பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, October 13, 2013

கவி காளமேகம் பாடல்கள்

                         கவி காளமேகம் பாடல்கள்
                                   காப்பு
1
ஏர்ஆனைக் காவில்உறை என்ஆனைக்கு அன்று அளித்த
போர் ஆனைக் கன்றுதனைப் போற்றினால் - வாராத
புத்திவரும்; பத்திவரும்; புத்திரஉற்பத்திவரும்;
சக்திவரும்; சித்திவரும் தான்.
2
வெள்ளைக் கலைஉடுத்து வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் - வெள்ளை
அரியா சனத்தில் அரசரேடு என்னைச்
சரியா சனம்வைத்த தாய். ..
3
பெருமாளும் நல்ல பெருமாள்! அவர்தம்
திருநாளும் நல்ல திருநாள்! - பெருமாள்
இருந்திடத்தில் சும்மா இராமையினால், ஐயோ!
பருந்துஎடுத்துப் போகிறதே பார்! ..
4
நச்சரவம் பூண்டதில்லை நாதரே; தேவரீர்
பிச்சையெடுத்து உண்ணப் புறப்பட்டும் - உச்சிதமாம்
காளம் ஏன்? குஞ்சரம் ஏன்? கார்க்கடல்போ லேமுழங்கும்
மேளம் ஏன்? ராசாங்கம் ஏன்? .
5
கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசிவரும்; குத்தி
உலையில்இட ஊர்அடங்கும்; ஓர்அகப்பை அன்னம்
இலையில்இட வெள்ளி எழும். .
6
மூப்பான் மழுவும், முராரிதிருச் சக்கரமும்
பார்ப்பான் கதையும் பறிபோச்சோ? - மாப்பார்
வலிமிகுந்த மும்மதத்து வாரணத்தை, ஐயோ!
எலி இழுத்துப் போகின்றது, ஏன்? .
7
அப்பன் இரந்துஉண்ணி; ஆத்தாள் மலைநீலி;
ஒப்பரிய மாமன் உறிதிருடி; - சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன்; ஆறுமுகத் தானுக்குஇங்கு
எண்ணும் பெருமை இவை.

8
ஆடாரோ பின்னைஅவர் அன்பர்எலாம் பார்த்திருக்க
நீடுஆரூர் வீதியிலே நின்றுதான்? - தோடுஆரூம்
மெய்க்கே பரிமளங்கள் வீசும் தியாகேசர்
கைக்கே பணம்இருந்தக் கால்..
9
மாயனார் போற்றும் மதுரா புரிச்சொக்க
நாயனார் பித்திஏறி னார்என்றே - நேயமாம்
கன்னல்மொழி அம்கயல்கண் காரிகையாள், ஐயையோ!
அன்னம்இறங் காமல்அலை வாள்..
10
காலனையும் காமனையும் காட்டுசிறுத் தொண்டர்தரு
பாலனையும் கொன்ற பழிபோமோ? - சீலமுடன்
நாட்டிலே வீற்றிருந்த நாதரே; நீர் திருச்செங்
காட்டிலே வீற்றிருந்தக் கால்.
11
நல்லதொரு புதுமை நாட்டில்கண் டேன்; அதனைச்
சொல்லவா? சொல்லவா? - சொல்லவா? தொல்லை
மதுரைவிக்கி னேச்சுரனை மாதுஉமையாள் பெற்றாள்
குதிரைவிற்க வந்தவனைக் கொண்டு.
12
கண்டீரோ? பெண்காள்; கடம்பவனத்து ஈசனார்
பெண்டீர் தமைச்சுமந்து பித்தனார் - எண்சிதைக்கும்
மிக்கான தங்கைக்கு மேலே நெருப்பை இட்டார்
அக்காளை எறினா ராம்!
13
மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர்
ஆட்டுக்கோ னுக்குப்பெண்டு ஆயினாள்; கேட்டிலையோ?
குட்டி மறிக்கஒரு கோட்டானையும் பெற்றாள்
கட்டிமணிச் சிற்றிடைச்சி காண்!
14
நாட்டுக்குள் ஆட்டுக்கு நாலுகால், ஐயா! நின்
ஆட்டுக்கு இரண்டுகால் ஆனாலும், - நாட்டம் உள்ள
சீர்மேவு தில்லைச் சிவனே; இல் ஆட்டைவிட்டுப்
போமோ,சொல் வாய்! அப் புலி?             
15
கொங்குஉலகும் தென்தில்லைக் கோவிந்தக் கோன்இருக்கக்
கங்குல்பகல் அண்டர்பலர் காத்திருக்கச் செங்கையிலே
ஓடு எடுத்த அம்பலவா; ஓங்குதில்லை உன்புகுந்தே
ஆடுஎடுத்தது எந்தஉபா யம்?
16
ஆடும் தியாகரே! ஆட்டம்ஏன் தான்உமக்கு?
வீடும் சமுசாரம் மேலிட்டுக் -கூடிச்
செருக்கிலினை யாடச் சிறுவர்இரண்டு ஆச்சே!
இருக்கும்ஊர் ஒற்றிஆச் சே!
17
வாதக்கால் ஆம்தமக்கு; மைத்துனர்க்கு நீரிழிவுஆம்;
பேதப் பெருவயிறுஆம் பிள்ளைதனக்கு! - ஓதக் கேள்!
வந்தவினை தீர்க்க வகை அறிவார் வேறூரார்
எந்தவினை தீர்ப்பார் இவர்?
18
தீத்தான்உன் கண்ணிலே; தீத்தான்உன் கையிலே;
தீத்தானும் உன்தன் சிரிப்பிலே, தீத்தான்உன்
மெய்எலாம்! புள்இருக்கும் வேளூரா; உன்னை இந்தத்
தையலாள் எப்படிச் சேர்ந் தாள்?



2 comments:

இராஜராஜேஸ்வரி said...

அருமையான பாடல் பகிர்வுகள்..பாராட்டுக்கள்//

துரை செல்வராஜூ said...

எல்லாமே இரு பொருள் தரும் கவிகள்!.. அன்னை அகிலாண்டேஸ்வரியின் அருளால் கவி பொழிந்த காளமேகம் புகழ் தமிழ் கூறும் நல்லுலகில் என்றும் நிலைத்திருக்கும்!..