பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, May 24, 2015

61. ஹார்மோனியம், தம்பூர், வீணை, பொய்த் தொண்டை

கலைகள் -  ஹார்மோனியம்

             தமிழ்நாட்டு மாதர்களுக்குள்ளே நல்ல பாட்டு வளர்ச்சிபெறவேண்டும் என்பது என்னுடைய விருப்பம் ஆனால், அதற்குஹார்மோனியப்பெட்டி ஒரு விக்கினமாக வந்து சேர்ந்திருக்கிறது.இந்தப் பெட்டி நமது நாட்டிலே பழகுவதினால் சங்கீதத்திற்குப்பல விதமான தீங்கு உண்டாவதாக வித்வான்களிலே பெரும்பாலோர் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் அதை நிறுத்துவதற்குயாரும் வழி தேடவில்லை. நமது சங்கீதத்திலுள்ள சுருள்கள்வீழ்ச்சிகள் முதலியவற்றை ஹார்மோனியத்தில் காட்டமுடியாது.ஆதலால், அந்த வாத்தியத்தில் அதிகம் பழக்கமுடையோரிடம்நமது ஸங்கீதத்தில் உள் விசேஷ நயங்கள் மங்கிப் போகின்றன. இதையெல்லாங்காட்டிலும், அந்தப் பெட்டி போடுகிற பெருங்கூச்சல்தான் என் காதுக்குப் பெரிய கஷ்டமாகத் தோன்றுகிறது.

          மேலும், ஸங்கீதத்திலே கொஞ்சமேனும் பழக்கமில்லாதவர்களுக் கெல்லாம் இந்தக் கருவியைக் கண்டவுடனே "ஷோக்" பிறந்துவிடுகிறது. சத்த முண்டாக்குவதற்கு நல்ல துருத்தி கைக்கு ஒத்ததாகப் பின்னே வைத்திருக்கிறது. ஒரு கட்டையை உள்ளே அழுத்தி, முன் பக்கத்துச் சாவிகளை இழுத்துவிட்டு, துருத்தியை அசைத்தால்,"ஹோ" என்ற சத்த முண்டாகிறது. உடனே பாமரனுக்கு மிகுந்த சந்தோஷ முண்டாகிறது. "நாம் அல்லவா இந்த இசையை யுண்டாக்கினோம்?" என்று நினைத்துக்கொள்கிறான். உடனே வெள்ளைக் கட்டைகளையும் கருப்புக் கட்டைகளையும் இரண்டு தட்டுத்தட்டுகிறான். பேஷான தொனிகள்! மேலான தொனிகள்! பாமரன்பூரித்துப் போகிறான். முதல் நாள், முதல் தடவை, தொட்டமாத்திரத்திலே இவ்வளவு கோலாஹலம் உண்டாகிறது. பிறகு ஸரளி,அலங்காரம், பிள்ளையார் கீதம், சங்கராபரண வர்ணம், ''பவநுத'' கீர்த்தனம் - இத்தனையும், ஹார்மோனியத்தில் மூன்று மாதத்திற்குள் பழக்கமாய் விடுகிறது. பாமரனின் மனதிலே "நாம் ஒரு வித்வான்" என்ற ஞாபகம் உறுதியாகப் பதிந்து விடுகிறது. ராக விஸ்தாரங்களைத் தொடங்கி விடுகிறான். ஒரு வீட்டில் "ஹார்மோனியம்" வாசித்தால் பக்கத்திலே ஐம்பது வீட்டுக்குக் கேட்கிறது. அறியாதவன் தனது அறியாமையை வீட்டில் இருந்தபடியே இரண்டு மூன்று வீதிகளுக்குப் பிரசாரம் பண்ணவேண்டுமானால், அதற்கு இந்தக் கருவியைப் போலே உதவி வேறொன்றுமில்லை. வீணை தவறாக வாசித்தால் வீட்டில் உள்ள ஜனங்களுக்கு மாத்திரந்தான் துன்பம்; ஹார்மோனியம் தெரு முழுவதையும் ஹிம்ஸைப் படுத்திவிடுகிறது. ஒரு தேசத்தாரின் செவியைக் கெடுத்து ஸங்கீத உணர்ச்சி குறையும்படி செய்ய வேண்டுமானால், கிராமந்தோறும் "நாலைந்து ஹார்மோனியம்" பரவும்படி செய்தால் போதும்.

             நாடகக்காரர் வாய்ப்பாட்டுக்குச் சுருதி போடும் பொருட்டு இதை வைத்துக் கொள்ளுதல் ஒரு வேளை பொருந்தும். ஸாமான்ய ஜனங்கள் இதை சுருதிக்கு வைத்துக்கொள்வதனால் பல தீங்குகள் உண்டாகின்றன. இத்தீங்குகள் யாவை என்பதையும் நமது நாட்டுக்குப் பொருத்தமான வாத்தியங்கள் எவை என்பதையும் பெண்கள் பாட்டைநேராக்குவதற்கு இன்னும் என்ன வழிகள் தேடவேண்டுமென்பதையும் ஆராய்ச்சி செய்வோம்.
தம்பூர்

             நாடகக்காரர் தவிர மற்ற ஸாமான்ய ஜனங்கள் வீடுகளிலும் பஜனைக் கூடங்களிலும் பாடும்போது தம்பூர் சுருதி வைத்துக் கொள்வதே பொருந்தும். ஹார்மோனியம் பேரிரைச்சல்போடுவதிலே பாட்டின் சத்தம் கணீரென்று கேட்பதில்லை. பாட்டுக் கீழாகவும் சுருதி மேலாகவும் நிற்கிறது. அஸாதாரணமான உச்ச சாரீரமுடைய சிலர் மாத்திரமே ஹார்மோனியத்தின் சுருதிக்குமேலே பாடக் கூடும்; பொதுப்படையாக சாத்தியமில்லை. பாட்டுக்குஉதவியாக சுருதி ஒலிக்கவேண்டும். பாட்டை விழுங்கும் சுருதிபிரயோசனமில்லை. அது வெறும் மடமை.

வீணை

                 வாத்தியம் படிக்க விரும்பும் ஸ்திரீகள் வீணை பழகவேண்டும். வீணை ஆரம்பத்திலே கொஞ்சம் சிரமம். போகப்போக ஸுலபமாய் விடும். இந்தக்கருவியிலே தேர்ச்சியேற்பட்டால் அது தான் வாஸ்தவமான  சங்கீதத் தேர்ச்சி யாகும். பெண்கள் வீணை வாசிப்பதினால், நாட்டிலே ரஸப்பயிற்சியும் வாழ்க்கை நயமும் உண்டாகும். மைசூரிலும் மலையாளத்திலும் பழகியவர்களுக்கு, 'பெண்கள் வீணை கற்றுக் கொள்ளுதல் சிரமமில்லை' என்பது தெரியும். வீணை பழகினால் அதிலேயே நல்ல தாள ஞானம் உண்டாய்விடும். வீணை மனிதர் குரல் போலவே பேசும். இன்பச் சுருள்களுக்கும் பின்னல்களுக்கும் வீணை மிகவும்பொருத்தமானது. அதன் ஒலி சாந்திமயமானது. ஸரஸ்வதி தனதுகையில் வீணையை தரித்துக்கொண்டிருக்கிறாள். காளிதாஸ கவிபராசக்தியைப் பாடும்போது "மாணிக்ய வீணாம் உபலாலயந்தீம்"என்று தொடங்குகிறார்.

பொய்த் தொண்டை

                ஆணாயினும் பெண்ணாயினும் கள்ளத்தொண்டை வைத்துக்கொண்டு பாடலாகாது. தொண்டையைத் திறந்து பாடினால்தான் சுகமுண்டாகும். இயற்கையிலே ஆணுக்குக் கனமாக குரலும் பெண்ணுக்கு ஸன்னமான குரலும் ஏற்பட்டிருக்கின்றன. பெண்களிலே சிலர் இயற்கை ஸன்னத்தை அதிகஸன்னப்படுத்த வேண்டுமென்று கருதிக் கள்ளத் தொண்டையிற் பாடுகிறார்கள். வேறு சிலர் லஜ்ஜையினாலே கள்ளத் தொண்டைக்கு வந்து சேருகிறார்கள்.இதுவும் தவறேயாம். தொண்டையைத் திறந்து தெளிவாகப் பாடுவதிலே லஜ்ஜைப்பட யாதொரு நியாயமுமில்லை.


No comments: