பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, April 25, 2015

31. சும்மா II



                 அப்போது குள்ளச்சாமியார் சொல்லுகிறார்: "கேள் தம்பி, நான் சும்மா இருக்கும் கக்ஷியைச் சேர்ந்தவன். நீ சொல்லியபடி சந்நியாஸிகள் சும்மா இருந்ததினால் இந்தத் தேசம் கெட்டுப்போகவில்லை. அதர்மம் செய்ததினால் நாடு சீர் கெட்டது. சந்நியாஸிகள் மாத்திரம் அதர்மம் செய்யவில்லை. இல்லறத்தார் அதர்மம் தொடங்கியது துறவறத்தாரையும் சூழ்ந்தது. உண்மையான யோகிகள் இன்னும் இந்தத் தேசத்தில் இருக்கிறார்கள். அவர்களாலே தான் இந்தத் தேசம் சர்வ நாசமடைந்து போகாமல் இன்னும் தப்பிப் பிழைத்திருக்கிறது. இப்போது பூ மண்டலம் குலுங்கிப் பல ராஜ்யங்களும் சரிந்து கொண்டிருக்கையிலே ஹிந்து தேசம் ஊர்த்துவ முகமாக மேன்மை நிலையை நோக்கிச் செல்லுகிறது. தானும் பிழைத்தது. உலகத்தையும் உஜ்ஜீவிக்கும்படி செய்யலாம் என்ற தைரியம் ஹிந்து தேசத்தின் மனதில் உண்டாயிருக்கிறது. இதற்கு முன் இப்படி எத்தனையோ பிரளயங்களில் இருந்து தப்பிற்று. சில தினங்களுக்கு முன்பு ஜகதீச சந்திரவஸு கல்கத்தாவில் தம்முடைய நவீன சாஸ்திராலயத்தை பிரதிஷ்டை செய்யும்போது என்ன சொன்னார் - வாசித்துப் பார்த்தாயா? "பாபிலோனிலும், நீலநதிக்கரையிலும் இருந்த நாகரீகங்கள் செத்து மறுஜன்மமடைந்து விட்டன. ஹிந்துஸ்தானம் அன்று போலவே இன்றும் உயிரோடிருக்கிறது. ஏனென்றால் எல்லா தர்மங்களிலும் பெரிய தர்மமாகிய ஆத்ம பரித்தியாகம் இந்த தேசத்தில் சாகாதபடி இன்னும் சிலரால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது" என்று ஜகதீச சந்திர வஸு சொன்னார்.

          இங்ஙனம் குள்ளச் சாமியார் சொல்லிவருகையில் வேணு முதலி "சாமியாரே! உமக்கு இங்கிலீஷ் தெரியுமா? நீர் பத்திரிகை வேறே வாசிக்கிறீரா? ஜகதீச சந்திரவஸு பேசிய விஷயம் உமக்கெப்படித் தெரிந்தது?" என்று கேட்டான். 

          அப்போது குள்ளச்சாமியார் சொல்லுகிறார்: அநாவசியக் கேள்விகள் கேட்காதே. நான் சொல்வதைக் கவனி: ஹிந்து தேசத்தினுடைய ஜீவனை யுக யுகாந்தரங்களாக அழியாதபடி பாதுகாத்து வருவோர் அந்த யோகிகளே. கடூரமான கலியில் உலகம் தலைகீழாகக் கவிழ்ந்துபோகும் சமயத்தில் கூட ஹிந்துஸ்தானம் அழியாமல் தானும் பிழைத்து மற்றவர்களையும் காக்கக்கூடிய ஜீவசக்தி இந்நாட்டிற்கு இருப்பது அந்த யோகிகளின் தபோபலத்தாலன்றி வேறில்லை. ஹா, ஹா, ஹா, ஹா! பலவிதமான லேகியங்களைத் தின்று தலைக்கு நூறு, நூற்றைம்பது பெண்டாட்டிகளை வைத்துக் கொண்டு தடுமாறி, நாள் தவறாமல் ஒருவருக்கொருவர் நாய்களைப்போல அடித்துக் கொண்டு, இமயமலைக்கு வடபுறத்திலிருந்து அன்னியர் வந்தவுடனே எல்லாரும் ஈரச் சுவர் போலே இடிந்து விழுந்து ராஜ்யத்தை அன்னியர் வசமாகத் தந்த உங்கள் ராஜாக்களுடைய வலிமையினால் உங்கள் தேசம் பிழைத்திருக்கிறதென்று நினைக்கிறாயா? போது விடிந்தால் எவன் செத்துப் போவான், ஸபண்டீகரணம், பிராமணார்த்த போஜனங்கள் பண்ணலாம் என்று சுற்றிக்கொண்டு, வேத மந்திரங்களைப் பொருள் தெரியாமல் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்த உங்கள் பிராமணர்களால் இந்த தேசம் சாகாத வரம் பெற்று வாழ்கிற தென்று நினைக்கிறாயா? உங்கள் வைசியருடைய லோபத்தன்மையால் இந்த நாடு அமரத்தன்மை கொண்டதா? சூத்திரருடைய மௌட்டியத்தாலா? பஞ்சமருடைய நிலைமையாலா? எதால் ஹிந்துஸ்தானத்துக்கு அமரத் தன்மை கிடைத்ததென்று நீ நினைக்கிறாய்?.

 அடா, வேணு முதலி, கவனி.  நீ யுத்தம் முடிந்த பிறகு அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் போய் ஹிந்து தர்மத்தை நிலைநாட்டப் போவதாகச் சொல்லுகிறாய். நீ ஹிந்து ஸ்தானத்து மகாயோகிகளின் மகிமை தெரியாமல் ஹிந்து மதத்தை யெப்படி நிலைநிறுத்தப் போகிறாய், - அதை நினைக்கும்போதே எனக்கு நகைப்புண்டாகிறது.

"அடா, வேணு முதலி, கேள். ஹிந்துஸ்தானத்து மகா யோகிகளின் மகிமையால் இந்த தேசம் இன்னும் பிழைத்திருக்கிறது. இனி இந்த மண்ணுலகம் உள்ளவரை பிழைத்திருக்கவும் செய்யும். அடா வேணு முதலி, பார்! பார்! பார்!".

இங்ஙனம் குள்ளச் சாமி சொன்னவுடன் நானும் வேணு முதலியும் அவரை உற்றுப் பார்த்தோம்.

குள்ளச் சாமி நெடிய சாமி ஆய்விட்டார்.

நாலே முக்கால் அடிபோல் தோன்றிய குள்ளச் சாமியார் ஏழேமுக்கால் அடி உயரம் வளர்ந்து விட்டார்.

ஒரு கண்ணைப் பார்த்தால் சூரியனைப்போல் இருந்தது. மற்றொரு கண்ணைப் பார்த்தால் சந்திரனைப் போல் இருந்தது. முகத்தின் வலப்புறம் பார்த்தால் சிவன்போல் இருந்தது. இடப்புறம் பார்த்தால் பார்வதியைப் போலவே இருந்தது. குனிந்தால் பிள்ளையார் போலிருந்தது. நிமிர்ந்து பார்க்கும் போது விஷ்ணுவின் முகத்தைப் போலே தோன்றியது. அப்போது குள்ளச்சாமி சொல்லுகிறார்:

அடா, வேணு முதலி, கேள். நான் ஹிந்துஸ்தானத்து யோகிகளுக்கெல்லாம் தலைவன். நான் ரிஷிகளுக்குள்ளே முதலாவது ரிஷி. நான் தேவர்களுக்கெல்லாம் அதிபதி. நானே பிரம்மா,  நானே விஷ்ணு,  நானே சிவன்.  நான் ஹிந்துஸ்தானத்தை அழியாமல் காப்பாற்றுவேன். நான் இந்த பூமண்டலத்தில் தர்மத்தை நிலைநிறுத்துவேன்.
நான்  கிருதயுகத்தை ஸ்தாபனம் செய்வேன். நானே பரம புருஷன். இதற்குமுன் ஆசாரியர்கள் உங்களிடம் என்ன சொன்னார்கள்? எல்லா உயிரும் ஒன்று.. ஆதலால் காக்கை, புழு முதலிய ஜந்துக்களிடம் குரூரமில்லாமல் கருணை பாராட்டுங்கள் என்றனர்.

அடா, வேணு முதலி, கவனி.

சைவாச்சாரியர் வைஷ்ணவத்தை விலக்கினர். வைஷ்ணசாரியர் சைவத்தை விலக்கினர்.
நான் ஒன்று செய்வேன்.

காக்கையைக் கண்டால் இரக்கப்படாதே, கும்பிடு. கை கூப்பி நமஸ்காரம் பண்ணு! பூச்சியைக் கும்பிடு! மண்ணையும் காற்றையும் விழுந்து கும்பிடு! என்று நான் சொல்லுகிறேன்.

நான் வேதத்திலே முன் சொன்ன வாக்கை இப்போது அனுபவத்திலே செய்து காட்டப் போகிறேன். புராணங்களை யெல்லாம் விழுங்கி ஒன்றாக நாட்டப் போகிறேன். ஹிந்து தர்மத்தைக் கூட்டப் போகிறேன். அடா, வேணு முதலி கேள், மண்ணும் காற்றும், சூரியனும் சந்திரனும், உன்னையும் என்னையும் சூழ்ந்து நிற்கும் உயிர்களும், நீயும் நானும் தெய்வமென்றும் வேதம் சொல்லிற்று. இவைதான் தெய்வம். இதைத் தவிர வேறு தெய்வமில்லை. நம்முன்னே காண்பது நாராயணன். இதை நம்முள்ளே நாட்டி இதை வணங்கி இதன் தொழுகைக் கனியில் மூழ்கி, அங்கு மானிடன் தன்னை முழுது மறந்து விடுக.

அப்போது தன்னிடத்து நாராயணன் நிற்பான். இந்த வழியை நான் தழுவியபடியால் மனுஷ்யத் தன்மை நீங்கி அமரத் தன்மை பெற்றேன். ஆதலால் நான் தேவனாய்விட்டேன். இவைதான் தெய்வம். இதைத் தவிர வேறு தெய்வ மில்லை. தேவர்களுக்குள்ளே நான் அதிபதி. என் பெயர் விஷ்ணு; நானே சிவன் மகன் குமாரன். நானே கணபதி, நான் அல்லா, யேஹோவான். நானே பரிசுத்த ஆவி, நானே யேசு கிருஸ்து, நானே கந்தர்வன், நானே அசுரன், நான் புருஷோத்தமன், நானே ஸமஸ்த ஜீவராசிகளும். "நானே பஞ்ச பூதம்! அஹம் ஸத்! நான் கிருதயுகத்தை ஆக்ஞாபிக்கிறேன்! ஆதலால் கிருதயுகம் வருகிறது. எந்த ஜந்துவும், வேறு எந்த ஜந்துவையும் ஹிம்சை பண்ணாமலும் எல்லா ஜந்துக்களும் மற்றெல்லா ஜந்துக்களையும் தேவதா ரூபமாகக் கண்டு வணங்கும்படிக்கும் விதியுண்டானால் அது தான் கிருதயுகம் - அதை நான் செய்வேன். அடா வேணு முதலி! நான் உன் முன்னே நிற்கிறேன், என்னை அறி" என்று குள்ளச் சாமி சொன்னார். நான் அத்தனைக்குள்ளே மூர்ச்சை போட்டு விழுந்து விட்டேன்.

சுமார் அரைமணி நேரத்துக்குப் பின்பு எனக்கு மறுபடி பிரக்கினை ஏற்பட்டது. அப்போது பார்க்கிறேன். வேணு முதலி என் பக்கத்தில் மூர்ச்சை போட்டுக் கிடக்கிறான். பிறகு அவனுக்குச் சிகிச்சை செய்து நான் எழுப்பினேன்.

குள்ளச் சாமியார் எங்கே யென்று வேணு முதலி என் பத்தினியிடம் கேட்டான்.

அவள் சொன்னாள்: "குள்ளச்சாமி இப்படித்தான் கீழே இறங்கி வந்தார். கொஞ்சம் பாயசமும் ஒரூ வாழைப் பழமும் கொடுத்தேன். வாங்கித் தின்றார். குழந்தைகளுக்கும் எனக்கும் விபூதி பூசி வாழ்த்தி விட்டுப் போனார். 'நீங்கள் மெத்தையிலே என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு  'இரட்டை பாஷை யென்றால் அர்த்தமென்ன? என்பதைப் பற்றி அந்த வேணு முதலி மடையன், தர்க்கம் பண்ணுகிறான்' என்று சொல்லிச் சிரித்து விட்டுப் போனார்" என்று சொன்னாள்.


No comments: