பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, October 11, 2015

பரத நாட்டியம்

பரத நாட்டியம் - சில குறிப்புகள் ..

Post Courtesy  B.G.துர்கா தேவி  &  www.Thinnai.com
பரத நாட்டியம் - சில குறிப்புகள் - 1

இந்தியாவின் ஆடற்கலைகள் பல. அதில் தமிழ்நாட்டின் நடனம் பரதநாட்டியம். இந்தபரத நாட்டியம் எவ்வாறு தோன்றியது ? யாரால் தோற்றுவிக்கப்பட்டது. பரதம் என்ற சொல் எதைக் குறிக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

பரதம் என்ற வார்த்தை
ப --பாவம்
ர -- ராகம்
த -- தாளம்
ம் -- ஸ்ருதி 

இவை நான்கும் சேர்ந்ததே பரதம் எனப்படும். பாரத தேசத்தில் முதன்முதலாக தோன்றியதால் பரதநாட்டியம் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் பரத முனிவரால் முதன் முதலாக உலகிற்கு அறிமுகப்படுத்தப் பட்டதால் இது பரத நாட்டியம் என்று அழைக்கப்படுகிறது.
சுமார் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு சதிர் என்று அழைக்கப்பட்ட நடனம் மறுமலர்ச்சி அடைந்து பரதநாட்டியமாக விளங்கி வருகிறது. பல்வேறு கலை அம்சங்களை முழுமையாக விளக்கும் ஒரு நூல் தான் பரதர் எழுதிய நாட்டிய சாஸ்திரமாகும்.

நாயன்மார்களில்  அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நான்கு அருஞ்செல்வர்களைப் போல இசை நடனமேதைகளான சின்னய்யா, பொன்னய்யா, சிவானந்தம், வடிவேலு என்ற இந்த நால்வரும் கலை உலகம் நமக்கு வழங்கிய நான்கு முத்துக்கள் எனலாம்.

பொன்னய்யா(1804) :-
தஞ்சை நால்வருள் ஒருவரான இவர் பரதநாட்டியத்தை கச்சேரி பாணியில் எந்த இடத்திலும் எப்பொழுதும் நடத்தக் கூடிய முறைகளை வகுத்தார். அதற்காக ஆழ்ந்த ஆராய்ச்சிகளையும் செய்தார். இன்றைக்கு ஆரம்பபாடமாக சரளி, ஜண்டை வரிசைகளை வகுத்த சிறப்புடன் நாட்டியத்திற்கும் ஆரம்பபாடமாக அடவுகள் பத்து என்று வகுத்த பெருமை பொன்னய்யாவிற்கு உரியது.

தட்டடவு முடிவு அடவு என்று பத்து வகை அடவுகளை அவர் வகுத்தார். இந்த பத்து வகைகளை ஒவ்வொன்றிலும் 12 உட்பிரிவுகள் கொண்டு மொத்தம் 120 அடவுகளாக விரிவுப் படுத்தினார். பின்னர் அலாரிப்பு, ஜதீஸ்வரம், சப்தம், பதவர்ணம், பதம், ராகமாலிகை அல்லது ஸ்லோகம், தில்லானா என்ற அட்டவணையையும் முறைப்படுத்தினார். பதவர்ணம், ஸ்வரஜதி ஆகியவைகளை தமிழிலும், தெலுங்கிலும் நாயக, நாயகி பாவத்தோடு ஏற்றினார். இவ்வாறு வகுத்த முறையை தன் குருநாதர் முன்னிலையிலும், அரசவையிலும் அரங்கேற்றினார்.

 இன்னும் இவர்கள் வகுத்த பாணியில்தான் நடைபெறுகின்றன. குலதெய்வத்தின் பெயரிலும், துஜா, சரபோஜி, சிவாஜி II ஆகிய மராட்டிய மன்னர்கள் பெயரிலும் நாயக, நாயகி பாவத்திலும் நாட்டியத்திற்கு ஏற்ப இசை பாடங்களை பொன்னய்யா ற்றினார்.


பொன்னய்யா, சிவானந்தம் ஆகியோருக்கு சரபோஜி மன்னர் பல்லக்கு மற்றும் பல பரிசுகள் அளித்து, தம்முடனேயே அந்த இசை மேதைகள் இருக்கவேண்டும் என்று பணித்தார். பொன்னய்யா விரும்பியபடியே தஞ்சை பெரிய கோவில் தண்ணீர் பந்தலும், சக்கர விநாயக கோவிலிலும் அமைத்தார்.  தமது தம்பி நோய்வாய்ப்பட்டு இருந்த சமயம் பொன்னய்யா பெரிய நாயகி பெயரில் பிரதாம்மா என்ற பாடலை சங்கராபரண ராகத்தில் இயற்றிப் பாடியதாகாவும் உடனே தம்பியின் நோய் குணமானதாகவும் கூறப்படுகின்றது. 

கோவில் திருப்பணியில் தமக்கு கிடைத்த ஊதியத்தை தேர்த்திருவிழா, தண்ணீர் பந்தல் உணவிடல் முதலியவற்றுக்கு கொடையளித்து பொன்னய்யா தொடங்கிய பணி இன்றும் நடைபெறுகின்றது. தஞ்சையில் இந்நால்வரும் வாழ்ந்த இல்லத்திலேயே நாட்டியக் கல்லூரியாக மாணவ மாணவியர்க்கு நடனப் பயிற்சி அளிக்கப்பட்டு கோவில்களில் நாட்டிய பணியாற்ற ஏற்பாடு செய்தார். அலாரிப்பு முதல் தில்லானா வரை ராக, தாள, உருப்படிகளை ற்றி வெளிப்படுத்தினார். இவற்றில் சங்கராபரண ராகத்தில் 'அதிமோக' என்ற பதவர்ணமும், ஆனந்த பைரவி ராகத்தில் 'சகியே இந்த வேளையில் ' என்ற வர்ணமும் குறிப்பிடத்தக்கன. சப்ததாளமாலிகை, நவரத்தினமாலிகை,  முதலியன இவரது அறிவாற்றலுக்கும் கற்பனை வளத்திற்கும், கலை ஞானத்திற்கும் சான்றுகளாகும்.

சின்னைய்யா :- 1802
தஞ்சை நால்வரில் மூத்தவரான சின்னைய்யா மைசூர் அரசரின் அரசவை கலைஞராக இருந்து சாமுண்டேஸ்வரி பெயரில் சிறப்பான பதவர்ணம், தில்லானாக்கள் முதலியவற்றை இயற்றி புகழ் பெற்றார்.

சிவானந்தம்:-
கோவில்களில் நடனகலையை பக்தி வழிபாடாக உருவாக்கி அதற்கென முறை வகுத்த பெருமை தஞ்சை நால்வரில் ஒருவரான சிவானந்தம் அவர்களைச் சாரும். இவர் சோடச உபசாரம் தாள ஜதி நிருத்தியம் முதலியவைகளுக்கு நிருத்ய நியதிகளையும் முறைகளையும் வகுத்தார். கொடி ஏற்றம், கொடி இறக்கம் போன்ற திருவிழாக்களின் போது நடக்கும் நலசந்தி நிருத்தியத்தையும் நடராஜர் புறப்பாட்டின் போது தாளம் தட்டவேண்டிய முறைகளையும் இவர் வகுத்தார். பின் பொன்னய்யாவின் மாப்பிள்ளை சூரிய மூர்த்தியின் மூலமாக நாட்டியப் பணியை ஊக்குவித்தார். இவர் தஞ்சை அரசரின் ஆருயிர் தோழனாகவும் ஆலோசகராகவும் விளங்கினார். சிவநெறியில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சிவானந்தம் அவர்கள் தஞ்சை பெரிய கோவில் மகா சிவராத்திரி விழாவின்போது தன் விலையுயர்ந்த நவரத்ன மாலையை பரிசாக வழங்கினார். இவ்விழாவை முழுமையாக கொண்டாட மற்றவர்களுக்கு வழிகாட்டினார்.
இந்த ஏழு நாட்களும் கலை நடன நிகழ்ச்சிகள் கதாகாலட்சேப சிறப்புரைகள் முதலியவற்றை நடத்தி கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தளித்தார். ஆண்களும் நடன கலையை பயில மிகவும் ஊக்குவித்தார்.

வடிவேலு:- 1810
தஞ்சை நால்வரில் கடைகுட்டியான வடிவேலு இசை நடனத் துரையில் பெறும் சாதனைகளை செய்தார். ஒரு தடவை கேட்ட இசையை மறக்காமல் அதே பாணியில் பாடிக்காட்டும் இவரது திறமையை பாராட்டி இவரது குரு தீட்சிதர் இவரை 'ஏக சந் கிரகி ' என்று புகழ்வதுண்டு. தமது 14 வயதிலேயே அரவை முக்கி வித்வானாக உயர்த்தப்பட்டு பெறும் செல்வாக்குடன் விளங்கியவர்.

தஞ்சை அரண்மனையில் இந்திய இசைவாணர்கள் மட்டுமன்றி மேல்நாட்டு கலைஞர்களும் இசை விருந்து தருவதுண்டு. அரசனின் ஆதரவை பெற்ற பலகலைக்கழக வயலின் வித்வானாக விளங்கிய கிறிஸ்துவ துறவியார் எட்வர்ட் அவர்கள் வடிவேலுவுக்கு மேல்நாட்டு முறையில் குறியிடிகை (notes) வாசிக்கும் முறையை கற்றுக் கொடுத்தார். வடிவேலு அவர்கள் வயலின் கருவியில் அத்துறவியாரை வியக்கும் வண்ணம் கர்நாடக இசையை பயிற்சி செய்து அரசவையில் அற்புதமாக வாசித்து அரங்கேற்றினார். வயலின் கருவியை கர்நாடக இசை உலகில் முதல்முதலாக அறிமுகப்படுத்திய பெருமை வடிவேலு அவர்களையே சாரும்.

தஞ்சை சரபோஜி மன்னர் உடன் ஏற்பட்ட ஒரு மனஸ்தாபத்தினால் வடிவேலு தன் சகோதரர் மூவருடனும் தஞ்சையை விட்டு வெளியேறி ஒரத்தநாடு என்ற கிராமத்தில் குடிவந்தார். இதை சாதகமாக்கிக் கொண்ட திருவாங்கூர் மன்னர் நால்வரையும் தம் அரண்மனைக்கு வரவழைத்து சங்கர விலாசம் என்னும் மாளிகை கட்டிக்கொடுத்து குடும்பத்தோடு அவர்களை வசிக்கச் செய்தார். அவையில் வடிவேலுவின் இசை வெள்ளத்தில் ஆழ்ந்த மன்னர் யானை தந்தத்தால் ஆன அற்புதமான வயலின் ஒன்று செய்து அதை தங்க பெட்டியில் வைத்து நவரத்தின ஆபரணங்களுடன் அளித்து பெருமை படுத்தினார். அதுமட்டுமில்லாமல் சுவாதி திருநாள் அரசர், வடிவேலுவுக்கு தனி பெருமை அளித்து அந்தரங்க ஆலோசகராக நிர்ணயித்துக் கொண்டார்.
தமிழில் புகழ் பெற்ற குறவஞ்சி நாட்டிய நாடகங்களில் பந்து ஆடும் காட்சி சிறப்பான அம்சமாகும். இதனை ஆதாரம் ஆக்கி உருவாகிய மோகினி ஆட்டத்தின் வளர்ச்சிக்கும் வடிவேலு காரணமாக இருந்தார். மலையாள கலைஞர்களும் இவர்க்கு கடன்பட்டுள்ளனர். திருவாங்கூர் வட்டத்தில் பயணம் செய்து கொண்டு இருந்த போது தன்னைத் தாக்கி பொன்னையும் பொருளையும் திருடிய கொள்ளை கூட்டத்தினரை தமது இசையால் மயங்கவைத்து அவர்களே தாம் எடுத்த பொருள்களை திருப்பித் தருமாறு செய்த இசைபுலமை பெற்றவர் இவர். இந்நிகழ்ச்சி இவரது மேதாவிசாலத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

இவ்வாறு பலரால் உருவாக்கப்பட்ட நாட்டியக் கலையில் என்ன கற்றுத் தரப்படுகின்றன. அதில் உள்ள அம்சங்கள் என்ன ?

பரதநாட்டியம் - சில குறிப்புகள் 

பரதத்தில் முதல்பாடமாக தட்டிக் கும்பிடுதல் அதாவது நமக்கு பரதம் பயிற்றுவிக்கும் ஆசிரியரை வணங்குதல் கற்றுத் தரப்படும். பின் இறைவனை வணங்குவதற்காக ஒரு தியான ஸ்லோகம் ஒன்றும் கற்றுத் தரப்படும். பின் முறையே அடவுகள் கற்றுத்தரப்படும். அடவுகளில் தட்டடவு, நாட்டடவு, பரவளடவு, குதித்து மெட்டடவு, முழுமண்டியடவு முதலில் கற்றுத் தரப்படும். மேலும் ஸ்லோகங்களும் கற்றுத் தரப்படும். இதில் கழுத்தின் அசைவுகள்,கண் அசைவுகள், தலை அசைவுகள், ஒற்றைக்கை முத்திரைகள், இரட்டைக்கை முத்திரைகள் ஆகியன கற்றுத் தரப்படும். இந்த ஒற்றைக்கை முத்திரைகள், இரட்டைக்கை முத்திரைகளில் கற்றுத் தரப்படும் ஒவ்வொரு முத்திரையும் அது பயன்படுத்தும் முறையின் படி அர்த்தம் கொடுக்கும். 

அதாவது ஒற்றைக்கை முத்திரையில் பதாகஸ் என்னும் முத்திரை (நாம் வணங்கும்போதும் இருகைகளையும் இணைத்து கும்பிடுவோம். அதில் ஒரு கையின் முத்திரைதான் பதாகஸ்) காடு, கதவை மூடுதல், சபதம் செய்தல், உறங்குதல், வெப்பம், நிலவு போன்ற பல அர்த்தங்களைக் குறிக்கும். அதே போல இரட்டைக்கையில் செய்யப்படும் முத்திரைகளும் பல அர்த்தங்களைத் தருவதாக இருக்கும். நாட்டியத்தில் அடவுகளுக்கு உபயோகிக்கக் கூடிய முத்திரைகள் எளிர்கை என்றும், அபிநயத்திற்கு உபயோகிக்கக்கூடிய முத்திரைகள் தொழிர்கை என்றும் அழைக்கப்படுகிறது.

நாட்டியத்தின் உட்பிரிவுகள் மூன்று. அவை:- நிருத்தம், நிருத்தியம், நாட்டியம்.

நிருத்தம் :-
 பாவம் அபிநயம் முதலிய உணர்ச்சிகளை வெளிக்காட்டாது தாளக்கட்டுடன் மட்டுமே ஆடும் நடனம் நிருத்தம் எனப்படும்.

நிருத்தியம்:-
 உணர்ச்சிகளும் அபிநயங்களும் நன்கு கலந்து ஆடப்படும் நடனம் நிருத்தியம் எனப்படும்.

நாட்டியம்:-
 நாட்டியம் அல்லது நாடகம் என்பது முன்பே தெரிந்து புகழ்மிக்க வணங்கத்தக்க கதைகளை தன்னுள் கொண்ட கலையை நடித்துக் காட்டுவதாகும்.

அடவுகளுக்குப் பின்னர் முதல் உருப்படியாக, அலாரிப்பும், அதற்கடுத்ததாக ஜதீஸ்வரமும் கற்றுத் தரப்படும். இவை இரண்டும் நிருத்த வகையை சார்ந்தன.

அலாரிப்பு :-
நாட்டிய அரங்குகளில் விறுவிறுப்புத் தோன்றுவதற்காக முதன் முதலாக ஆடப்படும் நடனம் அலாரிப்பு ஆகும். ஐந்து நிமிடத்திற்குள் ஆடப்படும் இது தத்தகார சொற்கட்டுகளால் ஆனது. இறைவனுக்கும், குருவுக்கும், சபையோருக்கும் வணக்கம் செலுத்தும் வகையில் இது அமைந்திருக்கும். அலாரிப்பை முகசாலி என்றும் கூறுவார்கள். இறுதியில் சிறு தீர்மானத்துடன் முடிக்கப்படும். தீர்மானம் என்பது பல அடவுகளை கோர்வையாக செய்து மிருதங்க சொற்களுக்கு ஏற்ப தாளத்தைப் போடுவது ஆகும்.

ஜதீஸ்வரம் :-
ஜதி என்பது அடவின் சொற்களை மிருதங்க சொல்லாக சொல்வதாகும். அலாரிப்புக்கு அடுத்தபடியாக ஆடப்படும் ஜதீஸ்வரம் ஸ்வர வரிசைகளைக் கொண்டதாகும். இது இசையுடன் அமைந்த தொனிப்பதால் ஜதீஸ்வரம், என்றும், துவக்கத்தில் அல்லது இறுதியில் ஜதிகள் இணைக்கப்பட்டிருப் பதால் ஜதீஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது.

சப்தம்:-
ஜதீஸ்வரத்திற்கு அடுத்தபடியாக ஆடக்கூடிய சப்தத்தில் தான் முதல்முதலாக அபிநயம் வெளிப்படுத்தப்படுகிறது. சப்தம் என்றால் சொல் என்று பொருள். இதற்கான சாஹித்தியங்களில் தெய்வம், அரசன் அல்லது தலைவன் புகழ் பாடி அவர்களுக்கு வணக்கம் செலுத்துவதாக முடிவுறும். சப்தத்தில் ஆட்டத்திற்கான ஜதிகளும் சாஹித்திய அடிகளும் கலந்து வரும். அநேகமான சப்தங்கள் தெலுங்கு மொழியிலேயே அமைந்துள்ளன. சாகித்திய வரிகளை பாடும்போது ஆடல் நங்கை அதற்கான பாவங்களைப் பற்பலவித அபிநயங்களுடன் தெளிவாக வெளிப்படுத்துவாள். இதில் நர்த்தகியின் மனோதர்மத்தையும், கலைத்திறமையையும் அளவிட முடிகின்றது. மண்டுக சப்தம், கோதண்டராமர் சப்தம் போன்ற சப்தங்கள் மிகவும் பிரபலமானவை. அநேகமான சப்தங்கள் காம்போஜி ராகத்திலேயே பாடப்பட்டவையாகும். இன்று பல தமிழ் சப்தங்களை மற்ற ராகங்களிலும் பாடி ஆடி வருகின்றனர்.
சப்தம், வர்ணம், பதம் போன்றவை அபிநயத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவையாக அமைந்திருக்கும். 

பரதநாட்டியம் - சில குறிப்புகள் 

அபிநயம்:-
கதாபாத்திரத்திற்கேற்ப கருத்துக்களையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் கலை தான் அபிநயம் ஆகும். அதாவது ஒரு கதையிலோ அல்லது பாடலிலோ வரும் ஒவ்வொரு வார்த்தையினது கருத்தையும் வாயினாற் சொல்லாது கையினாலும், தலை, கண், கழுத்து முதலிய அங்கங்களினாலும் பார்ப்பவர் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் செய்யப்படும் செய்கையே அபிநயம் ஆகும். அபிநயம் இரண்டு வழிகளால் சித்தரிக்கப்படுகிறது. ஒன்று உலக வழக்கு. இது லோக தர்மி எனப்படும். மற்றொன்று நாடகவழக்கு. இது உலக வழக்கிற்கு சற்று அப்பாற்பட்டு கலைவடிவத்திற்கு முதலிடம் அளிக்கும். இது நாடக தர்மி எனப்படும். உலக வழக்கிற்கு எடுத்துக்காட்டு உண்மையான கண்ணீர். கண்ணீர் சிந்துவது போல் நடிப்பது நாடக வழக்காகும். அபிநயத்தில் நடிப்பு, பாவம் ,பல்வேறு அங்க நிலைகள் போன்றவை ஆடுபவரின் மன எழுச்சிகளை உணர்த்தப்பயன்படுகின்றன. 

அபிநயத்தில் குறிப்பிடப்படும் பாவங்கள் (ரஸங்கள்) ஒன்பது வகைப்படும். அவை-
1. ஸ்ருங்காரம் (வெட்கம்)
2. வீரம்
3. கருணை
4. அற்புதம்
5. ஹாஸ்யம்(சிரிப்பு)
6. பயானகம் (பயம்)
7. பீபத்சம் (அருவருப்பு)
8. ரெளத்ரம் (கோபம்)
9. சாந்தம் (அமைதி)

இவை நவரஸம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நவரசங்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பதாக அமைவதுதான் சப்தம், வர்ணம், பதம் ஆகும்.

 வர்ணம் பற்றி :-

நடனத்தில் மிகவும் இன்றியமையாத உருப்படி, வர்ணம் ஆகும். ஏனெனில் இசை, பாவம், நடனம் ஆகிய மூன்று அம்சத்தையும் உள்ளடக்கியதாக இது அமைந்திருக்கும். இந்த வர்ணம் இரண்டு பாகங்களைக் கொண்டது. ஒன்று பூர்வாங்கம் மற்றொன்று உத்ராங்கம்.

பூர்வாங்கம் என்பது பல்லவி, அனுபல்லவி, முக்தாயிஸ்வரம், மீண்டும் பல்லவி இந்த வரிசையைக் கொண்டது.

உத்ராங்கம் என்பது எத்துக்கடை பல்லவியையும், சரணங்களையும் கொண்டது.

வர்ணம் மூன்று காலத்திலும்(speed) ஆடப்படும். அடவு கோர்வைகளால் ஆன தீர்மானத்துடன் ஆரம்பிக்கும். பெரும்பாலான வர்ணங்கள் சிருங்கார ரஸம் நிறைந்ததாக விளங்குகிறது.

பதம் :-
அபிநயத்திற்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து ஆடப்படும் நடனம் பதம் எனப்படும். பதங்களை லோக தர்மி, நாடக தர்மி ஆகிய இருமுறைகளிலும் அபிநயிக்கலாம். பதத்தின் நாயகன் பரமாத்மாவாகவும், நாயகி ஜீவாத்மாவாகவும், சகி குருவாகவும் இருந்து மோட்சத்தை அடையும் மார்க்கத்திற்கு வேண்டிய தத்துவ உண்மைகளை வெளிப்படுத்துவர். சேத்ரக்ஞர் என்பவர் 4500 பதங்களை இயற்றி ஒரு தனி பாணியை உருவாக்கினார். பெரும்பாலான தெலுங்கு பதங்களில் கிருஷ்ணனை நாயகனாகவும், தமிழ் பதங்களில் முருகனை நாயகனாகவும் வைத்துப் பாடுவது வழக்கம். தமிழில் கிருஷ்ணனை நாயகனாக வைத்துப் பாடப்படும் 'அலைபாயுதே கண்ணா ' பாடல் பதத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

பதத்திற்கு அடுத்தபடியாகப் பயிற்றுவிக்கப்படுவது தில்லானா. இது சொற்கட்டுகளையே மையமாகக் கொண்டு இயற்றப்படும் உருப்பு. இது ஜதி போல உச்சரிக்கப்படாமல் பாடப்படும் இசை உருப்படியாகும். பல்லவி அனுபல்லவி அல்லது பல்லவி, சரணம் இதன் அங்கங்களாகும். ஆடும்பொழுது பல்லவியை பலமுறை பாடிக்கொண்டே போவர். இதற்கு தாளவின்யாஸ் முறை என்று பெயர். பலவிதமான அடவு ஜதிகளை கோர்வைகளாக ஆடுவதைக் காணலாம். விறுவிறுப்பு நிறைந்த தில்லானாவோடு நிகழ்ச்சிகளை முடிப்பது வழக்கம்.

தசாவதார வகைகள் பற்றி சில கருத்துக்கள்:-
1. மத்ஸ்ய அவதாரம்
2. கூர்ம அவதாரம்
3. வராக அவதாரம்
4. நரசிம்ம அவதாரம்
5. வாமன அவதாரம்
6. பரசுராமர் அவதாரம்
7. இராமர் அவதாரம்
8. பலராமர் அவதாரம்
9. கிருஷ்ணர் அவதாரம்
10. கல்கி அவதாரம்.

இந்த ஒவ்வொரு அவதாரத்தை குறிப்பதற்கும் முத்திரைகள் உண்டு.
இந்த அவதாரங்கள் எடுத்ததற்கான காரணங்கள்:-

மத்ஸ்யம் :- பிரம்ம தேவரிடம் இருந்து வேதத்தை அபகரித்துக் கொண்ட சோமகாசுரன் சமுத்திரத்தில் ஓடி ஒளிய குறை ஒழித்து இரட்சிப்பதற்காக திருமால் மீனாக அவதரித்து சோமகாசுரனை வதம் செய்து பிறகு பிதாமகனிடத்தில் வேதத்தை ஒப்படைத்தார்.

கூர்ம அவதாரம் :- தேவர்களும் அசுரர்களும் மந்திரகிரி மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பை கயிறாகவும் கொண்டு பார்கடலை கடைந்த போது மகாவிஷ்ணு ஆமை வடிவம் எடுத்து  மந்திரகிரி கீழிருந்து பூமியை தாங்கினார்.

வராக அவதாரம்:- இரண்யாட்சன் என்னும் அசுரனால் பாயாக சுருட்டி பாதாள லோகத்திற்கு கொண்டு போகப் பட்ட இந்த பூமியை திருமால்  பன்றியாக அவதரித்து பாதாள லோகம் சென்று இரண்யாட்சனை கொன்று பூமியை முன்பிருந்த இடத்திற்கே கொண்டு வந்தார்.

நரசிம்ம அவதாரம் :- இரண்யசிபூ என்னும் அசுரனை அவன் பெற்றிருந்த வரத்திற்கு விரோதம் வராமல் விஷ்ணு கம்பத்தில் இருந்து நரசிம்ம வடிவமாக அவதரித்து வாயினாலும் நகங்களினாலும் அவனை கிழித்து கொன்று லோகத்திற்கு மிகுந்த நன்மையை உண்டாக்கினார்.

வாமன அவதாரம்:- மஹாபலி அரசனின் கர்வத்தை அடக்க திருமால் வாமன அவதாரம் எடுத்து மூன்று டி யாசித்து திருவுருவம் எடுத்து வானம், பூமி, பாதாளம் ஆகிய ஒவ்வொன்றையும் தமது இரண்டு அடிகளால் அளந்து மூன்றாவது அடிக்கு இடம் இல்லாது நிற்க மஹாபலி அரசன் தன்தலையை தர பாதாளத்தில் தள்ளி உலகை இரட்சித்தார்.

பரசுராம அவதாரம்:- விஷ்ணு மூர்த்தி ஜமதக்னி மகரிஷிக்கு மகனாக பிறந்து பரசுராமன் என்னும் நாமத்துடன் வளர்ந்தார். கார்த்தவிர்யார்ஜுனனை கண்டித்து த்ரியர்களை கறுறுத்து அவர்களின் இரத்தத்தை மடுவாக தேக்கி அதில் தமது தந்தைக்கு திலதர்பனம் செய்து மகிழ்ந்தார்.


இராமர் அவதாரம்:- தசரத அரசனது குறை நீங்க இறைவன் அயோத்தியா புரியில் இராமனாக அவதரித்து தண்டகாரணிய ரிஷிகளுக்கு வாக்களித்த வண்ணம் இராவண, கும்பகர்ணாதி அசுரர்களை அழித்து அனேக அற்புதங்களை செய்தார்.

பலராம அவதாரம்:- தேவர்கள் வேண்டி கொண்டதுக்கு ஏற்ப ஆதிசேஷ பகவான் நந்தகோருடைய ரோகிணிக்கு மகனாய் பலராமனாக அவதரித்து அனேக அரசர்களை அழித்தார். இவர் கிருஷ்ணனுக்கு மூத்தவராவார்.


கிருஷ்ண அவதாரம் :- கிருஷ்ணன் வாசுதேவன் தேவகி என்ற தம்பதிக்கு மகனாய் அவதரித்து சிசுவதம் செய்வதை ஒழித்தார். காளிங்க நர்த்தனம் இந்த அவதாரத்தில் தான் நடந்தது.

கல்கி அவதாரம் :- ஊழி கால முடிவில் இறைவன் தவறு செய்பவர்களை தண்டிப்பார் என்ற கருத்தில் தோற்றுவிக்கப்பட்ட பத்தாவது அவதாரம்தான் குதிரை முக விஷ்ணு.

ஒவ்வொருஅவதாரத்திற்கும் ஒரு முத்திரை இருப்பதைப் போல ஒவ்வொரு கடவுளை குறிப்பதற்கும் ஒரு முத்திரை உண்டு. அதாவது கிருஷ்ணனைக் குறிக்க அவர் புல்லாங்குழல் வைத்திருப்பதைபோன்ற முத்திரை உண்டு. அதே போல ஸ்ரீராமரைக் குறிக்க அவர் வில்லை வைத்திருப்பதைப்போன்ற முத்திரை உண்டு. இப்படி ப்ரம்மா, சிவன், திருமால், சரஸ்வதி, பார்வதி, லஷ்மி, கணபதி, முருகன், மன்மதன், இந்திரன், அக்னி, தர்மன், வாயு, குபேரன், எமன் ஆகியோருக்கும் முத்திரைகள் கற்றுத்தரப்படும்.

அரங்கேற்றம் :- முறையான அடவு பயிற்சி முழுவதுமாய் முடிந்த பின் முதல் முறையாக மேடையேறி அவையோர் முன் ஆடுவது அரங்கேற்றமாகும்.

அரங்கேற்றம் அவையோருக்கு புதிய நடனக் கலைஞரை அறிமுகமாக்கும் விழாவாகும். நல்ல அவைத்தலைவரும் ரசிகர்களும் உள்ள அரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெறும். 

இதற்கு முன் சதங்கையை முதன்முதலில் இறைவழிபாட்டில் வைத்து பின்பு கட்டிக் கொள்ள வேண்டும். மாணவி ஆசிரியருக்கும் உடன் பயின்ற இசைக்கலைஞர்களுக்கும் தன் மரியாதையை உணர்த்தும் வகையில் புத்தாடைகளும் இயன்ற அன்பளிப்புகளும் வழங்கி வணங்கலாம். கலைவாழ்வில் நல்லதொரு தொடக்கமே அரங்கேற்றமாகும். ஒன்பது வகை அரங்கங்கள் பண்டைய பாரதத்தில் இருந்ததாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன. தற்போது அரங்கங்கள் மிகப் பெரியதாகக் கட்டப்பட்டு ஒலி பெருக்கியின் உதவியாலும் நவீன ஒளி அமைப்பின் உதவியாலும், பாடலை நன்கு கேட்கும் வண்ணமும் முகமெய்ப்பாடுகளை பார்க்கும் வண்ணமும் அமைக்கப்படுகின்றன. அரங்கம் அழகிய சிலைகளும் இன்பியல் ஓவியங்களும் நுட்பமான கலை எழில் கொண்ட தூண்களும் அமைக்கப்பெற்றதாக இருக்கவேண்டும் என்கிறார் பாரத முனி. ஒப்பனை அறைகள் மேடையின் இருபக்கங்களிலும் அமைதல் நல்லது. இவ்வாறு சிறப்பாக அமையப்பெற்ற மேடையில் நல்ல கலை ரசிகர்களின் மத்தியில் நடைபெறும் இந்த அரங்கேற்றம் கலைவாழ்விற்கு சிறப்பான தொடக்கத்தை தரும். மேற்கூறிய இந்த நடனங்கள் மட்டுமே பரதநாட்டியத்தில் கற்றுத் தரப்படவில்லை. இவை சிறிளவே ஆகும். வரையறுக்க இயலாத அளவிற்கு பரதநாட்டியத்தில் பல அம்சங்கள் உள்ளன.

நன்றி:  திண்ணை .com .

No comments: