பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, March 2, 2020

திருக்கண்டியூர்


                                                         திருக்கண்டியூர்                                            (அட்டவீரட்டானத் தலம்)
    ஈசன், படைப்பின் முதல்வன் தானே என்று அகந்தையுற்றிருந்த பிரமனின் தலையைத் துண்டித்த திருத்தலம் இங்குள்ள திருக்கண்டியூர் பிரமசிரக்கண்டீசுவரர் கோயில் ஆகும். தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் திருவையாறுக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது.இதன் வேறு பெயர் ஆதிவில்வாரண்யம் ஆகும்.
கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
தலையத் தடிந்திட்டுத் தானங்கியிட்டு
நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்
தலையைப் பரிந்திட்டு சந்தி செய்தானே(திருமந்திரம் 340)
மூலவரின் பெயர்:பிரமசிர கண்டீஸ்வரர்.இந்த தலத்துக்கு ஸ்ரீகாலபைரவரை தரிசிக்க வேண்டுமென்ற வேட்கையோடு சென்று வழிபட்டால் மறுபிறவியில்லை.
      திருக்கண்டியூர் பிரமசிரக்கண்டீசுவரர் கோயில் சம்பந்தர்அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு வட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் தம் சூலத்தால் பிரமன் சிரத்தைக் கண்டனம் செய்த தலமென்பது நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில்அமைந்துள்ள 12வது சிவத்தலமாகும்.
தல வரலாறு
      பிரமன் சிரத்தைத் (ஐந்தனுள் ஒன்றை) தம் சூலத்தால் கண்டனம் செய்த (கொய்த) காரணத்தால் கண்டனபுரம் - கண்டியூர் எனப் பெயர் பெற்றது. பிரமன் சிரம்கொய்த பின், அவன் வேண்டிட ஐம்முகங்களின் அழகினை சதுர் முகங்களில் (நான்கு முகங்களில்) இறைவன் அருளிச் செய்ய, பிரமன் பெற்றுப் பேறடைந்தான் என்பது வரலாறு.
     சாதாதாப முனிவர் பிரதோஷத்தில் காளத்தி சென்று தரிசனம் செய்து வந்தார்; ஒருமுறை கண்டியூர் வந்தபோது, காளத்திக்கு, நேரத்தில் செல்ல முடியாமற்போயிற்று. அப்போது இறைவன் அம்முனிவருக்கு காளத்தி தரிசனத்தை இத்தலத்திலேயே காட்டியருளினார் என்பது வரலாறு.
தல சிறப்புக்கள்
·         அட்டவீரட்டத் தலங்களுள்ளும், சப்தஸ்தானத் தலங்களுள்ளும் ஒன்றாகத் இத்தலம் விளங்குகிறது.
·         "சாதாதாப" முனிவருக்காக இறைவனால் வில்வமரம் கயிலையிலிருந்து கொண்டு வரப்பட்டதால் இத்தலத்திற்கு 'ஆதிவில்வாரண்யம் ' என்றும் பெயர்.
·         பிரமகத்தி தோஷம் நீங்கும் தலமாகவும் சொல்லப்படுகிறது.
·         சூரியன் வழிபட்டதலமாதலின், மாசிமாதம் 13, 14, 15-ஆம் நாள்களில் மாலையில் 5 . 45 மணிமுதல் 6 . 10 மணிவரை சூரிய ஒளி சுவாமிமீது படுகிறது.
·         சப்த(ஏழு)ஸ்தானத் திருவிழாவில் (ஏழூர்திருவிழா) சுவாமி இங்கு வந்து இறங்கி, சற்று இளைப்பாறி செல்லும். சிலாத முனிவருக்கு, சாதாதாப முனிவர் தமையனாராதலின், இளைப்பாறிச் செல்லும்போது மூத்தமாமனார் என்ற வகையில் கட்டிச் சோறு கட்டித் தரும் ஐதீகமாக அன்று (தயிர்சாதம், புளியோதரை) - கட்டித்தந்து சுவாமியுடன் அனுப்புவது மரபாக இருந்து வருகின்றது.
·         நவக்கிரக சந்நிதியில் சூரியன் இரு மனைவியருடன் காட்சித் தருகிறார்.
·         மூலவர் சுயம்பு மூர்த்தி; பாணம் சற்று உயரமாக உள்ளது.
·         பூ, ஜபமாலை ஏந்தி, இருகைகளாலும் இறைவனை பிரார்த்திக்கும் அமைப்பில் உள்ள பிரம்மாவின் இவ்வுருவம் அழகுடையது.
·         இத் தலத்தில் பிரமனுக்கு தனிக் கோயில் உள்ளது.பிரமனின் சிரம் கொய்வதற்காக இறைவன் கொண்ட வடுகக் கோலம்; பிரமன் சந்நிதிக்குச் செல்லும் வாயிலில் கதவோரமாக சிறிய சிலா ரூபமாகவுள்ளது.
·         கல்வெட்டில், இப்பெருமான், "திருவீரட்டானத்து மகாதேவர்", "திருக்கண்டியூர் உடைய மகாதேவர்" எனக் குறிக்கப்படுகிறார்.
திருவையாறு சப்தஸ்தானம்
     திருவையாறு சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் திருவையாறுதிருப்பழனம்திருச்சோற்றுத்துறைதிருவேதிகுடி, திருக்கண்டியூர்திருப்பூந்துருத்திமற்றும் திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடைபெறும்.
திருத்தலப் பாடல்கள்
இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:
திருஞானசம்பந்தர் பாடிய பதிகம்
வினவினேன் அறி யாமையில்லுரை செய்ம்மினீரருள் வேண்டுவீர்
கனைவிலார் புனற் காவிரிக்கரை மேய கண்டியூர் வீரட்டன்
தனமுனேதனக் கின்மையோதம ராயினாரண்ட மாளத்தான்
வனனில் வாழ்க்கை கொண் டாடிப் பாடியிவ் வையமாப்பலி தேர்ந்ததே
அடியராயினீர் சொல்லுமின்னறி கின்றிலேன்அரன் செய்கையைப்
படியெலாந்தொழு தேத்து கண்டியூர் வீரட்டத்துறை பான்மையான்
முடிவுமாய் முத லாயிவ் வைய முழுதுமாயழ காயதோர்
பொடியதார்திரு மார்பினிற்புரி நூலும் பூண்டெழு பொற்பதே..
திருநாவுக்கரசர் பாடிய பதிகம்
வானவர் தானவர் வைகல் மலர்கொணர்ந் திட்டிறைஞ்சித்
தானவர் மால்பிர மன்னறி யாத தகைமையினான்
ஆனவ னாதிபு ராணனன் றோடிய பன்றியெய்த
கானவ னைக்கண்டி யூரண்ட வாணர் தொழுகின்றதே
முடியின்முற் றாததொன் றில்லையெல் லாமுடன் தானுடையான்
கொடியுமுற் றவ்விடை யேறியோர் கூற்றொரு பாலுடையான்
கடியமுற் றவ்வினை நோய்களை வான்கண்டி யூரிருந்தான்
அடியுமுற் றார்தொண்டர் இல்லைகண் டீரண்ட வானவரே..
மூலவர்:
பிரமசிரக் கண்டீஸ்வரர், வீரட்டேஸ்வரர், பிரமநாதர், ஆதிவில்வவனநாதர்.

                   திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில்.
  தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறுஅருகே அமைந்த திருக்கண்டியூர் கிராமத்தில் அமைந்த இப்பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் 7ஆவது இடத்தில் உள்ளதுதிருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இக்கோயிலின் மூலவர் பெயர் ஹர சாப விமோசனர். தாயார் பெயர் கமலவல்லி. ஐந்து நிலைகள் கொண்ட கோபுரத்துடன் கூடிய இக்கோயில், கி பி எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோயிலுக்கு விஜய நகரப் பேரரசர்களும் மதுரை நாயக்கர்களும் திருப்பணி செய்தனர்.

பெயர்க் காரணம்

பிரம்மனின் ஐந்து தலைகளுள் ஒன்றைக் கொய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோசம் நீங்கஹரன் திருக்கண்டியூரில் உள்ள கமல தீர்த்தத்தில் நீராடி, திருக்கண்டியூர் பெருமாளை தரிசனம் செய்தார். இதனால் ஹரனுக்குப் பிரம்மஹத்தி சாப விமோசனம் பெற்றதால், இத்தலத்திற்கு ஹர சாப விமோசனப் பெருமாள் பெயராயிற்றுபிரம்மாசிவன் மற்றும் மகாபலி சக்கரவர்த்திக்குக் காட்சி அளித்தவர் ஹர சாப விமோசனப் பெருமாள்.

பூஜைகளும் விழாக்களும்

இக்கோயில் மூலவருக்கு நாள்தோறும் ஆறு கால பூஜைகள் நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.

அமைவிடம்

தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் வழியில் வடக்கே சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது. தஞ்சையிலிருந்தும், திருவையாற்றிலிருந்தும் பேருந்து வசதிகள் உண்டு.


1 comment:

சிகரம் பாரதி said...

அருமை. அட்ட வீரட்டானத் தலம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக எட்டு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது திருக்கண்டியூர் (அட்டவீரட்டானத் தலம்) பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்