பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, May 22, 2011

ஊத்துக்காடு வேங்கட கவி

ஊத்துக்காடு வெங்கடசுப்பையர்

ஊத்துக்காடு வேங்கட கவியென்று புகழ்பெற்ற ஊத்துக்காடு வெங்கடசுப்பையருடைய காலம் 1700 முதல் 1765 வரை என்று தெரிகிறது. மிகச் சரியான வரலாறு எழுதி வைக்கப்படாமையல் சில விவரங்கள் பரம்பரையாகவும், உறவினர்கள் மூலமும் தெரிய வருகின்றன. இவர் தமிழ் ஆவணி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்று கூறப்படுகிறது. இவருடைய தந்தையார் இராமச்சந்திர வாதூலர், தாயார் கமலநயனி அம்மாள். தந்தையார் பெயரோடு ஒட்டியிருக்கிற சொல்லிலிருந்து இவர் வாதூல கோத்திரத்தில் உதித்தவராக இருக்கலாம். இவருக்கு ஒரு மூத்த சகோதரர் உண்டு. அவர் பெயர் காட்டு கிருஷ்ணையர் என்பது. இவர் தஞ்சாவூரை            ஆண்ட மராத்திய மன்னனான பிரதாபசிம்ஹ மகாராஜாவிடம் ஆஸ்தான பாடகராக இருந்திருக்கிறார்.

இவர் மன்னார்குடியில் பிறந்தவர் என்றாலும் பாபநாசத்தை அடுத்த ஆவூர் அருகிலுள்ள ஊத்துக்காடு எனும் கிராமத்தில்தான் வளர்ந்தார். இவ்வூருக்கு அருகில்தான் பாகவதமேளாவுக்குப் பெயர்போன மிலட்டூர் எனும் ஊரும், புகழ் வாய்ந்த கர்ப்பரக்ஷாம்பிகா சமேத முல்லைவனநாதர் எழுந்தருளியிருக்கும் திருக்கருகாவூர் எனும் கிராமமும் அமைந்திருக்கின்றன.

பொதுவாக குழந்தை பிறப்பது தாயாருடைய பெற்றோர்கள் இருக்கும் ஊரில் என்பதால், இவருடைய தாயார் ஊர் மன்னார்குடியாகவும் தந்தையார் ஊர் ஊத்துக்காடு எனவும் இருக்கலாம். தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் உத்தமதானபுரத்தில் பிறந்தார் என்று புத்தகங்களில் எழுதிவருகிறார்கள். உண்மையில் அவர் பிறந்த ஊர் ஆடுதுறை அருகிலுள்ள சூரியமூலை எனும் கிராமம், அது அவரது தாயார் ஊர். தந்தையார் வாழ்ந்த ஊர் உத்தமதானபுரம். இது பாபநாசம் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ளது. இதுபோல சில தவறுகள் ஏற்படுவது தவிர்க்கமுடியாதது. ஊத்துக்காடு அருகில் உள்ள மிலட்டூர் கிராமம் நாயக்க மன்னர்கள் காலத்தில் இங்கு அறிமுகமான தெலுங்கில் கவிதையும், உரைநடையுமாக அமைந்த 'பாகவதமேளா' எனும் நாட்டிய நாடகங்களுக்குப் பெயர் போனது. இன்றும்கூட ஒவ்வோராண்டும் இங்கும் வேறு சில ஊர்களிலும் இந்த பாகவதமேளா எனும் நாட்டிய நாடகங்கள் நடந்து வருவதை அறிவீர்கள். இதில் ஆண்களே பெண்வேடமிட்டு பாடி, ஆடி நடிப்பார்கள். வசனம் பெரும்பாலும் தெலுங்கில்தான் இருக்கும். இந்த ஆண்டில்தான் மிலட்டூரில் தமிழில் "கீதோபதேசம்" எனும் பெயரில் தமிழில் நாட்டிய நாடகம் அரங்கேறியது.

இந்த சூழ்நிலையில் வளர்ந்த காரணத்தால் வேங்கடசுப்பையர் இசை, நாடகம், நாட்டியம் ஆகிய கலைகளில் ஆர்வமும், திறமையும் உடையவராக விளங்கினார். ராஜா பாகவதர் என்று ஒருவர் அப்போது இருந்தார். இவரை பூரனூர் நடேச பாகவதர் என்றும் குறிப்பிடுவார்கள். இவருடைய பாடல்கள் முதலியன வேங்கடசுப்பையருக்குப் பிடிக்கும். அவற்றைக் கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டினார். கிருஷ்ண யோகி என்றொருவர் இருந்தார். நல்ல திறமைசாலி. அவரிடம் இசை, நாட்டியம் இவற்றைக் கற்றுக்க்கொள்ள இவர் விரும்பினார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். ஆகையால் இவர் சரியான குருநாதர் அமையாமல் ஊத்துக்காடு கிராமத்திலிருந்த ஆலயத்தில் இறைவன் சந்நிதியின் முன்பாக அமர்ந்து தானாகவே பாடத் தொடங்கினார். நீங்கள் ஊத்துக்காடு வந்து அந்த கிருஷ்ணன் ஆலயத்தை ஒரு முறை பார்க்க வேண்டும். அங்கு கருவறையில் அமைந்திருக்கும் ஸ்ரீ கிருஷ்ண விக்ரகம், காளிங்கனை வதம் செய்யும் பாலகிருஷ்ணன் வடிவத்தில் அமைந்திருக்கும். காளிங்கன் எனும் பாம்பு படமெடுத்து ஸ்ரீ கிருஷ்ணனோடு போரிடும்போது, அதனை அது வாழும் சுனையிலேயே எதிர்த்து போரிட்டு அடக்கி, அதன் படமெடுத்த தலைமீது நின்று ஆடி, அதன் கொட்டத்தை அடக்கிய காட்சியில், காளிங்கன் தலைமீது நிற்கும் கோலமும், ஒரு கையால் காளிங்கனின் வாலின் நுனியைப் பிடித்திருப்பது போலவும் அந்த அழகிய உருவம் காணப்படுகிறது. இதில் ஓர் அற்புதம் என்னவென்றால், அந்த சிலையில் காளிங்கன் தலைமீது கிருஷ்ணனின் கால் படுவது போல தோன்றினாலும், காலுக்கும் காளிங்கன் தலைக்கும் இடையில் ஒரு சிறு இடைவெளி, கண்ணுக்குத் தெரியாத இடைவெளி உண்டு. அதன் மூலம் ஒரு காகிதத்தை விட்டு அப்புறம் எடுத்துவிடலாம்.

அப்படிப்பட்ட அற்புத அமைப்பு உள்ள சிலை அது. அந்த கிருஷ்ணன் அனுக்கிரகம் தான் வேங்கடசுப்பையர் வேங்கடகவியானார். இவருடைய வரலாற்றைக் கூறுபவர்கள், அவர் அந்த கிருஷ்ணன் சந்நிதியில் பாடும் போது, அவர் முன்பு ஸ்ரீ கிருஷ்ண பகவான் தோன்றி அருள் புரிந்ததாகக் கூறுவார்கள். வேங்கடகவி அரிய பல பாடல்களை ஸ்ரீ கிருஷ்ணன் மீது பாடிச் சென்றிருக்கிறார். இன்று அவருடைய பாடல்களைப் பாடாத பாடகர்கள் உண்டா?

'அலைபாயுதே', 'ஆடாது அசங்காது வா கண்ணா', 'குழலூதி மனமெல்லாம்', 'யார் என்ன சொன்னாலும்', 'விஷமக்காரக் கண்ணன்' போன்ற பிரபலமான பாடல்களை இயற்றியவர் வேங்கடகவிதான். இன்னும் பல பாடல்கள் வெளிவராமலே இருக்கின்றன. இவர் 60 ஆண்டுகள் வாழ்ந்ததாகச் சொல்கிறார்கள். வேறு சிலர் 80 அல்லது 90 வயது வரை வாழ்ந்தார் என்றும் சொல்கிறார்கள். எது சரி? எது எப்படியோ அழியாத பல அற்புத பாடல்களைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார் என்பது போதாதா என்ன? இவருடைய பாடல்கள் 200, 250 ஆண்டுகளைத் தாண்டி இன்னமும் உயிர்ப்போடு பாடப்படுகிறது என்பதே பெரிய சாதனை அல்லவா? புனிதமும், புலமையும், ஆத்மார்த்தமான பக்தியும், ஈடுபாடும்தான் இந்த சாதனைக்குக் காரணமாக இருந்திருக்கிறது என்றால் மிகையல்ல.

இவருக்கு சீடர்கள் யாரும் இருந்தார்களா? தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் அந்த சிஷ்ய பரம்பரையினரால் பாடப்பட்டு இன்று அந்த மகானுடைய வாரிசுகள் யார் என்பதும் தெரிந்திருக்குமே. யார் செய்த புண்ணியமோ, தமிழகத்தில் சிறப்பாக சோழ நாட்டில் செழித்து வளர்ந்த நாதஸ்வரக் கலையும், அந்தக் கலைஞர்களும் வேங்கடகவியின் பாடல்களை உயிர்ப்போடு வைத்திருந்திருக்கிறார்கள். குறிப்பாக ருத்ரபசுபதி எனும் நாதஸ்வர வித்வான் பற்றி சொல்லுகிறார்கள். வேங்கடகவியின் தமையனார் காட்டு கிருஷ்ணையர் சில பாடல்களை எழுதி வைத்திருந்ததாகவும், அது கைமாறி நாதஸ்வர வித்வான் ருத்ரபசுபதிக்குக் கிடைத்து அவர் அந்தப் பாடல்களைத் தன் நாதஸ்வரத்தில் பாடி பிரபலப்படுத்தியதாகவும் சொல்கிறார்கள்.

வேங்கடகவியின் தமையனார் காட்டு கிருஷ்ணையருக்கு மூன்று புதல்விகள். இவர்களும், இவர்களுக்குப் பின் அவர்களது வாரிசுகளும் இந்தப் பாடல்களைப் போற்றி பாதுகாத்து வந்திருக்கிறார்கள். அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் கிருஷ்ண சாஸ்திரியார் என்பவர். இவர் காட்டு கிருஷ்ணையரின் மகள் வழிப் பேத்தியின் கணவர். இவர் ஒரு இசைக் கலைஞர். இவருக்குப் பல சீடர்கள் இருந்தார்கள். அவர்களில் இருவர் முக்கியமானவர்கள். ஒருவரது இயற்பெயர் என்னவோ தெரியாது, ஆனால் தன் பெயரை 'குட்டி கவி' என்று வைத்துக் கொண்டார். பெரிய கவி என்பது வேங்கடகவியாம். மற்றொருவர் பெயர் கணபதி முனி. இவர்கள் வேங்கடகவியின் பாடல்களை அதிகம் பாடத் தொடங்கினர். இந்தப் பாடல்களை பிரபல ஹரிகதா வித்வான் ராஜு சாஸ்திரிகள் என்பவர் கேட்க நேர்ந்தது. இந்தப் பாடல்களின் வசீகரத்தில் மெய்மறந்த சாஸ்திரியார் இந்தப் பாடல்களைத் தன் உபந்யாசத்தில் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கினார்.

இப்படி இந்தப் பாடல்கள் வாழையடி வாழையாக இசை உலகில், ஹரிகதா உலகில், பாகவத உலகில் பரவத் தொடங்கி எங்கும் எதிலும் இவர் பாடல்கள் கேட்கும்படியான நிலைமை உருவானது. வேங்கடகவி எத்தனை பாடல்கள் இயற்றினாரோ, எத்தனை பாடல்கள் கிடைத்தனவோ, எத்தனைப் பாடல்கள் மறைந்து போனதோ தெரியவில்லை.

இப்படி வேங்கடகவியின் பாடல்களைப் பிரபலப்படுத்தியவர்களின் வரிசையில் நம்மால் மறக்கமுடியாதவரும், மிக முக்கியமானவருமான நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதரை மறக்கமுடியாது. இவரால்தான் இன்று அப்பாடல்கள் பிரபலமாக இருக்கிறது என்று சொன்னால் அதை மறுக்கமுடியாது. இவர் சமீக காலத்தில், நம் காலத்தில் வாழ்ந்து நாடெங்கும் ஹரிகதா காலக்ஷேபங்களை நடத்தி வந்தவர். வேங்கடகவியின் பல பாடல்களை ஒலிப்பதிவு செய்து வெளியிட்டவர். இவர் பாடி மக்களை மயக்கிய "காளிங்கநர்த்தனம்" மக்களால் மறக்கமுடியுமா? 'கிருஷ்ண கானம்" எனும் பெயரில் அவர் செய்து வந்த ஹரிகதாவும், அதன் ஒலிப்பதிவு நாடாக்களும் தமிழ் நாட்டையே உலுக்கியது என்றுகூட சொல்லலாம். எங்கோ தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு சிறு கிராமமான ஊத்துக்காட்டில், எந்த வசதிகளும் இல்லாத நாளில் அரிய, உயரிய பாடல்களை இயற்றிச் சென்ற வேங்கடகவியின் பாடல்கள் இந்த நவீன யுகத்தில் தமிழகத்தின் தலைநகராம் சென்னை மாநகரத்தில் மியூசிக் அகாதமி, நாரதகான சபா போன்ற இசையின் உயர் பீடங்களில் ஒலித்திருக்கிறது என்பது நினைக்கவே பிரமிப்பாக இருக்கிறது.

நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதரின் ஹரிகதா கச்சேரிகள், ஒலி நாடாக்கள், அச்சிட்டு வெளியிட்ட நூல்கள் இவைகள் வாயிலாக வேங்கடகவி தமிழர்களின் உணர்வில், உயிரில், கரங்களில் என்றும் நிலைத்திருக்கும்படியாக நேர்ந்தது. வேங்கடகவியின் பாடல்களில் அமைந்துள்ள தாளக்கட்டு, இசை வடிவம், உணர்ச்சிப் பிழம்பாக வர்ணிக்கும் மொழி ஜாலம், அவருடைய தமிழ், சமஸ்கிருத மொழி ஞானம் போன்ற பல விஷயங்கள் இன்றும் வியந்து போற்றி பாராட்டும் வகையில் அமைந்திருக்கின்றன. இப்படிப்பட்ட பெரியவர்களின் வரலாறுகள், சில நூறு ஆண்டுகளே ஆனதென்றாலும் நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை என்பது வருத்தத்துக்குரியதுதான். அவரது பாடல்களை எடுத்து, ஆய்வு செய்து அதன் அழகை, ஆழத்தை, இனிமையைப் பலர் வெளியிட்டிருந்தாலும், அவர் வாழ்க்கைச் சரிதத்தை முழுமையாக வெளியிடமுடியவில்லையே என்கிற ஆதங்கம் இருக்கத்தான் செய்கிறது. இல்லையா?

இவை சில பிரபலமான பாடல்கள்.

'அசைந்தாடும்' சிம்மேந்திரமத்யம ராகம்
'அலைபாயுதே' கானடா ராகம்
'ஆடாது அசங்காது வா' மத்யமாவதி ராகம்
'அபாலபாலா' கேதாரம்
'ஆடும்வரை அவர் ஆடட்டும்' ஹுசேனி ராகம்
'என்ன புண்ணியம்' ரீதிகெளளை ராகம்
'குழலூதி' காம்போஜி ராகம்
'மணிநூபுர' நீலாம்பரி
'மதனாங்க மோகனா' கமாஸ் ராகம்
'மதுர மதுர' அடாணா ராகம்
'மரகத மணிமய' ஆரபி ராகம்
'முன்செய்த தவப்பயன்' ரேவகுப்தி
'நாத முரளி கான' கல்யாணி
'என்ன தவம்' கமாஸ் ராகம்
'நீதான் மெச்சிக்கொள்ள வேண்டும்' ஸ்ரீ ரஞ்சனி
'பால்வடியும் முகம்' நடகுறிஞ்சி
'பார்வை ஒன்றே போதுமே' சுருட்டி
'ஸ்வாகதம் கிருஷ்ணா' மோகன ராகம்
'தாயே யசோதா' தோடி ராகம்
'வரமொன்று' சண்முகப்பிரியா ராகம்
'வேணுகான ரமணா' தோடி ராகம்
'வந்ததும் போனதும்' பிலஹரி ராகம்
'யாரென்ன சொன்னாலும்' மணிரங்கு ராகம்


'

8 comments:

இராஜராஜேஸ்வரி said...

அந்த சிலையில் காளிங்கன் தலைமீது கிருஷ்ணனின் கால் படுவது போல தோன்றினாலும், காலுக்கும் காளிங்கன் தலைக்கும் இடையில் ஒரு சிறு இடைவெளி, கண்ணுக்குத் தெரியாத இடைவெளி உண்டு. அதன் மூலம் ஒரு காகிதத்தை விட்டு அப்புறம் எடுத்துவிடலாம்.//
Wonderful.

vaidyanathan said...

Kaalinga NARDHANAN perumal and not Kalinga MARDHANA otherwise Superb article.Thanks for the postings
vaidyanathan

Thanjavooraan said...

Thank you Sir, I regret the error. Now I have corrected it as "Kalinga Narthanam". Thank you again for the appreciation.

Anonymous said...

அருமை ஐயா. முகநூல் வழியாக இங்கு வந்தேன் மிக்க நன்றி. மகிழ்ச்சி.
வேதா. இலங்காதிலகம்.

Anonymous said...

Wonderful post. Thanx for your post. I like to hear "மதனாங்க மோஹன ஸுகுமாரனே வ்ரஜ" javali song. How can I get this javali?

Anonymous said...

is there any past history (past births) of Sri venkatakavi? please reply

Sethu Subramanian said...

Please visit my blogspot mentioned below for my article on "KaNNan varuginRa nEram.." kAvadic cindhu.
http://periscope-narada.blogspot.com/2014/09/kannan-varuginra-neram-folk-melody.html

தாசெ said...

https://www.youtube.com/playlist?list=PL4ljP4IezNBLqn1W5rR1s71wd5dgw7BWP