பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, September 4, 2013

ஸ்ரீசுதர்சன மகா சக்கரம்.

                                    ஸ்ரீசுதர்சன மகா சக்கரம்.

ஸ்ரீமகா விஷ்ணுவை நினைக்கின்ற போது நமக்கு அழகொழுக நிற்கும் நாராயணனோடு, அவரது திருக்கரங்கள் தாங்கி நிற்கும் சங்கும் சக்கரமும் காட்சி தருகின்றதல்லவா? அந்த சக்கரமே சுதர்சன சக்கரம்; அது 108 கூர்மையான முனைகளைக் கொண்ட சக்கரம் என்கிறது புராணங்கள். ஸ்ரீமன் நாராயணனுடைய நான்கு கரங்களில் வலது பின் கரத்தில் தாங்கியிருப்பது சுதர்சன சக்கரம். இடது முன் கரத்திலிருப்பது சங்கு. மற்ற இரு கரங்களிலும் ஒன்றில் கதையும் மற்றதில் தாமரையும் இருப்பதை நாம் தரிசனம் செய்திருக்கிறோம்.

நாராயணனுடைய கரத்தில் தங்கியிருக்கும் இந்த சுதர்சனமே எதிரிகளை சம்ஹாரம் செய்யும் வலிமையான ஆயுதமாகப் புராணங்கள் விளக்குகின்றன. இந்த சுதர்சனத்தைத் தாங்கியிருப்பதிலிருந்தே உயிர்களைக் காக்க எதிரிகளை சம்ஹாரம் செய்யும் காக்கும் கடவுளாக மகாவிஷ்ணு திகழ்வது தெரிகிறதல்லவா?

இந்த 'சுதர்சனம்' எனும் சொல் இருவேறு சம்ஸ்கிருத சொற்களால் உருவானது. இதில் 'ஸு' என்பது தெய்வீகத் தன்மையுள்ள என்பதையும், 'தர்ஸனம்' என்பது காட்சி என்பதும் பொருள் தருகிறது. புனிதமான அல்லது நன்மை பயக்கும் காட்சி என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். புனிதமான ஹோமங்களை நடத்தும்போது சுதர்சனம் வழிபாடு செய்யப்படுகிறது. இதனால் தீமைகளையும், தீயசக்திகளையும், எதிர்மறையான செயல்பாடுகளையும் நீக்கி நன்மைகளைப் பயக்கச் செய்கிறது. சக்கரம் ஒரு உருளை, அது ஓரிடத்தில் தங்காதது என்பதும் தெரிகிறதல்லவா, அதுபோலவே சுதர்சன சக்கரம் வேதகால ஆயுதங்களில் ஓரிடத்தில் தங்காது சுழன்று தீமைகளை அழிக்க வல்லது என்பது புலனாகிறது.

சுதர்சன சக்கரம் குறித்து பல்வேறு செய்திகள் சொல்லப்பட்டாலும், வைணவ சம்ப்ரதாயத்தின்படி மகாவிஷ்ணுவின் கையில் இருக்கும் ஆயுதமாக, தீமைகளை வென்று நன்மை பயக்கும் ஆயுதமாக இது பார்க்கப் படுகிறது. ஒரு வரலாற்றுச் செய்தியின்படி மகாவிஷ்ணுவுக்கு சிவபெருமான் இந்த சக்கரத்தைக் கொடுத்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மற்றொரு செய்தியின்படி விஸ்வகர்மா தயாரித்துக் கொடுத்தது இந்த சுதர்சனம் என்பர்.

சுதர்சன சக்கரத்தின் பயன்பாடு இந்து புராணங்களில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. ரிக், யஜுர், சாமவேதங்களிலும், புராணங்களிலும் இது தீமையை அழித்து நல்லோரைக் காக்கும் சக்கரமாக விமர்சிக்கப்பட்டிருக்கிறது. மகாபாரதத்தில் சிசுபாலனின் தலை ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவால் இந்த சுதர்சன சக்கரம் கொண்டு வெட்டப்பட்டதாகக் கூறப்பட்டிருக்கிறது. சிசுபாலனின் 100 தவறுகள் வரை பொறுத்துக் கொண்ட கிருஷ்ண பரமாத்மா அந்த எல்லையை அவன் தாண்டியதும் இந்த தண்டனையை அவனுக்கு அளித்ததாக மகாபாரதம் கூறுகிறது. பாற்கடலைக் கடைய மந்தர மலையை இந்த சுதர்சனம் கொண்டுதான் வெட்டி கடலைக் கடைய பயன்படுத்தியதாகப் புராணம் கூறுகிறது.

சுதர்சன சக்கரத்தை தமிழில் ஆழ்வார்களும், வைணவர்களும் சக்கராத்தாழ்வார் என்ற பெயரில் வணங்கி வருகிறார்கள். எப்போதெல்லாம் தாங்கமுடியாத துன்பங்களாலும், எதிரிகளாலும் வேதனைப் படுகிறார்களோ அப்போதெல்லாம் சுதர்சனத்தை வழிபட்டு துன்பத்திலிருந்து விடுபெறுகிறார்கள். அப்படி சுதர்சனத்தின் கருணையை, பாதுகாப்பைப் பெறுவதற்காக சுதர்சன ஹோமம் செய்கிறார்கள். அக்னி மூட்டி, அதில் சுதர்சனரையும், விஜயவல்லியையும் அதில் ஆவாஹனம் செய்து ஹோமத்தீயில் நெய் முதலான ஹோம திரவியங்களைப் பெய்து வழிபாடு செய்வதன் மூலம் வேண்டிய பலன் கிட்டுகிறது.

சுதர்சனருக்கு முக்கியத்துவம் தந்து பல ஆலயங்கள் இருக்கின்றன. குறிப்பாக தென் இந்தியாவில் நாகமங்கலம் எனுமிடத்தில் ஸ்ரீ சுதர்சன பகவான் கோயிலிலும், ஸ்ரீரங்கப்பட்டினத்தில் ஸ்ரீ சுட்ஹர்சன சன்னிதியிலும், கும்பகோணம் சக்ரபாணி ஆலயத்திலும், மதுரைக்கருகிலுள்ள திருமோகூர்  ஆலயத்திலும், 
ஒப்பிலியப்பன் ஆலயத்திலும், காஞ்சிபுரம் ஸ்ரீ தேவனாதசாமி ஆலயத்திலும்  சுதர்சனர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

எதிரிகளாலும், கெட்ட ஆவிகளாலும், உடல் நலக் குறைவினாலும், வியாதிகளினாலும் துன்பம் மிக உழன்று வருந்துவோர் சுதர்சன ஹோமம் செய்விப்பதன் மூலம் அந்த துன்பங்களிலிருந்து விடுதலை அடைகிறார்கள் என்பது நாம் அறிந்ததொன்று. அவை தவிர தொழிலில் முன்னேறவும், வர்த்தகம் பெருகவும் இந்த ஹோமத்தை சிரத்தையுடன் செய்கின்றனர். இந்த ஹோமத்தை எப்போது செய்யலாம்? மகாவிஷ்ணுவுக்கு பிரிதீயான நாட்களில் இந்த ஹோமத்தைச் செய்வது சாலச் சிறந்தது. குறிப்பாக ஏகாதசி, த்வாதசி, பெளர்ணமி ஆகிய நாட்களில், அதிலும் இவை புதன் அல்லது சனிக்கிழமைகளில் இருந்தால் சிறப்பானது என்று சொல்லப்படுகிறது. இந்த சுதர்சன ஹோமத்தை மிகுந்த சிரத்தையுடன் செய்திட வேண்டும். ஏனோதானோ வென்று செய்திடமுடியாது. இது மிக சக்திவாய்ந்த ஹோமம் என்பதால், எண்ணத்தாலும், நடத்தையாலும், உடையாலும் சுத்தமாக இருந்து, மந்திரங்களை அக்ஷரப் பிசகில்லாமல் சொல்லிச் செய்ய வேண்டும். தகுந்த, அதற்கான சிரேயஸ் பெற்றிருக்கிற ஆச்சார்யார்களைக் கொண்டு செய்வது சாலச் சிறந்தது. அப்படிப்பட்ட, இதனைச் செய்யக்கூடிய அருகதையுள்ள ஆச்சார்யார்கள் யார் என்பதை நன்கு அறிந்து தெரிந்து செய்திட வேண்டும்.

இந்த ஹோமத்தால், அல்லது ஜபத்தால் ஆகும் நன்மைகள் எவை? பீடா பரிஹாரம் முதலாவது. அடுத்து பாப நாசனம், செய்த வினைகள் தீருவது, நாராயணனிடம் அடிபணிந்து வேண்டி செய்த பாபங்களைத் தீர்த்துவிடுதல் இதன் மூலம் முடியும். உடல் நலம் தளர்தல், மன உளைச்சல், பிரம்ம ராக்ஷஸ் தொல்லை போன்றவற்றிலிருந்து காக்கும் வல்லமை படைத்தது இது. சுதர்சன அஷ்டகம் எனும் பெயரில் ஒரு ஸ்லோகத்தை ஸ்வாமி தேசிகன் இயற்றித் தந்திருக்கிறார். ஒரு முறை கிராமம் ஒன்றில் பிளேக் எனும் கொடிய தொற்று நோய் பரவியதாம். அப்போது தேசிகன் இந்த அஷ்டகத்தை இயற்றிப் பாட, அது உடனே அடங்கி ஒடுங்கியதாக வரலாறு.

இந்த ஹோமத்தின் நிறைவில், கர்த்தா நல்ல ஆரோக்கியமும், செல்வமும், வாழ்வில் முன்னேற்றமும் அடைவார் என்பது உறுதி. சுதர்சன மூலமந்திரம் குரு உபதேசத்தின் மூலம் பெற்றவர்களால் உரிய முறையில் பயன்படுத்தப் படுகிறது. பலகோடி முறை சுதர்சன மந்திரம் உச்சாடனம் செய்து, சுதர்சனத்தின் மூலம் அரிய பெரிய காரியங்களை அவர்களால் செய்ய முடிகிறது.
        

3 comments:

துரை செல்வராஜூ said...

ஸ்ரீ சுதர்சன சக்ரத்தைப் பற்றிய விளக்கமான தகவல்கள்!.. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக் கோயிலிலும் தனித்தன்மையான ஸ்ரீசுதர்சனர் சந்நிதி விளங்குகின்றது!..

Dr. Sri Muralidhara Swamigal said...

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை அனந்தைல மதுராவில் அமந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திலும் சுதர்சனருக்கென்று தனி சன்னிதி அமைந்துள்ளது.

www.dhanvantripeedam.com
www.danvantripeedam.blogspot.in

UmayalGayathri said...

ஶ்ரீ சுதர்சன சக்ரத்தைப் பற்றி நன்கு அறிந்தேன் ஐயா நன்றி