பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, September 4, 2020

2. விபின சந்திரபாலர்

             கீழ் பெங்காளத்திலே ஸில்ஹெட் என்ற ஊரிலே, வக்கீல்களுக்குள் முதன்மைப் பட்டவராகி, மிகுந்த செல்வமும் புகழும் படைத்து விளங்கிய ஓர் பெங்காளிக் காயஸ்தப் பிரபுவின் குமாரராக விபின சந்திரர் பிறந்தார்.

            வட நாட்டை ஒரே கலக்காகக் கலக்கிய சிப்பாய்க் குழப்பம் முடிந்து நாட்டில் அமைதி பிறந்த வருஷமாகிய 1858-ம் ஆண்டுதான் இவரது ஜனன வருஷமாகும்.

            செல்வத்திலேயும் சிறப்பிலேயும் வளர்ந்த விபின சந்திரர் கல்வியிலே விருப்பமற்றிராமல், வாலிபப் பிராயத்திலேயே ஞானப் பயிற்சியிலேயும் நூற் பழக்கத்திலேயும் அளவிறந்த ஆவல் கொண்டவராகி அதிபாலியத்திலேயே மெட்ரிக்குலேஷன் பரீக்ஷை தேறிவிட்டார். அதன் பேரில் தந்தையார் சந்திர பாலரைக் கல்கத்தாவிலே கொண்டு விட்டுக் காலேஜில் சேர்த்தார்.

            காலேஜில் படித்துக் கொண்டிருக்கும்போது இவருக்குப் பிரம ஸமாஜக் கோட்பாடுகளிலே பற்றுண்டாயிற்றுய். 18-ம் பிராயத்திலே பிரம ஸமாஜத்தில் சேர்ந்துவிட்டார். இவர் பிரம ஸமாஜத்திலே சேரக்கூடாதென்று இவருடைய தந்தை முதலானவர்கள் எத்தனையோ தடுத்தும், பிரயோஜனப் படவில்லை. எவருடைய சொல்லையும் பாராட்டாமல், இவர் சேர்ந்து விட்ட படியால், தந்தையார் மிகுந்த கோபங்கொண்டு பத்து வருஷ காலம் இவரது முகத்திலே விழிக்காமல் இருந்து விட்டார். மேலும் தாம் இறந்த பிறகு தமது சொத்துக்கு விபின சந்திரர் உரிமை யுடையவராக மாட்டாரென்று உயில் எழுதி வைத்து விட்டார்.

            எவ்வளவு கஷ்டம் ஏற்பட்ட போதிலும், யாருடைய விரோதம் வந்த போதிலும் தமது மனச்சாக்ஷிக்கு விரோதமில்லாமல் தெய்வத்துக்கு உண்மையாக நடக்க வேண்டுமென்று சந்திரபாலர் நிச்சயம் செய்து கொண்டார்.

            1879-ம் வருஷத்திலே இவர் ஒரிஸ்ஸா மாகாணத்திலே *கடக நகரத்து ஹைஸ்கூல் ஒன்றிலே ஹெட்மாஸ்டர் வேலை பார்த்தார். அப்போழுது இவருக்கு வயது 21. 1880-ம் வருஷத்திலே ஸில்ஹெட்டில் இவர் தாமாகவே ஒரு ஹைஸ்கூல் ஸ்தாபனம் செய்தார். 1881-ம் வருஷத்தில் நமது மாகாணத்திலே பெங்களூரிலிருக்கும் ஆர்க்காட் நாராயணசாமி முதலியார் ஹைஸ்கூலிலே ஹெட்மாஸ்டரானார். இப்பொழுதுதான் இவரது முதலாவது விவாகம் நடைபெற்றது. சில வருஷங்களிலே தந்தையும், இவருடன் சமாதானமாய்ப் போய்விட்டார்.

            1890-ம் வருஷத்திலே இவரது முதல் தாரம் இறந்து விட்டதின் பேரில், 1891-ம் ஆண்டிலே இரண்டாம் தாரம் விவாகம் செய்து கொண்டார். இதைத் தவிர இவர் லாஹோர் “ட்ரைப்யூன்” பத்திரிகை முதலிய பல பத்திரிகைகளின் தலைவராக இருந்திருக்கிறார்.

            1898-ம் வருஷத்திலே இவர் பிரம ஸமாஜ ஆசாரியராக இங்கிலண்டு, அமெரிக்கா முதலிய தேசங்களிலே சென்று உபன்னியாசங்கள் புரிந்தார்.

            பாலிய முதலாகவே ஐரோப்பியர்கள் விஷயத்தில் மிகுந்த பக்தியும் மதிப்பும் கொண்டு வளர்ந்து நமது தேசத்திற்கு நல்ல காலம் பிறக்க வேண்டுமானால் அது ஐரோப்பியரின் ஸஹவாஸத்தினாலேதான் ஸாத்தியமாகு மென்று நம்பிக்கை கொண்டிருந்த இவர், மேல்நாடுகளிலே யாத்திரை செய்ததினின்றும் ஐரோப்பியர்களின் ஸ்வபாவத்தை நன்கு தெரிந்தவராகி இனி இந்தியர்கள் தமக்குத் தாமே துணை செய்து கொண்டாலொழிய நற்காலம் பிறக்கமாட்டாதென்ற விசுவாசம் கொண்டு விட்டார். அதன் பேரிலேதான் 1901-ம் வருஷத்தில் இந்தியாவிற்கு வந்து, இவர் “நியு இந்தியா” என்ற புதிய கட்சிப் பத்திரிகையை ஸ்தாபனம் செய்தார்.

            விபின சந்திரர் பெங்காள ஜனத் தலைவர்களுக்குள்ளே மிகவும் உயர்ந்த தகுதிக்கு வந்து விட்டார். 1886-ம் வருஷத்திலே விபின சந்திரபாபு காங்கிரஸ் கூட்டத்திலே சேர்ந்து கொண்டார்.

            1887-ம் வருஷத்திலே சென்னையில் நடைபெற்ற காங்கிரஸில் இவர் “ஆயுத ஆக்டை” கண்டனம் புரிந்து செய்த பிரசங்கம் மிகவும் வியக்கத் தக்கதாக இருந்தது. அதுமுதல் இவர் காங்கிரஸ் விஷயங்களிலே மிகுந்த சிரத்தை பாராட்டி வருகிறார்.

            பிரம ஸமாஜத்தி முக்கியமான மெம்பர்களிலே பாபு விபின சந்திரர் ஒருவர். மதுபானத்தை வேரறுத்துவிட வேண்டுமென்னும் நோக்கத்துடன் வேலை செய்யும் கூட்டத்தாருக்கு இவர் ஓர் பூஷணம் போன்றவர்.

            ஸ்ரீ ஹனுமான் எப்படி ஆஹாரம் முதலிய எவ்விதமான் லோக போகங்களையும் இச்சிக்காமல் “ராம ராம” என்று தியானம் செய்துகொண்டே ஆனந்தமடைந்திருந்ததாக சொல்லப்படுகின்றதோ அதுபோல ஸ்ரீவிபின சந்திரரும் சதாகாலமும் பாரத நாட்டின் அபிவிருத்தியைப் பற்றி தியானம் செய்வதிலேயே நாள் கழிக்கின்றார்.

            ஹனுமானுக்கு எப்படி “ராமாமிருதம் ஜீவனம்” ஆக இருந்ததோ, அதுபோன விபின சந்திரருக்குப் “பாரதாமிருதம் ஜீவனம்” என்று கூறுதல் மிகவும் பொருந்தும்.

             

           

No comments: