பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, March 23, 2018

பாஞ்சாலி சபதம்.


                               
          

                        
    (மகாபாரதத்தில் ஒரு காட்சி மகாகவி பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தின் சாரம்)

(துரியோதனன் அவையில் திரெளபதியை துச்சாதனன் கொண்டு வந்து நிறுத்துகிறான். அப்போது அவள் நிலை)

அறிமுகக் குரல்
திருதராஷ்டிரன் அவையில் ஐவரின் பத்தினி பாஞ்சாலி கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருக்கிறாள். அவள் ஆடை குலைவுற்று நிற்கிறாள்; அழுது கண்ணீர் வடிக்கிறாள்: ஆவென்று பதறித் துடிக்கிறாள். மாடு போன்ற துச்சாதனன் அவள் மைக்குழல் பற்றி இழுக்கிறான். கதறி அழுகின்ற அம் மாதரசியின் ஆடையைப் பிடித்து இழுக்கிறான். இதைக் கண்டு பீமனுக்கு வெஞ்சினம் உண்டானது. துயர் மிகுந்து அண்ணன் தருமனை நோக்கிச் சொல்கிறான்)

                                   காட்சி 1.

         (பாத்திரங்கள்:  திரெளபதி, பீமன், தருமன், சகாதேவன், அர்ச்சுனன்)

பீமன்: 
(தருமனைப் பார்த்து) அண்ணே! சூதாட்டம் என்பது நம் சமூகத்தில் இருக்கும் ஒரு தீமைதான். அப்படி சூதாட்டம் நடக்கும் விடுதிகளில் பணிபுரிய பல பெண்கள் இருப்பதுண்டு. ஆனால் சூதாட்டத்தில் பணயப் பொருளாக ஒரு பெண்ணை வைத்ததுண்டா? பெண்களை வைத்துச் சூதாடும் வழக்கம் இங்கே உண்டா? சொல்.
என்ன கருதி திரெளபதியைச் சூதில் பணயமென்று வைத்தாய்? அண்ணே! யாரைப் பணயம் வைத்தாய் தெரிகிறதா? மாதர் குல விளக்கு, அன்பே வாய்ந்த வடிவழகு, பூமி அரசரெலாம் போற்றி வணங்கும் திறலுடையாள்; போரில் புலி போன்ற பாஞ்சால மன்னனின் சுடர் மகளை அண்ணே! நீ சூதில் ஆடி இழந்து விட்டாய்.
அண்ணே! நீ தவறு செய்துவிட்டாய், தர்மத்தைக் கொன்று விட்டாய்.

தருமன்:  
பீமா நான் சொல்வதைச் சற்று கேள்!

பீமன்:  
இந்த மாதரசியை நாம் எப்படிப் பெற்றோம் என்பது உனக்கு நினைவிருக்கிறதா? பிறர் அறியாமல் நாம் கவர்ந்து கொண்டு வரவில்லை. சூதாடி இவளை நாம் பெறவில்லை. மாறாக நம் வீரத்தினால் பெற்றோம். கடும் போரில் வெற்றி பெற்று இவளை அடைந்தோம்.

தருமன்:  
எனக்குப் புரிகிறது, பீமா, சற்று அமைதியாக நான் சொல்வதைக் கேள்!
பீமன்: கேட்க இனி என்ன இருக்கிறது. நாம் சக்கரவர்த்திகளாக வாழ்ந்தோம். அந்த பெருமையையும், செல்வாக்கையும் ஒரு கணத்தில் பொக்கென இழந்து நிற்கின்றோம்.
தருமன்: பீமா! உன் கோபம் சரிதான், என்ன நடந்தது என்பதைச் சொல்கிறேன் கேள்.
பீமான்: கேட்க இனி என்ன இருக்கிறது. நாட்டையெல்லாம் சூதில் தொலைத்தாய், அண்ணே! நாங்கள் பொறுத்திருந்தோம், மீட்டும் எமை அடிமைகளாக ஆக்கினாய், அதையும் பொறுத்துக் கொண்டோம். ஆனால், அண்ணே! ஒன்றை மட்டும் நாங்கள் மறக்கவில்லை. துருபத ராஜாவின் மகளை, திருஷ்டத்யும்னன் உடன் பிறப்பை சூதாட்டத்தில் இரு பகடையென்று பணயம் வைத்தாய். ஐயோ! இந்த தீயவருக்கு அடிமை என்றாய். அதைப் பொறுப்பது என்னால் இயலாது.

(தம்பி சகாதேவனை நோக்கி:)  
தம்பி! சகாதேவா, எரிதழல் கொண்டு வா, கதிரை வைத்து இழந்த நம் அண்ணன் கையை எரித்திடுவோம்.

               (அப்போது இதனைக் கேட்டு அர்ச்சுனன் சொல்கிறான்)

அர்ச்சுனன்: 
பீமா! நீ சொன்ன சொற்களை மனமாரச் சொன்னாயோ? என்ன வார்த்தை சொன்னாய்? எங்கு சொன்னாய்? யாவர் முன்னே? கனமாரும் துருபதனார் மகளைச் சூதுக் களியிலே இழந்திடுதல் குற்றமென்றாய். உன் மனதில் உருவான கோபம் உன் அறிவைப் புகைத்துவிட்டதோ, திரிலோக நாயகனாம் நம் அண்ணன் தருமனிடம் சினம் கொள்ளல் முறையோ? உனக்கு ஒன்று சொல்வேன். கேள்! நன்றாக நினைவில் வைத்துக் கொள். வாழ்க்கை நெறி இதுதான். “தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்; தருமம் மறுபடி வெல்லும்” எனும் மருமத்தை நம்மாலே இவ்வுலகம் கற்கும். வழிதேடி விதி இந்தச் செய்கை செய்தான். கருமத்தை மேன்மேலும் காண்போம். இன்று கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும், தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்.

(தன் கை வில்லைக் காட்டி பீமா! இது என்ன தெரியுமா” தனு. வில். இதன் பெயர் காண்டீபம், உனக்குத் தெரியாதா?
                         
                                      காட்சி 2.

                    துரியோதனனின் தம்பி விகர்ணன் சொல்கிறான்:

விகர்ணன்:  
பெண்ணரசி பாஞ்சாலியை சூதில் இழந்தது சரிதான் என்கிறார் பாட்டனார் பீஷ்மர். பெண்ணை அடிமைப்படுத்தலாம் என்ற பாட்டன் பீஷ்மன் கருத்தை நான் ஏற்கமுடியாது. நம் மன்னர் பரம்பரையில் மனைவியரை விலைக்கு எவரும் விற்றதுண்டோ? அல்லது சூதில்தான் எவரும் இழந்ததுண்டோ? விலைமாதர்க்குரிய நீதியை தெய்வத்துக்குப் பொருத்தி பேசுதல் வேண்டா.

கர்ணன்: 
(விகர்ணனை கோபமாகப் பார்த்து) ஏய்! சின்னப் பயலே! உனக்குத்தான் எத்தனைத் துணிச்சல். விவேகம் இல்லாதவனே, அறிவிழந்து பேசுகிறாய். மன்னர் முன்னே எப்படிப் பேசவேண்டுமென்பதைப் புரிந்து கொள்.

கர்ணன்: 
(யாரங்கே! சேவர்களே. அடிமைகள் மார்பில் துணி போர்த்தியிருப்பது வழக்கத்துக்கு மாறானது. வந்து பாண்டவர்கள் மேல் அணிந்த அங்கிகளை நீக்குங்கள். தையலாள் பாஞ்சாலி சேலையையும் களைந்திடுவாய் உடனே.

(உடனே பாண்டவர்கள் தங்கள் மேலங்கிகளைக் கீழே போட்டனர். துச்சாதனன் பாஞ்சாலியின் சேலையைப் பிடித்து இழுக்கிறான்.)

பாஞ்சலி: 
தீயவனே! என்ன காரியம் செயிறாய். இதற்கான தண்டனையை நீ நிச்சயம் பெறுவாய். (கண்ணனை நினைத்து கைகூப்பி) ஹரி, ஹரி ஹரி கண்ணா அபயம் அபயம் உனக்கு, என் மானத்தைக் காத்து அருள்புரி.

கண்ணா! காளிங்கன் தலைமீது நடனம் புரிந்த கிருஷ்ணா! வேதப் பொருளே! கையில் சக்கரம் ஏந்திய வீரனே, என் கண்ணீரைத் துடைத்திடுவாய். கண்ணா, விண்ணகப் பொருளே, சோதிக்கெல்லாம் ஜோதியே என் சொல்லைக் கேள், வா என் மானத்தைக் காப்பாற்று. ஹரி, ஹரி, ஹரி, ஹரி.

(துச்சாதனன் துகில் உரிய உரிய அவள் சேலை வளர்ந்து கொண்டே இருக்கிறது. அவன் கை சோர்ந்து மயக்கமடைகிறான்) 

தேவர்கள் பூமாரி சொரிந்தார். ஓம் ஓம் ஜய ஜய பாரத சக்தி ஜய ஜய பாரத சக்தி என்ற ஒலி கேட்கிறது.
                               காட்சி 3.
                        திருதராஷ்டிரன் அவை

பீமன்: 
தேவர்களே! கேளுங்கள். உங்கள் மீது ஆணை. பராசக்தி மீது ஆணை, தாமரைப் பூவில் வாழும் பிரம்ம தேவன் மீதாணை. எங்கள் தேவன் கண்ணன் மீது ஆணை. காமனைக் கண்ணால் எரித்த சிவபெருமான் கழல் மீதாணையிட்டுச் சொல்கிறேன்.
எங்கள் பெருமைக்குரிய திரெளபதி தேவியைத் தன் தொடை மீது வந்து இரு சொன்னானே துரியோதனன் அந்த நாய் மகனை இந்த அவையில் இருக்கும் மன்னர்கள் முன்னிலையில் என் தோள் வலியால் யுத்த ரங்கில் அவன் தொடையைப் பிளந்து கொல்வேன்.

அவன் தம்பி சூரத் துச்சாதனன் கடைப்பட்ட தோள்களைப் பிய்ப்பேன். அங்கு பீச்சியடிக்கும் அவன் ரத்தத்தைக் குடிப்பேன். உலகோரே, இவை நடக்கும் காண்பீர்! இது நான் சொல்லும் வார்த்தை இல்லை. தடையற்ற தெய்வத்தின் வார்த்தை. தேவீ! இதனை சாதனை செய்க பராசக்தீ!

அர்ச்சுனன்:  
தேவர்கள் சாட்சியாக நான் செய்யும் சபதம் கேட்பீர் அவையோரே. இந்தப் பாதகக் கர்ணனைப் போரில் கொல்வேன். இது விஷ்ணு மேல் ஆணை. எங்கள் சீரிய நண்பன் கண்ணன் கழலடி ஆணை. கார்த்தடங் கண்ணி எம் தேவி அவள் கண்ணிலும், என் காண்டீப வில்லின் மீதும் ஆணை. ஹே! பூதலமே அப்போது போர்த்தொழில் விந்தைகள் அனைத்தையும் காண்பாய்! இது சத்தியம்.

திரெளபதி:  
(ஓம்! ஓம்! ஓம்! ஒலி பரவிட)  
பராசக்தி மீது ஆணையிட்டு உரைப்பேன். என் துகில் உரிய முயன்ற அந்தப் பாவி துச்சாதனன் உடலினின்றும் பீச்சியடிக்கும் செந்நீர், அந்தப் பாழ் துரியோதனன் தொடை பிளந்து ஊற்றும் குருதி இவை இரண்டையும் கலந்து நெய்யாக என் குழலில் பூசி நறுநெய் குளித்தபின்னேதான் என் குழலை முடிப்பேன், அதுவரை என் கூந்தலை முடியேன் நான். கண்ணன் மீது ஆணை இது.

பின்னணிக் குரல்:  ஓம் ஓம் என்கின்றனர் தேவர். வானமும் ஓம் ஓம் என்று உறுமியது. பூமி அதிர்ச்சி உண்டாச்சு. விண்ணைப் பூழிப் படுத்தியதாம் சுழற்காற்று. தொடர்ந்து நிகழ்ந்த பல காரியங்களால் பாரதப் போர் நிகழ்ந்தது. தீயோர் மாள, நல்லோர் வாழ, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் அருள் கிட்டிய பாண்டவர் நாட்டை பலகாலம் மகிழ்வோடு ஆண்டனர்.
                 பாஞ்சாலி சபதக் காட்சி நிறைவு பெற்றது.



No comments: