பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, September 27, 2012

தென்னாப்பிரிக்காவில் மகாத்மாவின் ரயில் பயண அனுபவம்.

(மகாத்மாவின் "சத்திய சோதனை"யிலிருந்து)

"நான் டர்பன் சேர்ந்த ஏழாவது அல்லது எட்டாவது நாள் அங்கிருந்து புறப்பட்டேன். எனக்கு ரெயிலில் முதல் வகுப்பு டிக்கெட் வாங்கப்பட்டிருந்தது. இரவில் படுக்கையும் வேண்டும் என்றால் அதற்காகத் தனியாக ஐந்து ஷில்லிங் கொடுத்துச் சீட்டுப் பெறுவது அங்கிருந்த வழக்கம். எனக்கு படுக்கை சீட்டும் வாங்கிவிட வேண்டும் என்று அப்துல்லா சேத் வற்புறுத்தினார். ஆனால் பிடிவாதத்தினாலும், கர்வத்தினாலும் ஐந்து ஷில்லிங் மிச்சப்படுத்தி விடலாம் என்ற எண்ணத்தினாலும் அதற்கு நான் மறுத்துவிட்டேன்.

"இந்த நாடு இந்தியா அல்ல என்பதைக் கவனத்தில் வையுங்கள். எங்களுக்கு போதிய செல்வத்தை ஆண்டவன் அளித்திருக்கிறார். செலவு செய்யவும் முடியும். உங்களுடைய தேவைக்குச் செலவு செய்து கொள்ளுவதில் தயவு செய்து வீண் சிக்கனம் பிடிக்க வேண்டாம்" என்று சேத் எச்சரிக்கை செய்தார். அவருக்கு நன்றி தெரிவித்தேன், "என்னைப்பற்றிக் கவலைப் படவேண்டாம்" என்றேன்.

நான் சென்ற ரயில், இரவு 9 மணிக்கு நேட்டாலின் தலைநகரான மாரிட்ஸ்பர்க் போய்ச் சேர்ந்தது. அந்த ஸ்டேஷனில் பிரயாணிகளுக்குப் படுக்கை கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். ஒரு ரெயில்வே சிப்பந்தி வந்து எனக்குப் படுக்கை வேண்டுமா என்று கேட்டார். "வேண்டாம்; என் படுக்கை இருக்கிறது" என்றேன். அவர் போய்விட்டார். ஆனால் ஒரு பிரயாணி அங்கே வந்து என்னை மேலும் கீழுமாகப் பார்த்தார். நான் 'கருப்பு மனிதன்' என்பதை அறிந்ததும் அவருக்கு ஆத்திரம் வந்துவிட்டது. உடனே போய்விட்டார். பிறகு இரண்டொரு அதிகாரிகளுடன் திரும்பி வந்தார். அவர்கள் எல்லோரும் பேசாமல் இருந்த போது வேறு ஒரு அதிகாரி என்னிடம் வந்து, "இப்படி வாரும். நீர் சாமான்கள் வண்டிக்குப் போக வேண்டும்" என்றார்.

"என்னிடம் முதல் வகுப்பு டிக்கெட் இருக்கிறதே" என்றேன்.

"அதைப்பற்றி அக்கறையில்லை. நீர் சாமான்கள் வண்டிக்குப் போக வேண்டும் என்று நான் சொல்லுகிறேன்" என்றார்.

"நான் உமக்குச் சொல்லுகிறேன். இந்த வண்டியில் பிரயாணம் செய்ய டர்பனில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். எனவே, இதில்தான் நான் பிரயாணம் செய்வேன்" என்றேன்.

"இல்லை நீர் இதில் போகக்கூடாது. இந்த வண்டியிலிருந்து நீர் இறங்கிவிட வேண்டும். இல்லையானால் உம்மைக் கீழே தள்ளப் போலீஸ்காரனை அழைக்க வேண்டி வரும்" என்றார்.

"அழைத்துக் கொள்ளும், நானாக இவ் வண்டியிலிருந்து இறங்க மறுக்கிறேன்" என்று சொன்னேன்.

போலீஸ்காரர் வந்தார். கையைப் பிடித்து இழுத்து என்னை வெளியே தள்ளினார். என் சாமான்களையும் இறக்குப் போட்டுவிட்டார். சாமான்கள் வண்டிக்குப் போய் ஏற நான் மறுத்து விட்டேன். ரெயிலும் புறப்பட்டுப் போய்விட்டது. போட்ட இடத்திலேயே எனது சாமான்களையெல்லாம் போட்டுவிட்டு, கைப்பையை மாத்திரம் என்னுடன் வைத்துக் கொண்டு, பிரயாணிகள் தங்கும் இடத்திற்குப் போய் உட்கார்ந்தேன். சாமான்கள், ரெயில்வே அதிகாரிகள் வசம் இருந்தன.

அப்பொழுது குளிர்காலம். தென்னாப்பிரிக்காவில் உயரமான பகுதிகளில் குளிர்காலத்தில் குளிர் மிகக் கடுமையாக இருக்கும். மாரிட்ஸ்பர்க் உயரமான இடத்தில் இருந்ததால் அங்கே குளிர் அதிகக் கடுமையாக இருந்தது. என் மேல் அங்கியோ மற்றச் சாமான்களுடன் இருந்தது. அதை ரயில்வே அதிகாரிகளிடம் போய்க் கேட்க நான் துணியவில்லை. கேட்டால் திரும்பவும் அவமதிக்கப்படுவேனோ என்று பயந்தேன். எனவே, குளிரில் நடுங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். அந்த அறையில் விளக்கும் இல்லை. நடுநிசியில் ஒரு பிரயாணி அங்கே வந்தார். அவர் என்னுடன் பேச விரும்புவதுபோல் இருந்தது. ஆனால், பேச விரும்பும் நிலையில் நான் இல்லை.

என் கடமை என்ன என்பதைக் குறித்துச் சிந்திக்கலானேன். என்னுடைய உரிமைகளுக்காக போராடுவதா, இந்தியாவுக்குத் திரும்பிவிடுவதா? இல்லாவிடில் அவமானங்களையெல்லாம் பொருட்படுத்தாமல் பிரிட்டோரியாவுக்குப் போய் வழக்கை முடித்துக் கொண்டு இந்தியாவுக்குத் திரும்புவதா? என் கடமையை நிறைவேற்றாமல் இந்தியாவுக்கு ஓடிவிடுவது என்பது கோழைத்தனமாகும். எனக்கு ஏற்பட்ட கஷ்டம் இலேசானது; நிறத் துவேஷம் என்ற கொடிய நோயின் வெளி அறிகுறி மாத்திரமே அது. சாத்தியமானால், இந்த நோயை அடியோடு ஒழிக்க நான் முயலவேண்டும். நிறத் துவேஷத்தைப் போக்குவதற்கு அவசியமான அளவு மாத்திரமே நான் தவறுகளுக்குப் பரிகாரம் பெறப் பார்க்க வேண்டும்.

எனவே அடுத்த வண்டியில் பிரிட்டோரியாவிற்குப் புறப்படுவது என்று தீர்மானித்தேன். மறுநாள் காலையில் ரயில்வே ஜெனரல் மேனேஜருக்கு நீண்ட தந்தி ஒன்று கொடுத்தேன்; அப்துல்லா சேத்துக்கும் அறிவித்தேன். அவர் உடனே ஜெனரல் மேனேஜரைப் போய்ப் பார்த்தார். அவரோ ரயில்வே அதிகாரிகள் செய்தது சரியே என்றார். ஆனால் நான் சேரவேண்டிய இடத்திற்குப் பத்திரமாகப் போய்ச்சேரப் பார்க்குமாறு தாம் ஸ்டேஷன் மாஸ்டருக்கு அறிவித்து விட்டதாக அப்துல்லா சேத்திடம் கூறினார். என்னைச் சந்தித்து எனக்கு வேண்டியதைச் செய்யுமாறு மாரிட்ஸ்பர்க்கிலும் மற்ற இடங்களிலும் இருந்த இந்திய வர்த்தகர்களுக்கு அப்துல்லா சேத் தந்திகள் கொடுத்தார். வர்த்தகர்கள் என்னைப் பார்க்க ஸ்டேஷனுக்கு வந்தார்கள். தாங்கள் அனுபவித்திருக்கும் கஷ்டங்களை எல்லாம் சொன்னார்கள். எனக்கு நேர்ந்தது சர்வ சாதாரணமான அனுபவம்தான் என்று கூறி, எனக்கு ஆறுதல் அளிக்க முயன்றார்கள். முதல் வகுப்பிலும், இரண்டாம் வகுப்பிலும் பிரயாணம் செய்யும் இந்தியர்கள், ரயில்வே அதிகாரிகளிடமிருந்தும் வெள்ளையரிடமிருந்தும் தொல்லையை எதிர்பார்க்கவே நேரும் என்றார்கள். இவ்விதம் துன்பக் கதைகளைக் கேட்பதிலேயே அன்று பொழுது போயிற்று. மாலை வண்டியும் வந்தது. எனக்காக ஏற்பாடு செய்திருந்த இடம் அதில் இருந்தது. டர்பனில் நான் வாங்க மறுத்த படுக்கைச் சீட்டை மாரிட்ஸ்பர்க்கில் வாங்கிக் கொண்டேன். ரயிலும் என்னைச் சார்லஸ் டவுனுக்குக் கொண்டு போய்ச் சேர்த்தது."

நன்றி: "சத்திய சோதனை" மகாத்மா காந்தி.

காந்திஜியின் பொன்மொழிகள் (2)


காந்திஜியின் பொன்மொழிகள் (2)

மகாத்மா காந்தியின் பொன்மொழிகளில் இரண்டாம் பகுதி இது. இந்த பாரத பூமி பழம்பெரும் பூமி நீரதன் புதல்வர், இந்நினைவகற்றாதீர் என்றான் பாரதி. அதே கருத்தை இங்கே வலியுறுத்துகிறார் மகாத்மா. இந்தியாவை நேசிக்காத மனிதர் இல்லை. இதன் வளமும், செல்வமும் பல நாட்டினரை இங்கே வரச் செய்தது அல்லவா? இனி மகாத்மா சொல்வதைக் கேட்போம்.

TO THE LOVERS OF INDIA

INDIA was once a golden land, because Indians then had a heart of gold. The land is still the same, but is a desert because we are corrupt. It can become a land of gold again only if the base metal of our present national character is transmuted into gold. The Philosopher's stone which can effect this transformation is a little world of two syllables SATYA (Truth). If every Indian sticks to Truth, Swaraj will come to us of its own accord.

AN ANCIENT NATION

We are children of an ancient nation. We have witnessed the burial of civilizations, those of Rome, Greece and Egypt. Our civilization abides even as the ocean in spite of its ebbs and flows. We have all we need to keep ourselves independent. We have the mountains that kiss the sky, we have the mighty rivers. We have the matchless beauties of Nature and we have handed down to us a heritage of deeds of valour. This country is the treasure-house of Tapasya. In this country alone the people belonging to different religions live together in amity. In this country alone do all the Gods receive their due measure of worship.

LET US BE MORALLY SUPREME

Western nations are to-day groaning under the heel of the monster God of Materialism. Their moral growth has become stunted. They measure their progress in Pound, Shilling and Dollar. American wealth has become the standard. She is the envy of the other nations. I have heard many of our countrymen say that we will gain American wealth but avoid its methods. I venture to suggest that such an attempt, if it were made, is fore-doomed to failure. We cannot be 'wise, temperate and furious' in a moment. I would have our leaders teach us to be morally supreme in the world.

This land of ours was once, we are told, the abode of the Gods. It is not possible to conveive Gods inhabiting a land which is made hideous by the smoke and the din of mill-chimneys and factories, and whose roadways are traversed by rushing engines, dragging numerous cars crowded with men who know not for the most part what they are after, who are often absent minded, and whose tempers do not improve by being uncomfortably packed like sardines in boxes and finding themselves in the midst of utter strangers, who would oust them if they could and whom they would in their turn, oust similarly. I refer to these things because they are held to be symbolical of material progress. But they add not an atom to our happiness.................

காந்திஜியின் சிந்தனைகள்.

காந்திஜியின் சிந்தனைகள்.

ஸ்ரீராமநவமி, ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி இவற்றிற்குப் பிறகு ஒருவருடைய பிறந்த நாளை பாரதத் திருநாட்டில் சிறப்பாக எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றால் அது மகாத்மா காந்திஜியின் பிறந்த நாளான அக்டோபர் 2. இன்னும் ஒரு வார காலத்தில் அவருடைய ஜயந்தி வருகிறது. இன்று முதல் நாள்தோறும் காந்தி ஜயந்தி வரை ஒவ்வொரு நாளும் ஒரு தலைப்பில் அவருடைய பொன் மொழிகள் இடம்பெறும். அவர் பேசிய அல்லது எழுதிய அதே ஆங்கிலத்தில் அப்படியே படியுங்கள். பாபுஜியின் கருத்துக்களுக்கு உங்களுடைய அபிப்பிராயங்களையும் தெரிவியுங்கள். நன்றி.

1. INDIA - A TEACHER

A Nation with a constitution like this is fitter to teach others than to learn from others. This Nation had Courts, Lawyers and Doctors, but they were all within bounds. Everybody knew that these professions were not particularly superior; moreover, the Vakils and Vaids did not rob people; they were considered Peoples' dependants, not their masters. Justice was tolerably fair. The ordinary rule was to avoid courts. There were no touts to lure people into them. This evil, too was noticeable only in and around capitals. The common people lived independently and followed their agricultural occupation. They enjoyed true Home Rule. The Indian civilization, as described by me, has been so described by its votaries. In no part of the world, and under no civilization, have all men attained perfection. The tendency of the Indian Civilisation is to elevate the moral being, that of the Western civilization is to propagate immorality. The latter is godless, the former is based on a belief in GOD. So understanding and so believing, it behoves every lover of India to cling to the old Indian Civilisation even as a child clings to the mother's breast.
“Indian Home Rule” by Mahatma

2. TO THE WOMEN

Woman has been suppressed under custom and law, for which man was responsible and in the shaping of which she had no hand. In a plan of life based on non-violence, woman has as much right to shape her own destiny as man has to shape his. But as every right in a non-violent society proceeds from the previous performance of a duty, it follows that rules of social conduct must be framed by mutual co-operation and consultation. They can never be imposed from outside. Men have not realized this truth in its fullness in their behavior towards women. They have considered themselves to be lords and masters of women instead of considering them as their friends and co-workers. It is the privilege of men to give the women of India a lifting hand. Women are in the position somewhat of the slave of old and who did not know that he could or ever had to be free. And when freedom came, for the moment he felt helpless. Women have been taught to regard themselves as slaves of men. It is up to men to see that they enable them to realize their full status and play their part as equals of men.

Wives should not be Dolls.

This revolution is easy, if the mind is made up. Let us begin with our own homes. Wives should not be dolls and objects of indulgence, but should be treated as honoured comrades in common service. To this end, those who have not received a liberal education should receive such instruction as is possible from their husbands. The same observation applies, with the necessary changes, to mothers and daughters.
It is hardly necessary to point out that I have given a one-sided picture of the helpless state of India's women. I am quite conscious of the fact that in the villages generally they hold their own with their menfolk and, in some respects, even rule them. But, to the impartial outsider, the legal and customary status of woman is bad enough throughout and demands radical alteration.
“The Constructive Programme (1945)

Tuesday, September 25, 2012

ஆன்மிகமும் அரசியலும்

மகாத்மா காந்தி நினைவுகள்
(மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டிய கட்டுரை)

143 ஆண்டுகளுக்கு முன்பு போர்பந்தரில் பிறந்த ஒரு அவதார புருஷன் மகாத்மா காந்தி. சாதாரண மனிதர்களைப் போல அவரும் இருந்திருந்தால் ராஜ்கோட் நீதிமன்றத்தில் ஒரு வக்கீலாகக் காலம் தள்ளியிருப்பார். பாரத மக்கள் செய்த புண்ணியத்தினால் இங்கு வந்து அவதரித்து, சுதந்திரம் பெறுவதற்கு என்ன வழி என்பது தெரியாமல் திசை தெரியாமல் திணறிக் கொண்டிருந்த மக்களுக்கு ஓர் புதிய வழியைக் காட்டி சுதந்திரம் பெற்றுத் தந்தவர். அந்த மகான் அவதரித்த புண்ணிய தினமான அக்டோபர் 2 அன்றாவது அவரது நினைவைச் சற்று மனத்துள் கொண்டு வருவோம்.

அரசியல் என்றால் குதிரைக்குச் சேணம் கட்டியது போல நடந்து கொள்வோர் பலர். ஏதோ குதிரைக் கொம்பு போல ஒரு சிலர் அரசியலில் இருந்து கொண்டே, இலக்கியம், இசை, நாட்டியம், நாடகம் என்று வேறு திசைகளிலும் ஆர்வம் காட்டி வருவர். ஆன்மிக வாதிகள் தங்களுக்கும் அன்றாட நாட்டு நடப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை போல பேசியும், வாழ்ந்தும் வருவர். சில அரசியல் வாதிகளுக்கு ஆன்மிகம் என்றாலோ, அல்லது கடவுள் நம்பிக்கை என்றாலோ வேம்பாகக் கசக்கும். ஆன்மிக வாதிகளை அவர்கள் பார்க்கும் பார்வையில் ஏளனமும், அவநம்பிக்கையும்தான் இருக்கும்.

ஆனால் ஆன்மிகத்தையும், அரசியலையும் ஒருசேர முன்னிறுத்தி அரசியல் வானில் மின்னியவர்; கொண்ட குறிக்கோளை அடைந்தவர் மகாத்மா காந்தி என்றால் அது மிகை அல்ல. அவரைப் பின்பற்றி பலர் ஆன்மிகத்தை உயர்வாகக் கருதி அரசியலிலும் தொண்டு செய்திருக்கிறார்கள். தமிழ் நாட்டில் ராஜாஜி, முத்துராமலிங்கத் தேவர் போன்ற சிலர் அப்படிப்பட்ட ஆன்மிக, அரசியல் தலைவர்களாகத் திகழ்ந்தனர்.

மகாத்மா ஆன்மிகவாதி என்று சொல்லும்போது அவர் கோயில் கோயிலாக அலைந்தவர் இல்லை. கோயில்களை வெறுப்பவர் இல்லையென்றாலும் சுவாமி தரிசனம் செய்வதற்கென்று அங்கெல்லாம் போகும் வழக்கம் அவருக்கு இல்லை. தினமும் தான் இருக்குமிடத்தில் கூடியிருக்கும் மக்களுக்கு மத்தியில் பிரார்த்தனை செய்வதே அவரது வழக்கம்.

1919இல் மகாத்மா காந்தி தமிழ் நாட்டுக்கு வந்தபோது தமிழ் நாட்டுக் கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்ற செய்தியை அறிந்தார். அப்படி நம் சகோதரர்களை உள்ளே விடாத ஆலயங்களுக்குள் நானும் செல்ல மாட்டேன் என்று விரதமிருந்தார். ராஜாஜி தலைமையில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது ராஜாஜியின் விருப்பப்படி கோயில்கள் அனைவருக்கும் நுழைய அனுமதி அளித்தது. ஒரு சிலரின் எதிர்ப்புக்கிடையே அந்த ஆலயப் பிரவேசம் சிறப்பாக நடைபெற்றது. அதன் பின் 1946இல் காந்திஜி தமிழகம் வந்தபோது இப்போது ஆலயங்களில் அனைவரும் சென்று தரிசிக்கலாம் என்ற நிலை இருந்ததால், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம், பழனி தண்டாயுதபாணி ஆலயம் ஆகிய கோயில்களுக்குச் சென்று வழிபட்டார்.

ஆன்மிகம் என்பது என்ன வெறுக்கத்தக்க விஷயமா? ஏன் சில அரசியல் தலைவர்கள் ஆன்மிகத்தையும் ஆன்மிக வாதிகளையும் கண்டால் விஷத்தைக் கக்குகின்றனர். இப்படியொரு போலித்தனமான நடவடிக்கையினால் தங்கள் அரசியல் வாழ்வு உயரக்கூடும் என்று எதிர்பார்க்கிறார்களோ என்னவோ தெரியவில்லை. இந்த விஷயம் குறித்து சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் 1976இல் "செங்கோல்" இதழில் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அந்த கட்டுரையை மீண்டும் இப்போது படித்தாலும் ஆன்மிகமும் அரசியலும் ஒன்றுபட்டால்தான் மக்கள் வாழ்வு சிறக்கும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும். இனி அந்தக் கட்டுரையின் சில பகுதிகளைப் பார்ப்போம்.

1. "அரசியல் தலைவர்களுக்கு ஆன்மிக இலக்கியங்களில் பயிற்சி இருக்க வேண்டும். இதனை இன்றியமையாத ஒரு தகுதியாகவும் கருத வேண்டும். ஒரு தலைவர் அரசியலை விட்டுவிட்டால், அதைவிடவும் சிறந்ததான ஆன்மிகத் துறையில் ஈடுபட்டு அவர் தொண்டாற்ற முடியும் என்ற நிலை இருக்க வேண்டும். "வறட்டு அரசியல்" ஒன்றை மட்டுமே பற்றிக் கொண்டு தலைவராவதால், அதை விட்டுவிட்டால் சூனியத்திற்கு வந்து விடுவோம் என்ற அச்சம் ஏற்பட்டு விடுகிறது. இத்தகையவர்கள் நாட்டுக்குச் சுமையாகி விடுகின்றனர்."

2. "இராமன் தன் தந்தை தயரதனுடைய வற்புறுத்தலால், அரச பதவியை ஏற்க இணங்கியபோது "காதலுற்றிலன், இகழ்ந்திலன்; கடன் இது என்று உணர்ந்தான்" என்கிறார் கம்பர். தனக்குக் கிடைத்த அரச பதவி இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் தன் சிற்றன்னையால் பறிக்கப்பட்டபோது, இராமனுடைய முகம் "அன்றலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா!" என்றும் கம்பர் கூறுகின்றார். அரச பதவி கிடைத்த போதும், அது திரும்பவும் பறிக்கப்பட்ட போதும் இராமனது முகம் ஒரே விதமாகத்தான் இருந்தது என்று கூறுகிறார்."

3. "சிலப்பதிகாரம் இயற்றியருளிய இளங்கோவடிகளும், அண்ணன் செங்குட்டுவனுக்கேயுரிய அரச பதவியானது, ஒரு நிமித்திகன் கூற்றால் தமக்கு வரவிருந்தபோது, அதனை ஏற்க மறுத்தார். அரசை அண்ணனுக்கே ஆக்கி, அரண்மனை வாழ்வைத் துறந்தார். இராமனுக்கும் இளங்கோவடிகளுக்கும் ஆன்மிக இலக்கியங்களிலே பயிற்சி இருந்ததனால்தான் அவர்கள் அரச பதவியைப் பெரிதாக எண்ணவில்லை. அதனை எளிதில் துறந்துவிட அவர்களால் முடிந்தது. அரசியலைத் துறந்த பின் சிறந்ததான ஆன்மிகத் துறையில் ஈடுபட்டுச் சிலப்பதிகாரக் காப்பியத்தைப் படைத்து அழியாப் புகழ்பெற முடிந்தது."

4. "அன்னியர்கள் இந்த நாட்டை ஆக்கிரமித்துக் கொண்ட பின்பு அரசியலோடு ஆன்மிகத்திற்கு இருந்த தொடர்பு குறைந்துவிட்டது. ஆன்மிகம் வேறு, அரசியல் வேறு என்றாகிவிட்டது. இந்த விபத்திலிருந்து பாரதப் பெருநாட்டை மீட்க 19ஆம் நூற்றாண்டிலே வடக்கே இராமமோகனர், தயானத சரஸ்வதி, பகவான் ராமகிருஷ்ணர், விவேகானந்தர் ஆகியோரும், தெற்கே இராமலிங்க வள்ளலாரும் தோன்றினர்."

5. "இந்தியாவில் ஆன்மிக வழியிலான கலாசார ஒருமைப்பாடு உறுதியாக இருந்து வருகிறது. அதுதான் அரசியல் ஒருமைப்பாட்டின் ஆணிவேராகவும் இருந்து வருகிறது. அதனைக் காப்பாற்றுவது உணர்ச்சி பூர்வமான தேசிய ஒருமைப்பாட்டுக்கு உதவி புரிவதாக இருக்கும். அவரவரும் தத்தம் மதங்களில் நம்பிக்கை வைத்து, வள்ளலார் வழியில் மதங்களிடையே ஒற்றுமை காண முயல வேண்டும்."

6. "துரதிர்ஷ்டவசமாக, தமிழ் நாட்டிலே அரசியல் வாதிகள் என்போர் ஆன்மிகத்தை விரும்பாதவர்களாகவோ, வெறுப்பவர்களாகவோ இருக்கின்றனர். இந்த நிலை காரணமாக, அகில இந்தியத் தலைமையைப் பெறுவது தமிழர்களுக்குச் சாத்தியமில்லாமற் போய்விட்டது; பெற்றாலும் அது நிலைபெறுவதோ, நீடிப்பதோ முடியாமல் இருக்கிறது."

7. "ஒரு காலத்தில் சங்கரர், இராமானுஜர், குமரகுருபரர் போன்ற தமிழ் நாட்டி ஞானியர்கள் அகில இந்தியாவிலும் செல்வாக்குப் பெற்றனர். அவர்கள் புகழ் வடபுலத்தில் இன்றளவும் நிலைத்து நிற்கிறது. அத்தகைய ஞானியர்கள் பிற்காலத்தில் -- ஏன், தற்காலத்திலும் தோன்ற முடியாத ஒரு சூன்ய நிலை தமிழர் சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கிறது."

8. "வள்ளலார் ஒருமைப்பாடு காண முயன்றார். மனித சமுதாயம் முழுவதையும் நேசித்தார்; தெய்வ பக்தியை உறுதியாகப் பிடித்துக் கொண்டு புரட்சிகரமான சீர்திருத்தக் கொள்கைகளைப் போதித்தார். இந்நாளைய சீர்திருத்த வாதிகளுக்கு அவர் மிகச் சிறந்த வழிகாட்டியாவார். உண்மையான சமூக சீர்திருத்தவாதி மனித சமுதாயத்திலே எந்த ஒரு பகுதியினரையும் அன்னியராகக் கருதுவதோ துவேஷிப்பதோ கூடாது என்பது இராமலிங்க சுவாமிகளின் போதனை."

தமிழகம் ஆன்மிகப் பயிற்சியுடைய அரசியல் வாதிகளின் எண்ணிக்கையைப் பெருக்குமானால், அப்படிப்பட்டவர்களுக்கு மதிப்பளிக்குமானால், அதன் எதிர்காலம் ஒளியுடையதாக இருக்கும்."

("செங்கோல்" 25-4-1976)

Wednesday, September 19, 2012

“பாலைவன நரி “ ரொமெல்.


“பாலைவன நரி “ Desert Fox எர்வின் ஜோகன்னஸ் யூகன் ரொமெல்.

இந்த நீளமான பெயரையுடைய ஜெர்மானிய நாஜி ராணுவ தளபதி ரொமெல் என்றுதான் அறியப்படுகிறார். அவரது வட ஆப்பிரிக்க பாலைவனத்தில் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிரான போரில் சாகசங்களினால் "பாலைவன நரி" என்று புகழப்பட்டார். அந்த ஜெர்மானிய ராணுவ ஜெனரல் பற்றிய சுவாரசியமான வரலாற்றைச் சிறிது பார்ப்போம்.

முதல் உலகப் போரில் பங்கெடுத்துக் கொண்டு வீரப் பதக்கங்களைப் பெற்றவர் ரொமெல். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மானிய நாஜிப் படையெடுப்பின்போது 1940இல் பிரான்ஸ் மீது நடைபெற்ற போரில் இவரது சாகசங்கள் இவரை ஒரு கதா நாயகனாக அறிமுகப்படுத்தியது. இருந்தாலும் இவருடைய வட ஆப்பிரிக்க பாலைவன நாடுகளில் நடந்த போரின்போது இவரது வீரதீர பராக்கிரமங்கள், இவரது டாங்கிப் படையின் வேகத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் பிரிட்டிஷ் ராணுவம் பின்வாங்கி ஓடியது இவற்றால் இவருக்கு "பாலைவன நரி" பட்டம் கிடைத்தது.

உலகத்தில் மிகவும் திறமைவாய்ந்த போர்த் தளபதியாக இவர் கருதப் படுகிறார். கடைசியாக இவருக்கு அளிக்கப்பட்ட பணி, ஐரோப்பாவில் பிரான்ஸ் நார்மண்டி கடற்கரையைக் காக்கும் பணிதான். ஆனால் இவரது துரதிருஷ்டம் இவர் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு பிரிட்டிஷ் மற்றும் நேச நாடுகளின் படைகள் கடல் கொந்தளிப்பு எதிர்ப்பாக இருந்தபோதும் அதனையும் மீறி நார்மண்டி கடற்கரையில் தரையிறங்கி முன்னேறத் தொடங்கி விட்டனர். அதுவே அவரது வரலாறு முற்றுப் பெறவும் காரணமாக அமைந்துவிட்டது.

இந்த தலைசிறந்த போர்த் தளபதிக்கு பெருமை சேர்த்த மற்றொரு விஷயம் என்னவென்றால், ஜெர்மானிய நாஜிப் படைகள் எல்லா போர் முகங்களிலும் போர்க் குற்றங்களை குறைவற செய்து வந்த போதும், இவருடைய ஆப்பிரிக்கா கோர் எனும் படைப் பிரிவு போர்க்குற்றங்கள் எதையும் செய்யவில்லை. மாறாக இவரிடம் அகப்பட்ட எதிரிகளின் போர்க்கைதிகள் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட்டனர். நாஜிப் படையின் தலைமை இவருக்குச் சிறை பிடிக்கப்பட்ட கைதிகளையும், யூத வீரர்களையும், மற்ற எதிரி நாட்டு ஜனங்களையும் கொன்று விடும்படி கட்டளையிட்டிருந்தது. ஆனால் அவர் அப்படி காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொள்ளவில்லை.

வழக்கமாக உலகத்து சர்வாதிகாரிகளுக்கு எதிராக நடக்கும் சதி வேலை ஹிட்லருக்கும் எதிராக நடைபெற்றது. அப்படியொரு சதியில் இந்த ரொமெலின் பெயரும் அடிபட்டது. ரொமெலுக்கு உலக முழுவதும் பாராட்டும், பெருமையும் கிடைத்து வந்தது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத ஹிட்லர் ரொமெலைத் தீர்த்துக் கட்டிவிடும்படி ரகசியமாக உத்தரவிட்டதாகத் தெரிகிறது. இந்த விஷயம் கேள்விப்பட்ட ரொமெல் தான் தற்கொலை செய்து கொண்டுவிடுவதாகவும், அதன்பின் தன் குடும்பத்தினர் பாதுக்காப்பாக வைத்திருக்கப்பட வேன்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அவர் வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டதா? ரொமெல் ஒப்புக்கொண்டபடி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது நாஜி ரகசியப் போலீசார் ஜெஸ்டபோவினரால் கொல்லப் பட்டாரா? இதையெல்லாம் இனி பார்ப்போம். அதற்கு முன்பாக அவரது வாழ்க்கை வரலாற்றைச் சிறிது திரும்பிப் பார்க்கலாம்.

ஜெர்மானிய பேரரசில் வுட்டெம்பர்க் எனும் ஊரில் 1891 நவம்பர் 15ஆம் தேதி பிறந்தவர் ரொமெல். கிறிஸ்துவ மதத்தில் பிராடெஸ்டண்ட் பிரிவைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஒரு உயர் நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர். பெயர் எர்வின் ரொமெல் (1860 - 1913). ரொமெலுக்கு இரு சகோதரர்கள் ஒரு சகோதரி இருந்தனர்.

ரொமெல் தன் 18ஆம் வயதில் ராணுவத்தில் சேர்ந்தார். 1916இல் தன் 25ஆம் வயதில் லூய்சி எனும் 17 வயது பெண்ணைத் திருமணம் செய்து கொன்டார். இவர்களுக்கு 1928இல் ஒரு மகன் பிறந்தான், பெயர் மான்ஃபிரெட் ரொமெல்.

முதல் உலக யுத்தம் 1914இல் தொடங்கியது. அதில் ரொமெல் பிரான்சிலும், ருமானியா நாட்டிலும் யுத்தத்தில் பங்கு பெற்றார். இந்தப் போர்களில் இவர் காட்டிய தீரமும், வேகமும், சாமர்த்தியமும் இவருக்கு நல்ல பெயரை ஈட்டித் தந்தது. 
முதல் யுத்தம் முடிந்த பல ஆண்டுகள் இவர் ராணுவத்தினரை பயிற்றுவிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். தரை வழிப் போரில் இவர் வல்லவராக இருந்ததோடு, அப்படிப்பட்ட பொர் பயிற்சி பற்றிய நூல் ஒன்றையும் இவர் எழுதியிருந்தார். 1930களில் ஜெர்மனியில் ஹிட்லரின் நாஜி கட்சி வலுப்பெற்று வளர்ந்து வரும் காலத்தில், ஹிட்லர் ரொமெலுடைய புத்தகத்தைப் படிக்க நேரந்ததாம். அதில் மிகவும் மனத்தைப் பறிகொடுத்த ஹிட்லருக்கு ரொமெலைத் தனக்கு அருகாமையில் வைத்துக் கொள்ள ஆர்வம் ஏற்பட்டது.

1938இல் கர்னலாக இருந்த ரொமெல் யுத்த ஆயத்தக் கல்லூரியில் கமாண்டராக உயர்வு பெற்றார். அதிலிருந்து ஹிட்லரின் சொந்த பாதுகாவல் படைக்குத் தளபதியாக நியமிக்கப் பட்டார். ஜெர்மனி போலந்து நாட்டின் மீது படையெடுத்த போது அந்த படையெடுப்புக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ஹிட்லருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. போலந்தைக் கணப் பொழுதில் வீழ்த்தி ஆக்கிரமித்த பிறகு அந்த வெற்றியைக் கொண்டாட ரொமெல் பெர்லின் திரும்பினார். போலந்தில் யுத்தத்தின் போது கைது செய்யப்பட்டவர்களில் ரொமெலின் உறவினர் ஒருவரும் இருந்தார்; அவரைப் பற்றி ரொமெல் விசாரித்த போது அவர் கொல்லப்பட்டுவிட்டது தெரிந்தது.

1940இல் பிரான்சின் மீது ஜெர்மனி ஆக்கிரமிப்பு செய்த வேளையில் அந்த படைக்குத் தலைமை தாங்க ரொமெல் முன்வந்தார். ஹிட்லரும் ரொமெலிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார். இதற்கு ஜெர்மனி ராணுவத்தில் இருந்த சில உயர் தளபதிகளுக்கு வருத்தம் ஏற்பட்டது. இருந்தாலும் ரொமெல் பிரான்சின் மீது தொடுத்த தாக்குதல் மின்னல் வேகத்தில் அமைந்தது. வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கியது. ரொமெலின் திறமை வெளி உலகத்துக்குத் தெரியத் தொடங்கியது.

பிரான்சைத் தொடர்ந்து பெல்ஜியத்தின் மீது யுத்தம் படர்ந்தது. ஆனால் அங்கு ஜெர்மானிய படைகள் கடுமையான எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது. வழி நெடுகிலும் உடைக்கப்பட்ட பாலங்களும், சாலை தடுப்புகளும், மின்னல் வேக முன்னேற்றத்துக்கு இடையூறாக இருந்தன. இந்த காலகட்டத்தில் யுத்த களத்தில் ஜெர்மானிய படைகளும் ரொமெலும் பல தொல்லைகளைச் சந்திக்க நேர்ந்தது. இந்த நிலையில் டன்கிர்க் நகரத்தை நோக்கி பிரிட்டிஷ் படைகள் பின்வாங்கிச் செல்வதற்காக பல்வேறு போர் முனைகளிலிருந்து குவியத் தொடங்கின. ஆபரேஷன் டைனமோ எனப் பெயர் பெற்ற இந்த பிரபலமான போர்முனை நிகழ்வு வரலாற்றில் நீங்கா இடம் பிடித்து விட்டது. இந்த டன்கிர்க்கில் பிரிட்டிஷ் படைகள் அடைந்த சேதம், அப்பப்பா, சொல்லி மாளாது. ஜெர்மானிய விமானப்படை குண்டு வீசித் தாக்கி ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் வீரர்களைக் கொன்று குவித்தது.

இந்த யுத்தத்தின் விளைவாக ரொமெல் மீது அளவற்ற நம்பிக்கை கொண்டு ஹிட்லர் அவருக்கு மிக உயரிய விருதுகளைக் கொடுத்து கெளரவித்தார். இந்த நிகழ்ச்சியும் மற்ற தளபதிகளுக்கு ரொமெல் மீது மீண்டும் அதிருப்தியையும் பொறாமையையும் ஏற்படுத்தி விட்டது. ஹிட்லருடன் ரொமெலுக்கு இருந்த நெருக்கம் மற்றவர்களது பொறாமைக்குக் காரணமாக இருந்தது.

ரொமெலுடைய படையின் வீரம், வேகம் இவற்றிற்காக அது "பிசாசுப் படை" எனப் பெயர் பெற்றது. ஐரோப்பாவில் நடைபெற்ற யுத்தங்களில் ரொமெல் காட்டிய அசாத்திய வீரத்தின் விளைவாக அவருக்குப் பதவி உயர்வு கொடுத்து வட ஆப்பிரிக்காவில் லிபியாவுக்கு 1941இல் அனுப்பப் பட்டார். அங்கு போரிட்டுக் கொண்டிருந்த இத்தாலியப் படைகள் தோல்வி முகத்தில் இருந்ததால் அங்கு போய் அவர்களுக்கு உதவ ரொமெல் உத்தரவிடப்பட்டார். அங்கு இத்தாலி படைகளைத் திணர அடித்துக் கொண்டிருந்த பிரிட்டிஷ் படைகளை ரொமெலின் மின்னல் வேகப் படைகள் ஓடஓட விரட்டியடித்தது.
இந்த யுத்தத்தின் விளைவாகத்தான் ரொமெலுக்கு "பாலைவன நரி" எனும் புகழ் கிடைத்தது. 1941இல் ஆப்பிரிக்க படைப் பிரிவுக்கு ரொமெல் தலைவராக நியமிக்கப்பட்டார். ஜெர்மனியின் படைகள் ரொமெல் தலைமையில் வரும் வேகத்தைக் கண்டு பிரிட்டிஷ் படைத் தலைவர் ஆர்ச்பால்டு வேவல் பிரிட்டிஷ் படைகளை பின்வாங்கும்படி உத்தரவிட்டது ரொமெலுக்கு நல்லதாகப் போய்விட்டது. எகிப்தில் நுழைந்த ஜெர்மானியர்கள் எகிப்து துறைமுகம் நகரமொன்றை பிடிப்பதற்காக பால நாட்கள் போராடவும், ஆஸ்திரேலிய பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து நிற்கவும் நேர்ந்தது. இது ரொமெலின் வெற்றியின் வேகம் குறைய காரணமாக அமைந்தது.
இது முதற்கொண்டு ரொமெல் ஆப்பிரிக்கவின் வட பகுதியில், குறிப்பாக எகிப்திலும், பல போர் முனைகளில் கடுமையாக போரிடவும், பலமான எதிர்ப்புகளைச் சந்திக்கவும் நேரந்தது. அவருடைய வழக்கமான மின்னல்வேக தாக்குதல் இங்கெல்லாம் நேச நாட்டுப் படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டும், கடுமையாக தாக்கியும் ஜெர்மானியர்களைத் திணர அடிக்கத் தொடங்கினர். போரின் போக்கும் சற்று மாறத் தொடங்கியது. இத்தாலியப் படைகளுக்கு ரொமெலின் மின்னல்வேகத் தாக்குதல்களுக்கு இணையாக தாக்குப் பிடிக்க இயலாமல் போயிற்று. அதனால் அவர்களுக்கும் அதிருப்தி தோன்றலாயிற்று.

பிரிட்டிஷ் ராணுவ தளபதி ஜெனரல் மாண்ட்கோமரி தலைமையேற்று பிரிட்டிஷ் படைகளை வழி நடத்தி ஜெர்மானியர்கள் மீது தாக்கத் தொடங்கிய பின் ஜெர்மனிக்குப் பின்னடைவு ஏற்படலாயிற்று. ரொமெலின் பிரம்மாண்டமான டாங்கிப் படை தேய்ந்து கட்டெறும்பாக ஆயிற்று. பிரிட்டிஷ் மாண்ட்கோமரி 500க்கும் மேலான டாங்கிகளுடன் பயங்கரமான தாக்குதலைத் தொடங்கியதும் ஜெர்மனியின் அழிவு தொடங்கியது. பின்வாங்கிய ஜெர்மானிய படைகள் டூனிஷியாவில் அமெரிக்க படைகளை எதிர் கொள்ள நேர்ந்தது. ஜெர்மானியர்களுக்கு வந்த ஆயுதங்கள், உணவுப் பொருட்கள் அமெரிக்கப் படைகளால் தடுத்து நிறுத்தப் பட்டது ஜெர்மானியர்களுக்கு ஆபத்தாகப் போயிற்று.
ஜெர்மானிய பிரச்சாரம் கோயபல்ஸ் தலைமையில் என்னதான் பொய்களை அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தாலும், ஆப்பிரிக்கக் கண்டத்தில் ஜெர்மானியர்கள் சந்திக்க நேர்ந்த அழிவுகளை மறைக்க முடியவில்லை. வட ஆப்பிரிக்க ஜெர்மானிய படையெடுப்பு தோல்வியில் முடிந்ததாகவே கருத நேர்ந்தது. ஓஹோவென வானுயரப் பறந்த ரொமெலின் புகழ் வீழ்ச்சியைச் சந்தித்தது.

1944இல் ரொமெல் ஐரோப்பிய கடற்கரை பிரதேசமான பிரெஞ்சு எல்லைக்குள் இருந்த நார்மாண்டி கடற்கரைக்கு பொறுப்பாக நியமிக்கப் பட்டார். நேச நாட்டுப் படைகள் இந்த நார்மாண்டி கடற்கரையில்தான் தரை இறங்கத் திட்டமிட்டிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்திருந்தது. ஆகவே பிரெஞ்சு கடற்கரைக்கு ரொமெல் காவலாக நியமனம் பெற்றிருந்தார்.

பிரிட்டிஷ் மற்றும் நேச நாடுகள் நார்மண்டியில்தான் தரை இறங்க திட்டமிட்டிருந்தாலும், ஜெர்மனியைத் திசை திருப்ப வேறு இடங்களின் பெயர்களும் பேசப்பட்டன. ஆகவே அவர்கள் எங்கு வருவார்கள் என்பதில் குழப்பமே நிலவியது. ஜெர்மனி படைகள் அசிரத்தையாக இருந்த குழப்ப சந்தடியில் நேச நாட்டுப் படைகள் இயற்கை சாதகமாக இல்லாத நிலையிலும், கடல் கொந்தளிப்பு இருந்த போதும் திட்டமிட்டபடி நார்மாண்டி கடற்கரையில் வந்து இறங்கினர். "டி.டே" எனப்படும் அந்த பெரு நாளுக்காக உலகமே காத்துக் கொண்டிருந்தது. ஜெர்மனியின் துரதிருஷ்டமோ என்னவோ ரொமெல் உட்பட பல உயர் ராணுவ தளபதிகள் விடுமுறையில் போயிருந்தனர். நார்மாண்டி கடற்கரையில் நேச நாட்டுப் படைகள் வந்து இறங்குவது சுலமாகப் போயிற்று. இறங்கிய வேகத்தில் படை பிரான்சுக்குள் முன்னேறின. பிரான்சின் டிகால் முன்னிலை வகித்து பிரான்சு படைகளுடன் வேகமாக முன்னேறி வந்தார். ரொமெல் காயம்பட்டு தலையில் அடிபட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

ஹிட்லருக்கு எதிரான சதி வேலைகள் நெடு நாட்களாகவே நடத்தப்பட்டு வந்திருக்கிறது. ஹிட்லரைக் கொல்ல பலமுறை முயற்சிகள் நடந்திருக்கின்றன. அப்படிப்பட்ட குழுவில் ரொமெலுக்கு நெருக்கமான சிலர் இருந்தனர். அவர்கள் ரொமெலையும் ஹிட்லருக்கு எதிராகத் திருப்ப முயற்சிகள் மேற்கொண்டனர். ரொமெலுக்கு ஹிட்லரின் பைத்தியக்காரத்தனமான நடவடிக்கைகள் பிடிக்காமல் இருந்தாலும், அவனைக் கொல்வதற்கு சம்மதிக்க முடியவில்லை. அப்படி ஹிட்லர் கொல்லப்பட்டால் உள் நாட்டுப் போர் வரும்; ஹிட்லர் பெரிய மாவீரனாக ஆகிவிடுவான், ஆகவே அவன் கொல்லப்படுவதைத் தான் ஆதரிக்கவில்லை என்று சொல்லிவிட்டார்.

1944 ஜூலையில் ஹிட்லர் மீது ஒரு வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி நடந்தது. ரொமெலின் மீதும் சந்தேகத்தின் நிழல் படிந்தது. கோர்ட் மார்ஷியல் எனும் ராணுவ கோர்ட் இது குறித்து விசாரணை நடத்தியது. ஹிட்லர் மீதான கொலை முயற்சி குறித்து அது விரிவான விசாரணை நடத்தியது. அப்போது நடந்த மோதல் காரணமாக ரொமெல் ராணுவத்திலிருந்து வெளியேற்றப் பட்டு மக்கள் நீதிமன்றத்தில் விசாரணை நடத்த முடிவானது. 

இவற்றையெல்லாம் அறிந்த ஹிட்லருக்கு, ரொமெல் தன்னைக் கொல்ல முயன்ற குற்றத்துக்காக துரோகி எனக் கருதி கொல்லப்பட்டால் அது நாட்டு நன்மைக்கு உகந்ததல்ல. ஆகையால் ரகசியமாக ரொமெலை தற்கொலை செய்து கொள்ள ஆணையிட உத்தரவிட்டான்.

ரொமெலின் வீடு 1944 அக்டோபர் 14ஆம் தேதி. இரு நாஜி ஜெனரல்கள் ரொமெலிடம் ஹிட்லரின் விருப்பத்தைத் தெரிவித்து, உத்தரவை ஏற்று ரொமெல் தற்கொலை செய்து கொண்டால் அவனை உயரிய கெளரவங்களைக் கொடுத்து பெருமைப் படுத்துவதாகவும், மறுத்தால் துரோகி எனக் கருதி மரண தண்டனை விதிக்கப்படுமென்றும் தெரிவித்தனர். முதல் வழியைப் பின்பற்றினால் அரசாங்க பெருமைகள், ஓய்வூதியம், ராஜாங்க மரியாதைகளுடன் சவ அடக்கம் அனைத்தும் கிடைக்கும், இல்லாவிட்டால் அனைத்தும் போய்விடும் என்றனர்.
                                                              The Grave of Rommel
வேறு வழி இல்லாமல் ரொமெல் முதல் வழியை ஏற்றுக் கொண்டு தனது முடிவை தன் மனைவி மகன் ஆகியொரிடம் சொல்லிவிட்டு ராணுவத்தினருடன் சென்று விட்டார். 
பத்து நிமிஷங்களுக்குப் பிறகு சையனைடு அருந்தி உயிர் நீத்த ரொமெலின் சாவுச் செய்தி அவருடைய மனைவிக்குத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நடந்தவை அனைத்தும் முன்னேற்பாட்டின்படி நடந்த நாடகங்கள். ரொமெல் இறந்தார். அரசாங்கத்தின் மரியாதைகள் கிடைத்தன. மனைவியும் மகனும் பின்னர் அமெரிக்காவுக்குச் சென்று விட்டனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் ஒரு தணிக்கையாளராக இருந்த அந்த மகன் நடந்த உண்மைகளை எழுதினார். அந்த கட்டுரை ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகை வெளியிட்ட "சீக்ரட்ஸ் அண்டு ஸ்டோரீஸ் ஆஃப் வார்" எனும் நூலில் வெளியாகியது. ஒரு மாவீரனின் சகாப்தம், அக்கிரமக்காரனுக்கு உதவிய காரணத்தால் சோகத்தில் முடிவடைந்தது. உலக வரலாற்றில் பதிவான சோக வரலாறுகளில் ரொமெலின் வரலாறும் சேர்ந்தே இருக்கும்.




Tuesday, September 18, 2012

தெருக்கூத்தாடி

     தெருக்கூத்தாடி


டண்டணக்கா டண்டணக்கா சத்தம்  
தெருக்கோடியில்!
ஓடிப்போய் பார்த்தேன்
உருமி மேளம்
கூத்தாடி கையில்!

குரங்கை பார்த்து சொன்னான்
"ஆட்றா ராமா ஆட்றா ராமா"
குரங்கும் கரணம் போட்டது
நானும் கை தட்டினேன்!

இன்னொருபக்கம்
"உங்களுக்கு உழைக்க
உங்களின் பொன்னான வாக்கை.....
சத்தம் கேட்டு
திரும்பிப்பார்த்தேன்
ஒலிபெருக்கியில் கரை வேட்டி.

"ஊழலை ஒழிப்பேன் லஞ்சத்தை அழிப்பேன்"
ஓயாமல் சொன்னான்
நானும் வாய் பிளந்தேன்
கையும் தட்டினேன்!

மனிதன் குரங்கின் பரிணாமம்
ராமர் பக்தர்களின் திருநாமம்
ஆனால்
தெருக்கோடியின் கூத்தாடி
ஏன்
வெறும் நாமத்தை பார்த்து
திரு நாமம்
என்கிறான்
நானும் கை தட்டுகிறேன்

லஞ்சம் ஒரு அதிகார மையம்!
ஊழலும் ஒரு அதிகார மையம்!
ஆனால் கரை வேட்டி
தான் ஆசைப்படும்
இரண்டையும் ஒழிப்பேன் என்கிறான்
நானும் கை தட்டுகிறேன்.

எப்படி
வெறும் நாமம்
திரு நாமமாகும்?
எப்படி
ஒழிப்பேன் என்பவன்
தன்னைத்தானே
ஒழித்துக்கொள்வான்?

ஏன் எனும்
கேள்வி எழுந்து
இதை
எப்போது உணர்வேன்!
எப்போது
கைதட்டுவதை நிறுத்துவேன்?

-தனுசு-

அடால்ஃப் ஈச்மன்


                       நாஜி அரக்கன் அடால்ஃப் ஈச்மன்

இந்தப் பெயரை எங்கோ கேட்டதாக நினைவிருக்கிறதா? 1960களில் அர்ஜென்டைனா நாட்டில் பெயரை மாற்றிக் கொண்டு, அந்த நாட்டின் தொழிற்சாலையொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த ஜெர்மானிய நாஜி யுத்த குற்றவாளி இந்த ஈச்மன் என்கிற அடால்ஃப் ஈச்மன். இவனைப் பற்றி இப்போது என்ன? மனிதகுல வரலாற்றில் ஈவு இரக்கமின்றி மக்களை இனத்தின் பெயரால் கொன்று குவித்த ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லரின் எண்ணங்களுக்குச் செயல் வடிவம் கொடுத்த அரக்கன். யுத்தத்தில் ஜெர்மனி வீழ்ந்த பின் நாட்டைவிட்டு ஓடி தென் அமெரிக்க நாடான அர்ஜென்டைனாவில் புகலிடம் தேடி மறைந்து வாழ்ந்த இவனை பல ஆண்டுகளுக்குப் பிறகு, இவனால் கொல்லப்பட்ட ஒரு யூதரின் மகன் இஸ்ரேல் நாட்டின் புலனாய்வு அமைப்பில் பணியாற்றிக் கொண்டிருந்த இளைஞனால் பிடிக்கப்பட்டு இஸ்ரேலில் நடந்த விசாரணையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவன் இந்த ஈச்மன். இவனைப் பற்றியும் இவன் இழைத்த கொடுமைகள் பற்றியும் இங்கு ஓரளவு தெரிந்து கொள்ளலாமே.

ஜெர்மன் நாஜிப் படையில் லெஃப்டினென்ட் கர்னலாக இருந்தவன் இந்த ஈச்மன். 1906 மார்ச் மாதம் 19இல் பிறந்தவன். ஜெர்மன் நாஜிப் படை இழைத்த கொடுமைகளுக்குத் துணை போனவன் -- அல்ல அல்ல, அவற்றை முன்னெடுத்துச் சென்ற மகாபாவி. இவனுடைய திறமை, சாமர்த்தியம், புத்திசாலித்தனம் அனைத்தையும் பார்த்து இவனை யூதர்களைப் பிடித்து, அடிமாடுகளைப் போல அடைத்து வைத்து பின்னர் கொலைக்களத்துக்குக் கொண்டு சென்று ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கும் பணிக்கு இவன் நியமிக்கப் பட்டான். யூதர்களை அடைத்து வைக்கும் இடத்தை 'கெட்டோ' என்பார்கள். கிழக்கு ஐரோப்பா முழுவதும் யூதர்கள் அஞ்சி உயிர் பிழைக்க ஓடினார்கள். விடாமல் துரத்திப் பிடித்து அவர்களை கெட்டோவில் அடைத்துப் பின் அவர்களை பலவிதமான கொடிய வழிமுறைகளால் கொன்று குவிக்கும் திட்டங்களை வகுத்தவன் இந்த அடால்ஃப் ஈச்மன். ஹிட்லரின் முதல் பெயரான அடால்ஃப் என்பது இவனுக்கும் இருந்ததாலோ என்னவோ, இவனும் அவனைப் போலவே அரக்கனாகவே இருந்தான்,. 
இரண்டாம் உலகப் போர் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. ஜெர்மானியத் தலை நகரான பெர்லின் விழுந்தது. வடக்கிலிருந்து ரஷ்யப் படைகளும், மேற்கு, தெற்கு திசைகளிலிருந்து நேச நாட்டுப் படைகளும் பெர்லின் நகருக்குள் நுழைந்த நேரம் பூமிக்கடியில் ஒரு சுரங்க அறையில் ஹிட்லரும் அவனது காதலியும் தற்கொலை செய்து கொண்டு மடிந்தனர். அவன் முன் ஏற்பாட்டின்படி அவன் உடல்கள் ரஷ்யப் படையினரிடம் கிடைத்தால் அவமானம் செய்வார்கள் என்று கருதி அவன் சொல்லியிருந்தபடி அவ்விரு உடல்களும் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொளுத்தப்பட்டு விட்டன.

ஜெர்மனி வீழ்ந்த பின் பல நாஜி போர்க்கைதிகள் பிடிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் சர்வதேச நீதிமன்றத்தில் நியுரம்பர்க் நகரில் நடந்த நீதிவிசாரணையில் தண்டனை விதிக்கப்பட்டனர். அதில் தண்டிக்கப்பட்டவர்கள் விவரம் தெரியவேண்டுமா? அவற்றைப் பின்னர் வேறொரு கட்டுரையில் பார்க்கலாம். இப்போது இந்த ஈச்மனின் கதியை மட்டும் பார்ப்போம்.

இரண்டாம் உலக யுத்தம் முடிந்த குழப்பமான சூழ் நிலையைப் பயன்படுத்தி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை அணுகி இவன் ஒரு அகதியாகத் தன்னை அறிமுகம் செய்துகொண்டு ஒரு பாஸ்போர்ட்டை வாங்கிக் கொண்டான். அதற்கேற்றவாறு தன்னை புதுமனிதனாக ஆக்கிக் கொண்டு பெயரையும் மாற்றிக் கொண்டான். தென் அமெரிக்க நாடான அர்ஜென்டைனா நாட்டுக்கு ஓடினான். ஐரோப்பாவில் எங்கிருந்தாலும் இஸ்ரேலின் யூத ரகசியப் படையான மொஷாதிடம் மாட்டிக் கொள்வோம் என்று கண்காணாத தென் அமெரிக்காவுக்கு ஓடினான். அங்கு போய் பெயர் மாற்றிக் கொண்டு மெர்சிடெஸ் பென்ஸ் கம்பெனியில் வேலைக்கு அமர்ந்து ஃபோர்மென்னாக உயர்ந்தான். இவனைத் தேடி அலைந்த மொஷாத் அமைப்பின் திறமை மிக்க ஏஜெண்டுகள் இவன் போனஸ் ஐரிஸ் நகரில் இருப்பதை மோப்பம் பிடித்து விட்டனர். அவனை அங்கிருந்து திரைப்படங்களில் காணப்படும் திடுக்கிடும் விதத்தில் 1960இல் பிடித்து, இஸ்ரேல் விமானத்தின் மூலம் கடத்தி வந்து இஸ்ரேலில் சிவில் நீதிமன்றத்தின் முன் நிறுத்தி 1962இல் தூக்கிலிட்டுக் கொன்றதோடு இந்த அரக்கனின் வரலாறு முடிந்தது. மற்ற நாஜி கைதிகள் அனைவரும் நியுரம்பர்க் விசாரணை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள்; இவன் மட்டுமே இஸ்ரேல் நீதிமன்றத்தால் தண்டனை அளிக்கப்பட்டவன்.

அடால்ஃப் ஈச்மன் ஜெர்மனிக்காரன். இவன் தந்தை ஒரு தொழில் அதிபர். 1906இல் பிறந்தான். இவன் தாய் 1914இல் இறந்தார். அதன் பின் இவன் குடும்பம் ஆஸ்திரியா நாட்டுக்குக் குடிபெயர்ந்தது. முதல் உலக யுத்த காலத்தில் இவன் தந்தை அடால்ஃப் கார்ல் ஈச்மன் ஆஸ்திரிய ஹங்கேரி ராணுவத்தில் சேர்ந்து பங்கு பெற்றவர். முதல் உலக யுத்தத்துக்குப் பிறகு மீண்டும் இந்தக் குடும்பம் ஜெர்மனிக்குக் குடி பெயர்ந்தது. 
பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய ஈச்மன் ஒரு மெகானிக்காக வேலை செய்தார். பிறகு அதை விட்டுவிட்டு ஒரு கம்பெனியில் பணியாற்றத் தொடங்கினார். அது முதல் சுமார் எட்டு ஆண்டுகள் அங்கு வேலையும் பார்த்துக் கொண்டு ஹிட்லரின் கட்சியில் சேர்ந்து பணியாற்றினார்.

அடால்ஃப் ஈச்மன் 1932இல் ராணுவத்தில் சேர்ந்து நாஜிக் கட்சியில் தீவிரமானார். 1933இல் நாஜிக் கட்சி ஆட்சியைப் பிடித்தது. நாஜிக்களின் ஆட்சி வந்ததும் ஈச்மன் நாஜிப்படையில் ஒரு குழுத் தலைவர் ஆனார். இவருக்கு முதலில் கொடுக்கப்பட்ட பணி யூதர்களை அடைக்கும் ஒரு சிறைச்சாலையில். நாஜிப் படையில் படிப்படியாக பதவி உயர்வு பெற்றார் ஈச்மன். இதற்கிடையே யூதர்கள் குறித்த தகவல்கள் அறிந்த அதிகாரியாகவும் இவர் திகழ்ந்தார். இரண்டாம் உலகப் போர் 1939இல் தொடங்கிய சமயம் இவருக்கு யூதர்களை ஜெர்மனியை விட்டு வெளியேற்றும் பணி கொடுக்கப்பட்டது.

இந்த காலகட்டத்தில்தான் ஜெர்மானிய யூதர்களை நாடு கடத்தி மடகாஸ்கர் தீவுக்குக் கொண்டு செல்லும் தீட்டப்பட்டது. ஆனால் அது கைவிடப்பட்டது. எனினும் யூதர்களை மொத்தமாக ஒழித்து அழித்து விடும் திட்டமொன்று ரகசியமாகத் தீட்டப்பட்டு அதனை எப்படி செயல்படுத்துவது என்பதை ஈச்மன் உட்பட பல நாஜிக்கள் கொண்டு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

யூத மக்களை ஒன்று திரட்டி எல்லா வயதினரையும் ரயிலில் ஏற்றி முகாம்களில் கொண்டு வந்து சேர்த்து, பிறகு அவர்களை பல வழிமுறைகளைக் கையாண்டு கொன்றொழிப்பது என்பது திட்டம். அந்தப் பொறுப்பு இந்த ஈச்மன் வசம் கொடுக்கப்பட்டது. அப்படிப்பட்ட முதல் முகாம் போலந்து நாட்டில் அமைக்கப்பட்டு அதற்கு ஈச்மனை அனுப்பி வைத்தார்கள். அந்த காலகட்டத்தில் இவன் மேற்கத்தியர்களிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள முயன்றான். அதன்படி ஆயுதங்களையும், வண்டிகளையும் கொடுத்தால் யூதர்களை அவர்களிடம் தருவதாக அந்த ஒப்பந்தம் கூறியது. ஆனால் அது நிறைவேறவில்லை என்பதால் அவன் சுமார் நாலு லட்சத்துக்கும் அதிகமான ஹங்கேரி நாட்டின் யூதர்களை விஷவாயு செலுத்திக் கொன்று குவித்தான்.
1945இல் நாஜி தளபதி ஹென்ரிஸ் ஹிம்ளர் யூதர்களைக் கொல்வதை நிறுத்த ஆணையிட்டான். யூதர்களைக் கொன்றதற்கான சான்றுகள் எதுவும் எதிரிகளிடம் சிக்காதபடி பார்த்துக் கொள்ளவும் அவன் ஆணை கூறியது. யுத்த குற்றங்களில் தாங்கள் சிக்கிவிடாதபடி ஹிம்ளர் எடுத்த முயற்சிகளை ஈச்மன் விரும்பவில்லை. மாறாக இவன் தன் போக்கில் யூதர்களை வேட்டையாடுவதை ஹங்கேரி நாட்டில் தொடர்ந்து செய்து வந்தான்.

1945 யுத்தத்தின் கடைசி கட்டம். சோவியத் படைகள் ஹங்கேரிக்குள் நுழையத் தொடங்கியது. இவன் அங்கிருந்து ஓட்டம் பிடித்து ஆஸ்திரியாவுக்குள் வந்து விட்டான். அப்போது ரஷ்யப் படைகளும், அமெரிக்க மற்றும் நேச நாட்டுப் படைகள் ஜெர்மனிக்குள் புகுந்து நாஜிக்களைத் தோற்கடித்தது. யுத்தம் முடிந்தது. ஈச்மன் அமெரிக்க படையினரால் பிடிக்கப்பட்டான். ஆனால் பிடிபட்டவன் யார், எப்படிப்பட்டவன், அவன் செய்திருக்கும் கொடுமைகள் என்ன என்பதையெல்லாம் அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை. தன்னுடைய பெயரை அவன் மாற்றிச் சொன்னான். ஓட்டோ எக்மன் என்று தன் பெயரைக் குற்ப்பிட்டான். இந்த ஆள் மாறாட்டச் சூழ்ச்சியின் அடிப்படையில் இவன் 1946இல் அமெரிக்கர்களிடமிருந்து தப்பி தலைமறைவானான். அப்படி இருந்து கொண்டே 1946இல் இவன் அர்ஜென்டைனா நாட்டில் நுழைய அனுமதி வாங்கிக் கொண்டான்; என்றாலும் உடனடியாக அவன் அந்த நாட்டுக்குப் போகவில்லை.
1950, உலகப் போர் முடிந்த ஐந்து ஆண்டுகள் முடிந்த வரை அவன் சிக்க வில்லை. அதன் பின் அவன் இனி ஆபத்து இல்லை என்று முடிவு செய்து இத்தாலி நாட்டுக்குச் சென்றான். யுத்தத்தினால் குடிபெயர்ந்த ஒரு அகதி என்று தன்னை அவன் அறிவித்துக் கொண்டான். பெயரையும் ரிக்கார்டோ கிளெமெண்ட் என மாற்றிக் கொண்டான். அச்சு நாடுகள் என வழங்கப்பட்ட ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் யுத்த குற்றவாளிகளைத் தப்பித்துச் செல்ல ஒரு ரகசிய இயக்கம் இருந்தது. அதன் உதவியும் இவனுக்குக் கிடைத்தது. 
இந்த காலகட்டத்தில்தான் யுத்தத்தால் குடிபெயர்ந்த அகதி என்று இவர் செஞ்சிலுவை சங்கத்திடமிருந்து பாஸ்போர்ட் வாங்கிக் கொண்டான். இது ஜெனிவா நகரத்தில் கொடுக்கப்பட்டது. ஏற்கனவே அர்ஜென்டைனாவில் குடியேற அனுமதி வாங்கி வைத்திருந்த இவனுக்கு விசாவும் கிடைத்தது வசதியாகப் போய்விட்டது. இவன் ரிக்கார்டோ கிளெமெண்ட் எனும் பெயரில் இந்த வசதிகளைப் பெற்றுக் கொண்டான்.
அடால்ஃப் ஈச்மன் 1950 ஜூலை 14ஆம் தேதி அர்ஜென்டைனா நாட்டுக்குச் செல்லும் ஒரு கப்பலில் இடம் பிடித்தான். அங்கு சென்று போனஸ் ஐரிஸ் நகரத்தில் பல வேலைகளில் சேர்ந்து பணியாற்றினான். இப்படி அடுத்த பத்து ஆண்டுகளைத் தலைமறைவாக இருந்து தப்பித்து விட்டான். தொடர்ந்து தனது குடும்பத்தையும் ரகசியமாக அர்ஜென்டைனாவுக்கு வரவழைத்துக் கொண்டான்.

இந்த சாகசங்கள் எல்லாம் சி.ஐ.ஏ. எனும் அமெரிக்க உளவுத் தாபனத்துக்குத் தெரிந்தும் சில அரசியல் காரணங்களுக்காகவும், அமெரிக்க ஜெர்மானிய சுமுக உறவுகளுக்காகவும் சும்மாயிருந்து விட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

1948இல் ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தின்படி இஸ்ரேல் எனும் நாடு யூதர்களுக்காக உருவாக்க அனுமதியளிக்கப்பட்டது. அந்த நாடு புத்துணர்வோடும், ஊக்கத்தோடும் செயல்படத் தொடங்கியது. தன்னலமற்ற பல வீரத் தியாகிகள் அந்த நாட்டை வழி நடத்தத் தொடங்கினர். யூதர்கள் இஸ்ரேலில் குடியேற கப்பல் கப்பலாக வந்தவர்களை பிரிட்டிஷ் சைப்ரஸ் தீவில் பிடித்து வைத்திருந்தனர். அவர்களையெல்லாம் தோணிகள் மூலம் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்துக்குக் கொண்டு செல்லும் பணியை மோஷே தயான், கோல்டா மேயோ போன்றவர்கள் செய்தார்கள். இந்த பணியில் மொஷாத் எனும் இயக்கம் இஸ்ரேலில் செயல்பட்டுக் கொண்டிருந்தது.

இந்த மொஷாத் எனும் உளவுத் தாபனத்தில் ஈச்மனால் கொலைசெய்யப்பட்ட ஒரு யூதரின் மகனும் இருந்தார். அவர் பெயர் சைமன் விசந்தால் என்பது. இவருக்கு அளிக்கப்பட்ட பணி எப்படியாவது ஈச்மன் இருக்குமிடத்தைக் கண்டுபிடிப்பது. 1954இல் இவருக்கு ஒரு தகவல் கிடைத்தது. ஆஸ்திரியாவில் இருந்த ஒருவருக்கு போனஸ் ஐரிஸ் நகரிலிருந்து வந்த கடிதம் ஒன்று இவர் கையில் கிடைத்தது. அதுதான் ஒரு பெரிய வேட்டையின் முதல் பிடிமானம். இவர் தன் தலைமையகத்துக்கு ஒரு செய்தி அனுப்பினார். அந்த அசிங்கம் பிடித்தவன் போனஸ் ஐரிசில் இருக்கிறான் எனும் தகவல் எனக்குக் கிடைத்திருக்கிறது என்பதுதான் அது.

ஊர் மாறி, நாடு மாறி போன ஈச்மன் தன் பெயரை மாற்றிக் கொண்டானே தவிர தன் குடும்பத்தார் பெயர்களை மாற்றிக் கொள்ளவில்லை. மிக சாமர்த்தியமான குற்றவாளிகள்கூட சில சமயங்களில் சில சின்னஞ்சிறு விஷயங்களில் கொட்டை விட்டுவிடுகிறார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.

இதற்கிடையே மற்றொரு விஷயம் நடந்திருப்பதும் தெரிய வந்தது. லோதர் ஹெர்மன் என்று ஒரு வழக்கறிஞர். இவர் ஒரு யூதர். யூதர்களை நாஜிக்கள் வேட்டையாடத் தொடங்கியதும் இவர் அர்ஜென்டைனா நாட்டுக்கு ஓடிவிட்டார். அதற்கு முன்பு இவர் ஒரு யூதர்களை அடைக்கும் கொட்டடியில் இருந்தவர். இவருக்கு சில்வியா என்று ஒரு பருவமடைந்த பெண் இருந்தாள் அர்ஜென்டைனாவில். அவள் ஒரு பையனுடன் நெருங்கிப் பழகி வந்தாள். அந்தப் பையனின் பெயர் ஈச்மன் என்று சொல்லியிருந்தாள். அவன் வாய் சும்மாயிராமல் தன்னுடைய தந்தை நாஜிப் படையில் செய்த வீரதீர சாகசங்களை இந்தப் பெண்ணிடம் அவிழ்த்து விட்டிருந்தான். இவர் மெல்ல இந்தத் தகவல்களை இஸ்ரேலின் ரகசிய அமைப்பான மொஷாதிடம் சொல்லிவிட்டார்.

மொஷாத் ஏஜண்டுகள் முதலில் சில்வியாவை ஈச்மன் வீட்டுக்கு அனுப்பி தன் நண்பனைப் பார்க்க அனுப்பினர். அப்போது வீட்டில் இருந்த ஈச்மன் தன் மகன் வீட்டில் இல்லை என்று பதில் சொல்லியிருக்கிறார். சற்று நேரம் பெரிய ஈச்மனிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் பையன் வந்துவிட்டான். அவன் ஈச்மனை அப்பா என்று அழைத்ததை அவள் வந்து மொஷாத் ஏஜண்டுகளிடம் சொல்லிவிட்டாள்.

1959இல் மொஷாதுக்கு உறுதியான தகவல் கிடைத்து விட்டது. அடால்ஃப் ஈச்மன் ரிகார்டோ கிளெமேண்ட் எனும் பெயரில் போனஸ் ஐரிஸ் நகரில் இருக்கிறான் என்று. இஸ்ரேல் அரசாங்கம் ஈச்மன் வேட்டைக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டது. அவனை எப்படியாவது பிடித்து ஜெரூசலம் நகருக்குக் கொண்டு வந்து விட வேண்டும். இங்கு அவன் யுத்த குற்றவாளியாக விசாரிக்கப்பட வேன்டுமென்பது இஸ்ரேலின் விருப்பம்.
அதுமுதல் இஸ்ரேல் ஏஜெண்டுகளும் அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தாரும் அர்ஜென்டைனாவில் போனஸ் ஐரிசில் ஈச்மன் குடியிருந்த பகுதி, அவன் வீடு, அவன் நடமாட்டம், எப்போது போகிறான், எப்போது வருகிறான் என்பதையெல்லாம் அவன் வீட்டுக்கு எதிரிலுள்ள ரயில் பாதையின் மறுபக்கத்தில் மறைந்திருந்து கொட்டும் பனியில் கவனித்து எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டார்கள். சரியான சமயத்துக்குக் காத்திருந்தார்கள் ஈச்மனைத் தூக்க.

1960 ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி, அந்த நாளும் வந்து சேர்ந்தது. வழக்கம் போல் மெர்சிடெஸ் பென்ஸ் கம்பெனியில் போர்மேனாக இருந்த ஈச்மன் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான். தெரு முனை திரும்பும் போதே காத்திருந்த மொஷாத் ஏஜெண்டுகளுக்கு சிக்னல் கிடைத்து விட்டது. தயாராகக் காத்திருந்தார்கள். ஈச்மன், தான் இருந்த கரிபால்டி தெரு 14ஆம் எண் வீட்டை நோக்கி மெதுவாக நடந்து வருகிறான். எதிரில் ஒரு பெரிய திறந்த வெளி. 

நடந்து வரும் ஈச்மன் எதிரில் ஒரு மனிதன் வந்து ஸ்பானிஷ் மொழியில் ஏதோ வழி கேட்டான். ஈச்மனுக்கு ஏதோ பொரி தட்டிவிட்டது. ஆபத்து நெருங்குவதை உணர்ந்தான். ஓடத் தொடங்கும் நேரத்தில் அவன் கண்களை எதிரில் ஒரு வாகனத்தின் ஒளி விளக்குகள் குருடாக்குவது போல ஒளிர்ந்தது. சில கைகள் அவனை இருகப் பிடித்தன. அருகில் வந்து நின்ற காரின் தரையில் அவனை இழுத்துப் போட்டு இருக்கைகளில் மொஷாத் ஏஜெண்டுகள் உட்கார்ந்து அவனை முண்டவிடாமல் இருக்கி அமுக்கிப் பிடித்தனர். 
கத்தி ஊரைக் கூட்டலாம என அவன் முயற்சிக்கையில் மொஷாத்காரர்கள் சுட்டுவிடுவோம் வாயைத் திறந்தால் என்று துப்பாக்கியை அவன் மீது வைத்து அழுத்தினார்கள். ஈச்மனுக்குப் புரிந்துவிட்டது. தான் இஸ்ரேலியர்களிடம் மாட்டிக் கொண்டோம் என்பது. கார் பறந்தது. வழியில் இருந்த செக் போஸ்ட்டையும் சுலபமாக இவர்கள் தான்டிப் பறந்தார்கள்.

பிடிபட்ட ஈச்மனை மொஷாத் இயக்கத்தார் இருந்த இடத்துக்குக் கொண்டு வந்து 9 நாட்கள் வைத்திருந்தனர். அந்த காலகட்டத்தில் பிடிபட்டவன் ஈச்மந்தான் என்பதற்கான எல்லா ஆதாரங்களையும் மொஷாத் திரட்டி வைத்துக் கொண்டது.
அவனை இஸ்ரேலுக்குக் கொண்டு செல்ல வேன்டுமே என்ன செய்வது? மொஷாத் டாக்டர் ஒருவர் ஈச்மனுக்கு போதை மருந்தை ஊசியில் செலுத்தினார். அவன் அரை மயக்க நிலையில் குடிகாரன் போல இருந்தான். அவனுக்கு விமானப் பணியாளனுக்குரிய உடை அணிவிக்கப்பட்டது. அப்போது அர்ஜென்டைனாவின் ஸ்பெயினிடமிருந்து பெற்ற150ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அதற்காக இஸ்ரேலில் இருந்து ஒரு விமானம் வந்திருந்தது. அதில் வந்தவர்கள் விழாக்களில் கலந்து கொண்டிருந்தனர். அதில் கொண்டு போய் இருளோடு இருளாக ஏற்றி இஸ்ரேல் விமானம் அங்கிருந்து புறப்பட்டுவிட்டது. இஸ்ரேல் நாட்டு விமானம் விழாவுக்கு வந்த அதிகாரிகளோடு பறந்து விட்டதாக நினைத்தனர். போனஸ் ஐரிசை விட்டுப் புறப்பட்ட விமானம் வழியில் செனகல் நாட்டில் இறங்கிவிட்டு அங்கிருந்து 1960 மே 21இல் டெல் அவிவ் சென்றடைந்தது.

இஸ்ரேல் நாட்டில் பென் குரியன் ஈச்மன் பிடிபட்ட செய்தியை இஸ்ரேல் பார்லிமெண்டில் அறிவித்தார். 1960 மே 23 இஸ்ரேல் பார்லிமெண்டில் இந்தச் செய்தியை உறுப்பினர்கள் எழுந்து நின்று ஆர்ப்பரித்தார்கள். 

பின்னர் பல சம்பிரதாய வழிமுறைகளுக்குப் பிற்கு ஈச்மன் விசாரணை ஜெரூசலம் நகரத்தில் 1961 ஏப்ரல் 11இல் தொடங்கியது. ஈச்மன் மீது 15 வகையான கிரிமினல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், யுத்த குற்றங்கள், யூதர்களை படுபாதகமாகக் கொன்ற குற்றம் போன்றவை அவை. மூன்று நீதிபதிகள் கொண்ட கோர்ட் இதனை விசாரித்தது. 

ஈச்மன் குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்தான். அவனால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இவன் மீது பாய்ந்து குதறிவிடுவார்கள் என்ற பயம்தான் காரணம். 'தெ மேன் இன் தெ கிளாஸ் பூத்' என்று ஒரு ஆங்கிலப் படமே வெளிவந்தது.

இந்த வழக்கு 14 வாரங்கள் நடந்தது. 1500 ஆவணங்கள், 100 சாட்சிகள் இந்த வழக்கில் ஈச்மன் எல்லா குற்றச் சாட்டுகளின்படியும் குற்றம் புரிந்தவர் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேற்படி குற்றங்களுக்காக ஈச்மனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. ஈச்மன் மேல் முறையீடு செய்தான்.

1962 மே 29ஆம் தேதி இஸ்ரேல் உச்ச நீதிமன்றம் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. ஈச்மனுக்கு மரண தண்டனை உறுதியானது. அவன் கருணை மனு நிராகரிக்கப்பட்டது. 

உலகமே அருவெறுப்படைந்த ஈவு இரக்கமற்ற கொடுமையான கொலைச் செயல்களைச் செய்த அடால்ஃப் ஈச்மன் 1962 மே 31 அன்று நள்ளிரவுக்குச் சற்று முன்பு ஒரு இஸ்ரேலிய யூத இனத்து ஹேங் மேனால் தூக்கிலடப்பட்டான். உலகத்தின் கொடிய சர்வாதிகாரியின் இரக்கமற்ற ஆணையை நிறைவேற்றிய கொடியவன் வாழ்வு முடிந்தது.


இஸ்ரேலில் மரண தண்டனை கிடையாது. ஈச்மனுடையது மட்டும் ஒரு விதிவிலக்கு.