பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, September 23, 2014

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 6

தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள்

தஞ்சாவூர் சோழ நாட்டின் தலைநகராகச் சிறப்புற்று விளங்கிய இடம். கடைச் சோழர்களான விஜயாலயன் பரம்பரை தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டது என்பது அனைவருக்கும் தெரியும். அவர்களுடைய பாரம்பரிய ஆட்சி சோழ நாட்டில் நிலை பெற்றிருந்தது. கடைச்சோழர்கள் வம்சம் 1279இல் முடிவுக்கு வந்துவிட்டது. பிறகு சில காலம் பல்லவர்களின் கீழும், பின்னர் பாண்டியரிடமும் இருந்த சோழ மண்டலம் பல காலம் சரியான ஆட்சி அமையாமலே இருந்தது. அதன் பின் ஹொய்சாளர், நாயக்கர், மராத்தியர் என பலர் ஆண்டபின் 1855 முதல் ஆங்கிலேயர்களின் அதிகாரத்தின்கீழ் வந்தது என்பது வரலாறு கூறும் செய்தி. 

14ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யம் கோலோச்சிய சமயம் இங்கு நாயக்கர்களின் ஆட்சி பரவி நிலைத்தது. அது குறித்த சில விவரங்களை இப்போது பார்ப்போம்.

தஞ்சாவூருக்கு இந்தப் பெயர் வரக்காரணமாகக் கூறப்படும் புராண செய்தியொன்று இருக்கிறது. தஞ்சன் எனும் அசுரன் ஆனந்தவல்லி அம்மன் சமேதரான ஸ்ரீ நீலமேகப்பெருமாளால் வதம் செய்யப்பட்டதாகவும், அந்த அசுரன் இறக்கும் தறுவாயில் இவ்வூருக்குத் தன் பெயரையிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டதாகவும், அதனால் இவ்வூர் தஞ்சபுரி அல்லது தஞ்சாவூர் என அழைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

தமிழகத்தின் பழைமையை உணர்ந்து கொள்ள வேண்டுமானால் மகாபாரதப் போரின் போது பாண்டிய மன்னன் குருக்ஷேத்திரப் போரில் சண்டையிட்ட இரு பிரிவினருக்கும் உணவளி த்ததாகச் சொல்லப்படும் செய்தியொன்று போதும். சோழ நாடு பல தலைநகர்களைப் பல்வேறு காலகட்டத்தில் பெற்றிருந்ததாகத் தெரிகிறது. மனுநீதிச் சோழன் காலத்தில் சோழ நாட்டின் தலைநகர் திருவாரூர். பின்னர் பூம்புகார், உறையூர், பழையாறை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகியவைகளும் சோழர்களின் தலைநகரங்களாக இருந்து வந்திருக்கின்றன. 

பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையே நடைபெற்ற போரில் பல்லவன் பக்கம் போராடிய சிற்றரசன் விஜயாலயன் போரில் வென்றபிறகு தஞ்சையை ஆண்ட பெரும்பிடுகு முத்தரையனிடமிருந்து தஞ்சையை மீட்டு ஆட்சிபுரியலானான். அப்போது விஜயாலயன் தனது தலைநகரை பழையாறையிலிருந்து தஞ்சைக்கு மாற்றிக் கொண்டான். தன்னுடைய குலதெய்வமான நிசும்பசூதனிக்குத் தஞ்சாவூரில் ஒரு கோயில் எழுப்பி வழிபட்டான். விஜயாலயனின் காலம் கி.பி.846 முதல் 880 வரை. ராஜராஜ சோழன் காலம் வரை தஞ்சை தலைநகரமாக இருந்து, பின்னர் அவரது புதல்வர் ராஜேந்திர சோழன் காலத்தில் தலைநகரம் கங்கைகொண்டசோழபுரத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது. பதிமூன்றாம் நூற்றாண்டில் சோழர்கள் ஆதிக்கம் முடிவடைந்து பாண்டியர்கள் வசம் தஞ்சாவூர் போய்விட்டது. அதன்பின் பல்வேறு ஆட்சியாளர்கள் சிதறிப்போய் ஆங்காங்கே ஆட்சிபுரிந்து வரும் நிலையில் கிருஷ்ணதேவராயரின் விஜயநகர சாம்ராஜ்யம் கோலோச்சத் தொடங்கியது. தென்னாடு முழுவதும் கிருஷ்ணதேவ ராயரின் ஆட்சி பரவத் தொடங்கியது. விஜயநகர சாம்ராஜ்யம் கிட்டத்தட்ட தென்னிந்தியா முழுவதும் பரவிக் கிடந்தது. ஆங்காங்கே இருந்த பகுதிகளை ஆள நாயக்க மன்னர்கள் தங்கள் ராஜப் பிரதிநிதிகளை அனுப்பி வைத்தார்கள். அப்படி அனுப்பப்பட்ட ராஜப்பிரதிநிதிகள் அனைவருமே மன்னரின் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும், ராஜ வம்சத்தினரின் உறவினர் களாகவும் பார்த்து அனுப்பப்பட்டனர். உறவினர்களை ஊக்குவிக்காமல் வெளியாரை நம்பினால் என்ன ஆவது, அதனால்தான் உறவினர்களுக்கு எப்போதும் முன்னுரிமை உண்டு அரசியலில்.

அப்படி அனுப்பப்பட்டவர்கள் விஜயநகரப் பேரரசின் பெயரால் தமிழ்ப் பகுதிகளான மதுரை, தஞ்சாவூர், திருச்சினாப்பள்ளி, செஞ்சி முதலான பகுதிகளில் ஆட்சி புரிந்தனர். நாயக்க மன்னர்கள் தாங்கள் ஆண்ட பகுதிகளுக்குத் தங்களுடன் படை வீரர்கள் தவிர, மகா பண்டிதர் களையும், கலை வல்லுனர்களையும் கூட அழைத்துச் சென்றனர். இசையும், கலைகளும் இவர்கள் காலத்தில் செழித்து வளர்ந்தன. இந்தக் குறுநில மன்னர்களும் கலை ஆர்வலர்களாகவும், நன்கு கற்றுத் தேர்ந்த பண்டிதர்களாகவும் இருந்திருக்கின்றனர்.

பழைய ஆலயங்களை, சிதிலமடைந்தவற்றை மீண்டும் புதுப்பித்துக் கட்டியும், புதிய பல ஆலயங்களை நிர்மாணித்தும் இவர்கள் அரிய சேவைகளைப் புரிந்திருக்கின்றனர். இவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலங்கள், ஆற்றில் மக்கள் இறங்கி நீராட அரிய படித்துறைகள் முதலியன இன்றளவும் அவர்கள் பெருமைகளைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக தஞ்சையை ஆண்ட அச்சுதப்ப நாயக்கர் அவரது குமாரர் ரகுநாத நாயக்கர் ஆகியோருடைய காலத்தில் அமைச்சராக இருந்த கோவிந்த தீக்ஷிதர் செய்த செயற்கரிய சாதனைகளை இன்றும் மக்கள் போற்றிப் பாராட்டுகின்றனர். தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களின் ஆட்சி குறித்தும், அவர்கள் செய்த பொதுமக்களு க் கான தொண்டுகள் குறித்தும், நிர்வாகம் இவை பற்றியெல்லாம் விரிவாக முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்கள் எழுதியிருக்கிறார். தஞ்சை சரஸ்வதி மஹால் வெளியீடு இது. தஞ்சாவூரின் வரலாற்றைப் பற்றி 'தஞ்சாவூர்', 'திருவாரூர்', தஞ்சை நாயக்கர்கள் வரலாறு, மராத்திய மன்னர்கள் வரலாறு போன்ற செய்திகளை அதிகம் வெளிக் கொணர்ந்தவர் என்கிற முறையில் முனைவர் குடவாயில் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

16, 17 ஆம் நூற்றாண்டில் தஞ்சை சோழ மண்டலம் நாயக்க மன்னர்களால் ஆளப்பட்டது. விஜயநகர சாம்ராஜ்யத்தின்கீழ் வந்த பகுதிகளுக்கெல்லாம் ராஜப்பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் விஜயநகர மன்னர் பெயரால் ஆட்சி புரிந்தனர். அப்படி தமிழ்ப் பேசும் பகுதிகளில் குறிப்பாக மதுரை, தஞ்சாவூர், செஞ்சி, மதுரை, திருச்சினாப்பள்ளி ஆகிய பகுதிகள் அவர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இவர்களில் மதுரை நாயக்க மன்னர்களும், தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களும் சிறப்புக்குரியவர்களாக இருந்திருக்கின்றனர். இவர்கள் காலத்தில் நாடு கலை, இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்புற்று விளங்கியிருக்கிறது. சில மன்னர்களும் சிறந்த கலைஞர்களாக இருந்திருக்கின்றனர். பல அற்புதமான கட்டுமான பணிகளையும், ஆலயங் களையும் கட்டுவித்திருக்கின்றனர். சோழ மண்டலத்தில் பரவிக்கிடந்த பல ஆறுகளில் பாலங்களையும், படித்துறைகளையும், பல மண்டபங்களையும் கட்டி வைத்தவர்கள் இவர்கள். நாயக்கர் காலத்தில் அமைச்சராக இருந்த கோவிந்த தீக்ஷிதர் செய்த செயற்கரிய பணிகள் என்றென்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும். தற்போதைய தஞ்சை அரண்மனை நகரமைப்பு இவை அனைத்தும் நாயக்க மன்னர்களின் கொடை என்றால் மிகையல்ல. அதனைப் பின்னர் மராத்திய மன்னர்கள் விரிவு படுத்தி, புதுப்பித்து வந்திருக்கின்றனர். 

நாயக்கர் வகுப்பில் பலிஜா பிரிவினைச் சேர்ந்தவர்கள் தஞ்சைக்குக் குடியேறிய நாயக்க வம்சத்து மன்னர்கள். முதலில் தஞ்சைக்கு அனுப்பப்பட்ட ராஜப்பிரதிநிதி சேவப்ப நாயக்கர். விஜயநகர த்தை ஆண்ட அச்சுத தேவராயர் என்பவர் கிருஷ்ணதேவ ராயரின் தம்பி. இந்த அச்சுத தேவராயரின் மைத்துனியின் கணவர் இந்த சேவப்ப நாயக்கர். இவரைத் தஞ்சாவூருக்கு ராஜப் பிரதிநிதியாக அனுப்பி வைத்தார் மன்னர். ஆரணியில் இருந்த இந்த சேவப்ப நாயக்கர் தஞ்சைக்கு அரசராக நியமித்து அச்சுததேவராயர் இவரைத் தஞ்சாவூருக்கு அனுப்பினார். ஆக, 1535ஆம் ஆண்டில் தஞ்சையில் நாயக்கர்கள் ஆட்சி வெற்றிகரமாக சேவப்ப நாயக்கர் தலைமையில் தொடங்கியது.

கிருஷ்ணதேவராயர் காலத்திலிருந்தே விஜயநகர சாம்ராஜ்யத்தின் சோழ நாடு உள்ளிட்ட கிழக்குப் பிரதேசங்கள் அனைத்துக்கும் வீர நரசிங்கராய சாளுவ நாயக்கர் பொறுப்பில் இருந்து வந்தது. கிருஷ்ணதேவராயருக்குப் பிறகு அச்சுததேவ ராயர் காலத்திலும் இந்த வீர நரசிங்கராயர் இருந்திருக்கிறார். சோழ தேசத்துக்கு இவர் பொறுப்பாளராக இருந்திருக்கிறார் என்றால் அச்சுததேவ ராயர் தன்னுடைய சகலையான சேவப்ப நாயக்கரை எதற்காகச் சோழ நாட்டை ஆள, தஞ்சாவூருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்கிற ஐயம் எழுவது நியாயம்தான் அல்லவா?

இந்த சந்தேகத்துக்கு "அச்சுதரயாப்யுதயம்" எனும் தெலுங்கு இலக்கியம் பதிலளிக்கிறது. சோழ தேசத்துக்கு பொறுப்பான வீர நரசிங்கராயர் தன்னுடைய இடத்தை வலுப்படுத்திக் கொண்டு அவரே ஒரு சக்கரவர்த்தியைப் போல பலம் பொருந்தியவராக ஆவது விஜயநகர சாம்ராஜ் யத்துக்கே ஒரு அச்சுறுத்தலை உண்டாக்கி விட்டது. கிருஷ்ணதேவ ராயரின் ஆணைகளையே பொருட்படுத்தாத அளவுக்கு இந்த வீர நரசிங்கராயர் பலம் பெற்றுவிட்டார். ஆனால் இவரை வழிக்குக் கொண்டுவருவதற்கு முன்பாக கிருஷ்ணதேவராயர் காலமாகிவிட்டார். அவருக்குப் பின் அவரது இளைய சகோதரர் அச்சுததேவ ராயர் பதவிக்கு வந்துவிட்டார். அச்சுததேவ ராயரிடமும் வீரநரசிங்கராயர் அடங்கிப் போகவில்லை. அச்சுததேவ ராயரின் ஆணையை இவர் மீறலானார். குறிப்பாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்துக்கும், ஏகாம்பரநாதர் ஆலயத்துக்கும் சமமாக நிலங்களைப் பிரித்து இறையிலியாகக் கொடுக்கச் சொன்னதை இவர் சிவாலயத்துக்கு மட்டும் கொடுத்து விட்டார் என்பது குற்றச்சாட்டு. இதனால் ஆத்திரமடைந்த அச்சுததேவ ராயர் வீர நரசிங்கரை பிரதானி பதவியிலிருந்து 1531இல் நீக்கிவிட்டார். பதவி நீக்கம் செய்யப்பட்ட வீர நரசிங்க ராயருக்குப் பின்னர் போகையதேவர் எனும் உறையூர் சோழ மன்னர்களின் வாரிசு ஒருவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். இவர் விஜயநகர மன்னருடைய ஆணைகளை உண்மையாக நிறைவேற்றி அரசரின் அன்புக்குப் பாத்திரமானார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட வீர நரசிங்கராயர் செய்வதறியாது தனித்து விடப்பட்டார். சமயம் பார்த்திருந்து விஜயநகர சாம்ராஜ்யத்துக்கும் அச்சுததேவ ராயருக்கும் எதிராகக் கலகம் செய்து தன்னை ஒரு சுதந்திர மன்னனாக ஆக்கிக் கொள்ளவேண்டுமென்கிற வெறி அவருக்கு ஏற்பட்டுவிட்டது. அதற்காக அவர் பல சின்னஞ்சிறு பிரதேச ராஜாக்களிடமெல்லாம் சென்று ஆதரவு திரட்டலானார். மதுரையில் அரசாண்ட விஸ்வநாத நாயக்கர், திருவாங்கூரை ஆண்ட மூத்த திருவடி என அழைக்கப்பட்ட மார்த்தாண்ட வர்மா, பரமக்குடியை ஆண்ட தும்பிச்சி நாயக்கர் ஆகியோரை இவர் அணுகினார். இதில் மதுரை விஸ்வநாத நாயக்கர் வீர நரசிங்கருக்கு உதவ மறுத்துவிட்டார். அதனால்தான் மற்ற அரசர்களை அணுகி உதவி கேட்கலானார். 

வீர நரசிங்கராயருக்கு செல்லப்பா என்ற ஒரு பெயரும் உண்டு. தெற்குப் பிரதேச அரசர்களின் ஆதரவைத் திரட்டிய பின்னர் இவருக்கு தெம்பு வந்துவிட்டது. தென்காசியை ஆண்ட பாண்டிய ராஜாவைத் தோற்கடித்தார் இவர். இவருடைய போராட்டம் இப்படி இருந்த போதிலும், பொதுவாக வீர நரசிங்கராயர் சேர நாட்டுக்குத் தப்பியோடியதாகத்தான் பலரும் எழுதுகிறார்கள்.

இந்த விவரங்கள் எல்லாம் விஜயநகரத்துக்குச் சென்று மன்னர் அச்சுததேவ ராயர் காதில் போடப்பட்டுவிட்டன. பார்த்தார் ராயர், இவனை இப்படியே விட்டுவைத்தால் ஒரு நேரத்தில் தமக்கே எதிராகப் போராட இவன் துணிந்தாலும் துணிந்துவிடுவான்; இந்த விவகாரத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டுமென்று எண்ணி ஒரு பெரும் படையோடு தெற்கு நோக்கிப் புறப்பட்டுவிட்டார் அச்சுததேவ ராயர். அந்தப் படைக்கு தன்னுடைய சொந்த மைத்துனன் சாளுக்கராஜு திருமலைராயன் என்பவரை தலைவராக நியமித்தார். அந்தப் படை வீரநரசிங்கராயரைத் துரத்திக் கொண்டு சென்றாலும், சாம்ராஜ்யப் படையிடம் அகப்படாமல் தப்பிச் சென்று திருவாங்கூரை அடைந்தார். 

அச்சுததேவ ராயரின் சாம்ராஜ்யப் படை தெற்கு நோக்கி வந்து ஸ்ரீரங்கத்தை அடைந்து அதனைக் கைப்பற்றிக் கொண்டது. மேலும் தொடர்ந்து அந்தப் படை திருவாங்கூரை நோக்கிச் சென்றது. ஆனால் ராஜா அச்சுததேவ ராயர் திருவரங்கத்திலேயே தங்கிக் கொண்டு அங்கு மகா பண்டிதர்களோடு உரையாடிக் கொண்டு இருந்துவிட்டார், படைகளை மட்டும் தெற்கே அனுப்பிவிட்டு. தெற்கே சென்ற சாளுக்கராஜு திருமலைராயனின் படைகள் அனைவரையும் வென்று வீர நரசிங்கராயரையும், சேர மன்னனையும் கைது செய்து திருவரங்கம் திரும்பியது. சேர மன்னனை பதவி நீக்கம் செய்துவிட்டு மீண்டும் பாண்டியர்களுக்கு ஆட்சியை மீட்டுக் கொடுத்தது. இந்த படுதோல்விக்கு ஆளான திருவாங்கூர் மகாராஜாவின் பெயர் உதயமார்த்தாண்ட வர்மன் என்பதாகும். வீர நரசிங்கராயர் அதன் பின்னர் எந்த பதவியையும் விஜயநகர சாம்ராஜ்யத்தில் பெறமுடியவில்லை. அவன் ஆண்ட தஞ்சாவூர் ராஜ்யம் என்னவாகும்? மதுரையில் இருப்பவர்கள் நம்பிக்கைக்கு பாத்திரர்களாக இல்லை; தாங்கள் தனி சுதந்திர மன்னர்களாக இருக்க ஆசை கொண்டிருக்கிறார்கள். தஞ்சையும் ஆள்வதற்கு ஆளில்லாமல் இருக்கிறது. இந்த நிலையில்தான் மன்னர் அச்சுததேவ ராயர் தன்னுடைய சகலையான சேவப்ப நாயக்கரைத் தஞ்சைக்கு அனுப்புகிறார். அவர் தஞ்சையில் மதுரையின் நடவடிக்கைகளைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளவும், சாம்ராஜ்யத்துக்கு எதிராக வீர நரசிங்கன் போல எவரும் கலகத்தில் ஈடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக, வீரத்தில் சிறந்த சேவப்பரை தஞ்சைக்கு நாயக்க மன்னராக அனுப்புகிறார். 

No comments: