பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, October 4, 2011

மராத்திய மன்னர்களின் வாழ்க்கை

மராத்திய மன்னர்களின் வாழ்க்கையும், நாட்டின் நிலைமையும்.

தஞ்சையை ஆண்ட முதல் மராட்டிய மன்னர் ஏகோஜி என்பது அனைவரும் அறிந்ததே. இவருக்குத் தீபாபாய், அண்ணுபாய் என இரு மனைவியர் இருந்தனர். இவர்கள் தவிர கங்காபாய் என ஒரு மனைவியும் இருந்ததாக ஒரு குறிப்பிலிருந்து தெரிய வருகிறது. அந்தக் குறிப்பு, "1776இல் கைலாசவாசி ஏகோஜி ராஜா சம்சாரம் கங்காபாய் பரலோகம் அடைந்ததற்கு உத்தரகிரியைக்கு 50 சக்கரம் வழங்கப்பட்டது" என்பது. ஏகோஜிக்கு ஆசை நாயகிகளாக இருந்தவர்கள் 30 பேர் என்பதால் இந்த கங்காபாய் அவர்களில் ஒருவராக இருத்தல் கூடும். ஏகோஜி 1682இல் காலமானர், அவருடைய மனைவி என குறிப்பிடப்படும் கங்காபாய் 1776இல் இறந்தார் என்றால் ஏகோஜிக்குப் பிறகு அத்தனை நாட்களா உயிரோடு இருந்தார்கள்? குழப்பமான செய்திதான்.

ஏகோஜிக்குப் பிறகு அவருடைய மூன்றாவது மகனான துக்கோஜி ஆட்சிக்கு வந்தார். இவருக்குத் திருமணம் செய்து கொண்ட மனைவியர் ஐவரோடு சேர்த்துக்கொள்ளப்பட்டவர் அறுவர் என்று தெரிகிறது. இந்த அறுவருள் ஒருவர் கத்திக் கல்யாணம் செய்துகொண்ட மராத்தியப் பெண் அன்னபூர்ணாபாயி என்பவரும் ஒருவர். அவருடைய மகன் தான் பிரதாபசிம்மன். இவரைத் தவிர சாமாபாயி என்றொரு பெண்ணும் இருந்ததாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. துக்கோஜி 1736இல் தெய்வகதி அடைந்தார் என்ற குறிப்பினால் அவர் இறந்த ஆண்டு உறுதியாகிறது. அவருடைய மனைவியருள் ஒருவரான லக்ஷும்பாயி என்பவர் 1779இல் இறந்தார் என்று குறிப்பிடப் படுவதால், கணவன் இறந்த பின் இவர் 43 ஆண்டுகள் வாழ்ந்தார் எனக் கொள்ளலாம். துக்கோஜிக்கு அன்னபூர்ணாபாயிக்குப் பிறந்த பிரதாபசிம்ம ராஜா தான் அரசன் ஆனதும் தனது மாற்றாந்தாயான இந்த லக்ஷும்பாயி என்பவரின் நினைவாக மாதிரிமங்கலம் எனும் கிராமத்தில் நிலக்கொடை கொடுத்ததாக ஒரு செய்தி கூறுகிறது.

துக்கோஜிக்குப் பிறகு இரண்டாம் ஏகோஜி எனும் பாவாசாஹேப் ஆட்சிக்கு வந்தார். இவருக்கு ஆறு மனைவியர். அவர்களுள் மூத்தவர் சுஜான்பாயி எனும் ராணி. பாவாசாஹேப் இறந்த பின் இவருக்குப் பிள்ளைகள் இல்லாமையால் மூத்த மனைவியான சுஜான்பாயிதான் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார். இது பற்றிய குறிப்புகள் 1857இல் இரண்டாம் சிவாஜியின் மனைவி காமாட்சியம்பாபாயி அவர்கள் சென்னை உயர் நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கு சம்பந்தமான ஆவணமொன்றில் இருக்கின்றன. "தஞ்சாவூரில் ஐந்தாவது மன்னராக பாவாசாஹேப் புத்திர சந்தானமில்லாமல் ஆறு பெண்சாதிகளை விட்டுவிட்டு இறந்து விட்டார்கள் அல்லவா? அவர்களுள் முதல் சம்சாரமான சுஜான்பாயி என்பவர்கள் அவருடைய எல்லா ராஜ்யமும் தான் முக்கியமுடையவர் என்று எல்லாவற்றையும் வசப்படுத்திக் கொண்டு ராஜ்யபாரம் நடத்தினார்" என்று குறிப்பிடுகிறது.

துக்கோஜி ராஜாவுக்கு நாயுடு சாதியில் ஐந்து பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்ட மனைவியராக இருந்திருக்கின்றனர். இவர்கள் மூலமாக அவருக்குப் பிறந்த பிள்ளைகள் மாலோஜிராஜா, அரிச்சந்திரராஜா என்கிற அண்ணாசாஹேப், நானாசாஹேப் என மூவர். இம்மூவரும் துக்கோஜி இருந்தபோதே காலமாகிவிட்டனர். இதில் நானாசாஹேப் என்பவருக்கு அப்பூசாஹேப் என்று ஒரு மகன் இருந்தார். இவர் சரபோஜி IV காலத்திலும் உயிரோடு இருந்திருக்கிறார் என்பது இவர் சென்னை ஆங்கிலேய கவர்னருக்கு எழுதிய ஒரு கடிதம் மூலம் தெரிய வருகிறது. அந்தக் கடிதத்தில் அவர் எழுதுவதாவது. "எங்களுக்கு வேறு வாசற்படி வைத்துச் சுவர் எழுப்பிச் சரபோஜி மகாராஜா ஜனங்க்கள் நமது பக்கம் வராமல், எங்களுக்கு ஒருவித அபாயமும் வராமல் பாதுகாப்புக்கு உங்க்கள் பாரா ஒன்று நியமிக்க வேணும். நாங்க்கள் வெளியே சுவாமி தரிசனத்துக்குப் போகும்போதும் வரும்போதும் தகுந்த பந்தோபஸ்துகள் செய்துகொண்டு வரவேண்டும். நாங்கள் ஏகோஜியின் வமிசத்தார். சரபோஜி மகாராஜா அவர்கள் எங்கள் பிள்ளைகளுக்கு அநியாய போதனை செய்து மித்திர பேதம் செய்து வருகிறார். சரபோஜி மகாராஜா எங்களுக்குச் சத்ரு. ஆகையால் எந்த நேரத்தில் எங்களுக்கு அபாயம் வருமோ என்று அவருக்கு உட்பட்டு நடந்து வருகிறோம்". இதிலிருந்து இவ்விருவருகுள் நல்ல உறவு இருக்கவில்லை என்பது தெரிய வருகிறது.

பிரதாபசிம்ம மகாராஜாவுக்கு ஐந்து மனைவியர் என்றும், சேர்த்துக் கொள்ளப்பட்ட ஆசை மனைவியர் ஏழு பேரும் இருந்தனர் என்பதைப் பார்த்தோமல்லவா? இவருக்குப் பின் பதவிக்கு வந்த இவரது மகன் துளஜா ராஜாவுக்கு ஆறு மனைவியர். இவருக்கு ஆசை நாயகிகள் குறித்து விவரங்கள் இல்லை. இந்த துளஜா ஸ்வீகாரம் எடுத்துக் கொண்ட சரபோஜி IVக்கு இரண்டு மனைவியர். இவர் சேர்த்துக் கொண்ட நாயகிகள் பலர். இது போன்ற ஆசைக் கிழத்தியர் அனைவரையும் ஒரு தனி மாளிகையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அந்த மாளிகைக்கு "கல்யாண மகால்" என்று பெயர். இங்கு உள்ளப் பெண்களை கல்யாணமால் மகளிர் என்பர். சரபோஜிய்ன் மகன் சிவாஜி IIக்கு முறைப்படி மணந்து கொண்ட மனைவியர் மூவர். அதன் பின் இவருக்குக் குழந்தைகள் இல்லை என்பதால் ஒரே நாளில் இவர் 17 பெண்களை மணந்து கொண்டிருக்கிறார். அதன் பின் இவர் நீண்ட நாட்கள் வாழவில்லை. மூன்று ஆண்டுகளில் இறந்தும் போய்விட்டார். அப்படி இவர் சேர்த்துக் கொண்ட மகளிர் மங்களவிலாஸ் எனும் மாளிகையில் வாழ்ந்து வந்தனர்.

இப்படி மராத்திய மன்னர்கள் திருமணம் செய்துகொண்ட மனைவிமார்களும், சேர்த்துக் கொண்ட மாதர்களும், மாண்டவர் போக மீதமிருந்தவர்கள் நெடு நாட்கள் உயிரோடு இருந்திருக்கின்றனர். இவர்களை யெல்லாம் இந்த மாளிகைகளில் வைத்துக் காப்பாற்றி வந்திருக்கின்றனர். இப்படி இந்தக் குடும்பங்களுக்காக செலவு செய்யப்பட்டிருக்கிறது.

தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்கள் மராத்தியப் பிரதேசத்திலிருந்து வந்தவர்களாதலின், தமிழ் நாட்டு பழக்க வழக்கங்களிலிருந்து மாறுபட்டவர்களாக இருந்தனர். இவர்கள் பேசும் மொழியும் மாறுபட்டிருந்தது. ஆகையால் மராத்தியப் பிரதேசத்திலிருந்து பலரையும் இங்கு அழைத்து வந்து குடியமர்த்தினர். இவர்களில் பலர் உயர்ந்த அரசாங்கப் பதவிகளை வகித்தனர். அப்படி உயர் பதவி வகித்தவர்கள் செல்வந்தர்களாகவும், செல்வாக்கு உள்ளவர்களாகவும் இருந்து வந்தனர். இவர்களது பெயருக்குப் பின்னால் 'அண்ணா' என்றும் 'அப்பா' என்றும் முடியும்படி இருக்கும். அப்படி மராத்திய ராஜ்யத்தில் பிரபலமாக இருந்த சில 'அப்பா'க்கள், தத்தாஜியப்பா, மானோஜியப்பா, ரகுனாத அப்பா, சோனாஜியப்பா, முத்தோஜியப்பா, மல்ஹர்ஜியப்பா என்பவர்களாவர். இப்போதும் தஞ்சாவூர் நகரத்தில் மானோஜியப்பா தெரு, முத்தோஜியப்பா சந்து போன்ற இடங்கள் உள்ளன. 'அண்ணா'க்களில், சிவாஜி II ராஜாவிடம் அமைச்சர்களாக இருந்த பெரியண்ணா சின்னண்ணா இவர்களைக் குறிப்பிடலாம். இதில் பெரியண்ணா என்பவரது பெயர் முத்தோஜி கோவிந்தராவ், சின்ன அண்ணா என்பவர் ரா.வெங்க்கட் ராவ் கோவிந்தராவ். இவர்கள் பெயரால் ஒரு தர்மஸ்தாபன மடம் இப்போதும் மானோஜியப்பா தெருவில் இருக்கிறது. இவர்கள்தான் மராத்தியிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்த "ஹரிகதை" எனும் அரிய கலையைப் பேணி வளர்த்தவர்கள். இவர்கள் உருவாக்கிய முறைதான் இப்போதும் ஹரிகதையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

திருவையாற்றில் சற்குரு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் ஆராதனை விழா நடைபெறும் சமயம் தஞ்சாவூரில் "வரகப்பய்யர் சந்து" எனுமிடத்திலுள்ள ஒருவரது வீட்டில் ஸ்ரீ தியாகராஜர் வழிபட்ட ஸ்ரீ ராமபட்டாபிஷேக விக்கிரகம் ஒன்றுக்கு ஆராதனை நடைபெறுவதை நாம் அறிவோம். அந்த சந்துக்கு வரகப்பய்யர் சந்து என்று பெயர் வரக் காரணமான நபர் யார் தெரியுமா? மராத்திய மன்னர்கள் காலத்தில் வாழ்ந்த வராஹப்பையா ராமசாமி அய்யர் என்பவரின் பெயரால்தான் இந்த சந்து அழைக்கப்படுகிறது. "சேனாதுரந்தார்" என்று இவரைக் குறிப்பிடுகிறார்கள். ஒரு குறிப்பேட்டில் இவரைப் பற்றிக் குறிப்பிடும் செய்தி, "சத்திரம் வகையாறாவைச் சேர்ந்த திம்மதிகாரர்களின் வேலைபார்க்கும் சேனாதுரந்தார்" என்று இருக்கிறது. சங்கீத வித்தையைக் கண்காணிப்பதும், சரஸ்வதி மகால் பண்டாரக் கண்காணிப்பும் இவருடைய வேலையாக இருந்திருக்கிறது. இவர் சங்கீதத்தில் வல்லவராகவும் தெலுங்கு மொழியில் பண்டிதராகவும் விளங்கியிருக்கிறார்.

பிரபல அப்பா ஒருவரைப் பற்றிய விவரங்களைப் பார்க்கலாமா? மானோஜியப்பா எனும் மானோஜி ராவ். இவர் பிரதாபசிம்ம ராஜாவின் படைத் தளபதியாக இருந்தவர். ஆங்கிலேயக் கம்பெனி படைகளுக்கு எதிராக தேவிகோட்டைப் போரில் வீரமாகப் போர் புரிந்தவர். 16-4-1872இல் கோயிலடியில் நடந்த போரில் இவர் பிரெஞ்சுக்காரர்களைத் தோற்கடித்தார். ஆற்காட்டு நவாபு சந்தா சாஹேபு இவரிடம் தான் சரண் அடைந்தான்.

இது தவிர லாவணி எனும் ஒரு அரிய கிராமப்புறக் கலையும் மராத்தியர்கள் இங்கு கொண்டு வந்த கலைதான். அதில் பங்கு பெற இருவர் வேண்டும். போட்டியிட்டுப் பாடல்களைப் பாடுவர். ஒரு 'டேப்' எனும் தோல் கருவியைத் தட்டிக் கொண்டு அவ்வப்போதே சமயத்துக்குத் தகுந்தபடி கவி இயற்றிப் பாடும் திறமை வேண்டும். கிராமங்களில் திரெளபதி அம்மன் கோயில் போன்ற இடங்களில் இதுபோன்ற லாவணிகள் நடைபெறுவதைப் பார்த்திருக்கலாம். இதில் மன்மதன் எரிந்தது, எரியாதது என்று இரு கட்சிகளாகப் பிரிந்து பாடும் லாவணி இப்போதும் நடைமுறையில் இருந்து வருகிறது.

இப்படி குடியேறிய பெருந்தனக்காரர்கள், அதிகாரிகளுக்கெல்லாம் சிற்றேவல் செய்ய கீழ் மட்டத்திலும் ஆட்கள் தேவைப்பட்டன. அப்படிப்பட்டவர்களும் அங்கிருந்தே இங்கு வரவழைக்கப் பட்டனர். அப்படி வந்து சேர்ந்த பெண்களை 'அக்காமார்' என்பர்.

இங்கு சோழ தேசத்தில் கணக்கற்ற வேதம் படித்த பிராமணர்கள் உண்டு. இங்கிருந்துதான் பாலக்காடு போன்ற இடங்களுக்கு வேத பிராமணர்கள் குடியேறியதாக வரலாறு உண்டு. மராட்டியர்கள் அவர்கள் ஊரிலிருந்து பிராமணர்களையும், படைகளுக்கும், மற்ற பல வேலைகளுக்கும் பிராமணர் அல்லாதவர்களையும் அதிக அளவில் அழைத்து வந்து குடியமர்த்தினர். அங்கிருந்த வந்த பிராமணர்களை 'தேசஸ்த' பிராமணர் என்று அழைப்பர்.

இது தவிர, அப்போது தேவதாசி முறை இருந்தமையால் நல்ல அழகுள்ள பெண்கள் பலர் தேவதாசிகளாக இருந்து வந்தனர். இவர்களில் பதியிலார் என்றும், பரத்தையர் என்றும் சிலர் இருந்து வந்ததால் சமுதாயத்தில் ஒட்டுமொத்த கட்டுப்பாடான ஒழுக்கம் நிலவியதாகச் சொல்ல முடியாது. ஒருவனுக்கு ஒருத்தி எனும் 'ராஜராஜ்யம்' இங்கு நிலவியிருக்கவில்லை.

அப்போதும் சாதிப் பிரிவுகள் இருந்து வந்தன. இவர்களுக்கிடையே சச்சரவுகளும் ஏற்பட்டு அரசாங்கம் தலையிட வேண்டியும் இருந்திருக்கிறது. உள் நாட்டுச் சமயங்களைத் தவிர்த்து ஆங்கிலேய, பிரெஞ்சுக்காரர்களின் ஆக்கிரமிப்புக் காரணமாக கிறிஸ்துவம் பரவத் தொடங்கியது. கீழ்மட்ட சாதியினர் பலர் புதிய கிறிஸ்துவ மதத்தைத் தழுவினர். ஆற்காட்டுப் படைகள், மைசூரின் ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோரின் ஆக்கிரமிப்பின் காரணமாக இஸ்லாமும் இங்கு பரவியது. அவர்களுடைய வழிபாட்டுத் தலங்களும் இங்கு ஆங்காங்கே உருவாயின.

இசையும் மருத்துவமும் பேணிக் காப்பாற்றப்பட்டன. மராத்திய மன்னர்களின், குறிப்பாக சரபோஜி IVஇன் அவையில் பல கர்னாடக சங்கீத வித்வாங்களும், மருத்துவ வல்லுனர்களும், தமிழ்ப் புலவர்களும் நிறைந்திருந்தனர்.

இந்த மடாலயங்கள் அரசரின் ஆதரவைப் பெற்றிருந்தன. காஞ்சி காமகோடி மட அதிபரும் கும்பகோணத்துக்கு வந்து சேர்ந்தார். அவருக்கும் மராத்திய மன்னர்கள் மடத்தைக் கட்டி ஆதரவளித்தனர். சம்ஸ்கிருத மொழியும் செழித்து வளர்ந்து வந்தது. பல மொழிப் புலவர்கள் அவையை அலங்கரித்தனர். தமிழ், தெலுங்கு, மராத்தி, பாரசீகம், சமஸ்கிருதம் போன்றவை இங்கு நன்கு பாதுகாக்கப்பட்டன.

1801இல் துளஜா ராஜா இறந்த போது அவருடைய 'அஸ்தி' காசிக்குக் கொண்டு சென்று கங்கை நதியில் கரைக்கப்பட்டதாக குறிக்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட நீண்ட தூர பயணங்கள் அப்போதும் இவர்களால் போக முடிந்திருக்கிறது என்பது வியப்பிற்குரிய செய்தி.

நாட்டில் பெரும் நிலக்கிழார்கள் பலர் இருந்தனர். சிறு நிலவுடைமையாளர்கள் ஒவ்வொரு ஊரிலும் அதிகம் இருந்தனர். இவர்கள் தவிர நிலமற்ற கூலிகளாக பெருமளவு மக்கள் உழைப்பை நம்பி வாழ்ந்து வந்தனர். இப்படிப்பட்ட சமூக அமைப்புகள், அந்த கால வாழ்க்கை, நீதி பரிபாலனம், புழக்கத்தில் இருந்த நாணயங்கள் இவை குறித்தும் சில தகவல்களை இங்கு பார்க்கலாம்.

கண்டிராஜா அரண்மனை:

தஞ்சாவூரில் கீழவாசல் பகுதியில் கண்டிராஜா அரண்மனை என்றொரு இடம் இருக்கிறது. இந்தப் பெயர் வரக் காரணம் என்ன என்பதற்கு இந்த மராத்தியர் வரலாற்றில் சில குறிப்புகள் காணப்படுகின்றன. 1816இல் ஆங்கிலேயர்கள் இலங்கையில் உள்ள கண்டியைக் கைப்பற்றினார்கள். அப்போது அங்கு விக்கிரமசிங்கன் என்பவர் ஆட்சி செய்து வந்தார். கண்டியைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் மன்னர் விக்கிரமசிங்கனையும், அவரது தாய் மற்றும் நான்கு மனைவியரை அந்த மன்னரின் ஆட்கள் ஐம்பது பேருடன் ஒரு படகில் ஏற்றி தமிழகத்துக்கு அனுப்பிவிட்டதாகத் தெரிகிறது. சென்னை சென்றடைந்த அவர்களை சென்னை கம்பெனியார் வேலூருக்கு அனுப்பியிருக்கின்றனர். வெள்ளையரின் கைதிகளாக இங்கு வந்த கண்டிராஜாவும், ராணிகளும் அவர்கள் ஊழியர்களும் பின்னர் ராஜாவைத் தவிர மற்றவர்கள் தஞ்சைக்கு வந்திருக்கின்றனர். இவர்கள் அனைவரும் தஞ்சை மகர் நோன்புச்சாவடிக்கு வந்தார்கள். இந்த விக்கிரமசிங்கனுக்கு ஒரு தம்பி. அவன் பெயர் கீர்த்திவர்மராஜா. இவர்களுக்காகக் கட்டப்பட்டு தங்க வைக்கப்பட்ட இடம்தான் கண்டிராஜா அரண்மனை.

மராத்தியர் ஆட்சிக்குட்பட்ட தஞ்சை ராஜ்யத்தின் பரப்பளவு:

மராத்திய மன்னர்கள் ஆண்ட பகுதி என்பது இப்போதைய தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தை உள்ளடக்கியப் பகுதிகள். ராஜ்யம் ஐந்து பிரிவுகளாக வகுக்கப்பட்டு ஒவ்வொன்றும் 'சுபா' என்று அழைக்கப்பட்டது. அந்த சுபாக்கள், பட்டுக்கோட்டை, மன்னர்குடி, கும்பகோணம், மாயூரம், திருவாடி (திருவையாறு) என்பன. ஒவ்வொரு சுபாவிற்குள்ளும் பல சீமைகள் என்று பிரிக்கப்பட்டன. நாட்டில் பல சிற்றூர்களிலும் கோட்டைகள் இருந்தன. ஒவ்வொரு கோட்டைக்கும் தலைவராக இருந்தவர் 'கில்லேதார்' என்று அழைக்கப்பட்டார். அப்படி இருந்த சில கோட்டைகள் பட்டுக்கோட்டை, மகாதேவபட்டணம், சாக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி, பந்தநல்லூர் ஆகியவை.

கிழக்கிந்திய கம்பெனியாருடன் மராத்திய மன்னர்களின் தொடர்பு.
தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்கள் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட கிழக்கிந்திய கம்பெனியாருடன் தொடர்பு கொண்டிருந்தனர். 'கும்பெனியார்' என்று அந்தக் காலத்தில் குறிப்பிடப்பட்ட இந்த ஆங்கிலக் கம்பெனியாருடன் மராத்திய மன்னர்கள் பல உடன்படிக்கைகளைச் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த ஒப்பந்தங்களை கவனித்தால் இவற்றின் மூலம் மராத்திய மன்னர்கள் தங்களுடைய பல உரிமைகளை இழந்ததும், படைகளைக் குறைத்துக் கொள்ள நேர்ந்ததும், ஆங்கிலேயர்களின் படையைத் தஞ்சையில் தங்க வைத்து செலவு செய்ததும், ஆற்காட்டு நவாபுடனான உறவுகளை கும்பெனியார் வழியாக செய்து வந்ததும் தெரியவருகிறது. புதுச்சேரியில் இருந்த பிரெஞ்சுக்காரர்கள் ஆங்கிலெயருக்குப் பகை என்றால் தஞ்சை மன்னர்களுக்கும் பகை என்றாகியது. ஆங்கிலேயர்களின் கம்பெனி பிரதிநிதியாக தஞ்சையில் 'ரெசிடெண்ட்' என்று ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். சரபோஜி IV காலத்தில் வரிவசூலையும் ஆங்கிலேயர்களே செய்துகொள்ளத் தொடங்கினர். தஞ்சை நகரம் மட்டும்தான் மராட்டிய மன்னர்களின் நேரடிப் பார்வையில் இருந்து வந்தது.

ஆங்கில அதிகாரிகள் முறையே கவர்னர் ஜெனரலாகவும், கவர்னர்களாகவும், ரெசிடெண்ட் ஆகவும், பிற அலுவலர்களாகவும் இருந்திருக்கின்றனர். அப்படிப்பட்ட சிலரது பெயர்களைப் பார்க்கலாம். கவர்னர் ஜெனரலாக இருந்தவர்களில் வாரன் ஹேஸ்டிங்ஸ் இவர் கல்கத்தாவில் இருந்தார். அடுத்து லார்டு கார்ன்வாலிஸ் என்பவர். இவரும் கல்கத்தாவில் இருந்தவர். தஞ்சைக்கு இவர் இரு முறை வந்திருக்கிறார்.

சென்னையில் கம்பெனியின் கவர்னர்களாக இருந்தவர்களில் லார்டு பிகாட் (Lord Pigot) என்பவர் இருமுறை பதவி வகித்தவர். 1773இல் துளஜா ராஜா ஆற்காட்டு நவாபினால் சிறையில் அடைக்கப்பட்டு தஞ்சை நவாபு ஆட்சியில் இருந்தது. அரண்மனை நகைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு விட்டன. தளபதி மானோஜி ராவும் சிறையில் அடைக்கப்பட்டார். இவைகள் எல்லாம் அப்போது சென்னையில் கவர்னராக இருந்த விஞ்ச் (Vynch) என்பவரின் தூண்டுதலோடு நடைபெற்றது. சென்னை கவர்னரின் இந்தச் செயலை இங்கிலாந்தில் இருந்த கம்பெனியின் Council of Directors ஏற்றுக் கொள்ளவில்லை. நவாபிடமிருந்து ராஜ்யத்தைக் கைப்பற்றி துளஜாவிடம் ஒப்படைக்குமாறு கம்பெனி உத்தரவிட்டது. உடனே லார்டு பிகாட் 11-4-1776இல் தஞ்சைக்கு வந்து நவாபை நீக்கிவிட்டு துளஜாவை விடுதலை செய்து ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தினார். அதனையடுத்து துளஜா ஆங்கில கம்பெனியாருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி வெள்ளைத் துருப்புக்கள் தஞ்சையிலும் வேறு சில இடங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டன. அவர்களின் செலவுக்காக ராஜா 4 லக்ஷம் வராகன் கொடுத்து வந்தார்.

அடுத்ததாக அலெக்சான்டர் டேவிட்சன் (Alexandar Davidson) என்பவர். இவர் 18-6-1785இல் சென்னை கவர்னர் ஆனார். இவரையடுத்து ஆர்ஸ்பால்டு காம்ப்பெல் (Sir Archbald Campbell) என்பவர் வந்தார். இவர் கவர்னராகவும் படைத் தளபதியாகவும் இருந்தார். துளஜா ராஜா காலமானபோது இவர்தான் சென்னை கவர்னர். துளஜாவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அமரசிம்மன் தனது ஆட்சி காலத்தில் ஆடம்பரச் செலவுகள் செய்கிறார் என்று புகார் போனதன் அடிப்படையில் அப்படி ஆடம்பரச் செலவுகள் செய்யக்கூடாது என்று இவர் மன்னருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

இவர்களையடுத்து லார்டு ஹோபர்டு என்பவர் கவர்னர் ஆனார். இவர் நான்கு ஆண்டுகள் 1794 முதல் 1798 வரை கவர்னராக இருந்தார். இவர் மன்னர் சரபோஜியிடம் அன்பாகவும் ஆதரவாகவும் இருந்திருக்கிறார். இவ்விருவரும் வேட்டைக்கு ஒன்றாகச் சென்றிருக்கிறார்கள். இவரையடுத்து கவர்னராக வந்தவர் சர் தாமஸ் மன்றோ (Sir Thomas Manro) இவர் 1820 முதல் 1827 வரை கவர்னராக இருந்தவர். இவரைப் பற்றிக் குறிப்பிடும் ஆவணம் ஒன்றில் இவரை The Right Hon'ble Major General Sir Thomas Manro K.C.B.Baronet" என்று குறிப்பிடப்படுகிறார். இவரும் 1826இல் தஞ்சாவூருக்கு வருகை புரிந்திருக்கிறார். இவருக்குப் பின் 1829இல் வாஷிங்டன் என்பவர் கவர்னராக இருந்திருக்கிறார்.

ரெசிடெண்டுகள்.
ரெசிடெண்டுகள் என்பவர்கள் கிழக்கிந்தியக் கம்பெனியாரின் பிரதி நிதிகளாகத் தஞ்சையில் இருந்த அதிகாரிகள். அந்தந்தப் பகுதிகளை ஆண்ட அரசர்களை இவர்கள் மேற்பார்வையிட்டு வந்தனர். அப்படித் தஞ்சையில் ரெசிடெண்டுகளாகப் பலர் இருந்திருக்கின்றனர். அவர்களில் ஜேம்ஸ் ஸ்டூவர்ட் என்பவர் ஒருவர். மற்றொருவர் அலெக்சாண்டர் மக்லோட் (Alexandar Macleod) என்பவர். இவர் துளஜா ராஜா காலத்தில் இருந்ததாகத் தெரிகிறது. ஜி.ஹெச்.ராம் என்றொருவர் இருந்திருக்கிறார். அடுத்து பெஞ்சமின் டூரின் (Benjamin Torin). இவர் 1798 முதல் தஞ்சையில் ரெசிடெண்டாக இருந்திருக்கிறார்.

இந்த ரெசிடெண்டுகளுக்குச் சம்பளம் மராத்திய அரசர்களே கொடுத்து வந்தார்கள். இந்த பெஞ்சமின் டூரினுக்குச் சம்பளம் 1000 பவுண்டுகள். வில்லியம் பிளாக்பர்ன் (William Blackburn) என்பவரும் ரெசிடெண்டாக இருந்திருக்கிறார். ஜான் பைல் (John Fyle), ஜே.பிளாக்பர்ன், கிண்டர்ஸ்லி, மங்கமாரி, பாரட் ஆகியோரும் ரெசிடெண்டாக இருந்து வந்தனர். இதில் பாரட் என்பவர் ஆக்டிங் ரெசிடெண்டாக இருந்தவர். 1847இல் ஜே.பிஷப் என்பவரும், ஹெச்.போர்பஸ் (H.Forbes) ஆகியோரும் ரெசிடெண்டாக இருந்தனர். இந்த போர்பஸ் பட்டுக்கோட்டையில் தங்கியிருந்திருக்கிறார். மராத்தியர் ஆட்சி 1855இல் முடிவுக்கு வந்த பின்னர் பிலிப்ஸ் என்பவர் 1858, 59 ஆண்டுகளில் ரெசிடெண்டாக இருந்திருக்கிறார்.

ஸ்வார்ட்ஸ் பாதிரியார்.
மன்னர் சரபோஜியின் காப்பாளராக இந்த ஸ்வார்ட்ஸ் பாதிரியார் இருந்ததையும், இவருக்காக மன்னர் ஒரு வழிபாட்டுத் தலத்தை சிவகங்கைத் தோட்டத்தில் கட்டிக் கொடுத்திருப்பதையும் முன்னமே பார்த்தோமல்லவா? இவர் ஒரு ஜெர்மானிய பாதிரியார். தரங்கம்பாடியில் 11 ஆண்டுகள் இருந்தவர். பின்னர் திருச்சினாப்பள்ளியிலும் இருந்தார். கி.பி.1769இல் தஞ்சைக்கு வந்தார். இங்கு அவர் கிறிஸ்தவ மதப் பணியில் ஈடுபட்டிருந்தார். துளஜா ராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டு அவரோடு நண்பராகப் பழகினார். இவருக்கு பாரசீகம், உருது, மராத்தி ஆகிய மொழிகள் தெரியும். கிழக்கிந்திய கம்பெனியாரிடம் இவருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. 1787இல் துளஜா சரபோஜியை ஸ்வீகாரம் எடுத்துக் கொண்ட பிறகு, அந்தச் சிறுவனை கல்வி புகட்டிப் பாதுகாக்கும் பொறுப்பை ஸ்வார்ட்ஸ் பாதிரியாரிடம்தான் கொடுத்திருந்தனர். இவர் 13-2-1798இல் காலமானார்.

அரசாங்க அலுவலர்கள்.
தஞ்சை மராத்தியர் ஆட்சியில் மன்னர்தான் ஆட்சித் தலைவர். அவருக்கு உதவியாகப் பல அதிகாரிகள் இருந்தனர். அவர்கள் முறையே சர்க்கேல், சுபேதார், பதக்தார், அமல்தார், சிரஸ்தேடார், தாசில்தால், ஹவில்தார், கொத்தவால், கார்பாரி, கில்லேதார், கார்கூன், திம்மதி, காவல்காரர், ஹர்காரா, வக்கீல், மஹால் மத்யஸ்தர், கமாவிஸிதார், கலாசி, கோட்டிவாலா, நிஷ்பதி, இமாரதி, பதக்னீஸ், காஸ்னீஸ், தஸ்தூர், ராயஸ், ஹேஜிப், சிட்னீஸ், பாக்குவான் இப்படிப் பலப் பலப் பெயர்களில் ஊழியர்கள் இருந்திருக்கிறார்கள்.

சர்க்கேல் என்பவர் தலைமை அதிகாரி போல அதிகாரமுள்ள பதவி. அதற்கடுத்து சுபேதார் எனும் பதவி. மராத்திய ஆட்சிக்குரிய பகுதிகளாகப் பட்டுக்கோட்டை, மன்னார்குடி, மாயூரம், கும்பகோணம், திருவையாறு என சுபாக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இதில் ஒவ்வொரு சுபாவுக்கும் ஒரு அதிகாரி உண்டு. அவர்தான் சுபேதார் எனப்படுபவர். இந்த சுபேதார்கள் ஆட்சித் தலைமை மட்டுமல்லாமல், ராணுவத் தலைமையும் பெற்றிருந்தார்.

ஒரு சில ஊர்களை உள்ளடக்கிய பகுதிக்கு பதக் என்று பெயர். இந்த கிராமக் குழுக்களுக்கு பதக்தார் எனும் அதிகாரி இருந்தார். இப்போதைய பஞ்சாயத்து யூனியனுக்கு ஒப்பாகச் சொல்லலாம். வருவாய்த் துறையை கவனித்துக் கொள்ள அமில்தார் என்ற அதிகாரி இருந்தார். ஆவணங்களைக் காக்கும் பணிக்கு சிரஸ்ததார் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். தாசில்தார் என்பவர் ஒரு சிறிய பகுதியில் வரி வசூல் செய்யும் பணியில் இருந்தவர். இராணுவத்தில் ஹவில்தார் என்ற பதவி இருந்தது.

கோட்டையின் காவல் அதிகாரியாக கொத்தவால் என்பவர் இருந்தார். கார்பாரி என்பது அரண்மனையில் ஒரு பெரிய பதவி. கில்லேதார் கோட்டையில் மிகப் பெரிய பொறுப்புள்ள அதிகாரி. ஒரு மஹால் அல்லது சிறு பிரிவுக்கு அதிகாரி மஹால்மத்யஸ்தர் எனப்படுவார். சூப்பர்வைசர் என்கிறோமல்லவா அது போன்ற பொறுப்புள்ளவர் கமாவிஸ்தார். குமாஸ்தா அல்லது கணக்கெழுதியாக இருப்பவர் கார்கூன். நாட்டிலும், வெளியிலும் ஒற்றர்களாக வேவு பார்ப்பவர்களுக்கு ஹர்காரா என்று பெயர். நீதிமன்றங்களில் திம்மதி என்றொரு பதவி இருந்தது. பொது மராமத்து பணியினைச் செய்பவர் இமாரதி எனப்படுவர். ஹேஜிப் என்பவர் கணக்குப் பிள்ளை. சிட்னீஸ் என்பது ஸ்டெனோகிராபர் பணி போன்றது. அதிகாரிகள் சொல்வதை எழுதுவது. காவலர்கள் "காவல்காரர்கள்" என அழைக்கப்பட்டனர். இதுபோன்ற பல பணிகளுக்கு ஆட்கள் இருந்தனர்.

மராட்டியர் ஆட்சியில் புழக்கத்தில் இருந்த நாணயங்கள்.

தஞ்சை மராத்தியர் ஆட்சியில் பல்வகையான நாணயங்கள் புழக்கத்தில் இருந்ததாகத் தெரிகிறது. ஆவணங்களில் பல இடங்களில் குறிப்பிடப்பெறும் சில நாணயங்களில் "சக்கரம்" என்பது ஒன்று. மேலும் 'புலிவராகன்', பணம், காசு என்றெல்லாமும் குறிப்பிடப் பெறுகிறது. இதில் பத்துப் பணம் ஒரு சக்கரம் என்று எழுதப்படுகிறது.

இது தவிர சென்னைப்பட்டணம் வெள்ளிப்பணம் என்றொரு நாணயம் குறிப்பிடப்படுகிறது. அதாவது இரண்டரை பணம்த்துக்கு ஒரு சென்னைப்பட்டனம் வெள்ளிப்பணம். சக்கரத்தில் நாலில் ஒரு பங்கு. தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள விவரப்படி நாணய மாற்று கீழ்கண்ட முறையில் இருந்திருக்கிறது.

32 காசுகள் என்பது 1 பணம்.
2 1/2 பணம் என்பது 1 சென்னைப்பட்டண வெள்ளிப் பணம்
4 வெள்ளிப் பணம் அல்லது 10 பணம் என்பது 1 சக்கரம்
4 1/2 சக்கரம் அல்லது 45 பணம் என்பது 1 புலி வராகன்

இந்த வராகன் சில இடங்களில் மாறுபட்ட மதிப்பிலும் இருந்திருக்கிறது. பரங்கிப்பேட்டை வராகன் என்றும், நாகப்பட்டினம் வராகன் என்றும் இருந்திருக்கிறது.

நாணய வகைகளில் தங்க நாணயமும் இருந்திருக்கிறது. இது அதிக அளவில் சாதாரண மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்திருக்கவில்லை. இது தவிர 'ஹொன்னம்' எனும் நாணய மதிப்பு பற்றியும் சில குறிப்புகள் வருகின்றன. கோணிக்காசு என்றும், சாணார்காசு என்றும், கிணிகாசு என்றும் சிலவகை நாணயங்கள் இருந்திருக்கின்றன.

திருமருகல் எனும் ஊரில் அமரசிம்மன் காலத்தில் ஒரு நாணயம் உற்பத்திச் சாலை இருந்திருக்கிறது.

மராத்தியர் காலத்தில் சமயங்களும், ஆலய நிர்வாகங்களும்.

தமிழ் நாட்டுக்கு அன்னியமானவர்களாக இருந்த போதிலும், மராத்தியர்கள் இங்கு வழக்கத்தில் இருந்த ஆலய வழிபாடு, நிர்வாகம் இவற்றில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிட வில்லை. இன்னும் சொல்லப் போனால் சில ஆலயங்களின் நிர்வாகத்தை மன்னர்கள் நேரடியாகக் கண்காணித்துச் சிறப்பாக நடத்தி வந்தனர். இவர்கள் தீவிரமாக எந்தப் பிரிவையும் ஆதரிக்கவில்லை. சைவ, வைணவ வேற்பாடுகளை இவர்கள் பார்த்ததில்லை. இருவகை ஆலயங்களையும் நன்கு பராமரித்து வந்தனர். தஞ்சாவூர் நகரத்துக் கோயில்கள் அனைத்துமே இவர்களது பராமரிப்பில் சிறப்பாக நடந்து வந்திருக்கிறது. தஞ்சை பிரஹதீஸ்வரர் கோயில், திருவையாறு ஐயாறப்பர் கோயில், திருவிடைமருதூர், கும்பகோணம், திருபுவனம், திருவாரூர், திருப்பழனம்,பந்த நல்லூர், திருவாப்படி, பட்டீச்சரம், மன்னர்குடி, திருவானைக்கா, வைத்தீஸ்வரங்கோயில், திருமயிலாடி, திரு நள்ளாறு, திருவண்ணாமலை, திருப்பதி, மதுரை ஆகிய இடங்களுக்கு இவர்கள் செய்திருக்கும் சேவை குறித்து விவரங்கள் இருக்கின்றன. இவை தவிர, திருவரங்கம், இராமேஸ்வரம், திருப்பனந்தாள், யாழ்ப்பாணம் ஆகிய கோயில்களும் இவர்கள் முழு கவனத்துக்கு ஆளாகியிருக்கின்றன.

கிறிஸ்தவ தேவாலயங்கள் பல இவர்களால் எழுப்பப்பட்டிருக்கின்றன. தஞ்சையில் சரபோஜி ராஜா, தன் காப்பாளராக இருந்த ஸ்வார்ட்ஸ் பாதிரியாருக்காக ஒரு தேவாலயத்தை எழுப்பிக் கொடுத்தார். 1822இல் சரபோஜி ராஜா மருதப்ப மேஸ்திரி என்பவரை தரங்கம்பாடிக்கும், நாகைப்பட்டினத்துக்கும் அனுப்பி கிறிஸ்தவ தேவாலயங்கள் அமைப்பது குறித்து மாதிரிகளைப் பார்த்து வர அனுப்பியிருக்கிறார்.

தரங்கம்பாடியில் இருந்த ஒரு பாதிரியார் நடத்தி வந்த ஆங்கிலப் பள்ளிக்கு நிதியுதவி செய்து வந்ததாக 1819இல் உள்ள ஒரு குறிப்பு கூறுகிறது. மாயூரத்திலும் பர்ங்கடிக் எனும் பாதிரியாருக்கு சர்ச் நடத்த நிதியளித்து வந்திருக்கிறார்.

மராத்திய மன்னர்களின் கலைப் பணிகள்.

எப்போதுமே தஞ்சை கலைகளின் இருப்பிடம் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. மராத்திய மன்னர்கள் காலத்தில் இசைக்கு இவர்கள் முக்கியத்துவம் கொடுத்து வளர்த்தனர். கோயில்கள் சுவாமி புறப்பாடு போன்ற நேரங்களில் இசையும் நாட்டியமும் நடக்கும்படி சில சேவைகளை இவர்கள் நடத்தி வந்தார்கள். அதில் பல்லகீ சேவை என்பதும் ஒன்று. சுவாமி புறப்பாட்டின்போது இசையும், நாட்டியமும் நடக்கும் நிகழ்ச்சி இது. நாடகங்களும் இவர்கள் காலத்தில் வளர்ந்து வந்திருக்கிறது. தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் சம்ஸ்கிருதத்திலும் நாடகங்கள் நடிக்கப்பட்டிருக்கின்றன.

நாயக்கர் காலத்தில் தமிழகத்துக்கு வந்த பாகவத மேளாவும் மராத்தியர் காலத்தில் செழித்து வளர்ந்திருக்கிறது. மிலட்டூர், நீடாமங்கலம் போன்ற இடங்களில் இன்றளவும் இந்தக் கலை புகழோடு நடத்தப் பட்டு வருகிறது.

இவர்கள் ஆட்சியில் நாட்டியக் கலை சிறந்து விளங்கியது. ஆண்களும் நாட்டியம் ஆடி வந்தனர். நாட்டியம் ஆடும் பெண்கள் குறித்தும், நட்டுவனார்கள் குறித்தும் பல செய்திகள் கிடைக்கின்றன. எல்லா கோயில்களிலும் நாட்டியப் பெண்கள் இருந்தனர். மகாராஜாவின் சபையில் நாட்டியங்கள் அடிக்கடி நடந்து வந்திருக்கின்றன.

நாட்டியப் பெண்களுக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். சில குறிப்பிட்ட ஆபரணங்களை அவர்கள் அணியக்கூடாது. குறிப்பாக வைர ராேக்கோடி, பேசரி, அட்டிகை, வெள்ளி மெட்டி இவை கூடாது. நெற்றியில் குறுக்காக நீளமாக குங்குமம் இடக்கூடாது. அணியும் உடைகளில், புடவை, ரவிக்கை இவைகளில் சில கட்டுப்பாடுகள், கையில் உருமால் வைத்திருக்கக்கூடாது. அரண்மனையில் நாட்டியம் ஆடும்போது இறைவன், ராஜா தவிர வேறு 'நரஸ்துதி' எதுவும் கூடாது. இறைவன் சந்நிதியில் இறைவனை மட்டும்தான் பாடி ஆடவேண்டும் இதுபோன்ற பல கட்டுப்பாடுகள்.

நட்டுவனார்கள் சபையில் இருக்கும்போது துப்பட்டா அல்லது சால்வைகள் கழுத்தில் அணிய வேண்டும். தலையில் கட்டியிருக்கக்கூடாது. காலில் செருப்பு அணிதல் கூடாது. இதுபோன்ற சில கட்டுப்பாடுகள் உண்டு.

தஞ்சையின் பிரபலமான நட்டுவனார்.

தஞ்சாவூரில் பல பிரபலமான நட்டுவனார்கள் இருந்தனர். தஞ்சையில் இருந்த சுப்பராய ஓதுவார் என்பவருடைய பிள்ளைகளான பொன்னையா, சின்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகியோர் இருந்தனர். இவர்கள்தான் தஞ்சை நால்வர் என்று புகழ் பெற்றவர்கள். இதில் சிவானந்த நட்டுவனாரைப் பற்றி ஒரு ஆவணம் இருக்கிறது. இவர் தஞ்சை பெரிய கோயிலில் நட்டுவாங்கம் செய்து வந்தவர். அந்த சமயத்தில் தஞ்சையின் கடைசி ராஜாவான சிவாஜி IIஇன் மகளான ராஜஸாபாயி அம்மணி சாயேப் என்பவருக்குத் திருமணம் நடந்தது. நட்டுவனார் சிவானந்தம் அந்தத் திருமணத்துக்குச் சென்றிருந்தார். அப்போது ராஜா சிவாஜி நட்டுவனாரிடம் தஞ்சையில் இருக்கும் தேவதாசிகளுக்கு ஹிந்துஸ்தானிய நாட்டியமும், கர்நாடக நாட்டியமும் கற்றுத்தரும்படி பணித்தார். அந்த உத்தரவுக்கிணங்க சகோதரர்கள் நால்வரும் இரவு பகலாக தேவதாசிகளுக்கு இவ்விரு நாட்டியத்தையும் கற்றுக் கொடுத்தனர். இந்த நிலையில் தஞ்சை பெரியகோயில் அதிகாரி ஒருவர் சிவானந்தம் அரசர் முன்னிலையில் ஆடக்கூடாது என்று தடைவிதித்து விட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சிவானந்த நட்டுவனார் அரசரிடம் மேல் முறையீடு செய்திருக்கிறார். இந்த விவரம் ஆவணங்கள் மூலம் கிடைக்கிறது.

இந்த பிரபலமான நட்டுவனார்கள் தஞ்சை மேல வீதியில் இருந்திருக்கிறார்கள். பின்னர் இவர்களில் சின்னையா மைசூர் சமஸ்தானத்துக்குச் சென்று விட்டார். வடிவேலு திருவிதாங்கூர் சமஸ்தான வித்வானாகச் சென்று விட்டார். பொன்னையா முத்துஸ்வாமி தீக்ஷிதருடன் இருந்தார். சிவானந்தம் மட்டும் தஞ்சையில் சிவாஜி ராஜாவின் ஆதரவில் தஞ்சை பெரிய கோயில் நட்டுவாங்கப் பணியில் ஈடுபட்டிருந்தார். மன்னர் சிவாஜி II காலத்தில் வாழ்ந்த இந்த தஞ்சை நால்வரின் புகழ் இன்றும் தொடர்ந்து நாடெங்கும் புகழ் மணம் பரப்பி வருகிறது. இந்த நால்வர் நினைவாக தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டுதோறும் புகழ்பெற்ற நட்டுவனார் ஹேரம்பநாதன் அவர்கள் "சின்ன மேளம்" எனும் பெயரில் ஒரு நாட்டிய விழாவினை நடத்தி வருகிறார். அரண்மனை தேவஸ்தானமும், தஞ்சை இளவரசரும் இந்த நிகழ்ச்சிக்கு உதவி வருகின்றனர்.

மராத்தியரின் புகழ் பரப்பும் 'சரஸ்வதி மகால்'.

அந்த நாட்களில் கல்வி இன்றுபோல் சிறந்து விளங்கவில்லை. அனைவருக்கும் கல்வி போன்ற எந்த நிலையும் இல்லை. மிகச் சிலரே கல்வி கற்று வந்தனர். வேதம் பயிற்றுவிக்கப்பட்டு வந்தது. அது ஒரு சாரார் மட்டும்தான் படித்து வந்தனர். இங்கு ஆட்சி புரிந்த நாயக்க மன்னர்களால் தெலுங்கும், நவாபுகள், சுல்தான் கள் ஆகியோரால் இந்துஸ்தானியும், மராத்தியர்களால் மராத்தி மொழியும், இந்த மண்ணுக்குரிய தமிழும், வெள்ளைக்காரர்களால் ஆங்கிலமும் மக்கள் கற்கத் தொடங்கினர்.

தஞ்சையில் "நவவித்யா கலாசாலை" என்றொரு அமைப்பு இருந்திருக்கிறது. இதில் 1785இல் 86 பேர் வேத அத்யாயனம் செய்து வந்திருக்கின்றனர். மற்ற மொழிப் பள்ளிகளில் 385 பேர் படித்து வந்தனர் என்பதும் தெரிய வருகிறது. இந்த வித்யாலயாவில் தங்கிப் படிக்கவும், உணவுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.

இந்தக் கலாசாலை "சரஸ்வதி பண்டாரம் - சரஸ்வதி மகால்" என்று பெயர் பெற்றது. இதில் பல மொழி சுவடிகளும் இருந்தன. இது நாளடைவில் வளர்ந்து பெரிதாகி இன்று நாடு புகழும் ஒரு ஆவணக் காப்பகமாகத் திகழ்கிறது. மராத்திய மன்னர்கள் இலக்கியத்துக்கும், கலாச்சார பாதுகாப்புக்கும் செய்திருக்கும் பெரிய தொண்டு சரஸ்வதி மகால் நூலகம்.

3 comments:

Unknown said...

"சரித்திர தேர்ச்சிகொள்"
என்றான் அமரகவி... அதற்கான அமைப்பாக இந்த உங்களின் அறியப் பணி நடக்கிறது..

அருமையானத் தகவல்கள்.. கல்வியறிவை இன்று போல் அன்றும் யாவரும் கற்றிருந்தால்... வேதங்கள் யாவரும் அறிந்திருந்தால் இன்றய நிலையை இந்தியா பெற்று அவதியுராமல் எப்போதே உலகில் எல்லாவற்றிலும் முதல் நிலை பெற்று விளங்கும் என்பதை அறிய முடிகிறது...

மராட்டியர்களின் மற்றவர்களின் உணர்வுகளோடு, பழக்க வழக்கங்களுக்கு மதிப்பளிக்கும் உயர்ந்த பண்புகள், நன்கு பிரதி பலிக்கிறது.

கலைகளுக்கு அவர்கள் அளித்த முக்கியத்துவமும்.. சமூகத்தில் அவர்கள் எப்படி நடந்துக் கொள்ளவேண்டும் என்று சில விதி முறைகளை பின்பற்றச் சொல்லி அவர்களின் மீது இவர்கள் கொண்டிருந்த அக்கறையும்... தேவதாசிகள் என்னும் சந்தன மரங்களுக்கு இடைய, பதியிலார், பரத்தையர் என்னும் கள்ளிச் செடிகளும், கத்தாளை பத்துக்களும் மண்டிக் கிடந்தது கலையோடு சமூகமும் பாழ் படுவதை தடுக்கும் நோக்கோடும் மேற்படி சட்டதிட்டங்கள் அறிவிக்கப் பட்டும், அதோடு அந்தக் கலையை இவர்கள் வளர்த்த விதமும், நன்கு விளங்குகிறது...

நட்டுவனார்களின் பயணம் தென்னிந்தியாவில் நாட்டியக் கலையை வியாபிக்க வழி கோடியது என்பதோடு அது தஞ்சை மண்ணில் (மராட்டிய சாம்ராஜ்யத்தில் இருந்து) இருந்து தான் பரவி இருக்கிறது என்பதும் பெருமைக்கு உரிய செய்தியே.

வீர சிவாஜியின் பரம்பரையர்கள் இவர்கள் வீரம் படைத்தவர்கள் மாத்திரம் அல்ல நல்ல விவேகமும், கலை ஆர்வமும், மனித நேயமும் கொண்ட மக்களாகவும் விளங்கி இருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

நல்ல பதிவு.. நன்றிகள் ஐயா!

வாழ்க! வளர்க! பாரதி இலக்கியப் பயிலகம்!!!

N V Subbaraman said...

Sitting in Chennai, visited the once great capital
city of Thanjavur. Great post. thanks.

sriganeshh said...

hi

thanks for bringing out great maratha history....but why there is no details about peshwa's ...
i read peshwa's are brahmin pandits from pune and some nine peshwa family ruled the entire kingdom of shivaji...
anyway, thanks.