பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, May 20, 2011

கோபாலகிருஷ்ண பாரதியார்

கோபாலகிருஷ்ண பாரதியார் (1811 - 1896)        

கர்நாடக இசையுலகில் தமிழிசைக்கு முன்னவர்களாகக் கருதப்படுபவர்களில் கோபாலகிருஷ்ண பாரதியாரும் ஒருவர். இவர் பல தமிழ் சாகித்தியங்களை இயற்றியிருந்தாலும், கதாகாலக்ஷேபத்துக்காக இவர் இயற்றிய "நந்தனார் சரித்திரம்" புகழ்பெற்று விட்டது. கர்நாடக சங்கீத உலகின் மிகப்புகழ் பெற்ற ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த சமகால வாக்யேயக்காரர் இவர். மாயூரத்தில் வாழ்ந்து வந்த கோபாலகிருஷ்ண பாரதியார், திருவையாற்றுக்குச் சென்று ஸ்ரீ தியாகராஜரை தரிசனம் செய்து, அங்கு அவருக்காக "சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா" எனும் ஆபோகி ராகக் கீர்த்தனையை இயற்றிப் பாடிக்காட்டினார்.

இவர் மாயூரத்தில் வாழ்ந்த காலத்தில் அங்கு இருந்த திருசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம் தமிழ் படிக்க அங்கு சென்றிருந்த தமிழ்த்தாத்தா என்று பின்னாளில் புகழ்பெற்ற உ.வே.சாமிநாத ஐயர் சிறிது நாட்கள் இவரிடம் சங்கீதம் பயின்றிருக்கிறார். கோபாலகிருஷ்ண பாரதியார் நாகப்பட்டினம் அருகிலுள்ள நரிமணம் எனும் ஊரில் பிறந்தார். தந்தையார் பெயர் ராமசுவாமி சாஸ்திரி. அவரும் ஒரு சிறந்த கர்நாடக சங்கீத வித்வான். மாயூரத்தில் வாழ்ந்த ஒரு ஆசிரியரிடம் இவர் அத்வைத சித்தாந்தத்தையும் யோக சாஸ்திரத்தையும் கற்றார். இவர் இல்லற வாழ்க்கையில் ஈடுபடாமலேயே, துறவறமும் ஏற்றுக் கொள்ளாமல் ஒரு சந்நியாசியைப் போல வாழ்க்கை நடத்தினார். இவர் குடும்பமே ஒரு சங்கீத குடும்பன் என்பதால் மிக இளவயது முதலே இவருக்கு சங்கீதம் இயற்கையாகவே வந்தது. அதனால் சிறிது வழிகாட்டியவுடன் இவர் சங்கீதத்தில் நல்ல தேர்ச்சி பெற முடிந்தது. தன்னுடைய சங்கீத ஞானத்தை வளர்த்துக் கொள்வதற்காக இவர் பல பெரிய சங்கீத வித்வான்களின் கச்சேரிகளைக் கேட்கத் தொடங்கினார். தானாகவே நன்கு பாடவும், புதிய பாடல்களை இயற்றவும் தொடங்கினார். இவரது பாடல்களில் அத்வைத சித்தாந்தக் கருத்துக்கள் மேலோங்கியிருக்கும். மகாகவி பாரதியார் தனது 'சங்கீத விஷயம்' எனும் கட்டுரையில் சொல்லியிருக்கிறபடி, புதிதாகப் பலர் சிறந்த பாடல்களை இயற்றிப் பாட முயற்சிக்க வேண்டும், பழைய பாடல்களையே பாடிக் கொண்டிருக்கக்கூடாது. பாட்டன் வெட்டிய கிணறு என்பதற்காக உப்புத் தண்ணீரைக் குடிக்கக்கூடாது என்பதற்கேற்ப இவரே புதிய சாகித்யங்களை இயற்றிப் பாடியதை பலரும் வரவேற்றார்கள்.

அவருடைய காலத்திலேயே பல சங்கீத வித்வான்கள் இவருடைய பாடல்களை கச்சேரிகளிலும், பெரிய ஜமீந்தார்கள் சபைகளிலும் பாடிவந்திருக்கிறார்கள். சங்கீத வித்வான்கள் தங்களுக்குப் புதிதாக இன்ன கருத்துக்களோடு பாடல்கள் வேண்டுமென்று கேட்டால் அதற்கேற்றார்போல பாடல்களை இயற்றிக் கொடுத்தார். பெரிய பெரிய வாக்யேயக்காரர்களின் கிருதிகளில் அவரவருடைய பெயரை முத்திரையாகச் சேர்த்திருப்பதைக் காணலாம். அதுபோலவே கோபாலகிருஷ்ண பாரதியும் தன்னுடைய பாடலின் வரிகளில் தன்னுடைய பெயரையும் சேர்த்துப் பாடியிருப்பதைக் கவனிக்கலாம். இப்போது போல திரைப்படங்கள் எல்லாம் இல்லாத நாட்களில் பல கதைகளை பாடல்கள் மூலம், பாட்டிடையிட்ட கதைகளாகச் சொல்வது வழக்கம். அந்த முறைக்கு ஏற்றார்போல இவர் பாடல்களையும் கதைகளையும் இயற்றி பாடிவந்தார். அந்த வகையில்தான் இவர் பெரிய புராணத்தில் உள்ள "திருநாளைப்போவார்" சரித்திரத்தை சிறிது மாற்றி, சில புதிய பாத்திரங்களைச் சேர்த்து "நந்தனார் சரித்திரம்" எனும் பெயரில் எழுதினார்.

இந்த நந்தன் என்பவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். தில்லை நடராஜன் மீது அளப்பரிய பக்தி கொண்டவர். இவர் ஓர் விவசாயி. விவசாய வேலைகளை முடித்துவிட்டு தில்லை சென்று நடராஜனை தரிசிக்க விரும்பினார். அலை ஓய்ந்து கடலில் ஸ்நானம் செய்வது போல, இவருக்கு வேலை விட்டபாடில்லை. இவர் தில்லை சென்று தரிசிக்கும்போது நந்தி மறைக்க, இவர் தரிசனத்துக்காக நந்தி விலகி வழிவிட்டது, இவர் ஜோதியில் கலந்தார் என்பது அந்தக் கதை. இந்தக் கதையில் மறையவர் என்று ஓர் பாத்திரத்தைப் படைத்து, அந்த மறையவர் நந்தனை தில்லை செல்லாதபடி வேலைவாங்கியதாகவும் கோபாலகிருஷ்ண பாரதி நந்தன் சரித்திரத்தில் எழுதினார். பின்னர் இவர் கற்பனையாக எழுதிய இந்தப் பாத்திரத்தை வைத்துக் கொண்டு இந்த வரலாற்றை ஜாதிப் பிரச்சினையாகவும் சிலர் ஆக்கிவிட்டனர். இவருடைய பாடல்களும் கருத்தும் கேட்க இனிமையாக இருந்த போதிலும் அவற்றில் இலக்கண பிழைகள் மண்டிக் கிடப்பதாக திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை கருத்துக் கூறியிருக்கிறார். கோபாலகிருஷ்ண பாரதியின் பல பாடல்கள் பிரசித்தி பெற்றிருந்தாலும் இந்த நந்தன் சரித்திரம் மட்டும் இவருக்குப் பெருமை தேடிக் கொடுத்தது. அதற்குக் காரணம் அப்போது தமிழ் நாட்டில் மராட்டிய மன்னர்கள் அறிமுகம் செய்து வைத்த கதாகாலக்ஷேப முறைதான். தஞ்சாவூர் கிருஷ்ண பாகவதர் என்பவர் இந்தக் கலையில் தலை சிறந்து விளங்கினார். அவர் நந்தன் சரித்திரத்தை கதாகாலக்ஷேபமாகச் செய்து ஊர் ஊராகப் பாடிப் பிரபலப் படுத்தினார்.

 கோபாலகிருஷ்ண பாரதியின் புகழும் வளர்ந்தது. இந்த கதாகாலக்ஷேபத்தின் மூலம் இந்தக் கதை நாடகமாக நடிக்கப்பட்டது. பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது. அதில் பிரபல கர்நாடக இசைக்கலைஞரும், அண்ணாமலை பல்கலைக்கழக தமிழிசைக் கல்லூரியின் முதல்வராக இருந்தவருமான திரு எம்.எம்.தண்டபாணி தேசிகர் நந்தனாராக வந்து பாடல்களைப் பாடி அவற்றுக்கு அமரத்தன்மை அளித்தார். ஒரு மனிதன் வாழ்ந்தான், எதோ சாதனைகளைச் செய்தான் என்பதோடு மட்டுமல்லாமல் என்றும் நிலைத்திருக்கும்படியான இதுபோன்ற செயலைச் செய்ததன் மூலம் கோபாலகிருஷ்ண பாரதியார் இசைத் துறையில் இன்றும் போற்றப்படுகிறார்.

குறிப்பு:-

கோபாலகிருஷ்ண பாரதியார் பற்றிய இந்தக் கட்டுரையைப் படித்த அன்பர் ஒருவர், பெரிய புராணத்தின்படி நந்தனாரின் முடிவு எப்படி ஆயிற்று என்ற வினாவை எழுப்பியிருந்தார். அவருக்கு எழுதிய பதிலை கீழே கொடுத்திருக்கிறேன். அதில் அறிஞர் ஆறுமுக நாவலர் எழுதியுள்ள 'பெரிய புராணம் வசன காவியம்' எனும் நூலில் கண்டுள்ளபடி 'திருநாளைப்போவார்' சரித்திரத்தின் முடிவைக் கொடுத்திருக்கிறேன்.


நம்முடைய புராண வரலாறுகளில் அந்த நாள் செய்திகள் இன்றைக்குப் பொறுத்தமுடையதாக இருக்குமா என்பதை பலரும் கவனிப்பதில்லை. அன்று நாயன்மார்கள் பலருக்கு சிவபெருமான் கட்சி அளித்ததாகப் படிக்கிறோம். இன்று ஏன் அவர் காட்சி தருவதில்லை என்ற கேள்வியும் அறிவு பூர்வமானதாகத்தான் இருக்கிறது. ஆனால் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். குலோத்துங்க சோழன் காலம் தமிழகத்தில் சோழ நாட்டின் பொற்காலம். நாடு செழித்து, செல்வத்தில் மக்கள் திளைத்தனர். மக்கள் ஜீவகசிந்தாமணி போன்ற இன்ப நூல்களைப் படித்து நேரத்தை வீணடித்தனர். மன்னன் சேக்கிழார் பெருமானிடம் கேட்டுக் கொண்டான், மக்களை நல்வழிப்படுத்த நல்ல நூல்களைப் படிக்க வைக்கமுடியாதா என்று. அவர் சொன்னார், மக்கள் கதைகளை, அதிலும் இன்பம் பயக்கும் கதைகளைக் கேட்க மனம் கொண்டிருக்கின்றனர் என்று. நீங்களும் கதை மூலமாக நல்ல அறவுரைகளைத் தரலாமே என்றான் மன்னன். பெரிய புராணம் பிறந்தது. இது வரலாற்றுப் பின்னணியில் சில மிகைப்படுத்தப்பட்ட கற்பனை கலந்தது என்பது பொதுவான கருத்து. அந்த வகையில் நந்தனார் தில்லை ஆலயத்தில் சிவனை தரிசித்து ஜோதியில் கலந்துவிட்டதாகப் புராணம் கூறினாலும், பிற்காலத்தில் இதனை சாதிப் பிரச்சனையாக்கி நந்தன் எனும் தாழ்த்தப்பட்டவரை மேல்சாதி மக்கள் தீக்கு இரையாக்கிவிட்டனர் என்று கூறலாயினர். வள்ளலார் ராமலிங்கசுவாமிகள் தனது அறையைத் தாளிட்டுக் கொண்டு தியானத்தில் இருக்கும் சமயம் ஜோதியில் கலந்துவிட்டதாக வரலாறு. அங்கும் அவர் எரிக்கப்பட்டதாக பிற்கால மக்கள் பேசலாயினர். ஆகவே, நாம் முடிவை எப்படி எடுத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோமோ அப்படி எடுத்துக் கொள்வது நல்லது.  எனினும் ஆறுமுக நாவலர் எழுதியுள்ள பெரியபுராண கதைகளின் படி நந்தனாரின் முடிவு இதோ. 

"நந்தனார் ஒரு நாள் சிதம்பர தரிசனம் பண்ண வேண்டும் என்கிற அளவிறந்த ஆசையினாலே தன் ஊரை விட்டுப் புறப்பட்டு சிதம்பரத்தின் எல்லையை அடைந்து மதில்வாயிலில் புகுந்து அங்குள்ள அந்தணர்களுடைய வீடுகளிலே ஓமம் செய்யப் படுதலைக் கண்டு பயந்து அங்கே நின்று வணங்கி அந்த எல்லையை வலம் செய்து கொண்டு போனார். இப்படி செய்துகொண்டிருந்த திருநாளைப் போவார், "இந்த இழிந்த பிறப்பு சபாநாயகரைப் போய்த் தரிசிக்க தடை செய்கின்றதே" என்று துக்கத்தோடு நித்திரை செய்தார். சபாநாயகர் (நடராஜப் பெருமான்) அவருடைய வருத்தத்தை நீக்கி அருள் செய்ய திருவுள்ளங்கொண்டு அவருக்குச் சொப்பனத்தில் தோன்றி "நீ இந்தப் பிறப்பு நீங்கும்படி நெருப்பிலே மூழ்கி எழுந்து அந்தணர்களோடும் நம்முடைய சந்நிதானத்திற்கு வருவாயாக!" என்று அருளிச் செய்து தில்லைவாழ் அந்தணர்க்கும் சொப்பனத்தில் தோன்றி அந்தத் திருநாளைப்போவார் பொருட்டு நெருப்பை வளர்க்கும்படி ஆணையிட்டு மறைந்தருளினார்.  தில்லைவாழ் அந்தணர்கள் எல்லோரும் விழித்தெழுந்து கோயில் வாயிலில் வந்து கூடி, சபாநாயகர் ஆணையிட்டபடி செய்வோம் என்று சொல்லி திருநாளைப் போவாரிடத்தில் சென்று "அய்யரே! சபாநாயகருடைய கட்டளையாலே இப்பொழுது உம் பொருட்டு அக்கினி வளர்க்கும்படி வந்தோம்" என்றார்கள். திருநாளைப்போவார் அதைக் கேட்டு "அடியேன் பிழைத்தேன்" என்று சொல்லி வணங்கினார். அந்தணர்கள் தென் மதில் சுவர் அருகில் கோபுர வாயிலுக்கு முன்பு ஒரு குழியிலே அக்னி வளர்த்து அதைத் திருநாளைப் போவாருக்கு போய்த் தெரிவித்தார்கள். அவரும் அந்த நெருப்புக் குழியை அடைந்து சபாநாயகருடைய திருவடிகளை மனத்தில் தியானித்து அதனை வலம் வந்து கும்பிட்டுக்கொண்டு அதன் உள்ளே புகுந்தார்.  அப்படி புகுந்த நாயனார் பழைய தேகத்தை ஒழித்துப் புண்ணியமாகிய அந்தண முனிவடிவம் கொண்டு சடைமுடியோடு எழுந்தார். அதுகண்டு தில்லைவாழ் அந்தணர்களும் மற்ற சிவபக்தர்களும் களிப்படைந்தார்கள். திருநாளைப் போவார் அவர்களோடு கோபுரத்தை அணுகி அதை வணங்கி எழுந்து உள்ளே போய்க் கனகசபையை அடைந்தார். அவரை, பின் அங்கே ந்ன்ற அந்தணர் முதலான பேர்கள் யாவரும் காணாமையால் ஆச்சரியம் கொண்டு தொத்திரம் செய்தனர். சபாநாயகர் திருநாளைப்போவாருக்குத் தம்முடைய திருப்பாதங்களைத் தந்தருளினார்."
"செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்" என்று திருத்தொண்டர் திருத்தொகை கூறும்.


2 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் ஐயா,

நந்தனார் சரித்திரம் - பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா ?

இதில் தான் நந்நதனார் கொலைசெய்யப்பட்டதாக
கோபாலகிருஷ்ண பாரதியார் பாடியதாக கேள்விப்பட்டதாக ஒரு நினைவு ? அது சரியா ?

http://sivaayasivaa.blogspot.com

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

ஐயா ஒரு விண்ணப்பம்,

நமது கமெண்ட் பகுதியில் உள்ள வேர்ட் வெரிபிகேசனை நீக்கி விடுங்களேன்.

அது அன்பர்களுக்கு கமெண்ட் செய்ய சிரமமாக இருக்கும்.