பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, April 4, 2013

கங்கைக் கரை வேடனும் காளத்தி வேடனும்.


              கங்கைக் கரை வேடனும் காளத்தி வேடனும்.

                                       1. கங்கைக் கரை வேடன் (குகன்)

இராம காதையில் வரும் பல பாத்திரங்கள் இராம கைங்கர்யத்தில் உதவி செய்திருக்கின்றனர். அப்படி செய்த பலரும் தேவர்கள் ராமனுக்கு உதவிக்காக அவதாரம் செய்தவர்கள். அப்படி உதவியர்கள் பலரும் பிரதி பலனாகச் சிலவற்றைப் பெற்றிருக்கிறார்கள். சுக்ரீவன் தன் அண்ணன் வாலியை வதம் செய்வதற்கும், கிஷ்கிந்தைக்கு அரசனாவதற்கும் இராமனுக்கு உதவிக்கு வருகிறான். வீடணன் தன் அண்ணன் இராவணனிடமிருந்து உயிர் பிழைக்கவும், மோட்சத்துக்கும் இராமன் அடிபணிந்தான். அனுமன் இராம கைங்கர்யத்துக்காக அவதாரம் செய்தவன். ஆனால் இப்படி எந்த பின்னணியும் இல்லாத ஒரு வேடன், கங்கைக் கரையில் வாழ்ந்த காட்டு மனிதன், இராமனைப் பற்றி தெரியாமலே, அவனிடமிருந்த எந்த உதவியையும் எதிர்பாராமல் அன்பு செலுத்தியது உண்மையான அன்பு. அதுபோலவே காட்டு வேடனான கண்ணப்பன் குடுமித்தேவருக்கு செய்த பணிவிடை சிவகோசரியாரே பார்த்து வியந்து போகும் வண்ணம் இருந்தது, அங்கும் கண்ணப்பர் சிவபெருமானிடம் எந்த பிரதிபலனுக்காகவும் அந்த அன்பைக் காணிக்கை ஆக்கவில்லை. எதையும் எதிர்பார்க்காமல் செய்யும் தியாகமே கீதையில் போற்றப்படுகிறது. இவ்விரு காட்டு மனிதர்களும் காட்டிய அன்புக்கு வேறு எதுதான் இணையாகும்? அவ்விரு வேடர்களின் வரலாற்றையும் சிறிது இப்போது பார்ப்போம்.

இராம காதையில் கைகேயி வரங்கள் கேட்டு இராமனை கானகம் செல்லவும் தன் மகன் பரதன் நாடாளவும் உரிமை பெற்ற பின் இராமபிரான் சீதை, இலக்குவன் ஆகியோருடன் வனம் செல்கிறான்.  இராமன், இலக்குவன், சீதை மூவரும் கங்கையின் வடகரையை சென்றடைகின்றனர். அங்கு இருந்த முனிவர்களோடு தங்கி, அவர்களது உபசரிப்பை ஏற்றனர். அங்கே இவர்கள் கங்கை நதியில் நீராடி மகிழ்ந்தனர். இராமனின் திருவடி பட்ட மாத்திரத்தில் சகல பாவங்களும் நீங்குமெனின், அவன் மேனி முழுதும் கங்கையில் அமிழ்ந்து நீராடியதால், அந்த கங்கை நதியின் சிறப்பு அதிகமாயிற்று; கங்கை புனிதம் அடைந்தது.

கங்கைக் கரையில் முனிவர்களோடு விருந்துண்டு தங்கியிருந்த தருணத்தில், அந்தக் காட்டில் வசிப்பவனும், கங்கை நதியில் படகோட்டும் உரிமை பெற்றவனுமான குகன் எனும் வேட்டுவ அரசன், தன் உற்றார், பரிவாரங்கள் புடைசூழ இராமன் வந்திருப்பதறிந்து, அவனைக் காண வந்து சேர்ந்தான். குகன் சிருங்கிபேரம் எனும் இடத்திற்கு அரசனாவான்.

வாயிற்புறத்தில் பெரிய கூட்டம் எழுப்பும் ஓசை கேட்டு இலக்குவன் முனிவர்களோடு இராமன் பேசிக்கொண்டிருந்த ஆசிரமத்தின் வாயிலுக்கு வந்து என்னவென்று பார்க்கிறான். குகன் தன் பரிவாரங்கள் சூழ நிற்பது கண்டு நீங்கள் யார்? என்ன காரியமாக வந்திருக்கிறீர்கள் என்று வினவினான்.

அதற்கு குகன் "ஐயனே! நாவாய்களை இந்த கங்கை நதியில் ஓட்டும் வேட்டுவனான நான், இராமபிரான் கழல் சேவிக்க வந்தேன்" என்றான்.

இதனைக் கேட்ட இலக்குவன் "சற்று இருங்கள்' என்று சொல்லி உள்ளே போய் இராமனிடம் "கொற்றவ! தாயினும் மிக நல்லவனான தூயவன் ஒருவன், இந்தக் கங்கை நதியில் படகு செலுத்துபவன், சிருங்கிபேரத்தின் மன்னன், குகன் என்பான் தங்கள் திருவடி சேவிக்க விரும்பி வந்திருக்கிறான்" என்று சொல்ல, இராகவன் "உடனே அவனை உள்ளே வரச் சொல்" என்கிறார். இலக்குவன் குகனிடம் வந்து உள்ளே வரச் சொல்லி அழைக்கிறான்.

உள்ளே நுழைந்த குகன் கண்கள் களிக்கும்படி இராமனை தரிசனம் செய்து, மேனி வளைத்து, கைகளால் வாய் பொத்தி பணிவோடு நின்றான். இராமன் அவனை அமரும்படி சொல்லியும் குகன் அமரவில்லை. "ஐயனே! தேவரீர் அமுது செய்தருளும்படி தங்களுக்காக தேர்ந்தெடுத்த தேனும், மீனும் இங்குக் கொண்டு வந்தேன், தாங்கள் தயைகூர்ந்து அவற்றை ஏற்றுக்கொண்டு அமுது செய்தருள வேண்டும்" என்றான்.

புன்சிரிப்போடு இராமன் முனிவர்களை நோக்கினான். தவவொழுக்கம் பூண்ட நான் உண்ணுதற்கு முடியாதவற்றைக் கொணர்ந்த அவன் வெள்ளை உள்ளத்தையும் மிகுதியான அன்பையும் எண்ணி இராமன் நெகிழ்கிறான். "உள்ளார்ந்த அன்போடு நீ கொணர்ந்த இவற்றை நாம் உண்டதாகவே எண்ணிக்கொள்" என்றான்.

"நாங்கள் இன்றிரவு இங்கே தங்கி நாளை விடியற்காலை கங்கையைக் கடந்து அப்பால் செல்ல நினைக்கிறோம். நீ இப்போது உனது பரிவாரங்களோடு ஊருக்குத் திரும்பிச் சென்று நாளைக் காலையில் படகுடன் இங்கு வந்து சேர்வாயாக!" என்றான்.

தவக்கோலம் பூண்டிருந்த இராமனைப் பார்த்து குகன் துயரமடைந்து "ஐயனே! தங்களைப் பிரிந்து செல்ல என் மனம் இடம் தருவதில்லை. நான் தங்களுடனே இங்கேயே தங்கிவிடுகிறேன்" என்றான்.

அதுகேட்ட இராமன் "அப்படியாயின் நீயும் இன்று எங்களோடு இருக்கலாம்" என அனுமதித்தான்.

உடனே குகன் தன் சேனையை அழைத்து காட்டு மிருகங்கள் அங்கிருப்பவர்களைத் துன்புறுத்தாதவாறு காத்திட அந்தத் தவப் பள்ளியைச் சுற்றி காவல் இருக்குமாறு பணித்துவிட்டுத் தானும் காவலுக்கு நின்றான்.

"தாங்கள் திருநகர் நீங்கி அயோத்தியைவிட்டு வனம் புகுவதற்கு என்ன காரணம்" என குகன் வினவ இலக்குவன் நடந்த வரலாற்றை அவனுக்கு உரைக்கிறான். அதைக் கேட்டு குகன் மிகவும் வருந்தி இராமன்பால் மேலும் பக்தி கொண்டான்.

அன்றிரவு இராமனும் சீதாபிராட்டியும் நாணல்களை விரித்து அதில் படுத்தனர். இளையபெருமாள் இரவு முழுவதும் கண் துஞ்சாமல் வில் ஏந்திய கையனாய் காவல் இருந்தான். இதையெல்லாம் குகனும் கண்விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். 

பொழுது விடிந்தது. இராமன் எழுந்து கடமைகளையெல்லாம் முடித்து, அங்கிருந்து புறப்பட விரைந்து சென்று "படகினைக் கொண்டு வா" என்று குகனைப் பணித்தான்.

அப்போது இராமபிரானை பிரிய மனமில்லாத குகன், அவன் கங்கையைக் கடந்தபின் அங்கு தங்காது சென்றுவிடக் கூடுமென எண்ணி, அவன் தன்னோடு தம் ஊரிலேயே தங்கிவிட வேண்டுமென்று இறைஞ்சுகிறான்.

குகனது அன்பினை உணர்ந்த இராமன் அவனிடம் மிக்க கருணையோடு தான் மீண்டும் வரும்போது வந்து தங்கிச் செல்வதாகக் கூறுகிறான். குகன் கொண்டுவந்த படகில் மூவரும் ஏறி கங்கையைக் கடக்கின்றனர். அக்கரை சென்றபின் இராமனைப் பிரிய மனமின்றி குகன் மறுபடி தன் ஆசையைக் கூறுகிறான்.

அன்போடு அதனை மறுத்த இராமன் குகன்பால் கொண்ட அன்பால், "தம்பி! குகா! நாங்கள் சகோதரர்கள் நால்வர்தான் இருந்தோம். இப்போது உன்னோடும் கூட ஐவரானோம் என்று சொல்லி விடைபெற்றுச் செல்கிறான்.


II. இரண்டாம் பகுதி.

தன் பாட்டனார் அழைப்பின் பேரில் கேகய நாடு சென்றிருந்த பரதன் நாடு திரும்பினான். நாட்டில் நிலைமை சரியில்லை, சகுனங்கள் சரியில்லை என்பதை உணர்ந்தவனாய் அரண்மனை சென்றான். அங்கு அவன் தாய் கைகேயி நடந்த செய்திகளைக் கூறி, தந்தை மரணமடைந்ததையும், இராமன் காடு சென்று விட்டதையும் சொன்னாள். தாயின் செயல் கேட்டு கோபமடைந்த பரதன் அவளை பலவாறாக வசைபாடிவிட்டு, அவளைத் தன் தாய் அல்ல என சபதம் செய்துவிட்டு அன்னை கோசலையைப் போய் பார்க்கிறான். அங்கு கோசலை அவனிடம், பரதா உன் அன்னை இப்படி வரம் கேட்பாள் என்பது உனக்குத் தெரிந்திருக்கவில்லையா என்று கேட்டதுதான் தாமதம், அணை உடைத்தது போல அப்படி அவள் செய்த சூழ்ச்சி எனக்குத் தெரிந்திருக்குமானால் நான் நரகத்துக்குப் போவேன் என்று நூற்றுக் கணக்கான பாவங்களை அடுக்கி அவற்றைச் செய்தவர்கள் போகும் நரகத்துக்கு நானும் போவேன் என்று சொல்லி வருந்துகிறான். கோசலை அவனை சமாதானப் படுத்துகிறாள். உடனே பரதன் தான் உடனே கானகம் சென்று இராமபிரானை உடனே நாட்டுக்கு அழைத்து வருவதற்காகப் புறப்படுகிறான். தம்பி சத்ருக்குனனை அழைத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு வேண்டுகிறான்.

பரதன் தன் தம்பி சத்ருக்குனனை அழைத்தான். "தம்பி! நாடு முழுவதும் முரசு அறைந்து இராமபிரானை அழைத்து வர சேனையை உடனே தயார் செய்" என்றான்.

இராமன் மீண்டும் வருவான், முடிசூடுவான் என்ற செய்தியைக் கேட்டவுடனேயே நாட்டு மக்கள் அனைவரும் உவகைமிக அடைந்தனர். சந்திரோதயம் கண்டு கடல் பொங்கி கொந்தளிப்பதுபோல மக்கள் கிளர்ந்தெழுந்தனர். யானைகள், குதிரைகள், தேர்கள், வண்டிகள் என கண்ணுக்கெட்டிய தூரம் தயாராகிவிட்டனர். பெருத்த ஆரவாரத்துடன் படைகள் நகரத் தொடங்கின.

படைகளை முன்னே செல்லவிட்டபின் பரதன் தானும் தன் தம்பியுமாக தவக்கோலம் பூண்டு மரவுரி தரித்து தேர்மீதேறி புறப்பட்டான். தாய்மார்கள் மூவரும், அமைச்சர்கள், தூய அந்தணர்கள் ஆகியோர் பரதனைத் தொடர்ந்து சூழ்ந்துகொண்டு சென்றனர். இப்படி நகர்ந்து செல்லும் கூட்டத்தில் இவ்வளவுக்கும் காரணமான கூனியும் உந்திக் கொண்டு நடந்து போவதைக் கவனித்த சத்ருக்குனன் அவளைக் கொன்றுவிட நினைத்துப் பாய்ந்து சென்றான். அவனை பரதன் தடுத்து நிறுத்தினான்.

"தம்பி! தாய் கைகேயி தவறு இழைத்தவள் என்று நான் அவளைக் கொன்றுவிட்டேனானால், அண்ணன் இராமன் என்னை மன்னிக்கமாட்டான். அதனால்தான் நான் அவைளைக் கொல்லவில்லை. இதனை நீயும் எண்ணிப்பார்" என்று சொல்லி தம்பியை சமாதானப் படுத்திக் கூட்டிச் சென்றான்.

இராமன் காட்டுக்குச் செல்கையில் தங்கிய சோலையிலேயே இப்போது இவர்களும் தங்கினார்கள். இராமன் முன்பு தங்கிய சோலையில் அண்ணன் இராமன் முன்பு சயனித்த இடத்தைக் கேட்டறிந்து, அதனை மிதிக்கவும் அஞ்சி, அதன் பக்கத்தில் புழுதி படிந்த வெறுந்தரையில் அன்றிரவைக் கழித்தான். அறுசுவை உண்டியை நீத்து கிழங்கையும் கனிகளையும்கூட உண்ணாமல் பட்டினியாகக் கண்ணீர் பெருக்கிக் கொண்டிருந்தான். இராமபிரான் அந்தச் சோலையிலிருந்து கால் நடையாகவே நடந்து சென்ற செய்தியறிந்து, தானும் நடந்தே செல்லலாயினான். இப்படி நடந்தே கங்கைக் கரையைச் சென்றடைந்தனர்.

கடல்போன்ற பரதனின் படை பரிவாரங்கள் அனைத்தும் கங்கையின் வடகரையை அடைந்தது, ஆற்றின் மறுகரையிலிருந்து கவனித்த வேட்டுவ அரசன் குகன், இராமபிரான் மீது போர் செய்து அழிப்பதற்காக இந்தப் படை வருகிறது போலும் என கோபமுற்றான். உடனே தனது இடையில் தொங்கிய ஊதுகொம்பை எடுத்து ஊதி, போர் வந்துவிட்டது என்று தோள்பூரிக்க வாயை மடித்து உதடுகளைக் கடித்து கண்கள் தீ உமிழ புறப்பட்டான்.

இதோ வரும் படை ஒரு எலிக்கூட்டம். நான் நாகம் போன்றவன் என்றான். தன் படைகள் அனைத்தையும் ஒன்று திரட்டி கங்கையின் தென்கரை வந்து அடைந்தான். அங்கு தன் படை வீரர்களை நோக்கி "வீரர்களே! நம் அன்பிற்குரிய இராமபிரான் பதினான்கு ஆண்டுகள் கழித்துத் திரும்பிவந்து அரசு கொள்ள இடமின்றி, இப்போதே அவரைத் தொலைத்துவிடும் சூழ்ச்சியோடு அந்தக் கரையில் இந்தப் படை வந்திருக்கிறது. அது மேலே செல்லாதவாறு நாம் தடுத்து அவர்களை இங்கேயே அழித்துவிடவேண்டும்" என்றான்.

"மேகவண்ண இராமபிரான் என் உயிர் நாயகன். அவனை நாடு ஆள விடாதபடி வஞ்சனையால் அரசைக் கைப்பற்றிய மன்னர்கள் வருகிறார்கள். என்னுடைய தீ கக்கும் அம்புகள் அவர்கள் மீது பாயாதா என்ன? அப்படி இவர்கள் என்னிடமிருந்து தப்பிப் போய்விட்டால் மக்கள் என்னை "நாய்க்குகன்" என்று ஏசமாட்டார்களா?"

"ஆழமான இந்த கங்கையாற்றைக் கடந்து இவர்கள் போய்விடுவார்களோ? பெரிய யானைப் படையைக் கண்டு அஞ்சி வழிவிடுபவனா நான்? என்னைப் பார்த்து அவர் "நீ எனக்குத் தோழன்" என்று சொன்னாரே. அதுவன்றோ நான் பெற்ற பேறு. இவர்களை உயிர் பிழைத்துப் போக நான் விட்டுவிட்டால், அறிவிலி இந்த குகன் இறக்கவில்லையே என்று மக்கள் என்னை ஏசமாட்டார்களா?"

"பரதன் தனக்கு அரசு வேண்டுமென்ற ஆசையால், தமையன் என்றும் கருதாது இராமபிரானை அழிக்கத் துணிந்தாலும் இலக்குவன் இருக்கும்போது அது நடக்குமா? அது கிடக்கட்டும், நான் ஒருவன் இருப்பதை இவன் மறந்து விட்டான் போலும். அன்றி என்னைப் பொருட்படுத்தவில்லையா? அரசர் உயர்ந்தோர், வேடர் தாழ்ந்தோர் என்பதனால், வேடர்விடும் அம்புகள் அரசர் மார்பில் தைக்காதோ? அதையும் நான் பார்த்துவிடுகிறேன். இவனை அழிக்காமல் விடமாட்டேன்".

"மண்ணாசை பிடித்த மன்னர்கள், அவ்வாசையால் எத்தகைய தீங்கையும் செய்வார்கள் போலும். மற்றவர்கள் எப்படி இருந்தாலும் இராமபிரானின் தம்பியாகிய இவன் எப்படிச் செய்யத் துணிந்தான்? என்னிடமிருந்து தப்பிப்பிழைத்துப் போனால்தானே! பார்க்கலாம்."

"அரசாளப் பிறந்த தலைவன் இராமன் தவம் மேற்கொள்ள, அரசுரிமை இல்லாத இவன் தவறான வழியில் அரசினைப் பெறுவதோ? அதற்கு நான் இடம் கொடேன். இவனைத் தடுத்து அழித்து புகழைப் பெறுவேன். இதில் என் உயிர் போனாலும் எனக்குக் கவலை இல்லை".

"தனக்கு உரிய நாட்டை இராமபிரான் இவனுக்குக் கொடுத்துவிட்ட பின்பும் இந்த பரதன் நாம் ஆளுகின்ற இந்த காட்டையும் கொடுக்க மனமின்றி படையெடுத்து வந்துவிட்டான் பாரீர்! என்ன கொடுமையிது! ஆகையால் ஆடுகின்ற கொடிகளோடு கூடிய இந்தப் படையினை அழித்து, அதன்பின் இராமபிரானை நாட்டை ஆளும்படி மீட்டுக் கொடுத்து, உலகோர் சொல்லும் புகழை நீங்களெல்லாம் அடையவேண்டும்".

குகன் இப்படியெல்லாம் பேசினானே தவிர உள்ளூர அவனுக்கு ஒரு பயம். இராமபிரானுக்குத் தன் தம்பியை நாம் அழித்து விட்டோம் என்று கோபம் வந்தால் என்ன செய்வது என்ற கவலை வந்துவிடுகிறது அவனுக்கு.

அப்போது குகனை முன்பே அறிந்தவனான சுமந்திரன் மறுகரையில் தன்னருகில் நின்றிருந்த பரதனிடம் குகனைப் பற்றி கூறுகிறான். "பரதா! அதோ பார். அந்தக் கரையில் தன் படைகளுடன் வந்து கையில் வில்லுடன் நிற்கிறானே, அவன்தான் குகன். இந்த கங்கையின் இரு கரைகளிலும் உள்ள நிலப்பகுதிக்குச் சொந்தக்காரன். உங்கள் குலநாதனாம் இராமனுக்கு உயிர்த் துணைவன். கணக்கற்ற படகுகளுக்குச் சொந்தக்காரன்; மகாவீரன். வீரத்தில் ஆண் யானையைப் போன்றவன்;. வில்லேந்திய வீரர்களையுடைய படையை உடையவன்" என்றான்.

"பரதா! அந்த குகன் வீரம் நிறைந்தவன் மட்டுமல்ல. நெஞ்சம் முழுவதும் அன்பை உடையவன். உன்னுடைய வரவை எதிர்பார்த்து அதோ அந்தக் கரையில் அவன் தன் படைகளுடன் நிற்கிறான் பார்!"

சுமந்திரன் குகனைப் பற்றி 'உங்கள் குலத் தனி நாதற்கு உயிர்த் துணைவன், கரைகாணா காதலான்' என்று சொன்னவை பரதனுக்கு உடனே அவனைக் காணவேண்டுமென்ற ஆவலைத் தூண்டியது. உடனே தன் தம்பியையும், உடன் அழைத்துக் கொண்டு எழுந்து சென்று கங்கைக் கரையை அடைந்தான். பரதன் அப்படி வந்து நிற்கும் காட்சியை மறுகரையில் நின்ற குகனும் காண்கிறான். பரதன் அணிந்திருந்த மரவுரிக் கோலத்தைப் பார்க்கிறான். பொலிவிழந்து வாடியிருக்கும் அவன் பரிதாப நிலை கண்டு குகனுக்கு பகீர் என்றது.

வான்மீகத்தில் இந்தப் பகுதி கூறுவதாவது:-- "இறந்த தந்தைக்குத் தர்ப்பணம் செய்ய பரதன் கங்கைக் கரையை அடைகிறான். அப்போது குகன் இவனைப் பார்த்து சந்தேகப்பட்டு, தன் படைகளைத் திரட்டி எச்சரிக்கையாய் இருங்கள் என்று சொல்லிவிட்டு அவன் கருத்தை உணரும் பொருட்டுத் தான் மட்டும் காணிக்கைப் பொருட்களோடு மறுகரை வந்தடைந்தான்".

குகன் கண்ட காட்சி அவன் மனதைத் துணுக்குறச் செய்தது. மரவுரி உடுத்த உடல், மாசு அடைந்த மெய்; ஒளி இழந்த முகம், கல்லும் கனியும்படியான துயரம் தாங்கிய நெஞ்சம், இவற்றைக் கண்டான் பரதனிடம். குகன் கையில் பிடித்திருந்த வில் நழுவி கீழே விழுந்தது. நெஞ்சம் விம்மியது. செய்வதறியாது திகைத்து நின்று விட்டான்.

இராமன் மீது படையெடுத்து வருகிறான் என்றல்லவோ நினைத்தேன். ஆனால் இவனோ இப்படி வருகிறானே!

இதோ இந்த பரதன் என் நாயகன் இராமனைப் போலவே இருக்கின்றான். அருகில் நிற்கும் அவன் தம்பி, இலக்குவனைப் போலவே இருக்கிறான். தவ வேடம் மேற்கொண்டிருக்கிறான். மனத்தில் அளவற்ற துன்பத்தைத் தாங்கிக் கொண்டிருக்கிறான். இராமபிரான் சென்ற திசை நோக்கித் தொழுது கொண்டிருக்கிறான். அடடா! எம்பெருமான் இராமனுக்குத் தம்பியராகப் பிறந்தவர்கள் தவறு செய்பவர்களாகவா இருப்பார்கள்? நிச்சயம் மாட்டார்கள்".

இவன் மனதில் ஏதோவொரு இடுக்கண் துன்புறுத்துகிறது. இராமன் மீது ஆறாத காதல் கொண்டிருக்கிறான். இராமன் மேற்கொண்ட அதே தவக் கோலத்தையே இவனும் மேற்கொண்டிருக்கிறான். இவன் உளக் கருத்தை அறிந்து வருகிறேன்" என்று சொல்லி, தான் மட்டும் ஒரு படகில் ஏறி கங்கையைக் கடந்து வடகரையைச் சென்றடைகிறான்.

"வந்தெதிரே தொழுதானை வணங்கினான், மலர் இருந்த
அந்தணனும் தலை வணங்கும் அவனும் அவனடி வீழ்ந்தான்
தந்தையினும் களிகூரத் தழுவினான் தகவுடையோர்
சிந்தையிலும் சென்னியிலும் வீற்றிருக்கும் சீர்த்தியான்".

படகைவிட்டு இறங்கி வந்து தொழுத குகனை பிரம்ம தேவனும் தலை வணங்கும் தகுதியுடைய பரதன் வணங்கினான். அந்த குகனும் பரதன் அடிகளில் விழுந்து வணங்கினான். தன் அடிகளில் விழுந்து வணங்கிய குகனை பரதன் தூக்கி நிறுத்தித் தந்தையினும் களிகூரத் தழுவினான். இந்த இடத்தில் தொழுதல் என்றால் தரையில் வீழ்ந்து வணங்குதல் என்றும், வணங்குதல் என்றால் தலை தாழ்த்தி வணங்குவது என்றும் கொள்ள வேண்டும்.

வந்து எதிரே தொழுதானை (குகனை) மலர் இருந்த அந்தணனும் தலை வணங்கும் அவனும் (பரதனும்) வணங்கினான். அவன் (அந்த குகன்) அவன்அடி வீழ்ந்தான் (பரதன் கால்களில் வீழ்ந்தான்) அப்படி வீழ்ந்த குகனை தந்தையினும் களிகூர பரதன் தழுவினான், அந்த பரதன் தகவுடையோர் சிந்தையிலும் சென்னியிலும் வீற்றிருக்கும் சீர்த்தியான். இந்த பாடலுக்கு இருவிதமாகவும் பொருள்கூறி வருகின்றனர். யார் யார் அடியில் விழுந்து வணங்கினார் என்பதில் குழப்பத்தைத் தெரிவிக்கின்றனர். எனினும் மேலே கண்ட பொருளே சரியானது. ஏனெனில் அடுத்து வரும் பாடலில் "கேட்டனன் கிராதர் வேந்தன் கிளர்ந்தெழும் உயிரன் ஆகி, மீட்டும் மண்ணதனில் வீழ்ந்தான், விம்மினன்" என்று குகன் அடைந்த நிலையை வர்ணிக்கும்போது, குகன் மீண்டும் மண்ணில் வீழ்ந்தான் என்று வருவதால், முன்பும் அவனே மண்ணில் வீழ்ந்து வணங்கினான் என்பது தெளிவாகிறது அல்லவா?

குகன் பரதனிடம் "நீ வந்த காரியம் என்ன?" என்று கேட்கிறான்.

"அயோத்தி அரசுக்கு உரிமையுள்ளவருக்கு அரசைக் கொடுக்காமல் முறைதவறிவிட்டனர், அந்த முறைகேட்டை நீக்கி அயோத்திக்கு உரிமையுள்ள அரசனை அழைத்துப் போவதற்காக வந்திருக்கிறேன்" என்கிறான் பரதன். இதைக் கேட்ட குகன் மகிழ்ச்சி பொங்க மீண்டுமொருமுறை, பரதன் காலில் வீழ்ந்தனன். கைகளைக் கூப்பிக்கொண்டு குகன் சொல்லுகிறான்:

"தாய் உரை கொண்டு தாதை உதவிய தரணிதன்னைத்
தீவினை என்ன நீத்துச் சிந்தனை முகத்துத் தேக்கி
போயினை என்றபோது புகழினோய் தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ தெரியினம்மா".

"பரதா! ராஜ்யத்தை நீ விரும்பவுமில்லை; கேட்கவுமில்லை. தாய் கேட்டு, தந்தை கொடுத்த ராஜ்யத்தை வேண்டாம், இது தவறு என்று சொல்லி மறுத்துவிட்டு, முகத்தில் கவலை படர இராமனைத் தேடி கானகம் வந்திருக்கிறாய் என்பதைக் காணும்போது, பரதா! ஆயிரம் இராமர் உனக்கு இணையாவாரோ?"

"பரதா! உன்னை என்ன சொல்லி புகழுவேன். நானோ கற்றறியா வேடன். சூரியனுடைய பிரகாசமான ஒளி எப்படி சந்திரன், நட்சத்திரங்கள் இவற்றின் ஒளியையெல்லாம் இருக்குமிடம் தெரியாமல் செய்து பிரகாசிப்பது போல, நீயும் உன் ரவிக்குலத் தொன்றல் அனைவரின் புகழையும் உன் புகழுக்கெதிரே ஒன்றுமில்லாமல் செய்து விட்டாய்".

இராமபிரானின் குண விசேஷங்களைக் கண்டுதான் குகன் இராமனிடம் உள்ளத்தைப் பறிகொடுத்தான். அது போலவே பரதனின் குண நலன்களைக் கண்டு இவன் மீதும் பக்தி கொண்டான். இங்கே இராமபிரான் எவ்விடத்தில் தங்கியிருந்தார் என்று குகனிடம் கேட்டான் பரதன். குகனும் அந்த இடத்தைக் காட்டுகிறான். இரு பாறைகளின் இடையில் புற்கள் பரப்பிய இடத்தைக் கண்டான். துடித்துத் தரையில் வீழ்ந்தான். கண்ணீர் விட்டுக் கதறி அழுதான்.

என்னால் அன்றோ அண்ணா உனக்கு இப்படிப்பட்டத் துன்பங்கள் நேர்ந்தன. புல்லில் படுத்தாய், கிழங்கையும், கனிகளையும் உண்டாய். நீ பட்ட துன்பங்களை அறிந்த பின்னரும், நான் உயிர் துறக்காமல் வாழ்கிறேனே.

இராமபிரான் பிராட்டியோடு துயின்றதால் இலக்குவன் அங்கு இருந்திருக்க முடியாது. எனினும் இவர்களைக் காக்கும் பணியைத் தலைமேல் கொண்டிருந்ததால் உறங்கியிருக்கவும் மாட்டான். எனவே குகனை நோக்கிக் கேட்கிறான் "குகனே! இலக்குவன் எங்கே தங்கி இரவுப் பொழுதைக் கழித்தான்?".

இந்தக் கேள்வியை பரதன் கேட்கவும் குகன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

"அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச
வில்லை ஊன்றிய கையொடும் வெய்து உயிர்ப்போடும் வீரன்
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய், கண்கள் நீர் சோரக் கங்குல்
எல்லை காண்பளவும் நின்றான், இமைப்பிலன் நயனம் என்றான்".

"பரதா! அண்ணலும் பிராட்டியும் தூங்கும்போது, வில் ஊன்றிய கையனாய், பெருமூச்சுடனும், கண்களில் நீர் சோர விடிய விடியக் கண்விழித்துக் காவல் காத்தான் இலக்குவன்" என்றான் குகன். 

"நானும்தான் இருக்கிறேனே! ஸ்ரீ இராமனுக்கு சேவகம் செய்பவன் என்று சொல்லிக்கொண்டு செயலில் அப்படி நடக்கவில்லையே. மாறாக அவன் பெருந்துன்பம் அடைவதற்கு நானே காரணமாகி விட்டேனே! இலக்குவனோ, தான் அடியவன் என்பதைத் தன் செயலால் உணர்த்துகிறான். என்னால் என்ன பயன்?" என்று பரதன் தன்னை நொந்து கொண்டான்.

அன்றிரவு இராமன் படுத்திருந்த இடத்தில் பரதன் படுத்திருந்து மறுநாட்காலை கங்கை ஆற்றைக் கடந்து செல்லும் விருப்பத்தைக் குகனிடம் சொல்ல, அவ்வண்ணமே அவனும் நாவாய்களைக் கொண்டு வந்து சேர்க்கிறான். பரதனும் அவனுடன் வந்தவர்களும் படகுகளில் ஏறி கங்கை ஆற்றைக் கடந்து தென் கரையை அடைகின்றனர். அங்கே பரதனுடன் அவனது தாய்மார்கள் கோசலை, கைகேயி, சுமித்திரை ஆகியோர் நிற்கின்றனர். அவர்களில் கோசலையைப் பார்த்து குகன், இவர்கள் யார்? என்கிறான்.

"இவர்தான் தசரத சக்கரவர்த்தியின் முதல் தேவி. மூன்று உலகங்களையும் படைத்த பிரம்மனைப் பெற்றெடுத்த திருமாலாகிய இராமபிரானைத் தன் வயிற்றில் சுமந்தவர், நான் பிறந்தமையால் அந்த மகனை காட்டுக்கு அனுப்பிவிட்டு பெருந்துன்பத்தை அடைந்தவர், இவர்தான் கோசலை" என்றான்.

உடனே குகன் கோசலையின் கால்களில் வீழ்ந்தான், அழுதான். இவனது அன்புகண்டு நெகிழ்ந்த கோசலை பரதனிடம் "இவன் யார்?" என்றாள்.

அதற்கு பரதன் "இந்த நின்ற குரிசில் (வீரன்) இராகவனின் இன்னுயிர் தோழன். இலக்குவனுக்கும், சத்ருக்குனனுக்கும் எனக்கும் மூத்த அண்ணன். பெயர் குகன்" என்றான்.

உடனே கோசலை "என் அருமைக் குமாரர்களே! இனி துன்பத்தால் வருந்தாதீர்கள். இராம இலக்குவர் காட்டுக்குப் போனதும் நல்லதாயிற்று. இல்லாவிட்டால் உங்களுக்கு இப்படியொரு சகோதரன் கிடைத்திருப்பானா? இனி நீங்கள் ஐவீரும் ஒருவர் போல பிரியாமல் ராஜ்யத்தை நெடுநாள் ஆளக்கடவீராக!" என்றாள்.

அடுத்ததாக சுமித்திரையைக் காட்டி, இவர் இலக்குவனையும், சத்ருக்குனனையும் பெற்றெடுத்த தேவியென அறிமுகப் படுத்துகிறான். அடுத்ததாக கைகேயைக் காட்டி, குகன் "இவர் யார்?" எனக் கேட்க, பரதன் சொல்லுகிறான்:

"படர் எலாம் வளர்த்தாளைப் பழிவளர்க்கும் செவிலியைத் தன் பாழ்த்த பாவிக்
குடரிலே நெடுங்காலம் கிடந்தேற்கும் உயிர்ப்பாரம் குறைந்து தேய
உடரெலாம் உயிர் இழந்தவெனத் தோன்றும் உலகத்தே ஒருத்தி அன்றே
இடரிலா முகத்தாளை உணர்ந்திலையோ, இந்நின்றாள் என்னை ஈன்றாள்".

உலகத்தில் வேறெங்கும் காணமுடியாத கொடுமை மிக்க பாவி இவள். இவள் பெற்று வளர்த்தது துன்பங்களையும், பழிகளையுமே! இவள் வயிற்றில் கிடந்ததால் இவளைப்போல் கல் நெஞ்சு எனக்கு இல்லை. இவ்வளவு பேரும் துன்பக் கடலில் துவண்டு கிடக்கையில், இவள் ஒருத்தி மட்டும் துயர் இல்லாதவள் என்பது முகத்திலேயே தெரியுமே! எனவே இவள் யார் என்று உனக்குத் தெரிந்திருக்கலாம். இவள்தான் என்னைப் பெற்றவள்" என்றான் பரதன்.

பரதனின் தாய் என்று தெரிந்ததும் குகன் அவளையும் வணங்கினான். படகுகள் கரை அடைந்தபின் தாயர் சிவிகையில் ஏறிச் செல்ல, பரதனும் குகனும் நடந்து செல்கின்றனர். அந்தப் பகுதியில் வாழ்ந்த பரத்வாஜ முனிவ்ரது பெருமையை அறிந்து அவரைக் காண, அவர் ஆசிரமம் சென்றடைந்தனர். முனிவரும் பரதனின் வருகையறிந்து எதிர்கொண்டழைத்துச் சென்றார்.

                                  காளத்தி வேடன்

காளத்தி வேடன் திண்ணன். அவன் வாழ்ந்த நாடு போத்தப்பி நாடு. அந்த நாட்டில் உடுப்பூர் எனும் இடத்தில் வாழ்ந்த வேடர்களின் அரசன் நாகன் என்பவன். அவன் மனைவி பெயர் தத்தை. இந்த அரச தம்பதியருக்கு வெகு நாட்கள் புத்திர பாக்கியம் இல்லை. அதனால் மனம் வேதனை அடைந்த மன்னன் குறிஞ்சி நிலக் கடவுளான சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு, அந்தக் கோயிலுக்கு மயில்களையும், கோழிகளையும், சேவல்களையும் அளித்து புத்திர பாக்கியம் வேண்டினர்.

முருகக் கடவுளின் அருளினால் அவர்களுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. பிறந்த அந்தக் குழந்தையைக் கையில் எடுத்தால் அது திண்ணென்று கனத்தது. ஆகவே அந்த குழந்தையை திண்ணன் என்று பெயரிட்டு அழைத்தனர். குழந்தை திண்ணன் நன்கு வளர்ந்தான். வேடர் குலத்துக்கே உரித்தான வில் வித்தையைக் கற்றான். வீரமிக்க இளைஞனாகத் திண்ணன் திகழ்ந்தான். தந்தை நாகனுக்கு வயதாகிவிட்டதால் வேட்டைக்குப் போக முடியாமல் தளர்ந்து போனான். இனி தன் மகன் திண்ணனே வேட்டைக்குச் செல்லப் பணித்தான்.

திண்ணன் ஆர்வத்தோடு வேட்டைக்குப் புறப்பட்டான். தன் வயதொத்த இளைஞர்களோடு கானகம் சென்று பற்பல மிருகங்களை வேட்டையாடி வந்தான். அப்படியொரு நாள் அவன் வேட்டையாடிக் கொண்டிருந்த போது பன்றியொன்று அவன் விரித்த வலையில் வந்து விழுந்தது. இயற்கையில் பலம் பொருந்திய மிருகமாதலின் அந்தப் பன்றி வலையை அறுத்துக் கொண்டு தப்பி ஓடியது. இதனைக் கண்ட திண்ணன் தன்னிடம் பிடிபட்ட மிருகம் தப்பி ஓடுவதாவது என்று அதனைத் துரத்திக் கொண்டு ஓடினான்.

ஓடுகின்ற திண்ணனோடு நாணன், காடன் எனும் இரு வேட்டுவ நண்பர்களும் ஓடினார்கள். அந்தப் பன்றியோ காட்டில் வெகுதூரம் ஓடிக் களைத்து மலைச் சாரலில் ஒரு மரத்தின் நிழலில் போய் நின்றது. அந்தப் பன்றியைத் துரத்தி வந்த திண்ணன் அதன் அருகில் சென்று தன் உடைவாளை உருவிக் கொண்டு அதனை இரு துண்டாகும்படி வெட்டினான்.

திண்ணனைப் பின்பற்றி ஓடிவந்த நண்பர்கள் நாணனும், காடனும் ஓடிவந்த களைப்பில் பசி வருந்தக் களைத்துப் போயினர். அங்கு வெட்டப்பட்டுக் கிடந்த பன்றியைத் தீயில் வாட்டி உண்டு களித்த பின்னர் வேட்டையைத் தொடரலாம் என்று திண்ணனிடம் சொன்னார்கள். அப்போது திண்ணன் இந்தக் காட்டில் அருந்த நல்ல தண்ணீர் எங்கு கிடைக்குமென்று வினவினார். அதற்கு நண்பன் நாணன் சொன்னான், தூரத்தில் தெரிந்த பெரியதோர் தேக்கு மரத்துக்கு அப்பால் போனால் ஒரு மலை இருக்கிறது, அந்த மலைச் சரிவில் பொன்முகலி எனும் ஆறு ஓடுகிறது. அந்த நீரைப் பருந்தலாம் என்றான்.

அப்படியானால் சரி, இந்தப் பன்றியை எடுத்துக் கொண்டு அந்த பொன்முகலி ஆற்றின் கரைக்கு வந்து சேருங்கள் என்று சொல்லிக் கொண்டு அங்கிருந்து அரை காத தூரத்தில் இருந்த காளத்தி மலையைக் கண்டு நாணனிடம், இதோ இந்த மலையடிவாரத்துக்குப் போவோம் என்று சொல்லிக் கொண்டே அங்கு சென்றான். அப்போது நாணன், இதோ இந்த மலையில்தான் குடுமித் தேவர் இருக்கிறார், நாம் அங்கு போனால் அவரைக் கும்பிடலாம் என்றான்.

மூவரும் அந்த காளத்தி மலையை நோக்கி நடக்கத் தொடங்கினர். அப்படி நடந்து கொண்டிருந்த திண்ணன் நண்பர்களைப் பார்த்துச் சொல்கிறான், "நண்பர்களே! இந்த காளத்தி மலையைக் கண்டபின் இதனை நோக்கி நடக்க நடக்க என்னுடைய உடலின் பாரம் குறைந்து கொண்டே வருவதைப் போல உணர்கிறேன். இது என்ன அதிசயம். இப்படியும் நடக்குமா?" என்கிறான்.

அவன் நடக்க நடக்க தன் உடல் பாரம் குறைவது மட்டுமல்லாமல் உடலில் ஏதோவொரு இனம் புரியாத மகிழ்ச்சி தோன்றுகிறது. இப்படி அந்த காளத்தி மலை நோக்கி நடந்து பொன்முகலி யாற்றை அடைந்து அதன் கரையில் கொண்டு வந்த பன்றி இறைச்சியை உண்பதற்காகத் தீ மூட்டி பதப் படுத்துவதற்காக, நண்பன் காடனிடம் "நண்பா! நீ போய் தீக்கடைக் கோல் செய்து தீயை உண்டாக்கு, நாங்கள் இந்த மலையின் மீது ஏறி அங்கிருக்கும் குடுமிநாதரை தரிசனம் செய்து கொண்டு வருகிறோம்" என்றான். 

அப்படிச் சொல்லிவிட்டு நாணனோடும் அந்த பொன்முகலி நதியை நீந்திக் கடந்து காளத்தி மலையை அடைகிறான். அங்கு சென்று மலை ஏற ஏற அவர் மனத்தில் எதோ ஒரு புதிய உணர்வு, அன்பு மிகுதி ஏற்படுகிறது. இதென்ன புதுமை. இந்த மலையில் அப்படி என்னதான் புதுமை இருக்கிறது. இப்படி எண்ணிக் கொண்டே மலையில் ஏறுகையில் ஓரிடத்தில் சிவலிங்கமொன்றைக் காண்கிறான் திண்ணன்.

அந்த சிவலிங்கத்தைக் கண்டதுதான், உடனே திண்ணன் மனம் இளகி அன்பால் உருகுகிறது. கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் சொரிகிறது. தன்னுடைய வேட்டுவ குணங்கள் எல்லாம் மெல்ல மறைந்து அன்பே உருவானவனாக மாறுகிறார் திண்ணன். நெடுங்காலம் பிரிந்திருந்த தன் குழந்தையைக் காணும் தாயைப் போல அன்பினால் அக் குழந்தையை அணைத்து அன்பு செலுத்த விழைகிறார். சிவபெருமானைத் தழுவிக் கொண்டு உச்சி முகர்ந்து முத்தமிட்டு தன் அன்பை வெளிப்படுத்தலானார். நெடு நேரம் பெருமூச்சு விட்டுக் கொண்டு நின்றார். அவர் உடல் முழுதும் ரோமாஞ்சனம் உண்டாயிற்று. மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன. கண்கள் கண்ணீரைச் சொரிந்த வண்ணம் இருந்தன. உள்ளம் வெயிலில் இட்ட மெழுகு போல உருகிற்று. உள்ளம் கசிந்துருக இது என்ன விந்தை, இந்த சுவாமி எப்படி என் கண்களில் படாமல் இத்தனை நாள் இங்கிருந்தார். இவரை இன்று காண நான் என்ன புண்ணியம் செய்தேன் என்றெல்லாம் புலம்பினார்.

மனித நடமாட்டமில்லாத இந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் இவர் தனித்து இருக்கிறாரே; இவரை யார் பாதுகாப்பார்? இங்கு புலி, கரடி போன்ற துஷ்ட மிருகங்கள் அதிகம் சஞ்சாரம் செய்கின்றனவே. அவை இவருக்கு ஏதாவது துன்பம் விளைவித்து விடாதா? ஒரு துணையும் இல்லாமல் இவர் இப்படித் தனியே இருக்கிறாரே என்று அன்பொழுக நினைக்கும் போதே அவர் கையிலிருந்த வில் கீழே விழுந்து விடுகிறது. அதனைக் கூட அறியாத நிலையில் திண்ணன் மனம் பரவச நிலையடைந்து நிற்கிறார். பின்னர் ஒருவாறு மனம் தெளிந்து அந்த சிவலிங்கத்தை உற்றுப் பார்க்கிறார். இதென்ன, இவர் தலையில் யாரோ தண்ணீரைக் கொட்டி, மேலே பச்சிலைகளையும், மலர்களையும் இட்டு வைத்திருக்கின்றனரே. யார் இப்படி செய்தது? ஏன் இப்படி செய்திருக்கின்றனர்? இப்படி அவர் மனம் எண்ணியது.

அவர் இப்படி எண்ணுவதை உணர்ந்த நாணன் சொல்கிறான், " முன்பொருமுறை நான் பார்த்திருக்கிறேன். உம்முடைய தந்தையோடு வேட்டைக்கு வந்திருந்தபோது, இந்த சிவலிங்கத்திற்கு ஒரு அந்தணன் பூசை செய்வதைக் கண்டிருக்கிறேன். அவர் என்ன செய்தார் தெரியுமா? இவருடைய முடியிலே நீரை வார்த்து, அதன் பின் இவர் மீது தழைகளையும் பூக்களையும் சொரிந்து, ஏதோ உணவை இவருக்குப் படைத்து உண்ணும்படி சில வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். அதனை நான் பார்த்திருக்கிறேன். இன்றைக்கும் அவரேதான் இப்படிச் செய்திருக்க வேண்டும்" 

தன் நண்பன் இப்படிச் சொன்னதும் திண்ணனுக்கு இவருக்கு இப்படித்தான் பூசனைகள் செய்ய வேண்டும்போலிருக்கிறது என்ற எண்ணம் தோன்றியது. உடனே திண்ணனுக்கு வேறொரு எண்ணமும் ஏற்பட்டது. இவர் இப்படி காட்டில் தனிமையில் யாரும் கவனிக்காத நிலையில் இருக்கிறாரே, இவர் அமுது செய்வதற்கு உணவு கொடுப்பார் எவரும் இல்லையே, என்ன செய்வேன்! இவர் என்ன அமுது செய்வார் என்பதில் திண்ணனுக்கு எந்த கருத்துமில்லையாதலால், தான் உண்ணும் இறைச்சியைத்தான் இவரும் அமுது செய்ய வேண்டுமென நினைத்தார் போலிருக்கிறது.

சரி! நான் போய் இவருக்கு அமுது செய்ய நல்ல இறைச்சியைத் தேடி கொண்டு வருகிறேன் என்று நினைக்கிறார்; அடுத்த கணம், அடடா! அப்படி இவருக்கு இறைச்சி கொண்டுவருவதற்காக நான் சென்று விட்டால் இவர் காட்டில் தனியாக அல்லவா இருப்பார், இவரை யார் கவனித்துக் கொள்வது என்கிற கவலையும் வந்து விட்டது. எப்படியும் இவருக்கென்று உணவு கொண்டு வர வேண்டும், பிரிந்து செல்லவும் மனம் இல்லை என்ன செய்வார் பாவம்! சிறிது தூரம் போகிறார், அங்கிருந்து சுவாமியைச் சற்று திரும்பிப் பார்க்கிறார், அவரிடம் மானசீகமாகப் பேசுகிறார். "சுவாமி! தாங்கள் உண்பதற்காக மிருதுவான நல்ல இறைச்சியைத் தேடி நானே உங்களுக்குக் கொண்டு வந்து தருவேன்" என்பார். உடனே "ஐயோ! தாங்கள் எவருடைய துணையுமின்றி இங்கே தனியே இருக்கிறீர்களே, நான் உங்களைவிட்டுப் பிரியமாட்டேன்" என்கிறார். "உங்களுக்குப் பசிக்குமே, நான் இப்படியே நின்று கொண்டிருந்தால் உங்களுக்கு அமுது அளிப்பது எப்படி? நான் போகிறேன்" எனத் தவிப்பார். கண்களில் நீர்சோர திரும்பிப் பார்த்துக் கொண்டே போவார்.

பின்பு ஒரு வழியாக மனம் துணிந்து கையில் வில்லை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். அங்கிருந்தே சுவாமியைப் பார்த்து கும்பிட்டு விட்டு அங்கிருந்து நீங்கி மலையைவிட்டு இறங்கி நாணனும் பின்னே வர வேறு எந்த எண்ணமும் மனத்துள் இல்லாமல் சுவாமி நினைவோடே பொன்முகலி ஆற்றில் இறங்கி நீந்திக் கடந்து மறுகரை ஏறி அங்குள்ள சோலைகளிடையே புகுந்து சென்றார். அப்போது நெருப்பு கடைந்து வைப்பதற்காக தங்கிவிட்டிருந்த காடன் ஓடிவந்து "ஐயனே! நெருப்புக் கடைந்து வைத்திருக்கிறேன், பன்றியின் இறைச்சியை வாட்டி வைத்திருக்கிறேன். தாங்கள் இத்தனை நேரம் எங்கு சென்றிருந்தீர்கள், கால தாமதம் ஏன்?" என்று வினவினான்.

அதற்கு திண்ணன் பதில் சொல்லவில்லை, நண்பன் நாணன் பதில் சொல்கிறான். "இவர் மலையிலே இருக்கும் குடுமித் தேவரைக் கண்டு அவர்பால் அன்பு மிக அவரைத் தழுவிக் கொண்டு உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டு நின்றார். இப்போதும்கூட அவர் உண்பதற்காக நல்ல இறைச்சியைத் தேடித்தான் வந்திருக்கிறார். நமது குலத் தொழிலையும், நட்பு சுற்றம் அனைத்தையும் விட்டுவிட்டு அந்த சுவாமி ஒன்றே கதி என்று மாறிவிட்டார்" என்கிறான் நாணன்.

உடனே காடன் சொல்லுகிறான், "திண்ணனாரே! உங்களுக்கு என்ன பைத்தியமா? என்ன இப்படி காரியம் செய்தீர்கள்?" என்றான். அவன் கேள்வியையோ, அவனையோ கவனிக்காமல் திண்ணன் தன் காரியத்திலேயே கண்ணாக அந்த பன்றியின் மாமிசத்தை நன்கு நெருப்பில் வாட்டி எடுத்து அதனைப் பல துண்டங்களாக நறுக்கி அம்புகளின் நுனியில் கோர்த்து, மீண்டும் நெருப்பில் பதமாக வேக வைத்து, வாயிலிட்டு மென்று சுவை பார்த்து அவை சுவையான இறைச்சிதான் என்று நிச்சயப் படுத்திக் கொண்டு அவற்றை ஒரு இலையால் ஆன தொன்னையிலிட்டு, மிச்சம் மீதியை எல்லாம் புறத்திலே எறிந்தார்.

இவற்றையெல்லாம் கண்ட காடனும், நாணனும் "இவருக்குப் பைத்தியம் தான் பிடித்திருக்கிறது. இல்லாவிட்டால் இப்படியெல்லாம் நடந்து கொள்வாரா? கிடைத்தற்கரிய பன்றி இறைச்சியை பல்லால் நசுக்கிச் சுவை பார்த்து பெரும்பகுதியை புறம் தள்ளிவிட்டு, தானும் உண்ணாமல், மீதமுள்ளவற்றை ஒரு தொன்னையில் போட்டு வைத்துக் கொண்டு இவர் என்னதான் செய்கிறார்?" என்று வியந்து பார்த்தனர். இவர் வேண்டாமென்று தூர எறிந்ததை எங்களிடமாவது கொடுத்திருக்கலாமல்லவா? அதுவும் இல்லை. இவருக்குத் தெய்வப் பைத்தியம் பிடித்திருக்கிறது. இந்த பைத்தியத்தை எப்படித் தெளிவிப்பது? தெரியவில்லையே. இவரை தேவராட்டியிடம் அழைத்துக் கொண்டு போய்க் காட்டி இவர் பைத்தியத்தைத் தீர்க்க வேண்டுமென தீர்மானித்துக் கொண்டார்கள். இப்படி எண்ணிக் கொண்டு அவ்விருவரும் திண்ணனைக் காட்டில் தனியே விட்டுவிட்டு அவர்கள் மட்டும் சுற்றி நிற்கும் காவலர்களையும் அழைத்துக் கொண்டு நாட்டுக்குத் திரும்பினர்.

அவர்கள் கிளம்பிப் போய்விட்டதை அறியாத திண்ணன் தன் காரியத்திலேயே குறியாக இருந்தார். தொன்னையில் சேகரித்திருந்த மாமிசத்தை எடுத்துக் கொண்டு பொன்முகலி ஆற்றில் இறங்கி அவரை நீராட்ட தண்ணீரை மொண்டு செல்ல பாத்திரம் எதுவும் இல்லாத நிலையில் வாய் நிறைய நீரை மொண்டு கொண்டு, வழி நெடுக பூத்திருந்த நல்ல மணமுள்ள மலர்களைக் கொய்து கொண்டு, தோளில் வில்லையும் அம்பையும் மாட்டிக் கொண்டு, ஐயோ, நேரமாகி விட்டதே, அங்கு ஐயன் சுவாமி என்ன செய்கிறாரோ? பசியால் துடிக்கிறாரோ" என்று மனம் பதைபதைத்து ஓடிப் போய் குஞ்சுக்கு இரை தேடிக் கொண்டு வரும் பார்ப்புப் பறவை போல திண்ணன், அவர் மீது படிந்து கிடந்த இலைகள், பூக்கள் இவற்றைத் தன் காலால் ஒதுக்கித் தள்ளிவிட்டு, வாயிலிருந்த திருமஞ்சன நீரை அவர் மேல் பொழிந்து, தன்னுடைய தலைக் கொண்டையில் சேர்த்து வைத்திருந்த மலர்களை எடுத்து அவர் மீது தூவி, தொன்னையிலிருந்த மாமிசத்தை அவர் முன் வைத்து அமுது செய்தருள வேண்டுமென்று கெஞ்சினான். அவர் வாய் திறக்காதது கண்டு திண்ணன் சொல்கிறான், ஐயனே! இவை அனைத்தும் நன்கு தேர்ந்தெடுத்த நல்ல இறைச்சி, அம்பிலே கோர்த்து, தீயிலே வாட்டி பதமாகக் கொண்டு வந்திருக்கிறேன். தாங்கள் திருவமுது செய்தருள வேண்டும்" என்றான். இந்த நிகழ்வுகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கும் வேளையிலேயே பொழுது சாய்ந்து சூரியனும் மலைவாயில் விழுந்தான்.

இரவு கவிந்தது. இந்த இரவு நேரத்தில் காட்டு மிருகங்கள் வந்து சுவாமிக்கு இடையூறு செய்திடா வண்ணம் திண்ணன், கையில் வில்லையும் அம்பையும் வைத்துக் கொண்டு விடிய விடிய காவல் இருந்தான். 

மறுநாள், பொழுதும் விடிந்தது. வெளிச்சம் பரவி சூரியன் வெளிவந்தான். அந்த சுவாமிக்கு மீண்டும் இறைச்சி தேடி பதப்படுத்தி கொண்டு வருவதற்காகத் திண்ணன் காட்டினுள் மலைச்சாரலுக்குப் போனான். திண்ணன் அப்படிச் சென்ற பிறகு அந்த காளத்திநாதருக்குத் தினசரி பூஜை செய்யும் சிவகோசரியார் எனும் சிவாச்சாரியார் அங்கு வருகிறார். உதயத்தில் எழுந்து பொன்முகலியாற்றில் மூழ்கி ஸ்நானம் செய்து, திருமஞ்சனத்துக்கு நீரும், வில்வமும், மலர்களும் எடுத்து வந்து ருத்ர மந்திரம் ஜபித்துக் கொண்டு வந்து சேர்ந்தார். காளத்திநாதரின் சந்நிதியில் ஆங்காங்கே இறைச்சி இறைந்து கிடந்ததைக் கண்டார். பயந்து நடுநடுங்கிப் போனார். என்ன இது அபச்சாரம், யார் இப்படி செய்தது? ஐயனே, காளத்தியப்பா, தங்கள் சந்நிதியில் இப்படி நடந்ததா? என்ன இது. இங்கு வர அச்சமில்லாத வேடர்கள்தான் இப்படி செய்திருக்க வேண்டும். அவர்கள் இப்படி செய்ய இறைவா நீர் எங்ஙனம் பொறுத்துக் கொண்டீர் என்று கதறி, பதறி புலம்பத் தொடங்கினார்.

பொழுது போய்க் கொண்டிருக்கிறது. காலை நேர பூஜைகள் செய்யும் நேரம் நெருங்கிவிட்டது. இனியும் தாமதிக்கக்கூடாது என்று மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு அங்கு கிடந்த மாமிச எச்சங்களையும், எலும்பு முதலானவற்றையும் அகற்றி சுத்தப்படுத்தினார். பின்னர் பொன்முகலியாற்றுக்குச் சென்று மறுபடியும் நீராடிவிட்டு வேத மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு, கையில் கொணர்ந்திருந்த நீரினால் அந்த இடத்தைப் புனிதப் படுத்தினார். பின்னர் தான் கொண்டு வந்திருந்த குடத்து நீரினால் அபிஷேகம் செய்வித்தார். மலர்களையும், வில்வ தளங்களையும் கொண்டு அர்ச்சனை செய்தார். நின்று கும்பிட்டு வணங்கி, ஆறு அங்கங்கள் தரையில் பட விழுந்து பணிந்து எழுந்தார். அவர் கண்களிலிருந்து தாரைதாரையாகக் கண்ணீர் வழிந்தது. மனம் அன்பினால் உருகியது. தீயிலிட்ட மெழுகு போல அவர் மனம் உருகி நாத்தடுமாற சாமவேதத்தை இனிமையாக இசைத்துக் கொண்டு பலமுறை காளத்திநாதனை வலம் வந்தார். பின்னர் பிரிய மனமின்றி பிரிந்து சென்றார்.

இனி திண்ணனைச் சற்று பார்ப்போம். காலையில் குடுமித்தேவருக்கு திருவமுது செய்வதற்கு மாமிசம் தேடிக் கொண்டு மலையடிவாரம் சென்ற திண்ணன் அங்கு ஏராளமாக இருந்த பன்றி, மான் வகைகள் என்று பல மிருகங்களை வேட்டையாடி அவற்றின் இறைச்சிகளை முன்போல பக்குவப்படுத்தி, தேக்கு மர இலையால் ஆன தொன்னையில் அவற்றை எடுத்துக் கொண்டு, நெடுமரத்தில் கட்டியிருந்த தேன்கூட்டிலிருந்த நல்ல தேனை வடித்தெடுத்து அதை மாமிசத்தோடு கலந்து, வாயில் திருமஞ்சன நீரையும், தன் கொண்டையில் மலர்களையும் தாங்கிக் கொண்டு வந்து சுவாமியிடம் வந்தார். சுவாமியிடம் அன்போடு, சுவாமி நான் இன்று கொண்டு வந்திருக்கும் இறைச்சி சுவையானது, தேர்ந்தெடுத்து நானே சுவைத்துப் பார்த்து, தேன் கலந்து கொணர்ந்திருக்கிறேன், தாங்கள் திருவமுது செய்தருள்வீர் என்று இறைஞ்சி நின்றார்.

இதற்கிடையே திண்ணனுடன் வந்த தோழர்கள் திரும்பிச் சென்று அவருடைய தந்தையான நாகனிடம் நடந்தவற்றைச் சொல்லியபின் அவர் தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு மலை ஏறி திண்ணன் இருக்குமிடம் வந்து சேர்ந்தனர். அவர்கள் தங்களுடன் திண்ணனை மனம் மாற்றி வசம் செய்ய ஒரு தேவராட்டியையும் அழைத்து வந்திருந்தனர். அவர்களுடைய எந்த முயற்சியும் திண்ணனாரை மாற்ற முடியவில்லை. இப்படி எல்லா முயற்சிகளும் வீணாவதைக் கண்டு பெற்றோர்கள் கவலை அடைந்தனர்.

நாட்கள் நகர்ந்தன. இதே நடைமுறை தினமும் நடந்தேறியது. பகலில் திண்ணன் வேட்டையாடி இறைச்சி தேடி கொண்டு வருவதும், காலையில் சிவகோசரியார் வந்து சுத்தம் செய்து பூஜை செய்து திரும்புவதுமாக நாட்கள் சென்றன. தினந்தோறும் இறைவன் மீது இறைச்சி இறைந்து கிடப்பது கண்டு சிவகோசரியாருக்கு மாளாத வருத்தம். இறைவனிடம் பணிந்து வேண்டினார். இதுபோல நடக்காமல் பார்த்துக் கொள்ளக்கூடாதா என்று இறைஞ்சினார். இப்படி ஐந்து நாட்கள் ஓடி மறைந்தன. 

ஐந்தாம் நாள் இரவு, சிவகோசரியாரின் ஆழ்ந்த உறக்கத்தில் ஒரு கனவு, அதில் சிவபெருமான் தோன்றி, "அன்பனே! உன் மனவருத்தம் எனக்குப் புரிகிறது. என் மீது இப்படி செய்யும் அந்த வேடனைப் பற்றி சொல்கிறேன், கேள். அவன் உடல் முழுவதும் என்பால் அன்பு மிகுந்து காண்கிறது. அவன் எண்ணம் முழுதும் நம்மைப் பற்றிய எண்ணங்களே. அவன் செய்கைகள் அனைத்தும் நம்பால் கொண்ட அன்பினால் விளைந்த செய்கைகளே. நீ என் மீது சாற்றிய மலர்களை விட அவன் என் மீது எடுத்து வைக்கும் பாதரட்சையின் தீண்டல், இளையோன் முருகக் கடவுளின் இனிய மென்மையான பாதங்களைப் போல் எனக்கு ஆனந்தத்தைத் தருகிறது. அவன் வாயில் கொண்டு வந்து என் மீது சொரிகின்ற நீர் கங்கை முதலான புண்ணிய தீர்த்தங்களைவிட புனிதமானது. அவன் தன் தலை முடியில் சொருகிக் கொண்டு வந்து சாத்தும் மலர்கள் அவன் இதய கமலத்தையே என் மீது சாத்துவது போலத் தெரிகிறது. மற்ற தேவாதி தேவர்கள் நமக்குச் சாத்தும் மலர்களினும் அவை புனிதமானது. அவன் வாயால் சுவைத்து தேர்ந்தெடுத்துக் கொண்டு வந்து படைக்கும் இறைச்சி, வேள்வியில் தரும் அவிர்பாகம் போல இருக்கிறது. அவனது களங்கமற்ற அன்பு, நம்மையன்றி வேறு எதிலும் ஈடுபடாத அவனது கவனம், மா முனிவர்கள் செய்யும் தவத்திலும் மேம்பட்டது. நீ நாளைக்கு வந்து நம் பின்புறம் மறைந்து நின்று பார், அப்போது உனக்கும் தெரியும் அவனது அன்பு, பக்தி எத்தகையது என்பதை" என்று திருவாய் மலர்ந்தருளினார் சிவபெருமான்.

கனவு நீங்கி விழித்தெழுந்த சிவகோசரியாருக்கு வியப்பு. வேட்டுவ குலத்தில் பிறந்த இவனுக்கு எப்படி இப்படியொரு பக்தி, பேரன்பு. மகா ரிஷிகளிலும் மேம்பட்டதான அவனது பக்தி வழிபாட்டை நான் புரிந்து கொள்ளாமல் வருந்தினேனே. இறைவன் இட்ட கட்டளைப் படி மறுநாள் காலை பொன்முகலியாற்றில் நீராடி வழக்கம்போல் நீர் மொண்டு, வில்வம், மலர் கொய்து காளத்தியப்பன் சந்நிதியை அடைந்தார்.

இவர் வந்து சேரும் முன்னே திண்ணன் எழுந்து வேட்டையாடப் போய்விட்டார். விரைவில் அவர் அனைத்தையும் சேகரித்துக் கொண்டு வந்து சேர்ந்தார். அவர் திரும்பி வரும் வழியில் பல அபசகுனங்கள் தெரிந்தன. இது என்ன, இப்படி துர்ச்சகுனங்கள் ஏற்படுகின்றனவே, என் சுவாமிக்கு என்ன துன்பம் நேர்ந்ததோ தெரியவில்லையே. மனம் கலங்கியபடி அதிசீக்கிரமாக வந்து சேர்ந்தார் திண்ணன். இவருடைய அன்பினை, தன்னுடைய சிலைக்குப் பின்புறம் மறைந்திருக்கும் சிவகோசரியாருக்குக் காட்ட திருவுள்ளம் கொண்டார் இறைவன். திண்ணன் ஓடிவந்து குடும்த்தேவரின் எதிரில் நின்ற மாத்திரத்தில் இறைவனுடைய வலது கண்ணிலிருந்து குருதி வழியத் தொடங்கியது. இதனைக் கண்டு திண்ணன் திடுக்கிட்டு, வருந்தி ஓடிவந்து அருகில் வந்து கவனித்தார்.

இறைவன் வலது கண்ணிலிருந்து குருதி வழிவதைக் கண்டு அவர் கையிலிருந்து இறைச்சி நிறைந்த தொன்னை கீழே விழுந்தது. வாயிலிருந்த திருமஞ்சன நீர் கொப்புளித்து வெளியேறியது. தலையில் அணிந்திருந்த மலர்கள் சரிந்தன. அலறிப் புடைத்து கொண்டு, ஐயனே, என்ன இது, ஏன் இப்படி நேர்ந்தது என்று திண்ணன் புலம்பியபடி அவர் கண்களில் வழிந்த ரத்தத்தைத் துடைத்து விட்டார். அது நிற்பதாகத் தெரியவில்லை. துடைக்கத் துடைக்க மீண்டும் வழிந்து கொண்டிருந்தது. என்ன செய்வது, பெருமூச்செறிந்து மனம் செயலிழந்து பட்டமரம் போல கீழே விழுந்தார்.

பின்னர் ஒருவாறு மனம் தெளிந்து யார் இந்தக் கொடுமையைச் செய்தது? எப்படி இது நேர்ந்தது? என்று கேட்டுக் கொண்டே எழுந்தார். சுற்றுமுற்றும் பார்த்தார். எப்படி இந்த ரத்தம் வழிவதை நிறுத்துவது? இதற்கு என்ன மருந்து தெரியவில்லையே என்று புலம்பினார். வேடர்கள் ரத்தக் காயம் பட்டால் இடும் பச்சிலைகளைக் கொண்டுவந்தார், அவற்றைக் கசக்கிப் பிழிந்து இறைவன் கண்களில் வார்த்தார். அப்படியும் குருதி நின்றபட்டில்லை. ஆவி சோர, இனி என் செய்வேன் என்று வருந்தி நிற்கும்போது அவர் மனதில் ஒன்று தோன்றியது. ஊனுக்கு ஊன் கொடுத்தால் குருதி நிற்குமோ? என் கண்ணை அம்பினாலே தோண்டி எடுத்து இவர் கண்ணில் வைத்து அப்பினால் குருதி நின்றுபோகுமோ? இந்த எண்ணம் தோன்றிய அடுத்த கணம் அவர் தன் வலது கண்ணை அம்பினால் தோண்டி எடுத்து இறைவன் கண்ணில் வைத்து அப்ப அங்கு இரத்தம் தடைபட்டு நின்றது. திண்ணன் மகிழ்ச்சியில் குதித்தார், கைகளைத் தட்டி ஆர்ப்பரித்தார், கூத்தாடினார், நல்ல காரியம் செய்தேன், நன்று நன்று என்று ஆனந்தத்தில் உன்மத்தனாக ஆனார்.

இப்படி அவர் மகிழ்ந்து ஆடுகின்ற தருணத்தில் சிவகோசரியார் இவருடைய அன்பை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக காளத்தியப்பன் தன்னுடைய இடது கண்ணிலிருந்து இரத்தம் வரும்படி செய்தார். இதென்ன, மறு கண்ணிலும் குருதி வழிகிறதே. கரை காணாத துன்பக் கடலில் என்னை ஆழ்த்துகிறதே. நாந்தான் இதற்கொரு மருந்து கண்டுபிடித்து விட்டேனே. இனியும் ஒரு கண் எனக்கு இருக்கிறதே, இதைத் தோண்டி எடுத்து வைத்துவிட்டால், அந்தக் கண்ணில் வரும் இரத்தமும் நின்று விடுமே என்று மனம் தெளிந்தார். முதல் கண்ணைத் தோண்டியபோது, சுவாமியின் கண் இருக்குமிடம் தெரிந்தது. இப்போது இரண்டாவது கண்ணை எடுக்கும்போது சுவாமியின் கண் இருக்குமிடம் தெரியாதே என்ன செய்வது? ஒரு வழி புலப்பட்டுவிட்டது. காலணி அணிந்த தன் காலால் அவரது கண்ணை அடையாளம் காணும்பொருட்டு அவர் கண் மீது செருப்புக் காலை வைத்து நம் கண்ணை எடுத்து அப்பி விட்டால் போகிறது. அதன்படி தன்னுடைய இரண்டாவது கண்ணையும் தோண்டி எடுக்கும்பொருட்டு அம்பை எடுத்து கண்ணில் வைக்கவும், இறைவன் குரல் கொடுத்தார், "நில்லு கண்ணப்ப!" என்று. திண்ணனை கண்ணப்ப என்று இறைவன் அழைத்ததோடு, அவர் கரத்தைப் பிடித்து நிறுத்தவும் செய்தார்.

வானிலிருந்து பிரம்மாதி தேவர்கல் பூமாரி பொழிந்தார்கள். சிவகோசரியாரும் கண்ணப்பன் எனும் திண்ணனுடைய பெருமையை உணர்ந்து கொண்டார். அனைவரும் சுவாமியை பக்தியோடு வணங்கினார்கள். அப்போது திண்ணன் கையைப் பிடித்திருந்த சிவபெருமானாகிய காளத்தியப்பர் "குற்றமற்ற பக்தியுடைய அன்பு கண்ணப்ப! நீ எப்போதும் என் வலப்புறமே இரு!" என்று திருவருள் செய்தார். கலைமலி சீர்நம்பி கண்ணப்பர்க்கும் அடியேன் என்று சுந்தரமூர்த்தி நாயனார், திருத்தொண்டர் திருத்தொகையில் சொல்லிய சொல் மறக்க முடியுமா? கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு செய்ய வல்லேன் அல்லேன் என்று மாணிக்கவாசகர் சொல்லும் விதம் தன் பக்தியினால், அன்பினால், பலன் எதையும் எதிர்பாராத புனிதமான அன்பை பக்தியை என்னவென்று சொல்ல? வாழ்க கங்கைக் கரை வேடனும், காளத்தி வேடனும்.

No comments: