பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, February 15, 2020

நாம் மாற வேண்டும்... மாறித்தான் ஆக வேண்டும்!


     பேராசிரியர் கே.காசிம்ஐ.பி.எஸ்., (ஓய்வு)சிந்தனையாளர்மதுரை94430 52721
                                “தினமலர்” 18 ஆகஸ்ட் 2018 இல் வெளிவந்தது.
                            நாம் மாற வேண்டும்... மாறித்தான் ஆக வேண்டும்!

இன்றைக்கு இவ்வுலகத்தின் ஜனத்தொகை 760 கோடி; இந்தியாவின் ஜனத்தொகை 125கோடி; தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7.21 கோடி. அதில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என பல மதத்தினர் வாழ்கின்றனர். நம் நாட்டில் பல மாநிலங்களிலும் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் சண்டையும், சச்சரவும் நடந்து கொண்டிருக்கின்றன. அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு கட்சிகளிடையே கைகலப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் வளர்த்து வந்த ஜாதியும், மதமும் கையிலிருந்து நழுவி கீழே விழுந்து தெறித்த கண்ணாடி போல் ஆகிவிட்டது. முகம் பார்க்க முடியவில்லை. இதற்கெல்லாம் காரணங்கள் என்ன என்று நம் எல்லோருக்கும் தெரியாமல் இல்லை. வானத்திலும், பூமியிலும் இருப்பவை யெல்லாம் இறைவனுக்கே சொந்தம் என்பதை மறந்து விட்டோம். நம்முடைய கண்களுக்கு தெரியாத, தொடமுடியாத, எரிக்க முடியாத, வெட்ட முடியாத, நனைக்க முடியாத எல்லையற்ற பேரானந்தத்தை மறந்து விட்டோம்.

தர்மம் காக்க
          தர்மத்தை காக்கவும் அதர்மத்தை அழிக்கவும் ஒவ்வொரு யுகத்திலும் எல்லாம் வல்ல இறைவன் ஏதோ ஒரு ரூபத்தில் பூலோகத்தில் அவதரித்து அல்லவை போக்கி நல்லவை நிலை நாட்டி நம்மில் மறைந்து நிற்கின்ற, எல்லையற்ற பேரானந்தத்தையும், சொர்க்க இன்பத்தையும் கொடுத்துக் கொண்டு இருக்கிறான் என்பதை நாம் மறந்துவிட்டோம். பகவத்கீதையை முழுமையாகப் படிப்பதும் இல்லை. புரிந்து கொள்வதும் இல்லை. அதனை படித்து ஞானத்தை நோக்கிச் செல்வதற்கும், தன்னுள் கொண்டு வருவதற்கும் நமக்கு நேரம் இல்லை, அதுகுறித்து நினைப்பதும் இல்லை.''முற்புதர்களிலிருந்தும், முள்செடிகளி லிருந்தும்  திராட்சையையும், அத்திப்பழத்தையும் சேகரிக்க முடியாது'' என்கிறது புதிய ஏற்பாடு. ''வானத்திலும், பூமியிலும் இருப்பன எல்லாம் இறைவனுக்கே சொந்தம்” என்று திருக்குர்ஆனில் சொல்லியிருக்கிறது.
அரசியல் குழப்பங்கள்

          தமிழ் நாட்டில் சமீபகாலத்தில் நடந்துக் கொண்டிருக்கின்ற அரசியல் குழப்பங்கள் ஏராளம்! ஜாதியை முன்வைத்து, சமயத்தை முன்வைத்து அரசியல் நடத்துகிறார்கள். அரசியல் என்ன என்று புரியாதவர்கள்,படிப்பு வாசனையற்ற வர்கள், ஒரு காசு கூட வரிகட்டாதவர்கள், அரசியலுக்குள் நுழைந்து, வந்ததும் வராததுமாக அரசின் சொத்துக்களை அபகரிப்பதிலேயே முழுநேரத்தையும் செலவழிக்கின்றனர். நாட்டின் நலத்தையும் முன்னேற்றத்தையும் பற்றி கொஞ்சம் கூடக் கவலை கொள்வதில்லை. அதிகாரிகளும் தங்களுக்கு ஏற்றவாறு கைவரிசை காட்டுகிறார்கள். கேவலமாக இருக்கிறது. பாண்டிய,சேர,சோழ மன்னர்கள் கோலோச்சிய நாடுகள் அல்லவா இது ! நமது கலை, கலாசாரங்களை மறந்துவிட்டோம்.வெட்கமாகவும், வேதனையாகவும் இருக்கிறது. தமிழகம் எங்கே போகிறது! எப்படி போகிறது ! என்னவாகுமோ என்று நாட்டின் நலத்திலேயே நாட்டம் கொண்டவர்கள் விழிக்கின்றனர்.

பிரெஞ்சு புரட்சி
          இக்கட்டுரையை எழுதுகின்ற நான் ஒரு அரசியல் வரலாறு படித்த பேராசிரியன்,பல நாடுகளுக்குச்சென்று வந்தவன். என் கண்களுக்கு தெரிகின்ற காட்சிகளில் பிரெஞ்சு புரட்சியே முன் நிற்கிறது. நல்ல காலமும் இதுதான்; கெட்ட காலமும் இதுதான்! நம்பிக்கை நிறைந்த காலமும் இதுதான்; நம்பிக்கையற்ற காலமும் இதுதான்! எல்லாம் முன்னே சென்று கொண்டிருக்கின்றது. அதே நேரத்தில் எல்லாம் பின்னே வந்து கொண்டிருக்கின்றது. ''நாட்டைச் சுற்றியுள்ள காடுகள் காய்ந்து கருகி நிற்கின்றன.ஒரு தீப்பொறி போதும் காட்டுத் தீப் பற்றி, காடுகளும் சுற்றியிருக்கும் நாடுகளும் அழிந்து போக” என்று நாவலாசிரியர் சார்லஸ் டிக்கன்ஸ் 'பிரெஞ்சு புரட்சி' என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். இது தான் 1789ல் பிரான்ஸ் நாட்டின் நிலை. எதிர்பார்த்த தீப்பொறி பற்றிக் கொண்டு நாடு நகரங்களை அழிக்க வல்லதாயிற்று. பிரான்ஸ் நாட்டைக் கடைசியாக ஆண்டு வந்த போர்பன் மன்னர் 16வது லுாயியும்,அவர்தம் ஆங்கில பின்னணிப் பெற்ற ராணி (மனைவி) மேரி அண்டாய்நட்டும் செய்த அக்கிரமங்கள் பல. அவற்றில் குறிப்பாக 1789ஜூலையில் ஒரு சனிக்கிழமை மன்னரும், ராணியும் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் தலைநகர் பாரிஸ் மாநகரத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலம் வந்தனர். எங்கும் மக்கள் கூட்டம். 'பசியால், பட்டினியால் துடிக்கிறோம். சாப்பிடுவதற்கு ரொட்டித்துண்டு கூட இல்லை. நாங்கள் என்ன செய்வது' என்று மக்கள் கூச்சலிட்டனர். அரசன் லுாயி எழுந்து பதில் சொல்ல ஆரம்பிக்கும் போது, ராணி அரசனை பேசவிடாது, முந்திக் கொண்டு மக்களைப் பார்த்து 'ரொட்டி இல்லை என்றால் வெண்ணைய்யை சாப்பிடுங்கள்' என்று திமிராக சொன்னார். ராணி இவ்வாறு சொன்னதும் மக்கள் பொறுமை இழந்தனர். புரட்சி வெடித்தது, மக்கள் மன்னரையும், ராணியையும் வீதி வீதியாக விரட்டினர். கடைசியில் அவர்கள் பிடிபட்டனர். வலியில்லாமல் கொல்லுவதற்கு என்று கண்டுபிடிக்கப்பட்ட 'கில்லட்டின்' என்ற ஆயுதத்திற்கு இரையாகினர். இந்த அகங்காரம் பிடித்த ராணியைக் கார்லைல் என்ற நாவலாசிரியர் 'ஜீவ சாஸ்திரத்தின் தவறு' (Biological error) என்றும், அரசனை 'இயற்கையின் பிழை' (Mistake of nature) என்றும் வர்ணித்துஉள்ளார். இயற்கையின் பிழையும், ஜீவசாஸ்திரத்தின் தவறும் சேர்ந்து பிரெஞ்சு, ஏன் ஐரோப்பா கண்டத்தையே நசுக்கி நாசமாக்கிவிட்டது. உலகமே ஸ்தம்பித்துவிட்டது! சமூகமும், அரசியலும் அடியோடு மாறியது. சமூகம் மறுமுகம் பெற்றது.

அமெரிக்காவில்
       ஐரோப்பாவில் நடந்த பிரெஞ்சு புரட்சி, ஏனைய நாடுகளில் எதிரொலித்தது! அதே ஆண்டு (1789) அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் புது அரசியல் அமைப்பு ஒன்றை பிரகடனம் செய்தார். இந்த அரசியல் அமைப்பில் 7 ஷரத்துகளும், 26 திருத்தங்களும் மட்டுமே இது வரைக்கும் நடந்துஉள்ளது. ஆரம்பித்த நாளில் இருந்து இன்று வரை அதாவது 329 ஆண்டுகளில் இந்த மாற்றங்கள் மட்டுமே நடந்தேறியிருக்கின்றன. இந்திய அரசியல் அமைப்பின் (சுக்லா எழுதியது) எடை1.5 கிலோ; ஆனால் அமெரிக்க அமைப்பின் (சட்டப்படி வெளியிடப்பட்ட) அரசியல் சாசனத்தின் எடை 0.60 கிராம். இதற்கு காரணம், சுருங்கச் சொல்லி விளக்கம் கொடுக்கின்ற ஆற்றல், அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகளுடைய மன நிலையை பொறுத்தது என்பர். நமது அரசியல் அமைப்பில் இதுவரைக்கும் 368 ஷரத்துகளும், 101 திருத்தங்களும் நடந்தேறி யிருக்கிறது. ஆகவேதான், அமெரிக்கா அப்படியிருக்கிறது! இந்தியா இப்படி யிருக்கிறது!  பதினெட்டாம் நுாற்றாண்டு கவிஞன் வோர்ட்ஸ்வொர்த் கூறுகிறார்... 'பழமை புதுமைக்கு இடம் விட்டுவிட வேண்டும்; ஆண்டவன் தன் விருப்பங்களை எத்தனையோ வழிகளில் பூர்த்தி செய்து கொள்கின்றான். ஒரு கலாசாரம் நல்லவையாக இருந்த போதும்,காலத்தால் அது துருப்பிடிக்காமல் இருக்க நல்லவை, கெட்டவையாக மாறாமல் இருக்க ஆண்டவன் தன் விருப்பங்களை எத்தனையோ வழிகளில் பூர்த்தி செய்து கொள்கிறான் 'நீதியும் நேர்மையும் இணைந்த சமுதாயம் உருவாக வேண்டும். ஊழலற்ற நிர்வாகம் வேண்டும். ஜாதியும், மதமும் மோதாத சமூகம் வேண்டும். நாம் மாறவேண்டும்; மாறித்தான் ஆகவேண்டும்.-  

    பேராசிரியர் கே.காசிம்ஐ.பி.எஸ்., (ஓய்வு)சிந்தனையாளர்மதுரை94430 52721



1 comment:

சிகரம் பாரதி said...

சிறப்பு. நல்ல தொகுப்பு. பிரெஞ்சு புரட்சி குறித்தும் சமகாலத்தில் அமெரிக்காவில் நடந்த மாற்றங்கள் குறித்தும் அறிந்தது சுவாரசியமாக இருந்தது.

நமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

https://newsigaram.blogspot.com/