பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, August 23, 2013

"தாயே யசோதே! உந்தன்"

இந்தப் பாடலை நீங்கள் பலரும் பாடக் கேட்டிருக்கலாம், அவை முழுமையாக அமைந்தவை அல்ல. முழுப் பாடலையும் இதோ படியுங்கள்!

                       "தாயே யசோதே! உந்தன்"

ராகம்: தோடி                                                                                           தாளம்: ஆதி

                                                            பல்லவி

தாயே யசோதே! உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி (தாயே)

                                                         அனுபல்லவி

தையலே! கேளடி உந்தன் பையனைப் போலவே - இந்த
வையகத்தில் ஒரு பிள்ளை ஐய்யய்ய! நான் கண்டதில்லை (தாயே)

                                                           சரணங்கள்

காலினில் சிலம்பு கொஞ்சக் கைவளை குலுங்க - முத்து
மாலைகள் அசையத் தெரு வாசலில் வந்தான்!
காலசைவும், கையசைவும், தாளமோடிசந்து வர
நீலவண்ணக் கண்ணன் இவன் நர்த்தனமாடுகிறான்!
பாலன் என்று தாவி அணைத்தேன், அணைத்த என்னை
மாலை இட்டவன் போல் வாயில் முத்தம் இட்டாண்டீ!
பாலன் அல்லடி உன் மகன், ஜாலமாகச் செய்வதெல்லாம்
நாலு பேர்கள் கேட்கச் சொன்னால் நாணமிக ஆகுதடீ! (தாயே) 1.

அன்றொரு நாள் இந்த வழி வந்த விருந்திருவரும்
அயர்ந்து படுத்துறங்கும் போதினிலே - கண்ணன்
தின்றது போகக் கையில் இருந்த வெண்ணையை - அந்த
விருந்தினர் வாயில் நிறைத்து மறைந்தனனே!
நிந்தை மிகு பழியிங்கே பாவம் எங்கே என்றபடி
சிந்தை மிக நொந்திடவும் செய்யத் தகுமோ?
நந்த கோபற்கு இந்த விதம் அந்தமிகு பிள்ளைபெற
நல்ல தவம் செய்தாரடி, நாங்கள் என்ன செய்வோமடி (தாயே) 2.

எங்கள் மனை வாழவந்த நங்கையைத் தன்னம் தனியாய்
துங்க யுமுனா நதிப் போகையிலே - கண்ணன்
சங்கையும் இல்லாதபடி, பங்கயக் கண்ணால் மயக்கி
எங்கெங்கோ அழைத்துச் சென்று நிசி வந்தான்
உங்கள் மகன் நான் என்றான், சொல்லி நின்றபின்
தங்கு தடையின்றி வெண்ணைத் தாரும் என்றான்
இங்கிவனைக் கண்டு இள நங்கையரைப் பெற்றவர்கள்
ஏங்கி எண்ணித் தவிக்கின்றார்! நாங்கள் என்ன செய்வோமடீ (தாயே) 3.

தொட்டிலிலே பிள்ளை கிள்ளி விட்டதும் அவை அலற
விட்ட காரியம் அகல வெண்ணை தின்றான்!
கட்டின கன்றை அவிழ்த்து எட்டியும் ஒளித்துவிட்டு
மட்டிலாத் தும்பை கழுத்தில் மாட்டிக் கொண்டான்!
விட்டுவிட்டு "அம்மே" என்றான் கன்றினைப் போல்
அட்டியில்லாத மாடும் "அம்மா" என்றதே!
கிட்டின குவளையோடும் எட்டினால் 'உன் செல்வமகன்'
பட்டியில் கறவையிடம் பாலை ஊட்டுறானடீ (தாயே) 4.

சுற்றி சுற்றி என்னை வந்து, அத்தை வீட்டு வழிகேட்டான்
சித்தத்துக் கெட்டும் வரையில் சொல்லி நின்றேன்
அத்துடன் விட்டானோ பாரும் ஆத்தங்கரை வழிகேட்டான்
அத்தனையும் சொல்லிவிட்டு நின்றேன்
வித்தகமாய் ஒன்று கேட்டான் நாணமாகுதே!
முத்தத்துக்கு வழிகேட்டு சத்தமிட்டாண்டீ
அத்தனை இடம் கொடுத்து, மெத்தவும் வளர்த்து விட்டாய்!
இத்தனை அவனைச் சொல்லக் குத்தமில்லையேயடீ (தாயே) 5.

வெண்ணை வெண்ணை தாருமென்றான், வெண்ணை தந்தால் தின்றுவிட்டு
பெண்ணைத் தாரும், என்று கண்ணடிக்கிறான்
வண்ணமாய் நிருத்தமாடி, மண்ணினைப் பதத்தால் ஏற்றிக்
கண்ணிலே இறைத்துவிட்டுக் களவாடினான்
பண்ணிசையும் குழலூதினான்! - கேட்டு நின்ற
பண்பிலே அருகில் வந்து, வம்புகள் செய்தான்!
பெண்ணினத்துக்கென்று வந்த புண்ணியங்கள் கோடி கோடி
எண்ணி உனக்காகுமடி, கண்ணியமாய்ப் போகுதடீ (தாயே) 6.

முந்தாநாள் அந்தி நேரத்தில் சொந்தமுடன் கிட்டே வந்து
வித்தைகள் பலவும் செய்து விளையாடினான்
பந்தளவாகிலும் வெண்ணை, தந்தால் விடுவேனென்று
முந்துகிலைத் தொட்டிழுத்துப் போராடினான்
அந்த வாஸுதேவன் இவன்தான், அடி யசோதா!
மைந்தன் எனத் தொட்டிழுத்து மடிமேல் வைத்தேன், வைத்தால்
சுந்தர முகத்தைக் கண்டு, சிந்தையும் மயங்கு நேரம்
அந்தர வைகுந்தமோடு, எல்லாம் காட்டினானடி (தாயே) 7.







3 comments:

துரை செல்வராஜூ said...

கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு வழங்கும் பதிவு அருமை!.. ஆனாலும் இந்தப் பாடலை இயற்றியவர் யார் என்று சொல்லவில்லையே!..

Thanjavooraan said...

பாபநாசத்தை அடுத்த ஊத்துக்காடு எனும் கிராமத்தில் வாழ்ந்த வேங்கடசுப்பையர் என்பார் இயற்றிய நூற்றுக்கணக்கான பாடல்களில் இதுவும் ஒன்று. அந்த ஊத்துக்காடு கிராமத்தில் கிருஷ்ணருக்கு ஒரு கோயில் உண்டு. அதில் அவர் சிலாவுருவம் காளிங்கன் தலையில் நின்று ஆடும் பாலகிருஷ்ணனின் உருவம் அமைந்தது. அதில் ஒரு அதிசயம் என்னவென்றால் அந்த காளிங்கன் தலைக்கும் மேலே அவன் வாலைப் பிடித்துக் கொண்டு ஆடும் கிருஷ்ணனின் காலுக்கும் இடையே மெல்லிய இடைவெளி இருக்கும். அப்படியொரு அதிசயமான சிற்பம். ஊத்துக்காடு வேங்கடகவி எனப் புகழ்ந்து பேசப்படும் இவருடைய வாரிசில் வந்தவர் நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் என்பார். இவர் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக வேங்கடகவியின் பாடல்களைக் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இப்போது அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியர் ஊத்துக்காடு பாடல்களைப் பாடி நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். பல தொலைக்காட்சிகளில் இவர்கள் நிகழ்ச்சி நடந்திருக்கின்றன. ஊத்துக்காடு பாடல்கள் அனைத்தும் அவ்வூர் கிருஷ்ணன் பேரில் அமைந்தவை. அவருடைய "காளிங்க மர்த்தனம்" எனும் நீண்ட நெடிய பாடல் சொற்கட்டுகளோடு அமைந்தது. அதை தற்போது திருமதி அருணா சாய்ராம் அவர்கள் சிறப்பாக கச்சேரிகளில் பாடி வருகிறார்கள். ஊத்துக்காடு வேங்கடகவியின் பாடல்களை ஒருமுறையாவது நாம் படிக்கவோ, கேட்கவோ வேண்டும்.

துரை செல்வராஜூ said...

இந்தப் பாடலும் ஸ்ரீ வேங்கட சுப்பையர் இயற்றியது என அறிந்து மகிழ்ந்தேன். நன்றி!.. விரிவாக விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி !..