பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, December 3, 2011

ஒரு திகில் பயணம்

நட்டநடுநிசியில் ஒரு திகில் பயணம்

ஏதோ ஒரு மர்மக் கதை சொல்லி பயமுறுத்தப் போவதாக நினைக்காதீர்கள். உண்மையில் நான் சந்தித்த நிகழ்ச்சி இது. நான் ஒன்றும் மாபெரும் வீரனும் அல்ல, அதே சமயம் நிழலைக்கூட கண்டு அஞ்சும் கோழையும் அல்ல. அது 1968ஆம் ஆண்டு நான் இளைஞன் கரூரில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். என் உறவினர்கள் எல்லோரும் தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக மயிலாடுதுறை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்தார்கள். அவ்வாண்டு தீபாவளி பண்டிகையை எங்கு கொண்டாடலாம் என்று யோசித்த போது மயிலாடுதுறையை அடுத்த மங்கநல்லூர் என்கிற கிராமத்தில் இருந்த என் உறவினர் என்னைக் கண்டிப்பாக அவர்கள் வீட்டுக்கு வரச் சொன்னதால் அங்கு செல்வதாகத் தீர்மானித்தேன். எனக்கும் மிகவும் பிடித்த ஊர் அது. மாயூரம் திருவாரூர் வழித்தடத்தில் மாயூரத்திலிருந்து சுமார் பத்து கி.மீ. தூரத்தில் மங்கநல்லூர் கடைவீதி இருக்கிறது. அங்கிருந்து சுமார் 2 கி.மீ. மேற்கு திசையில் வீரசோழன் ஆற்றங்கரை சாலையோடு போனால் மேலமங்கநல்லூர் வரும். அங்குதான் என் உறவினர் வீடு. மங்கநல்லூர் கடைவீதியிலிருந்து மேல மங்கநல்லூரிலுள்ள தெருவரையில் சாலையில் அப்போது ஒரு வீடுகூட கிடையாது . ஒரு புறம் சலசலத்து ஓடும் வீரசோழன் ஆறு. மறு புறம் பச்சை பசேலென்ற வயல் வெளிகள். அப்போது அங்கு தார் சாலை கிடையாது. மண் சாலைதான். அதில் மாட்டு வண்டிகள் போய்க்கொண்டே இருப்பதால் சாலையில் இருகோடுகள் போல தடம் ஏற்பட்டிருக்கும். இந்த 2 கி.மீ. தூரம் கடப்பதற்குள் சாலைக்கும் வீரசோழன் ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதிகளில் நான்கு இடங்களில் சுற்றுப்புற கிராமங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த சுடுகாடு இருக்கிறது. இது அந்தப் பகுதி பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம். பகல் நேரத்தில் மேல மங்கநல்லூர், அனந்தநல்லூர், கந்தமங்கலம், கோமல் ஆகிய ஊர்களிலிருந்து வருவோரும் போவோரும் மாட்டு வண்டிகளும் ஓரளவு போய்க்கொண்டிருக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் அந்த சாலை வழியாக மக்கள் போய்வர ஒன்றும் பிரச்சினை இருந்ததில்லை. ஆனால் இரவு ஆகிவிட்டால் அந்த சாலையில் நடப்பது சற்று சிரமமான காரியம்தான். கடைவீதியில் வேலைகளை முடித்துவிட்டு மேற்சொன்ன கிராமங்களுக்குச் செல்வோரும், கடை வைத்திருப்போரும் ஊருக்கு இரவு ஒன்பது மணிக்குள் திரும்பி விடுவார்கள். அதற்குப் பிறகு அந்த சாலையில் போக்கு வரத்து இருக்காது. யாராவது சைக்கிளில் போவோர் வருவோர் இருந்தால் பறந்து அடித்துக் கொண்டு சைக்கிளை மிதித்துக் கொண்டு போய்விடுவார்கள். இரவு நேரத்தில் அந்த சாலை ஓரத்தில் ஏதாவது பிணம் எரிந்து கொண்டிருந்தால் கேட்கவே வேண்டாம். தனியாக யாரும் வரத் துணிய மாட்டார்கள், யாராவது துணை இருந்தால் மட்டுமே அந்தச் சாலையைக் கடந்து செல்வார்கள். நான் சொல்லப்போவது 1968இல் நடந்தது என்பதை மறுபடியும் நினைவூட்டிவிட்டு அந்த நிகழ்ச்சியை உங்களுக்குச் சொல்லுகிறேன்.

தீபாவளிக்கு முதல் நாள் கூட எனக்கு அலுவலகம் இருந்தது. அன்று மாலை 4 மணிக்கு அனைவரும் அவரவர் போக வேண்டிய ஊர்களுக்குப் போக வசதியாக கிளம்பலாம் என்று அலுவலகத்தில் அனுமதி அளித்தார்கள். நான் காலையிலேயே ஊருக்குப் போக பெட்டி, பைகளோடு அலுவலகத்துக்கு வந்துவிட்ட படியால் அங்கிருந்து நேராக பேருந்து நிலையத்தை அடைந்தேன். அங்கு ஏராளமான கூட்டம். திருச்சி பேருந்துக்கு ஒரே அடிதடி. எப்படியோ ஒருவழியாக எனக்குத் தெரிந்த DSM பஸ் கம்பெனி முதலாளியின் மகனுக்குச் சொல்லி ஒரு இடம் வாங்கி ஏறி அமர்ந்தேன். அப்போதெல்லாம் கரூரிலிருந்து திருச்சிக்கு வர சுமார் நான்கு மணி நேரம் ஆகும். வழியில் குளித்தலை நிலையத்தில் ஒரு கால் மணி நிற்கும். பிறகு திருச்சி நகருக்குள் நுழைய கரூர் டர்னிங் என்ற குருகலான வளைவுப் பகுதி, சிந்தாமணி எனுமிடத்தில். அதில் புகுந்து திருச்சி வரும்போது இரவு 8 மணி ஆகிவிட்டது. 

திருச்சியிலிருந்து தஞ்சாவூர் வந்து பிறகு மாயூரம் பேருந்துக்குக் காத்திருந்தால் எல்லாவற்றிலும் பயங்கரக் கூட்டம். சரி கும்பகோணம் வழியாக மாயூரம் போவது முடியாதது என்று திருவாரூர் போகும் பேருந்தில் ஏறிவிட்டேன். அங்கிருந்து மாயூரம் பேருந்தில் போய் மங்கநல்லூர் கடைவீதியில் இறங்கிப் போய்விடலாம் என்ற நினைப்பு. மெதுவாக திருவாரூர் போய்ச் சேரும் போது இரவு 12 க்கு மேல் ஆகிவிட்டது. அங்கிருந்து மாயூரம் பேருந்தில் ஏறி மங்கநல்லூர் கடைவீதியில் இறங்கும்போது இரவு மணி 1. கடைத்தெரு வெறுச்சோடிக் கிடந்தது. இரவு ஒரு மணிக்கு பிசாசுகள் ஓடிப்பிடித்து விளையாடும் நேரத்தில் மனிதர்கள் எங்கே விழித்திருப்பார்கள். என்ன செய்வது அங்கு ஒரு சாலை மாயூரம் போகும், மற்றொன்று திருவாரூர், மேற்கே போவது மேல மங்கநல்லூருக்கு. அங்கு ஒரு ரயில்வே கேட் உண்டு. அதுவரை மெதுவாக நடந்து போனேன். அதன் பின் ஒரே இருட்டு. மறுநாள் அமாவாசை அல்லவா? கண் தெரியவில்லை. சரி, யாராவது வராமலா போய்விடுவார்கள் அவர்களோடு மெல்ல போய்விடலாம் என்று வெகு நேரம் காத்திருந்தேன். ஒரு ஈ அல்லது காக்காய் கூட காணோம். என்ன செய்வது என்று புரியவில்லை. அந்த நள்ளிரவிலும் எனக்கு வியர்க்க ஆரம்பித்தது. அங்கே ரயில்வே கேட் அருகில் சிக்னல் அறையில் தூங்கிக் கொண்டிருந்த கேட் கீப்பருக்கு விழிப்பு ஏற்பட்டுவிட்டது போலிருக்கிறது. என்னை அருகில் வந்து ஒரு முறை பார்த்தார் அவர். என்னைத் தெரியாவிட்டாலும் நான் மேலமங்கநல்லூர் அக்ரகாரத்துக்குப் போகிறவன் என்பதை புரிந்து கொண்டார். "என்ன குழந்தை! இந்த நேரத்திலே எப்பிடி போவே. கொஞ்ச நேரம் இங்கே உட்கார்ந்திரு. யாராவது வண்டி, சைக்கிள் ஏதாவது வந்தா உன்னையும் அனுப்பிவிடறேன்" என்றார். அவர் குழந்தை என்று அழைத்ததால் நான் சின்ன குழந்தை என்று நினைக்காதீர்கள். அந்த பக்கமெல்லாம் அவ்வூர் இளைஞர்களை அப்படித்தான் அழைப்பார்கள்.

நான் காத்துக் கொண்டிருந்தேன். என் அதிர்ஷ்டம் போலிருக்கிறது. அன்றைக்கென்று ஒருவரையும் காணோம். முக்கால் மணிக்கு மேல் ஆகிவிட்டது. இனியும் காத்திருப்பதில் பலனில்லை. கிளம்பலாம் என்று துணிந்து புறப்பட்டேன். கேட் கீப்பர் மறுபடியும் போய் படுத்து நன்றாக உறங்க ஆரம்பித்து விட்டார். நான் ஆற்றங்கரையோடு சாலையில் நடக்க ஆரம்பித்தேன். அப்போதெல்லாம் அந்த சாலையில் மின் விளக்குகளும் கிடையாது. முதலில் ஒரு வாய்க்கால் பிரியும் மதகு, அதில் தண்ணீர் சலசல வென்று ஓடும் சத்தமும், சுற்றிலும் தவளைகளும் சில்வண்டுகளும் இடும் கூச்சலும் கேட்டுக் கொண்டிருந்தன. அதுவரை இருந்த தைரியம் சற்று கலகலக்க ஆரம்பித்தது. வந்தது வரட்டுமென்று வலம் இடம் என்று எந்தப் புறமும் பார்க்காமல், குனிந்த நிலையில் தரையை மட்டும் பார்த்தவாறு விறுவிறு வென்று என்னால் முடிந்த அளவு வேகமாக நடக்க ஆரம்பித்தேன். நான் நடந்த வேகத்தில் முதல் சுடுகாடு கடந்து விட்டதைக் கவனிக்கவில்லை. பின்னர் அடுத்தது வரும் என்பது தெரியும். அதையும் ஒருபுறமும் பார்க்காமல் நடந்து கடந்துவிட்டேன். அப்போது தூரத்தில் ஏதோ ஒரு மாட்டுவண்டி எதிர்த்திசையிலிருந்து வரும் சத்தம் கேட்டது.

நின்று கவனித்தேன். எங்கோ வெகு தூரத்தில் மாட்டை 'ஹை, ஹை' என்று வண்டிக்காரர் ஓட்டும் சத்தம் மட்டும் கேட்டது. சரி இனி தைரியமாகப் போய்விடலாம் என்று நடையைத் துரிதப்படுத்தினேன். ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒன்றும் தெரியவில்லை. ஒரே இருட்டுதான் இருந்தது. நான்காவது சுடுகாட்டை நெருங்கியிருந்தேன். அதுதான் மேலமங்கநல்லூருக்கான சுடுகாடு. அது இருக்கும் இடம் எனக்கு அத்துபடி. அதனால் நான் பார்க்கக்கூடாது என்று தலையைக் குனிந்து கொண்டே வந்தாலும், என்னை அறியாமல் அந்தப் பக்கம் பார்க்கும்படியாகிவிட்டது. அங்கு ஒன்றும் தெரியவில்லை. அருகில் வளர்ந்திருந்த புதர் போன்ற செடிகள் காற்றில் ஆடி அசைவது யாரோ அங்கு நடப்பது போல இருந்தது. என்ன இது? நான் தண்ணீரில் இறங்கி குளித்து விட்டேனா என்ன? என் சட்டையெல்லாம் தொப்பலாக நனைந்திருந்தது. சரி இன்றோடு தீர்ந்தது. பயத்திலேயே என் உயிர் போகப் போகிறது என்று உடல் நடுங்க, அந்த இடத்தை மின்னல் வேகத்தில் கடந்து சென்றேன். அப்போது நான் ஊரை நெருங்கி வந்து விட்டேன். அங்கு படித்துறையும் பிள்ளையார் கோயிலும், அதையொட்டி ஒரு சின்ன பாலமும் இருந்தது. அதன் மீது நான் முன்பு கேட்ட ஒலிக்குக் காரணமான வண்டியும் வண்டியோட்டியும் அடுத்த கரையில் இருந்த வாளராக்குப்பம் எனும் ஊருக்குச் சென்று கொண்டிருப்பதைக் கண்டேன். பாலத்துக்கு இடப்புறம் நான் செல்ல வேண்டிய மேல மங்கநல்லூர் தெருவுக்குள்ள திருப்பம். அங்குள்ள குளம் நீர் நிரம்பி தளும்பிக் கொண்டிருந்தது. அடுத்து சிவன் கோயில் அதைத் தாண்டியதும் கிழக்கு மேற்காக இருந்த தெரு. ஏழெட்டு வீடு தாண்டித்தான் என் உறவினர் வீடு. வீட்டு வாசலுக்குப் போகும்போது மணி மூன்று இருக்கலாம். வாயில் திண்ணையில் படுத்திருந்த என் ஒன்றுவிட்ட சகோதரர் என்னைப் பார்த்ததும், என்னடா இது இந்த நேரத்தில், பொழுதோடு வந்திருக்கக்கூடாதோ, அல்லது எனக்குச் சொல்லியிருந்தால் வண்டி கட்டிக்கொண்டு வந்து அழைத்து வந்திருப்பேனே என்றார். அதெல்லாம் சரிதான். நான் இருந்த நிலையில் அவருக்குப் பதில் சொல்லும்படியாகவா இருந்தது.

அவர் என்னருகில் வந்து என் தோளில் கைபோட்டு அணைத்துக் கொண்டார். உடனே, "என்னடா இது! உன் சட்டையெல்லாம் நனைந்திருக்கிறது?" என்றார். அவருக்கென்ன. இதே ஊரில் இரவோ பகலோ அந்த சாலையில் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருப்பவர். எனக்கல்லவா தெரியும். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வந்து சேர்ந்த விஷயம். மறுநாள் வீட்டில் எல்லோரும் என்னை வியந்து பாராட்டினார்கள். பரவாயில்லை பயப்படாமல் நள்ளிரவில் இந்த சாலையில் எப்படி தைரியமாக வந்திருக்கிறான். இதுவல்லவா தைரியம் என்றெல்லாம் அவர்கள் என்னைப் பாராட்டினார்கள். எனக்கல்லவா தெரியும் நான் செத்துப் பிழைத்து வந்தது. இவர்களுக்கென்ன சொல்லிக் கொள்ளட்டும், என்னை ஏதோ மகா தைரியசாலி என்று பாராட்டிக் கொள்ளட்டுமே, அதை ஏன் நான் உண்மையைச் சொல்லி கெடுக்க வேண்டும் என்று சும்மா இருந்து விட்டேன். அதன் பிறகு இதுபோல வீரதீர சூரத்தனமான துணிச்சல் விளையாட்டுகளின் பக்கமே போவதில்லை என்று உறுதி எடுத்துக் கொண்டுவிட்டேன். 





2 comments:

Unknown said...

இளங்கன்று பயமறியாது என்பார்கள் உங்களின் அனுபவமும் அது போன்றே இருக்கிறது...
நல்ல அனுபவம்...

எனக்கு இது போன்று பல தருணம் இருந்திருக்கிறது அப்போது எனக்குக் கை கொடுத்தது எல்லாம்...
ஐயப்ப பக்திப் பாடல்களை மிகவும் உரக்கப் பாடிக்கொண்டேயும், சரண கோசம் சொல்லிக் கொண்டேயுமே சென்றிருக்கிறேன்.

தங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

Anonymous said...

appa, indha kadhai enaku theriyathe??
suresh,
mozambique.