பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, May 23, 2011

அப்சல்கான்

அப்சல்கான்

மராட்டிய போன்ஸ்லே வம்சத்தில் வந்த ஷாஜி பிஜப்பூர் சுல்தானுக்குப் பல விதங்களிலும் உதவி அந்த ராஜ்யம் வலுவாக இருக்க பெரும் உதவி புரிந்திருக்கிறார். தட்சிண பிரதேசத்தில் பிஜப்பூர் சுல்தான் அலியடில்ஷா என்பவருக்கும் அகமதுநகரை ஆண்ட நிஜாம் பாட்ஷாவுக்கும் அடிக்கடி யுத்தம் ஏற்பட்டு நீ பெரியவனா நான் பெரியவனா என்று மோதிக்கொண்டனர். இதில் டில்லி சக்கரவர்த்தியின் உதவியையும் நிஜாம் பெற்று வந்தார். போன்ஸ்லே வம்சத்தில் மாளோஜி என்றொரு ராஜா. இவருக்கு 1594 மார்ச் மாதம் 13ம் தேதி ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைதான் ஷாஜி என்று அழைக்கப்பட்ட மாவீரர்.

ஷாஜிக்கு ஐந்து வயதானபோது கோலாப்பூர் ராஜாவுக்கும் அகமதுநகர் நிஜாம்ஷாவுக்கும் ஒரு யுத்தம் ஏற்பட்டது. அந்த யுத்தத்திற்கு ஷாஜியின் தந்தை மாளோஜியை நிஜாம் பெரும்படையுடன் அனுப்பியிருந்தார். அந்தப் போரில் மாளோஜி தீரத்துடன் போராடியும் எதிரிகளால் போர்க்களத்தில் கொல்லப்பட்டார். இறந்துபோன மாளோஜிக்கு இரண்டு புதல்வர்கள். முதல் மகன் முன்பே சொன்னவாறு ஷாஜி, இரண்டாவது சரபோஜி. தந்தையை இழந்த இந்த இரு சிறுவர்களும் அவர்களுடைய சிற்றப்பனான விட்டோஜி என்பவனிடம் வளர்ந்தார்கள்.

வயது வந்த பின் ஷாஜி மோத்தேராம் என்பவருடைய மகளாகிய துக்காபாயி எனும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். 1620ல் ஷாஜி நிஜாம் தனக்கு அளித்த பிரதேசத்தைச் சுயேச்சையாக ஆள ஆரம்பித்தார். அந்த ராஜ்யம்தான் சதாரா. ஷாஜி சதாராவை ஆண்டுவந்த காலத்தில் தேவகிரி யாதவ அரச மரபில் யாதவராஜா எனப்படும் லகோஜி ஜாதவ் ராவ் என்பவர் 10,000 குதிரைப்படைக்குத் தலைவராக இருந்தார். அந்த யாதவராஜாவுக்கு ஒரு மகள். அவர்தான் புகழ்பெற்ற வீரன் சிவாஜியைப் பெற்ற பாக்கியசாலி ஜீஜாபாய். இந்த பெண்ணை ஷாஜி இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு ராஜ்ஜியத்தில் பல சம்பவங்கள் நிகழ்ந்ததின் பலனாக ஷாஜி பிஜப்பூர் சுல்தான் படைகளும், ஷாஜியின் படைகளும் நிஜாம்ஷா மீது படையெடுத்தனர். அந்தப் போரில் நிஜாம் தோற்றுப் போனார். ஷாஜியின் வீரத்துக்கு வெற்றி கிடைத்தது. இந்த வெற்றியின் காரணமாக அலியடில்ஷா ஷாஜிக்கு மேலும் சில பிரதேசங்களை ஜாகீர் செய்து கொடுத்தார். இப்போது ஷாஜி அசைக்கமுடியாத வெற்றி வீரனாகத் திகழ்ந்தார்.

பிஜப்பூர் சுல்தானின் கரங்களை வலுப்படுத்திய ஷாஜி விஜயதுர்க்கம் எனும் விஜயபுரத்தில் தன் மனைவிகளோடு குடும்பம் நடத்தினார். அப்போது ஜீஜாபாய்க்கு 1619 அக்ஷய வருஷம் முதல் மகன் சாம்பாஜி பிறந்தார். இந்த காலகட்டத்தில் டில்லி பாதுஷா ஜஹாங்கீர், 1628ல் தரியாகான் எனும் தளபதியை முகலாய பெரும் சேனையொன்றுடன் நிஜாம் மீது படையெடுக்க அனுப்பிவைத்தார். நிஜாம்ஷா அப்போது தனக்கு எதிராக இருந்த ஷாஜியை ரகசியமாக அழைத்துத் தன்னுடன் சேர்த்துக் கொண்டார். இப்போது முகலாய படையை எதிர்ப்பதற்கு ஷாஜியை அனுப்பினார் நிஜாம். அந்த நேரத்தில் ஜீஜாபாய் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அவளுக்குச் சில வீரர்களைத் துணையாக வைத்துவிட்டு ஷாஜி பெரும் படையுடன் போருக்குப் புறப்பட்டார். போரில் தரியாகானின் படை தோற்றது. வெற்றிவீரனாக ஷாஜி சிவனார் கோட்டைக்குத் திரும்பிய போது ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்தது. அது 1627ம் வருஷம் ஏப்ரல் மாதம் 10ம் தேதி ஜீஜாபாயிக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது என்பதுதான் அந்தச் செய்தி. தனக்குப் போரில் வெற்றியும், அதே நேரத்தில் ஓர் ஆண் மகவையும் கொடுத்த அன்னை பவானியை வணங்கினார் ஷாஜி. அந்தக் குழந்தைதான் சத்ரபதி சிவாஜி என்று பின்னர் புகழ்பெற்ற மாவீரன்.

சதாராவுக்குத் திரும்பி தங்கியிருந்த போது ஷாஜிராஜாவின் முதல் மனைவியான துக்காபாயிக்கு ஏகோஜி எனும் மகன் பிறந்தான். இந்த ஏகோஜிதான் பிறகு தஞ்சைக்கு வந்து நாயக்க மன்னர்களிடமிருந்த தஞ்சாவூர் ராஜ்யத்தைத் தன்வசப்படுத்தி பல ஆண்டுகள் ஆட்சி புரிந்த பெருமைக்குரியவன். இவன் பெரியவனான பிறகு பெங்களூர் வந்து கோட்டை கட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தார். ஷாஜியின் மகன் சிவாஜி புனாவில் இருந்தார். அங்கு அவர் தாதாஜி பந்த் என்பவரிடம் கல்வி பயின்றார். சிவாஜிக்கு 12 வயது ஆனது. அந்த வயதிலேயே அவன் மகா வீரனாக விளங்கினான். ஷாஜியின் இரண்டாம் மனைவிக்குப் பிறந்த சிவாஜி, முதல் மனைவியின் மகன் ஏகோஜியைவிட வயதில் மூத்தவர்.

சிவாஜி சதாராவுக்குத் திரும்பி அங்கிருந்த 12 சிறிய கோட்டைகளைப் பிடித்து ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தார். ஷாஜி ராஜாவும் சுல்தான்களிடம் விடை பெற்றுக்கொண்டு சதாராவுக்கு வந்து தன் மனைவிகள், மக்களுடன் வாழலானார். புனாவுக்கு அருகில் புரந்தர் என்றொரு கோட்டை. அது சிவாஜி வசம் இருந்தது. இதை அவர் 1648ல் கைப்பற்றியிருந்தார். அப்போது சிவாஜி தன் துணைவர்களிடம் தன் தந்தை ஷாஜி பற்றி சொல்லும் போது, இவர் சுல்தான்கள் இருவரிடமும் நட்பு வைத்திருந்தார், ஆனாலும் இவரால் அவர்கள் பல வெற்றியை அடைந்தும், இருவரும் இவரை எதிரியாகவே எண்ணி வருகின்றனர் என்றார். அந்த காரணம் தொட்டே அவ்விரு சுல்தான்களும் நம்மை அமைதியாக இந்த சதாராவை ஆளவிடமாட்டார்கள். ஆகையால் இவ்விரு சுல்தான்களையும் முதலில் ஒழித்த பிறகுதான் நாம் அமைதியாக இருக்க முடியும் என்றார். அவரது அமைச்சர்களும் அதனை ஏற்றுக் கொண்டனர்.

முதலில் தனது கோட்டையை எவரும் எளிதில் நுழையமுடியாத மலைப் பிரதேசத்தில் கட்டிக்கொண்டார். பிரதாப்கோட்டைக்கு அருகில் செயவலிநகரம் என்பதுதான் அந்தப் பிரதேசம். பல கணவாய்களையும், உயரமான மலைச்சரிவுகளையும் தாண்டித்தான் அந்தப் பிரதேசத்தை அணுகமுடியும். அப்படிப்பட்ட இடத்தில் சிவாஜி தனது குலதெய்வத்தைப் பிரார்த்தித்துக் கொண்டு கோட்டையைக் கட்டினார். ஒரு விஜயதசமியன்று சதாராவிலிருந்து புறப்பட்டு சிவாஜி மகாராஜா காடு மலைகளைத் தாண்டி, மேற்குக் கடற்கரைப் பிரதேசத்தில் தான் கட்டிய புதிய கோட்டையில் குடியேறினார். வழியில் ராய்கிரி கோட்டையைப் பிடித்து அதற்கு ராய்கட் எனும் பெயர் சூட்டித் தன் வசம் எடுத்துக் கொண்டார்.

ராய்கிரி கோட்டைக்குச் சொந்தக்காரராக இருந்த இருவரில் சத்திரராஜா என்பவன் தப்பிப் பிழைத்து பிஜப்பூர் சுல்தான் அலியடில்ஷா IIவிடம் சென்று சிவாஜிக்கு எதிராகப் புகார் செய்தான். சிவாஜியை ஒழிக்காவிட்டால் அவன் கை ஓங்கிவிடும், நாமெல்லாம் அழிந்து போவோம் என்றான். அதற்காக சுல்தான் தனது 12 வாசீர்களை வரவழைத்து ஆலோசனை செய்தான். அவர்களில் அப்சல்கான் எனும் வாசீர் மகாவீரன். இவனுக்கு அப்துல்லா படாரி என்று பெயர். இவன் காலம் சென்ற முகமது ஷாவுக்கும், அவனது சமையல்காரியாக இருந்தவளுக்கும் பிறந்த மகன்.

அவனை அழைத்து சுல்தான் சொன்னார், "நீ போய் பெரிய படையை அழைத்துக் கொண்டு அந்த சிவாஜியை எப்படியாவது உயிரோடு பிடித்துக் கொண்டு வரவேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், அவன் நம்மை ஒழித்து விடுவான்" என்று உசுப்பேத்தி விட்டான். அதன்படியே அந்த அப்சல்கானும் படை, கொடி, திரவியம், வீரமிக்க வசீர்கள் ஆகியோடு சிவாஜியை ஒழிக்கப் பயணமானான்.

அப்போது சிவாஜி புனாவுக்கு வந்திருப்பதாகச் செய்தி வந்தது. அப்சல்கானிடம் சுல்தான் சொன்னார், உன்னால் சிவாஜியை அவன் ஊரில் இருக்கும்போது அடையாளம் காண்பது கடினம். அவன் இப்போது பூனா வந்திருக்கிறான். அவன் அங்கிருந்து புறப்படும் முன்பாக நாம் போய் வழியிலுள்ள பிரதாபகிரி கோட்டை, சாவிக்கோட்டை, பண்டரிபுரம் இவற்றைப் பிடித்துக் கொண்டால் அவனை எளிதில் மடக்கிப் பிடித்து விடலாம் என்றான். அப்சல்கானும் அதன்படி திட்டமிட்டு கிளம்பினான். அப்போது அவனுக்குப் பல அபசகுனங்கள் ஏற்பட்டனவாம். பட்டத்து யானை இறந்தது. இவைகளையெல்லாம் பொருட்படுத்தாமல் அப்சல்கான் சிவாஜியைப் பிடிக்கப் புறப்பட்டான்.

புனாவில் இருந்த சிவாஜிக்குக் கனவில் அவரது குலதெய்வமான ஸ்ரீ ஜெகதாம்பா துளஜா பவானி தோன்றி உனக்கு ஆபத்து நெருங்கி வருகிறது. உடனே புனாவைவிட்டுப் புறப்படு என்றது. அந்தக் கணமே சிவாஜி எழுந்து அன்னையை வணங்கிவிட்டு புறப்பட்டார். வழிநெடுக இருந்த கோட்டைகளை வலுப்படுத்திவிட்டு வரும் அப்சல்கான் படைகளை எதிர்க்க ஏற்பாடுகள் செய்துவிட்டு வேகமாகச் சென்று விட்டார். போகும்போது எல்லா கோட்டைத் தலைவர்களுக்கும் ஒரு செய்தி சொல்லிச் சென்றார். அது, அப்சல்கான் என்பவன் பெரும் படையோடு வருகிறான். உங்கள் படைகளையெல்லாம் காட்டில் மறைத்து வைத்துவிட்டு அவனை அன்போடு வரவேற்பதுபோல் வரவேற்று அனுப்பி வையுங்கள். அவன் நமது கோட்டையை அடைந்தவுடன் ஒரு நாகரா ஒலி கேட்கும். அப்போது காட்டில் ஒளிந்திருக்கும் உங்கள் படைகளை வெளிவரட்டும். அப்சல்கானோ அல்லது அவன் படைவீரன் எவனாவதோ உயிரோடு திரும்பக்கூடாது என்று உத்தரவிட்டார்.

அதன்படியே அப்சல்கான் பண்டரிபுரம் வழியாகப் போனான். வழியில் பண்டரிபுரம் கோயிலில் இருந்த பாண்டுரங்கணின் உருவத்தை உடைத்தெறிய எண்ணினான். ஆனால் அந்தப் பாண்டுரங்கன் அவன் கண்களில் படவில்லை. அந்த நீசனின் கைகளில் அகப்படாமல் அவர் எங்கு போயிருந்தாரோ தெரியவில்லை. பண்டரிபுரத்தைத் தாண்டி அவன் படைகள் துளஜாபுரம் சென்றபோது அங்கு கோயில் கொண்டிருந்த ஸ்ரீ துளஜா பவானியும் அந்த கொடியவனின் பார்வையில் சிக்கவில்லை. சிக்னாபூரில் சம்பு மகாதேவருக்கு இடையூறு செய்ய நினைத்தான், அங்கிருந்த மராட்டிய வீரர்கள் அவனை முறியடித்து அனுப்பி விட்டார்கள்.

அப்சல்கான் பாலி எனும் கோட்டைக்கு வந்தான். அங்கு கிருஷ்ணாஜி பண்டிதர் எனப்படும் பண்டாஜி கோபிநாத்தை சிவாஜியிடம் ஒரு கடிதம் கொடுத்து அனுப்பினான். அதில் சிவாஜி அலியடில்ஷாவுக்கு எதிராக செயல்பட்டு கட்டியுள்ள புதிய கோட்டைகளைக் கைவிட்டு, சதாரா வந்து சுல்தானிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்வதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன். இது பற்றி சமாதானமாக நாம் பேசலாம் என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தான்.

கிருஷ்ணாஜி பண்டிதர் சிவாஜி ராஜாவிடம் சென்றார். சாமர்த்தியமாகப் பேசி சிவாஜி அப்சல்கானைச் சந்திக்க சம்மதிக்க வைத்தார். சிவாஜி ராஜாவும் அவனை நம்புவதைப் போல பாசாங்கு செய்து அவனை வரவழைத்தார். அங்கு ஜெயவல்லிபுரம் சாவளி என்கிற பெரிய மைதானம், அதைச் சுற்றி அடர்ந்த காடுகள், அந்த இடத்துக்கு அப்சல்கானை அழைத்து வாருங்கள். உட்கார்ந்து சமாதானமாகப் பேசலாம் என்று சொல்லி அனுப்பினார். கிருஷ்ணாஜி பண்டிதனும் அதை அப்படியே போய் அப்சல்கானிடம் சொன்னான். அங்கு அப்சல்கானைச் சுற்றி இருந்தவர்கள் சொன்னார்கள், சிவாஜியை அவ்வளவு எளிதாக நம்பிவிட வேண்டாம் என்று. அப்போது வழிநெடுக இருந்த பாதைகளை அடைக்கச் செய்தார் சிவாஜி. கணவாய்களை மூடிவிட்டார். எக்காரணம் பற்றியும் அந்த அப்சல்கான் தப்பி ஓடிவிடக்கூடது என்பதற்கான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டார். அப்படி யாராவது தப்பி வந்தால் கொன்றுவிடும்படி கட்டளையிட்டார்.

இதையொன்றையும் அறியாத அப்சல்கான் மமதையோடு சிவாஜியைக் காண வந்து சேர்ந்தான். அப்போது ஒரு செய்தி சிவாஜியை எட்டியது. சிவாஜியைக் கொல்ல அப்சல்கான் வருகிறான் என்ற செய்தி கேட்டு வழியில் அவனோடு போரிட்ட சிவாஜியின் அண்ணன் சம்பாஜி போரில் இறந்து போனார் என்பதுதான் அந்தச் செய்தி. இதனால் சிவாஜியின் ஆத்திரம் அப்சல்கான் மீது அதிகமாகியது.

ஆறு வீரர்கள் பின் தொடர அப்சல்கான் ஒரு பல்லக்கில் ஏறிக்கொண்டு சிவாஜி ஏற்பாடு செய்திருந்த நாட்டியத்தைப் பார்க்க வந்தான். சிவாஜியும் நான்கு வீரர்களோடு வந்து சேர்ந்தார். இருவருக்கும் பேச்சு வார்த்தை தொடங்கியது. திடீரென்று அப்சல்கான் எழுந்து சிவாஜியைக் கட்டிப் பிடித்துக் கொண்டு மடியிலிருந்த கத்தியை எடுத்து சிவாஜியின் வயிற்றில் ஓங்கி இரண்டு மூன்று முறை குத்தினான். நல்ல காலம் சிவாஜி ராஜா அங்கிக்கு உட்புறமாக கவசம் அணிந்திருந்தார். கத்தி உடலில் இறங்கவில்லை.

உடனே சிவாஜி ராஜா வலது கையால் தன் பிச்சுவாயை ஓங்கிக் கொண்டே, இடது கையால் இரும்பினால் ஆன புலிநகம் போன்ற ஆயுதத்தால் அவன் வயிற்றில் ஓங்கி அடித்துக் கையால் இழுத்தார். அவன் வயிறு கிழிந்து குடல் சரிந்து விழுந்தான். எனினும், அவன் தனது மேல் அங்கியினால் சரிந்த குடலை எடுத்து வயிற்றில் வைத்துக் கட்டிக்கொண்டு சிவாஜியை மீண்டும் தாக்க வந்தான். சிவாஜியும் தன் கேடயத்தால் அவன் கத்தி தன்மேல் படாமல் தடுத்துக் கொண்டு தன்னுடைய பெரிய வாளால், அவன் இடது தோள் தொடங்கி வலது விலாவரையில் ஓங்கி வெட்டி அவனை இரு துண்டாக ஆக்கினார். விகாரி வருஷம் மார்கழி மாதம் சுக்ல பக்ஷம் வியாழக்கிழமை நண்பகலில் இது நடந்தது என்று மெக்கன்சி சுவடிகள் கூறுகின்றன.

அப்சல்கான் வெட்டுண்டு விழுந்ததும், அவனுடைய வாளை கிருஷ்ணாஜி பண்டிதன் எடுத்துக் கொண்டு சிவாஜி ராஜாவைத் தாக்க முனைந்தான். அப்போது ராஜா சொன்னார்:- "ஓய்! பண்டிதரே, நீரோ பிராமணன். ஒரு பிராமணனைக் கொல்வது எனக்கு தர்மமல்ல. நாம் பிராமணர்களின் பாததூளியை பூஜை செய்து வருபவன். நமக்கு குரு, தெய்வம் எல்லாம் பிராமணர்களானபடியால், கையிலிருக்கும் கத்தியைக் கீழே போட்டுவிட்டு ஓடிவிடும். போவதற்கு வழிகளை சீர்செய்து தர ஏற்பாடு செய்கிறேன். இல்லாவிட்டல் இங்கேயே தங்குவதானால் நான் எல்லா வசதிகளும் செய்து தரச் சொல்லுகிறேன்" என்று அன்போடு நிதானமாகச் சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினார்.

இவ்வளவு சொன்ன பிறகும் அந்த கிருஷ்ணாஜி பண்டிதன் தன் கத்தியை எடுத்துக் கொண்டு அவரை வெட்டத் துரத்தினான். அவரோ இவனை லட்சியமே செய்யாமல் திரும்பிக்கூட பார்க்காமல் போய்க்கொண்டிருந்தார். அப்போது இவ்வளவையும் பார்த்துக் கொண்டிருந்த சிவாஜி ராஜாவின் ஊழியன் கிஸ்மத்கான் என்பவன் கிருஷ்ணாஜியை ஒரே வெட்டாக வெட்டி வீழ்த்தி விட்டான்.

சிவாஜி ராஜா நாகராவை ஒலிக்கச் செய்தார். அந்த ஒலி கேட்டதும் ஆங்காங்கே காடுகளில் ஒளிந்திருந்த மராட்டிய படைகள் வெளியே வந்து அப்சல்கானுடன் வந்த படைவீரர்கள் ஒருவர் விடாமல் அத்தனை பேரையும் வேட்டையாடிக் கொன்றனர். அவன் கொண்டு வந்த யானை, குதிரை அனைத்தையும் சிறைப்பிடித்தனர். தங்கள் செய்கைக்கு வருந்திய படைத்தளபதிகளை மன்னித்து அவர்களுக்கு உயிர்பிச்சையும், பரிசுகளும் அளித்துத் திருப்பி அனுப்பி வைத்தார் சிவாஜி ராஜா.

1 comment:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

நல்ல படைப்பு ஐயா,

புகைப்படங்களை எங்கிருந்துதான் பிடித்தீரோ ?
அற்புதம்..

வாழ்த்துக்கள்..