பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, August 13, 2015

சுதந்திரத் திருநாள் வாழ்த்து! 15/8/2015

 பாரதி இலக்கியப் பயிலகத்தின் சார்பில் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.

வாழ்க சுதந்திரம்!                        வாழ்க நிரந்தரம்!                       வாழிய வாழியவே!!          
                                                      

இந்திய நாட்டின் சுதந்திரம் பற்றிப் பாடிய கவிஞர் பாரதியார். தூங்கிக் கிடந்த பாரத மக்களைத் தம் உணர்ச்சிகரமான பாடல்களால், தட்டி எழுப்பியவ‌ர் பாரதி. நாட்டின் ஒற்றுமை, அதனால் ஏற்படும் பலன், விடுதலை பெற வேண்டியதன் தேவை ஆகியவற்றையும் பாரதி பாடினார். அத்துடன், இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னரே தீர்க்க தரிசனமாக

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்

என்று விடுதலை பெற்றுவிட்டதாக ஆனந்தக் கூத்தாடினார் அமரகவி பாரதியார்.

இந்தியா, ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் அடைய வேண்டும் என்பது பாரதியாரின் தணியாத ஆசை. அதற்காக, இந்திய மக்களை எந்த வகையில் எல்லாம் விழிப்புணர்ச்சி அடையச் செய்ய வேண்டுமோ, அந்த வகையில் எல்லாம் உணர்ச்சிகரமான பல சுதந்திர இயக்கப் பாடல் களைப் பாடினார்.

வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்
     வேறொன்று கொள்வாரோ? - என்றும்
ஆரமுது உண்ணுதற்கு ஆசைகொண்டார் கள்ளில்
     அறிவைச் செலுத்து வாரோ?

கிடைப்பதற்கு அரிய அமுதத்தை உண்ண விரும்புவோருக்கு அறிவை மங்கச் செய்யும் கள்ளைக் கொடுத்தால் உண்பார்களா? சுதந்திர வேட்கை உடைய இந்தியர்கள், சுதந்திரத்தைத் தவிர, வேறு எதையும் ஏற்க‌ மாட்டார்கள் என்பதை மிகவும் தெளிவாகத் தெரிவிக்கிறார். விடுதலை வேட்கை எனும் இந்தப் பயிரைத் தண்ணீர விட்டு வளர்க்கவில்லை; தியாகிகளின் கண்ணீர விட்டு வளர்த்தோம்.

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம்

விடுதலையைப் பற்றிய தாகம் என்றைக்கும் தணியாது. சுதந்திர தாகம் என்றைக்கு அடங்கும்? என்றைக்கு என் பாரதத் தாய் அடிமை விலங்குகளைத் தகர்த்து எறிந்து விடுதலை பெறுவாள்?  

என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?
      என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
ஏழை என்றும் அடிமை என்றும்
      எவனும் இல்லை ஜாதியில்
இழிவு கொண்ட மனிதர் என்பது
      இந்தியாவில் இல்லையே!

மாதர் தம்மை இழிவு செய்யும்
      மடமை யைக்கொ ளுத்துவோம்


இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், இவையெல்லாம் நடைபெறவேண்டும் என்று விரும்பினார். சுதந்திரம் அடைந்து விட்டோம். அது சாதாரண சுதந்திரம் அல்ல. மகிழ்ச்சி தரும் ஆனந்த சுதந்திரம். அதை அடைந்து விட்டோம். எனவே, ஆடுவோம், பள்ளுப் பாடுவோம்.


No comments: