பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, March 30, 2015

பாரதியார் கதைகள்.

மகாகவி பாரதியார் கவிதைகள் மட்டுமல்ல, ஏராளமான கட்டுரைகளும், பல சுவாரசியமான கதைகளுக் எழுதியுள்ளார். அவருடைய கதைகளில் ஞானரதம், சின்னச்சங்கரன் கதை, சந்திரிகையின் கதை, நவதந்திரக் கதைகள் போன்றவை சற்று பெரிய கதைகள். இவை தவிர 'சில வேடிக்கைக் கதைகள்' எனும் தலைப்பில் அவர் எழுதிய பல கதைகளும் படிக்க வேடிக்கையாக இருக்கும் ஆனால் அவைகளின் உட்கருத்து பல உண்மைகளை நமக்குப் புலப்படுத்தும் விதத்தில் அமைந்தவை. அப்படிப்பட்ட சில வேடிக்கைக் கதைகளை இனி தொடர்ந்து படிக்கலாம். முதல் கதையாக 'ஆனைக்கால் உதை' எனும் இந்தக் கதை நம் மனோபாவத்தை விளக்குவதாக அமைந்திருக்கிறது. மகாகவி பாரதியாருக்கு யானைக்கால் உள்ளவர்களைப் பார்த்தால் பிடிக்காது. யானைக்கால் உள்ள ஒருவனைப் பற்றிய கதை இது. படித்துப் பாருங்கள்.

                                              1. ஆனைக்கால் உதை.
                                      எழுதியவர்: மகாகவி சுப்ரமணிய பாரதியார்.

ஒரு ஊரில் ஆனைக்கால் வியாதி கொண்ட ஒருவன் பழக்கடை வைத்திருந்தான். அந்தத் தெருவின் வழியாக சில பிள்ளைகள் அடிக்கடி போவது உண்டு. போகும்போதெல்லாம் அவர்களுக்கு அந்தப் பழங்களில் சிலவற்றை எடுத்துக் கொண்டு போக வேண்டுமென்ற விருப்பம் உண்டாயிற்று. கிட்டப் போனால் ஆனைக்கால்காரன் தனது பிரம்மாண்டமான காலைக் காட்டிப் "பயல்களே, கூடையில் கை வைத்தால் உதைப்பேன், ஜாக்கிரதை!" என்பான்.

"சாதாரணக் காலால் அடித்தால்கூட எவ்வளவோ நோகிறதே, இந்த ஆனைக் காலால் அடிபட்டால் நாம் செத்தே போவோம்" என்று பயந்து பிள்ளைகள் ஓடிவிடுவார்கள்.

இப்படியிருக்கையில் ஒரு நாள் கடைக்காரன் பராக்காக இருக்கும் சமயம் பார்த்து, ஒரு பையன் மெல்லப் போய்க் கூடையிலிருந்து ஒரு பழத்தைக் கையிலெடுத்தான். இதற்குள் கடைக்காரன் திரும்பிப் பார்த்து, தனது பெரிய காலைச் சிரமத்துடன் தூக்கிப் பையனை ஒரு அடி அடித்தான். பஞ்சுத் தலையணையால் அடித்ததுபோலே அடி மெத்தென்று விழுந்தது. பையன் கலகல வென்று சிரித்துத் தெரு முனையிலே இருந்த தனது நண்பர்களைக் கூவி "அடே, எல்லோரும் வாருங்களடா! வெறும் சதை; எலும்பில்லை" என்றான். மனிதர்களெல்லோரும் பல விஷயங்களில் குழந்தைகளைப் போலவே காணப்படுகிறார்கள். "வெறும் சதை"யாக இருக்கும் கஷ்டங்களைத் தூரத்திலிருந்து "எலும்புள்ள" கஷ்டங்களாக நினைத்துப் பிறர் அவதிப்படுவதை நாம் பார்த்ததில்லையா? நாம் அங்ஙனம் அவதிப் பட்டதில்லையா?.

No comments: