பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, September 13, 2020

முதல் சுதந்திரப் போரும், அதன் தொடர்ச்சியும்.

                                       

1857இல் கிழக்கிந்திய கம்பெனியார் இந்திய சமஸ்தானங்களை வாரிசு இல்லை என்ற காரணத்தைச் சொல்லி அபகரித்துத் தங்கள் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்திக் கொண்ட நேரத்தில் இந்திய சுதேச மன்னர்கள் சிலர் தங்கள் ராஜ்யம் பறிபோவதை எதிர்த்து ஆங்கிலேய கம்பெனியாரை எதிர்த்து ஒரு புரட்சியைத் தொடங்கினார்கள்.  கம்பெனியார் படையில் இருந்த வீரர்கள் தங்கள் துப்பாக்கிகளை வெள்ளையர்களிடம் ஒப்படைத்து விட வேண்டுமென்று கட்டளையிட்ட போது, அதை எதிர்த்து பாரக்பூரில் முதல் கலகத்தைத் தொடங்கியவர் மங்கள் பாண்டே.

ஆங்கிலப் படையில் இருந்த மங்கள் பாண்டே அவர் படையின் தளபதி தன்னைக் கொல்ல முயன்றபோது அவனைக் கொன்று முதல் புரட்சியைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கம்பெனியார் படையில் இருந்த சிப்பாய்கள் ஆங்காங்கே கலகத்தை உருவாக்கி வெள்ளைக்காரர்ளின் கொலைவெறிக்குப் பதிலடி கொடுக்கத் தொடங்க, அதில் நானா சாகேப், தாந்தியா தோபே, லக்ஷ்மி பாய் போன்ற மாவீர, வீராங்கனைகள் களத்தில் இறங்கி போராடி ஒரு நேரத்தில் வெள்ளையர்களைத் திணற அடித்துக் கொண்டிருந்த பொது, சென்னையில் இருந்த ஜெனரல் நீல் என்பான் கல்கத்தாவுக்குச் சென்று அங்கிருந்து கான்பூர் வரை வழிநெடுக இந்திய சிப்பாய்களைக் கொன்று குவித்துக் கொண்டு வந்தான்.

இறுதியில் வெள்ளையன் கை ஓங்கி, இந்திய சிப்பாய்கள் களபலியானார்கள். நானா சாகேப் மட்டும் தப்பிப் பிழைத்து நேபாள் சென்றதாக வரலாறு சொன்னாலும், அவர் 20ஆம் நூற்றாண்டு தொடக்க காலத்தில் சென்னையில் வந்திருந்த செய்தியையும் மகாகவி பாரதியின் நண்பர் நாராயண ஐயங்கார் என்பவர் நேரில் சந்தித்து அதை விவரிக்கிறார்.

ஆங்கிலேயர்கள், தங்கள் வீர தீர பராக்கிரமங்களை வரலாறாக ஆக்கி அதற்கு “சிப்பாய் கலகம்” என்று பெயரிட்டு தங்கள் படுகொலைகளை நியாயப் படுத்திய போதிலும், இந்திய தேசிய வாதிகள் அதை முதல் சுதந்திரப் போராட்டமாக வருணித்து எழுதியதுதான் வீர சாவர்க்கர் எழுதிய “எரிமலை” எனும் இந்த நூல்.

இது ஆங்கிலேயர்களின் வரலாற்றுச் செய்திகளை மறுத்து, இந்தியர்களின் எழுச்சியாக எழுதப்பட்டது இந்த தேசிய நூல். இது ஒரு காலத்தில் பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப் பட்டிருந்தது. இதனை இருவேறு தமிழறிஞர்கள் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்கள். அதில் ஒருவர்தான் ஜெயமணி சுப்பிரமணியம் என்பவர். இவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களிடம் சுறுக்கெழுத்தாளராகப் பணியாற்றியவர். இந்திய தேசிய ராணுவம் அமைந்த காலத்தில் இவர் நேதாஜியுடன் இருந்தவர். 1942 வரை இவர் மலேசியாவில் இருந்தார். பிறகு இந்தியா வந்து 1959 வரை கல்கியில் இருந்தார். பின் 1960இல் அமுதசுரபியில் நேதாஜி பற்றி தொடர் எழுதினார். இவர் 2002இல் தன் 98ஆம் வயதில் காலமானார்.

ஆங்கிலேயர்கள் வரலாற்றுப் பாடத்தில் சிப்பாய் கலகம் என்று வர்ணித்த இந்த போராட்டம் ஒரு சுதந்திரப் போர் என்பதுதான் சாவர்க்கரின் கூற்று. இந்திய சுதேச சமஸ்தான அதிபர்களுக்கு வாரிசு இல்லையென்பதைக் காரணம் காட்டி இவர்கள் அந்த ராஜ்யங்களை அபகரிக்கும் செயல் பகல் கொள்ளை என்பது சாவர்க்கரின் கருத்து. அந்த அராஜகத்தை எதிர்த்துப் போரிட்ட இந்திய வீரர்கள் முதல் சுதந்திரப் போராட்டத்தை நடத்தியதாக வரலாற்று உண்மைகளை எடுத்துச் சொல்கிறார் இந்த நூலில்.

டல்ஹவுசியின் அராஜகமான நாடுபிடிக்கும் திட்டத்தின் கீழ் தஞ்சை ராஜ்யத்தை ஆண்டு வந்த சிவாஜி 2 எனும் ராஜாவுக்கு வாரிசு இல்லையென்கிற காரணத்தைச் சொல்லி, பிரிட்டிஷ் கம்பெனியார் தஞ்சை ராஜ்யத்தைத் தாங்களே முழுமையாக எடுத்துக் கொண்டுவிட்டனர். அதற்கு முன்பு சிவாஜி 2 ராஜாவின் தந்தையான சரபோஜி 2 ஆண்டுகொண்டிருந்த போது அவரது வழிகாட்டியாக விளங்கியவர் ஸ்வார்ட்ஸ் பாதிரியார் என்பதால், இவர் துளஜேந்திர ராஜாவின் ஸ்வீகார புத்திரன் என்ற போதிலும் அவரை தஞ்சை கோட்டைக்குள் மட்டும் ஆட்சிபுரியச் சொல்லிவிட்டு ராஜ்யம் முழுவதையும் கம்பெனியாரின் ரெசிடெண்ட் அனும் அதிகாரியே ஆட்சி புரிந்ததும் நடந்து வந்தது.

இந்திய வீரர்களை கல்கத்தா முதல் கான்பூர் வரையில் வழியெங்கும் கொன்று குவித்த ஜெனரல் நீல் என்பாருக்கு சென்னையில் ஒரு சிலை அமைத்தது ஆங்கிலேய அரசு. அதனை எடுக்க வேண்டுமென்று 1930களில் ஒரு போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டம் நா.சோமையாஜுலு எனும் தேசபக்தரின் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. அதை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அடக்கி ஒடுக்க முற்பட்டனரே தவிர, இந்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த நீலன் சிலையை அகற்றவில்லை. நம்மைக் கொன்றவனுக்கு நாம் சிலை எழுப்பி அவனுக்கு மரியாதை செய்ய வேண்டுமென்பது கொடுமையிலும் கொடுமையல்லவா?

பின் 1936இல் ராஜாஜி தலைமையில் சென்னையில் ஒரு காங்கிரஸ் அரசு உறுவானபோது அந்த சிலை சென்னையில் அகற்றப்பட்டு எழும்பூர் காட்சிக் கூடத்தில் கொண்டு போய் வைக்கப்பட்டது. நம் வரலாற்றுச் செய்திகளை ஆங்கிலேய அரசு தங்களுகுச் சாதகமாக எழுதி வைத்திருந்த பல செய்திகள் நம் சுதேசி அரசு உருவானதும் அதனை நம் கண்ணோட்டத்தில் மாற்றி அமைக்க வேண்டுமென்பது சாவர்க்கரின் கருத்து. அதற்கு முன்னோட்டமாக அவர் சிப்பாய் கலகம் என்று வருணித்த நிகழ்ச்சியை முதல் சுதந்திரப் போராக எழுதியிருகிறார். இந்த நூலைப் படித்தால் இந்தியர்கள் சுதேசி உணர்வைப் பெற்று விடுவார்கள், என்று கருதி பிரிட்டிஷ் அரசு இந்த நூலைத் தடை செய்து வைத்திருந்தது. இதை இப்போது படித்தாலும் தேசபக்தி பற்றி எழும் என்பதை இன்றும் இதை படிக்கும் போது ஏற்படுகிறது. நல்ல மொழிபெயர்ப்பு. உணர்ச்சி பூர்வமாக நம் வீரர்களின் தியாகத்தை நம்மால் உணர முடிகிறது. சென்னை அல்லையன்ஸ் வெளியீடான இந்த நூல் வெளியாகி தேசபக்திக் கனலை உண்டாக்கியது.

இப்போதுகூட தமிழகத்தில் சிலர் ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டதினால்தான் நமக்கு ரயில் வசதி வந்தது, நவீன சாதனங்கள் வந்தன, அதனால் ஆங்கிலேயர்களே ஆண்டு கொண்டிருக்க வேண்டுமென்ற கோரிக்கையை சுதந்திரப் போராட்டத்தன் போது எழுப்பி வந்தார்கள் என்பதை நாமறிவோம். ஆனால், நம்மை ஆங்கிலேயர்கள் ஆட்சி புரியாவிட்டாலும், உலகின் பலபாகங்களிலும் உருவான மாற்றங்கள் இங்கும் வந்துதான் இருக்கும். முன்பு ஐரோப்பியர்கள் கானகங்களில் உலாவிக் கொண்டிருந்த காலத்தில், நம்மவர்கள் நாகரிகத்தின் உச்சியில் இருந்ததையும், மாபெரும் காப்பியங்கள் எழுதி வைத்ததையும் பார்க்கும் பொது நா ஆங்கிலேயர்களுக்கு ஆட்படாமல் இருந்திருந்தால் நம்முடைய முன்னேற்றம் இன்னம் முன்னமேயே வந்திருக்கும் என்பதை இவர்கள் உணர்ந்திருக்க வில்லை.

அதனால்தான் பாரதி தன்னுடைய கவிதையில் ‘முன்னர் நாம் பெற்றிருந்த சிறப்புகளை, நம்மை அடிமைகொண்ட ஆங்கிலேயர்கள் உணரவில்லை, அதனை நம் மக்களே கூட உணராமல் போய்விட்டனர்’ என்பதற்கு வருந்தியிருக்கிறான். இன்று நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ‘இந்தியா என்றொரு நாடுண்டு, அங்கு மூத்த நாகரிகம் இருந்ததுண்டு’ என்று நாம் எல்லா துறைகளிலும் முன்னேறி, அனைத்துலக மக்களையும் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு துறவி யொருவரு நாட்டை ஆண்டால், தன்னலம், சுயநலமில்லாமல், ஊருக்கு உழைக்கும் உத்தமரால் இந்த நாட்டை முன்னேற்ற முடியும் என்பதை நிரூபித்து வருகிறார்கள். வாழ்க பாரதம்.

 

No comments: