பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, May 29, 2015

79. சமூகம் - பருந்துப் பார்வை


                 1. ஒரு தேசத்தார் ராஜ்ய மஹிமை பெற வேண்டுமானால் அவர்கள் ஏகதேவ பக்தி யுடையவர்களாக இருக்க வேண்டும் என்று "மாடர்ன் ரிவ்யூ" பத்திரிகை சொல்லுகிறது. அதாவது, 'முஹம்மதியர், கிருஸ்துவர், யூதர் முதலியவர்களைப் போல் ஒரே கடவுளை நம்பித் தொழவேண்டும். கிறிஸ்துவர்களிலே ரோமன் கத்தோலிக் கிறிஸ்துவர்கள் பல ஞானி களையும் தாயையும் வணங்குகிறார்கள். அப்படியில்லாமல் ப்ரோதஸ் தாந்துக் கூட்டத்தாரைப் போல் ஒற்றைக்கடவுளைத் தொழவேண்டும். இல்லாவிட்டால், இராஜ்ய வலிமை உண்டாகாது' என்று அந்தப் பத்திராதிபர் நினைக்கிறார். இது பிழை. இதற்கு மனுஷ்ய சரித்திரத்திலே எவ்விதமான ஆதாரமும்கிடையாது. ஹிந்து மதம் ஆழ்ந்த உண்மை. எல்லா மதமும் உண்மைதான். ஹிந்து மதம் ஆழ்ந்த உண்மை. உண்மையாலேதான் எல்லா நன்மையும் உண்டாகும்.

              2. வைஸ்ராய் ஸபையிலே ஜனப்பக்கத்துப் பிரதிநிதிகள்22 பேரிலே 19 பேர் சர்க்காருக்கு ஒரு அறிக்கை யிட்டிருப்பதாகத் தங்கள் பத்திரிகையிலே பார்த்தேன், சண்டை முடிந்த பிறகு, பொருளாட்சியும் மாகாண ஆட்சியும் ஜனங்களை ஆயுதம்தரிக்க இடங் கொடுக்கவேண்டும் என்பதும் மேற்படி அறிக்கையின் சாரம் என்று தோன்றுகிறது.         போதும்; பிரதிநிதிகள் சரியாகக் கேட்கவில்லை; ஏதோ தங்கள் புத்திக்குத் தோன்றிய வரை செய்தார்கள். இருந்தாலும், பொதுவாக, அவர்கள் கேட்கிற அளவேனும் நிச்சயமாகக் கிடைத்துவிட வேண்டும். அப்போது தான் தேசத்து ஜனங்களுக்குச் சிறிது சந்தோஷம் ஏற்படும்.

                3. தக்ஷிணத்துப் பாஷைகளிலே - அதாவது தமிழிலும் தெலுங்கிலும், கன்னடத்திலும், மலையாளத்திலும் - சாஸ்திர (சயின்ஸ்) பாடம் கற்றுக் கொடுப்பதற்கு மேற்படி பாஷைகள் தகுதியில்லை யென்று பச்சையப்பன் காலேஜ் தலைமை வாத்தியார் மிஸ்டர் ரோலோ என்பவர் சொல்லுகிறார். அவருக்கு இவ்விடத்துப் பாஷைகள் தெரியாது. ஸங்கதி தெரியாமல் விரிக்கிறார். சாஸ்திரபாஷை நமது பாஷைகளில் மிகவும் எளிதாகச் சேர்த்துவிடலாம். மேலும், இயற்கை நடையிலே இங்கிலீஷைக் காட்டிலும் தமிழ் அதிக நேர்மையுடையது. ஆதலால், சாஸ்திரப் பரவசனத்துக்குமிகுந்த சீருடையது. இந்த ஸங்கதி நம்மவர்களிலே கூடச் சிலஇங்கிலீஷ்ப் பண்டிதருக்குத் தெரியாது. ஆதலால் மிஸ்டர் ரோலோவை நாம் குற்றஞ் சொல்வது பயனில்லை.

              4. காசியிலே ஹிந்து ஸர்வகலா சங்கம் கட்டும் போது பல மாளிகைகள் ஹிந்து சிற்பத்தைத் தழுவியிருக்க வேண்டும். நவீன பாடசாலைகளுக்குரிய லக்ஷணங்கள் குறையக் கூடாது. ஆனால், சிற்பத்தின் மேனி சுதேசிய விஷயமாக இருக்க வேண்டும். பாரத தேசத்துச் சிற்பிகளிலே தமிழ் நாட்டு ஸ்தபதிகள் ஒரு முக்கியமான அங்கமாவர். வங்கத்திலே மஹா கீர்த்தியுடன் சோபிக்கும் நவீன சாஸ்திரிகளில் நாயகராகிய அவனீந்த்ர தாகூர் கூட இக்காலத்திலும் தமிழ் நாட்டில் வாழும் ஸ்தபதிகளிடம் உயர்ந்த தொழில் இருப்பதாக மிகவும் புகழ்ந்து பேசியிருக்கிறார். ஆதலால், மேற்படி ஸர்வகலா சங்கத்தின் கூட்டங்களிலே கூடியவரை நமது தமிழ் ஸ்தபதிகளின் உதவியை நாடிக்கொள்ளும்படி தமிழ் நாட்டிலுள்ள பண்டிதர்களும் ஜனத்தலைவர்களும் மேற்படி சங்கத்திற்குப் பொருள் கொடுத்து உதவுந் தோறும் முயற்சி செய்ய வேண்டும்.

 5. ஜப்பானில் ஸம்ஸ்கிருத படிப்பு வளருகிறது. அங்கே ஸம்ஸ்கிருத படிப்பு எந்தக் காலத்தில் தொடங்கியது என்றுஇன்னும் நிச்சயமாய்ச் சொல்ல இடமில்லை. ஆறாம் நூற்றாண்டில்அந்த நாட்டுக்குள் பௌத்த மதம் நுழைந்த போதே ஸம்ஸ்கிருதமுங்கூட நுழைந்திருக்கலாம் என்று சிலர் சொல்லுகிறார்கள். ஏழாவது நூற்றாண்டின் மத்தியிலே சீன தேசத்தில் மொழிபெயர்ப்புச்  சங்கம் நடத்திய ஹயலுக்தஸ்வ் என்ற பண்டிதரிடம் ஜப்பானிலிருந்து பலகுருக்கள் வந்து ஸம்ஸ்கிருதம் படித்ததாகச் சரித்திர ஆதாரத்தினால் தெரிகிறது.  735 (கி.பி.) - ஆம் வருஷத்தில் பாரத தேசத்திலிருந்து போதிஸேனன், யத்ரியத் என்ற இரண்டு பேர் ஜப்பானில் போயிறங்கினார்கள். சிறிது காலம் சீன ராஜதானியிலிருந்து விட்டு ஜப்பானிலிருந்து அங்கு வந்த மந்திரிகளுடனே அங்கிருந்து புறப்பட்டு ஜப்பானுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். இதற்கப்பால் ஸமஸ்கிருதப் படிப்பு மிகுதிப்பட்டது. ஜப்பானிலிருந்து ஸம்ஸ்கிருத பண்டிதர் சீனத்திலே போய் மஹா கீர்த்தியடைந்தனர். திருஷ்டாந்தமாக 805(கி.பி.) - ஆம் வருஷத்தில் ரேய்ஸோன் என்ற ஜப்பானிய குரு சீனத்துக்குப் போய் அங்கே பௌத்தமொழி பெயர்ப்புச் சங்கத்தின் தலைமையை நடத்தினார். அப்போது ந்ராஸ்னா நன்றென்ற ஹிந்து பண்டிதர் அங்கிருந்தார். இருவருஞ் சேர்ந்து ஒரு பெரிய சாஸ்திரம் ஸம்ஸ்கிருதத்திலிருந்து பொழி பெயர்த்து வந்தார்கள். இப்போதும் அங்கே பௌத்த தர்மத்துக்கு அந்நூல் பெரிய ப்ரமாணமாக நிற்கின்றது. மேலும் அக்காலத்திலிருந்து ஜப்பானிலிருந்து பலர் பாரததேசத்துக்கு வந்துபோனதாகவும் தெரிகிறது. இப்போது ஜப்பானிலே பௌத்தமடங்களில் நூற்றுக்கணக்கான மனிதர் ஸமஸ்கிருதம் படிக்கிறார்கள்; ஒவ்வொரு ராஜாங்கத்து ஸர்வ கலாசாலையிலேயும் சங்கத்திலேயும் பெரிய தேர்ச்சி கொண்ட ஜப்பானிய ஸம்ஸ்கிருத பண்டிதர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இங்குள்ள ஸம்ஸ்கிருத பண்டிதர்கள் ஜப்பானிலுள்ள ஸம்ஸ்கிருத பண்டிதர்களுடன் ஓலை எழுதிப் பழக்க மேற்படுத்திக் கொள்ளலாம். டோக்யோ ஸாம்ராஜ்யசர்வகலா சங்கத்தில் பண்டித் அநேஸாரி  (Anesari)  என்பவர் இருக்கிறார். அங்கிருந்து பழைய சுவடிகள் தருவித்துப் பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஹிந்து ஸர்வகலா சங்கத்தார் இவ்விஷயத்தைக் கவனிப்பது நலமாகும்.


No comments: