பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, July 7, 2018

திவ்யப் பிரபந்த பாசுரப்படி இராமாயணம்.

                            
வால்மீகியின் அடியொற்றி கம்பன் காப்பியம் செய்ய, ஆழ்வார்கள் அருளிச் செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தக்களில் காணப்படும் இராமாயண வரிகளைக் கொண்டு பெரியவாச்சான் பிள்ளை தொகுத்தளித்த பாசுரப்படி இராமாயணமமும் இராம காதையை விரிவாகச் சொல்லுகிறது. ஆழ்வார்கள் அருளிச் செய்த திவ்யப் பரபந்தத்திலிருந்து எடுத்த சொற்களை ஒரே சொற்றொடரில் இராம காதையை எழிலுறு அமைத்துத் தந்தவர் இந்த வைணவ அறிஞர். இங்கு அந்த பாசுரப்படி இராமாயணத்தையும் பார்க்கலாம்.

பாலகாண்டம்.

திருமடந்தை மண்மடந்த இருபாலுந்திகழ, நலமந்த மில்லதோர் நாட்டில், அந்தமில் பேரின்பத் தடியரோடு ஏழுலகுந் தனிக்கோல் செல்ல வீற்றிருக்கும் அயர்வறு மமர்க ளதிபதியான அணியார் பொழில்சூழ் அரங்கநகர் அப்பன் அலை நீர்க் கடலுள் அழுந்தும் நாவாய் போல் ஆவாரார் துணை என்று துளங்கும் நல்லமரர் துயர்தீர, வல்லரக்கர் வாழிலங்கை பாழ்படுக்க வெண்ணி, மண்ணுலகத் தோருய்ய, அயோத்தியென்னும் அணிநகரத்து வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய், கெளசலை தன் குல மதலையாய்த் தயரதன் தன் மகனாய்த் தோன்றி, குணந்திகழ் கொண்டலாய், மந்திரங்கோல் மறைமுனிவன் வேள்வி காக்க நடந்து, வந்து எதிர்ந்த தாடகைதன் உரத்தைக் கீறி, வலரக்கர் உயிருண்டு கல்லைப் பெண்ணாக்கி, காரார் திண் சிலையிறுத்து, மைதிலியை மணம் புணர்ந்து, இருபத்தொருகால் அரசு களைகட்ட மழுவாளி வெவ்வரி நற்சிலை வாங்கி வென்றி கொண்டு, அவன் தவத்தை முற்றுஞ் செற்று, அம்பொனெடு மணிமாட அயோத்தி எய்தி, அரியணைமேல் மன்னனாவானிற்க:

அயோத்யா காண்டம்.

கொங்கை வன் கூனி சொற்கொண்ட கொடிய கைகேயி வரம் வேண்ட, அக்கடிய சொற்கேட்டு, மலக்கிய மாமனத்தினனாய் மன்னவனும் மறதொழிய, 'குலக்குமரா! காடுறையப் போ" என்று விடை கொடுப்ப, இருநிலத்தை வேண்டாது, ஈன்றெடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கொழிந்து, மைவாய களிறொழிந்து மாவொழிந்து தேரொழிந்து கலனணியாதே, காமரெழில் விழலுடுத்து, அங்கங்கள் அழகுமாறி, மானமரும் மென்னோக்கி வைதேகி இந்துணையா, இளங்கோவும் வாளும் வில்லுங்கொண்டு பின்செல்ல, கலையுங் கரியும் பரிமாவுந் திரியுங் கானங்கடந்து போய், பத்தியுடைக் குகன் கடத்தக் கங்கை தன்னைக் கடந்து, வனம்போய்ப்புக்கு, காயோடு நீடு கனியுண்டு, வியன்கான மரத்தினிழல் கல்லணைமேற் கண்துயின்று, சித்திரகூடத் திருப்ப, தயரதன் தான், 'நின் மகன்மேற் பழிவிளைத்திட்டு என்னையும் நீள் வானிற்போக்க என்பெற்றாய் கைகேசி! நானும் கானகமே மிக விரும்பிப் போகின்றேன்' என்று வானேற, தேனமரும் பொழிற்சாரற் சித்திர கூடத்து, ஆனைப்புரவித்தேரொடு காலாளனி கொண்ட சேனை சுமந்திரன் வசிட்டருடன் பரதநம்பி பணிய, தம்பிக்கு மரவடியை வான் பணையம் வைத்து, குவலயத் துங்கக் கரியும் பரியு மிராச்சியமும் எங்கும் பரதற்கருளி விடை கொடுத்து, செருவுடைய திசைக்கருமந் திருத்தப் போய்த் தண்டகாரணியம் புகுந்து:

ஆரண்ய காண்டம்.

மறைமுனிவர்க்கு 'அஞ்சேன்மின்' என்றருள் கொடுத்து, வெங்கண் விறல் விராதன் உகவில் குனித்து, வண்தமிழ் மாமுனி கொடுத்த வரிவில் வாங்கி, புலர்ந்தெழுந்த காமத்தால் சீதைக்கு நேராவனென்ற, பொன்னிறங் கொண்ட சுடுசினத்த சூர்ப்பணகி, கொடிமூக்கும் காதிரண்டும் கூரார்ந்த வாளால் ஈராவிடுத்து, கரனோடு தூடணன் தன் உயிரை வாங்க, அவள் கதறித் தலையில் அங்கை வைத்து மலையிலங்கை ஓடிப்புக, ஒடுமையிற் சுடுவிசை யரக்கன் அலைமலி வேல்கணானை அகல்விப்பான் ஒருருவாயமானை யமைத்து, செங்கற் பொடிக்கூறை சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டத்தனாய் வஞ்சித்து, இலைக்குரம்பில் தனியிருப்பில் கனிவாய்த் திருவினைப் பிரிந்து நீள்கடல் சூழ் இலங்கையில் அரக்கர் குடிக்கு நஞ்சாகக் கொண்டுபோய் வம்புலாங் கடிகாவில் சிறையா வைக்க, அயோத்தியர் கோன் மாயமான் மாயச் சென்ற்று, அலைமலிவேற் கண்ணாளை அகன்று, தளர்வெய்திச் சடாயுவை வைகுந்தத் தேற்றி, கங்குலும் பகலும் கண் துயிலின்றிக் கானகம் படியுலாவியுலாவி, கணை யொன்றினாற் கவந்தனை மடித்து, சவரி தந்த கனி உவந்து.

கிஷ்கிந்தா காண்டம்.

வனமருவு கவியரசன் தன்னொடு காதல் கொண்டு, மராமரமேழெய்து, உருத்தெழு வாலி மார்பில் ஒருகணை உருவ வோட்டிக் கருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர்முடி அரசளித்து, வானரக் கோனுடனிருந்து, வைதேகி தனைத் தேடவிடுத்த திசைக் கருமந்திருத்தத் திறல் விளங்கு மாருதியும் மாயோன் தூதுரைத்தல் செப்பா.

சுந்தர காண்டம்.

சீராருந் திறலனுமன் மாகடலைக் கடந்தேறி, மும்மதில் நீளிலங்கை புக்கு, கடிகாவில் வாராரு முலை மடவாள் வைதேகிதனைக் கண்டு, நின்னடியேன் விண்ணப்பங் கேட்டருள்வாய், அயோத்தி தன்னில் ஓரிடவகையில் எல்லியம் போதினி திருத்தல் மல்லிகை மாமாலை கொண்டங் கார்த்ததும், கலக்கிய மா மனத்தினளாய்க் கைகேசி வரம் வேண்ட, மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய, 'குலக்குமரா! காடுறையப்போ' வென்று விடைகொடுப்ப, இலக்குமணன் தன்னோடு அங்கேகியதும், கங்கை தன்னிற் கூரணிந்த வேல்வலவன் குகனோடு சீரணிந்த தோழமை கொண்டதுவும், சித்திரகூடத் திருப்பப் பரத நம்பி பணிந்ததுவும், சிறுகாக்கை முலை தீண்ட மூவுலகுந் திரிந்தோடி, 'வித்தகனே! இராமா! ஓ! நின்ன பயமென்ன, அத்திரமே அதன் கண்ணை அறுத்ததுவும், பொன்னொத்த மானொன்று புகுந்தினிது விளையாட நின்னன் பின் வழிநின்று சிலை பிடித்து எம்பிரானேகப் பின்னே யங்கு இலக்குமணன் பிரிந்ததுவும் அயோத்தியர்கோன் உரைத்த அடையாளம், ஈடு அவன் கை மோதிரமே என்று அடையாளந் தெரிந்துரைக்க, மலர்க்குழலாள் சீதையும் வில்லிறுத்தான் மோதிரங்கண்டு, 'அனுமான்! அடையாளம் ஒக்கும்' என்று உச்சிமேல் வைத்து உகக்க, திறல் விளங்கு மாருதியும் இலங்கையர்கோன் மாக்கடிகாவை இருத்துக் காதல் மக்களும் சுற்றமும் கொன்று, கடியிலங்கை மலங்க எரித்து, அரக்கர்கோன் சினமழித்து மீண்டு, அன்பினால் அயோத்தியர் கோன் தளிர்புரையும் அடியிணை பணிய.

யுத்த காண்டம்.

கான வெண் குங்குரங்கும் முசுவும் படையாக் கொடியோனிலங்கை புகலுற்று, அலையார் கடற்கரை வீற்றிருந்து செல்வ விபீடணற்கு நல்லனாய் விரி நீரிலங்கை அருளி, அரண்புக்க குரைகடலை அடலம்பால் மறுகவெய்து, கொல்லை விலங்கு பணிசெய்ய, மலையாலணைகட்டி மறுகரையேறி, இலங்கை பொடிபொடியாகச் சிலைமலி செஞ்சரங்கள் செலவுய்த்து, கும்பனோடு நிகும்பனும் பட, இந்திரசித்தழியக், கும்பகரணன் பட, அரக்கராவிமாள, அரக்கர் கூத்தர் போலக் குழமணி தூரமாட, இலங்கை மன்னன் முடியொருபதும் தோளிருபதும் போயுதிரச் சிலை வளைத்துச் சரமழை பொழிந்து, வென்றிகொண்ட செருக்களத்துக் கடிக்கமல நான்முகனும் கண்மூன்றத்தானும் எண்மர் பதினொருவர், ஈரறுவர் ஓரிருவர் மற்றுமுள்ள வானவர் மலர் மழை பொழிந்து, மணிமுடி பணிதர அடியிணை வணங்க, கோலத் திருமாமகளோடு, செல்வ விபீடணன், வானரக் கோனுடன் இலகுமணி நெடுந்தேரேறி, சீரணிந்த குகனோடு கூடி, அங்கணெடுமதில் புடைசூழ் அயோத்தி எய்தி, நன்னீராடிப் பொங்கிளவாடை அரையிற்சாத்தி, திருச்செய்ய முடியும் ஆரமும் குழையும் முதலா மேதகு பல்கலனணிந்து, சூட்டு நன் மாலைகளணிந்து, பரதனும் தம்பி சத்துருக்குனனும் இலக்குமனும் இரவு நண்பகலும் ஆட்செய்ய, வடிவிணையில்லாச் சங்கு தங்கு முன்கை நங்கை மலர்க்குழலாள் சீதையுந்தானும் கோப்புடைய சீரிய சிங்காசனத்திருந்து, ஏழுலகுந் தனிக்கோல் செல்ல வாழ்வித்தருளினார் என்று இப்படி அந்த "பாசுரப்படி இராமாயணம்" நிறைவு பெறுகிறது.

1 comment:

Yarlpavanan said...

அருமையான தொகுப்பு