பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, September 22, 2014

தஞ்சை நாயக்க மன்னர்கள் Part 1.

     தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் எனும் தலைப்பில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பிரதிநிதிகளாகத் தஞ்சை மண்ணை ஆண்ட நாயக்க மன்னர்களைப் பற்றிய விவரங்களைத் தொடர்ந்து அளிக்கத் தொடங்குகிறேன். இவர்கள் காலம் சோழ நாட்டுக்குப் பொற்காலம் எனலாம். மகான் கோவிந்த தீக்ஷிதரை அமைச்சராகக் கொண்டு இந்த மன்னர்கள் நான்கே பேர், அதாவது சேவப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர், விஜயராகவ நாயக்கர் ஆக இந்த ஐந்து பேரும் செயற்கரிய செயல்களை இங்கு செய்துவிட்டுச் சென்றிருக்கின்றனர். இவர்களது சாதனைகள் வெளிச்சத்துக்கு வராத காரணம் தெரியவில்லை. இந்த தொடரில் ஓரளவு அவர்களுடைய சாதனைகளைப் பட்டியலிட்டுக் காட்டவிருக்கிறேன்.                               

                                     
    தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் (1532 – 1673) 
                                Part 1.
                                                             
பாரத தேசத்தில் தக்ஷிணப் பிரதேசத்தில் ஒரு மாபெரும் இந்து சாம்ராஜ்யமாக உருவான விஜயநகர சாம்ராஜ்யம் 1336இல் ஹரிஹரர் புக்கர் எனும் சகோதரர்களால் உருவாக்கப்பட்டது. சங்கம வம்சத்தைச் சேர்ந்த இந்த சகோதரர்கள். தெற்கே இஸ்லாமிய படையெடுப்புகளை எதிர்த்து 13ஆம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் நீண்ட நெடிய போராட்டத்தை நடத்தியதன் விளைவாக உருவானதுதான் இந்த சாம்ராஜ்யம். குறுகிய காலத்தில் பல அரிய சாதனைகளைப் படைத்துவிட்டு 1646இல் தக்ஷிண சுல்தான்கள் நடத்திய மாபெரும் படையெடுப்புக்குப் பின் முடிவுக்கு வந்து பிறகு இருந்த இடம் தெரியாமல் அழிந்து போனது. 

விஜயநகரத்தைத் தலைநகராகக் கொண்ட இதற்கு அதே பெயர் சூட்டப்பட்டது. அது எங்கே எப்படி இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பி எனுமிடத்தில் காணப்படும் வரலாற்று அழிவுகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த இடம் இப்போது உலக பாரம்பரிய இடமாக ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப் பட்டுப் பாதுகாக்கப்படுகிறது. நமக்குத்தான் நமது வரலாற்றை உரிய முறையில் பதிவு செய்து வைக்கும் வழக்கம் கிடையாதே. அதனால் நம்மவர்கள் உண்மையான வரலாற்றை எழுதி வைக்காவிட்டாலும், அயல் நாட்டிலிருந்து இங்கு வந்த பயணிகள் சிலர் எழுதி வைத்த வரலாறு இப்போது நமக்குக் கிடைக்கிறது. நம் பாரம்பரிய பெருமைகளை அயல்நாட்டார் எழுதி வைத்த ஆவணங்களிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய அவலம் நமக்கு ஏற்பட்டது குறித்து நாம் வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை. நல்ல காலம் நமது இலக்கிய கர்த்தாக்கள் அப்படி அலட்சியமாக இருந்துவிடவில்லை. அவர்கள் படைத்த இலக்கியங்களில் குறிப்பாக கன்னட மொழி இலக்கியங்களிலிருந்து ஓரளவு இந்தப் பெருமைகள் நமக்குத் தெரிய வருகின்றன. இந்திய அரசு மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியின் மூலமும் இங்கு தலைதூக்கி நிமிர்ந்து இருந்த ஒரு அரிய சாம்ராஜ்யத்தின் வளத்தையும் செல்வச் செறுக்கையும் வெளிக் கொணர முடிந்திருக்கிறது.

தென்னாடு முழுவதும் இந்த சாம்ராஜ்யத்தின் சுவடுகள் காணக்கிடைக்கின்றன. ஹம்பி எனும் இடமே ஒட்டுமொத்தமாக இவர்களின் பெருமையைப் பறை சாற்றுவதாக உள்ளது. தென்னக மெங்கும் பரவிக் கிடந்த கற்றளி மற்றும் ஆலய கட்டடக் கலை அனைத்தும் விஜயநகர சாம்ராஜ்யத்தில் கையாளப்பட்டிருக்கிறது. மற்ற பகுதிகளிலிருந்து பல்வேறு தரப்பட்ட கட்டடக் கலையை ஸ்வீகரித்துக் கொண்டு, மக்களின் பக்தி, இறைவழிபாடு இவற்றையும் ஏற்றுக் கொண்டு ஹிந்து ஆலயங்கள் இவர்களால் எழுப்பப்பட்டன. முற்றிலும் கருங்கற்களால் ஆன ஆலயங்களில் சிற்பங்கள், கலைவடிவங்களைத் தாங்கிய தூண்கள், மரத்திலும், செப்புப் படிமங்களிலும் காணப்படுவன போன்ற நன்கு வழுவழுப்பாக இழைத்த கருங்கற் படிமங்கள் இவர்களது சிறப்புக் கலையம்சமாக பெருமிதத்தோடு காலத்தை வென்று இன்றும் காணக்கிடைக்கின்றன. 

சிறப்பான நிர்வாக முறைகளைக் கையாண்டதாலும், வெளிநாட்டு வர்த்தகங்களைப் பெருக்கி நாட்டின் செல்வத்தைப் பெருக்கியதாலும் இவர்கள் நிர்வாகத் திறமையில் முன்னணியில் இருந்திருக்கும் செய்திகளையும் அறிய முடிகிறது. அனுபவம் தந்த பாடமாக இவர்கள் நீர்நிலைகளைப் பாதுகாப்பதிலும், விவசாயத்துக்கு நீரைப் பயன்படுத்தும் முறைகளிலும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்கள். இந்த அனுபவத்தின் தொடர்ச்சியாகத்தான் தஞ்சையை அரசாளத் துவங்கிய நாயக்க மன்னர்களில் முதல் அரசரான சேவப்ப நாயக்கர் முதன்முதலாக தஞ்சையில் நீர் மேலாண்மையை நடைமுறைப்படுத்தி நீர்வளத்தைப் பாதுகாத்திருக்கிறார். தஞ்சை நகரம் மேல் திசை மேடாகவும் பிறகு சரிந்து கீழ் திசை பள்ளமாகவும் இருந்ததால், மேற்கில் பெய்யும் மழை நீரைத் தேக்கி வைக்க ஒரு ஏரியைத் தன் பெயரால் நிறுவி, அது நிறைந்ததும் அங்கிருந்து சிவகங்கைக் குளம், பின்னர், ஐயன் குளம், தொடர்ந்து சாமந்தன் குளம் என்று பல குளங்களை நிரப்பியபின் வடவாற்றில் கலக்கும்படி பூமிக்கு அடியில் மண்குழாய் களைப் பதித்து நீரைக் கொண்டு செல்லும் முறையை அறிமுகப் படுத்தியிருக்கிறார்.

விஜயநகர அரசர்களும், அவர்களால் நியமிக்கப்பட்ட தென்னாட்டின் மற்ற பல அரசர்களும், கலை உள்ளம் கொண்டவர்களாகவும், இயற்கையின் வசீகரத்தால் ஈர்க்கப்பட்டவர்களாகவும் இருந்ததால் இந்த சாம்ராஜ்யத்தில் கலைகளும், இலக்கியமும் தழைத்து வளர்ந்தன. தென்னக சாம்ராஜ்யம் என்று சொல்லுக்கேற்ப இவர்களால் கன்னட, தெலுங்கு, தமிழ், சம்ஸ்கிருத மொழி இலக்கியங்கள் சிறப்புற இருந்தன. கர்நாடக இசை மேம்பட பாடுபட்டு கலைஞர்கள் ஊக்கு விக்கப்பட்டனர். தற்போதைய கர்நாடக இசையின் வடிவம் இவர்களது உழைப்பினால் வெளியானது என்பது சிறப்புக்குரிய அம்சம். இன்னும் சொல்லப்போனால், கர்நாடக இசையைக் கற்றுக் கொள்ளும் பாலபாடத்தை வரையறை செய்ததே ஒரு கன்னட பக்திக் கவியான புரந்தரதாசர் என்பது அறிந்து கொள்ள வேண்டிய செய்தி. தஞ்சையை ஆண்ட இரகுநாத நாயக்கர் வீணை இசைப்பதில் வல்லவர். இசை நூலொன்றையும் இவர் இயற்றியிருக்கிறார். இவர் காலத்தில் அமைச்சராக இருந்த கோவிந்த தீக்ஷிதர் சகலகலா வல்லவர். அவருடைய பெருமைகளைத் தனியொரு அத்தியாயத்தில் பார்க்கலாம். இவர்கள் காலத்திய செயல்களும் நடவடிக்கைகளும் இந்தியா முழுவதையும் இணைந்த இந்துக்களின் கலைகள் ஒன்றுபட்டு விளங்குவதற்குக் காரணமாக விளங்கின. 

2 comments:

துரை செல்வராஜூ said...

அரிய செய்திகளைப் பதிவிடும் தங்களுக்கு நன்றி..

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

வணக்கம்.
வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகம் செய்துள்ளேன்,
இணைப்பு http://blogintamil.blogspot.in/2015/03/blog-post_7.html