பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, June 9, 2020

ஊத்துக்காடு.

           இந்த பெயரைக் கேட்டமாத்திரத்தில் நம் நினைவுக்கு வருபவர் அங்கு கோயில் கொண்டிருக்கும் காளிங்கநர்த்தன பெருமாளும், அவரைப் பற்றி ஏராளமான பாடல்களை இயற்றி இன்றுவரை தமிழிசையில் பாடப்பட்டு வரும் வேங்கடசுப்பையர் இயற்றிய கிருஷ்ணகானமும் நம் நினைவுக்கு வரும். எத்தனை பாடல்கள். அலைபாயுதே, ஆடாது அசங்காது வா கண்ணா இப்படி அவருடைய பாடல்களைக் கேட்காதவர்களே இருக்க முடியாது. அன்று ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி. காளிங்கன் தலைமீது ஏறி நர்த்தனமாடி, காளிங்கனின் கொட்டத்தை அடக்கிய கிருஷ்ண பகவானின் தரிசனம் அந்த தினத்தில் கிடைத்தது மாபெரும் பேறு.

       அன்று ஊத்துக்காடு என்றுமில்லா அளவுக்கு மக்கட் கூட்டத்தால் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. ஆலயத்தினுள் நுழையக் கூட நெரிசலில் அல்லல் பட நேர்ந்தது. ஒருவழியாக ஸ்ரீகிருஷ்ண தரிசனம் கிடைத்தது.

       ஊத்துக்காடு எனும் கிராமம் சாலியமங்கலத்திலிருந்து திருக்கருகாவூர் வழியாக ஆவூர் சென்று பாபநாசம் கும்பகோணம் போகும் சாலையில் திருக்கருகாவூரிலிருந்து சுமார் ஐந்து கி.மீ. தூரத்தில் அமைந்த கிருஷ்ணத் தலம். இது 1000 – 2000 வருஷங்கள் பழமையானது. கிருஷ்ண ஜயந்தி திருவிழா இங்கு பிரபலமாக நடைபெறும். முன்பெல்லாம் கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு இரவு முழுதும் பித்துக்குளி முருகதாஸ் அவர்கள் ஊத்துக்காடு வேங்கடகவியின் பாடல்களைப் பாடும் நிகழ்ச்சி நடைபெறும். நாளடைவில் அது நின்றுபோயிற்று.

இங்கு மூலஸ்தானத்து கிருஷ்ண விக்ரகம் காளிங்கன் எனும் ஐந்து தலை நாகத்தின் தலைமீது கிருஷ்ணன் நின்று ஆடுவது போன்ற தோற்ற முடையது. பாம்பின் தலைமீது கண்ணன் நிற்பது போல தோந்றினாலும், பாம்புத் தலைக்கும் கண்ணன் காலுக்கும் இடையில் மெல்லிய நூலிழை போன்ற இடைவெளி உண்டு. இதுவே இங்குள்ள சிறப்பு. அருள்மிகு காளிங்கநர்த்தன கிருஷ்ணன் கோயில் கொண்டிருக்கும் இந்த ஊத்துக்காடு வந்து ரோஹிணி நட்சத்திரக்காரர்கள் வழிபடுவது வழக்கம். அதுபோலவே தத்தமது குழந்தைகள் இசையில் வல்லவர்களாக, கலைகளில் சிறந்தவர்களாக ஆக வேண்டுமென்று நினப்பவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்வது வழக்கம்.

உத்ஸவர் கிருஷ்ணன் காலுக்கு கொலுசு வாங்கி சாத்தி வழிபடுவது சிறப்பு. காரணம் இந்த கிருஷ்ணன் காளிங்கன் எனும் பாம்பு வடிவுடைய அசுரனை அவன் தலைமேல் ஏறி நின்று, சுற்றிலும் ஆயர்பாடி சிறுவர்கள் பயந்து போய் பார்த்துக் கொண்டிருக்க இவன் அந்த ராட்சச வடிவுடைய அரக்கப் பாம்பை ஆடியே வதம் செய்த காலல்லவா கண்ணனின் கால்கள். அந்தக் கால்களுக்கு கொலுசு அணிவித்து அழகு பார்க்க வேண்டாமா? ஸ்ரீஜயந்தி அன்று கிருஷ்ண பகவானுக்கு நூற்றுக்கணக்கான லிட்டர் பால் கொண்டு அபிஷேகம் செய்விப்பர்.

தலவரலாறு:  தேவலோகப் பசுவான காமதேனு, தன் கன்றுகளான நந்தினி, பட்டி மற்றும் இதர பசுக்களுடன் ஊத்துக்காட்டில் வசித்தது. சிவபெருமானுக்கு இந்த காமதேனு மலர்களைக் கொய்து கொண்டு வந்து இங்குள்ள கயிலாசநாதனுக்கு அர்ச்சித்து பூஜித்து வந்தது. இங்கு ஏராளமான பசுக்கள் நிரம்பியிருந்த காரணத்தால் இவ்வூர் “ஆவூர்” என வழங்கப்பட்டது. “ஆ” என்றால் பசு. பசு வந்த இடம் “கோ” வந்து “குடி”யேறிய காரணத்தால் கோவிந்தகுடி என்றாகியது. அது போலவே பட்டி எனும் பசு சிவனை பூசித்தத் தலம் பட்டீஸ்வரம். இப்படி பல ஊர்கள் இருந்த போதும் காமதேனு விரும்பி வசித்தத் தலம் ஊத்துக்காடு.

ஆதி நாளில் இவ்வூர் காமதேனுவின் சுவாசமாக இருந்ததால் “மூச்சுக்காடு” என்றும் நாளடைவில் “ஊத்துக்காடு” என மறுவியது. ஒரு முறை தேவரிஷி நாரதர் இங்கு வந்து இங்கிருந்த பசுக்களிடம் ஸ்ரீ கிருஷ்ண பகவான் சரிதையைச் சொன்னார். அப்படிச் சொல்லும்போது, காட்டில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஆயர்குலச் சிறுவர்களை அங்கிருந்த ஒரு மடுவில் பெரிய பாம்பு ஒன்று இருந்து துன்புறுத்தி வந்ததையும், அதன் பெயர் காளிங்கன் என்றும், அந்தக் காளிங்கனின் ஆணவத்தை அடக்கக் கண்ணன் அதன் தலைமீது ஏறி நின்று அது சோர்ந்து வீழும்வரை தலைமீது ஆடியதையும் நினைவுகூர்ந்தார். இதனைக் கேட்டு காமதேனு கண்ணனை கண்ணீர் மல்க வணங்கி மகிழ்ந்தது.

  1. காமதேனுவுக்கு ஸ்ரீகிருஷ்ணனை எப்படியாவது தரிசிக்க வேண்டும், அவன் குழலிசையைக் கேட்டு மகிழ் வேண்டுமென்கிற ஆசை உண்டானது. அதை அப்படியே கிருஷ்ணனிடம் வேண்டிக் கொண்டது. அன்பர் குரலுக்கு ஓடோடி வரும் கிருஷ்ணன் காமதேனுவின் கோரிக்கையை ஏற்காமல் இருப்பானா? ஓடோடி வந்தான். வேணுகானம் உள்ளம் உருக வாசித்தான். அப்போது மடுவில் காளிங்கன் தலைமீது தான் ஆடிய காட்சியை அதற்குக் காட்டினான். காமதேனு ஜென்மம் சாபல்யம் அடைந்ததாக உணர்ந்தது.
  2. பிந்நாளில் சோழ மன்னன் ஒருவன் இந்தப் பகுதிக்கு வந்த போது இந்த வரலாற்றைக் கேட்டான், அதற்கேற்றவாரு காளிங்க நர்த்தன கிருஷ்ணனுக்கு இங்கொரு ஆலயத்தை வடித்துக் கொடுத்தான் என்கிறது இவ்வூர் தலபுராணம்

1 comment:

ஜீவி said...

விக்கிரகப் படங்களைப் போட்டிருக்கலாம்.

ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் சிலை கூட வெளிச்சுற்று பிரகாரத்தில் உண்டே?..

ஆவூர், கோவிந்தகுடி, பட்டீஸ்வரம் பெயர்க் காரணங்களை இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன். நன்றி.