பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, July 5, 2016

விலாசினி நாட்டியம் அல்லது சின்ன மேளம்.

          
விலாசினி நாட்டியம் என்றும் சின்ன மேளம் என்றும் வழங்கப்படும் நாட்டியப் பிரிவு தெலுங்கு மொழி பேசும் இப்போதைய ஆந்திர மாநிலப் பகுதிகளில் உருவானது.
தெலுங்கு மொழி பேசும் பகுதியில் விஜயநகர சாம்ராஜ்யம் தழைத்தோங்கியிருந்த காலத்தில் அங்கு அஷ்டதிக்கஜங்கள் என்று அமைச்சர்கள் இருந்ததும், அங்கு கலை, இலக்கியம், நடனம் போன்ற நளின கலைகள் சிறந்து விளங்கின என்பதையும் நாம் வரலாற்றிலிருந்து அறிகிறோம். அப்படி அங்கு நிலவிவந்த இரு நாட்டியப் பிரிவுகளில் ஒன்று ஆண்களுக்கான “புருஷ சம்ப்ரதாயம்”, மற்றொன்று பெண்களுக்கான “ஸ்த்ரீ சம்ப்ரதாயம்”.

ஆந்திரப் பிரதேச பழைய கல்வெட்டுகள், ஆவணங்கள், இலக்கிய ஆதாரங்கள் இவைகள் மூலமாக நமக்குத் தெரிய வருகின்ற செய்தி அங்கிருந்த ஆலயங்களில் பெண் பாடகர்களும், நாட்டியக் கலைஞர்களும் கலைப்பணியாற்றி வந்தமையும்; இவர்கள் அரசவைகளிலும், பொதுமக்கள் கூடும் அரங்கங்களிலும் பங்கேற்று வந்திருக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது. கி.பி.10ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் இவர்களுடைய பங்களிப்பு நமக்குக் கிடைக்கிறது.

இத்தகைய கலைஞர்கள் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டிருக்கின்றனர்; குறிப்பாக விலாசினி, ஸ்வாமினி, போகினி எனும் பெயர்கள் இவர்களுக்கு இருந்தது தெரியவருகிறது. இவர்கள் உள்ள குழுவினரை “சின்ன மேளம்” என்றும் “நட்டுவ மேளம்” என்று அழைத்தனர்.

சென்ற நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இவர்களைத் தெலுங்கு மொழியில் “கலாவந்துலு” என்று அழைத்தனர். இந்தப் பெயர் வரக் காரணமாக இருந்தது ஒரு பெண். அவர் இசை நடனக் கலையில் சிறந்து விளங்கிய கலாவதி எனும் பெண்மணி. 1946இல் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு ஆலயங்களில் தேவதாசிகளுக்கிருந்த நடனம், இசை வழிபாடுகளுக்கான உரிமைகள் பறிக்கப்பட்டன.  தொடர்ந்து “கலாவந்துலு” கலை களையிழக்கத் தொடங்கியது. விலாசினி, ஸ்வாமினி, போகினி ஆகியோரின் கலைப்பணிகள் பொதுமக்களிடமிருந்தும் சமூக அமைப்புகளிலிருந்தும் மெல்ல மறையத் தொடங்கின.

விலாசினி நடனம் என்பது கோயில்களில் நடைபெறும் பூஜா விதிகளைப் போல இசை நடனக் கலை மூலம் செய்யப்படும் வழிபாட்டு முறை. அது மெல்ல மறையத் தொடங்கிய போதும் ஆங்காங்கே ஒருசிலர் இதனைப் போற்றி பாதுகாத்து வந்திருக்கின்றனர். தற்போதைய “குச்சிபுடி” நடன வகை புருஷ சம்ப்ரதாய வகையினைச் சார்ந்தது. விலாசினி நடனம் ஸ்திரீசம்ப்ரதாய வகையினைச் சார்ந்தது போல தோற்றமளிக்கும். இதில் அடங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட அடவுகளும், தாண்டவ, லாஸ்ய முத்திரைகளும் அதனை உறுதி செய்யும். விலாசினி நடன அபிநயங்கள் பெரிதும் மக்கள் பார்த்து ரசிக்கும் வகையில் இருக்கும். இவை அனைத்தும் ஆலய வழிபாட்டு முறையாகவே இருக்கும். அரசவை ஆட்டங்களும், பொதுமக்கள் பார்க்கும்படி ஆடப்படும் பொது நடனங்களும்கூட இவற்றில் அடங்கும். இவ்வகை ஆட்டங்களைத்தான் ஆங்கிலத்தில் “கிளாசிகல்” நடனங்கள் (classical dances) என்று சொல்லுகிறார்கள்.
தெலுங்கு தேசத்து ‘தேவதாசி’கள் ஆடுகின்ற விலாசினி நடனத்தின் நிருத்தியம், அபிநயம் ஆகியவை பெருமளவில் அனைவரும் ரசிக்கும் வகையில் அமைந்திருக்கும். தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்தின் விளைவாக இசை நடன ஆலய வழிபாட்டு முறை இல்லாமல் போனதால், இவ்வகை நடனங்கள் மறையத் தொடங்கின. இப்போது இவை விலாசினி நடனம் மூலம் புத்துயிர் பெற்று பலராலும் இன்று ஆடப்படுகின்றன.
விலாசினி நடனம் ஆலயங்களில் ஆடப்படும் வகை என்றும், அரசவைகளில் ஆடப்படும் வகை என்றும், பாகவத புராணங்கள் நடைபெறும்போது ஆடப்படும் நடன வகை என்றும் பலவிதங்களில் ஆடப்படுகின்றன.

தெலுங்கு பேசும் பகுதிகளில் விலாசினி நடனம் எனும் பெயரால் ஆடப்பட்டு வந்ததைப் போல தமிழகத்தில் சோழ மன்னர்கள் காலத்திலிருந்து ஆலய வழிபாட்டு முறையில் ‘சதிர்’ என்றும் ‘தாசியாட்டம்’ எனும் பெயரால் ஆடப்பட்டு வந்த நாட்டியங்கள் சிறப்பாக விளங்கி வந்திருக்கின்றன. தஞ்சை பெரிய கோயிலில் மற்றும் தமிழகத்தின் பற்பல கோயில்களுக்கும் நடன மாதர்கள் ஆலய ஊழியர்களாக இருந்து பணியாற்றியிருக்கிறார்கள். இவர்களது நடனமும் கும்ப ஆரத்தி எனப்படும் முக்கிய திபாராதனையும் இவர்களது உரிமையாக இருந்திருக்கிறது. இவை “சின்ன மேளம்” எனும் பெயரால் நடத்தப்பட்டு வந்தது.

“சின்ன மேளம்” என்றால் என்ன? தற்போது தஞ்சை பெரியகோயில் சித்திரைத் திருவிழாவில் இருபது நாட்கள் சின்னமேளம் நடன விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தஞ்சையின் பாரம்பரியமிக்க தஞ்சை நால்வர் எனப்படும் சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகியோருக்கும், அவர் வழியில் வந்த கிட்டப்பா பிள்ளை எனும் புகழ்பெற்ற நட்டுவனாருக்கும் மரியாதை செய்யும் வகையில் இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது. இதனை நடத்தி வருபவர் தஞ்சை புகழ்பெற்ற நட்டுவனார் கலைமாமணி ஹேரம்பநாதனும் அவரது கலையுலக வாரிசுகளுமாவர்.

பண்டைய தமிழக ஆலயங்களில் குறிப்பாக சோழநாட்டு ஆலயங்களில் கோயில் வழிபாட்டு முறையில் நாட்டியம் முக்கிய பங்கு வகித்து வந்திருக்கிறது. பூஜையில் இசையும் பாடப்படும். மாமன்னன் இராஜராஜன் காலத்தில் ஆலய வழிபாட்டின்போது தமிழில் பாசுரம் இசைக்கவும், வடமொழியில் பாடல்கள் பாடவும், நடனங்கள் ஆடவும் ஆட்களை நியமித்திருந்தார். கோயில் பூஜையில் ஆகவிதி முறைகள்படி நடக்கும் பூஜைகளைத் தவிர, நடன மாதர்களின் சதிர் எனும் நாட்டியமும் அங்கம் வகித்திருந்தது.  இதில் பெரிய மேளம், சின்ன மேளம் எனும் இரு வகையான அமைப்புகள் இருந்தன.
பெரிய மேளம் என்பது நாதஸ்வரம், தவில், சுருதி, தாளம் ஆகியவைகள் கொண்டு இசைக்கப்படும் வாத்திய இசை.

சின்ன மேளம் என்பது நடன மாதர்கள், அதற்கான இசை, முட்டுக்காரர் எனப்படும் தாளவாத்தியக் கலைஞர் (மிருதங்கம்) குழல், திட்டிக்காரர் எனப்படுபவர் ஆகியோர் அடங்கிய குழுவாகும். இவர்கள் ஆலயத்தின் ஒவ்வொரு கால பூஜையின் போதும் சந்நிதிகளில் ஆடுவதோடு, இரவு அர்த்தஜாமம் முடிந்து பள்ளியறை செல்லும் வரை இவர்கள் நாட்டியம் உண்டு. திருவிழா காலங்களில் சுவாமி வீதிவலம் வரும்போது, சுவாமி ஆலயத்தைவிட்டு வெளிவரும்போது தொடங்கப்படும் ‘மல்லாரி’ தொடங்கி வழிநெடுக ஆடல்மகளிர் சதிர் ஆடிக்கொண்டு வருவர்.

மேற்படி வழக்கங்கள் மறையத் தொடங்கிய பிறகு, சுந்தந்திரத்துக்குப் பிறகு இந்தக் கலையை அதற்கென தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களிடமிருந்து பொதுமக்கள் கைக்கு வந்து சேர்ந்தபின் ஏராளமானோர் இந்த அற்புதக் கலையைப் பயின்று நன்கு தேர்ச்சி பெற்று “பரதநாட்டியம்” ‘நிருத்தியம்’ எனும் பெயர்களால் ஆடத் தொடங்கி விட்டனர். தஞ்சை நால்வர் தோற்றுவித்த இந்த நடனக் கலை மெல்ல திருமதி பாலசரஸ்வதி மூலம் சென்னை கலாக்ஷேத்ராவுக்குச் சென்று அங்கிருந்து நாடு முழுவதும் ஆடத் தொடங்கி விட்டார்கள். இன்றைய தினம் தமிழ்நாட்டில் பரதநாட்டியப் பயிற்சிக் கூடங்கள் இல்லாத ஊரே இல்லையெனும்படி ஆகிவிட்டது. ஒவ்வொரு ஊரிலும் நூற்றுக்கணக்கான சிறுமிகள், பெண்கள் இந்தக் கலையைப் பயின்று ஒப்புயர்வற்ற வகையில் ஆடிவருகின்றனர்.

அந்தக் காலத்தில் ஆலயவழிபாட்டு முறையில் சுவாமிக்கு கும்ப ஆரத்தி என்ற வழிபாடு உண்டு. அதனைச் செய்யும் உரிமை பெற்றவர்கள் ஆலயத்தின் ஆஸ்தான நடன மாதர்கள் மட்டுமே. இவர்களை “குடமுக தாசி” என்றழைத்தனர். தமிழகத்தில் தேவதாசி முறை ஒழிக்கப்படுவதற்கு முன்பு வரை இந்தப் பணியில் ஈடுபட்டு நடனக் கலையையும் ஜீவனுடன் காப்பாற்றி வந்தனர். இவர்களில் பலர் இறைவனுக்கு உரிமையானவர் என்பதால் ‘பொட்டுக் கட்டுதல்’ எனும் சடங்குடன் தங்களை இறைப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டனர். இவர்களில் பலர் சமூக அந்தஸ்தும், நன்மதிப்பும் பெற்று விளங்கியிருக்கின்றனர். இசையும், நாட்டியமும் இன்றும் உயிர்ப்போடு நம்மிடையே இருக்கிறது என்றால் அதற்கு இவர்கள் பல காலம் இந்தக் கலைகளைக் காப்பாற்றி இன்று பொதுமக்கள் கையில் கொடுத்த காரணத்தினால்தான் என்பது மிகையன்று. இந்த விஷயத்தில் இவர்களது பங்களிப்பு போற்றுதலுக்குரியது.

உலக வரலாற்றின்படி உலகின் எந்தப் பகுதியிலும் எந்தவொரு தனிப்பட்ட இனமோ, குழுவோ முழுமையாக ஒழிக்கப்பட்டு விடுவதில்லை. அவை உயிர்ப்புடன் மீண்டு வருவதைக் கண்கூடாகக் கண்டு கொண்டிருக்கிறோம். ஜெர்மனியின் ஹிட்லர் யூதர்களை வேரறுக்க முயன்றும் அவர்கள் இன்று வீரமுள்ள இனமாக ஆகிவிட்டனர். தேவதாசி முறை ஒழிந்ததால் நடனம் இசை முடிந்து போய்விடவில்லை. இன்று அவை மக்களின் கரங்களில் வந்து சேர்ந்து மேலும் பெருமையுடன் செயல்படத் தொடங்கிவிட்டன.
தஞ்சை பெரிய கோயிலில் நடைபெறும் “சின்ன மேளம்” நிகழ்ச்சி நமது பாரம்பரிய பெருமைகளையும், இசை நாட்டியத் துறைகளின் மேன்மையையும் பறை சாற்றுவதோடு, இன்று நாடெங்கும் தலைசிறந்து விளங்கும் நடனக் கலைஞர்களை இறைவன் சந்நிதியில் வந்து ஆடி இந்தக் கலையை மேலும் சிறப்புறச் செய்து கொண்டிருக்கிறார்கள். இசைக் கலைஞர்கள், வாத்தியக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள் இவர்களது பணியோடு இதுபோன்ற விழாக்களில் பங்குபெறும் பல்வேறு தொழிலாளர்களும் இவற்றால் பயன் பெறுகிறார்கள். மக்கள் இதுபோன்ற அரிய கலைகளுக்கு ஆதரவு நல்கினால்தான் பிற்காலச் சந்ததியினருக்கு இவற்றை நாம் விட்டுச் செல்ல முடியும்.
கட்டுரை ஆக்கம்:
தஞ்சை வெ.கோபாலன்,


5 comments:

ஸ்ரீமலையப்பன் said...

வியத்தகு தகவல் அய்யா

Yarlpavanan said...

அருமையான கண்ணோட்டம்
தொடருங்கள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தஞ்சையின் கலைகளில் ஒன்றான இக்கலையைப் பற்றிய தங்களுடைய பதிவு மூலமாக அரிய பல செய்திகளைத் தெரிந்துகொண்டோம். நன்றி.

karthireva said...

interesting articles and i find more new information,i like that kind of information,not only i like that post all peoples like that post,because of all given information was very excellent.


Dot Net Training in Chennai Thiruvanmiyur

Anonymous said...

Подбирая хороший продукт как, например, decovita indian brown обязательно придется отобрать множественное количество материалов. Лучший выбор напольного покрытия может облагородить каждую кухню или санузел. Кафельная очень хорошо подходит к любому интерьеру. Сфокусируйтесь не только на настенной плитке западного выпуска, а также на отечественные виды.