பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, November 15, 2015

அரவான் கதை

                                             
முன்பெல்லாம் கிராமங்களில் திரெளபதி அம்மன் கோயில்களில் கோடைகாலத்தில் திருவிழா நடக்கும் அப்போது அந்தக் கோயில்களில் உடுக்கடித்துக்கொண்டு அரவான் கதை சொல்வார்கள். நள்ளிரவில் பாதி தூக்கத்தில் எழுந்து இந்த உடுக்கு ஓசையைக் கேட்டால் அடிவயிற்றைக் கலக்கும். இப்போதெல்லாம் கிராம கோயில்களில் அதுபோல திருவிழாக்கள் உண்டா என்பது தெரியவில்லை. போகட்டும், யார் இந்த அரவான்?

மகாபாரதம் அனைவருக்கும் தெரிந்த கதை; அதிலும் இப்போது இருவேறு தொலைக் காட்சிகளில் மகாபாரதம் காண்பிக்கப்பட்டு வருகிறது. மகாபாரதக் கதையில் அரவான் என்பவன் ஒரு சிறிய ஆனால் ஆணிவேர் போன்ற கதாபாத்திரம். இப்போதெல்லாம் விழுப்புரம் அருகே கூத்தாண்டவர் கோயில் விழாவுக்காக இந்தியா முழுவதிலுமிருந்து அரவாணிகள் வந்து குவிந்தனர் என்று செய்தி சொல்லுகிறார்கள். அவர்களுடைய முக்கிய கடவுளாகக் கருதப்படுபவர் இந்த அரவான். இவர் அர்ஜுனனுக்கும் நாக இளவரசி உலுப்பி என்பாருக்கும் பிறந்த மகன். அப்படி இந்த அரவான் செய்ததுதான் என்ன?

மகாபாரதப் போர் துவங்குமுன்பாக தங்கள் வெற்றிக்காக சர்வ லட்சணங்களும், வீரமும் ஒருங்கே பொருந்திய ஒருவனை பலி கொடுக்க வேண்டுமெனும் சூழ்நிலையில், அரவான் தானே முதல் பலியாக ஆக சம்மதம் தந்தான். அப்படி அரவான் தன்னை களபலி கொடுக்க முன்வந்த காரணத்தால் அவனுக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மூன்று வரங்களை அளித்தார். அதன்படி அரவான் தான் இறக்குமுன் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென விருப்பம் தெரிவித்தார். அதன்படி பகவான் ஸ்ரீகிருஷ்ணரே ஒரு மோகினி வடிவம் கொண்டு அவன் வேண்டுதலை நிறைவேற்றினார். போரில் அரவான் களபலியானதும் மோகினி விதவையாகி விடுகிறாள். இதைத்தான் அரவாணிகள் கூவாகம் திருவிழாவில் அரவான் இறப்பையும், அதைத்தொடர்ந்து தாங்கள் விதவைக் கோலம் பூணுவதையும் செய்து காட்டுகிறார்கள்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அரவானுக்குக் கொடுத்த மற்றொரு வரத்தின் மூலம் வெட்டுண்ட அவனுடைய தலையிலுள்ள கண்கள் மகாபாரதப் போர் முழுவதையும் பார்க்கும் சக்தியைக் கொடுத்தார். திரெளபதி அம்மன் கோயில்களில் ஒரு கம்பத்தின் மீது வைக்கப்பட்டுள்ள ஒரு தலையைப் பார்க்கலாம், அதுதான் அரவான் தலை. கிராமங்களில் அரவான் தலையை மரத்தால் செய்து வைத்துக் கொள்வார்கள், அந்தத் தலை அவர்களைத் தீமைகளிலிருந்து காக்கும் என்பது நம்பிக்கை.

திரெளபதி அம்மன் கோயில்களில் வைக்கப்பட்டிருக்கும் அரவான் தலையின் முகத்தில் பெரிய மீசை, உருண்டையான கண்கள், பெரிய காதுகள் ஆகியவற்றுடன் காணப்படுவார். தலையில் ஒரு மகுடம், நெற்றியில் பரந்த நாமம், காதில் தொங்கும் காதணிகள் இவற்றையும் பார்க்கலாம். மகுடத்தின் மீது ஒரு நாகம் படமெடுத்து ஆடுவது போன்ற தோற்றம் காணப்படும். சில இடங்களில் அரவானின் வாயில் இரு புறமும் இரு கோரைப் பற்கள் இருக்கும். திருவிழா காலங்களில் அரவான் தலை ஊர்வலமாக தாரை தப்பட்டைகள் முழங்க எடுத்துச் செல்லப்படும். இரவில் அரவான் கதை நடக்கும்போது மக்கள் கூட்டமாக வந்து கேட்பார்கள்.

அரவானுடைய தியாக வரலாற்றை முதன் முதலாக தமிழிலக்கியத்தில் பெருந்தேவனார் எழுதிய “பாரத வெண்பா”வில் குறிப்பிடுகிறார். இது ஒன்பதாம் நூற்றாண்டு இலக்கியம். இது தவிர வில்லிபுத்தூரார் பாரதக் கதையிலும் அரவான் கதை சொல்லப்படுகிறது. தற்காலத்தில் கூத்தாண்டவர் திருவிழா பற்றிய செய்திகளிலும் அரவான் பற்றிய செய்திகள் உண்டு.

முற்காலத்தில் சினிமா, தொலைக்காட்சி போன்ற நவீன சாதனங்கள் இல்லாத காலத்தில் கிராமங்களில் தெருக்கூத்துதான் பொழுதுபோக்கு. நமது தமிழ்நாட்டு கிராமியக் கலைகளில் இந்த கூத்துக்கு நல்ல மதிப்பு உண்டு. அந்த கூத்துகளில் அரவான் களபலியையும், அதைத்தொடர்ந்து ஒப்பாரியும் கேட்க முடியும். கோடை நாட்களில் வயல் வேலைகள் இல்லாத போது திரெளபதி அம்மன் கோயில் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தது. அரவான் இறந்த பின்னும் மகாபாரத போரைக் கண்களால் கண்டான் என்பதுதான் சில கூத்துக்களில் கருப்பொருளாக இருந்திருக்கிறது.

முற்காலத்தில் போர்கள் நடக்கும்போது படைவீரர்களாகச் செல்வோரில் சிலர் பெற்றோர், மனைவிமார்கள் ஆகியோர் வருத்தப்பட வைத்துவிட்டுத்தான் போருக்குச் செல்வர். அப்படிச் செல்பவர்கள் போரில் மாண்டுபோய்விட்டால், அந்தக் குடும்பத்தார் படும் வேதனையைத்தான் அரவான் கதை மக்கள் உள்ளங்களில் ஆழமாகப் பதிவிடுகிறது.

துருபதனின் மகளான திரெளபதியை போட்டியில் வென்ற அர்ஜுனன் திருமணம் செய்து கொள்ள எண்ணி தன் தாயிடம் வந்து தான் ஒன்றை வென்று வந்திருக்கிறேன் என்று சொல்ல, அந்த பொருள் எதுவென தெரியாத குந்தி சொன்னாள் அதனை நீங்கள் ஐவரும் சமமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னாள்; அதன் பயனாய் பாஞ்சாலி ஐவருக்கும் துணையானாள்.

அர்ஜுனனின் இந்தச் செயல் விதிமீறிய செயல் என்பதால் அவன் தலைநகர் இந்திரபிரஸ்தத்திலிருந்து ஓராண்டுகள் தலயாத்திரை செய்யவேண்டுமென்று பெரியவர்கள் சொல்ல அர்ஜுனனும் பாரத வர்ஷத்தின் வடகிழக்குப் பகுதிக்குச் சென்றான். அங்கு நாக வம்சத்து இளவரசி உலுப்பி எனும் பெண் மீது அர்ஜுனன் காதல் கொள்கிறான். அங்கு இருவரும் திருமணம் செய்து கொண்டு, ஒரு மகனைப் பெற்றெடுத்தனர். அவன்தான் அரவான். அவனையும் உலுப்பியையும் அங்கேயே விட்டுவிட்டு அர்ஜுனன் தன் புனித யாத்திரையை மேலும் தொடர்ந்தான். அரவானோ தன் தாயின் அரவணைப்பில் நாகலோகத்திலேயே வளர்ந்து வந்தான். மகாபாரதப் போர் துவங்கியபோது அர்ஜுனன் தன் மகன் அரவானைப் போரில் உதவ அழைத்ததனால் அரவான் போரில் கலந்துகொள்ள வந்து சேர்ந்தார். தமிழ்நாட்டில் மட்டும்தான் அரவான் போருக்கு களபலியாக பலிகொடுக்கப்பட்டார் என்று கூறுகிறது. ஆனால் வேறு பல மகாபாரதக் கதைகளில் அரவான் எட்டு நாட்கள் போரிட்டதாகக் கூறப்படுகிறது. எட்டாம் நாள் போரில் துரியோதனன் ஏவிவிட அலம்பூசன் எனும் அரக்கனால் அரவான் கொல்லப்பட்டதாக வரலாறு இருக்கிறது.

இந்தக் “களபலி” பற்றி சொல்லப்படும் கதை இதுதான். போர் துவங்குவதற்கு முன்பாக துரியோதனன் களபலி கொடுக்க நாளையும் ஆளையும் தீர்மானிக்க எதிரியான ஜோசியத்தில் வல்லவனான சகாதேவனிடம் வந்து ஆலோசனை கேட்டு களபலிக்கான நேரத்தை முடிவு செய்து கொள்கிறான். களபலிக்கு அர்ஜுனனின் மகன் அரவானே தகுந்தவன் எனக் கருதி அவனிடம் பேசி துரியோதனன் அவன் சம்மதத்தைப் பெற்று விடுகிறான்.

துரியனின் இந்த சதியை அறிந்து கொண்ட ஸ்ரீகிருஷ்ணர் அரவான் கெளரவர்கள் வலையில் விழுந்துவிடாமல் பாண்டவர்களுக்காக உயிர்த்தியாகம் செய்யும்படியாக ஒரு திட்டம் தீட்டிவிடுகிறார். அதன்படி தருமனிடம் சென்று களபலி பற்றி சொல்லி இந்தப் பலிக்குத் தகுந்தவர்கள் நான்கு பேர். அதில் தானும் ஒருவர் என்கிறார் கண்ணன். மற்ற மூவர் சால்யன், இவர் துரியனுடன் இருப்பவன், மற்றொருவன் அர்ஜுனன், அடுத்தவன் அர்ஜுனனின் மகன் அரவான் என்கிறார். இதில் அரவானே சரியான தேர்வு என்று முடிவு செய்து அவனையே பலி கொடுக்க சம்மதம் பெறுகின்றனர். இப்படியாக அந்த வீர நாகர் குல இளைஞன் மகாபாரதப் போரில் களப்பலி ஆகிறான்.

இவனுடைய வீரம், தியாகம் இவை போற்றப்படுகின்றன. இந்தக் கதையில் பல்வேறு குழப்பங்களும், மாறுபாடான வரலாறுகளும் குறுக்கிட்டாலும், அரவான் எனும் இளைஞனின் தீரமிக்க தியாகம் வெளிப்படுகிறது. அவன் வீரத்தினைப் புகழ்வோம். தியாகத்தினை மதிப்போம். அதுதான் நாம் செய்யக்கூடிய செயல்.




No comments: