பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, July 5, 2016

“காதம்பரி” வெங்கட்ராமன்

            
“காதம்பரி” எனும் புனைபெயரில் எழுதி வந்த இவரது இயற்பெயர் வெங்கட்ராமன்.

இவர் கருவூலத் துறையில் பல காலம் பணியாற்றி பணி நிறைவு பெற்றவர். இவர் சிதம்பரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய ஊர்களில் பணியாற்றியிருக்கிறார்.

இளமைக் காலத்தில் இவர் எழுத்திலும், படிப்பிலும் அதிகமாக கவனம் செலுத்தினார். ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளிலும் பேசவும், எழுதவும் நல்ல திறமை பெற்றவர்.

ஆங்கிலத்தில் SPRINGS என்ற பெயரிலும் BLOSSOM என்ற பெயரில் ஆங்கிலத்தில் கவிதைகள் மட்டுமே அடங்கிய பத்திரிகைகளை நடத்தி யிருக்கிறார். தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதைகளை இயற்றுவதில் வல்லவர்.

கோவையிலிருந்து மரபின் மைந்தன் முத்தையா நடத்தும் “ரசனை” இதழ்களில் இவருடைய கட்டுரைகள், பெரும்பாலும், தமிழ், ஆங்கில எழுத்தாளர்களையும், சிறப்பு வாய்ந்த நூல்கள் பற்றியும் எழுதியவை வெளியாகியது. மூன்று வருஷங்கள் தொடர்ந்து இவர் எழுதினார். அதனைத் தொகுத்து திரிசக்தி பதிப்பகம் அவற்றை நூல்களாக வெளியிட்டிருக்கிறார்கள்.

இவருக்கு பழம்பெரும் எழுத்தாளர்களையும், அவர்கள் வரலாறுகளும் நன்கு தெரியும். பலரோடு நல்ல பழக்கமும் இவருக்கு இருந்திருக்கிறது.
திரைப்படத் துறையில் தொடக்க காலத்தில் பெரும் புகழ் பெறாத நேரத்தில் இயக்குனர் ஸ்ரீதர், கே.பாலசந்தர் ஆகியோருடனும் கவிஞர் கண்ணதாசன் ஆகியோரிடம் இவருக்குப் பழக்கம் இருந்தது.
அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் ஸ்ரீதர் படமெடுக்கத் தொடங்கிய காலத்தில் தன் படமான “எதிர்பாராதது” படத்திற்காக, புதுமையான பாடல் வேண்டுமென்று அறிவிப்பு செய்தபோது இவர் ஒரு பாடலை எழுதி அனுப்பினார். அது அந்தப் படத்தில் வந்தது ஆனால் அதில் இவர் பெயர் இல்லை. எனினும் அந்தப் பாடலுக்கான பணத்தை மட்டும் இவருக்கு அனுப்பி விட்டார். அந்தப் பாடல் “சிற்பி செதுக்காத பொற்சிலையே” என்ற பெரும் புகழ் பெற்ற பாட்டு.

இவருடைய அனுபவங்கள் பெரும்பாலும் சிறுகதைகளுக்கான கரு அமைந்தவைகளாகவே இருக்கும். அப்படி இவரோடு பழகியவர்கள் இவர் சொல்லும் சொந்த அனுபவங்களைச் சிறுகதைகளாக ஆக்கி, வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கின்றனர்.

பெரும்பாலும் இவர் அதிகமாக யாருடனும் பழகவோ, பேசவோ மாட்டார். ஆனால் அவருடைய எழுத்துலக ஆர்வத்துக்கு ஈடுகொடுப்பவர்கள் யாராயினும் அவர்களோடு நெருங்கிப் பழகி, பல அனுபவங்களை எடுத்துச் சொல்வார்.


தஞ்சை ப்ரகாஷ் போன்ற நமது ஊர் எழுத்தாளர்களோடு இவருக்கு நல்ல தொடர்பு இருந்தது. சென்ற சில மாதங்களுக்கு முன்பு அவர் கீழே விழுந்து இடுப்பில் அடிபட்டதன் பலனாக நடக்க முடியாத நிலையில் இருந்தார். அன்பும் அடக்கமும் கொண்ட இந்த திறமைசாலி கடந்த மாதம் தஞ்சையில் அவர் இல்லத்தில் காலமானார்.

No comments: