் குடும்பத்திலும் திருமணம் செய்து கொடுத்தார். மாடிக் குடும்பத்தாருக்கு ஷாஜி செஞ்சிப் பகுதியில் சில பகுதிகளைக் கொடுத்தார்.

                சிவாஜியின் இன்னொரு மனைவியான சக்வராபாயிக்குக் கமலா பாயி என்றொரு பெண், இவளை சிவாஜி, நேதோஜி என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.  சுகுணா பாயிக்கு ராஜகுமாரா பாயி என்றொரு பெண் இருந்தாள். இவளை கேனோஜி சிற்கே என்பவருக்கு மணம் முடித்துக் கொடுத்தார். சிவாஜியின் இன்னொரு மனைவி சோயரி பாயிக்கு ராஜராஜா என்ற ஒரு மகனும் தாது பாயி எனும் ஒரு மகளும் இருந்தனர். மற்ற மனைவியருக்கு மக்கட்பேறு இல்லை.

                சிவாஜி தன் மூத்த மகன் சம்பாஜிக்கு 1602இல் பட்டம் கட்டி புனே பகுதியையும், இன்னொரு மகன் ராஜா ராம் என்பவருக்கு செஞ்சி அரசையும் அளித்தார். அதன் பின் புனே சுல்தான்கள் வசம் போய்விட்டது.  ராஜாராம் செஞ்சியை விட்டு நீங்கி மீண்டும் தந்தையிடம் சென்ற பிறகு அவருக்கு பனாலகெட் கோட்டை கொடுக்கப்பட்டது.

                ஒரு முறை சிவாஜி ராஜா ராமேஸ்வரம் யாத்திரை சென்று தனியொரு ஆளாகத் திரும்பி வந்து கொண்டிருந்த போது ஏகோஜியின் ஆட்சியின் கீழ் இருந்த தஞ்சாவூருக்கு வந்திருந்தார். இவர் வந்தது ஏகோஜிக்குக் கூட தெரியாது. சிவாஜி ராஜா ஊருக்குள் வந்து தஞ்சாவூர் கோட்டையை நன்கு சுற்றிப் பார்த்தார். தன் வழிப்பயணத்துக்கு பணம் தேவைப் பட்டதால், தன்னுடைய  தலைப்பாகை, மோதிரம் இவற்றை ஒரு கடையில் அடமானம் வைத்து பணம் வாங்கிக் கொண்டு ஊர் திரும்புகையில் திருமானூர் அருகில் கொள்ளிட வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு அங்கிருந்த கிராம மக்களால் யார் என்றே இவ்ரைத் தெரியாமல் காப்பாற்றி கரை சேர்த்தனர். இதில் சிவாஜி ராஜாவின் குதிரையும் ஆற்று வெள்ளத்தில் போனதை கிராம மக்கள் காப்பாற்றினர். சிவாஜி ராஜாவுக்கு காய்ச்சல் வந்து சில நாட்கள் அந்த கிராம மக்கள் பாதுகாப்பளித்து சுகப்படுத்தினர். உடல் நலம் பெற்றதும் இவர் விடை பெற்றுக் கொண்ட பொதும் அவர் தன்னை யார் என்று அறிமுகம் செய்து கொள்ளாமலே ஊர் திரும்பிய சமயம் அவ்வூர் மக்களுக்கு இரு குறுவாளையும் ஒரு கேடயத்தையும் அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டுச் சென்றார். (ஒய்.பி.சவான் மகாராஷ்ட்ரா மாநில முதல்வராக இருந்த போது மும்பையிலிருந்து வந்த ஒரு ஆய்வுக் குழு, திருமானூர் அருகில் கொள்ளிடக் கரையருகில் இருந்த ஒரு பவானி அம்மன் ஆலயத்தில் சத்ரபதி சிவாஜி அந்த கிராம மக்களுக்குக் கொடுத்த இரு குறு வாட்களும் கேடயமும் அம்மன் விக்ரகத்துக்குப் பின்புறம் சுவற்றில் மாட்டப்பட்டிருந்ததை, சிவாஜியினுடையது என்பதைக் கண்டு பிடித்து எடுத்துச் சென்ற வரலாறு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு சிவாஜியின் 1974இல் அவர் முடிசூடிய 300ஆம் ஆண்டு விழா மலரில் வெளிவந்தது). சிவாஜி ராஜா ஊர் திரும்பிய பிறகு தஞ்சை ஏகோஜிக்கு ஒரு கடிதம் எழுதி தான் தஞ்சையில் ஓரிடத்தில் தன் தலைப்பாகை, மோதிரம் இவற்றை அடகு வைத்திருப்பதைச் சொல்லி அதனை மீட்டு தனக்கு அனுப்புமாறு கடிதம் எழுதினார் என்கிற செய்தி, இரண்டாம் சரபோஜி எழுதி தஞ்சை ஆலயத்தில் கல்வெட்டில் பதிக்கப்பட்டிருக்கிற “போன்ஸ்லே வம்சத்து வரலாறு” எனும் பகுதியில் விவரங்கள் காணப்படுகின்றன. இது இப்போது நூலாகவும் வெளிவந்திருக்கிறது.

                சத்ரபதி சிவாஜி தன்னுடைய வீரத்தினாலும், தட்சிண சுல்தான்களையும், டெல்லி பாதுஷாவையும் எதிர்த்துப் போரிட்டு மேற்குப் பகுதியில் பற்பல கோட்டைகளைத் தனதாக்கிக் கொண்டு எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர், தனது 53ஆம் வயதில் 3-4-1680இல் காலமானார். சத்ரபதி சிவாஜியின் புகழும் வீரமும் காலம் காலத்துக்கும் நிலைத்து நிற்கும் வீர காவியம் ஆகும். வாழ்க சத்ரபதி சிவாஜி மகராஜ் புகழ்!!
               
               



Friday, October 11, 2019

கவி காளமேகம்


                                                            கவி காளமேகம்.

            கவி காளமேகம் தமிழ்ப் புலவர்களில் சிலேடையெனும் இருவேறு வகையான பொருட்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைச் சொல்லுவது. ஒரு பொருளை இன்னொன்றோடு ஒப்பிட்டு இவ்விரு பொருளுக்குமான ஒற்றுமையை விளக்குவது. அப்படிப்பட்ட சிலேடைகளைச் சொல்லி வெண்பாக்கள் எழுதி பெரும் புகழ் பெற்றவர் காளமேகம். இவருடைய கிண்டல், பிடிக்காதவர்களை மட்டம் தட்டிப் பாடுவது, எதிரிகளைக் கடுமையாக விமர்சித்துப் பாடுவது போன்றவை இவருடைய பாடல்களில் அதிகம் காணலாம். 15ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்களின் கீழுள்ள சிற்றரசர்கள் ஆண்ட காலம். அப்போது மதுரை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், செஞ்சி போன்ற இடங்களில் விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்களால் அனுப்பபட்ட சிற்றரசர்கள் ஆண்டு வந்தனர்.  அப்படிப்பட்ட காலத்தில் கவி காளமேகம் என்பார் பிறந்து இதர புலவர்களைப் போலன்றி இவர் பல புதிய முறைகளைக் கையாண்டு தமிழ்க் கவிதைகளை இயற்றி அனைவரையும் மகிழ்ச்சியும் அடையச் செய்திருக்கிறார், சில வேண்டாதவர்களை வெறுப்படையவும் செய்திருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு விநோதமான கவிஞரின் பாடல்களை எல்லோரும் படித்திருப்பார்களா தெரியவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பள்ளிக்கூட பாடங்களில் இவருடைய சிலேடைப் பாடல்கள் பாடமாக வைக்கப்பட்டிருந்தது, இப்போதைய நிலை என்னவென்று தெரியவில்லை.

            யார் இந்த கவி காளமேகம்? இவருடைய சொந்த வாழ்க்கை வரலாற்றுக்கும், இவரது கவிதைகளுக்கும் அதிகம் சம்பந்தம் உண்டு. இவருக்குப் பிடிக்காதவர்களை இவர் நேருக்கு நேர் மிகக் கடுமையாகத் தாக்கி பாடல்களைப் பாடிவிடுவது வழக்கம். சிலரை முகஸ்துதி செய்து பாடவும் செய்திருக்கிறார். பொதுவாக கிண்டல் செய்து பாடுவதில் இவர் வல்லவர். ஒருவர் சொல்லும் சொல்லின் வேறொரு பொருளை மனதில் கொண்டும் சில பாடல்களைப் பாடி பாடலைக் கேட்டவரை இவர் திணரடித்திருக்கிறார். இவர் ஒரு ஆசுகவி, பிறரை வசைபாடுவதில் வல்லவர் என்பதால் “வசைபாட காளமேகம்” என்றொரு சொல்வழக்கே உருவானது.

            இவர் வாழ்க்கை வரலாறே மிகவும் சுவையானது. பழங்காலக் கவிஞர்கள் வறுமை காரணமாக மன்னர்களிடமெல்லாம் சென்று இரந்துண்டு வாழ்ந்த வரலாறு இவரிடம் இல்லை. இவர் கவிஞராக ஆனதே ஒரு சுவையான வரலாறு. இவருடைய வாழ்க்கை வரலாற்றை இந்நூலில் மிக சுருக்கமாகப் பார்ப்போம்.

            காவிரிக் கரையில் தஞ்சாவூர் ராஜ்யத்தில் நாயக்க மன்னர்கள் ஆண்ட காலம் அது. விஜயநகர மன்னர்களால் இங்கு அனுப்பப்பட்டு இந்தப் பகுதிகளைக் குறிப்பாக முந்தைய முழுமையான தஞ்சாவூர் மாவட்டத்தை உள்ளடக்கிய பகுதிகளில் நான்கு நாயக்க மன்னர்கள் சுமார் 130 ஆண்டுகள் ஆட்சி புரிந்திருக்கின்றனர். அவர்கள் சேவப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர், விஜயராகவ நாயக்கர் ஆகியோராவர். கடைசி மன்னரான விஜயராகவ நாயக்கர் மதுரை நாயக்க அரசர்களோடு எற்பட்ட விரோதம் காரணமாக தஞ்சை கோட்டைக்குள் நடந்த போரில் நடந்த போரில் கொல்லப்பட்டார். இவருக்குப் பிறகு மதுரை அழகிரி நாயக்கர் என்பார் சிலகாலம் அரசாளத் தொடங்கியவுடன், கடைசி மன்னன் விஜயராகவனின் பேரன் புஜப்பூர் சுல்தான் அலி அடில்ஷா விடம் உதவி கேட்டு, அவர் வெங்கோஜி எனும் மராட்டிய வீரன் தலைமையில் ஒரு படையை அனுப்பு தஞ்சாவூரை மீட்டு அந்த மராத்தா வம்சம் சுமார் 180 ஆண்டுகள் தஞ்சையை ஆண்டது என்பது வரலாறு. கடைசி மராத்திய மன்னர் இரண்டாம் சிவாஜி மன்னர் 1855இல் காலமான பின்பு பிரிட்டிஷார் ஆட்சியைத் தாங்களே எடுத்துக் கொண்டனர். இந்த இரண்டாம் சிவாஜியின் தந்தைதான் சரபோஜி மன்னர்.

            இப்படி நாயக்கர்கள் தஞ்சாவூர் ராஜ்யத்தை ஆண்ட காலத்தில் வாழ்ந்தவர் புலவர் காளமேகம். இவர் கும்பகோணம் எனும் தலத்துக்குத் தெற்கே சிலகல் தூரத்திலுள்ள நந்திபுரம் என்கிற நாதன்கோயில் எனும் ஊரில் பிறந்தவர். இவருக்கு மதுரை அருகிலுள்ள திருமோகூர் எனும் தலத்தில் கோயில் கொண்டிருக்கும் காளமேகப் பெருமாளின் பெயர் சூட்டப்பட்டதாயினும் இவரை வரதன் என்றே அனைவரும் அழைப்பர். திருமோகூர் பெருமாள் ஆலயத்தில் மடப்பள்ளியில் பரிசாரகராக இருந்த ஒருவருடைய மகன் தான் இந்த வரதன் எனும் காளமேகம்.  இவருடைய இயற்பெயர் வரதன் என்பதாகவே இருந்திருக்க வேண்டும். இவன் அன்னை அகிலாண்டேஸ்வரியின் அருளால் புலவனாக ஆன பின்பு, இவன் கவிதைகளை நீருண்ட மேகம் போல பொழிவதால் காளமேகம் என்ற பெயரையும் அடைந்திருக்கலாம். இதனை வலியுறுத்த தஞ்சை மாவட்டத்தில் நாகைக்கு அருகில் சில கல் தொலைவில் அமைந்துள்ள திருமலைராயன்பட்டினம் எனும் ஊரில் சிற்றரசர் திருமலைராயன் என்பவர் அவையில் தலைமைப் புலவராக இருந்த அதிமதுரகவி என்பார் நம் காளமேகத்துடன் மோதித் தோற்றவர். அவர் காளமேகத்தைக் குறிக்கும் வகையில் இயற்றியுள்ள ஒரு பாடலில் “வாசவயல் நந்தி வரதா, திசையனைத்தும் வீசுகவி காளமேகமே” என்று இவரைக் குறிப்பிடுவதிலிருந்து இவர் இயற்பெயர் வரதன் என்பது விளங்குகிறது.
அந்தப் பாடல்:

“வாசவயல் நந்தி வரதா திசையனைத்தும்                                                                                  வீசுகவி காள மேகமே – பூசுரா                                                                                 விண்தின்ற வெளவழலில் வேவுதே பாவியேன்                                                                           மண்தின்ற பாணமென்ற வாய்:”

            இவருடைய தந்தையார் திருவரங்கம் அரங்கநாதப் பெருமாள் ஆலயத்திலுள்ள ம டப்பள்ளியில் பரிசாரகராக இருந்து வந்தார். ஆகையால் அவரைப் பின் பற்றி வரதனும் அதே ஆலயத்தின் மடப்பள்ளியில் பரிசாரகனாகப் பணிசெய்யத் தொடங்கினார். இப்படி ஆலயங்களில் மடப்பள்ளியில் பணியாற்றுவோர் பாரம்பரியமாக அதே தொழிலைச் செய்து கொண்டு வருவதால் அதிகம் கல்வி கற்க வாய்ப்பு கிடையாது. அது போலவே வரதனும் தன் சமையல் தொழிலை நன்கு செய்து பெருமாளுக்கு நல்ல ருசியான புளியோதரை, ததியோன்னம், அக்கார அடிசில் (சர்க்கரைப் பொங்கல்) போன்றவற்றைச் செய்து படைப்பதை மிகத் திறமையாக செய்து வந்திருக்க வேண்டும். இவன் கல்வித் தகுதி பற்றி தெரிந்து கொள்ள எந்தவித சான்றுகளும் இல்லை. எனவே முறையாக தமிழ் படித்து இலக்கண இலக்கியங்களைக் கற்று கவி எழுதும் ஆற்றல் உள்ளவனாக இருந்திருக்க முடியாது.  அப்படியென்றால் காளமேகம் கவிஞனானது எப்படி, ஆசுகவியாகி, சிலேடைக் கவிகளில் தலைசிறந்து விளங்கியது எப்படி என்கிற ஐயம் எழுவது இயற்கையே. ஆம்! அவன் கவிஞனானது ஒரு விசித்திரமான சூழ்நிலைதான். சிலருக்கு யோகம் அடிக்கும், வேறொருவருக்குப் போகவேண்டிய பெருமைகள் சிலசமயம் பெறுபவர் அலட்சியத்தாலோ, அல்லது காலக் கொடுமையாலோ, அவருக்குக் கிடைக்காமல்  எதிர்பாராத ஒருவருக்குக் கிடைத்துவிடுவது உண்டு. அப்படிக் கிடைத்ததுதான் வரதனுக்குக் கவிபாடும் திறமை கிடைத்தது.

            வரதன் திருவரங்கப் பெருமாள் ஆலயத்தின் மடப்பள்ளியில் பரிசாரகன். அவனுக்கு அருகில் இருக்கும் திருவானைக்காத் தலத்தில் இருக்கும் அகிலாண்டேஸ்வரி அம்மன் அனுக்கிரகம் செய்து அளித்த பிச்சையே கவிபாடும் திறன். அது ஒரு விசித்திரமான சூழ்நிலை சந்தர்ப்பம். திருவரங்கம் ஆலயம் வைணவ ஆலயம். அந்த ஆலயத்தின் பரிசாரகன் ஒரு வைணவன்தான், ஆம்! வரதன் எனும் வைணவப் பெயருடைய நம் வரதன்தான். இவனுக்கு தின்ன கோயில் பிரசாதம் நிறைய கிடைக்கும். அதை வேளை தவறாமல் நன்கு சாப்பிட்டுவிட்டு வேலைகளைக் கவனிப்பதோடு சரி. வேறு கல்விக்கோ, விளையாட்டுக்கோ சந்தர்ப்பமும் இல்லை, ஆசையும் இல்லை. ஆகவே நன்கு சாப்பிட்டுவிட்டு பணியாற்றி வந்தான்.

            நாயக்கர்கள் இந்த சோழ நாட்டில் நன்கு காலூன்றி ஆண்டுகொண்டிருந்த சமயம் இங்கிருந்த ஆலயங்களில் ஆடல்மகளிர்கள் பணியமர்த்தப்பட்டு அவர்கள் ஆலய பூஜா காலங்களில் ஒவ்வொரு சந்நிதிகளிலும் நடனம் ஆடும் வழக்கம் இருந்து வந்தது. அப்படி எல்லா ஆலயங்களிலும் இருப்பதில்லை. சிவாலயங்களில் மட்டும் நடராஜப் பெருமான் இடது பதம் தூக்கி நடனம் ஆடி, அதிலும் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடியதால், சிவாலயங்களில் மட்டும் நாட்டிய மங்கையர் நிறைய பேர் பணியமர்த்தப்பட்டிருந்தனர். இவர்கள் ஒவ்வொரு கால பூஜைகளின் போதும் ஒவ்வொரு சந்நிதியிலும் நாட்டியம் ஆடவேண்டும். நமது ஆலய வழிபாட்டிலும் சரி, பூஜா விதிகளிலும் சரி, இந்த ஆடல் மகளிர்களுக்கு என்று தனி மரியாதை உண்டு. இப்போதும் கூட பூஜை மந்திரங்களில் நிறைவாக சோடசோபசாரம் என்று உபசாரம் செய்யும் வழக்கம் உண்டு. அதில் சத்தரம், சாமரம் போன்றவைகளை வீசவும், கீதம், நாட்டியம் ஆகியவைகளைச் சமர்ப்பித்தும் பூஜைகளை முடிப்பது வழக்கம். இப்போதெல்லாம் அவைகள் “கீதம் சமர்ப்பயாமி” “ நாட்டியம் சமர்ப்பயாமி” என்போது நின்று போயிற்று. முன்பெல்லாம் கீதம் எனும் போது பாடுவதற்கு ஆட்கள் உண்டு. நாட்டியம் எனும்போது அவ்வாலயத்தில் பணிபுரியும் நடனக் கலைஞர் ஆடுவதும் உண்டு. கோயில் குட ஆரத்தி என்று ஒரு சிறு குடம்போன்ற பாத்திரத்தின் மீது திரிவைத்த  தீப ஆராதனை உண்டு. அதனைச் செய்யும் உரிமை இந்த பெண்மணிகளுக்கு இருந்தது. இவர்கள் அந்த குடத்தின் மீது திரியில் ஒளியூட்டி கர்ப்பக்கிரகத்தினுள் சென்று குருக்களிடம் கொடுக்கும் உரிமை பெற்றிருந்தனர். அப்படிப்பட்ட அழகிய நடன மாது ஒருத்தி திருவானைக்கோயிலில் பணியாற்றி வந்தாள், அவள் பெயர் மோகனாங்கி.

            திருவரங்கம் பெருமாள் ஆலயத்து மடப்பளி ஊழியன் வரதனுக்கு, திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் -  அகிலாண்டேசுவரி ஆலயத்தில் நாட்டியப் பெண்ணாகப் பணியாற்றி வந்த மோகனாங்கி மீது ஆசை வந்து அவளிடம் பழகத் தொடங்கினான். இந்த 15ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் தமிழ்நாட்டில் சைவ, வைணவ பூசல்கள் அதிகம் இருந்த காலம். விவாதங்களும் அடிக்கடி நடைபெறுவது வழக்கம். இதையொட்டியே பிரபல கதாசிரியரும் “கல்கி” பத்திரிகை ஆசிரியருமான ரா.கிருஷ்ணமூர்த்தி எனும் கல்கி தனது “பொன்னியின் செல்வன்” புதினத்தில் ஆழ்வார்க்கடியான் எனும் வீர வைணவன் பாத்திரத்தைப் படைத்தார். அந்த ஆழ்வார்க் கடியான் அடிக்கடி சைவர்களோடு மோதி சண்டைக்குப் போவான். சைவ, வைணவ பூசல் உச்சத்தில் இருந்த காலம் அது. கல்கியின் பொன்னியின் செல்வனில் ஒரு காட்சி, திருவானைக்கா சிவாலயத்தின் மதிற்சுவரை யொட்டி ஆழ்வார்க்கடியான் நடந்து போய்க் கொணிருப்பான், அப்போது ஒரு காகம் மதிலின் மேல் உட்கார்ந்து கொண்டு மூக்கால் சுவற்றின் மீது தேய்த்தது. அதனால் சுவற்றிலிருந்து ஒரு சிறிய சுண்ணாம்புக் காரை பெயர்ந்து கீழே விழுந்தது. அதைக் கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்த ஆழ்வார்க்கடியான் தன் கையில் இருந்த கனத்த கைத்தடியை ஆட்டிக் கொண்டு, “சீரங்கத்து வீர வைஷ்ணவக் காக்காயே, திருவானைக்காவை இடித்துத் தள்ளு, தள்ளூ” என்று கூக்குரல் இட்டானாம். இது வேடிக்கையான சம்பவமாகச் சித்தரிக்கப் பட்டாலும், அப்படிப்பட்ட சைவ வைணவப் பூசல்கள் நடந்து கொண்டிருந்த காலம் அது.

            கோயில் என்றால் வைணவர்களுக்குத் திருவரங்கம் தான்; அதே போல சைவர்களுக்குக் கோயில் என்றால் சிதம்பரம். அப்படி வைணவத்தின் தலையாய கோயில் திருவரங்கத்தில் மடப்பளி பரிசாரகன் அருகிலுள்ள திருவானைக்கா அருள்மிகு ஜம்புகேச்வரர் ஆலயத்து ஆடலழகி மோகனாங்கியுடன் உறவு வைத்திருப்பதை அன்றைய வைணவர்கள், அதிலும் கோயில் எனப்படும் திருவரங்கக் கோயில் வைணவர்கள் இவனைச் சும்மா விடுவார்களா? அவனைப் பலவிதங்களிலும் இந்த உறவை விட்டுவிடும்படி கேட்டுக் கொண்டும் வரதன் கேட்பதாயில்லை. மோகனாங்கி வீட்டுக்கே சென்று அங்கேயே உண்டும் உறங்கவும் தொடங்கி விட்டான். இருந்தாலும் மக்கள் மத்தியில் இந்த உறவு தவறாகவே பார்க்கப்பட்டது.

            இந்த நிலையில் மார்கழி மாதம், ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் தொடங்கின. ஜம்புகேச்சரம் எனும் திருவானைக்கா ஆலயத்தில் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை ஓதப்பட்டு வந்தது. தினந்தோறும் ஆலயத்தில் எல்லோரும் ஒன்றுகூடி திருவாசகத்தை இனிமையாகப் பாடுவார்கள். இதில் ஆலயத்தின் ஆடல்மகளிர் கலந்து கொண்டு பாடவும், ஆடவும் செய்வார்கள். அதில் ஒரு பாடல் “உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்” என்ற பாடலைப் பாடத் தொடங்கினார்கள். அதில் வரும் ஒரு வரி “எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க” என்பது. இந்தப் பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்த மோகனாங்கிக்கு இந்த வரியின் பொருள் புரியுமாதலால் அந்தப் பகுதிக்கு அவளால் ஆட முடியவில்லை. சிவனை வழிபடும் நான் சிவனை வழிபடும் இன்னொருவர் தோள் மீதுதான் சேரமுடியும்” என்ற பொருளில் வரும் இந்த அடிக்குத் தான் எப்படி சிவத்தொண்டு புரிந்து கொண்டு ஒரு வைணவனோடு வாழ்வது என்பது மனத்தை உறுத்தியது. ஆகவே அந்த அடிக்கு ஆடாமல் நின்று விட்டதோடு, குற்ற உணர்வினால் குன்றிப் போனாள். இதனைக் கண்டு அவளுடைய தோழிகள் இவளைக் கேலி செய்தனர். அவர்கள் செய்த கேலியினால் மனம் துவண்டு போய் அங்கிருந்து புறப்பட்டு தன் இல்லம் அடைந்தாள்.

            மோகனாங்கி கடமைக்காக ஆலயத்தில் பணியாற்றுபவள் அல்ல. ஆழ்ந்த சிவபக்தியும் அவளுக்கு இருந்த காரணத்தால் அவள் பக்தி சிரத்தையோடு தன் பணிகளைச் செய்து வந்தாள். திருவாசகம் பாடிய மாணிக்கவாசகப் பெருமான் இப்படியொரு அறிவுரை சொல்லியிருக்கிறாரே. சிவனை வழிபடும் ஒருத்தி எப்படி வைணவனாக இருப்பவன், அதிலும் வைணவக் கோயிலில் பணியாற்றுபவன், அவனுடன் காதல் கொண்டு இணைந்து வாழ முடியும்? இந்த சிந்தனை அவள் மனத்தை அரித்த காரணத்தால், அவ்விடத்தை விட்டு அகன்று தன் இல்லத்துக்கு விரைந்து சென்றாள். தான் ஒரு சிவனுக்கு அடியாளாக இருந்து கொண்டு வைணவன் ஒருவனோடு வாழ்வது இன்றோடு முடிந்தது. இனி வரதனை உள்ளே விடுவதில்லை என்று உறுதி மேற்கொண்டாள்.

            அன்றிரவு வரதன் மோகனாங்கி வீட்டுக்கு வழக்கம் போல வந்தான். வாயிலில் மோகனாங்கியின் வீட்டு வேலைக்காரி நின்றுகொண்டு அன்று நடந்த விவரங்களைச் சொல்லி இனி மாற்று மதத்தவனாகிய வைணவன் வரதனோடு சிவமதத்தவளான மோகனாங்கி உறவுகொள்ள மாட்டாள் என்று சொல்லிவிட்டாள். வரதனுக்கு மிகுந்த வேதனை உண்டாகியது. தம்மையும் தன் அன்புக்குப் பாத்திரமான மோகனாங்கியையும் பிரிப்பது நாம் இருவரும் வெவ்வேறு சமயங்களைச் சார்ந்தவர்கள் என்பதால் தானே. இதற்கு ஒரு முடிவு கண்டே ஆகவேண்டும். மோகனாங்கி இல்லாமல் தன்னால் வாழமுடியாது என்று எண்ணிக்கொண்டே இல்லம் சென்றார்.

            மறுநாட் காலை வரதன் எழுந்து ஸ்நானம் செய்துவிட்டு திருமண் இட்டுக் கொள்ளாமல், நேராக ஜம்புகேச்சரம் சென்று அங்கு இருந்தவர்களிடம் தான் சைவ சமயத்தைத் தழுவ வந்திருப்பதாகச் சொன்னான். அவர்களுக்கு அதிர்ச்சி. இதென்ன கூத்து, வைணவனாக இருந்து கொண்டு வைணவ ஆலயத்தில் பணியாற்றிக் கொண்டு இருப்பவன் இப்பொழுது வந்து சைவனாக ஆகிறேன் என்கிறானே. அவர்கள் சொன்னார்கள், நீ சைவனாக ஆனபிறகு திருவரங்கத்தில் பணியாற்ற முடியாது, ஆகையால் நீ இந்த ஆலயத்தில் பரிசாரகனாகப் பணிக்குச் சேர்ந்துவிடு என்றதும் அவனும் சம்மதித்து திருநீறணிந்து, சிவ தீட்சை பெற்று ஐந்தெழுத்தை ஓதி சைவனாகி அதே கோயிலில் மடப்பளியில் பரிசாரகனாக ஆனான்.

            தானொரு வைணவன் என்பதால் தன்னை ஏற்றுக் கொள்ள மறுத்த மோகனாங்கியிடம் சென்று தான் சைவனாகிவிட்டதையும், ஜம்புகேச்சரத்தில் மடப்பளியில் வேலை என்றும் சொன்னான். மோகனாங்கிக்கும் மகிழ்ச்சி, தான் விரும்பியபடி வரதனுடன் வாழலாம், அவனும் சைவனாகிவிட்டான். அன்று முதல் உடலெங்கும் பனிரெண்டு திருமண் அலங்கரித்த இடங்களில் திருநீறு பூசி சைவனாக விளங்கினான். அந்தக் கோலத்துடன் மோகனாங்கியைச் சென்று கண்டதும் மனம் மகிழ்ந்து சைவனாக ஆகிவிட்ட தன் அன்புக்கு உரியவனை ஏற்றுக் கொண்டாள். இவ்விருவருக்கிடையே இருந்த உறவு அன்பின் அடிப்படையிலானது, ஒரு தாசியுடனான உறவு என்பதாக மேம்போக்காகக் கொள்வதற்கில்லை. காரணம், ஒரு கணவன் மனைவிக்கு இடையிலான அன்பும் அரவணைப்பும் இவ்விருவரிடத்தும் இருந்ததே தவிர உடல் இச்சையைத் தணித்துக் கொள்ள ஒரு தாசியிடம் செல்வது போல அமையவில்லை, அதனால் தான் அவர்கள் பல ர் முன்னிலையிலும் கணவன் மனைவி போன்று சகல உரிமைகளுடன் வாழ்க்கை நடத்தினர், ஆலய நிர்வாகமும் இவர்கள் இருவருக்கும் ஆலயத்தில் பணிகளைக் கொடுத்து வைத்திருந்தது.

            இப்படி வரதனும் மோகனாங்கியும் திருவானைக்கா ஆலயத்தில் சீரிய முறையில் தத்தமது பணிகளைச் செய்து வரும் நாளில் அந்த ஆலயத்தில் அருள்பாலித்து வரும் அகிலாண்டேஸ்வரி அம்மனின் அருள் பெற்று தான் எல்லா கலைகளிலும் சிறந்து விளங்குபவனாக ஆகவேண்டுமென்கிற நோக்கத்துடன் ஒரு சக்தி உபாசகன் அம்மையின் சந்நிதியில் தவமிருந்தான். அம்பாள் பார்வையில் படும்படி சந்நிதியின் எதிரில் அமர்ந்து கொண்டு இரவு பகல் பாராமல் உணவோ, குடிக்க நீரோ கூட கேட்காமல் கண்மூடி அம்பிகையின் வரம் வேண்டி அவன் தவம் புரிந்து வந்தான். நாட்கள் சென்று கொண்டிருந்தன, அவன் தவம் பலிக்கும் நேரம் வரவில்லை. அவனுடைய கடும் தவத்தை மெச்சி அகிலாண்டநாயகியான அம்பாள் ஒரு சிறு பெண் வடிவம் தாங்கி, ஒரு நாள் நடு ஜாம வேளையில் வாயில் தாம்பூலம் நிறைந்திருக்க, தவமிருக்கும் உபாசகனின் முன்னால் போய் நின்று அவனை அழைத்தாள். ஆழ்ந்த தவத்தில் இருந்த அவன் ஒரு குரல் கேட்டு மெல்ல கண் திறந்து பார்த்தான். எதிரில் ஒரு சிறுவயதுப் பெண், வாய் நிறைய தாம்பூலம் தரித்த கோலம். கண் விழித்துப் பார்த்த சக்தி உபாசகனைப் பார்த்து அன்னை பேசினாள்.

           “அன்பனே! உன் கடும் தவம் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். நீ உன் வாயைத் திற இந்தத் தாம்பூலத்தை உமிழ்ந்துவிட்டுப் பேசுகிறேன். உன் வாயைத் திற, இதை  உமிழ்ந்து விடுகிறேன். பிறகு நீ விரும்பிய சக்திகளைப் பெறுவாய்!” என்றாள் அன்னை.
இன்னமும் பராசக்தியின் கருணையை, அருட் செயலை உணர்ந்து கொள்ளாத, புரிந்து கொள்ளாத நிலையில் அந்த உபாசகன் ஒரு சிறு பெண் தன் வாய் எச்சிலை என் வாயில் உமிழ்வதாவது, இது என்ன விளையாட்டு என்று கோபப்பட்டு, “என் தவத்தைக் கலைத்து உன் எச்சிலை உமிழ என் வாயையா தேர்ந்தெடுத்தாய். நீ உடனே இங்கிருந்து ஓடிவிடு. என் சக்திக்கு முன்னால் உன்னால் நிற்க முடியாது, போ! போய், உன் எச்சிலை எங்கேனும் உமிழ்ந்து விடு” என்று விரட்டிவிட்டான்.

            “ஓ, இந்த பக்தனுக்கு இன்னமும் விவேகம் வரவில்லை. வரம் பெறுவதென்பது இவன் விஷயத்தில் அத்துணை சுலபமில்லை, இவன் இன்னமும் பக்குவப்படவில்லை, உரிய அறிவினைப் பெற இவன் இன்னம் நெடுங்காலம் தவமியற்ற வேண்டும்” என்று அன்னை அவ்விடத்தை விட்டு அகன்று சென்றாள்.

            இதற்கிடையே, திருக்கோயிலில் மடப்பள்ளி வேலைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்ப வரதன் காத்துக் கொண்டிருந்தான். அப்போது மோகனாங்கி வந்து தனக்கு இன்று கோயில் பணியில் கும்ப ஆரத்தி வேலை இருப்பதாகவும், அது முடிந்து வீடு திரும்ப நேரமாகுமென்றும், தான் பணி முடிந்து வரும்வரை கோயில் மகா மண்டபத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருங்கள், நான் வரும்போது உங்களை எழுப்பி அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டுப் போயிருந்தாள். அதனால் மண்டபத்தில் ஒரு வசதியான இடம் பார்த்து வரதன் படுத்து நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான்.

            இப்படி வரதன் நன்கு குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில்தான் அம்பாள் அகிலாண்டேஸ்வரி தன்னை வேண்டி தவமியற்றிக் கொண்டிருக்கும் சக்தி உபாசகனிடம் சென்று தாம்பூலத்தை உமிழ வாயத் திறக்கும்படி கேட்க, அவன் அன்னையை போ என்று விரட்டிவிட்டிருந்தான். அன்னை நேராக மண்டபத்திற்கு வந்தாள், அங்கு குறடை ஒலியுடன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த வரதனைத் தட்டி எழுப்பினாள். தூக்கக் கலக்கத்தில் எழுந்து உட்கார்ந்த வரதனிடம் அன்னை, “அன்பனே வாயைத் திற, என் தாம்பூலத்தை உமிழ வேண்டும்” என்று சொன்னாள். அந்தப் பெண் என்ன சொல்கிறாள் என்பதைக் கூட உள் வாங்கிக் கொள்ளாத வரதன் அவள் தன் வாயைத் திறக்கச் சொல்கிறாள் என்பதை மட்டும் காதில் வாங்கிக் கொண்டு வாயைப் பிளந்து “ஆ”வென்று திறந்து காட்டினான். அன்னை தன் வாயிலிருந்த  தாம்பூலத்தை கற்சட்டி போலத் தன் வாயை அகலத் திற்ந்து காட்டிய வரதனின் வாயில் உமிழ்ந்தாள்.  அடுத்த கணமே வரதன் ஒரு புது மனிதனாக ஆனது போல உணர்ந்தான். இங்கே சறுமுன் வந்து வாயைத் திறக்கச் சொன்ன பெண் யார், என்ன செய்தாள், நமக்குள் ஏன் இந்த மாற்றம், மனம் கற்பனையில் ஊறித் திளைக்கிறதே, எண்ணும் எண்ணமெல்லாம் கவிதைகளாக வந்து தோன்றுகின்றதே” என்று எண்ணியவுடனே அன்னையின் மீது அற்புதமான கவிதையொன்றைப் பாட அவன் ஓர் அற்புத கவிஞனாக மாறிப்போனான். மந்த புத்தியும், மடப்பளிப் பணியால் வ்யிறு நிறைய உண்டு கொழுத்ததை மறந்தான், இப்போது கவிபாடும்  ஒரு புது மனிதனாக, திறம் படைத்த ஓர் புலவனானான். தன்னை மறந்தான், தன்னை மண்டபத்தில் காத்திருக்கச் சொல்லிவிட்டுச் சென்ற மோகனாங்கியை மறந்தான், அவன் உள்ளம் ஆயிரம் கவிதைகளை ஊற்றெடுக்கச் செய்து பொழிந்து தள்ளத் தொடங்கி, அவ்விடத்தை விட்டு அகன்று சென்று விட்டான்.

            மோகனாங்கி வரதனிடம் சொல்லிச் சென்றபடிக்கு தன் பணிகளெல்லாம் முடிந்த பிறகு மண்டபத்துக்கு வந்து வரதனைத் தேடினாள். மண்டபத்தினுள் எங்கு தேடியும் வரதனைக் காணவில்லை. இங்கே தானே படுத்துறங்கச் சொன்னேன், சொல்லாமல் கொள்ளாமல் எங்கே சென்றிருப்பார்? சரி, வீட்டுக்குப் போயிருக்கலாம், அங்கே போய் பார்க்கலாம் என்று மோகனாங்கியும் வீடு நோக்கி நடந்தாள்.

            மோகனாங்கி வீட்டுக்குச் சென்றால் வரதன் அங்கே உறங்கிக் கொண்டிருந்தான். பொழுதும் விடிந்தது. வழக்கம் போல எழுந்து ஸ்நான பானங்களை முடித்துக் கொண்டு மடப்பள்ளி பணிக்குச் செல்லாமல் வரதன் வீட்டில் இருந்த அம்பாள் படத்துக்கு முன்பாக நின்று கொண்டு கவிதை மழையாகப் பொழிந்து பாடிக் கொண்டிருந்தான். இதென்ன கூத்து? சாப்பாட்டு ராமனாக இருந்த இவருக்கு இப்படி பக்திப் பாடல்களைப் பொழிந்து தரும் சக்தி எப்படி வந்தது. இரவு என்ன நடந்தது? இப்படி பல கேள்விகள் மோகனாங்கியின் மனதைக் குடைந்தெடுத்தன. திகைத்துப் போய் நின்று கொண்டிருந்த மோகனாங்கியிடம் சென்று வரதன் முதல் நாள் இரவு கோயில் மண்டபத்தில் நடந்தவற்றை விவரமாக எடுத்துரைத்தான்.  அதைக் கேட்டு அவளும் அங்கே அம்பாள் சந்நிதியில் ஒரு சாக்தன் அம்பாளின் அருளை வேண்டி தனக்கு எல்லா கலைகளையும் கொடுத்தரு:ள வேண்டுமென்று தவம் கிடக்கிறான். அன்னயோ, இந்த வரதனைத் தேர்ந்தெடுத்து இப்படி காளமேகம் போல கவிபொழிய வைத்து விட்டாளே என்று திகைத்துப் போனாள். மடப்பள்ளியில் சோறு பொங்கிக் கொண்டிருந்த வரதன் அப்போது முதல் காளமேகமானான். கவி பொழிதலால் கவி காளமேகம் என்றே பெயர் பெற்று விளங்கினான்.

            நடந்த  விவரங்களைக் கேட்டு ஊரிலுள்ளார் பலரும் இவர்கள் இல்லம் வந்து நடந்த அதிசயத்தைப் பற்றிக் கேட்டு வியந்து போயினர். வந்த புலவர்களிடம் காளமேகம்  பற்பல கவிதைகளைப் பாடிக் காட்டினான். ஆசுகவி, மதுரகவி, சித்திரக் கவி, வித்தாரக்கவி என்று பற்பல வகைக் கவிதைகளையும் பாடி வந்தவர்களை மகிழ்வித்தான்.

            “வரதா, சாதாரணமான மனிதனான உன்னை அன்னை அகிலாண்டேஸ்வரி ஒரு கவிஞனாக அல்லவா ஆக்கி விட்டாள். எல்லா வகைக் கவிதைகளையும் உன்னால் இயற்ற முடியும். உனக்கு அருள் பாலித்த அன்னை அகிலாண்டேஸ்வரியின் புகழை” ஒரு பாடலாகப் பாடு” என்றனர். உடனடியாக காளமேகம் என்று புதிய பெயர் பெற்ற அவன்  அன்னை அகிலாண்டேஸ்வரியின் பெயரில் “திருவானைக்கா உலா” என்றொரு அரிய பிரபந்தத்தை இயற்றிக் காட்டினான்.  சொற்சுவையும், பொருட்சுவையும் மிகுந்து பக்தி வசப்பட்டு அவன் பாடிய அந்தப் பிரபந்தத்தைக் கேட்டு புலவர்கள் ஆனந்தப் பட்டார்கள்.  இவர் இனி வரதனல்ல, கவி காளமேகமே என்று புகழ்ந்து சென்றனர்.

            திருவானைக்காவில் சாதாரண வரதனாக நாட்டியக்காரி மோகனாங்கியுடன் வாழ்பவன், என்ற நிலை மாறி இவனுடைய புகழ் அருகிலுள்ள ஊர்களுக்கெல்லாம் பரவி கவி காளமேகத்தின் பெருமை ஊரறிய தெரியலாயிற்று. மோகனாங்கியுடன் சில காலம் மகிழ்ச்சியோடு திருவானைக்காவில் வாழ்ந்து வந்த காளமேகத்துக்கு வெவ்வேறு ஊர்களுக்கெல்லாம் சென்று தன் கவித்திறனைக் காட்டி, பல்வகைப் பாடல்களையும் பாடி, பரிசில்களைப் பெற்று வரவேண்டுமென்கிற ஆசையின் காரணமாக மோகனாங்கியிடம் சொல்லிவிட்டு ஊர் ஊராகச் சுற்றத் தொடங்கினார் காளமேகம். அவர் மரியாதைக்குரிய கவிஞராக ஆகிவிட்டதால் முன்போல அவன் இவன் என்றெல்லாம் சொல்லக் கூடாது அல்லவா.

            இவர் போகிற இடங்களில் எல்லாம் கவிமழை பொழிவது கண்டு மக்கள்  இவரைப் பாராட்டி புகழ்ந்து தள்ளினர். முதலில் இவர் திருவானைக்காவில் இருக்கும் விநாயகரைப் புகழ்ந்து பாடினார். அது:

 “ஏரானைக் காவிலுறை யென்னறளித்த                                                                                 பேரானைக் கன்றுதனைப் போற்றினால் – வாராத                                                                புத்தி வரும் பத்தி வரும் புத்திரவுற் பத்திவரும்                                                             சத்திவரும் சித்திவரும் தான்.”

திருவானைக்காவில் கோயில் கொண்டிருக்கும் பெண்யானை வடிவெடுத்த அன்னை அகிலாண்டேஸ்வரி அன்று சிவபெருமான் கருணையினால் பெற்றெடுத்த ஆற்றல் மிக்க யானை முகனாம் விநாயகனைத் தொழுது வழிபட்டால், உலகில் வேறெதனாலும் கிடைத்திடாத அறிவுத் திறன் வரும், இறைவனைத் தொழுது நல்ல வண்ணம் வாழும் பக்தி வரும்; புத்திர பெளத்திர செளபாக்கியங்கள் கிட்டும்; சக்தி தரும் ஆற்றல் பலவும் கிட்டும்; அட்டமாசித்திகள் அனைத்துமே வந்து சேரும்.

            கவி காளமேகம் செல்லுமிடங்களில் எல்லாம் இவன் ஒரு ஆசுகவி என்பதறிந்து மக்கள் இவரிடம் பற்பலத் தலைப்புகளைக் கொடுத்து, அதற்கேற்ப கவிபாடச் சொல்லிக் கேட்பர்.  ஒரு ஊரில் ஒரு புலவர் இவரிடம் சிவபெருமானைப் பல விதங்களில் படுகிறீர்கள், அவனை நீராக, நெருப்பாக, கூறாக (பிரிவுகளாக) கொளுத்துவதாக (எரிப்பதாக), நட்டமாக, நஞ்சாக ஆவார் என்பதாக ஒரு பாட்டு பாடுவாயாக என்றார். உடனே காளமேகம் பாடிய பாட்டு:

 “நீறாவாய், நெற்றி நெருப்பாவாய், அங்கமிரு                                                             கூறாவாய் மேனி கொளுத்துவாய் – மாறாத                                                           நட்டமாவாய் சோறு நஞ்சாவாய் நாயேனை                                                            இட்டமாய்க் காப்பா யினி.”

இதன் பொருள்: நெற்றியிலே பூசும்போது நீ திருநீறாக ஆவாய்;  உன் நெற்றிக் கண்ணைத் திறந்தால் மன்மதனை எரித்தது போல் நெருப்பாவாய்; உன் மேனி இரு கூறாக ஆகி ஒருபுறம் சிவன், மறுபுறம் சக்தி என்று மாதொரு பாகனாவாய்; கொளுத்தும் தீயாகவும் ஆவாய்; எப்போதும் நடனம் ஆடிக் கொண்டிருப்பாய்; நஞ்சை உண்டாலும் அதனை உன் உணவாகக் கொள்வாய் (பாற்கடலைக் கடைந்தபோது வந்த நஞ்சினை உண்டது); இனி நாயேனாகிய என்னை விருப்புடனே காப்பாயாக.

            நதியொன்றின் கரையோடு கவிஞர் நடந்து போகும்போது ஆற்றில் முழுகி எழுந்த ஒரு பெண்மணி தன் குடத்தில் ஆற்று நீரை மொண்டு கொண்டு கரையேறுவதைப் பார்த்தார். அப்போது அங்கிருந்த ஒரு மனிதர் கவிஞரைப் பார்த்து “குடத்தில் கங்கை அடங்கும்” என்று ஈற்றடி வருமாறு ஒரு பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டார். அப்போது கவிஞர் பாடியது.

“விண்ணுக்கு அடங்காமல், வெற்புக்கு அடங்காமல்                                                  மண்ணுக்கு அடங்காமல் வந்தாலும் – பெண்ணை                                                   இடத்திலே வைத்த இறைவர் சடாம                                                                          குடத்திலே கங்கை அடங்கும்.”

           பெருக்கெடுத்தோடி வரும் கங்கை ஆறு ஒரு குடத்தினுள் அடங்குமா?  கவிஞர் எப்படிப் பாடப் போகிறார் என்ற ஆர்வம் கேட்டவர்களுக்கு. கவிஞரோ உடனே கருத்த மேகம் மழை பொழிவது போலப் பாடத் தொடங்கினார்.  இப்பாடலின் பொருள் கங்கை நதி தேவலோகத்து நதி; அதனைத் தன் முன்னோர்கள் மோட்ச கதி அடையவேண்டுமென்பதற்காக பகீரதன் தவம் செய்து பூமிக்குக் கொண்டு வந்தான். அப்போது கங்கை சொன்னாள், நான் பூமியில் வந்து இறங்கும்போது பூமி தாங்காது, அப்போது என்னைத் தாங்கிக் கொள்ளும் சக்தி யாருக்கேனும் இருந்தால் வந்து தாங்கிக் கொள்ளச் சொல் என்றது. உடனே பகீரதன் சிவபெருமானை நோக்கி தவம் செய்தான். அவரும் என்ன வேண்டுமென்று கேட்டபோது, பூமிக்கு இறங்கி வரும் கங்கைத் தன்னைத் தாங்கிக் கொள்ள பூமியில் யாருக்கும் முடியாது என்கிறாள். என் முன்னோர்கள் மோட்சமடைய கங்கை நீர் வேண்டும், எனவே கங்கை பூமிக்கு வரும்போது தாங்கள்தான் தாங்கிக் கொண்டு இறக்கி வைக்க வேண்டுமென்றான். அவரும் ஒப்புக்கொண்டு தன் தலை ஜடாமுடியை விரித்து வைத்து கங்கையைத் தன் முடியில் இறங்கச் சொன்னார். அகந்தையினால் தன்னை யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது என்று இறங்கிய கங்கையை சிவபெருமான் தன் ஜடாமுடியில் இறங்கிய அடுத்த கணம் முடியைக் கொண்டு மூடித் தன் ஜடாமுடிக்குள் அடைத்துவிட்டார் என்கிறது புராணம்.

            அந்த நிகழ்வை நினைவுகொண்டு காளமேகம் பாடிய பாடல் இது. விண்ணுக்கும் என்றால் வானத்துக்கும் அடங்காமல், இமய மலைக்கும் அடங்காமல் (வெற்பு என்றால் மலை), இந்த பூமியால் தன்னைத் தாங்கிக் கொள்ளமுடியாது என கர்வம் கொண்டு இந்த மண்ணுக்கும் அடங்காமலும் வந்து வீழ்கின்ற இந்த கங்கையை, தன் ஒரு பாகத்தில் பெண்ணைக் கொண்ட ஈசன் தன் ஜடா (ம)குடத்திலே அடக்கினார் என்று முடிக்கிறார் பாடலை. நல்ல அற்புதமான கற்பனை, விண்ணுக்கு அடங்காத, வெற்புக்கு அடங்காத, மண்ணுக்கு அடங்காத கங்கை நதியை அர்த்தநாரீஸ்வரரான ஈசன் தன் ஜடா மகுடத்தில் அடக்கினார் என்பது கவிஞர் கூறும் கருத்து.
           
           


           






தஞ்சையை ஆண்ட பிரதாபசிம்ம ராஜா



                                                                                                 பிரதாபசிம்மன்

                தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்ட கடைச்சோழர் வம்சமான விஜயாலயன் பரம்பரை 1279ஆம் ஆண்டோடு முடிவுக்கு வந்துவிட்டது. பின்னர் பாண்டியர்கள் வசம் சில காலமும், அதன் பின் விஜயநகர சாம்ராஜ்யத்துக்கு உட்பட்ட சிற்றரசர்களால் சுமார் 148 ஆண்டுகள் ஆளப்பட்டது. மதுரை நாயக்க மன்னர்களான சொக்கநாத நாயக்கர், அவர் தம்பி அழகிரி நாயக்கர் ஆகியோருடன் தஞ்சாவூரின் நாயக்க மன்னரான விஜயராகவ நாயக்கருக்கு மோதல் ஏற்பட்டது. விஜயராகவரின் பெண்ணை மதுரை சொக்கநாதர் தன் தம்பிக்காகப் பெண் கேட்டபோது, விஜயராகவர் பெண் தர மறுத்து விட்டார். காரணம் தன் அத்தையான, அதாவது ரகுநாத நாயக்கரின் சகோதரி ஒருவரை மதுரை திருமலை நாயக்கருக்குத் திருமணம் செய்து கொடுத்து, அந்தப் பெண் மதுரையில் அகால மரணம் அடைந்து விட்டதால், தன் பெண்ணையும் மதுரை நாயக்கரின் தம்பிக்கு திருமணம் செய்து வைக்க மறுத்து விட்டார். இதனால் இவ்விரு நாயக்க மன்னர்களுக்கிடையே போர் நிகழ்ந்து, அதில் தஞ்சைக் கோட்டை வாசலில் ராஜகோபால சாமி கோயில் முன்புறம் தஞ்சை விஜயராகவர் கொல்லப் பட்டார். அவர் முன்கூட்டியே செய்து வைத்திருந்த ஏற்பாட்டின்படி அரண்மனையின் அந்தப் புறம், வெடி வைத்துத் தகர்க்கப்பட்டது. அதில் அரண்மனை பெண்டிர் அனைவருமே இறந்து போய் விட்டனர்.

               தஞ்சை விஜயராகவ நாயக்கருக்கு ஒரு மகன், பெயர் மன்னாரு தாசன். இந்த மன்னாரு தாசனுக்கு ஒரு ஆண் குழந்தை இருந்தது, அதன் பெயர் செங்கமலதாஸ். போரில் விஜயராகவரின் மகன் மன்னாரு தாசனும் மரணம் அடைந்து விட்டதால், மதுரை நாயக்கர்கள் தஞ்சையை அபகரித்துக் கொண்டார்கள். அரண்மனை அந்தப்புறம் வெடி வைத்துத் தகர்க்கப் பட்டபோது இந்த குழந்தை செங்கமலதாஸ் ஒரு தாதியால் காப்பாற்றப்பட்டு நாகப்பட்டணத்தில் ஒருவரிடம் வளர்ந்து வந்தான்.

               அந்த செங்கமல தாஸ் எனும் சிறுவன் வளர்ந்து பெரியவனான சமயம், முன்பு தஞ்சை அமைச்சராக இருந்த ராயசம் வெங்கண்ணா என்பவர் இந்த சிறுவன் தான் தஞ்சைக்கு அரசனாக வரவேண்டியவன், ஆனால் மதுரை நாயக்க மன்னர்கள் தஞ்சையை ஆண்டு கொண்டிருக்கிறார்கள், ஆகவே ராஜ்யத்தை அவர்களிடமிருந்து மீட்டு இந்த செங்கமல தாசிடம் தர வேண்டுமென்று ராயசம் வெங்கண்ணா பிஜப்பூர் சுல்தான் அலிஅடில்ஷாவிடம் சென்று முறையிட, அவர் தன் தளபதியான ஷாஜியின் மகன் பெங்களூரில் இருந்த ஏகோஜி எனும் வெங்கோஜியை அழைத்து, அவரைத் தஞ்சைக்குச் சென்று ராஜ்யத்தை மீட்டு இந்த செங்கமலதாசை அரசனாக்கும்படி அனுப்பி வைத்தார்.
அலிஅடில்ஷாவின் ஆணைப்படி ஏகோஜி தஞ்சைக்கு வந்து அரசைக் கைப்பற்றி செங்கமலதாசை அரியணையில் அமர்த்திய பின் ஊர் திரும்புவதற்காக, வடக்கில் காவிரி, கொள்ளிடம் இவற்றைத் தாண்டி திருமழபாடி எனுமிடம் சென்ற பொது, அவரது மனைவியரில் ஒருவருக்கு குழந்தை பிறந்ததால் அங்கேயே சில காலம் தங்கி இருக்க நேர்ந்தது. அந்த இடைப்பட்ட காலத்தில் அரச பதவியை ஏற்றுக் கொண்ட செங்கமல தாஸ் யாருடைய முயற்சியினால் அரசனாக ஆனானோ, அந்த ராயசம் வெங்கண்ணாவுக்கு அமைச்சர் பதவி தரவில்லை. மேலும், அரண்மனைக்குள் நானா நீயா என்ற போட்டி வேறு. ஆகவே பெரியவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டாகத் திருமழபாடியில் தங்கியிருந்த ஏகோஜியைச் சந்தித்து, அவரையே வந்து ஆட்சியை ஏற்றுக் கொள்ளும்படி அழைத்தனர். முன்பு தஞ்சையை மீட்டு செங்கமலதாசிடம் ஒப்படைத்த உடனேயே தன்னுடைய படைத் தளபதிகள் இருவரை கோட்டைக்கு வெளியே தங்கியிருந்து தங்களுக்குச் சேரவேண்டிய பேஷ்கஷ் தொகையை வாங்கி வருவதற்காக நிறுத்தியிருந்தார்.

               தஞ்சை திரும்பிய ஏகோஜிக்கு தஞ்சையில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மதுரை நாயக்கர்கள் ஊர் திரும்பிவிட்டதாலும், தஞ்சை நாயக்கர்களுக்குள் ஒற்றுமை ஏற்படாமையாலும், அலிஅடில்ஷாவின் அனுமதியோடு ஏகோஜி, 1596 இல் தஞ்சையின் அரசராக பதவி யேற்று ஆளத் தொடங்கினார். அது முதல் தஞ்சை சுமார் 190 வருஷங்கள் மராத்திய வம்சத்து அரசர்களின் ஆட்சியில் இருந்து வந்தது.
தஞ்சையில் அரசராக இருந்த ஏகோஜி என்கிற வெங்கோஜி, சத்ரபதி சிவாஜியின் சகோதரர். ஷாஜியின் இன்னொரு புதல்வர். இவர் தனது முந்தைய நாயக்க மன்னர்கள் காலத்தில் செய்து கொண்டிருந்த நல்ல பணிகளையெல்லாம் தொடர்ந்து செய்து மக்களுக்கு நன்மைகளைச் செய்யத் தொடங்கினார். ஆகையால் ஏகோஜிக்கு தஞ்சையில் நல்ல வரவேற்பும், மதிப்பும் இருந்தது. மராத்திய போன்ஸ்லே வம்சத்தாரில் இந்த ஏகோஜியை நான்காம் ஏகோஜி என்கிறார்கள். இவருக்குத் திருமழபாடியில் பிறந்த மகன் பெயர் சரபோஜி. இவரை போன்ஸ்லே வம்ச வரிசைப்படி மூன்றாவது சரபோஜி என்கின்றனர்.

               அந்த சமயம் மதுரை நாயக்க மன்னர்களுக்குக் கட்டுப்பட்ட நாயக்க மன்னர் திருச்சியில் இருந்தார். அவர் தஞ்சையின் மீது படையெடுத்து வந்து போர் புரிந்து தோல்வியடைந்தார். அவர் தஞ்சை மராத்தியர்களுக்கு திருக்காட்டுப்பள்ளியை அடுத்த செந்தலைப் பகுதிகளை ஏகோஜிக்குக் கொடுத்து சமாதானம் செய்து கொண்டார். 1598இல் ஏகோஜி ராஜாவுக்கு ஒரு குழந்தை பிறந்து மூன்றாவது மகனான அவனுக்கு துக்கோஜி என்று பெயரிட்டார். ஏகோஜியின் இரண்டாம் மனைவி அண்ணுபாயி என்பவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இவருக்கு மொத்தம் ஏழு பிள்ளைகள் இருந்தனர். ஏகோஜி 1604இல் காலமானார். 

               அவரை அடுத்து தஞ்சைக்கு அவருடைய மூத்த மகன் மூன்றாம் ஷாஜி பட்டமேற்றுக் கொண்டார். இவருடைய தாயின் பெயர் தீபாபாயி. ஏகோஜியின் மனைவியருள் ஒருவர். அவருடைய வழிகாட்டலுக்கேற்ப 3ஆம் ஷாஜி அரசாட்சி செய்து வந்தார். இவர் காலத்தில் இரு வேறு படையெடுப்புகள் தஞ்சையின் மீது நடைபெற்றன. இவருடைய இரண்டாவது தம்பி துக்கோஜி என்பவருக்கு 1617இல் ஒரு மகன் பிறந்தான். அந்தக் குழந்தைக்கு ஏகோஜி என்று பெயரிட்டனர். இவர் 5ஆம் ஏகோஜி ஆவார். இவரை பாவா சாஹிப் என்றும் அழைப்பார்கள். 3ஆம் ஷாஜி 1633இல் காலமானார். இவர் இறந்த பிறகு இவருடைய முதல் தம்பியான 3ஆம் சரபோஜி என்பவர் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு சுலட்சணா பாயி, அபரூபா பாயி, ராஜஸ பாயி என்று மூன்று மனைவியர். தங்களுக்கு இந்த தஞ்சை ஆட்சியைக் கொடுத்த பிஜப்பூர் சுல்தான் அலிஅடில்ஷாவின் கீழ் பணிபுரிந்த சில பிரபுக்களுக்கு ஆதரவு அளித்து நன்றிக் கடன் செய்து வந்தார்.
இவருடைய தம்பி துக்கோஜி, இவருக்கு அருணாபாயி, ராஜகுமாராபாயி, மோகனாபாயி, மஹினாபாயி, லட்சும்பாயி என்று ஐந்து மனைவியர். இவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் உடனிருந்த பெண்கள் அறுவர், இதில் ஐந்து பேர் நாயக்கர் வம்சத்தார், ஒருவர் மட்டும் மராத்தியர். அவருடைய பெயர் அன்னபூர்ணாபாயி. இந்த அன்னபூர்ணா பாயிக்கு இரு குழந்தைகள், முதலில் ஒரு ஆண் பெயர் பிரதாபசிம்மன், அடுத்து ஒரு பெண், அவள் பெயர் சாமாபாயி.

              துக்கோஜியின் மகன் 5ஆம் ஏகோஜி. இவரை பாவாசாஹிப் என்று அழைப்பார்கள் என்பதைப் பார்த்தோம் அல்லவா? இந்த பாவாசாஹிபு எனும் 5ஆம் ஏகோஜிக்கு சுஜான்பாயி, ஜெயந்திபாயி, சக்வார்பாயி, சுகுமார்பாயி, கிரிஜாபாயி, பார்வதிபாயி என்று ஆறு மனைவியர். இவர்கள் எல்லாம் முறைப்படித் திருமணம் செய்துகொண்ட மனைவியர் தவிர திருமணமாகாமல் சிலரையும் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்கள் வரலாற்றின் மூலம் தெரியவருகிறது.

             துக்கோஜி 1657இல் காலமானார். அவருக்குப் பின் அவர் மகன் 5ஆம் ஏகோஜி என்கிற பாவாசாஹிப் ஆட்சிக்கு வந்தார். அவர் ஒரு சந்தேகப் பிராணி. எவரையும் நம்பமாட்டாராம். இவருடைய காலத்தில் ஆற்காடு நவாபு வம்சத்தைச் சேர்ந்த சந்தா சாஹேப் தஞ்சாவூர் மீது படையெடுத்து வந்தார். உடல் நலமில்லாமல் இருந்த 5ஆம் ஏகோஜி துணிந்து போர்க்களத்தில் இறங்கி கடுமையாகப் போரிட்டார். சந்தா சாஹேபுக்கு ஏமாற்றம் ஏற்பட்டு, இனியும் போரிட்டுப் பயனில்லை என்பதை உணர்ந்து தஞ்சை மன்னரிடம் இருந்து சிறிது பணம் பெற்றுக் கொண்டு திருச்சிக்குப் போய்விட்டார். இந்த பாவாசாஹேப் எனும் 5ஆம் ஏகோஜி 1658இல், அதாவது துக்கோஜி இறந்து மறு ஆண்டில் காலமானார்.

              அப்போது அடுத்து யார் ஆட்சிப் பொறுப்பை ஏற்பது எனும் கேள்வி எழுந்தது. 5ஆம் ஏகோஜி என்கிற பாவாசாஹேபின் மனைவி சுஜான் பாயி என்பவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். இவர் சுமார் இரண்டு ஆண்டுகள் தான் ஆட்சி புரிய முடிந்தது. காரணம் பதவி ஆசை காரணமாக சிலர் சென்னைப்பட்டணத்தில் இருந்த கம்பெனியாரிடம் சென்று புகார் அளித்து தஞ்சை அரசுக்கு சுபான்யா என்கிற  காட்டு ராஜா என்பவன், இவன் அரசுரிமை பெற்றவன் என்று சொல்லி, சுஜான் பாயை நீக்கிவிட்டு இவனை அரசராக்கினார்கள். ஆனால் அவர்கள் சூழ்ச்சி நெடுங்காலம் நீடிக்கவில்லை. 1661இல் இவர்கள் சூழ்ச்சி வெளிப்பட்டு சுபான்யா என்கிற காட்டுராஜாவை விரட்டிவிட்டு பாவா சாஹேபின் மனைவி அன்னபூர்ணாபாயியின் புதல்வனான பிரதாபசிம்மன் எனும் இளைஞனை அரசராக ஆக்கினார்கள்.

              இந்த பிரதாபசிம்ம ராஜா தன் காலத்தில் மிகவும் சிறப்பாக ஆட்சி புரிந்திருக்கிறார். இவர் மனைவி திரெளபதாபாயி என்பவருக்கு துளஜா என்பவர் பிறந்தார். பின்னாளில் இந்த துளஜா ராஜா மிகச் சிறப்பாக நாட்டை ஆண்ட வரலாறு இருக்கிறது. இவர்தான்  தனக்குப் பிறந்த குழந்தைகள் இறந்து போனதால் சதாராவுக்குச் சென்று சத்ரபதி வம்சத்தில் வந்த சரபோஜியைத் தத்து எடுத்துக் கொண்டு வந்தவர். அந்த சரபோஜி மன்னரின் ஆட்சியின் சிறப்புகள், அவர் வளர்த்த கலைகள், அவர் உருவாக்கிய சரஸ்வதி மகால் நூலகம் இவைகள் இன்றளவும் பேசப்பட்டு வருவதை அறிவோம்.

              பிரதாபசிம்ம ராஜா காலத்தில் நடந்த ஒரு ருசிகரமான சம்பவத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். இவருடைய ஆட்சியில் சையிது என்பவர் கில்லேதார் எனும் கோட்டைக் காவல் தலைவராக இருந்தார். பிரதாபசிம்ம ராஜா முறையாகத் திருமணம் செய்துகொள்ளாத தாய்க்குப் பிறந்தவர் என்பதால் இவருக்கு ஒரு அலட்சியம். அவர் ஆட்சியில் நடந்த பல்வேறு தர்ம காரியங்களையெல்லாம் இவர் சீரழித்து வந்தார். இவர் தீய எண்ணம் கொன்டவராக இருந்தார். இவரால் தான் சுபான்யா எனும் காட்டுராஜா குறுக்கு வழியில் பதவிக்கு வந்து பிறகு துரத்தப்பட்டார் என்பதால் இவருக்கு பிரதாப சிம்மர் மீது காட்டம் இருந்தது. மன்னருக்கு சாதகமாக இருந்த பல அதிகாரிகளை, கில்லேதார்களை இவர் மிகவும் துன்புறுத்தி வந்தார். பிரதாப சிம்மர் அரசுரிமை பெற தானே காரணம் என்றும் சொல்லி வந்தார். இவருக்கு ஒரு ஆசை. தன் மகளை சந்தா சாஹேபின் மகனுக்குத் திருமணம் செய்து வைத்து, அந்த மருமகனைத் தஞ்சாவூருக்கு அரசனாக ஆக்க வேண்டுமென்று விரும்பினார்.

               இந்த சையீதுவுக்கு ஒரு தம்பி உண்டு, பெயர் சையது காசிம். இவர் மன்னர் பிரதாபசிம்மரின் பாதுகாப்புப் படையில் இருந்தார். இவருக்குத் தன் அண்ணன் செய்யும் துரோகக் காரியங்களில் சம்மதமில்லை. ஆகையால் தன் அண்ணன்  செய்ய நினைத்திருக்கும் சதிச் செயல்களை மன்னரிடம் சென்று சொல்லிவிட்டார். இந்த சதி பற்றி தனக்குத் தெரியும் என்பதாக மன்னர் பிரதாபசிம்மர் காட்டிக் கொள்ளவில்லை. சையீது தனது மகளுக்குத் திருமணம் செய்யப் போவதாகவும், மணமகன் சந்தா சாஹேபின் மகன் என்றும் சொன்னபொது, திருமணத்தைத் திருவிடைமருதூரில் வைத்துக் கொள்ளச் சொல்லி அரசர் பணித்தார். அதன்படி அந்தத் திருமணம் திருவிடைமருதூரில் நடைபெற்றது.

               தஞ்சாவூர் கோட்டை வாயில் தினமும் சூரியோதயத்தின் போதுதான் திறக்கப்படும். மாலையில் வெளியிலிருந்து வேலைக்கு வருவோர் கோட்டையை விட்டு வெளியேறிய பின் சூரிய அஸ்த்தமனத்தின் பொது மூடப்பட்டு விடும். சையீதின் திட்டம், திருமணம் நடந்து முடிந்த கையோடு படையோடு பொழுது புலரும் போது உள்ளே நுழைந்து கோட்டையைப் பிடிப்பது என்று திட்டமிட்டிருந்தார். அதனை உணர்ந்த அரசர் கோட்டை வாசலில் தகுந்த வீரர்களை நிறுத்தி, படையோடு வரும் சையீதை மட்டும் உள்ளே விட்டு, படைகளை நிறுத்திவிடும்படி கட்டளையிட்டார். அதன்படி உள்ளே நுழைந்த சையீது தனிமையாக நின்றார். அவரை அரசர் அழைப்பதாகச் சொல்லி வீரர்கள், சபா மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கே பெரிய மண்டபத்தின் நாலா புறமும் திரைச்சீலைகள் தொங்க பெரிய பெரிய தூண்களுக்குப் பின்னால் வீரர்கள் ஒளிந்திருந்தனர். ராஜா பிரதாபசிம்மர் மட்டும் ஒரேயொரு ஆனத்தில் அமர்ந்திருந்தார். சையீது சபா மண்டமத்தினுள் நுழைந்த உடன் ராஜா, சற்று இரு வந்துவிடுகிறேனென்று சொல்லி உள்ளே சென்றவுடன், வீரர்கள் சையீதுவை சூழ்ந்து கொண்டு அவனைக் கொன்றுவிட்டனர். அவர் இருந்த கில்லேதார் பதவிக்கு மல்லார்ஜி காடேராவ் என்பார் நியமிக்கப் பட்டார்.

              இது பாவ காரியம் என்பதை உணர்ந்து பிரதாப சிம்மர் ராமேஸ்வரம் சென்று கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்து வந்தார். வரும் வழியில் ராமநாதபுரம் சேதுபதி மன்னர் இவரைத் தன் அரண்மனைக்கு அழைத்து உபசரித்து அனுப்பினார். திருச்சியைக் கைப்பற்றியிருந்த சந்தா சாஹேப் தஞ்சையை முற்றுகையிட்டுக் கோட்டையைப் பிடித்து தன் உதவியாளர் சப்தர் அலி என்பாரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு திருச்சிக்குச் சென்றார். இந்த சப்தர் அலி திருவையாற்றுக்கு மேற்கே ஒரு அணையைக் கட்டி இரண்டாண்டு காலம் இருந்ததாகத் தெரிகிறது.

              பிரதாபசிம்ம ராஜா சதாராவில் இருந்த ஷாஹு மன்னரின் உதவியைக் கேட்டுப் பெற்றார். அவர் ரகோஜி, பதேசிங் எனும் இரு வீரர்களின் தலைமையில் அறுபதினாயிரம் குதிரைகள் கொண்ட பெரும் படையை உதவிக்கு அனுப்பினார். இந்த செய்தியறிந்த சப்தர் அலி தஞ்சையை விட்டுவிட்டு திருச்சிக்கு ஓடிவிட்டார். சதாரா படைகள் தொடர்ந்து திருச்சிக்குச் சென்று அதையும் பிடித்துக் கொண்டு அதன் பொறுப்பை முரார்ஜிராவ் கோர்படே என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு, சந்தா சாஹேபைச் சிறைப் பிடித்துக் கொண்டு சதாராவுக்குச் சென்றார்கள்.

             திருச்சியைப் பிடித்துக் கொண்ட முரார்ஜிராவ் கோர்படேவுக்கு ஒரு ஆசை. திருச்சியோடு தஞ்சையையும் தானே பிடித்துக் கொண்டால் என்ன என்கிற பேராசை. அதற்காக தன் அமைச்சர் இன்னிஸ்கான் என்பவர் தலைமையில் ஒரு படையைத் தஞ்சாவூருக்கு அனுப்பினான். பிரதாபசிம்மர் தன் தளபதி மானோஜி ராவ் தலைமையில் ஒரு படையை அனுப்பி இன்னிஸ்கானைத் தோல்வியுறச் செய்து ஓடவைத்து விட்டார். இந்த நிலையற்ற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு  சந்தா சாஹேபின் நண்பனான முகமது ஆரப் என்பவன் பிரெஞ்சுக் காரர்களின் உதவியோடு, இரவு நேரங்களில் தஞ்சையைக் கொள்ளையடிக்கத் தொடங்கினான். பிரதாப சிம்மர் உடனே மல்லார்ஜி காடேராவ், மானோஜி ராவ் ஆகியோர் தலைமையில் ஒரு படையை அவர்களைப் பிடிக்க அனுப்பினார். அந்த மராத்தியப் படை கொள்ளையடித்தவர்களைக் கொன்று, அவர்களிடமிருந்து பல விலையுயர்ந்த பொருட்களை மீட்டு வந்தனர்.

             இங்கு தெற்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் கேள்விப்பட்ட ஐதராபாத் நிஜாம் உல்முல் ஹக் என்பார், பெரிய படையொன்றை வழிநடத்தி திருச்சிக்கு வந்து மொரார்ஜி கோர்படேயைத் திருச்சியிலிருந்து துரத்திவிட்டு, தன்னுடன் வந்த அன்வரூதின் கான் என்பவரிடம் திருச்சியை ஒப்படைத்தார். இந்த அன்வரூதின் கானின் மகன் மகபூஸ் கான் தஞ்சை மன்னருக்குத் ஆளனுப்பித் தங்களுக்கு பேஷ்கஷ் (கப்பம் கட்டுதல்) செலுத்தப் பணித்தார். அவர் கேட்ட தொகை மிக அதிகம் என்பதால், அதில் சிறிது குறைத்துக் கொள்ளுங்கள் என்று பிரதாபசிம்மர் கேட்டுக் கொண்டார். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாமல் பகபூஸ்கான் தஞ்சையின் மீது படையெடுத்து வந்து போரிட்டார். ஆனால் தஞ்சை மராத்திய படையிடம் தோற்றுப் போய் தன் தந்தை அன்வர்தீன் கானிடம் விவரத்தைச் சொன்னார். தன் மகன் செயல் தவறு என்று தெரிந்தும், தன் படை தோல்வியுற்றதை அந்த அன்வர்தீன் கானால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆகையால் அவரே ஒரு படையை வழிநடத்தி வந்து தஞ்சையைத் தாக்கினார். பசுபதிகோயிலில் நடந்த அந்தப் போரில் அன்வர்தீன்கான் படை தோற்றது, அவரும் தோல்வியோடு ஆற்காட்டுக்குத் திரும்பினார். அந்தப் போரில் அவர் உட்கார்ந்திருந்த யானை உடல் முழுவதும் ஈட்டியால் துளைக்கப்பட்டு நான்கு புறமும் தாங்க உயிரிழந்து நின்றதாக செய்திகள் உண்டு.

             சதாராவுக்குக் கைது செய்து கொண்டு செல்லப்பட்ட சந்தா சாஹேப் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு சிறையிலிருந்து விடுவிக்கப் பட்டார். அதில் ஒன்று அவர் இனி தஞ்சாவூர் பக்கம் போகக் கூடாது என்பது. இப்போது ஆந்திராவில் இருக்கும் அதோனி எனும் இடத்திலிருந்து ராசத் மொகிதீன்கான் என்பவருடன் தெற்கே வந்த சந்தா சாஹேப் புதுச்சேரியில் இருந்த பிரெஞ்சுக் காரர்களின் உதவியைப் பெற்று, ஆற்காட்டுக்குச் சென்று அன்வர்தீன் கானைக் கொன்றார்.

             அப்போது அன்வர்தீன் கானின் மகனும் ஆற்காட்டு நவாபுமான முகமது அலி நாகப்பட்டணத்துக்கு வந்து, அங்கிருந்து பிரதாபசிம்ம மகாராஜாவுக்கு ஒரு தகவல் சொல்லி அனுப்பினார். தன்னுடைய ராஜ்யத்தை சந்தா சாகேபு முறைகேடாகத் தன் தந்தையைக் கொன்று பிடித்துக் கொண்ட செய்தியைச் சொல்லி உதவி கேட்டார்.  மன்னரின் ஆலோசனைப்படி முகமது அலி திருச்சிக்குச் சென்று தங்கினார்.
இந்த காலகட்டத்தில் பிரதாப சிம்மரின் மகன் துளஜாவுக்கு ராஜசா பாயி என்பவரைத் திருமணம் செய்து வைத்தார். பிரதாப சிம்மரின் முதல் மனைவியின் பெயர் அஹல்யா பாயி. இவர் இறந்து விட்டார். இன்னொரு மனைவியான எஸ்வந்த பாயிக்கு இரண்டு பெண்கள். இன்னொரு மனைவிக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவன் பெயர் ராமசாமி, இன்னொருவன் கிருஷ்ணசாமி. இந்த ராமசாமி பின்னாளில் அமர்சிங் எனும் பெயரால் தஞ்சைக்கு அரசரானார். கிருஷ்ணசாமி இளம் வயதில் காலமானார்.

             ராசத் மொகிதீன்கான் சந்தா சாஹேபுடன் சேர்ந்து முகமது அலி தங்கியிருக்கும் திருச்சியை நோக்கிப் படையெடுத்தார். போகும் வழியில் தஞ்சை மன்னரிடம் சிறிது பணம் கேட்டார். அரசர் அவர்களுக்குப் பணவுதவி செய்ய மறுத்து விட்டார். உடனே அவ்விருவரும் தஞ்சைக் கோட்டையை முற்றுகையிட்டனர். கிட்டத்தட்ட 75 நாட்கள் தொடர்ந்து போர் நடைபெற்றது. இதற்குள் ஐதராபாத்திலிருந்து நாஜர் ஜங் பெரும் படையுடன் வருவதறிந்து சந்தா சாஹேபும், ராசத் மொகிதீன் கானும் முற்றுகையை விலக்கிக் கொண்டு புதுச்சேரிக்குச் சென்று விட்டனர். பிறகு புதுச்சேரியில் இருந்த பிரெஞ்சுக் காரர்களிடம் உதவி கேட்டுப் போரிட்ட போது நாஜர் ஜங் போரில் கொல்லப்பட்டார். சந்தா சாஹேப் திருச்சியை நோக்கி மீண்டும் படையெடுத்து வந்தார். அப்போது மதுரையிலிருந்து அல்லும் கான் என்பவர் சந்தா சாஹேபுக்கு உதவியாக வந்தார்.

              திருச்சியில் இருந்த ஆற்காட்டு அரசுரிமை பெற்ற முகமது அலி தஞ்சை பிரதாப சிம்மரிடம் உதவி கேட்டனுப்பினார். தஞ்சை மன்னர் ஒரு பெரும் படையை மானோஜி ராவ் என்பவர் தலைமையில் திருச்சியை நோக்கி அனுப்பினார். இவர்களுக்குப் பக்க பலமாக புதுக்கோட்டையிலிருந்து விஜயரகுநாத தொண்டைமான் படைகளும், ராமநாதபுரம் சேதுபதியின் படைகளும், மைசூர் ஸ்ரீரங்கப்பட்டினம் அரசர் நந்தி ராஜாவும், மொரார்ஜி கோர்படேயும் முகமது அலிக்கு உதவிக்கு வந்தனர். அல்லும் கான் தஞ்சை மானோஜி ராவுடன் பொரிட்டார். அப்போது ஆங்கில மேஜர் ஒருவர் பீரங்கியைச் சுட்டதில் அல்லும் கான் குண்டடிபட்டு இறந்தார். சந்தா சாஹேபுக்கும் முகமது அலிக்கும் சண்டை வெகு நாட்கள் நடந்தது. சந்தா சாஹேபுக்கு உதவிக்கு வந்த பிரெஞ்சுப் படை பின்வாங்கி விட்டது. சந்தா சாஹேபுக்கு உணவுப் பொருட்கள் வரமுடியாதபடி வழிகள் அடைக்கப்பட்டன. பொறியில் அகப்பட்ட எலி போல சந்தா சாஹேப் திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கம் தீவில் அகப்பட்டுக் கொண்டார். நாலா புறமும் எதிர்களின் படைகள். தப்பிப் பிழைக்க வழியில்லை. அத்தனை எதிர்களில் தஞ்சை தளபதி மானோஜி ராவிடம் சென்றால் தான் தான் உயிர் பிழைக்க முடியும் என்று புரிந்து கொண்டு இரவோடு இரவாக ஒரு குதிரையில் ஏறிக் கொண்டு ஒரு சிப்பாய் தீவர்த்தி வெளிச்சம் காட்ட கல்லணையை அடுத்த கோவிலடி எனுமிடத்தில் முகாமிட்டிருந்த மானோஜி ராவின் கூடாரத்திற்கு வந்து சரண் அடைந்தார். முன்பு சந்தா சாஹேப் தஞ்சைக்கு இழைத்த கொடுமைகளையெல்லாம் கருதி இவனுக்கு அடைக்கலம் தருவது முடியாது என்று மானோஜி ராவ் மறுத்தும், சந்தா சாஹேப் உங்களை விட்டால் எனக்கு வேறு எவரும் உதவ மாட்டார்கள் என்று சொன்னதால் மன்னர் பிரதாப சிம்மருக்குச் செய்தி சொல்லி அனுப்பியதன் பேரில், மன்னர் நம்மைச் சரண் என்று வந்தவர்களைக் காப்பாற்றுவது நமது கடமை என்று சொல்லி சந்த சாஹேபை தஞ்சைக்குக் கொண்டு வந்து இப்போது கீழராஜ வீதியில் பெண்கள் மேல் நிலைப் பள்ளியிருக்கும் வளாகத்தில் ஒரு இல்லத்தில் சிறை வைக்கப்பட்டார்.

               சந்தா சாஹேப் தஞ்சைக்குச் சென்று சரணடைந்து விட்ட செய்தி திருச்சியில் போரிட்டுக் கொண்டிருந்த முகமது அலி, மொரார்ஜி கோர்படே, நந்தி ராஜா, ஆங்கிலப் படைத் தளபதி வெலிங்டன் ஆகியோர் சந்தா சாஹேபை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கேட்டனர். ஆனால் சந்தா சாஹேப் பரிதாபமாகக் கெஞ்சி, தன்னைக் கொல்வதானால் தங்கள் கைகளால் கொன்று விடுங்கள், அவர்களிடம் என்னை அனுப்பி விடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டதற் கிணங்க, 3—6—1752 அன்று தஞ்சாவூரில் இப்போது கோர்ட் ரோடும், காந்திஜி சாலையும் சந்திக்கும் ஆற்றுப் பாலம் எனப்படும் இடத்தருகில் சந்தா சாஹேபின் தலை வெட்டப்பட்டது. வெட்டப்பட்ட தலை திருச்சியில் இருந்த முகமது அலிக்கு அனுப்பப்பட்டது. பிறகு அவர் உடலையும் முகமது அலி கேட்டதால் அதுவும் திருச்சிக்கு அனுப்பப் பட்டு அங்கே புதைக்கப்பட்டது.

               இதற்கிடையே மானோஜி ராவின் தஞ்சைப் படைகள் கோயிலடிப் பகுதிகளைக் கைப்பற்றியது. தனக்கு உதவி செய்த தஞ்சை அரசுக்கு முகமது அலி கோயிலடி கோட்டையையும், இளங்காடு பகுதிகளையும் பிரதாபசிம்ம ராஜாவுக்கு அன்பளிப்பாக அளித்தார். நந்தி ராஜாவும், மொரார்ஜி கொர்படேயும் திருச்சியை தாங்கள் எடுத்துக் கொள்ள விரும்பினர். முகமது அலி திருச்சியில் ஒரு பெரும் படையை நிறுத்தி விட்டு சென்னைக்குச் சென்றார். வழியில் பண்ருட்டி அருகில் திருவதிகை எனும் இடத்தில் முகமது அலியை மொரார்ஜி கொர்படேயின் தம்பி எதிர்த்துப் போரிட்டு இறந்து போனார். இந்த தகவலறிந்து மொரார்ஜி கோர்படே தன் ஊரான குத்திக்குச் சென்று விட்டார், நந்தி ராஜாவும் ஸ்ரீரங்கப் பட்டணம் போய்ச் சேர்ந்தார்.

               இந்த காலகட்டத்தில் பிரதாப சிம்ம ராஜா தன் மகன் துளஜாவுக்கு ராஜகுமாரா பாயி என்பவரைத் திருமணம் செய்வித்தார். தொடர்ந்து மோகனா பாயியையும் திருமணம் செய்து ஆக மொத்தம் துளஜாவுக்கு மூன்று மனைவியர்.

               அப்போது ஆங்கில கம்பெனியின் சென்னை கவர்னராக இருந்தவர் பிக்கெட் என்பார். இவர் காரைக்காலுக்குச் சென்று பிரெஞ்சுக்காரர்களோடு போரிட்டார். பின் புதுச்சேரிக்கும் சென்று பிரெஞ்சுக் காரர்களுடன் போர் நடந்தது. இந்த போர்களில் எல்லாம் ஆங்கில கவர்னர் பிக்கெட்டுக்கு பிரதாபசிம்ம ராஜா தன்னுடைய படை வீரர்களை அனுப்பி உதவி செய்தார். அப்படி அவர் ஆங்கில கவர்னருக்குச் செய்த உதவிக்கு பிரதியாக பின்னாளில் அந்த கவர்னர் பிரதாபசிம்மரின் மகனான துளஜாவுக்கு ஒரு பேருதவியைச் செய்தார். அது என்ன உதவி என்பதைப் பின்னர் பார்க்கலாம்.

               பிரதாபசிம்ம ராஜாவுக்கு வயது அதிகமானதாலோ என்னவோ அவர் மிகவும் கோபப்படலானார். அவர் இறப்பதற்கு மூன்று மாதம் முன்பிருந்து நள்ளிரவு நேரத்தில் கோட்டைக்கு வெளியிலிருந்து ஏதோ அழுகுரல் கேட்குமாம். வெளியிலுள்ளவர்களுக்குக் கோட்டைக்குள்ளிருந்து அதே அழுகுரல் கேட்டுக் கொண்டிருந்ததாம். இது எதனால் என்பதெல்லாம் விளங்கவில்லை. இந்த சுழ்நிலையில் பிரதாபசிம்ம ராஜா 1685இல் காலமானார். அவர் உடலுடன் அவர் மனைவியர் யமுனா பாயியும், சக்குவார்பாயியும் உடன்கட்டை ஏறி உயிரிழந்தனர்.

               பிரதாபசிம்ம ராஜா காலமானதும் அவரது மகன் துளஜா அரசனாக வந்தார். இவர் பதவிக்கு வந்ததை யொட்டி ஆற்காடு நவாப் முகமது அலி அவருக்கு ஒரு அபூர்வ பறவையைப் பரிசாக அளித்தார். அதன் பெயர் முதர்முருகு என்பதாம். அதன் கால்கள் ஒட்டகத்தின் கால்கள் போல் இருக்குமாம். அதன் உயரம் ஒன்றரை ஆள் உயரத்துக்கு இருக்குமாம். இந்த பறவையின் படம் ஒன்று மராத்தியர் வரலாற்றில் காணப்படுகிறது.

               துளஜா ராஜா ஆட்சிக்கு வந்ததும், முகம்மது யூசுப்கான் என்பவர் ஆண்டுகொண்டிருந்த மதுரை மீதும், மைசூர் ஹைதர் அலி மீதும் படையெடுத்தார். அருணகிரி அப்பா என்பவரை மதுரைக்கும், வெங்கடராவ் காடேராவ் என்பவரை மைசூருக்கும் தளபதிகளாக அனுப்பி வைத்தார். இதற்கு முன்பு ஹைதர் அலி தஞ்சைக்கு வந்திருந்த போது துளஜா அவருக்கு நான்கு யானைகளையும், ஒரு லட்சம் வராகன் பணமும் கொடுத்து அனுப்பினாராம். பிரதாபசிம்ம ராஜா காலத்திலேயே தஞ்சை மராத்திய மன்னர்கள் ஆற்காடு நவாபுக்குச் செலுத்த வேண்டிய கப்பப் பணத்தை நேரடியாகக் கொடுக்காமல் சென்னையில் இருந்த ஆங்கில கம்பெனியார் மூலம் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். துளஜாவிடம் அமைச்சராக இருந்த உசேன்கான் சூர் என்பவர் ஆற்காட்டுக்குச் செலுத்த வேண்டிய கப்பப் பணத்தை முன்பு போல ஆங்கில கம்பெனி மூலம் அனுப்பாமல் நேரடியாகச் செலுத்தினார். இதனால் பின்னர் நடந்த விளைவுகள் துளஜா ராஜாவுக்கு எதிராகப் போயிற்று.

               ராமநாதபுரம் சேதுபதி அரசருடன் துளஜா ராஜாவுக்கு மனவேற்றுமை ஏற்பட்டு, ராமநாதபுரத்தின் மீது துளஜா படையெடுத்தார். அங்கு போய் சேதுபதி மன்னரிடம் தான் படை நடத்தி வந்த செலவுக்குப் பணம் கேட்டுப் பெற்று வந்தார்.

              ஆற்காட்டு நவாபுக்குச் செலுத்த வேண்டிய கப்பப் பணம் கட்டாமல் நின்று போயிற்று. அதனால் நவாப் முகமது அலிக்குத் தஞ்சாவூரைத் தனதாக்கிக் கொள்ள ஆசை வந்து விட்டது. முதலில் நின்று போன கப்பப் பணம் அனைத்தையும் உடனே செலுத்தும்படி தஞ்சைக்கு செய்தி அனுப்பினார். அப்படியும் துளஜா பணம் செலுத்தாமல் இருந்தார். அதனால் கோபமடைந்த சுல்தான் முகமது அலி தன் மூத்த மகன் உமதத்துல் உமரா என்பவர் தலைமையில் ஒரு பெரும் படையை தஞ்சாவூருக்கு அனுப்பினார். துளஜா போர் செய்யும் நிலையில் இல்லை. அதனால் முகமது அலியுடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டார். அதன்படி உடனடியாக சுல்தானுக்கு ஐம்பது லட்சம் பணம் கொடுத்தார். கும்பகோணம், சீர்காழி போன்ற பகுதிகளை அவரிடம் அடமானம் வைத்தார், முன்பு தனக்குக் கிடைத்த இளங்காடு பகுதிகளையும் சுல்தானிடம் கொடுத்து விட்டார்.

              மறுபடி சுல்தான் முகமது அலி தன் இரண்டாவது மகன் மதார் முலுக் என்பவரை தஞ்சாவூருக்குப் படையுடன் அனுப்பினார். அவர் தஞ்சாவூருக்கு வந்து கோட்டையைத் தாக்கிப் பிடித்துக் கொண்டு நாரோ பண்டிதர் என்பவரை ஆட்சியை கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அங்கேயே தன் படைகளையும் வைத்திருந்தார். இவர் 17-9-1773 முதல் 11-4-1776 வரையிலான காலகட்டத்தில் துளஜாவைக் காவலில் வைத்துவிட்டு தானே ராஜ்யத்தை ஆண்டார்.

              இப்படி துளஜா துன்பங்களுக்கு ஆளாகி, ஆட்சியை இழந்து சிறைப்பட்டதற்கு அவர் செய்த சில பாவ காரியங்கள் தான் என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். அப்படி அவர் என்னதான் பாவத்தைச் செய்துவிட்டார் என்பதைப் பார்க்கலாம்.

              துளஜா தனக்கு உதவியாக இருக்க மராத்திய பிரதேசத்திலிருந்து தனக்கு நம்பிக்கையான ஆள் தேவை என்று லிங்கோஜி என்பவரை தஞ்சைக்குக் கூட்டி வந்து அரண்மனையில் வைத்திருந்தார். துளஜாவின் குழந்தைகளுக்கு உடல்நலம் இல்லாத காரணத்தால் அரண்மனைக்குள் வைத்தியர்களும் ஜோசியர்களுமே இருப்பார்கள் என்று சொல்வார்கள். அப்படி அவர் கவனம் குழந்தைகள் பக்கம் திரும்பியிருந்ததைப் பயன்படுத்தி இந்த லிங்கோஜி, மகாராஜாவைப் பார்ப்பதற்காக வந்த ஜமேதார் பதவி வகித்து வந்த கோனேரி ராவ் என்பவரை தன் சகாக்களுடன் சேர்ந்து தாக்கி கீழே தள்ளிவிட்டார். பின்னர் மகாராஜா என்ன வொல்வாரோ என்ற பயத்தில் ராஜாவிடம் போய் கோனேரிராவ் தங்களிடம் தகாத முறையில் பேசி வம்பு செய்ததால் கைகலப்பு ஏற்பட்டு அவர் தாக்கப்பட்டார் என்று சொன்னதும், ஏற்கனவே கவலையில் மூழ்கி யிருந்த துளஜா ராஜா அவனைப் பிரியில் கட்டிக் கொண்டு போய் கோட்டைக்கு வெளியே எறியுங்கள் என்று சொல்லிவிட்டார். அதன்படியே குற்றுயிரும் குலை உயிருமாக கோனேரி ராவைத் தெருவோடு இழுத்துச் சென்றபோது அவர் இறந்து விட்டார். அவர் உடல் கோட்டைக்கு வெளியே வீசப்பட்டது. இதனைக் கண்ட பொதுமக்கள் இந்த மகா பாபம் மகாராஜாவை சும்மா விடாது என்று சபித்தார்கள். அதன்படியே துளஜா இப்போது நாட்டையும் இழந்து சிறையில் இரண்டாண்டுகளுக்கு மேல் இருக்கும்படி ஆயிற்று என்று மக்கள் பேசிக் கொண்டார்கள்.

              சிறைப்பட்ட துளஜா ராஜா தான் ஏற்கனவே காரைக்கால், புதுச்சேரி பொருக்காக பிக்கெட் எனும் ஆங்கில கவர்னருக்கு உதவி செய்ததால், இப்போது தனக்கு ஏற்பட்ட நிலையை அவருக்கு கடிதம் மூலம் தெரிவித்தார். அவர் தன்னுடைய எஜமான்ர்களான இங்கிலாந்தில் இருந்த கம்பெனியாருக்கு எழுதி கேட்டார். அவர்கள் நவாப் முகமது அலியின் செயலை ஏற்கவில்லை. லார்ட் பிக்கெட்டுக்கு செய்தி யனுப்பி உடனடியாக நவாப் படைகளை தஞ்சாவூரை விட்டுப் போகச் சொல்லிவிட்டு துளஜாவுக்கு மீண்டும் ஆட்சியை மீட்டுக் கொடுக்கச் சொல்லி உத்தரவு அனுப்பினர். அதன்படி மீண்டும் துளஜா ராஜா தஞ்சைக்கு மன்னராக ஆனார். தான் அனுபவித்த துன்பங்களுக்கு தான் அழைத்து வந்த லிங்கோஜி காரணம் என்பதால் அவனை மராத்திய பிரதேசத்துக்கு அனுப்பிவிட்டு கோட்டையில் கில்லேதார், பவுஜ்தார் எனும் பதவிகளை ஆங்கிலேயர்களுக்கு அளித்தார். அது தவிர லட்சம் பொன்னும், நாகூர் எனும் ஊரையும் அதனை அடுத்துள்ள 277 கிராமங்களையும் ஆங்கிலேயர்களுக்கு அளித்தார். அதன் பின்னால் நவாபுக்கு கப்பம் கட்டுவது நிறுத்தப்பட்டது.
துளஜா ராஜாவுக்கு வாரிசு இல்லாமல் போனதால் மராத்திய அரசர் குடும்பத்தைச் சேர்ந்த சத்ரபதி சிவாஜியின் தம்பிக்கு ஏழாம் தலைமுறையில் வந்த 10 வயது சிறுவனாக இருந்த சரபோஜியை ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டு வந்து தஞ்சையில் அவரை அடுத்த அரசராக்கினார். சரபோஜியை தஞ்சையை மட்டும் கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு நாட்டின் இதர பகுதிகளை ஆங்கில கம்பெனியாரின் ரெசிடெண்ட் என்பார் கவனித்துக் கொண்டார். சரபோஜி சிறுவனாக இருந்தமையால் ஸ்வார்ட்ஸ் பாதிரியாரின் கவனிப்பில் கல்வி கற்று வந்த காலத்தில் துளஜாவின் தம்பி முறை ஆகும் அமர்சிங் என்பார் ஆட்சியில் சில காலம் இருந்தார். பிறகு அமர்சிங் திருவிடைமருதூருக்குச் சென்று தங்கிவிட்டார், சரபோஜியின் ஆட்சியும், அவருக்குப் பின் இரண்டாம் சிவாஜியும் ஆட்சி புரிந்தனர். இரண்டாம் சிவாஜி 1855இல் காலமான பிறகு தஞ்சை ஆட்சி முழுவதையும் ஆங்கிலேயர்களே எடுத்துக் கொண்டு விட்டார்கள்.

(சரபோஜியின் ஆட்சி பற்றியும் அவர் மகன் இரண்டாம் சிவாஜி ஆட்சி பற்றியும் மராத்திய ஆட்சி முடிவுக்கு வந்தது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.)