பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, May 3, 2016

ஸ்ரீ ஸ்யாமா சாஸ்திரி ஜயந்தி இசை விழா.

                                                     Marabu Foundation
Jatavallabar House,
6/78, Thillaisthanam,
Thanjavur Dt., 613 203.
Sri Syama Sastri Jayanthi Day Music Concert
We Cordially invite you to the Music Concert on Saturday, the 7th May 2016 between 6.30 P.M. to 9.00 P.M.  the Jayanthi day of Syama Sastri atBangaru Kamakshi Amman Temple West Main Street, Thanjavur.
Programme
Sri N Vijay Siva-Vocal
Kumari Amritha Murali-Violin
Sri N Manoj Siva-Mrudangam
                                                                                                                                                   Trustees

தஞ்சை மேல வீதியில் அமைந்துள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் ஆலயத்தில் இம்மாதம் 7ஆம் தேதி சனிக்கிழமை மாலை 7 மணிக்கு ஸ்ரீ ஸ்யாமா சாஸ்திரி ஜயந்தி தினத்தையொட்டு திரு விஜய் சிவா அவர்களின் இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. அவருடைய வரலாற்றுத் துளிகளை இப்போது பார்க்கலாம்.

வேங்கடசுப்ரமண்யன் எனும் திருநாமத்தோடு கூடிய இவர் 1762 ஏப்ரல் 26ஆம் நாள் பிறந்தார். தந்தையார் விஸ்வநாத ஐயர், தாயார் வெங்கலட்சுமி. பிறந்த ஊர் திருவாரூர்.

கர்நாடக இசை மூவரில் இவர்தான் மூத்தவர்; மற்ற இருவர் தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர். ஸ்யாமா சாஸ்திரியும் முத்துசாமி தீட்சதரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். அதே போல் சாஸ்திரிக்கு தியாகராஜரிடமும் மரியாதை உண்டு.

இவருடைய மூதாதையர்கள் பங்காரு காமாட்சி அம்மன் கோயிலில் அர்ச்சகர்களாக இருந்து வந்தனர். இவருக்கு சம்ஸ்கிருதம், தெலுங்கு மொழிகளோடு இசையும் போதிக்கப்பட்டது. இவை அனைத்திலும் இவர் நல்ல பாண்டித்தியம் அடைந்தார். இவைகள் அனைத்திலும் மேலாக இவருக்கு இசையின்பால் நாட்டம் இருந்து வந்தது.

இவரது பதினெட்டாம் வயதில் இவர் குடும்பம் தஞ்சாவூருக்குக் குடிபெயர்ந்தது. அங்கு இவருக்கு ஒரு துறவி இசைக் கலைஞர் அறிமுகமானார். அவர் சாஸ்திரியின் ஆர்வத்தை அறிந்து அவர் தந்தையின் அனுமதியோடு இசையைக் கற்பித்தார். குருநாதர் ஒரு துறவியானபடியால் சுமார் நான்கு மாத காலத்தில் இசையை இவருக்குக் கற்பித்த போதும், இவரும் நன்கு தேர்ச்சி பெற்றார்.

இவர் இசையுலகில் பிரபலமாகத் தொடங்கினார். இவரது இசையை ஸ்ரீதியாகராஜ சுவாமியும் பாராட்டினார். தந்தை தஞ்சாவூர் பங்காரு காமாட்சி அம்மன் கோயில் அர்ச்சகர், அதனால் இவரும் தந்தையுடன் கோயிலுக்குச் சென்று பணியாற்றத் தொடங்கினார். அங்கு அம்பாள் சந்நிதியில் காமாட்சியைத் தரிசனம் செய்யும் வேளைகளில் தன்னை மறந்து லயித்து விடுவார். அந்த சந்தர்ப்பங்களில் இவரிடமிருந்து மிக அற்புதமான கீர்த்தனைகள் அம்பாள் மீது இயற்றப்பட்டிருக்கின்றன. மற்ற இருவரைப் போல இவர் அதிக கீர்த்தனைகள் இயற்றவில்லை. ஆனால் அவர் செய்தவைகள் மிகப் பிரபலமடைந்தன. இவர் சுமார் 300 கீர்த்தனைகள் இயற்றியிருப்பார் என்கின்றனர். ஆனால் இவருடைய கீர்த்தனைகளை பிரபலப்படுத்த இவரிடம் சீடர்கள் இல்லை. இவருக்கு சம்ஸ்கிருதம், தெலுங்கு மொழிகளில் நல்ல புலமை இருந்ததால் இவரது கீர்த்தனைகள் நல்ல இலக்கியத் தரமானவை ஆகையால் பாமர மக்கள் அதிகம் பாடுவது கிடையாது. அன்னை காமாட்சி மீது இவர் தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பாடியிருக்கிறார்.

இவரைப் பற்றிய ஒரு சுவையான வரலாறு உண்டு. ஆந்திர பகுதி பொப்பிலியிலிருந்து கேசவையா எனும் சங்கீத சாம்ராட் விருது பெற்ற பெரிய வித்வான் தமிழ்நாட்டு இசைக் கலைஞர்களை சோதிக்கும் பொருட்டு திருவையாறு சென்று தியாகராஜரிடம் விவாதித்திருக்கிறார். 
அங்கும் அவரது பெருமையை உணர்ந்து திரும்பினார். பின்னர் தஞ்சை வந்து சியாமா சாஸ்திரியிடமும் அவரது திறமையை சோதிக்க விரும்பினார். சாஸ்திரி அன்னை காமாட்சியிடம் சென்று வேண்டிக் கொண்டார். அப்போது அவர் பாடியதுதான் “தேவி ப்ரோவ சமயமிதே” எனும் பாடல். சோதனை வந்திருக்கிறது, இதிலிருந்து என்னைக் காப்பாற்றும் சமயம் இதுதான் எனும் பொருளில் அமைந்தது இது. பிறகு கேசவையாவுடன் நடந்த போட்டியில் சாஸ்திரி வெற்றி பெற்றார், ஆணவம் அழிந்து கேசவையாவும் ஊர் திரும்பினார்.

இவர் புதுக்கோட்டை பிரஹதாம்பாள் அன்னை மீது பாடிய பாடலொன்றைக் கேட்ட ஒரு துறவி, இவரை மதுரை சென்று அங்கு மீனாட்சி அம்மன் மீது பாடல்கள் இயற்றுமாறு வேண்டிக் கொள்ள இவரும் மதுரை சென்றார். அங்கு அவர் “நவரத்னமாலிகா” எனப்படும், சங்கராபரணத்தில் அமைந்த “சரோஜதளநேத்ரி”, “தேவி மீனநேத்ரி”, ஆஹிரியில் “மாயம்ம”, தன்யாசியில் “மீனலோசன ப்ரோவ”, ஆனந்த பைரவியில் “மரிவேரேகதி”, லலிதா ராகத்தில் “நனு ப்ரோவ லலிதே”, கல்யாணியில் “ராவே பர்வதராஜ குமாரி”, காம்போஜியில் “தேவி ஸ்ரீபதசரசமுலே” போன்ற ஒன்பது கிருதிகளைப் பாடிச் சிறப்பித்தார்.

இன்னொரு முறை ஒரு போட்டியில் நாகைப்பட்டினத்தில் அப்புக்குட்டி நட்டுவனார் என்பவரை தோற்கடித்து அவருடைய தம்பூருவை இழக்கும்படி செய்தார். இவர் தன்னுடைய வாழ்க்கை முடிவை முன்கூட்டியே அறிவித்துவிட்டு 1827ஆம் வருஷம் பிப்ரவர் 6ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார். இவருக்கு முன்பாக ஒருசில நாட்கள் முன்னர்தான் இவர் மனைவி காலமாகியிருந்தார். 

No comments: