பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, March 17, 2016

மக்கள் நலம் வேண்டி ஒரு வேண்டுகோள்!

        
இப்போது மாநில சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரம். அரசியல்வாதிகள் அரிதாரம் பூசிக்கொண்டு, அன்பொழுக நெருங்கி, தேனொழுகப் பேசி, நம் வாக்குகளைக் கவர்ந்து செல்ல முயலும் நேரம். இப்போது விழிப்போடு இல்லாவிட்டால் மக்கள் அடுத்து வரும்ஆண்டுகளில் நாம் நரக வாழ்க்கை வாழ்ந்திட நேரிடும் என்பதை உறுதியாக மனதில் கொள்ள வேண்டும்.

இலவசங்களாக நமக்குக் கொடுக்கும் பொருட்களின் தரம் உலகம் அறிந்த செய்தி. அவை யார் பணத்திலிருந்து கொடுக்கப்படுகிறது? மக்களின் வரிப்பணம். உருப்படியாக மக்கள் வாழ்க்கைத் தரம் உயர செய்யப்பட வேண்டிய செலவுகளை நிறுத்திவிட்டு இலவசமாக பொருட்கள் தருகிறார்கள். அவை நன்றாக செயல்படக் கூடியவைகளா? தரமானவைகளா? யாரையும் கேட்க முடியாது, அழகுப் பொருட்களாக வாங்கி வீட்டில் அடையாளப்படுத்தி வைத்துக் கொள்ளலாம், அவ்வளவே!

கோடிக்கணக்கில் செலவு செய்து, ஆடம்பரமான விளம்பரங்கள் செய்து, கூட்டம் சேர்த்து கோஷங்களை எழுப்பி மக்கள் உள்ளங்களில் ஒரு கிளர்ச்சியை உண்டுபண்ணி, அதன் பலனைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் அரசியல் பாணிகளுக்கு முடிவு கட்டுவோம்.

எளிமையானவராக, விவரம் புரிந்தவராக, நிச்சயம் மக்களுக்காகப் பாடுபடுவார் என்பவர்களைப் பார்த்து அவரிடமிருந்து எந்த கைமாறையும் எதிர்பாராமல் மனசாட்சிக்கு ஏற்ப வாக்களித்தால் மக்கள் வாழ்க்கை நலம் பெறும். 

ஆடம்பரத்துக்கும், இலவசங்களுக்கும், இதர கவர்ச்சி மொழிகளுக்கும் மயங்கினால், பின்னர் நமக்கு வாழ்க்கை நரக வாழ்க்கையே! படித்தவர்கள், படிக்காதவர்களுக்கு புரியும்படி எடுத்துச் சொல்லுங்கள். அரசியல் கட்சியில் சேர்ந்து உயிரையும், நேரத்தையும், உடைமைகளையும் கூட தியாகம் செய்யும் தொண்டர்களிடம் விளக்கிச் சொல்லுங்கள், விழலுக்கு நீர் இரைக்காதீர்கள் என்று! கட்சியோ, கொடிகளோ, ஆடம்பரப் பேரணிகளோ, மனங்கவரும் கோஷங்களோ நமக்கு வழித்துணையாக வராது. நம் அறிவு, விழிப்புணர்வு, நியாய சிந்தனை, எடுக்கப்போகும் முடிவு இவை மட்டுமே நம் எதிர்கால வாழ்க்கையை உறுதி செய்யும். பார்ப்போம், சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட 70 ஆண்டுகளை நெருங்கும் சமயத்தில்கூட நம்மை நாம் சரிப்படுத்திக் கொள்ளவில்லையானால், இனி எந்த நாளும் நாம் தலை நிமிரப் போவதில்லை. இப்போது தவறினால் இனி தெளிவடைய வாய்ப்பு இல்லை. தயை செய்து இவற்றை விருப்பு வெறுப்பின்றி ஆலோசித்து முடிவு செய்யுங்கள். நன்றி.

No comments: