பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, November 16, 2011

சிவகங்கை மருது பாண்டியர்


சிவகங்கை மருதிருவர்

மருது பாண்டியர்களின் வரலாறு பெரிது. அதனை முழுமையாக பிரிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம். இப்போது அவர்கள் வரலாற்றில் ஒரு சிறு துளி மட்டும் இங்கே ...

1801ஆம் வருஷம் ஒரு அறிவிப்பு வெளியாகிறது. அந்த அறிவிப்பு கூறும் செய்தி மிக நீண்டது. அதில் ஒரு பகுதி மட்டும் இதோ: --

"....நாவலந்தீவு எனப்படும் இந்த நாட்டின் அனைத்து சமூகத்தினருக்கும் இந்த அறிவிப்பு கொடுக்கப் படுகிறது. .... பரங்கியர்களின் அந்தரங்கத்தை அறியாத நீங்கள் எங்களுடன் ஒத்துப் போக மறுக்கிறீர்கள். உங்களிடையே ஒற்றுமை இல்லை ... இழிகுலத்தவர் பரங்கியர்களுடன் இணைந்து இந்த நாட்டை அடிமைப் படுத்தியுள்ளது நாமறிந்த விஷயம். ஆகையால் நீங்கள் பரங்கிகளை எங்கு கண்டாலும் அவர்களை அழித்து ஒழியுங்கள் .... "

இப்படி போகிறது அந்த அறிவிப்பு. இந்த அறிக்கையின் பிரதிகள் அப்போது இந்த பாரத புண்ணிய பூமியில் நாடு பிடித்துக் கொண்டிருந்த வெள்ளை கும்பினியாரின் கைகளுக்கும் போய்ச் சேர்ந்தது. இதைப் படித்த வெள்ளை அதிகாரிகளுக்குக் கோபம் தலைக்கேறியது. அறிக்கையின் நகல்களைக் கிழித்தெறிந்து தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். யார் வெளியிட்ட அறிக்கை இது? இதனை வெளியிட்டவர்களையும் இந்த அறிக்கையைக் கிழித்தெறிந்தது போல கிழித்தெறிய வேண்டுமென துடித்தனர். வெறிகொண்டு அலைந்தனர். எங்கேயோ ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்து இங்கு வாணிபம் செய்ய வந்த ஒரு சிறு கூட்டம், தாங்களாக மட்டும் இந்த மண்ணுக்கு உரிய மாவீரர்களை அழித்து விடுவது என்பது சாத்தியமா என்ன? முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். இருந்தாலும் இங்கேயே பிறந்து, இங்கேயே வளர்ந்து, இந்த மண்ணுக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய சில கருங்காலிகள் தங்கள் உடன் பிறந்தவர்களையே காட்டிக் கொடுத்து, அன்னியன் இடும் பிச்சைக்கு ஆலாய் பறந்து கொண்டிருக்கிறார்களே! என்ன செய்வது. இல்லாவிட்டால் வீரம் செறிந்த கட்டபொம்மனைத் தூக்கில் போட முடியுமா? நூற்றுக் கணக்கான ஆண்டுகள் இங்கு வந்து நம்மை கட்டியாள முடியுமா?

சரி! அந்த அறிக்கையை வெளியிட்டவர்கள்தான் யார்? வேறு யார்? சிவகங்கைச் சீமையின் சிறுத்தைகளான மருது சகோதரர்கள்தான் அவர்கள். சிவகங்கைச் சீவையின் வரலாற்றைப் படித்தால் தான் இந்த வீரம் செறிந்த பாளையக்காரர்களைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். மருதுபாண்டியர் என்றும், மருதரசர் என்றும் மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட இந்த சகோதரர்கள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய சாதனை படைத்தவர்கள்.

காட்டில் அலைந்து திரியும் புலிகளையும், சிறுத்தைகளையும்கூட எதிர்த்து நின்று போரிட்டு வெற்றி பெறும் ஆற்றல் படைத்தவர் பெரிய மருது. அந்தக் காலத்தில் ஆற்காட்டு நவாப் வெள்ளியில் தடித்த நாணயமொன்றை வெளியிட்டிருந்தார்கள். அந்த கனத்த நாணயத்தைத் தனது விரல்களுக்கிடையில் வைத்து விரலால் வளைத்து ஒடித்துவிடும் எஃகு போன்ற பலமுடைய மாவீரன் அவர்.

தேக்கு மரத்தில் இழைத்துச் செதுக்கிய அற்புத சிற்பம் போல உடலமைப்பு கொண்ட மாவீரன் சின்ன மருது. உடல் பலத்தால் மட்டுமல்ல, தோற்றத்தாலும் மற்றவர்கள் பார்த்து வியக்கும் வண்ணம் இருந்தவன். அறிவிலே சிறந்தவன்; சாணக்கியனுக்கு நிகரானவன்.

பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரர் கட்டபொம்மு நாயக்கர் 1799 ஜூன் மாதம் 5ஆம் தேதி சிவகங்கை சீமைக்கு வந்து சேர்ந்தார். தனது பாளையத்தில் வெள்ளைக்காரன் ஆக்கிரமித்துக் கொண்டு மக்களைக் கசக்கிப் பிழிந்து ஆற்காட்டு நவாப் கொடுத்த சலுகையைப் பயன்படுத்திக் கொண்டு, மக்களிடம் வரிவசூல் செய்வதையும், தென்னக பாளையக் காரர்களைத் தங்கள் எடுபிடிகளைப் போல நடத்திக் கொண்டு அவர்களை அவமரியாதை செய்து கேவலப்படுத்தி வருவதையும், பொருள்களை விற்க வந்த இந்த கும்பல் நாடுபிடிக்கக் கடந்து அலைவதையும் சொல்லி வருத்தப் பட்டார் கட்டபொம்மு நாயக்கர். 

கட்டபொம்மு நாயக்கரைவிட பெரிய மருது பன்னிரெண்டு வயது மூத்தவர். தன்னுடைய இளைய சகோதரனைப் போன்ற கட்டபொம்மு நாயக்கர் தனது பாளையத்திலிருந்து விரட்டப்பட்டு இங்கு வந்து சரண் புக காரணமாயிருந்த வெள்ளைக் கும்பினியாரை பழிவாங்கத் துடித்தார் பெரிய மருது. தன்னை நாடி உயிர் பிழைக்கத் தஞ்சம் புகுந்துவிட்ட கட்டபொம்மனுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறினார். தன்னோடு தங்கிக் கொள்ளவும் அனுமதியளித்தார். சமயம் நேரும்போது பழிக்குப் பழி வாங்கிட உறுதியளித்தார்.

1801ஆம் வருஷம் மருதுபாண்டியர் கமுதி கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டார். ஆங்கிலப் படைக்கு கர்னல் அக்னியூ என்பவன் தலைமை தாங்கி வந்தான். அவன் தன்னுடைய படைகளை மட்டும் கொண்டு போர் புரிந்து தோல்வியடைந்த பின் எதிரிகளைத் துரோகிகளாக மாற்றி, பிரித்தாளும் வழக்கமான ஆங்கில பாணியைப் பின்பற்றி அங்கிருந்த மற்ற பாளையக்காரர்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி தன் பக்கம் இழுத்துக் கொண்டான். தென்பாண்டிச் சீமையின் வீர மறவர்களுக்குள் பிரிவினை நேர்ந்தது. புதுக்கோட்டை தொண்டைமான் அரசர் தன் பங்குக்கு ஆங்கிலக் கம்பெனியாருக்கு உதவவும் முன்வந்தனர்.

காளையார்கோயில். மருதிருவரின் மானம் காக்கும் கோட்டை. கானப்பேரெழில் என்பது அதன் பழைய பெயர். அந்த காளையார்கோயில் கோட்டையை நாற்புறமும் கம்பெனியாரின் வெள்ளைக்காரப் படையும் தோழமையுடன் சேர்ந்துகொண்ட மற்ற துணைப் படைகளும் சூழ்ந்து கொண்டன. கிழக்கிலிருந்து கர்னல் பிளாக்பர்ன் என்பவன் தலைமையில் ஒரு படை. மேற்கு திசையிலிருந்து கர்னல் அக்னியுவின் தலைமையில் ஒரு படையும், தெற்கிலிருந்து மெக்காலே என்பவன் தலைமையில் ஒரு படையும் காளையார்கோயிலைத் தாக்கின. 

மருதுவின் படை வீரர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் ஆங்கில கம்பெனியாரின் படைகளை எதிர்த்து நின்றனர். கடுமையான போர். பாண்டிய நாடு கண்டிராத கடுமையான பீரங்கித் தாக்குதல். அந்தப் போரின் இறுதியில் கம்பெனியார் படைகள் வென்றன. மருது சகோதரர்கள் தப்பி ஓடி காடுகளில் தஞ்சம் புகுந்தனர். 1801ஆம் வருஷம் அக்டோபர் மாதம் முதல் தேதி காளையார்கோயில் கோட்டை ஆங்கிலேயர் வசம் போனது. 

தப்பி ஓடிவிட்ட மருது சகோதரர்களைப் பிடித்துக் கொடுத்தால் ஏராளமான பரிசுகள் தரப்படும் என்று கும்பினியார் முரசு கொட்டி அறிவிப்பு செய்தனர். அன்னியன் தரும் பிச்சைப் பரிசுக்கு ஆசைப்பட்டு இந்த புண்ணிய மண்ணில் பிறந்த துரோகிகள் பலரும் நாயாய் அலைந்தனர் அந்த வீரத் திருமக்களைப் பிடித்துக் கொடுப்பதற்காக. துரோகிகளின் முயற்சிகள் பயன் அளிக்கவில்லை. மருதிருவரைப் பிடிக்க இவர்களால் ஆகவில்லை. 

வீரம் செறிந்த இந்த மாவீரர்களைப் பிடிக்க வேண்டுமானால் ஏதாவது தந்திரம் செய்து ஏமாற்றிப் பிடித்தால்தான் உண்டு என்பதை கும்பெனியார் உணர்ந்தனர். ஆட்கள் தேடி அலைந்தும் பிடிக்க முடியாத இந்த வீரர்களை பிடிக்க ஒரு உத்தியைக் கையாண்டனர். யானைகளைப் பிடிக்க பள்ளம் தோண்டி விழவைத்துப் பிடிக்கலாம், மனிதர்களைப் பிடிக்க முகஸ்துதி செய்து பிடிக்கலாம் என்றாலும் மருது சகோதரர் போன்ற வீரர்களைப் பிடிக்க என்ன செய்யலாம்?

அவர்கள் உயிரினும் மேலாக நினைக்கும் ஆலயங்களை இடிப்பதாகச் சொன்னால், தானாக அந்த சிறுத்தைகள் மறைவிடம் விட்டு வெளிவந்து அந்த ஆலயங்களைக் காக்கப் போராடும் என்பதனை யாரோ சொல்லி அறிந்து கொண்டனர் வெள்ளையர்கள். ஒரு அறிவிப்பு வெளியானது. "மருது சகோதரர்கள் வந்து உடனடியாக ஆங்கிலப் படையிடம் சரண் அடையாவிட்டால், அவர்களது காளையார் கோயில் ஆலயம் இடித்துத் தரைமட்டமாக்கப்படும்" என்பது அந்த அறிக்கை.

தாங்கள் ஒவ்வொரு செங்கல்லாய் எடுத்து வைத்து கட்டிய, தங்கள் உயிரினும் மேலான காளையார்கோயில் இடிபடுவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை மருது சகோதரர்களால். தங்கள் உயிர் போனாலும் கவலை இல்லை தங்கள் நினைவைப் போற்றக் காலம் காலமாய் இருக்கப் போகும் அந்த ஆலயத்தைக் காப்பாற்றியே தீரவேண்டுமென்று முடிவு செய்தனர். மறைவிலிருந்து வெளிப்பட்டார் பெரிய மருது. வெள்ளையனின் சூழ்ச்சியால் பிடிபட்டார். விரட்டிச் சென்று காட்டில் இருந்த சின்ன மருதையும் பிடித்துக் கொணர்ந்தனர் வெள்ளைக் கும்பினியார்.

பிடித்துவிட்ட பின் விசாரணை செய்ய வேண்டுமே! ஒரு நாயைக் கொல்வதானாலும் விசாரணை செய்துதான் கொல்வோம் என்று மார்தட்டிக் கொண்ட வெள்ளையன் பெயருக்குக்கூட ஒரு விசாரணை இல்லாமல் மருது சகோதரர்களை திருப்பத்தூர் கோட்டையில் 1801 அக்டோபர் 24ஆம் தேதி தூக்கிலிட்டனர். பெரிய மருது தன் உயிரினும் மேலாகக் கருதிய காளையார்கோயிலின் முன்பு தனது உடல் சமாதி வைக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். அவர் விருப்பம் நிறைவேற்றப்பட்டது.

ஒரு நாட்டை வீரத்தால் ஜெயிக்கலாம். துரோகத்தால் ஜெயிப்பது என்றால்? துரோகத்தால் அடிமைப்பட்ட நாடுகள் ஏராளம் ஏராளம். அதிலிருந்து பாரத நாடு மட்டும் தப்புமா என்ன? எந்த நாளும் துரோகம் இங்கு கோலோச்சிக் கொண்டுதான் இருந்தது, இருக்கிறது, இருக்கும். மண்ணோடு மண்ணாகிப் போன தியாக மன்னர்களும், தேசபக்தர்களும், வீராதி வீரர்களும் நம் மக்களுக்கு நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அன்னிய பக்தியும், அன்னியனுக்கு கால்கழுவும் புத்தியும் இல்லாமல் நம் பெருமை, நம் தன்மானம் இவற்றால் உயர முடியும். உலகத்துக்கு வழிகாட்ட முடியும். செய்ய முடியுமா? முடியும், நிச்சயம் முடியும். இளைய தலைமுறை உரக்க சபதம் ஏற்றுக்கொண்டு செயல்பட்டால்! வாழ்க பாரதம்!

1 comment:

Unknown said...

பெரிது உயிரல்ல தன்மான உணர்வே
என்ப தறிவ தறிவு.

என்று...
இன்னுயிர் நீங்கும் வரை மண்ணும் மண்ணை சார்ந்த யாவும் காத்த தன்மானச் சிங்கங்கள் நம் முன்னோர்கள் என்பதை என்னும் போதே நம்முள் தன்மானம் வளர்கிறது... வாழ்க வளர்க மறுத்து சகோதரர்கள் புகழ்.

பத்விற்கு நன்றிகள் ஐயா!