பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, November 6, 2010

மஹாலக்ஷ்மி

பாரதி சிந்தனை 6. மஹாலக்ஷ்மி .   வழங்குவோர்: தஞ்சை வெ. கோபாலன்.

"இல்லறம் பெரிதா, துறவறம் பெரிதா?" என்பது கேள்வி.

ரிஷி சொல்லுகிறார், "அரசனே, என்னோடு பாதசாரியாக வருவாயானால் தெரியப் படுத்துகிறேன்" என்று.

அப்படிக்குப் பாதசாரியாகப் போகும்போது கன்னட தேச ராஜகுமாரத்திக்கு விவாகம் நிச்சயித்திருப்பதால், ஐம்பத்தாறு தேசத்து ராஜாக்களும் ராஜகுமாரத்தியின் விவாகத்திற்கு வந்திருக்கிறபோது அவ்விடத்திற்கு மேற்படி அரசனும் ரிஷியும் இருவருமாகப் போய்ச் சேர்ந்தார்கள். இப்படி எல்லோரும் விவாக மண்டபத்தில் கூடியிருக்க, அந்த விவாகமண்டபத்தில் ஒரு பால்ய ஸந்நியாசியும் வேடிக்கை பார்க்க வந்தார். "கன்னடத்து ராஜகுமாரி! எந்த ராஜகுமாரனை விவாகம் செய்து கொள்ளுகிறாய்?" என்று தோழியானவள் கேட்டுக் கொண்டே போனாள். அவ்விடத்து ராஜகுமாரர்களை யெல்லாம் 'வேண்டாம், வேண்டாம்' என்று களைந்துபோய், இந்தப் பால்ய ஸந்நியாஸியைக் கண்டு புஷ்ப மாலையை அணிந்தாள். அந்த புஷ்ப மாலையானது பாம்பாகி, மேற்படி பால்ய ஸந்நியாசியின் கழுத்தில் யமனுடைய பாசம்போல் வந்து விழ, அவன் திடுக்கிடாமல் "ஓம் சக்தி, ஓம் சக்தி" என்ற மந்திரத்தை ஜபித்து மனத்தைத் தைரியப்படுத்திக் கொண்டான். பிறகு அதே மாலை மீண்டும் பரிமள கந்தமுடைய புஷ்ப மாலையாய்விட்டது.

இதனை மேற்படி மஹரிஷியானவர் அந்த ராஜனிடத்திலே காண்பித்து, "இல்லறத்தில் வாழ்ந்தால் இப்படிப்பட்ட தைரியத்துடன் வாழ வேண்டும். மணமாலையே பாம்பாக வந்து விழுந்த போதிலும் மனம் பதறக்கூடாது. தைரியம் பாம்பைக்கூட மணமாலையாக மாற்றிவிடும். இவ்விதமான தைரியத்துடன் இல்லறத்தில் நிற்பார் வீடுபெறுவர். துறவறத்துக்கும் இதுவே வழி. ஆகவே இரண்டும் ஒன்றுதான்" என்று சொன்னார்.

வரலக்ஷ்மி நோன்பு சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. அதன் விவரம்:- அன்றையதினம் பெண் மக்களெல்லாம் ஸ்நானம் செய்துவிட்டு, பழைய பட்டுக் கயிறுகளைக் கட்டிக்கொண்டு நெற்றியில் பொட்டிட்டுக் கொண்டு கூந்தல்களில் புஷ்பங்களை அணிந்து கொண்டு, பார்க்கிற பார்வைக்கு வரலக்ஷ்மியைப் போலவே, அதிபத்தி விநயத்துடன் இருந்து சில பலகாரங்களையும், பழவர்க்கங்களையும் வைத்து அம்பாளுக்கு நைவேத்யம் செய்து, பெண் குழந்தைகளுக்கு விநியோகப்படுத்தி, அன்றிரவு பூர்த்தி செய்து, மறுதினம் காலையில் பெளர்ணமி பூஜை, சாப்பாடு செய்து அவர்களுக்குரிய இஷ்ட காம்யார்த்த சித்தி பெற்று, ஜீவகோடிகள் அம்பாள் அனுக்ரஹத்தினால், அவள் திருவடியை முடிமீது சூட்டி, ஞானசித்தியை உணர்ந்து, சதா முக்தர்களாக வாழும் வழியைக் காட்டுகிறார்கள்.

நவராத்திரி--1. ஒன்பதிரவு பராசக்தியைப் பூஜை செய்கிறோம். லக்ஷ்மி என்றும், ஸரஸ்வதி என்றும், பார்வதி என்றும் மூன்று மூர்த்தியாக நிற்பது பராசக்தி. இவ்வுலகத்தை ஆக்கல், அழித்தல், காத்தல் என மூன்று தொழில் நடத்துவது.

ஹிமாசலந் தொடங்கிக் குமரிமுனை வரை வேதத்தை நம்பும் கூட்டத்தார் எல்லாம் இந்தப் பூஜை செய்கிறோம். ஏழைகளாக இருப்போர் பராசக்திக்கு மலரையும் நீரையும் உள்ளத்தையும் கொடுத்து வலிமை பெறுகிறார்கள். செல்வமுடையோர் விருந்துகளும் விழாக்களும் செய்கின்றனர். பக்தி செய்யும் செல்வரும் உண்டு.

மஹாளய அமாவாஸ்யை கழிந்தது.

இருளும் ஒளியும் மாறி மாறி வருவது இவ்வுலக இயற்கை. பகலிலே பெரும்பாலும் ஒளி உண்டு; மேகங்கள் வந்து சூரியனை மறைத்தாலொழிய, சில சமயங்களில் கிரஹணம் பிடிக்கும். அதையும் தவிர்த்து விட்டால், இரவிலேதான் ஒளியின் வேறுபாடுகளும், மறைவுகளும் அதிகப்படுகின்றன; பகல் தெளிந்த அறிவு; இரவென்பது மயக்கம். பகலாவது விழிப்பு, இரவாவது தூக்கம். மஹாளய அமாவாசை ஒழிந்து போய்விட்டது.

சக்தி:- நல்ல வல்லெழுத்துச் சேர்ந்த மொழி. விக்கிரமாதித்தனும், காளிதாசனும் வணங்கிய தெய்வம். "உலகத்தார் இந்தப் பராசக்தியை நல்ல மழை அருள் புரியும், சரத்காலத்தின் முதல் ஒன்பதிரவும் வணங்கிப் பூஜைகள் செய்ய வேண்டும்" என்பது பூர்வீகர் ஏற்பாடு. மிகப் பயனுடைய காரியம், மேலான வழி. கும்பகோணம் சங்கரமடத்தில் இந்தப் பூஜைமிகவும் கோலாகலமாக நடத்தப் போவதாகப் பத்திரிகையில் ஒரு தந்தி போட்டிருந்தது சஹஜமான விசேஷம். தேசம் முழுவதும் (இப்படி) நடப்பது (நல்லது). சங்கரமடத்திலும் (எனக்கு) ஒருவிதமான ஆவல் உண்டானதால் தந்தியை வாசித்துப் பார்த்தேன். அந்தத் தந்தியிலே பாதி சாஸ்திரம், வர்த்தமானத் தந்திக்குள்ளே சாஸ்திரத்தை நுழைத்தது ஒரு விநோதம். ஆனால், அதிற்கண்ட சாஸ்திரம் உண்மையாக இருந்தது. நான் எதிர்பார்க்கவில்லை. எனவே தந்தியைப் படித்த போது எனக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று.

கும்பகோணத்துத் தந்தி பேசுகிறது. இந்தப் பூஜைகளின் நோக்கம் உலக நன்மை. நவராத்திரிக் காலத்தில் யோகமாயை துர்க்கை, லக்ஷ்மி, ஸரஸ்வதி என்ற மூன்றுவித வடிவங்கொண்டு, துஷ்டரை எல்லாம் அழித்து மனித ஜாதிக்கு மகிழ்ச்சி பெருக வைத்தாள். மனிதர் படும் துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டாக தேவி அவ்வாறு அவதாரம் செய்த காலம் முதல் இன்று வரை பாரத தேசத்தில் எல்லாப் பாகங்களிலும் ஆரியர் இந்தத் திருவிழாவைக் கொண்டாடி வருகிறார்கள். தேவி உலகம் முழுவதிலும் பரவி இருக்கிறாள். ஒவ்வொரு தனிப் பொருளிலும் நிறைந்து நிற்கிறாள். இவளே மாயை; இவளே சக்தி, செய்பவளும் செய்கையும், செய்கைப் பயனும் இவளே; தந்தையும் தாயும் இவள்; இவளே பரப்பிரம்மத்தின் வடிவம், இவள் காத்திடுக" என்பது தந்தி.

உண்மைதான். ஆனால், "தேவி அவ்வாறு அவதாரம் செய்த காலம் முதல்" என்ற வாக்கியம் மாத்திரம் கதை. தேவி எப்போதும் அந்த வடிவங்களிலே நிற்கிறாள். ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற முத்தொழிலும் எப்போதும் நடக்கின்றன. லோக ஸம்ரக்ஷணை எப்போதும் செய்யப்படுகிறது. எப்போதுமே ஆராதனை செய்ய வேண்டும். சரத்காலத் தொடக்கத்திலே பேரருளைக் கண்டு விசேஷ விழா நடத்துகிறோம். 'தவம், கல்வி, தெய்வத்தைச் சரண்புகுதல்' - இம்மூன்றும் கர்ம யோகம் (கிரியா யோகம்) என்று பதஞ்சலி முனிவர் சொல்கிறார். லெளகிகக் கவலைகளாலே இம்மூன்று தொழிலையும் எப்போதும் செய்து கொண்டிருக்க முடியாமல் தடுக்கப்படும் சாமானிய ஜனங்கள் நவராத்திரி ஒன்பது நாள் இரவும் பகலும் மேற்கூறிய மூவகைகள் நெறியில் நிலைபெறும் வண்ணமான விதிகள், ஆகமங்களிலே கூறப்பட்டன.

ஒன்பது நாளும் தியானம், கல்வி, தவம் இவற்றிலே செலவிடத் திறமையில்லாதோர் கடைசி ஒன்பதாம் நாள் மாத்திரமேனும் விரதம் காக்க வேண்டும்; இந்தப் பூஜையின் பொருள் மிகவும் தெளிந்தது.

"சக்தியால் உலகம் வாழ்கிறது;
நாம் வாழ்வை விரும்புகிறோம்;
ஆதலால் நாம் சக்தியை வேண்டுகிறோம்."

No comments: