பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, July 26, 2015

ஆசாரத் திருத்த வியாசங்கள். Part II

                                     
                                            by ஜி.சுப்பிரமணிய ஐயர். 
                                   பண்டிதர்கள் என்ன சொல்லுகிறார்கள்.

திருவையாற்றில் 1913ஆம் வருஷம் ஜனவரி மாதம் கூடின பரிஷத் என்று வடமொழியிற் சொல்லப்படும் பிராமணப் பண்டிதர்களின் சபையைப் பல அமிசங்களில் காலவேற்றுமையைக் குறிக்கும் அடையாளமாகக் கொள்ள வேண்டும். போன வருஷம் காஞ்சிபுரத்தில் இதேமாதிரியாய் ஒரு பண்டித பரிஷத் கூட்டப்பட்டது. ஆனால் அந்த பரிஷத்துக்குப் பல பண்டிதர்கள் பலவிடங்களிலிருந்து வந்திருந்த போதிலும், அது ஒழுங்காய் நடைபெறாமல், வந்திருந்த பண்டிதர்களிற் சிலர் மனவருத்தத்துடன் கலைந்து போனார்கள். 

இந்த வருஷமும் பரிஷத்தில், சுமார் 120 பண்டிதர்கள் திருவையாற்றுக்கு அருகிலுள்ள இடங்களிலிருந்தும், சென்னையிலிருந்தும், பங்களூரிலிருந்தும், ஜாம்நகர், பெளநகர், தார்வார், கோலாப்பூர் முதலான தூரஸ்தலங்களிலிருந்தும் வந்திருந்தார்கள். ஹிந்து சமூகத்தின் ஆசாரங்களில் திருத்தங்கள் செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் பண்டிதர்கள் ஒன்றாய்ச் சேர்ந்து மனவருத்தமில்லாமல் சமாதானமாய்த் திருத்தங்களைப் பற்றி விவகரித்தார்கள். இவர்கள் ஒரே விதமான அபிப்ராயம் சொல்லவில்லை யென்பது ஆச்சரியமல்ல. நமது பூர்வீக சாஸ்திரங்களைத் தற்கால அவசியங்களுக்குப் பொருந்தினவைகளாய்ச் செய்வதில் பண்டிதர்கள் ஒரே விதமாய் அபிப்ராயப்படுவது சாத்தியமல்ல. தற்காலத் தேவைகளை உணர்ந்து அத்தேவைகள் பூர்த்தி செய்யப்படா விட்டால் தேசத்தின் அபிவிர்த்திக்குப் பெருந்தடையா யிருக்குமென்று தீவிரமான நம்பிக்கையுடையவர்களுக்கு மட்டும் சாஸ்திரங்களையும் தற்காலத் தேவைகளையும் ஒத்திருக்கும்படிச் செய்யத் தோன்றும். பழைய நுல்களையே படித்த பண்டிதர்களுக்கு இம்மாதிரி தேசாபிமானம் உண்டாவது எதிர்பார்க்கக் கூடியதல்ல. அவர்களுக்குச் சரித்திரம் தெரியாது. தேசத்து முற்கால தற்கால நிலைமைகளையும் அறிந்தவர்களல்ல. இந்தியாவின் பிற்கால நிலைமைக்கு எவைகள் அவசியமோ, அவைகளைப் பற்றியும் அவர்கள் சிந்தித்தவர்களல்ல. உலகத்தில் பற்பல தேசங்களில் நேரிட்டுக் கொண்டிருக்கும் பிரமாதமான வேற்றுமைகளும், புதுமைகளும் இன்னவென்று அவர்கள் அறிய முயறவர்களல்ல வென்றும் நாம் சொல்ல வேண்டியதில்லை. 

ஆகையால் கேவலம் புஸ்தகப் பூச்சிகளாய் இருந்த விடத்திலேயே இருந்து லோக விவகாரங்களை அறியாத பண்டிதர்களுக்கு இந்தியாவுக்குத் தற்காலம் வேண்டிய மாறுதல்களும் புதுமைகளும் தெரியாமலிருப்பது ஆச்சரியமல்ல. சமுத்திர யாத்திரை செய்வதும், பெண்கள் பெரிய மனுஷியான பிறகு விவாகம் செய்வதும் நாம் எல்லோரும் புண்ணிய பூமியென்று அன்புடன் கருதும் இத்தேசத்தின் பிற்கால க்ஷேமத்துக்கு இன்றியமையாவென்பதை அறியாமல் விரோதமாய் அபிப்பிராயப் பட்டார்கள். வாஸுல்கம் (வரதட்சணை) மட்டும், அதாவது பெண்கள் விவாகம் செய்யப்படும் போது மாப்பிள்ளைகளுக்குப் பணங் கொடுக்கும் வழக்கம் மட்டும், சாஸ்திர விரோதமென்று ஒரே மனதாய்ச் சொன்னார்கள். இப்படிச் சொன்னது அனுபோகத்தில் எவ்வளவு பலனைக் கொடுக்குமோ தெரிய வேண்டும். இவர்களுடைய அபிப்பிராயத்தை விட, பிள்ளைகளே பெண்களிடத்திலிருந்து பணம் வாங்குவதில்லையென்று விவாகத்திற்கு முன்னால் நிச்சயம் செய்து கொண்டால் அதனால் அதிகப் பலன் விளையுமென்று நினைக்கிறோம்.

திருவையாற்றில் கூடின பண்டிதர்களில் பெரும்பாலார் திருத்தங்களுக்கு விரோதமாய் இப்போது அபிப்பிராயப்பட்ட போதிலும், இப்பண்டித சபை மாதிரி பிரதி வருஷமும் அல்லது அடிக்கடியாவது சபை கூடி அவசியமான ஆசாரங்களைப் பற்றி கவனிப்பார் களானால் சில வருஷங்களுக்குள் இத்திருத்தங்கள் அவசியமென்று தெரிந்து கொள்வார்கள். பண்டிதர்களுடைய அபிப்பிராயம் எப்படியிருந்தாலும், திருத்தங்கள் நடந்து கொண்டேயிருக்கும். பண்டிதர்கள் விரோதமாயிருக்கிறார்களென்று அன்னிய தேசம் போவது நிற்காது. பெண்களுக்கு விவாக வயதும் உயர்ந்து கொண்டே வருகிறது.

ஹிந்து சமூகத்தில் பண்டிதர்கள் ஒரு பொருட்டான வகுப்பாகக் கருதப்பட வேண்டுமானால், அவர்கள் ஆங்கிலங் கற்று முன் சென்று கொண்டிருக்கிறவர்களுடன் ஒத்து செல்ல வேண்டும். பண்டிதர்களுக்காக தேசம் நின்ற நிலையில் இருக்கப் போவதில்லை. உலகமெல்லாம் முன்சென்று கொண்டிருக்க இந்தியா மட்டும் பின்னிற்க இசையாது. முற்காலத்தைப் போல் இந்தியா தனியான தேசமாய் உலகத்து மற்ற தேசங்களுடன் சம்பந்தப்படாத தேசமாயில்லை. மற்ற தேசங்களுடன் இந்தியாவுக்கு சம்பந்தம் நெருங்கி வருகிறபடியால், மற்ற தேசங்களைப் போல் இந்தியாவும் முன் செல்ல முயலும். இங்கிலாந்தில் மட்டும் இப்போது சுமார் இரண்டாயிரம் இந்தியப் பிள்ளைகள் படிக்கிறார்களென்றால், அங்கும் மற்ற தேசங்களிலும் படிப்புக்காகவும், தொழிலுக்காகவும், வேறு காரியங்களுக்காகவும் அன்னிய தேசங்களுடன் பழக்கமும் சம்பந்தமும் பெறும் இந்தியர்கள் எத்தனை பேர் இருக்க வேண்டுமென்று பண்டிதர் அறியக் கடவர். இந்தப் பெரும் சம்பவத்தையறிந்து, பண்டிதர்கள் அதற்கொத்தபடி நடந்தாலன்றி அவர்கள் செல்வாக்கற்றுப் போவார்களென்பதை நிச்சயமாய் நம்ப வேண்டும். 

மேலும் இப்போது ஆங்கிலங்கற்ற பண்டிதர்கள் சிலர் முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். திருவையாற்றுக் பரிஷத்தில் ஒரு பண்டிதர் சமுத்திர யாத்திரை செய்வதற்கு அனுகூலமாகச் சில நியாயங்கள் சொன்னார். கிருஷ்ணன் துவாரகையில் வசித்த போது அவரைப் பார்க்கப் பிராமணர் சமுத்திரம் தாண்டிச் செல்லவில்லையா? மர்மகோவா என்ற இடத்தில் பிராமணர் கப்பல் யாத்திரை செய்தார்களென்று எழுதியிருக்கும் சிலாசாசனம் இல்லையா? நரேந்திரனாகிய சக்கரவர்த்தி (சுவாமி விவேகானந்தர்) இங்கிலாந்தில் வசிப்பதால் அவரைத் தரிசிக்கப் பிராமணர்கள் செல்லுவது கடமையல்லவா? இவ்விதம் இந்தப் பண்டிதர் தர்க்கிறார். இவ்வாறு தற்காலத் திருத்தங்களுக்குச் சாதகமாகத் தர்க்கிக்கும் பண்டிதர்கள் இனி அதிகமாவார்கள். பண்டிதர்கள் சிறிது ஆங்கிலங் கற்றவர்களா யிருந்தாலும், அல்லது ஆங்கிலம் கற்றவர்களுடன் பழகினவர்களாயிருந்தாலும், திருத்தங்களின் அவசியத்தை யுணர்ந்து பேசுவார்கள். பழைய காலத்துப் பண்டிதர்களும் மடாதிபதிகளும் சமூகத் தலைவர்களின் மதிப்பை பெற்றிருக்க வேண்டுமானால் அவர்கள் தங்களுடைய அபிப்பிராயங்களை மாற்றி புது நாகரிகத்துக்கு ஒத்தவாறு அபிப்பிராயங்கள் கொள்வது அவசியமாகும்.

No comments: