பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, March 30, 2020

சுதந்திரப் போரில் திருச்சியின் பங்கு.


                                                     
            தமிழகத்தில் காவிரியும் அதன் உபநதிகளும் பாய்ந்து வளம் பெருக்கும் மாவட்டம் திருச்சிராப்பள்ளி. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம். இதிலிருந்து  பின்னாளில் கரூர், பெரம்பலூர், அரியலூர் என்று பல மாவட்டங்களாகப் பிரியவும் செய்தது.1918ஆம் ஆண்டில் திருச்சி ஜில்லா முதல் அரசியல் மாநாடு இங்கே இரண்டு நாட்கள் நடைபெற்றது. முயற்சி எடுத்து நடத்தியவர் டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன். இதற்கு ராஜாஜி, ஈ.வே.ராமசாமி நாயக்கர், டாக்டர் வரதராஜுலு நாயுடு, திரு வி.க. போன்றவர்களை அழைத்துப் பேச வைத்தார்.

திருச்சிராப்பள்ளியில் 1919லேயே அன்னிபெசண்ட் தொடங்கிய ஹோம்ரூல் இயக்கம் தீவிரமாக நடைபெற்றது. அதில் எஃப்.ஜி.நடேசய்யர், சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஆர்.நாராயண ஐயங்கார், தேசியக் கல்லூரி மாணவன் சதாசிவம், எம்.எஸ்.ராஜா ஆகியோர் இந்த கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டார்கள். இவர்கள் மாணவர்கள் கன்வென்ஷன் ஒன்றையும் இங்கே நடத்தி அதற்கு அருண்டேல், டாக்டர் வரதராஜுலு நாயுடு ஆகியோரை அழைத்து வந்தனர்.

பெரம்பலூர் தாலுகா எசனை எனும் ஊரில் மாவட்ட மாநாடு ஒன்றையும் நடத்தினர். அதில் வடக்கே பர்தோலி சத்தியாக்கிரகம் போல இங்கேயும் வரிகொடா இயக்கம் நடத்துவது என்று தீர்மானித்தார்கள். ஆனால் அது நடைபெறவில்லை.

ஒத்துழையாமை இயக்கம் இம்மாவட்டத்தில் தீவிரமாக நடத்தப்பட்டது. இதில் டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன், வ.வெ.சு.ஐயர், டாக்டர் சாஸ்திரி ஆகியோர். இங்கு கல்லூரி முன்பு மறியல், கள்ளுக்கடை முன்பு மறியல் இவைகளெல்லாம் நடந்தன. மாணவர்கள் அரசியல் இயக்கங்களில் ஈடுபடுவதானால் அவர்கள் தங்கள் கல்லூரிகளை விட்டு வெளியேற வேண்டும், வக்கீல்கள் தங்கள் தொழிலை விட்டுவிட வேண்டும் என்று காங்கிரஸ் விடுத்த கோரிக்கையை ஏற்று கல்லூரியை விட்டு வெளியேறியவர்கள் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி, மணக்கால் சதாசிவம், காங்கிரஸ் அலுவலக நிர்வாகியாக இருந்த ஆர்.கிருஷ்ணசாமி, தஞ்சை தியாகராஜன், புதுக்கோட்டை எஸ்.வெங்கட்ராமன், முகமது உஸ்மான், சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசிய மூவண்ணக் கொடியை ஏற்றி சாகசம் புரிந்த சேரங்குளம் பாஷ்யம் (ஆர்யா) ஆகியோர்.

வக்கீல் தொழிலை விட்டு வெளிவந்தவர்கள் என்.ஹாலாஸ்யம் ஐயர், ரா.நாராயண ஐயங்கார், டி.வி.பாலகிருஷ்ண சாஸ்திரி ஆகியோர்.

திருச்சி தேசிய கல்லூரியின் முன்பு ஒரு மறியல் நடந்தது. பொதுவாக கல்லூரி நிர்வாகம் மறியல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள், காவல் துறையின் உதவியோடு அவர்களை அங்கிருந்து அகற்ற முற்படுவார்கள், அல்லவா? ஆனால் திருச்சி தேசியக் கல்லூரியில் என்ன நடந்தது தெரியுமா? கல்லூரி முதல்வர் தொண்டர்களையெல்லாம் அழைத்து, கெளரவித்து, அனைவருக்கும் குடிக்க பானங்கள் வழங்கி அன்போடு அனுப்பி வைத்தார். இயக்கத்துக்கு அவர் கொடுத்த மறைமுகமான ஆதரவு இது. இந்த தேசியக் கல்லூரியில் படித்த பலர் பிற்காலத்தில் போற்றத் தகுந்த தேசபக்தர்களாக விளங்கினர். அவர்களில் மதுரையைச் சேர்ந்த டாக்டர் பிச்ச-முத்தம்மாள் என்பவரும் ஒருவர்.

திருச்சியில் நடந்த கள்ளுக்கடை மறியலில் கலந்து கொண்டு டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன், டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி, வி.பாலசுப்ரமணியம், சி.டி.கோபாலன், சோடாக்கடை மகமது உசேன், அமீத்கான் சாஹிப், அப்துல் வகாப் ஆகியோர் சிறை சென்றனர். அரசாங்கப் பணியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ப.சங்கிலியா பிள்ளையும், வடிவேல் ஆசாரியும் சர்வே இலாகா விலிருந்து ராஜிநாமா செய்துவிட்டு வெளியேறினர். 1922இல் தடையை மீறி கூட்டங்களில் பேசியதற்காக மாயவரம் எஸ்.ராமநாதன், செயின்ட் ஜோசப் கல்லூரியை விட்டு வெளியேறிய இக்னேஷியஸ் ஆகியோர் கைதாகினர்.

1922ஆம் ஆண்டில் ஜில்லா காங்கிரஸ் கமிட்டிக்கு டாக்டர் டிஎஸ்.எஸ்.ராஜன் தலைவர். அதன் அலுவலகம் இரட்டைமால் வீதியில் லட்சுமிநாராயண ஐயர் என்பார் வீட்டில் இயங்கியது. அப்போது திருச்சிதான் காங்கிரசின் தலைமையகம். 1923ஆம் ஆண்டில் அலுவலகம் சின்னக் கடைத் தெருவில் ஆர்.சீனிவாசய்யர் என்பாருக்குச் சொந்தமான வீட்டின் கீழ் தளத்துக்கு மாற்றப்பட்டது. அப்போது மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவர் டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு. ராஜாஜி, ஈ.வே.ரா., டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் ஆகியோர் துணைத் தலைவர்கள்.

திருச்சி தோல் கிடங்கு அதிபர் ந.மு.கா.ஜாமியான் ராவுத்தர் பொருளாளர். பின்னாளில் டெல்லியில் அமைச்சராக இருந்த கே.சந்தானம், எஸ்.ராமநாதன், ஈரோடு தங்கபெருமாள் பிள்ளை, கே.சுப்ரமணியம் ஆகியோர் செயலாளர்கள். அலுவலக நிர்வாகி எஸ்.வெங்கட்ராமன்.

(இங்கு ஒரு செய்தியை நான் சொல்ல விரும்புகிறேன். இந்த வரலாற்றைப் பல ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய வலைப்பூவான www.tamilnaduthyagigal.blogspot.in என்ற தளத்தில் எழுதியிருந்தேன். அதை படித்துவிட்டு அந்த நிர்வாகி எஸ்.வெங்கட்ராமன் அவர்களின் புதல்வி அது தன்னுடைய தந்தையென்றும், அந்த அம்மையார் அமெரிக்காவில் இருப்பதாகவும், மகள் பெங்களூரில் இருப்பதாகவும்,  இந்த தியாகிகள் வரலாற்றில் தன் தந்தையைப் பறியும் எழுத வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பிறகு அவரைப் பற்றிய விவரங்களைச் சேர்த்து அவர் பெயரையும் தியாகிகள் பட்டியலில் சேர்த்தேன்.)

இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சென்னை நகருக்கு மாற்றினார்கள். டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு கைதான பின் துணைத் தலைவரான ஈ.வே.ராமசாமி நாயக்கர் அலுவலகத்தை ஈரோட்டிற்கு மாற்றினார். அப்போது மானேஜராக இருந்த எஸ்.வெங்கட்ராமனும் ஈரோடு செல்ல நேர்ந்தது.

1927இல் அகில இந்திய காங்கிரஸ் சென்னையில் நடைபெற்றது. எஸ்.சீனிவாச ஐயங்கார் மாநாட்டை சிறப்பாக நடத்திக் கொடுத்தார். இவர் அட்வகேட் ஜெனராலகவும் ஆனார். காங்கிரசின் தலைவராக இவர் தேர்ந்தெடுத்த பின் காங்கிரஸ் அலுவலகம் திருச்சியில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்டது. கிராமங்களுக்கெல்லாம் சென்று காங்கிரஸ் பிரச்சாரம் செய்ய பலர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். 

1919இல் மார்ச் 30ஆம் தேதி மகாத்மா காந்தி திருச்சிக்கு முதன் முதலாக விஜயம் செய்தார். அவருடன் அலி சகோதரர்கள் என அழைக்கப்பட்ட மகமது அலி, ஷவுக்கத் அலி ஆகியோரும் வந்தனர்.  திருச்சியில் ஒரு பொதுக்கூட்டத்தில் இவர்கள் பேசினார்கள். 1927இல் இரண்டாவது முறையாக காந்தி திருச்சிக்கு கதர் தொழில் குறித்து விஜயம் செய்தார். லால்குடியில் அப்போது ஒரு பொதுக்கூட்டம், அதில் பூவாளூர் பொன்னம்பலனார் என்பவர் ஏற்பாடுகளைச் செய்தார்.

1933இல் காந்தி ஹரிஜன நிதி வசூலுக்காக திருச்சிக்கு வருகை புரிந்தார். அப்போதும் சில கூட்டங்களில் பேசினார். ஒரு நாள் ஸ்ரீரங்கம் உயர்நிலைப் பள்ளி மைதானத்திலும் பேசினார். கடைசியாக 1946இல் மதுரையில் ஆலய பிரவேசம் மதுரை வைத்தியநாத ஐயர் தலைமையிலும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உதவியாலும் சிறப்பாக முடிந்த நிலையில் மீனாட்சியம்மனைத் தரிசிக்க சென்னையிலிருந்து ரயில் மூலம் மதுரைக்குப் போனபோது ஒரு முறை திருச்சிக்கு வந்தார். ரயிலில் இருந்தபடி அவர் பல ஊர்களில் உரையாற்றினார்.




           


1 comment:

தமிழ் மொழி said...

அருமையான வரலாறு செய்தி