பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, March 30, 2015

மகாகவி பாரதியார் கதைகள். 3 & 4


3. அமெரிக்காவுக்குப் போன சீன ராஜகுமாரன்.

சீன தேசத்திலிருந்து ஒரு ராஜகுமாரன் அமெரிக்காவுக்குப் போயிருந்தானாம். அப்போது ஒரு பிரபுவின் மனைவி சீனத்து விருந்தாளியுடன் பேசிக் கொண்டிருக்கையிலே அவள், "உங்களுடைய சீன தேசத்தில் கலியாணமாகும்வரை மணப்பெண் தனது புருஷன் முகத்தைப் பார்ப்பது வழக்கமில்லையாமே! மெய்தானா?" என்று கேட்டாள். அதற்கு ராஜகுமாரன், "உங்கள் தேசத்தில் சில பெண்கள் கலியாணமான பிறகு தன் புருஷன் முகத்தைப் பார்ப்பதேயில்லை என்று கேள்விப்படுகிறேன். அது மெய்தானா?" என்றான்.

4. சாஸ்திரியார் மகன்.

ஒரு பிராமணப் பையன் தனது விளையாட்டு வண்டி தெருவிலே ஒடிந்து போனபடியால், அதைப் பார்த்து அழுதுகொண்டு ந்ன்றான். அதைக் கண்ட ஒரு சிப்பாய், "குழந்தாய், ஏன் அழுகிறாய்?" என்று கேட்டான்.

பையன்: "வண்டி ஒடிஞ்சுப் போச்சு"

சிப்பாய்: "இதற்காக அழாதே. வீட்டிற்குப் போ. உன்னுடைய தகப்பனார் அதைச் செப்பனிட்டுக் கொடுத்து விடுவார்."

பையன்: "எங்கப்பா சாஸ்திரியார்; அவராலே வண்டியை நேர்ப்படுத்திக் கொடுக்க முடியாது. அவருக்கு ஒரு தொழிலும் தெரியாது. யார் வீட்டிலாவது அரிசி கொடுத்தால் வாங்கிக் கொண்டு வருவார். வேறே ஒரு எழவும் தெரியாது" என்று விம்மி விம்மி அழுதான். சிப்பாய் சிரித்துக் கொண்டே போய் விட்டான்.

No comments: