பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, December 18, 2015

பாஞ்சாலி சபதம்.

 மகாகவி பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில், சூதாட்டச் சருக்கத்தை மட்டும் ஒரு நாடகமாக ஆக்கியிருக்கிறேன். தொடக்கப் பாடலை பி.எஸ்.ராமையாவின் பாஞ்சாலி சபதம் நாடக நூலிலிருந்து கையாண்டுள்ளேன். எப்படி இருக்கிறது? இதை நாட்டிய நாடகமாக நடிக்கலாம் விருப்பமுள்ளவர்கள்.         

   
                                 பாஞ்சாலி சபதம்.
கதாபாத்திரங்கள்:  1. பாஞ்சாலி  2. தருமன் 3. பீமன், 4. அர்ஜுனன்  5. நகுலன்  6. சகாதேவன் 7. பீஷ்மன்  8. விதுரன்  9. திருதராஷ்டிரன்  10. துரியோதனன் 11. துச்சாதனன் 12.  சகுனி  13. விகர்ணன்  14. சேவகன்

                                                     காட்சி 1
(கெளரவர் அரசவை. அரியணையில் கண்தெரியாத திருதராஷ்டிர மன்னன். அருகில் துரியோதனன், சகுனி, துச்சாதனன். அவையினுள் பாண்டவர் ஐவரும் விதுரனுடன் வருகின்றனர். அவர்களை வரவேற்க இரு பெண்கள் ஆடுகின்றனர்)
                                                  பாடல்
            வாசலிது வாசலிது – மகாராஜன் வாசலிது
            அத்தினா புரத்தரசன் அமர்ந்திருக்கும் வாசலிது
            நாமகளும், திருமகளும் வாசஞ்செய் வாசலிது
            பூசுரரும், புவியோரும் மகிழ்ந்திருக்கும் வாசலிது
            வீரமுரசெங்கும் ஒலிக்கின்ற வாசலிது
            வரவேண்டும், வரவேண்டும் இங்கே
            பாண்டவர்கள் வரவேண்டும்.!
(பாண்டவர்கள் அமர்கின்றனர். அப்போது சகுனி எழுந்து பேசுகின்றான்)
சகுனி:
            அறத்தின் நாயகனே, தருமபுத்திர மாமன்னா!
            போர்த் தொழிலால் புவியினை வென்றவனே
            வாருங்கள், வந்தெமது குலத்தினை மேம்படுத்த
            சூது எனும் போரில் வென்றிடுவீர் இச்சபையில்!
தருமன்:
            தீதுறும் சூதினுக்கா இங்கு எனை அழைத்தாய்
            சூதில் பெருமையெனும் பெற்றிதான் உண்டோ?
            வருமந்தனை மனத்துடையாய்! எங்கள்
            வாழ்வினை கெடுப்பாயோ இந்த இழிதொழிலால்?
சகுனி:
            பலபல மொழிகுவதேன் தருமா? உன்னை
            பார்த்திவன் என்றெண்ணி அழைத்து விட்டேன்
            சோரம் இங்கு இதில் உண்டோ? தொழில்
            சூதெனில் ஆடுநர் அரசரன்றோ?
            சூரசிகாமணியே நடு மண்டபத்தில் நின்றன்
            சொத்தினைத் திருடுவம் எனும் கருத்தோ?
            சாத்திரம் பேசுகின்றாய், நாத்திறம் உடையவனே
            மன்னவர் குல வழக்கை சூதென நீக்கலாமோ?
            சூதுக்கு உன்னை அழைத்து விட்டேன், சொல்லு
            துணிவில்லை யெனில் நீங்கிடு இடத்தைவிட்டு.

              (பின்னணியில் பாடல் ஒலிக்கிறது)
            தீதில்லா தருமனும் விதியினை நொந்து கொண்டான்
            பொய் யொழுக்கை அறமென்று பேசும்
            பொய்யர்தம் கேலியைப் பொறுத்திடுவானோ?
            ஐயகோ! பாரத நாட்டின் தர்மம் போச்சுது!
            அறமும், வீரமும் விதியினால் அழிந்தது.
            மாயச் சூதினுக்கே ஐயன் மனமிணங்கி விட்டான்
            தாய முருட்டலானார் அங்கே சகுனி ஆர்ப்பரித்தான்
            நேயமுற்ற விதுரன் போலே நெறியுளோர் களெல்லாம்
            வாயை மூடிவிட்டார், தங்கள் மதி மயங்கி விட்டார்.
              (தருமன் சூதாட தயாராகி விட்டான்)
தருமன்:
            பந்தயங்கள் சொல்வாய் – சகுனி
            கைகள் பரபரத்திடாதே!
            மன்னர் சபைதனிலே நீ சூதில் அமர்ந்து விட்டாய்
            சூதில் பணயம் வைக்க உனக்கு பெருத்த நிதியம் உண்டோ?
துரியோதனன்:
            அருமையான செல்வம் என்பால் அளவிலாத துண்டு
            ஒரு மடங்கு வைத்தால் எதிரில் ஒன்பதாக வைப்பேன்
            பெருமை பேச வேண்டாம், இனிமேல் பின்னடக்கு ஐயா.
தருமன்:
            ஒருவன் ஆட பணயம் வேறே ஒருவன் வைப்பதுண்டொ?
            தருமமாகுமோடா? சொல்வாய் தம்பீ! இந்த வார்த்தை
(கர்ணன் எழுந்து நின்று சொல்வான்)
கர்ணன்:
            மாமன் ஆடப் பணயம் இங்கே மருகன் வைக்கொணாதோ?
            இதில் வந்த குற்றம் என்ன? வீணில் பேசுவது வேண்டாம்
            பொழுது போக்குதற்கே சூதுப் போர் தொடங்குகின்றோம்
            அழுதலேன் இதற்கு, துணிந்து ஆடிடுவோம் தருமா!
(பின்னணியில் பாட்டு கேட்கிறது. அவையில் சகுனியும் காய் உருட்டி சூதாடிக் கொண்டிருக்கிறார்கள். இடையிடையே சகுனி மற்றும் துரியோதனாதியர் எழுப்பும் சிரிப்பொலி கேட்கிறது)
            தர்மம் வீழ்ந்தது – பாரதப் போர் எழுந்தது
            சூதினால் தருமன் அனைத்தையும் இழந்தான்
            சூதர் கூட்டமும் ஆர்ப்பரித்து ஆடி மகிழ்ந்தனர்.

(அப்போது விதுரன் வந்து துரியோதனாதியரைக் கண்டிக்கிறான்)

விதுரன்:
         ஐயகோ, இதனை யாதெனச் சொல்வேன்
               வையகம் இதைப் பொறுத்திடுமோ? வானும்
               பூமியும் ஏற்றிடுமோ, பழிதனை யாரே சுமந்திடுவார்?
               கேடு விளந்திடும் நிச்சயமே, நீ அழிவதும் ஜகத்தினில்
               நடந்திடுமே.,
துரியோதனன்:
              நன்றி கெட்ட விதுரா? சிறிதும் நாணமனற்ற விதுரா
              தின்ற உப்பினுக்கே – நாசம் தேடுகின்ற விதுரா
              அன்று தொட்டு நீயும் – எங்கள் அழிவை நாடுகின்றாய்
              மன்றில் உன்னை வைத்தான் – எந்தை மதியை என்னுரைப்பேன்
              ஐவருக்கு நெஞ்சும் – எங்கள் அரண்மனைக்கு வயிறும்
              தெய்வம் அன்றுனக்கே – விதுரா செய்து விட்டதேயோ?
              மெய் வகுப்பவன் போல் – பொதுவாம் விதியுணர்ந்தவன் போல்
              ஐவர் பக்கம் நின்றே – எங்கள் மாற்றலார்களோடு
              முன்னர் நாங்கள் பணயம் – வைத்தே முறையில் வெல்லுகின்றோம்
              என்ன குற்றம் கண்டாய்? – தருமம் யார்க்குரைக்க வந்தாய்?
              கன்னம் வைக்கிறோமோ – பல்லைக் காட்டி ஏய்க்கிறோமோ?
              வன்புரைத்தல் வேண்டா – எங்கள் வலி பொறுத்தல் வேண்டா
              இன்பம் எங்கணுண்டோ _ அங்கே போகலாம் நீயும் இன்று.

(துரியோதனன் இப்படிப் பேசிவிட்டுத் திரும்பும்போது விதுரன் பேசுகின்றான்)

            இங்கே இருந்தாலும் போனாலும் இனி என்னேடா
            செய்கை நெறியறியாத சிறியனே – நின்னைப்
            பொன்றாத வழி செய்ய முயன்று பார்த்தேன்
            பொல்லாத விதி என்னைப் புறங்கண்டானால்.
            பால் போலும் தேன்போலும் இனிது சொல்வோர்
            இடும்பைக்கு வழி சொல்வார், நன்மை காண்பார்
            இளகுமொழி கூறார் என்று இனைத்தே தானும்
            நினக்கெவரும் கூறியவர் இல்லை கொல்லோ?
            நெடும் பச்சைமரம் போலே வளர்ந்து விட்டாய்?
            நலம்கூறி இடித்துரைப்பார் மொழிகள் கேளா
            நரபதி!  நின் அவைக்களத்தே அமைச்சன் என்று
            வலங்கொண்ட மன்னரோடு பார்ப்பர் தம்மை
            வைத்திருத்தல் சிறிதேனும் தகாது கண்டாய்!
            சிலங்கைப் பொற்கச்சணிந்த வேசை மாதர்
            சிறுமைக்குத் தலைகொடுத்த தொண்டர் மற்றும்
            குலம் கெட்ட புலைநீசர், முடவர், பித்தர்
            கோமகனே! நினக்குரிய அமைச்சர் கண்டாய்!
            சென்றாலும் நின்றாலும் இனி என்னேடா?
            செப்புவன நினக்கென நான் செப்பினேனோ?
            மன்றார் நிறைந்திருக்கும் மன்னர் பார்ப்பார்
            மதியில்லா மூத்தோனும் அறியச் சொன்னேன்
            இன்றோடு முடிகுவதோ! வருவதெல்லாம்
            யான் அறிவேன், வீட்டுமனும் அறிவான் கண்டாய்
            விதிவழியை நன்குணர்ந்திடினும் பேதையேன் யான்
            வெள்ளை மனம் உடமையினால், மகனே! நின்றன்
            சதிவழியைத் தடுத்து உரைகள் சொல்லப் போந்தேன்
            சரிசரி! இங்கு ஏதுரைத்தும் பயனொன்றில்லை,
            மதிவழியே செல்.
             (விதுரன் அமர்ந்து கொள்ள பாடல் கேட்கிறது)
குரல்: 
            காயுருட்டலானார் சூதுக் களி தொடங்கலானார்
            மாயமுள்ள சகுனி பின்னும் வார்த்தை சொல்லுகின்றான்
            நீ அழித்த தெல்லாம் பின்னும் நின்னிடத்து மீளும்
            ஓய்வடைந்திடாதே தருமா ஊக்க மெய்து கென்றான்.
           
(சூதாடுபவர் சிரிப்பொலி, பகடை உருட்டும் ஒலி, வெற்றி பெற்றதன் அறிகுறியாக சகுனியும் துரியோதனாதியரும் ஹோ ஹோ வென சிரிக்கும் ஒலி)

குரல்:              கோயில் பூஜை செய்வோர் சிலையைக் கொண்டு விற்றல் போலும்
                        வாயில் காத்து நிற்போன் வீட்டை வைத்திழத்தல் போலும்
                        ஆயிரங்களான நீதி – அவை உணர்ந்த தருமன்
                        தேயம் வைத்திழந்தான் சிச்சீ சிறியர் செய்கை செய்தான்.
                        நாட்டு மாந்தரெல்லாம் தம்போல் நரர்களென்று கருதார்
                        ஆட்டு மந்தையாமென் றுலகை அரசர் எண்ணி விட்டார்
                        காட்டும் உண்மை நூல்கள் பலதாங் காட்டினார்களேனும்
                        நாட்டு ராஜநீதி மனிதர் நன்கு செய்யவில்லை.
                        ஓரஞ்செய்திடாமே, தருமத் துறுதி கொன்றிடாமே
                        சோரஞ் செய்திடாமே பிறரைத் துயரில் வீழ்த்திடாமே
                        ஊரை ஆளும் முறைமை உலகில் ஓர் புறத்தும் இல்லை
                        சாரமற்ற வார்த்தை, மேலே சரிதை சொல்லுகின்றோம்.
சகுனி:
            செல்வம் முற்றும் இழந்து விட்டாய், தருமா
            தேசமும் குடிகளும் சேர்ந்திழந்தாய்
            எல்லாம் இழந்த பின்னர் நின்றன்
            இளைஞரும் நீயும் மற்றெதில் பிழைப்பீர்!
            வல்லார் நினது இளைஞர் சூதில்
            வைத்திடத் தகுந்தவர் பணயம் என்றே
            சொல்லால் உளம் வருந்தேல் வைத்துத்
            தோற்றதை இங்கே மீட்டிடுவாய்!
துரியோ:
            மாமா! பரவு நாட்டையெல்லாம் இங்கே பணயமாக வைப்போம்
            தம்பிமாரை வைத்து ஆடித் தருமன் வென்றுவிட்டால்
            முன்பு மாமன் வென்ற பொருளை மீண்டளிப்போம்
            நம்பி வேலை செய்வோம் தருமா! நாடிழந்த பின்னர்
            அம்பின் ஒத்த விழியாள் உங்கள் ஐவருக்கும் உரியாள்
            அவள் இகழ்ந்திடாளோ? அந்த ஆயன் பேசுவானோ?
            கவலை தீர்த்து வைப்போம், மேலே களி நடக்கும் இங்கே.

(தருமன் வரிசையாக நகுலன், சகாதேவன் ஆகிய தம்பிகளை வைத்து இழக்கிறான் )

தருமன்:  என் உயிரினும் இனியர் என் தம்பியர் இருவர்
                நகுலனும் சகாதேவனும் இங்கே பணயம் வைக்கின்றேன்.
சகுனி:   ஆகா! நல்லது தருமா, பார் இப்போ பகடை பன்னிரெண்டு

 (காயை உருட்ட அப்போது பன்னிரெண்டு விழுகிறது. சகுனி கூட்டத்தார் கூச்சலிட்டு குதிக்கின்றனர்)

சகுனி: (கேலியாக சிரித்துக் கொண்டே)
            மாற்றாந் தாயிடம் பிறந்தவர் என்றே இவர்களைச்
            சூதில் வைத்திழந்தாய், திண்ணிய வீமனும் பார்த்தனும்
            குந்தி தேவியின் மக்கள் என்றே அவரைக்
            காட்டிட அஞ்சினையோ?
தருமன்:
            சூதில் அரசிழந்தாலும், எங்களில் ஒற்றுமை தீர்ந்திடோம் ஐவர்
            எண்ணத்தில் ஆவியில் ஒன்று காண், எம்மை பிரித்திட எண்ணும்
            உன் பாதகச் சிந்தனை நிறைவேறாது என்பதை உணர்ந்திடுவாய்.
            இதோ இங்கே விஜயனும், வீமனும் சூதில் வைத்தேன்
            போட்டிடுவாய் பகடை ஆறு.

      (சகுனி காயை உருட்ட ஆறு விழுகிறது. மீண்டும் கூச்சல். துரியோதனனும் சகுனியும் மற்றவர்களும் கெக்கெலி கொட்டி சிரிக்கின்றனர்)

துரியோ:
            மங்கி அழிந்தனர் பாண்டவர் – புவி மண்டலம் இனி நம்மது
            சங்கை யிலாத நிதியெலாம் நம்மைச் சார்ந்தது இனி வாழ்த்துவீர்
            இந்தச் செய்தியை எங்குமே பறை அறைந்து சொல்லடா தம்பீ!
சகுனி:
            புண்ணிடைக் கோல் கொண்டு குத்துதல் நின்னைப்
            போன்றவர் செய்யத் தகுவதோ? களி நண்ணித்
            தொடங்கிய சூதன்றோ, இதில் நாணுறச் செய்வது மேன்மையோ?
            இன்னும் பணயம் வைத்து ஆடுவோம் – வெற்றி
            இன்னும் இவர் பெறலாகுமே
            ஒளி மின்னிடும் அமுதம் போன்றவள் இவர்
            மேவிடும் தேவியை வைத்திட்டால், அவள்
            துன்னும் அதிர்ஷ்டம் உடையவள், இவர்
            தோற்றது அனைத்தையும் மீட்டலாம்.
குரல்:
            (பாவியர் சபைதனிலே புகழ்ப் பாஞ்சால நாட்டினர் தவப் பயனை
            ஆவியில் இனியவளை உயிர்த்தணி சுமந்து உலவிடு செய்யமுதை
            ஓவியம் நிகர்த்தவளை, அருள் ஒளியினை, கற்பனைக்கு உயிரதனை
            தேவியை நிலத்திருவை எங்கு தேடினும் கிடைப்பரும் திரவியத்தை
            படிமிசை இசையுறவே நடைபயின்றிடும் தெய்வ மலர்க்கொடியை
            வடிவுறு பேரழகை இன்ப வளத்தினைச் சூதில் பணயமென்றே
            கொடியவர் அவைக் களத்தில் அறக்கோமகன் வைத்திடக் குறித்துவிட்டான்.
தருமன்:
            இதோ பாஞ்சாலன் திருமகளை, திருஷ்டதும்னன் உடன் பிறப்பை
            சூதில் பணயம் வைத்தேன், எங்கே போடு பகடை ஐந்து.

 (சகுனி காய் உருட்ட ஐந்து விழுகிறது. (திரெளபதியை சூதில் இழந்து விட்டனர். துரியோதனாதியர் மகிழ்ச்சியில் குதிக்க பாண்டவர் தலை குனிந்து மெளனமாகின்றனர்)

துரியோ:
            மாமனே! சகுனி மாமனே! என் துயர் தீர்த்தாயடா, மாமனே
            ஏளனம் தீர்த்து விட்டாய். அன்று நகைத்தாளடா உயிர் மாமனே
            அவளை என் ஆளாக்கினாய். என்றும் மறவேனடா உயிர் மாமனே
            என்ன கைமாறு செய்வேன்? ஆசை தணித்தாயடா, உயிர் மாமனே
            ஆவியைக் காத்தாயடா, பூசை புரிவோமடா, உயிர் மாமனே
            பொங்கல் உணக்கிடுவோம். நாசமடைந்தடா, நெடுநாள் பகையின்று
            நாம் இனி வாழ்ந்தோமடா, மாமனே பேரின்பம் கூட்டிவிட்டாய்.
துரியோ:
            காவலா! சென்றிடுவாய் அந்தப்புறம் அந்தப்
            பாஞ்சாலியைக் கொண்டு வந்து அவையில் நிறுத்திடுவாய்.
                      (காவலன் போகிறான்)

                                                  காட்சி. 2
(அத்தினபுரத்து அரண்மனை. திரெளபதி மாதவிடாயில் இருக்கிறாள். காவலன் அங்கு சென்று அழைக்கிறான்)

காவலன்:
            அம்மனே போற்றி, அறங்காப்பாய் தாள் போற்றி!
            விதிவசத்தால் சகுனியோடு உதிஷ்டிரனார் சூதாடி
            பூமியும், பொருளையும், தம்பிகள் அனைவரையும் இழந்து
            நின்னையும் பணயம் வைத்து இழந்து விட்டார்!
            அனைவரும் கூடிநிற்கும் சபக்தனிலே நின்னை
            அழைத்துவரப் பணித்தான் எம்மரசன்!
பாஞ்சாலி:
            யாவர் சொன்ன வார்த்தை? யாரிடம் வந்து சொன்னாய்?
            சூதர் அவையினிலே, சீர்குலத்து மாதர் வருவதுண்டோ?
            யார் பணியால் அழைக்கின்றாய்? சொல்லிடுவாய் காவலா!
காவலன்:      
            மன்னன் சுயோதனன் ஆணையால் அழைக்கின்றேன்.
பாஞ்சாலி:
            நல்லது காவலா! நான் சொன்னதைப் போய்ச் சொல்லு
            வல்லவன் சகுனியிடம் என் நாயகர் பகடை சொல்லி
            என்னைத் தோற்றபின் தன்னைத் தோற்றாரா? அதுவன்றி
            தானே தோற்ற பின்பு என்னை வைத்துத் தோற்றாரா?
            சென்று வா! சபையில் கேட்டு செய்தி எனக்குத் தெரிந்து வா!
                                                 
                                                            காட்சி 3
                              (அரசவை. காவலன் வந்து நிற்கின்றான்.)

துரியோ:    என்ன காவலா? எங்கே அந்த பாஞ்சாலி?
காவலன்:   வாள் வேந்தே! ஆங்கந்த பெண்ணரசி தாள் பணிந்து
                        போதருவீர் என்றிட்டேன். அதற்கு அவர்
                        “என்னை முன்வைத்து இழந்த பின்பு தன்னை
                         தன் மன்னர் இழந்தாரா? மாறாக
                        என்னைத் தோற்றாரா என்று நும் பேரவையில்
                        கேட்டுத் தெளிந்து வா என்றெனை அனுப்பி வைத்தார்.
துரியோ:       
பிள்ளைக் கதைகள் பேசுகிறாள்
என்றன் பெற்றியை அவள் அறியவில்லை
வேண்டிய கேள்விகள் கேட்கலாம் சொல்ல
வேண்டிய சொற்களைச் சொல்லிடலாம்
நீண்ட பெருஞ்சபை அதனிலே அவள்
நேரிட வந்து நிற்கின்ற போது தான்
மன்னன் அழைத்தனன் என்று நீசொல மாறி
அவளொரு வார்த்தையைச் சொல்லுவதோ
பாகன் அழைக்க வருகிலள்! இந்தப்
பையலும் வீமனுக்கு அஞ்சினான்
இவன் அச்சத்தை இவ்விடம் போக்குவேன்,
பின்னொரு காலம் வரும்வரை
தம்பீ! துச்சாதனா. போகக் கடவை இப்போதங்கே.
இங்கு அப்பொற் கொடியைக் கொண்டு வந்திடு.

                                                      காட்சி 4
                        (பாஞ்சாலி அரண்மனை. துச்சாதனன் வருகிறான்)
துச்சா:
            மன்னன் அழைத்திட்ட போதிலும் நீ  
அவைக்கு வரவில்லை தூதனை
            கேள்விகள் கேட்டு துரத்தினை,
உன்னை இழுத்துப் போகவே வந்தேன் நான்.
பாஞ்சாலி:
            மன்னன் துருபதன் கன்னி நான் – புவி
            போற்றிடும் பாண்டவர் தேவி நான்
            யாரும் இதுவரை என்னிடம் இங்ஙனம்
            கட்டுத் தவறி நடந்த தில்லை
            நீ வந்த செய்தி சொல் விரைவாக, இடத்தை
            நீங்கிடு என்கோபம் தகிக்கா முன்.
துச்சா:
            பாண்டவர் தேவியும் அல்லை நீ –
புகழ் பாஞ்சாலன் மகளும் அல்லை நீ
            ஆண்டருள் வேந்தர் தலைவனாம் எங்கள்
மன்னனுக்கே நீ அடிமையாம்
            நீண்ட சபைதனில் சூதாடி உன்னை
நேசச் சகுனி வென்றிட்டான்
            ஆடி விலைப்பட்ட தாதி நீ உன்னை
ஆள்பவன் எம் அண்ணன் சுயோதனன்
            கூடியிருக்கும் சபையிலே உன்னை
கூட்டிவரும்படி ஆணை யிட்டான்
            ஓடி வந்தேன் இது செய்தி காண் இனி
என்னோடு அங்கே வந்திடுவாய்
            பேடி மகனாம் பாகன்பால் நீ சொன்ன
பேச்சுக்கள் எதையும் வேண்டிலனே.
பாஞ்சாலி:
            தார் வேந்தர் பொற்சபை முன் என்னை
            அழைத்து வரச் செய்தல் முறையுமில்லை
            சோதரர் தம் தேவியினைச் சூதில்
அடிமை என்று கொண்ட பின்பவளை
பெருமை குலைத்திடல் மரமோடா? போய்
            மன்னர் அவையில் கூறிடுவாய்.
துச்சாதனன்:
            அன்றெமை கேலியாய் சிரித்தாயடி உன்னை
            மன்னர் அவையினில் சிரிக்க வைப்போம்
            வந்திடு என்னுடன் இல்லையேல் உந்தன்
            கூந்தலைப் பிடித்தே இழுத்தேகுவேன்.

                                                             காட்சி 5
(பாஞ்சாலியின் கூந்தலைப் பிடித்திழுதத வண்ணம் துச்சாதனன் தெருவோடு ஒகிறான். மக்கள் “ஐயோ, இது என்ன கொடுமை” என்று அங்கலாய்க்கின்றனர்)

மக்கள்:  என்ன கொடுமை இது? என்ன கொடுமை இது?
               மண்ணாளும் மன்னரின் தேவிக்கா இந்த நிலை
               கேட்பார் இலையா, இதைத் தடுத்து நிறுத்துவார் இலையா?
               ஐயோ பாவம், இவளுக்கா இந்த கதி?
(அப்போது கேட்கும் குரல்J
            ஊரவர் தம் கீழ்மை உரைக்கும் தரமாமோ?
            வீரமிலா நாய்கள், விலங்காம் இளவரசன் தன்னை
            மிதித்துத் தராதலத்தில் போக்கியே
            பொன்னை அவள் அந்தப் புரத்தில் சேர்க்காமல்
            நெட்டை மரங்களென நின்று புலம்புகின்றார்
            பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?
                                               
                                                                   காட்சி 6
           (திருதராஷ்டிரன் அவை. அனைவர் முன்பும் பாஞ்சாலி நியாயம் கேட்கிறாள்)

பாஞ்சாலி:
            விதியோ, கணவரே! அம்மி மிதித்து அருந்ததி காட்டி
            என்னை வேதச்சுடர்த்தீ முன் வேண்டி மணம் செய்தாய்
            இந்நாள் பாதகர் முன் பரிசழிதல் காணீரோ?

(திரெளபதி தருமன் தொடங்கி, வீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஒவ்வொருவரையும் கேட்கிறாள் “பரிசழிதல் காணீரோ?” என்று. அனைவரும் தலை குனிந்து நிற்கின்றனர்)

பாஞ்சாலி:
            மன்னன் நற்சபையில் நல்லிசையோர் இருக்கின்றார்
            தவசிகள், வேதியர்கள், மேலோரும் இருக்கின்றார்
            நீதி நெறி தெரிந்தோர் வெஞ்சினம் ஏன் கொளவில்லை?
துச்சாதனன்:
            நீலிக்கண்ணீர் சொரிந்து நெடுங்கதைகள் பேசாதே
            கேலிக்கும் அஞ்சுவையோ? நீ கீழடிமைத் தாதியடி!
            தாதியடி நீ தாதி, கீழடிமைத் தாதி.
பாஞ்சாலி:
            தம்மைத் தோற்ற பின் என்னைத் தோற்றிட
            நாயகர்க்கு உரிமை யில்லை, புலைத்
            தாயத்தில் விலைப்பட்ட பின்னர் இங்கு என்ன
            சாத்திரத்தால் என்னைத் தோற்றிட்டார்?
            இனி துருபதன் கன்னி நான், சூதில் தோற்றிட்ட
            உமக்கு தாரம் எனும் உரிமை இனியும்தான் உண்டோ?
            அறம் கண்டவர் யாரும் இங்கில்லையோ?
            செளரியம் வீழ்ந்திடும் முன்னரே, அங்கு
            சாத்திரம் செத்துக் கிடக்குமோ?
பீஷ்மன்:
            தருமன் சூதாடி உன்னைத் தோற்றுவிட்டான்
            வாதாடி அதனை நீ அவன் செய்கை மறுக்கின்றாய்
            நீ சொல்லும் நியாயங்கள் வேத காலத்தில் உண்டு
            இந்நாளில் ஆடவர்க்கு ஒப்பில்லை மாதர் எனும்
            அறந்தான் நிலைபெற்று நின்றுவிட்ட நேரத்தில்
            ஒருவன் தன் தாரத்தை விலைபேசி விற்றிடலாம்
            தானமாய் வேறொரு மனிதனுக்குத் தந்திடலாம்
            முற்றிலும் விலங்குகள் போல் வாழ்வதுவே தருமம்
            ஆகையால் நடப்பதைத் தடுக்கும் திறமில்லேன்
பாஞ்சாலி:
            சாலவே சொன்னீர் ஐயா நாட்டின் தர்ம நெறி
            சீதையை அபகரித்து வந்த இராவணனுக்கு
            அவன் மந்திரிமார் சொன்னராம் “தக்கது செய்தீர்” என்று
            பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்
            வஞ்சனையால் மன்னவனை சூதாட
மன்றத்தில்அழைத்ததுதான் நேர்மையோ

விகர்ணன் (துரியோதனின் தம்பிகளில் ஒருவன்)
            பெண்ணரசி கேள்விக்குப் பாட்டன் சொன்ன பதில்
            பேச்சதனை நான் ஏற்க மாட்டேன்
            எந்தையர் தம் மனைவியரை விற்றதுண்டோ?
            அரசியரை சூதில் தோற்ற கதையும் உண்டோ?
            தன்னை இவன் இழந்து அடிமையான பின்பு
            இவனுக்குத் தாரமேது, வீடேது, உறவுதான் ஏது?
            மன்னர்களே! கேளுங்கள்
            களிப்பதுதான் சூதென்றாலும் மனுநீதி துறக்கலாமோ
            தாத்தனே நீர் பேசியதும் சரிதானோ, தகுமாமோ?

கூடியிருந்த சில அரசர்கள்:
            ஒவ்வாது சகுனி செய்யும் கொடுமையெல்லாம்
            இவ்வாறு செய்தால் நீர் புகைந்து போவீர்
            ஏந்திழையை அவைக்களத்தே இகழ வேண்டாம்
            செவ்வானம் படர்ந்தாற்போல் குருதி பாய
            செருக்களத்தே தீரும் இந்த மாறாப் பழி.

பாடல்: 
            ஆடை குலைவுற்று நிற்கின்றாள் – அவள்
            ஆவென்று அலறித் துடிக்கின்றாள் – வெறும்
            மாடு நிகர்த்த துச்சாதனன் – அவள்
            மைக்குழல் பற்றி இழுக்கின்றான் – இந்தப்
            பீடையை நோக்கினன் வீமனும் – கரை
            பீறி எழுந்தது வெஞ்சினம்.
பீமன்:
            சூதர் மனைகளிலே – அண்ணே
            தொண்டு மகளிர் உண்டு.
            சூதிற் பணயமென்றே – ஆங்கோர்
            தொண்டச்சி போவதில்லை.
            ஏது கருதி வைத்தாய் – அண்ணே
            யாரைப் பணயம் வைத்தாய்?
            மாதர் குல விளக்கை – அன்பே
            வாய்ந்த வடிவழகை
            பாஞ்சாலன் மகளை – அண்ணே
            ஆடி இழந்து விட்டாய்
            தவறிழைத்து விட்டாய் – அண்ணே
            தருமம் கொன்று விட்டாய்
            சோரத்தில் கொண்டதில்லை – அண்ணே
            சூதினால் படைத்த தில்லை
            வீரத்தினால் படைத்தோம் – வெம்போர்
            வெற்றியினால் படைத்தோம்
            சக்கரவர்த்தி என்றே – மேலாம்
            தன்மை படைத்திருந்தோம்
            பொக்கென ஓர் கணத்தே – எல்லாம்
            போகத் தொலைத்து விட்டாய்
            நாட்டை யெல்லாம் இழந்தாய் – அண்ணே
            நாங்கள் பொறுத்திருந்தோம்
            மீட்டும் எமை அடிமை செய்தாய்
            மேலும் பொறுத்திருந்தோம்
            துருபதன் மகளை –
            திருஷ்டத்யும்னன் உடன் பிறப்பை
            இருபகடை என்றாய் – ஐயோ
            இவர்க்கு அடிமை என்றாய்   (சகாதேவனைப் பார்த்து)
            இது பொறுப்பதில்லை – தம்பீ
            எரிதழல் கொண்டு வா
            கதிரை வைத்திழந்தான் – அண்ணன்
            கையை எரித்திடுவோம்.
அர்ஜுனன்:
            என்ன வார்த்தை சொன்னாய் – வீமா
            எங்கு யாவர் முன்னே சொன்னாய்?
            சினமான தீ அறிவைப் புகைத்தலாலே
            திரிலோகநாதனைச் சினந்து சொன்னாய்
            ‘தருமத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும்
            தருமம் மறுபடி வெல்லும்’ எனும் இயற்கை
            மருமத்தை நம்மாலே இவ்வுலகம் கற்கும்
            வழிதேடி விதி இந்தச் செய்கை செய்தான்
            கருமத்தை மேன்மேலும் காண்போம்
            இன்று கட்டுண்டோம், பொறுத்திருப்போம்
            காலம் மாறும் அப்போது
            தருமத்தை வெல்லக் காண்போம்
(தன் வில்லைக் காட்டி)
            தனுவுண்டு, காண்டீபம் இதன் பேர்.

(துச்சாதனன் திரெளபதியின் வஸ்திரத்தை உறுவத் தொடங்குகிறான். பாஞ்சாலி அஞ்சி உடைகளைக் கையால் இறுகப் பிடித்துக் கொண்டு)

பாஞ்சாலி:
            ஹரி ஹரி ஹரி கண்ணா
            அபயம் அபயம் அபயம் நானுனக்கு
            சக்கரம் ஏந்தி நிற்பாய் கண்ணா
            சார்ங்கம் எனும் வில்லைக் கையுடையாய்
            துக்கங்கள் அழித்திடுவாய் கண்ணா
            தொண்டர்தம் கண்ணீரைத் துடைத்திடுவாய்
            ஆக்கினை கரத்துடையாய் என்றன்
            அன்புடை எந்தை, அன் அருட்கடலே
            நூற்றுவர் கொடுமையைத் தவிர்த்திடுவாய்.
            ஐய! வேறு கதியறியேன் கண்ணா நின்
            பாதமலரே சரண், ஹரி ஹரி ஹரி ஹரி

(அப்போது துகில் வளர்கிறது, அவள் துகிலை உரிய உரிய கை சோர்ந்து மயங்கி வீழ்கிறான் கொடியவன் துச்சாதனன். பாஞ்சாலி மீது மலர் கொட்டுகிறது)

பீமன்:
            விண்ணவர் மீதாணை, பராசக்தி மீதாணை
            ஆணையிட்டு இஃதுரைப்பேன் நான்
            ஆண்மையிலா துரியோதனன் தன்னை
            மாணற்ற மன்னர் கண்முன்னே
            யுத்த அரங்கின் கண் தொடை பிளந்து அவன்
            உயிர் மாய்ப்பேன், தம்பி சூர துச்சாதனன் தனை
            ஆங்கே கடைபட்ட தோட்களைப் பிய்ப்பேன்
            ஆங்கு கள்ளென ஊறும் அவன் ரத்தம் குடிப்பேன்
            நடபெறும் காண்பீர் உலகத்தீரே, இது
            நான் சொல்லும் வார்த்தை அன்று
            பராசக்தி சொல்லும் வார்த்தை இது
            சாதனை செய்க பராசக்தி!
அர்ஜுனன்:
            கேளீர் உலகத்தீரே! அந்தப் பாதகக் கர்ணனைப்
            போரில் முடிப்பேன், கண்ணன் கழலாணை
            காண்டீப வில்லின் மீதாணை
            போர்த்தொழில் விந்தைகள் கண்டிடுவீர்
            ஹே பூதலமே அந்தப் போழ்தினிலே.
பாஞ்சாலி:
            தேவி பராசக்தி ஆணை உரைத்தேன்
            பாவி துச்சாதனன் செந்நீர், அந்தப்
            பாழ்த் துரியோதனன் ஆக்கை ரத்தம்
            இவை மேவி இரண்டும் கலந்து
            குழல் மீதினில் பூசி முடிப்பேன்
            இது செய்யும் முன் முடியேன்.

(அப்போது பின்னணியில் குரல்)
குரல்:
            ஓம் ஓம் என்று உரைத்தனர் தேவர்,
            ஓம் ஓம் என்று உறுமிற்று வானம்;
            பூமி அதிர்ச்சி உண்டாச்சு
            விண்ணைப் பூழ்திப் படுத்தியதாம் சுழல்காற்று
            சாமி தருமன் புவிக்கே என்று
            சாட்சி உரைத்தன் பூதங்கள் ஐந்தும்
            நாமும் கதையை முடித்தோம், இந்த
            நாநில முற்றும் நல் இன்பத்தில் வாழ்க!
           


           
           

           

                                                       

1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ஓர் அரிய பாராட்டப்பட வேண்டிய முயற்சி. நாடக அரங்கிற்குள் சென்றுவிட்டு வந்ததைப் போலுள்ளது. நன்றி.