பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, November 28, 2015

வீர சாவர்க்கர் செய்த சாகசம்.

                                       
வீர சாவர்க்கர் லண்டனில் இருந்த போது இந்தியா ஹவுசில் புரட்சி இயக்கத்தில் சம்பந்தப் பட்டிருந்தார் என்று வழக்கு நடந்தது. அவரை இந்தியாவுக்கு பலத்த காவலுடன் கப்பலில் அனுப்ப வேண்டுமென்று லண்டன் கோர்ட் தீர்ப்பளித்திருந்தது. அதன்படி ஏராளமான காவலர்கள் புடைசூழ சாவர்க்கர் இந்தியா செல்லும் கப்பலில் ஏற்றப்பட்டார்.
இங்கிலாந்திலிருந்து புறப்பட்ட அந்த கப்பல் ஒரு வார காலம் பயணம் செய்திருக்கும். அப்போது அந்தக் கப்பல் பிரான்ஸ் நாட்டின் மார்சேல்ஸ் எனும் பிரபலமான துறைமுக நகரில் வந்து நங்கூரம் பாய்ச்சி நின்றது. அங்கு ஒரு விடியற்காலை நேரம், சாவர்க்கர் கழிவரைக்குப் போகவேண்டுமென்று சொன்னதும், பலத்த காவலுடன் அவரை அங்கு செல்ல அனுமதித்தனர். காவலர்கள் கழிவரை வாயிலில் நின்று காவல் காத்தனர். உள்ளே நுழைந்த சாவர்க்கர் அந்த அறையின் கதவை உட்புறம் தாழிட்டுக் கொண்டார். அங்கு எதிரில் சுவற்றில் காற்று வெளியேறுவதற்கென்று ஒரு வட்டமான துவாரம் காணப்பட்டது. மெல்ல அதனுள் நுழைய முயற்சி செய்தார் அவர் உடல் அதனுள் நுழைய முடியவில்லை. உடனே தன்னுடைய ஐரோப்பிய பாணி உடைகளையெல்லாம் களைந்துவிட்டு நிழைந்து பார்த்தார். அவர்கள் உடை ஏராளமானவை என்பதால், அவைகளைக் களைந்தவுடன் அவர் உடல் அந்த துவாரத்தினுள் நுழைந்தது. இந்த சந்தர்ப்பத்திற்காக அவர் பல நாட்கள் பட்டினி இருந்து உடலை இளைக்க வைத்திருந்தார்.

                                                                 மேடம் காமா

அந்த துவாரத்தினுள் நுழைந்து வெளிப்புறம் வெளியேறி கடல் நீரில் குதித்து நீந்தத் தொடங்கினார். அப்படி உடைகளை நீக்கிய நிலையில் நிர்வாண கோலத்தில் இவர் கடல் நீரில் நீந்துவதைக் கண்டு மேல்தளத்தில் நின்று கொண்டிருந்த சிலர் கூச்சலிட்டனர். உடனே கழிப்பறை வாயிலில் காவல் இருந்த காவலர்கள் ஒடிவந்து பார்த்தபோது தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியக் கைதி கடலில் நீந்திச் செல்வதைக் கண்டனர்.
உடனே இரு காவலர்கள் கடலில் குதித்து “திருடன், திருடன், கைதி தப்பியோடுகிறான்” என்று கூச்சலிட்டுக் கொண்டே அவரைப் பின் தொடர்ந்து நீந்திச் சென்றார்கள். இப்படி தப்பியோடும் சாவர்க்கரின் முயற்சிக்கும், அவரைப் பிடிக்க கடமை உந்தப் பின்தொடரும் காவலர்களின் முயற்சிக்கும் வித்தியாசம் உண்டல்லவா? எப்படியும் தப்பிவிட வேண்டுமென்கிற வாழ்வா சாவா போராட்டத்தில் நீந்திய சாவர்க்கரே முதலில் கரை சேர்ந்தார். இங்கு கப்பலில் இருந்து சாவர்க்கர் தப்பியோடி வருவார் என்பது தெரிந்திருந்த மேடம் காமா அம்மையாரும், வேறு சிலரும் இவரது வரவுக்காகக் ஒரு காரோடு கரையில் காத்திருந்தனர். கடற்கரைக்கும் கார் நின்ற இடத்துக்குமிடையே சற்று தூரம் அதிகம் இருந்தது.


நிர்வாணமாக கரையேறிய சாவர்க்கர் காரை நோக்கி ஓடத் துவங்கினார். அப்போது அந்தப் பகுதிக்கு வந்த பிரெஞ்சு காவலன்  ஒருவன் இவர் காரை நெருங்கும் முன்னரே அவரைப் பிடித்துவிட்டான். அதற்குள் கப்பலில் இருந்து இறங்கி வந்த சில காவலர்களும் தங்கள் கைதி தப்பி ஓடிவருகிறான், அவனைத் தங்களிடம் ஒப்படைத்துவிட வேண்டுமென்று பிரெஞ்சு காவலரிடம் கேட்டனர். அந்த நேரத்தில் வ.வே.சு.ஐயர் உள்ளிட்ட சில இந்திய புரட்சிக்காரர்கள் அங்கு வந்து, இந்த இடம் பிரெஞ்சு பிரதேசம், இங்கு ஆங்கில அதிகாரிகள் யாரையும் கைது செய்ய உரிமையில்லை என்று வாதிட்டார்கள். ஆனால், அவர்களுடைய வாதம் எடுபடாமல் போனது. அந்தப் பிரெஞ்சு அதிகாரி சாவர்க்கரை கப்பலில் வந்த ஆங்கில அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டார். வேறு வழியில்லாமல் அவர் மீண்டும் ஆங்கில அதிகாரிகளிடம் கைதியாக மாட்டிக் கொண்டு கப்பலில் ஏற்றப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மறுநாள் பிரெஞ்சு பத்திரிகைகள் இப்படி தங்கள் பிரதேசத்தினுள் நுழைந்து ஆங்கில அதிகாரிகள் ஒருவரைக் கைது செய்ததை கண்டித்து எழுதின. பிரெஞ்சு அரசாங்கமும் தங்கள் ஆட்சேபணையை பிரிட்டிஷ் அரசுக்குத் தெரிவித்தார்கள். இந்த விவகாரம் அப்போது தி ஹேக் எனுமிடத்தில் இருந்த சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கும் பிரிட்டிஷ் போலீசார் நியாயம் தவறவில்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது.

இப்படி நாட்டுக்காக உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த தேசபக்தர்களையும் அவர்களுடைய தியாகங்களையும் புரியாமல் சிலர் பிற்காலத்தில் இவர் மீது அபாண்டமான பழிகளை சுமத்தி அவரை அவமரியாதை செய்தனர் என்பதை அறியும்போது, நம் இந்திய தேசத்தில் தேசபக்திக்கு இதுதானா மரியாதை என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா?

No comments: