பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, July 26, 2015

ஆசாரத் திருத்த வியாசங்கள் - பகுதி III

                               
                               ஹரித்துவாரில் குருகுலவாசக் கல்விப் பயிற்சி.

வடக்கே ஹரித்துவார் க்ஷேத்திரத்தில் பஞ்சாப் தேசத்து ஆரிய சமாஜத்தார் குருகுலவாச மென்று பெயரிட்டு ஒரு பெரிய காலேஜ் நடத்துகிறார்கள். குருகுலவாசமாவது, நமது வேத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறபடி, சிஷ்யர்கள் ஆசாரியரை யடைந்து அவருக்குப் பணிவிடை செய்து, அவர் தயவினால் வித்தை கற்கும் ஸ்தலம். ஹரித்துவார், கங்கைநதி மலையிலிருந்து இறங்கி சமபூமியில் பிரவகிக்கும் மகா நேர்த்தியான திவ்விய ஸ்தலமாகையால், அங்கு இந்த குருகுலத்தை ஸ்தாபித்தது ஆரிய சமாஜத்தாரின் விவேகத்தைக் காட்டுகின்றது.

இந்த குருகுலத்தில் பழைய வேத சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கும் தர்மத்திற்கும் மதாசாரங்களுக்கும் விரோதமில்லாமல் ஹிந்துப் பிள்ளைகள் கல்வி கற்று, விஜாதீயப்படாமல் மதாபிமானிகளாகவும், தேசாபிமானிகளாகவும், ராஜபக்தர்களாகவும் வளருகிறார்கள்.. இந்த உத்திருஷ்டமான வித்தியா ஸ்தாபனத்தில் இன்னும் பல விசேஷங்களும் உள்ளன. அவைகளைச் சொல்லப் புகின் வளரும். ஆயினும் இந்த குருகுலம், மகாஷய முன்ஷிராம் என்ற பெரியோரால், அவரைப் போலவே துறவறம் பூண்ட உபதேசிகர்களின் உதவியைப் பெற்று நடத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவிலுள்ள மற்ற காலேஜ்களில் அனுஷ்டானத்திலிராமல் இந்தக் காலேஜில் மட்டும் இருக்கும் ஒரு மகா முக்கியமான வழக்கத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

சமீபத்தில் இந்தக் குருகுலத்தைச் சேர்ந்த 19 காலேஜ் பிள்ளைகளும், அஸிஸ்டெண்ட் மானேஜர் மகாஷய நந்தலாலும், நாலு வேலைக்காரர்களும் சரஸ்வதி யாத்திரை என்று ஹரித்துவாரிலிருந்து சிம்லாவுக்கு யாத்திரை போனார்கள். இவர்களுடன் இந்தியரது அமெரிக்க நண்பராகிய மைரன் பெல்ப்சும் போனார். இந்த இரண்டு இடத்துக்கும் உள்ள தூரம் 350 மைல். இவ்வளவு தூரத்தையும் செப்டம்பர் மாசம் முழுதும் பிள்ளைகள் வெறுங்காலால் நடந்து போனார்கள். வழியில் ஆலயங்களிலும், தர்மசாலைகளிலும் சில இடங்களில் டாக் பங்களாவிலும் இறங்கிச் சமையல் செய்து சாப்பிட்டுக் களைப்பாற்றிச் சென்றார்கள். ஒரு நாளைக்குச் சராசரி 10 அல்லது 12 மைலுக்கு அதிகம் நடந்ததில்லை. போன வழியெல்லாம் மலைப் பிரதேசமானதால் பல மலைச்சிகரங்களையும், ஆரண்யங்களையும், பள்ளத்தாக்குகளையும் செழிப்பான கிராமங்களையும் பார்த்துக் கொண்டு போனார்கள். இந்தப் பிள்ளைகள் அனைவரும் ஒரே மாதிரியாய்க் காலையில் 3 அல்லது 4 மணிக்கு எழுந்து, அந்த நாள் பிரயாணத்துக்கு எவ்வித குழப்பமுமில்லாமல் மெளனமாய்த் தயார் செய்வார்கள்.

நமது தேசத்தில் அனேக மலைகளும், காடுகளும், வனங்களும், அருவிகளும், நதிகளும் இருந்து இந்த ஆரிய வர்த்தத்தை திவ்ய பூமியாக்கியிருக்கின்றன. இங்கு மனுஷருடைய ஜீவனத்துக்காவது சுக செளக்கியத்துக்காவது இயற்கையினாலும், வேளாண்மையினாலும் கிடைக்கக் கூடாத பதார்த்தங்களில்லை. இந்த பதார்த்தங்களை அதிக சிரமமில்லாமல் சுளுவாய்ப் பெற்று, திவ்விய க்ஷேத்திரங்களுக்கு யாத்திரை போய், பல பெரியோருடைய வாசத்தாலும், அருஞ்செயல்களாலும் புனிதம் பெற்ற ஸ்தலங்களைத் தரிசிக்கலாம். இப்படித் தரிசிப்பதால் மனசுக்கு ஆனந்தமும், உற்சாகமும் விசாலமும் உண்டாவதன்றி ஜகத்தை சிருஷ்டித்த ஈஸ்வரனுடைய சங்கற்பத்தின் அளவிடக்கூடாத பெருமையை ஒருவாறு மனதால் சிந்திக்கவும் இடமுண்டாகின்றது.

இப்படி குருகுல வாசத்துப் பிள்ளைகள் யாத்திரை சென்றதில், அவர்களுக்கு தேக ஆரோக்கியம் உண்டாகி, அவர்கள் மனப்ப்யிற்சி பெற்றதுமல்லாமல், உயர்ந்த கருத்துகளும் ஜீவகாருண்யமும் சாந்தமும் தெய்வ பக்தியும் பெற்றார்கள். அவர்கள் யாத்திரை போன காலமெல்லாம் அவர்கள் வாயினின்று ஒரு ஆத்திரமான சொல்லாவது அவர்கள் சரீரத்தினால் கடுமையான செயலாவது உண்டானதில்லையென்று மிஸ்டர் மைரன் பெல்ப்ஸ் "மாடர்ன் ரெவ்யூ"வுக்கு எழுதின வியாசத்தில் சொல்லுகிறார். அடக்கமும், பெரியோரிடத்தில் உபசாரமும் தெய்வ பக்தியும், பிராணிகளிடத்தில் தயவும் பெற்றார்களென்றால், இதைவிட அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய விலை பெற்ற பொக்கிஷம் என்ன இருக்க முடியும்?

இந்த குருகுல வாசத்தைப் போல தேசத்திலுள்ள மற்ற காலேஜ்களும் ஸ்கூல்களும் ஏன் செய்யக்கூடாது? நேர்த்தியான ஆரணியங்களும், அருவிகளும், நதிகளும் உள்ள மலைப் பிரதேசங்கள் பல தென்னிந்தியாவில் இருக்கின்றன. நீலகிரி, சேர்வராயன் மலை, கொடைக்கானல், குற்றாலம் இவைகள் போன்ற நேர்த்தியான தேக செள்க்கியமும் மனதுக்குச் சுகமும் கொடுக்கக்கூடிய மலைப் பிரதேசங்கள் இருக்கின்றன. வருஷத்துக்கு மூன்று மாதம் போல் பிள்ளைகளுக்கு விடுமுறை காலமிருப்பதால், அக்காலத்தில் யோக்கியரான நல்ல உபாத்தியாயர் ஒருவர் பிள்ளைகளிற் சிலரை அழைத்துக் கொண்டு இந்த இடங்களுக்குப் போய்ப் பார்த்து வந்தால், அவர்களுக்கு குருகுல வாசத்துப் பிள்ளைகளுக்குண்டான நன்மைகள் உண்டாகக் கூடுமே. நம் தேசத்துச் சிறுவர்கள் பலர் தேச சஞ்சாரம் செய்யாமலேயே முதுமையடைகிறார்கள். ஆகையால் அவர்களுக்குக் குறுகின புத்தியும், வீண் கர்வமும், அன்னியரிடத்தில் அவமதிப்பும், அனுபோலமின்மையும் உண்டாகின்றன. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் எந்த மலைப் பிரதேசமானாலும், அந்த இடத்தில் காலேஜ் பிள்ளைகள் வந்து தங்கி, பலவிதமாய் ஆனந்தமும் உற்சாகமும் மன உயர்வும் சரீரத்திடனும் பெற்றுப் போகிறார்கள். இப்படி விடுமுறை காலங்களில் மலைப் பிரதேசங்களில் போய் வசிப்பது அங்கு காலேஜ் பிள்ளைகளுக்கு வெகு பிரியமென்று சொல்லப்படுகின்றது. மூளை வேலை செய்து களைத்துப் போன பெரியோருக்கும் மலை வாசத்தால் சரீரமும், மனசும் களைப்பு நீங்கி, எப்போதையும்விட அதிகத் திடனையடைகின்றன. இந்தியப் பிள்ளைகளுக்கு இந்த நன்மைகள் கூடாவா? மேற்கண்ட உத்தம குணங்களைப் பெற்று, நம் சிறுவர்கள் குண்டுச் சட்டியில் குதிரையோட்டும் கேவலம் புஸ்தகப் பூச்சிகளாய் வளராமல், கை, கால், காது, வாய் முதலிய அவயவங்களும் அதனதன் சேஷ்டைகளுக்கு உற்ற வசதிகள் பெற்று, அவைகள் செய்யும் உத்தமமும், பரிசுத்தமுமான் வேலைகளால் மனதுக்கு ஞானமுண்டாகி, ஆண்மையும், அறிவும் பெற்ற உத்தம புருஷர்களாகவும், யோக்கியதையும் பரோபகாரச் சிந்தையும் உள்ள பிரஜைகளாகவும் முன்வர வேண்டும். 

No comments: