பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, August 13, 2013

ஒளி பிறக்குமா?


இந்த ஆண்டு சுதந்திர தின சிந்தனைகள் இதோ. இதே பதிவை 2010ஆம் ஆண்டில் எனது வலைப்பூவில் வெளியிட்டிருக்கிறேன். இன்றைய தேவைக்காக இதில் நிறைவில் சில கருத்துக்களைத் தந்திருக்கிறேன். விடியலை நோக்கி நாம் தவமிருப்போம். நல்ல பலன் கிடைக்கும்.

பாரத தேசத்துக்கு ஒளி பிறக்குமா?

1. சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் அரசியல் அமைப்பு உருவாகி 61 ஆண்டுகள்
சுதந்திரத்துக்கு முன்பிருந்த இந்தியாவும் இன்றைய இந்தியாவுக்குமுள்ள மாற்றங்களை
உணர வேண்டும். அது முதியவர்களுக்குத்தான் அதாவது 70க்கும் மேலானவர்களே உணர்வர்.

2. சிலருக்கு எதிர்மறைப் போக்கும் தோல்வி மனப்பான்மையும்தான் வாழ்க்கை.
எதனையும் நேரடியாக ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள். ”என்னத்தே கன்னையா” போல.
அது பெசிமிசம். அத்தகையோர் எழுதியது 'இரவில் பெற்றோம் சுதந்திரம் விடியவேயில்லை'
என்பது. இது தோல்வி குணம். இத்தகையோரால் நாடு முன்னேறாது.

3. நாட்டில் எங்கும் லஞ்சம், ஊழல். அடிமட்டத்தில் நிலவிய இந்த நச்சுப்பழக்கம்
இன்று எல்லா மட்டங்களிலும் இருக்கிறது. 'ஜனநாயகத்தில்' மக்களே உயர்ந்தவர்கள்,
அரசில் பணிபுரிவோர் வேலைக்காரர்களே. அவர்கள் வேலைக்கேற்ப கூலி பெறுகிறார்கள்.
எனில் அவர்களுக்கு ஏன் கையூட்டு?

4. அரசாங்கம் பலதரத்து மக்களுக்கு பல சலுகைகளை அறிவிக்கிறது. அந்தச் சலுகைகளைப்
பெற அவர்களுக்குப் பல சான்றிதழ்கள் தேவை. அவற்றைப் பெற கையூட்டு. இது என்ன நியாயம்? இத்தகைய ஊழல் பெருச்சாளிகள் ஓடி ஒளிந்து கொள்ளும் இடம் அரசியல் புள்ளிகளின் பின்னால்.

5. ஊழலுக்கு என்ன காரணம்? முதலில் தேசபக்தி இன்மை. இந்த தேசத்தின் சுதந்திரத்தின் விலையை மக்கள் உணராத தன்மை. நமக்கு ஏன் வம்பு என்று கண்டும் காணாமல் போகும் அலட்சியப் போக்கு. இதனால் நஷ்டமடைவது மக்களே!

6. உலக நாடுகளில் நடைபெற்ற புரட்சிகள் எவை? ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில்தான் சுதந்திரப் போர். இங்கெல்லாம் ஒரே மாதிரி போராட்டம் இல்லை. இந்தியாதான் உலகத்துக்கு வழிகாட்டி. இங்குதான் அகிம்சை முறையில் மகாத்மா காந்தி வழிகாட்டிப் போராட்டம் நடந்தது. மற்ற நாடுகளில் தென்னாப்பிரிக்கா தவிர மற்ற இடங்களில் வன்முறை தான்.

7. இங்கெல்லாம் மக்கள் ஒருசேர எழுச்சியுற்று போராடினர். உயிர்ப் பலி ஏராளமாக இருந்தது. ரஷ்யப் புரட்சியில் Tsar மன்னனின் கொடுங்கோலை எதிர்த்து லெனின் தலைமையில் ரத்தப் புரட்சி. பிரான்சில் மன்னனின் கொடுங்கோலை எதிர்த்து மக்கள் புரட்சி. ஆனால் இந்தியாவில் மட்டும்தான் அகிம்சைப் புரட்சி. ஓரளவு தென்னாப்பிரிக்காவில்.

8. இந்தியாவில்: மகாத்மா காந்தி இந்தோனேஷியாவில்: சுகர்ணோ; பர்மாவில்: யு நு
கீன்யாவில்: ஜோமோ கென்யாட்டா தெ.ஆப்பிரிக்காவில்: நெல்சன் மண்டேலா

9. இந்திய சுதந்திரப் போரை நடத்தியது காங்கிரஸ். தலைமை வகித்தது மகாத்மா காந்தி.
கடைபிடித்த வழி: அஹிம்சை. அறவழி பிறழ்ந்ததால் போராட்டம் வாபஸ் பெற்றார்
காந்தி. ஆகையால் போரில் ஈடுபட்டவர் காந்தி அடிகளின் சீடர்களே. அவரது தொண்டர்களே. மக்களுக்கு ஒட்டுமொத்த பங்கு இல்லை.

10. இந்த காரணத்தால் ஒவ்வொரு ஊரிலும் ஒரு சிலர் மட்டுமே போராட்டம் செய்தனர்.
மற்றவர்கள் அவர்களை காந்தி கட்சி என்றும், வந்தேமாதரம் கட்சி என்றும் தூர இருந்து
பார்த்து நின்றனர். நேரடி பங்கு இல்லை. எனவே சுதந்திரம் பெற்றதில் சிலர் தியாகம்
செய்ய, பலர் பலனை மட்டும் அனுபவித்தனர்.

11. சுதந்திரத்தின் விலை என்ன? தெரியாது. தெரிந்த தியாகிகளின் காலம் முடிந்து விட்டது.
இன்றைய தலைமுறையினருக்கு சுதந்திரப் போர் பற்றி சொல்லத் தொடங்கினால், 'bore' என்று விலகிவிடுவர். நம் சுதந்திரத்தின் விலை தெரியாத மக்கள் தேசபக்தி கொள்ள வாய்ப்பில்லை. தேசபக்தியை ஊட்டுவது தேசபக்தர்கள் கடமை.

12. 150 ஆண்டுகள் இந்தியர்கள் இருளில் இருந்தனர். 1858 சிப்பாய் கலகம் வட இந்திய சிப்பாய்கள் செய்தது. வெள்ளையர் விழித்துக் கொண்டனர். இந்தியர்களுக்கும் ஏதாவது நிர்வாகத்தில் பங்கு கொடுத்தால்தான் மறுபடி ஒரு கலகம் வராமல் தடுக்க முடியும் என்று நினைத்தனர். லார்டு மெக்காலே கல்வித் திட்டமும், வெள்ளையர்க்கு சேவை செய்ய இந்தியர்க்கு வாய்ப்பும் தரப்பட்டது.

13. 1885ல் காங்கிரஸ் மகாசபை ஒரு ஆங்கிலேயரால் ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்பவரால் தொடங்கப் பட்டது. தொடர்ந்து வெள்ளைக்காரர்கள் தலைவர். இங்கிலாந்து மன்னருக்கு பல்லாண்டு பாடித்தான் காங்கிரஸ் மகாநாடுகள் தொடங்கும். மரியாதையுடன் ஆங்கில ஆட்சியாளர்களிடம் வேண்டுகோள்கள் வைக்கப்படும்.

14. 1906க்குப் பிறகு திலகரின் காலத்தில்தான் இந்தப் போக்கு மாறத் தொடங்கியது. அவர் சுதந்திரம் எனது பிறப்புரிமை என்றார். பிறகு கராச்சி காங்கிரஸ் மகாநாட்டில் ஜவஹர்லால் நேரு பூரண சுயராஜ்யம் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

15. இவ்வளவையும் மக்கள் வேடிக்கைப் பார்த்தார்கள். எங்கும் நேரடியாக மக்கள் இறங்கி வெகுஜன இயக்கமாக நடத்தவில்லை. 1942 மட்டும் ஒரு மாறுதல். காரணம் வழிநடத்த தலைவர்கள் வெளியில் இல்லை. இதில் மக்கள் நேரடியாக இறங்கினர். அரசு பணிந்து வந்தது.

16. இன்று நம் மக்களுக்குத் தேவை தேசபக்தி. ஊழலற்ற நிர்வாகம், நேர்மையான அரசு அதிகாரிகள். இந்த குறிக்கோளோடு தேசபக்தி கொண்டவர்கள் இணைந்து செயல்படுதல் அவசியம். இந்த நாட்டை தேசபக்தி ஒன்றுதான் காக்க முடியும்.

17. அப்படியொரு நிலைமை வரக்கூடாது என்றுதான் சில சக்திகள் முயற்சி செய்யும். அப்போதுதான் தங்கள் தேட்டையை தொடரமுடியும் என்பதால். மக்கள் - சாதியால், மதத்தால், மற்ற பல ஏற்றத் தாழ்வுகளால் பிளவுபடாமல் ஒன்றுபட்டு இந்த நாட்டைக் காப்போம். அப்படியொரு சபதத்தை சுதந்திர நாளில் ஏற்போம்.

18. கண்ணீரும் செந்நீரும் சிந்திப் பெற்றது நமது சுதந்திரம். இதற்காக உடல் பொருள்
ஆவி அனைத்தையும் சர்வபரித்தியாகம் செய்த தியாகச் செம்மல்காள் ஏராளம்! ஏராளம்!!
பாரதத் திருநாடு சுதந்திர நாடாக இந்தப் பூமியில் தலை நிமிர்ந்து நிற்கும்; சேதமில்லாத இந்துஸ்தானம் உலகுக்கெல்லாம் வழிகாட்டும், ஆம்! இந்தியா உலகுக்கு வழி காட்டும்
என்று எண்ணிய எண்ணங்கள் இன்று? தூள் தூளாயின, துவண்டு போயின.

19. எங்கும் ஊழல், எதிலும் ஊழல், பதவி கிடைத்திட பணம் கொடுத்து வாங்கி ஊழல், பின்னர் அந்தப் பதவியின் துணை கொண்டு ஊரையடித்து உலையிலிட்டு கோடி கோடியாய் சுருட்டி ஊழல்; ஒப்பந்த வேலையில் ஊழல், உழைத்தவனுக்கு ஊதியம் தருவதில் ஊழல், கட்டடம் கட்டுவதிலும் ஊழல், கட்டிய கட்டடம் கீழே விழுந்தாலும் அதற்கு நஷ்ட ஈடு வாங்குகின்ற ஊழல், எத்தனை கோடி துன்பம் வைத்தாய் இறைவா! இந்தத் துயர் நீங்க ஓர் வழியிலையோ இறைவா!!

20. வேலை கிடைத்திட ஊழைல், கிடைத்த வேலையில் குறுக்கு வழியில் பொருள் ஈட்டிட ஊழல், கிடைத்த பதவியில் மக்களுக்கு உதவி செய்வதில் ஊழல்; ஊழலில் கைதானோர் எண்ணிக்கை கோடிக் கணக்கில், கிராம அதிகாரி முதல், மிக உயர்ந்த இடத்தில் அமர்ந்திருக்கும் கோமான் வரை நம்மைச் சுற்றிலும் ஒரே ஊழல் மயம்! நாற்றமெடுக்கிறது பாரத தேசத்தின் புனிதமான பெயர், என்று மாறும் இந்த இழிநிலை விடியுமா பாமர இந்தியனுக்கு, விடியலுக்கு இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும்?

21. அன்று சுதந்திரத்துக்காக தன்னையே அழித்துக் கொண்ட தலைவர்கள் ஏராளம். பாலகங்காதர திலகர், கோபாலகிருஷ்ண கோகலே, விபின் சந்த்ரபால், லாலா லஜபதி ராய், மாவீரன் பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ், சந்திரசேகர ஆசாத், ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், வ.உ.சிதம்பரம், மகாகவி பாரதி, சுப்பிரமணிய சிவா, வ.வெ.சு.ஐயர், திருப்பூர் குமாரசாமி, மாடசாமி பிள்ளை, வாஞ்சிநாதன், ராஜகோபாலாச்சாரியார், காமராஜ், ம.பொ.சி. வடநாட்டில் இன்னும் எத்தனையோ தலைவர்கள், இப்படி பாரத தேசம் தந்த பல அரிய பெரிய தலைவர்கள் நம்மை இப்போதும் வழிநடத்த வேண்டும். முன்பு குண்டுசி வேண்டுமானால் கூட இங்கிலாந்தை எதிர்பார்க்க வேண்டும். இன்று மாபெரும் போர்க்கப்பல் கூட கொச்சியில் கட்டப்பட்டுவிட்டது.  இந்தியனின் இதயத் துடிப்பை உணர்ந்து கொள்ளும் ஆற்றல் படைத்த ஒரு இந்தியத் தலைவன் வரமாட்டானா? நம்மை வழிநடத்த மாட்டானா? மோசடி, ஊழல், அதர்மம் இவற்றை சம்ஹாரம் செய்ய மாட்டானா? என்று எங்கிக் கிடப்பவர்களுக்கு இந்த சுதந்திர தினம் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்க வேண்டுமென்று பாரதமாதாவை அடிபணிந்து வேண்டுவோம்! தலைவர்களுக்கா பஞ்சம். தியாகம், தைரியம், தேசப்பற்று, ஊழலைக் கண்டு கொதிக்கும் நெஞ்சு இவை கொண்ட ஒரு இந்தியத் தலைவன் நம்மை வழிநடத்த வராமலா போய்விடுவான்? வருவான். நிச்சயம் எதிர்கால பாரதம் பசுமை பாரதமாக விளங்கும். ஜெய் ஹிந்த். வாழ்க பாரத நாடு. வந்தேமாதரம்.


1 comment:

துரை செல்வராஜூ said...

ஒளி படைத்த கண்ணினாய் வா..வா..வா!..
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா.. வா..வா!..