பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, July 23, 2015

"ஆசாரத்திருத்த வியாசங்கள்"

                             
                                              ஜி.சுப்பிரமணிய ஐயரின் முன்னுரை
                   (அவருடைய பழந்தமிழ் நடையின் சாரம் இன்றைய எளிய நடையில்)

இந்தத் தலைப்பில் "தி இந்து", "சுதேசமித்திரன்" ஆகிய பத்திரிகைகளைத் தொடங்கிய ஜி.சுப்பிரமணிய ஐயர் எழுதிய கட்டுரைகள் சிலவற்றைத் தொடர்ந்து இங்கே பார்க்கலாம். இந்த கட்டுரைகளைத் தொகுத்து வழங்கிய நூலுக்கு ஐயர் அவர்கள் ஒரு முன்னுரை வழங்கியிருக்கிறார். அந்த முன்னுரை நூறு ஆண்டுகளுக்கு முன்பு வழக்கத்திலிருந்த தமிழ்நடையில் இருப்பதால் இன்று படிப்பவர்களுக்குச் சற்று சிரமமாகவும், சில சொற்களைப் புரிந்து கொள்ளமுடியாமலும் இருக்கலாம். ஆகையால் முன்னுரையின் சாரத்தை மட்டும் சுருக்கமாகச் சொல்லிவிட்டு பின்னர் ஒவ்வொரு கட்டுரையையும், அவர் எழுதிய தமிழ் நடையிலேயே படிக்கலாம். நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமிழ் நடையையும் நாம் படித்ததாக இருக்கட்டுமே! இனி ஐயர் அவர்களின் முன்னுரையின் சாரம்:


"
ந்த நூலிலுள்ள கட்டுரைகள் நம் மக்களின் பழக்கவழக்கங்கள் இப்போதைய நிலைமைக்குத் தக்கவாறு மாறவேண்டியதன் அவசியத்தை வற்புறுத்துவதாகவும், இந்தியராகிய நமக்குச் சிறந்த பண்புகள் மேலோங்கி பெருமைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் எழுதப்பட்டவை. இந்தக் கட்டுரைகள் பெரும்பாலும் அன்றைய "சுதேசமித்திரன்" இதழ்களில் தலையங்கமாக வெளிவந்தவை. 

அரசியல் குறித்தோ, தொழில்துறை குறித்தோ இவற்றில் சொல்லப்படவில்லை. அவைகளும் நாட்டு நன்மைக்கு அவசியமென்பதால் அவற்றை வேறு யாரேனும் எழுத வேண்டுமென்பது நமது எண்ணம். நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்களின் பழக்க வழக்கங்களும், குணாதிசயங்களும் அவ்வப்போது காலத்துக்குத் தக்கபடி மாற வேண்டியது அவசியம். மேலை நாடுகளின் வரலாறுகளைப் பார்க்கும்போது அந்த நாட்டு மக்கள் தங்கள் நாடு மாறிவருவதற்கேற்பவும், ஏனைய நாட்டு மக்களைப் போலத் தங்களையும் மாற்றிக் கொள்வதையும் காண்கிறோம். குறிப்பாக ஜப்பான் மக்கள் இப்படித்தான் மாறியிருக்கிறார்கள். இந்தியர்களைவிட நாகரிகமும், வல்லமையும் அதிகமாகப் பெற்ற நாடுகளைப் பின்பற்றி நாமும் பழக்க வழக்கங்களையும், குணங்களையும் மாற்றிக்கொண்டு அவர்களைப் போல வாழ வேண்டும். இப்படிச் சொல்வதால், இந்தியர்கள், ஐரோப்பியர்களைப் போல உடை உடுத்தல், உணவு உண்ணுதல், வீட்டினுள் அவர்களைப் போல நடந்து கொள்ளுதல் இவற்றைப் பின்பற்ற வேண்டுமென்பது நம் கருத்தல்ல. புதுமைகளை ஏற்றுக்கொண்ட நம்மவர்களிலே சிலர் நம்மைப்பார்த்து இழிவாகவும், மனம் புண்படப் பேசியும் வருந்தச் செய்கிறார்கள். இப்படிச் சிலர் நடந்து கொள்வதால் சீர்திறுத்தங்களை வேண்டுவோரை சாமானிய மக்கள் தவறாகக் கணக்கிடுகிறார்கள்.

அயல் நாடுகளுக்குச் சென்று திரும்பி வந்தவர்களும், நாகரிகத்தை அனுசரித்து முன்னேறிய நம்மவர்களும், சாதாரண மக்களுடைய மனங்களைப் புண்படுத்தாமல் சீர்திறுத்தங்களை போதிக்க வேண்டும். நமது இந்திய தேசம் முன்பு இருந்தது போல வெளித்தொடர்புகள் இல்லாமல் தனித்துவத்துடன் இருந்தது போல இப்போதும் இருக்கவேண்டு மென்று  நினைக்கக்கூடாது. பிரிட்டன் நம்மை  ஆண்டு கொண்டிருப்பதால் நாம் அதனுடன் பலவிதங்களில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதுபோலவே ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளும் இந்தியாவுடன் வர்த்தகத் தொடர்பு ஏற்பட்டு நெருங்கி வந்து கொண்டிருக்கிறோம். ஆகவே, நாமும் அவர்களைப் போல பல வழிகளில் முன்னேறி நாகரிகமும், வளமும் அடைய முயலவேண்டும். அப்படி ஆகவேண்டுமானால், நாமும் நமது பழைய பழக்க வழக்கங்களை கைவிட்டு புதுமைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் நாமும் அவர்களுக்குச் சமமாக ஆகமுடியும். அப்படியின்றி ஏனைய நாடுகள் முன்னேறிச் செல்ல, நாம் தனி வழியில் பழைமையில் தோய்ந்திருந்தால் சில காலத்திற்குள் நாம் நாசமடையும் வாய்ப்புகள் நேர்ந்து விடும். 

தற்காலத்தில் இந்தியா தேசத்தில், முகமதியர், கிறிஸ்தவர், ஆங்கிலோ இந்தியர் ஆகியோர், இதில் முக்கியமாக முகமதியர் நாட்டில் செல்வாக்கையும், அரசாங்கத்தின் கவனத்தையும் ஈர்க்க முயன்று வருகின்றனர். அப்படிச் செய்வது முற்றிலும் அவசியம், தவறு இல்லை. ஆனால், நாம் சொல்லவருவது, நாமும் அவர்களைப் போல நம்முடைய சுபாவமான மந்த கதியை விட்டுவிட்டு தீவிரகதியைப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் இந்துக்களாகிய நாம் பிற்பட்டு நிற்காமல், மற்றவர்களைப் போல சரிசமானமாக தோளோடு தோள் நின்று இந்தியாவை வலுவான தேசமாக ஆக்க முடியும்.

இப்படிப்பட்ட கருத்துக்களால் உந்தப்பட்டு, நமது அனுபவத்தினாலும், அறிவுக்கு எட்டிய வகையில் புதிய பாதைகளை நம் தேசத்தாருக்குச் சொல்ல வேண்டு மென்பதற்காக இந்த நூலை பிரசுரம் செய்கிறோம். நம்முடைய பழக்கங்களை மாற்றிக் கொள்வதில் நம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களுக்குக் கல்வி அறிவு கிட்டும்படி செய்து, ஆணுக்கு நிகரான சுதந்திரமும் கொடுத்து சிறந்த இல்லத் தரசிகளாகவும், நல்ல குடும்பத் தலைவிகளாகவும் ஆக்குவதோடு, நாட்டு நடப்பில் அக்கறை கொண்டு ஆண்களுக்கு நிகராக தேசசேவையிலும் ஈடுபடுத்த வேண்டும். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவருமே அவர்களுடைய ஆற்றல், அறிவு இவற்றை விரிவு படுத்திக் கொண்டு, உடல் ஆரோக்கியத்தோடும், நீண்ட ஆயுளோடும் இருந்திட வேண்டும். நாட்டின் நலன் கருதி, தொழில்களைப் பெருக்கி, ஊக்கம், ஒற்றுமை, பரஸ்பர நம்பிக்கை ஆகிய பெருங்குணங்களைப் பெற வேண்டும். அன்னிய நாடுகளுக்கெல்லாம் இந்தியர்கள் அதிக அளவில் சென்று வரவேண்டும். இருக்குமிடமே சொர்க்கம் என்று அறியாமையால் கூண்டுக்குள் பதுங்கிக் கொள்ளக்கூடாது. இதுபோன்ற செய்திகளை நம் மக்களுக்கு எடுத்துச் சொல்வதே சிறந்த தேச சேவை என்றும், உத்தமமான கைங்கர்யம் என்றும் நம்புகிறோம்." -- ஜி.சுப்பிரமணிய ஐயர்.

மேற்கண்ட பகுதி அவருடைய முன்னுரையின் தற்கால நடையில் கொடுக்கப்பட்டுள்ள பகுதியாகும். இனி தொடர்ந்து அவருடைய கட்டுரைகளை (வியாசங்களை) படிக்கத் தொடங்குங்கள். சில சொற்கள் இப்போது வழக்கத்தில் இல்லாமல் போய்விட்டன. பள்ளிக்கூடங்களில் எழுதப்படும் கட்டுரைகளை வியாசங்கள் என்பர். அப்போதெல்லாம் பத்திரிகையில் எழுதப்படுவனவும் வியாசங்கள் என்றே குறிக்கப்பட்டன; பாரதியும் அப்படித்தான் எழுதுகிறார்.

No comments: